வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தாய்க்கிழவி - பட விமரிசனம்

 



தாய்க்கிழவி - பட விமரிசனம் 

-------

படம் பார்க்கிற ரெண்டு மணி நேரத்திலே, ஸ்மூலில் தமிழ்ப் பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்யலாம் , டோஸ்ட்மாஸ்டர் ஆங்கிலப் பேச்சு பேசி பிராக்டிஸ் செய்யலாம் என்று நினைக்கும் என்னை அவ்வப்போது சில திரைப்படங்கள் பார்க்க வைத்து விடுவார் என் மனைவி உஷா மேடம். அப்படிப் பார்த்து அசந்து போன படம் முன்பு 'மெய்யழகன்' . இன்று 'தாய்க்கிழவி '


'ஏங்க இது நீடாமங்கலம் கோயில் வாசல் ங்க ' என்று ' மெய்யழகன் ' பூக்கடை சீனைப் பார்க்க வைத்து , படத்தைத் திரும்ப ஆரம்பத்தில் இருந்து பார்க்க வைத்து, ரசித்த சீன்களை பற்றி எழுதி நமது கலை புதிது , குவிகம் குழுக்களில் பகிர்ந்து கொள்ள வைத்தது போல் ,


இன்று தாய்க்கிழவி படத்தின் , 'கிராமக் காட்சிகளைப்' பார்த்து ,'நம்ம ஊர்ப்பக்கம் போன மாதிரி இருக்குங்க ' என்று சொல்லிப் பார்க்க வைத்து , முதலில் இருந்து படத்தை முழுவதும் ,இருந்த இடத்தில் இருந்து எழாமல் இரண்டு மணி நேரம் தாய்க்கிழவி படத்தைப் பார்த்து ரசித்த சில காட்சிகள் .


குடும்ப உறவுகள் , அதன் சிக்கல்கள், இதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் துணிச்சல் , தன்னம்பிக்கை இவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட கதையில் 'பிளாக் காமெடி ' வகையில் ஒரு இறப்பு சூழ்நிலையில் நகைச்சுவையும் , சோகமும் கலந்து கொண்டு செல்லும் இயக்குனர் சிவகுமார் முருகேசனின் திறமை பாராட்டப் பட வேண்டியது .தயாரித்த சிவகார்த்திகேயன் அவர்கள் பாராட்டுக்குரியவர் .


நடிகர்களைத் தனித்தனியாகப் பாராட்டுவதற்குப் பதில் அனைவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களைக் கண் முன் கொண்டு வந்தார்கள் என்று ஒரே வரியில் சொல்லி விடலாம். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் 'முனீஷ் காந்தின்' பாத்திரப்படைப்பு. அதை அவர் வெகு இயல்பாக தனது உடல் மொழியால் கையாண்ட விதம்.


ஆரம்பம் முதல் முடிவு வரை அந்தக் கிராமமும், அதன் தெருக்களும், கோயிலும், ஜனங்களும் , வீடுகளும் அப்படியே தெரிந்து , அங்கேயே சென்று வாழ்ந்து வந்த ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தியதில், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இயக்குனர் என்ற அந்தக் கலைக்குடும்பத்தின் பங்கு மகத்தானது . உறுத்தாத பின்புல இசை குறிப்பிட வேண்டியது .மதுரை நகைக்கடைக்காரர் இளவரசு, கதையின் முதல் திருப்பத்திற்கு முக்கியமானவர் . முடிவுத் திருப்பமும் அவராலே .


சிரித்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல, உணர்வு பூர்வமாகச் சிந்திக்கவும் வைக்க வேண்டும் , அந்த உணர்வை நமது நெஞ்சின் நெகிழ்வை கண்களின் கசிவின் மூலமும் வெளிப்படுத்தவும் வைக்க வேண்டும் என்ற கலைப்படத்தின் ஒரு விதமான நோக்கத்தை நிறைவேற்றி என்னை நெகிழ வைத்த காட்சிகள் பல. அவற்றில் சில .


நடுரோட்டில் ஆம்புலன்சில் ஒரு உயிர் பிரியும் காட்சியின் பின்புலத்தை அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர் விவரிக்கும் இடம்


'பாட்டி இருக்க வேண்டுமா இறக்க வேண்டுமா' என்ற கேள்விக்கு அவள் பேரன் அவனது மாமா பெண்ணிடம் சொல்லும் பதில்


மருமகள்களை வேலை பார்க்கச் சொல்லும் அந்தத் தாய்க்கிழவியின் நோக்கத்தை மகள் அவர்களிடம் சொல்லும் இடம்


நாற்பது வயதிலும் திருமணம் செய்யும் ஆசை இருப்பதன் ஆழமான நோக்கத்தை முனீஷ் காந்த் தாய்க்கிழவியின் பையன்களிடம் விவரிக்கும் இடம்


அந்தக் கோயிலில் தீபம் அணையாமல் எரிய எண்ணெய் ஊற்ற யாரும் வராத போது, தாய்க்கிழவியின் உயிர் காக்க வேண்டி, இன்னுமொரு கிராமக் கிழவி வந்து எண்ணெய் ஊற்றி எரிய வைக்கும் இடம்


முன்னூறு பவுன் நகைகளை மகள் , மருமகள்களிடம் காட்டி பகிர்ந்து கொள்ளச் சொல்லும் போது 'சந்தோசத்திற்கு வேண்டுமானால் பணம் தேவை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மரியாதைக்கு பணம் அவசியம் தேவை ' என்று பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டியதின் அவசியத்தை தாய்க்கிழவி சொல்லும் இடம்


'அம்மா மறுமணம் செய்து கொள்ளலாமா ' என்று கேட்கும் கேள்விக்கு மகன் ' மாப்பிள்ளை யார் ' என்று கேட்கும் இடம் .


என்று சொல்லிக்கொண்டே போகலாம். நீங்களே படம் பார்த்து அனுபவியுங்கள். இடை இடையே வரும் ' பிளாக் காமெடி ' கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், தொடரும் உணர்வு பூர்வக் காட்சிகள் அவற்றை மறக்கச் செய்வதோடு அந்த பிளாக் காமெடியின் முக்கியத்தையும் உணர வைக்கின்றன .


ஆங்கிலப் படம் போல் , கொரியன் படம் போல் , ஹிந்திப் படம் போல் என்றெல்லாம் பல உணர்வுகளை ஏற்படுத்தும் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் தமிழ்ப் படம் என்ற முத்திரையை அழுத்தமாகப் பதிக்கும் இது போன்ற படங்கள் , நம் வேர்களை நமக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள். அந்தப் படைப்பாளிகளுக்கு நன்றிகள் .


-----------------நாகேந்திர பாரதி

 

 My Poems/Stories/Articles in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாய்க்கிழவி - பட விமரிசனம்

  தாய்க்கிழவி - பட விமரிசனம்  ------- படம் பார்க்கிற ரெண்டு மணி நேரத்திலே, ஸ்மூலில் தமிழ்ப் பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்யலாம் , டோஸ்ட்மாஸ்டர்...