செவ்வாய், 17 ஜூன், 2025

எந்திரிங்க அப்பா - சிறுகதை

 எந்திரிங்க அப்பா - சிறுகதை 

------------------------

'பார்த்து வாடா , கருவை முள்ளு ரெம்பக் கிடக்கு '

செருப்பு இல்லாத கால்கள்தான் இருவருக்கும். அவர்கள் நடந்து போனது ஒரு குறுக்குப் பாதையில் . ராமநாதபுரம் சென்று சினிமா பார்க்க .


வழக்கம் போல் அந்த வாரமும் வார இறுதியில் ஆவலோடு பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரம்பப் பள்ளி வாசலை. அதோ வந்து விட்டார் அப்பா. கடைசி மணி அடிக்கும் முன்பே வந்து விடுவார் பக்கத்துக் கிராமத்தில் இருந்து அவன் அப்பா. வாத்தியாரிடம் சொல்லிவிட்டு ஓடி வரும் அவனை அணைத்துக் கொண்டு , புத்தகப் பையோடு அவன் தாத்தா வீட்டில் போய் பையைப் போட்டு விட்டு புறப்பட்டு விடுவார்கள் ராம்நாட்டுக்கு சினிமா பார்க்க.


போகும் வழியெல்லாம், கருவைக் காடும் , அங்கங்கே தேங்கிய தண்ணீரோடு சில கண்மாய்களும். ஒத்தையடிப் பாதையில் நடக்கும்போது பார்க்கப் போகும் எம் ஜி ஆர் படச் சண்டைக்காட்சிகளின் கனவுகளோடு .


'இந்தப் படத்திலும் சிலம்புச் சண்டை உண்டா அப்பா '

'இருக்கும்னுதான் நினைக்கிறேன் , இல்லைன்னாலும் எல்லாச் சண்டையிலும், அந்தக் கை கால் ஸ்டைல் வந்துடும்டா, நல்லா இருக்கும் '.


'அப்பா, அடுத்து எப்பப்பா மீன் பிடிக்கப் போகலாம்'

முன்பு ஒருமுறை உள்ளூர் கண்மாயில் அப்பா வேட்டியின் முனையை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு இடுப்பளவு ஆழத்தில், அலசி வீசியதில் அகப்பட்ட கெண்டையும், கெளுத்தியும். எத்தனை ருசி '

'போவோம்டா, உனக்கு லீவு விடட்டும்'


ராம்நாட் ரயில்வே லைன் வந்தாச்சு. தாண்டிப் போனா ராம்நாடுதான்.

டீக்கடை பன் ,காப்பீ . ஷண்முகா தியேட்டர், ராஜாராம் டாக்கீஸ் ரெண்டிலும் ரெண்டு ஷோ சினிமா பார்த்துவிட்டு, இரவில் பெரியப்பா வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கி விட்டு அதிகாலை முதல் பஸ் பிடித்து தாத்தா வீட்டில் விட்டு விட்டு நடந்தே பக்கத்துக் கிராமம் சென்று விடுவார்.


இது தவிர, பக்கத்து ஊர்த் திருவிழா, உள்ளூர் முளைக்கொட்டு உற்சவம், சித்திரைத் திருவிழா, நடராஜர் ஆருத்ரா தரிசனம், சைக்கிள் ஓட்டும் திருவிழா, வள்ளி கல்யாணத் தெருக்கூத்து, அப்பாவுடன் சேர்ந்து சென்ற இடங்கள் எல்லாம் அவர் வாங்கிக் கொடுத்த தின்பண்டங்கள், சீனிச்சேவு, காராச்சேவு, கடலை மிட்டாய், சவ்வு மிட்டாய், நிலக்கடலை. இதுதவிர , கிராமம் செல்லும் போதெல்லாம், சீசனுக்கு ஏற்றபடி பதினி நுங்கு, பனங்காய். கிழங்கு, நெல் ஒப்படியின் போது வாங்கித்தரும் நிலக்கடலை, மொச்சைப்பயறு, பண்டிகைக்கு ஏற்றபடி, கரும்பு ,கிழங்கு, பயறு .எந்தத் திண்பண்டத்தைப் பார்த்தாலும் அப்பா நினைப்புதான். அதுவும் நுங்கை , நறுக்கி , கட்டைவிரல் விட்டு உறிஞ்சிச் சாப்பிடும் கலையும் அவர் சொல்லிக் கொடுத்த கலைதானே.


முதுமையில் தளர்ந்தபின்பு கிராமத்தில் இருந்து கூட்டி வந்து மதுரையில் வீடு பிடித்து இருக்க வைத்தபின்பு , சில வருடங்களில், சர்க்கரை வியாதியில் எடுத்த கால்களை எண்ணி எண்ணி ஏங்கிய அவர் ஏக்கம். கண்ணீரும் வார்த்தையுமாய் எத்தனை முறை.. மூன்று கிராமம் முழுக்க எத்தனை வயல்கள். எத்தனை வேலையாட்கள், தானும் சேர்ந்து விதைப்பது, நாற்று நடுவது முதல், ஒப்படி வரை உழைத்த கால்களின் , காலங்களின் கண்ணீர்க் கதைகள் அவை.


கால்கள் மட்டுமா, இளம் பருவத்தில், தோளில் தூக்கிச் சென்ற அந்தக் கரங்கள் , கல்லூரி விடுதிக்கு வந்த மணி ஆர்டரில் நுணுக்கி எழுதிய விரல்கள் . 'சனிக்கிழமை தவறாம எண்ணைய் தேய்ச்சுக் குளி, உடம்பைப் பார்த்துக்கோ, படிப்பைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டியதில்லை ' வார்த்தைகள் இருக்கின்றன .


எல்லாம் மூடப்பட்டு , முகம் மட்டும் தெரிய ,முகத்தை மூடச் சொல்லி, கொடுத்த , வறட்டி ஒன்றோடு நிற்கிறான். உடம்பு முழுக்க விறகுகளும் , வறட்டிகளும் மூடி இருக்க , முகத்தை மூட விருப்பம் இன்றி நிற்பவனை மூடச் சொல்லி நிர்ப்பந்திக்கும் உறவினர். மூடப் போகும்போது ‘முகம் சிரிக்காதா, எழுந்து விட மாட்டாரா, என்ற எண்ணத்தோடு . அழுகை பொங்கி வர, அணைக்கும் கரங்கள். இவை அப்பாவின் கரங்கள் இல்லை.


ஒவ்வொரு முறை , அயல்நாட்டில் இருந்து வந்து பார்த்துச் செல்லும்போதெல்லாம் பார்க்கும் ஏக்கப் பார்வையில் தெரிந்த எண்ணம். 'இனி எப்போது வருவாய், வரும்போது நான் உயிரோடு இருப்பேனா' . இதோ சுடுகாட்டில், 'வந்திட்டேன் அப்பா, எந்திரிங்க '


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீட்டுக்கு வீடு - கட்டுரை

 வீட்டுக்கு வீடு - கட்டுரை  -------------------------- 'அப்படி என்னங்க கதை கவிதைன்னு எழுதிக்கிட்டு, பாட்டு பாடிக்கிட்டு , பேசாம பேரன் பே...