புதன், 22 ஏப்ரல், 2026

ஊறத் தண்ணி அம்மாச்சி - உத்திரகோசமங்கை உறவுகள் - 5

 




ஊறத்    தண்ணி அம்மாச்சி 

-----------

படம் வரைந்தவர்: நன்றி உஷா பாரதி மேடம் 

 உத்திரகோசமங்கை உறவுகள் - 5 

(அவ்வப்போது 😃 வரும் அனுபவத் தொடர் ) 

------


பக்கத்து வீட்ல ஒரு பாட்டி இருந்தாங்க .தடிமனான உருவம். மாநிறம். உழைப்பின்  சுறுசுறுப்பு முகத்திலும் தெரியும். அவன் வீட்ல  அரிசி கழுவற தண்ணி, காய்கறி கழுவுற தண்ணி. பழைய சோத்துத் தண்ணீர், புளிச்சு போன தண்ணி,  எல்லாத்தையும் முற்றத்திலே  இருக்கிற ஒரு தொட்டியில கொட்டி  வச்சிருப்பாங்க அவனோட  அப்பத்தா. இந்தப் பக்கத்து வீட்டு பாட்டி  வீட்ல மாட்டு தொழுவம் இருக்கு .மாடுகளுக்கு குடிக்க ஊற்ற   அந்த தண்ணியை ' ஊறத் தண்ணி'ன்னு சொல்லிட்டு  எடுத்துட்டு போவாங்க .


 வீட்டுக் கொல்லையிலே  இருக்கிற  சைடு வாசல் வழியா பக்கெட்டு கப்பு கொண்டு  வந்து எடுத்துட்டுப் போவாங்க  . அவங்க உண்மையான பெயர் தெரியாது . காரணப் பெயரா ' ஊறத் தண்ணீ அம்மாச்சி' ன்னு  தான் கூப்பிடுவான் அவன்  .



அவன்  அப்பத்தாவும் அவங்களும் சின்னப் பிள்ளையில் இருந்து ரொம்ப ஃப்ரெண்ட்சாம் . அவனோட  அப்பத்தா   இளம் வயதிலேயே விதவை ஆகி தாத்தா வீட்டில், அதாவது அவங்க தம்பி வீட்ல வந்து இருந்து அவனை  எல்லாம் வளர்த்தாங்க. இவங்க பக்கத்து வீட்டில் இருந்தவங்க .சின்னப் பிள்ளையிலிருந்து அவங்க பழக்கம்.  அவங்களுக்கு  கல்யாணம் ஆகி ரெண்டு பையன் ஒரு பொண்ணு. பொண்ணுக்கு  மெட்ராஸ்ல கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கு. நல்ல திருப்தியான வாழ்க்கை .  

அப்பத்தாவின்  வாழ்க்கை நினைத்து , அவங்களுக்கு அவன்  அப்பத்தா மேல ஒரு பாசம் உண்டு.


 'இவளே, சொர்ணம்' ன்னு  தான் அவன்  அப்பத்தாவை உரிமையோடு  கூப்பிடுவாங்க .அவன் வீட்டுக்கும்  அவங்க வீட்டு தொழுவத்துக்கும் நடுவிலே  சைடுல சுவர் ஒண்ணு உண்டு.  அதிலே மாடப்பிறை அளவு ஒரு ஓட்டை உண்டு . 


 அந்த ஓட்டை வழியா அவங்க வீட்ல பண்ற , இவன்   வீட்ல பண்ற பலகாரம்  கொடுக்கல் வாங்கல் போயிட்டு இருக்கும்.   அது தவிர , அந்த இடத்திலே  நின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. ஒரு மணி நேரம் கதை அடிச்சுகிட்டு இருப்பாங்க. பல ஆபாச  வார்த்தைகள் எல்லாம் வந்து விழும் சிரிப்போடு .   அவனுக்குப்  பாதி புரிந்தும்  புரியாமல் இருக்கும் .


அந்த காலத்துல அவங்களுக்கு அதையெல்லாம் பேசுறதுல ஒரு பெரிய திருப்தி .கூடவே அப்பப்போ ஒரு பெரிய சிரிப்பு சப்தம்.   உள்ள ரூம்ல இருக்கிறவங்களுக்கு அந்த சிரிப்பு சத்தம் கேக்குற அளவுக்கு சிரிச்சு பேசிக்கிட்டு இருப்பாங்க. அவங்களுடைய ஒரு மகிழ்ச்சி அது .


அவனோட  அப்பத்தா வெளியே போகாம  வீட்டிலேயே இருக்கிறவங்க. அந்த அம்மாச்சி ' ஊறத் தண்ணீ  அம்மாச்சி' வெளியே  போய் வயல் வேலை பார்த்துட்டு காலைல போயிட்டு சாயந்திரம்  தான் திரும்புவாங்க.  ஊர் சமாச்சாரம் எல்லாம் தெரியும் .அப்புறம் வந்து இந்த ஊறத்  தண்ணி எடுத்துட்டுப்  போய் அவங்க தொழுவத்து மாடுகளுக்கு எல்லாம் ஊத்திட்டு , அப்புறம் அந்த சுவர்  ஓட்ட வழியா பேசிகிட்டு இருப்பாங்க .இது அவனுக்கு   ஒரு மாதிரி வேடிக்கையா இருக்கும் 


அப்ப பேசுனது பத்தாதுன்னு , திரும்பவும் ராத்திரி அவங்க  வீட்டு வாசல் திண்ணையில் வேற வந்து உட்கார்ந்து ஊர்ப்  புரணி ஓடும். அவங்க  பேசறதே அவனுக்கு  ஒரு பெரிய தாலாட்டு மாதிரி இருக்கும் அதை கேட்டுக்கிட்டு அவன்   தூங்கிடுவான்.  இந்த மாதிரி அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்கள்  ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக் கொள்வது எல்லாம் பெரிய பெரிய கதைகள் மாதிரி இருக்கும் .இப்ப  எல்லாம் ஒண்ணும் ஞாபகம்  இல்ல.


 கிராமத்து பெரியவங்க பேசிக்கிட்டதிலே  எல்லாம் எவ்வளவோ  கதைகள் இருந்திருக்கு . பின்னால் கி ராஜநாரயணன் ஐயா அவர்களோட  கதைகளை படிக்கிற போதெல்லாம்  அந்த அம்மாச்சி, அப்பத்தா கதைகளைச்  சரியா கவனிக்காம விட்டுட்டோமே அப்படிங்கற ஒரு வருத்தம் கூட வந்திருக்கு அவனுக்கு. 


 அதைத் தவிர ரோட்டுல சில பெண்கள் சண்டை போட்டுக் கொள்வது எல்லாம் எழுத்தில் எழுத முடியாத  கலைச்சொற்கள் . 'தூமி... ,  கண்டாரா.. ' என்றெல்லாம் ஆரம்பிக்கும்  சில வசவு வார்த்தைகளின் முழு அர்த்தம் என்னன்னு அவனுக்குத்  தெரியாது . இருந்தாலும் அவை ஆபாச வார்த்தைகள் என்பது புரியும். அந்த பக்கம் பஸ் ஸ்டாண்ட் எதிரே  பெரிய தெப்பக்குளம் பக்கத்திலே  ஒரு மண்டபம் .அந்த மண்டபத்தில்  சுருட்டுப் புகைத்தபடி உட்கார்ந்து இருக்கிற  பெருசுகள்  பேசுவதெல்லாம்  ரொம்ப மோசமா இருக்கும். அங்கும், இந்த ஊரத்தண்ணீ அம்மாச்சி    பேச்சுலயும் அடிபட்ட பெண் ஒருத்தி இருந்தாங்க .


அவங்க  எங்கோ  வேலைக்கு போயிட்டு வந்துகிட்டு இருந்தாங்க. அவங்க பாட்டுக்கு ஜாலியா திரிவாங்க. அவங்களை பத்தி ஊரத்தண்ணீ  அம்மாச்சி பேசுறதெல்லாம்   ரொம்ப மோசமா இருக்கும். அந்த ஊரு கருவக்காட்டிலே எவன் கூடவோ  இருந்த கதை  எல்லாம் சொல்லுவாங்க, கூடவே  இருந்து  பார்த்த மாதிரி.  அந்தப் பெண்ணு ஊர் பெருசுக பேச்சைக்  கண்டுக்கறதே இல்லை.  அங்கே இருந்த   சில  இளவட்டங்களுக்கு  அவங்க ஒரு  விதமான வடிகால் ங்கிற   மாதிரி இருந்திருக்காங்க. எங்கேயோ ஒரு இடத்தில் வேலை பார்த்தாங்க அது தவிர இதுல வர்ற வருமானம் .இப்படியும் சிலரின் வாழ்க்கை ஊர் அறிந்த ரகசியமாக இருந்தது. 


 அந்த ஊரத் தண்ணீ  அம்மாச்சிக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு  பொண்ணு க்கு  மெட்ராஸ்ல கல்யாணம் பண்ணி  பேத்தியோட வருவாங்க வருஷத்திற்கு ஒருமுறை. மெட்ராசுசில இருந்து வந்த  ராமேஸ்வரம் வண்டி அப்பல்லாம்  தஞ்சாவூர் மாவட்டம் எல்லாம் சுத்தி வரும் .ஒன்றரை நாள் ஆகும் . முதல் நாள்லே இருந்தே அந்த அம்மாச்சி பயங்கர குஷியா இருப்பாங்க. பொண்ணும் பேத்தியும் வராங்கன்னு. 


 அந்த ஊரிலே   மஞ்சள் பூசின முகத்தோட பொண்ணுங்களை பார்த்ததற்கு அந்த பொண்ணு பவுடர் பூசின  முகத்தோட கண்ணு மை பூசிக்கிட்டு ஒரு மாதிரியா வித்தியாசமா இருக்கும். அந்த ஒரு மாசமும், பேத்திக்குத் தலை பின்னி பூவு வச்சு, கோயிலுக்கு கூட்டிட்டுப் போயி அம்மாச்சி சந்தோசமா  திரிவாங்க. மெட்ராஸில் இருந்து வந்த கலர் காகிதம் சுத்திய சாக்கலேட்டு , வண்ண டப்பாவுக்குள்ளே பிஸ்கேட்டுன்னு அவன் வீட்டுக்கு வரும். கடலை மிட்டாய், முறுக்கு  ,காராச்சேவு, சீனிச்சேவு சாப்பிட்ட வாய்க்கு அமிர்தமாய் இருக்கும்  அவனுக்கு.


கொல்லை பக்கம், இருந்து அந்தப் பொண்ணு ஹிந்தி பாட்டு வேற  பாடும். ஊரத்தண்ணீ  அம்மாச்சிக்கு பெருமை.   ' பேத்தி ஹிந்தி பாட்டு பாடுவா, ஒண்ணுமே புரியாது.   நல்லா இருக்கு' ன்னு பெருமை அடிச்சுக்குவாங்க.  . அவன்  ஊரு பக்கத்துல 'எக்ககுடி' ன்னு ஒரு ஊர்  இருக்கு . பெரும்பாலும்  முஸ்லிம்கள் வாழ்ற இடம் .அங்கே அவனோட அப்பா சில நேரங்களில் அவனுக்கு முடிவெட் ட  கூட்டிட்டு போவாங்க . முடி வெட்டுற  பாய் கடை .  அந்த கடையில மொஹமட் ரபி ,  லதா மங்கேஷ்கர் பாட்டுகள் கேட்டிருக்கான். அந்தக் கடையிலே தேவ் ஆனந்த் திலீப் குமார்  வைஜயந்தி மாலா, மது பாலா படங்களா தான் இருக்கும் .இந்தப் பேத்தி பாட்டும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கும். 


 ஒரு மாசம் இருந்துட்டு அவங்க மெட்ராஸ் போன பிறகு ஊரத் தண்ணீ அம்மாச்சி முகத்திலே  சுரத்தே குறைஞ்சு போயிரும்  .பழைய  மாதிரி அந்த பக்கத்து சுவத்துக்கு  வந்து அந்த ஓட்டையில் இருந்து பேசுற பேச்சுக்களும் கொஞ்ச நாளைக்கு இருக்காது. கொஞ்ச நாள்தான்.  அப்புறம் பழையபடி அந்த கணீர் பேச்சு, அதிர்  சிரிப்பு இதெல்லாம் மறுபடி தொடரும் . 


 ஒருமுறை  இவன் சிவகங்கையில்  காலேஜ்ல படிச்சிட்டு லீவில் திரும்பி வந்த ஒரு நாள். கணீர் குரல் கேட்டுச்சு 'நாகேந்திரனா, என்ன மாதிரி வளர்ந்துட்டான் ' திரும்பி  பார்த்தால் ஒல்லியான  ஒரு உருவம், தளர்ந்து போய்  கறுத்துப் போய் ,நின்று கொண்டிருந்தது .'ஊறத் தண்ணீ அம்மாச்சி டா ' என்றார்கள் அப்பத்தா. அதிர்ச்சியாக இருந்தது .


------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஊறத் தண்ணி அம்மாச்சி - உத்திரகோசமங்கை உறவுகள் - 5

  ஊறத்    தண்ணி அம்மாச்சி  ----------- படம் வரைந்தவர்: நன்றி உஷா பாரதி மேடம்   உத்திரகோசமங்கை உறவுகள் - 5  (அவ்வப்போது 😃 வரும் அனுபவத் தொடர...