காபி வேளை - சிறுகதை
---------
'அப்படி என்னங்க அவசரம், நேரே ஆபிசில் இருந்து இங்கே வரச் சொல்லிட்டீங்க. நீங்களும் வீட்டுக்குப் போகாம. பையன் அத்தையை என்ன பாடு படுத்துறானோ. சீக்கிரம் சொல்லுங்க , கிளம்பலாம். ' என்று காபியை அவசரமாக உறிஞ்சியபடி கேட்டாள் கீதா .
'முதல்லே காபியை மெதுவா ரசிச்சுக் குடி , திருமணத்திற்கு முன்பு நாம் இதே காபி ஸ்டாலில் இந்த மங்கிய ஒளியில் பேசிக்கொண்டு இருப்போமே அப்படி ' என்றான் மோகன் .
'என்ன மோகன், பழைய நினைப்பு திடீர்னு ' என்ற கீதாவின் குரலில் நிதானம் வர அவனை உற்றுப் பார்த்தாள்.காபி கப்பை இதழ்களில் பொருத்தி மெதுவாக உறிஞ்சினாள் .
'ம் , அப்படிப் பாரு, அதே மாதிரி . கொஞ்ச நேரம் நானும் பார்க்கிறேன். பேச வேண்டாம். இந்தக் குழந்தை முகத்தின் அழகை இந்த மெல்லிய ஒளியில் கொஞ்ச நேரம் ரசிக்கிறேன் .' அவள் முகம் லேசாக மலர்ந்து ஒரு சிரிப்பு இதழோரம் கசிந்தது. ' அது ' என்று ரசித்தவன் தொடர்ந்தான்.
' கொஞ்ச நாளா பாத்துக்கிட்டு வரேன் உன்னை. ஒரே பரபரப்பு காலையிலே இருந்து .ஆபீசில் என்ன பிரச்சனைன்னு தெரியலை , ஏதோ சிந்தித்தபடி ,பையனைப் பார்த்துக்குறது , என்னிடம் பேசுறது , அப்பா அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கிறது எல்லாத்திலேயும் ஒரு இயந்திரத்தனம் . நம்ம பிரீயாய்ப் பேசியே ரெம்ப நாள் ஆயிட்டதுன்னு எனக்கு ஒரு பிரமை'
'ஆமாங்க. ஆபீசில் ஆடிட் நேரம். மேனேஜர் ஏதோ உடல்நலப் பிரச்னை . லீவு. நான்தான் எல்லாம் பார்க்கிறேன் . ஏகப்பட்ட ரிப்போர்ட். ஒண்ணொன்னா, அந்தந்த டெபார்ட்மெண்ட்லே கேட்டு ஆடிட்டர் கிட்டே கொடுத்தாலும், திரும்பி வரப்போ ஒண்ணு மறந்துட்டேன்னு ஞாபகம் வரது. உங்க ஆபீசில் நீங்க எத்தனைப் பேரை மேனேஜ் பண்ணுறீங்க , எவ்வளவு டென்ஷன் ' ன்னு எனக்குத் தெரியும். அதான் உங்க கிட்டே சொல்லலே. '
'என்னைப் பாரு டென்சனாவா தெரியறேன்' .
'இல்லே, எப்படிங்க '.
வீட்டுக்குள் நீ நுழைஞ்சதுமே நான் உன்னைப் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சுடுறேன் . பையனுக்கு சாதம் ஊட்டும்போது உன் உதட்டைக் குவிச்சுக்கிடுவியே , அதை ரசிப்பேன். அவன் முரண்டு பிடிக்கறப்போ பொய்க்கோபத்தோட அவனை ஒரு முறை முறைப்பியே, அதை ரசிப்பேன், அப்புறம் எப்பவாவது என்னைப் பார்க்கறப்போ ஒரு மந்தகாசப் புன்னகை அசால்ட்டா வீசிட்டுப் போவியே , அது , இப்படி ரசிக்கிறப்போ என் டென்ஷன் ஓடியே ஓடிப் போயிடும்.
அவன் பேசப் பேச வெட்கத்தில் லேசாகத் தலை குனிந்து மெல்ல தலை சாய்த்து ஒரு பார்வை. ' இது போதுமடி '
'நீயும் ரசிடி, பையன் சேட்டைகளை ரசி , எங்கம்மா அப்பா பேச்சை ரசி . தோட்டத்தை ரசி. ரசிக்கிறதுக்கு என்ன இல்லை நம்ம வீட்டிலே. ஒண்ணும் முடியலேன்னா,. அடலீஸ்ட் என்னை ரசி .
'ஐயோ, உங்களை நான் ரசிக்காமலா இருக்கேன். உங்களுக்குத் தெரியாது . '
'அப்புறம் எப்படி டென்ஷன். ஓ என்னைப் பார்த்து உனக்கு டென்ஷன் ஏறுதா .'
'சீ , போடா .'
'இது ... , எத்தனை நாளாச்சு , நீ போடா சொல்லி. போகலாமா வீட்டுக்கு '.
மேஜை மேல் இருந்த அவன் கை மேல் ஒரு அழுத்து அழுத்தி ' போலாம் ' என்றாள்.
'புரியுது ' என்றபடி எழுந்தான். கூடவே அவன் தோளில் ஒட்டியபடி அவளும்
------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக