செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கூடுசாலை - சிறுகதை மதிப்புரை

 கூடுசாலை - சிறுகதை மதிப்புரை 

----------------------------------------------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே  ., எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கதை ‘மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை   சிறுகதை.  சிறு கதையில் இடம், நேரம், கருத்து மூன்றும் மிகவும் தெளிவாக , திறமையாக  காண்பிக்கப்பட்டுள்ளன , கையாளப் பட்டுள்ளன.  மிகவும் விறுவிறுப்பான வேகமான கதை .

இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை.  நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த ஊரின் இரண்டு பெரிய மனிதர்களின் கவுரவப் பிரச்னைக்காக பழி வாங்கப்படும் வாயில்லா ஜீவன்கள்  ,  வண்டி காளை மாடுகள் .

இரண்டு குன்றுகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் வளைந்து வளைந்து செல்லும்  அந்தக்  கூடு சாலை யிலே  நடக்கும் ஒரு மாட்டு வண்டிப் போட்டிக் கதையை , இரு மனிதர்களின் கவுரவப் போட்டிக் கதையை  மிகவும் விறுவிறுப்போடு நாம் ரசிக்கும் படி எழுதி உள்ளார் ஆசிரியர். 


ஒரே ஊரில் வாழும் ஒரு மிராசுதாருக்கும் கவுண்டருக்கும் நடக்கும் கவுரவப் பிரச்சனையாக இதைக் காட்டி அதற்கு அந்த வண்டி மாடுகள், வண்டியோட்டிகளால்  படும் பாட்டை உருக்கமாகக் காட்டி அந்த வாயில்லாச் சீவன்கள் மேல் நமக்குக்  கருணை வரும்படி அவற்றை இவர்கள் படுத்தும் கொடுமைகளை எல்லாம்  விரிவாக விளக்கி, கடைசியில் அந்த மாடுகளின்  ரத்தம்  பார்த்து அதன் உரிமையாளர்களுக்கே பரிதாபம் வந்து அவர்களின் கவுரவப் போட்டியை நிறுத்தி வைப்பதாகக் காட்டி முடிக்கிறார்


ஆனால் அந்த முடிவு வருவதற்கு முன்னால் , ஆசிரியர் காட்டியிருக்கும் காட்சிகள் அந்தப் பெரியவர்களின் கவுரவப் போட்டிக்கு நிழலாக மாறும் அந்த மாட்டு வண்டிப் போட்டியை நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றன.    

நிலவு வெளிச்சத்தில், மெல்லிய இருட்டில் அந்தச் சாலையை அவர் வருணிக்கும் விதமே அந்த இடத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்று விடுகிறது . அதைத் தொடர்ந்து அங்கே செல்லுகின்ற மாட்டு வண்டிகளின் வருணனை. தொடரும் பண்ணையார்  , வண்டி ஓட்டி உரையாடல்.  அந்த வண்டியில் பூட்டியுள்ள மாடுகளைப் பற்றிய விபரங்கள். கூடு கொம்புச் செவலை , நீர்க்காலுக் கரம்பை, விரி கொம்பு - கவுண்டர் வீட்டு மாடுகள் . அவர் இப்போது வாங்கியிருக்கும் எடக்காடன்  ,  பண்ணையார் வண்டியில் இப்போது பூட்டியிருக்கும்   மயிலைக் காளை , புது மாடு பில்லை என்று மாடுகளின் வகைகளைப் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்கும் போது அவர் மாடுகளைப் பற்றி எந்த அளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று புரிகிறது . 


அதற்குப் பிறகு மாடுகளை வெறி பிடித்த படி பந்தயத்தில் ஓட வைக்கும் கொடூர  விபரங்கள் . சாட்டை அடி , இளுவை இழுத்து விடுறது , விலாப்பக்கத்திலே முழங்கையை மடக்கிக் குத்துறது  , பிடி கயிறை வெடுக்குன்னு சுண்டி இழுக்கிறது , சாட்டையைத் திருப்பி மட்டை அடியா போடுறது , வாலைப் பிடிச்சு நுனிக்கு மேலே நறுக்குன்னு கடிக்கிறது , முள்ளை எடுத்து அடி வயித்தில் குத்துறது ,அப்பா, பயங்கரமான விபரங்கள், அந்த வண்டி ஓட்டி மாடுகளைப் படுத்தும் பாட்டில் அவை வெறி பிடித்தது போல் வேதனையோடு ஓடும் விபரங்களில் , வார்த்தைகளின் வேகம் . அப்பப்பா 


வண்டிச் சக்கரங்களின் கடகட சப்தம். கப் கப் என்று நடை வீசி கால் பரவுவது தெரியாமல் , கண்ணுக்குத் தெரியாத நடை வேகம், காளைகள் இரண்டும் கிடுகிடுவென ஆடின. உடல்கள் பதறின. பாய்வதிலேயே அவைகளின் கவனம் . சாலையே அதிரும்படி மிதி போட்டுப் போயின . சரளைகளில் பட்ட காற்  குளம்புகளின் காலடியில் தீப்பொறிகள் சிதறித் தெறித்தன .


இப்போது இரண்டு வண்டிகளும் பக்கத்து பக்கத்தில் , கவுண்டரின் மாட்டு வண்டி ஓட்டும் மூக்கன், அவன் வண்டிச் சக்கரத்தின்  நடு மூக்கு பண்ணையார் வண்டி மாட்டின் கழுத்தில் உரச, ரத்தம் .பண்ணையார் வண்டி ஓட்டி  வீராச்சாமி , மிராசுதார் வண்டி மாட்டின் மேல் சாட்டையை பிசாசு மாதிரி வீசி  விளாச அதன் முதுகிலும் ரத்தம். வர்ணனைகளில் நம்மையே பதற வைத்து விடுகிறார் சி சு செல்லப்பா அவர்கள்.


இப்போது கிளைமேக்ஸ் . தனது மாட்டின் காயம் பார்த்து மனம் இளகிய மிராசுதார், ஓரமா நிறுத்து, சாணி அப்பு  காயத்திலே . என்று இறங்கி , வாய் ஓரம் நுரை ததும்பி , நாகம் போல் மூச்சு விட்ட காயம் பட்ட காளையை ஆசுவாசப்படுத்தி , ' நாசம், வண்டி , மாடு, வீம்பு எல்லாம்தான். நாமே எத்தனை தடவை தும்பு தெறிச்சு , முளைக்குச்சி உருவி, சாவி ஒடிஞ்சு  எவ்வளவு துன்பப் படுத்தி இருக்கிறோம் ' என்று தன்னிலை உணர்ந்து வருந்துவது போல்.  அதன் பின் , மிராசுதார் வண்டியில் ஏறிப் புறப்பட , கவுண்டர் வண்டியும் பின்னால் மெதுவாகத் தொடர ஒன்றுமே நடக்காதது போல் அந்த வண்டிகள் இரண்டும் அந்த கூடு சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக  போவதாக முடிக்கிறார் கதையை. புயலுக்குப் பின் அமைதி.


நடுவில் கதையில் வரும் மிராசுதார், கவுண்டர் வசனங்களிலும் , அந்த மாட்டு வண்டி ஓட்டிகள் வீராச்சாமி, மூக்கன் பேச்சுகளிலும்    தெறித்த அந்த மூர்க்கமும், கவுரவமும் , அந்த அப்பாவி மாடுகளின் மேல் வன்முறையாகப் பாய்ந்து  அவற்றின் ரத்தம் பார்த்து கொஞ்சம் ஓய்ந்து ' அசை நடையாகவே விடு ' என்று இரக்கமாக மாறுவதாக ஆசிரியர் முடித்திருந்தாலும், இரக்கமாக மாறுவதாக ஆசிரியர் முடித்திருந்தாலும்  ,   ‘போட்டியில் ஜெயித்த மிருக வெறியும் , வாயில்லா ஜீவனின் ரத்தம் கண்ட இரக்கமும் ‘ கலந்த குரலில் மிராசுதார் பேசினார் . என்று ஒரு இடத்தில் எழுதுகிறார் ஆசிரியர்.. இது போன்ற உணர்வுகளை நுணுக்கமான உணர்த்தும்  வசனங்களையும் , அந்த வண்டி ரேஸின் உக்கிர வர்ணனைகளையும்  , நீங்கள் கதையைப் படித்துத்தான் அனுபவிக்க வேண்டும்.


 கதையின் மாந்தர்களின் ரோஷ வேகத்தையும், கவுரவ வெறியையும் இவ்வளவு ஆக்ரோஷமாக இந்தக் கதையில் படித்து உணர்ந்த நமக்கு '  இந்த மனிதர்களின் மன மாற்றம் எத்தனை நாளைக்கு'  என்ற எண்ணம்தான் வருகிறது . இந்த போலிக் கவுரவ மனிதர்கள் மாறப் போவதில்லை.. அந்த மனிதர்களின் ரோஷம்  மறுபடி பொங்கும், அந்த மாடுகள் மேல் பாயும், திரும்ப அந்த கூடு சாலையில் ரத்தம் தெறிக்கும், என்றே தோன்றுகிறது, நன்றி வணக்கம். 


-------------------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


திங்கள், 18 செப்டம்பர், 2023

கலையும் மேகம் - கவிதை

 கலையும் மேகம் - கவிதை 


————————-----------------

ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொரு காட்சி


ஓடும் மேகத்தால்

மாறும் ஓவியங்கள்


நகரும் காலத்தின்

நடப்பைக் காட்டுகிறதா


மாறும் பெண்களின்

மனங்களைக் காட்டுகிறதா


சேரும் செல்வத்தின்

செலவைக் காட்டுகிறது


நிலையாமை ஒன்றே

நிலைத்தது என்ற


நிலைமையைச் சொல்லி

கலைந்து போகிறதா


———நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


ஊஞ்சல் பெண் - கவிதை

 ஊஞ்சல்  பெண் - கவிதை 

———————---------------------—


ஒளிந்து நெளிந்து

ஒழுகும் ஒளியில்


பச்சை மரங்களின்

பரவசம் ரசித்து


காட்டுப் பூக்களைக்

கட்டிய கயிற்றில்


உல்லாசமாய் ஊஞ்சல்

ஆடுவது சரிதான்


விழுந்து விடாமல்

வேகத்தைக் குறைத்திடு


உன்னுள்ளே குடியிருக்கும்

எனக்கும் இப்போது


மூச்சு வாங்குகிறது

முட்டாள் பெண்ணே


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நினைத்துப் பார்க்கிறேன் - கவிதை

 நினைத்துப் பார்க்கிறேன் - கவிதை 

———————————-------------------------

தெருப்புழுதி முழங்காலில் 

ஏறுமட்டும்  விளையாட்டு


கண்மாய்த் தண்ணீரைக்

கலக்கி நீச்சல்கள்


மனப்பாடப் பாட்டுகளை

ஒப்புவிக்கும் உற்சாகம்


திருவிழாக் கூட்டத்தில்

தின்பண்டக் கடைகள்


பக்கத்தூருக் கொட்டாயில்

பார்த்த சினிமாக்கள்


நினைத்துப் பார்க்கையிலே

நீண்ட பெருமூச்சு 


———-நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English


காதல் ரோஜாவே - கவிதை

 காதல் ரோஜாவே - கவிதை 

-----------------------------------

முள்ளாகத்தான குத்தினாய்

புரியாத காலம்


குத்திய வலியும் இனித்தது

காதலின் கணக்கு


மலராகத் தான் மணக்கிறாய்

புரிந்த காலம்


பூவின் மென்மையில் மகிழ்கிறேன்

காதலின் வெற்றி


அவ்வப்போது கொஞ்சம்

குத்தித்தான் விடுகிறாய்


இனித்தது வலியென்று

சொன்னது தப்பா


--------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

அவள் வருவாளா - சிறுகதை

 அவள் வருவாளா - சிறுகதை 

--------------------------------------------------------------


 காலை எட்டரை மணி  பீனிக்சில் , அமெரிக்காவில் . அவன் வேலை அந்த நேரமே ஆரம்பித்து விடும் .இங்கே  மாலை ஒன்பது மணி இந்தியாவில் .


வழக்கம் போல் இரவு கோயிலுக்குச் சென்று திரும்பி இருப்பாள் சங்கரி  என்று நினைத்தபடி பீனிக்சில் , சுந்தர் , மல்டி  மில்லியன் டாலர் பிசினஸ் ஒன்றின் காண்ட்ராக்டின் பக்கங்களை ஆப்பிள் கம்பியூட்டரில் புரட்டியபடி  இருந்தவன், இரண்டு இடங்களில்  திருத்தம்  செய்து டெலிகாமில் லூசியிடம் சொல்லி விட்டு கம்பியூட்டரில் send  பட்டனை அழுத்தியவுடன் ,  உள்ளே வந்த ராபர்ட்  கைகளில் அவனுக்குப் பிடித்தமான அந்த உயர் தரக் காபியின் மணம் அவன் நாசிகளிலும் அதன் ருசி  சிறிது நேரத்தில் அவன்இதழ்களிலும் . 


மல்டி பில்லியன் டாலர் கம்பெனியின் முதலாளியின் ரசனைக்கு ஏற்றபடி அமைக்கப்பட்ட அந்தக்  கம்பெனியின்  சுவற்றில் அதற்கேற்ற சித்திரங்கள், சுற்றிலும் ஒருமுறை பார்த்து விட்டு ஒரு நீண்ட பெருமூச்சொன்றை விட்டு தன்  முன் மேஜையில் தங்க பிரேம் போட்டோவில் சிரிக்கும் அவளை உற்றுப் பார்த்தான்.


' ஏன்  சங்கரி  , ஏன் இப்படி மாறிட்டே.. இருபது வருடங்களுக்கு முன்பு  இங்கு வந்தபோது எப்படி இருந்தோம். நியூ யார்க் நகரில்  தெருத் தெருவாக இரவில் சுற்றினோமே . உனக்குக்  குறிப்பிட்ட ஒரு   காபி தான்  பிடிக்கும் என்பதற்காகத் தேடித் தேடி நியூ யார்க்கின் இட்டலி  டவுனில் ஒரு கடையில் காபி சாப்பிட்டு திரும்பும் போது துப்பாக்கியுடன் வழி மறித்த அந்த முரடனை நான் காலை மடக்கி உதைத்த உதையில்  அவன் சுருண்டு விழுந்து ஓட  , சிறு குழந்தை போல  கை  தட்டிச் சிரித்து  , திடீர் என்று என் இதழோடு இதழ் பதித்தாயே ' என்று நினைத்தபடி  , தன் உதடுகளை அனிச்சையாகத் துடைத்தான். அதில் காபி கசந்தது. இப்போதைய வாழ்க்கை போல் .


நான் என்ன செய்தேன். சாதிக்க வேண்டும் , சாதிக்க வேண்டும் என்று படித்து, உழைத்து இன்று மல்டி  பில்லியன்  டாலர் கம்பெனி. ஆனால்.

உன்னை இழந்து விடுவேனோ. குழந்தைகள் இரண்டு . பெண்கள் . ஒவ்வொரு வருடமும் ஒன்றாகத் தொடர்ந்து   . நம் உறவின்  நெருக்கத்தால் .  அவர்கள் பிறந்தபின் ,  ஒரு சிறு பிரிவு வந்து விட்டதோ.


நியூ யார்க்கில் இருந்து கம்பெனி விரிவுபடுத்த  பீனிக்ஸ் வந்து ஏற்பட்ட பிரிவு சில வருடங்கள் தானே. அந்த இரண்டு வருடங்கள் குழந்தை வளர்ப்பு, என்னதான், துணைக்கு  ஆட்களும் வேண்டிய வசதிகளும் இருந்தாலும் நான் வந்து இருந்தது மாதம் ஓரிரு நாட்கள். பிறகு பீனிக்ஸ் வந்தபின்னும் , என்னுடன் ஒட்டாமல் , குழந்தைகள் குழந்தைகள் என்றே அவற்றோடு படிப்பு, விளையாட்டு காலம் ஓட , அவர்கள் பெரியவர்கள் ஆக, சிறிது சிறிதாக அவர்களிடம் ஏற்பட்ட கலாச்சார மாற்றம் உன்னை வெகுவாகப்  பாதித்தது புரிகிறது.


கோயில் , குடும்பம் , குறுகிய வட்ட நண்பர்கள் என்று வளர்ந்திருந்த உனக்கு, அவர்களின் விரிவான வட்ட நண்பர்கள், பார்ட்டி , கதவைச் சாத்திக் கொண்டு அவர்களின் சாட்டிங் அதிர்ச்சிதான். ஆனால் எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கை உனக்கு ஏன்   இல்லை.


இந்த தொழில் சாம்ராஜ்யத்தை விட்டு நான் எப்படி அங்கே வர முடியும். இந்த நட்பு வட்டத்தை விட்டு அவர்கள்தான் எப்படி வர முடியும்.  அப்பா அம்மா வுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம் . அவர்களும் அந்த நட்பு வட்டத்தை விட்டு வர விரும்பவில்லை . அவர்களே அப்படி இருக்கும்போது நம் குழந்தைகள் எப்படி அவர்களின் நட்பு வட்டத்தை விட்டுப் பிரிவார்கள் .


உனக்கு எல்லாவற்றிலும் ஒரு சந்தேகம். மூத்தவள் கராத்தேயில் ப்ளாக் பெல்ட்.  தைரிய சாலி. போன வாரம்  ஜாக்கிங் சென்று திரும்பிய அவளை வழி மறித்த முரடனை அவள் விட்ட கிக்கில் அவன் டெஸ்டிகிள்  தகர,  வலியால் துடித்த அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வந்திருக்கிறாள். தெரியுமா . நினைக்கும் போதே லேசான புன்சிரிப்பு சுந்தர் முகத்தில்.


 நேற்று இரவு சில நண்பர்களுடன் பார்ட்டி சென்ற போது என்ன சொல்லி விட்டுச்  சென்றாள் தெரியுமா. ' dad , dont worrry , I will keep my virginity and  present it  as a gift to my friend who is going to live together with me eternally  '. இதை நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று தெரியவில்லை.


உன்னோட அப்பா  ரெம்ப ஸ்ட்ரிக்ட். மிலிட்டரி மேன் என்று சொல்வாயே. அது உனக்குப் பிடிக்கவில்லை என்றும்  சொல்வாயே. அப்போது நான் ' அழகான பெண்களின் அப்பாக்கள் அப்படித்தான் இருப்பார்கள். அப்படி இருந்தாதான், என்னைப் போல அழகான , அறிவான பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியும் ' என்று சொன்னபோது மூக்கைச் சுளித்து ஒரு சிரிப்பு  சிரித்தாயே , மறக்க முடியுமா.


' அவரைப் போல் நானும் என்  அழகான பெண்களை ஸ்ட்ரிக்ட் ஆக வளர்க்க வில்லை என்று நினைக்கிறாய் . உனக்கு ஒரு நீதி, அவர்களுக்கு ஒரு நீதியா' . என்னமோ போடி .     


ரெண்டாவது பெண் ' எனக்குக் கல்யாணமே வேண்டாம், நான் கம்பியூட்டரில் பெரிய சாதனை செய்யணும் ‘ என்று படிப்பு , கம்பியூட்டர் என்று ரூமுக்குள் அடைந்து கிடக்கிறாள் என்று உனக்கு வருத்தம் . இருபது வயதில் அவர்கள் அறிவின் வளர்ச்சி அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய் .


அதை விடு . உன்னைப் பிரிந்து நான் தவிக்கும் தவிப்பு உனக்குத் தெரியாதா . உன் சுண்டு விரலைக் கேட்டுப் பார் . அது சொல்லும் . உன் சுண்டு விரலோடு என் சுண்டு விரலைச் சேர்த்துக் கொண்டு தூங்கித்தானே எனக்குப் பழக்கம் .


 ‘இது என்ன பழக்கம் பச்சைக் குழந்தை மாதிரி ‘என்று நீ சீண்டிய போதெல்லாம் , ‘நீ அம்பாள் மாதிரி, எனக்குப் பாதுகாப்பு  ‘ என்று நான் சொல்ல ‘ ஆமாம் , ‘நான்தான் அந்த அங்காளம்மன் , ‘ என்று நீ அபய போஸ்  கொடுக்க  ‘ அடியேன்  அபயம் தாயே , சரணம் ‘ என்று உன் காலடியில் சரிய ‘ நீ ‘ இது அபாயம் பிள்ளாய் ‘ என்று தூக்கி அணைக்க ‘. அதற்கு மேல் .. நினைக்க முடியவில்லை அவனால் . அவள் வணங்கும் அந்த அங்காளம்மன் தான் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று மனம் உருக அங்காளம்மனை வேண்டிக் கொண்டான் .



கண்கள் பனித்தன . ‘ அந்த அன்பெல்லாம் எங்கே போயிற்று  சங்கரி ‘ என்று   நினைக்கும் போதே லேசான விம்மல் வர , அடக்கிக் கொண்டு கம்மிய குரலில்  டெலிகாமில் ‘ லூசி  , கால்  மேடம்  ‘ என்றான்  சுந்தர்  . 


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


வெள்ளி, 8 செப்டம்பர், 2023

மயங்காதே மனமே - கவிதை

 மயங்காதே மனமே - கவிதை 

————————---------------------------—

உலகமே கிராமமாய்

ஒன்றான காலத்தில்


கலாச்சார மாற்றங்கள்

கலந்து விட்ட கோலத்தில்


பழம் பெருமை பேசுவதும்

பயந்து கிடப்பதுவும் 


பயனில்லை இன்று

பாய்வதுவே நன்று


மயங்காத மனதோடு

தயங்காத துணிவோடு


புதுமைகள் படைப்பதற்குப்

புலிப்பாய்ச்சல் பாய்வோம்


தரணியை ஆள்வதற்குத்

தயாராவோம் தைரியமாய் 


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஆனந்தக் கொண்டாட்டம் - கவிதை

 ஆனந்தக் கொண்டாட்டம் - கவிதை 

————————————-----------------------

இயற்கை கொடுத்தவை

எல்லாமே இலவசம்


தென்றல் காற்றும்

பறவைகள் பேச்சும்


பூவின் மணமும்

புல்லின் அசைவும்


பார்த்தும் கேட்டும்

முகர்ந்தும் உணர்ந்தும்


ரசிக்கப் பழகும்

தன்மை வாய்த்தால்


ஒவ்வொரு நாளும்

ஆனந்தக் கொண்டாட்டம்


———நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


அன்புடைய ஆசிரியரே - கவிதை

 அன்புடைய ஆசிரியரே - கவிதை 

———————————--------------------------

அந்தக் காலத்து

ஆசிரியர் நீங்கள்


அன்பும் அறிவும்

அடக்கமும் நிறைந்தவர்


சொல்லிலும் செயலிலும்

சுத்தம் காத்தவர்


பாடத்தை மனதிலே

பதிய வைத்தவர்


குருவே தெய்வமென்று

கும்பிட வைத்தவர்


இந்தக் காலத்துப்

பத்திரிகைச் செய்தியில்


சாதியும் மதமும்

பாலின வன்முறையும்


ஆசிரியர் குலத்திலும்

அமிழ்ந்து கிடப்பதைப் 


படிக்கும் போது

பதறும் நெஞ்சம்


அடுத்த தலைமுறை

ஆண்டவனே  தஞ்சம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


செவ்வாய், 5 செப்டம்பர், 2023

நாளை மாறலாம் - கவிதை

 நாளை மாறலாம் - கவிதை 

———————-----------------------------

நேற்று இன்று நாளை என்று

காலம் போடும் கோலம்


இன்று ஒன்று நன்று என்று

இக்கணத்தில் வாழ்வோம்


இன்பம் துன்பம் இயல்பு என்ற 

நற்குணத்தில் சேர்வோம்


நாளை என்ற நாளும் ஓர்நாள்

இன்று என்று மாறும்


இக்கணத்தில் வாழும் வாழ்வால்

இன்பம் என்றும் சேரும்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பாலைவன நாட்கள் - கவிதை

 பாலைவன நாட்கள் - கவிதை 

—————————----------------------—

வேலையில்லா வாலிபனாய்

வீதியிலே திரிந்த நாட்கள்


வேதனையின் காதலனாய்

முகவரி இல்லாத கடிதமாய்


பொறுக்கியவர் எல்லாம்

முத்திரையைக் குத்த


போகும் இடம் தெரியாமல்

புண்ணாகித் திரிந்த நாட்கள்


புயலும் ஒருநாள் ஓய்ந்து 

புன்னகையும் ஒருநாள் பூத்தாலும்


காயங்கள்  தழும்பாகி இருக்கும்

பாலைவன நாட்கள்


———நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English  


கூடுசாலை - சிறுகதை மதிப்புரை

 கூடுசாலை - சிறுகதை மதிப்புரை  ---------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே  ., எ...