திருடர் பயம் -சிறுகதை
------------------------------
எனக்குத் திருடர்கள் மேல் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை உண்டுங்க. திருடன் னு சொல்லாம திருடர் னு சொன்னதில் இருந்து நீங்க புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்க. காரணத்தையும் சொல்லிடுறேன்.
ஒரு தடவை , நாங்க வீட்டை விட்டு வெளியூர் போயிருந்தப்ப ஒரு திருட்டு நடந்திடுச்சு . 'வீட்டை விட்டுட்டுப் போகாம தூக்கிட்டா வெளியூர் போவீங்க' ன்னு குதர்க்கமா கேட்கக் கூடாது. சரி 'வெளியூர் ' போயிருந்தப்போ' . . 'வீட்டிலே இருந்தா நடக்குமா' ன்னு ஆரம்பிக்காதீங்க. சொல்ல விடுங்க சார்.
எங்கே விட்டேன். ம். திருட்டு. அது என்ன ஆச்சு . அவன் , இல்லை அவர் கஷ்டப்பட்டு கேட்டிலே வெளியிலே இருந்த பலத்த திண்டுக்கல் பூட்டை உடைச்சு , உள்ளே வந்திருக்கார் . குட்டைச் சுவர் தான். ஏறிக் குதிச்சே வந்திருக்கலாம். என்னவோ அவரோட தொழில் தர்மம். உடைக்கணும். அப்பதான் திருடின திருப்தி போலிருக்கு . அப்புறம் பல சாவிகள் உபயோகிச்சு கதவோட பூட்டைத் திறந்திருக்கார் . ஒரே சாவியிலும் திறந்திருக்கலாம். ஒரு யூகம் தான். நம்ம வாடகை வீட்டுக் கதவாச்சே. கஷ்டமா இருந்திருக்கும்னு நினைக்கிறதிலே ஒரு அல்ப சந்தோசம்.
வெளியே இருக்கிற மெயின் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததாலே உள்ளே இருட்டிலே கஷ்டப்பட்டிருக்கார் . எப்படித் தெரியும் னு கேட்கிறீங்களா. . அணைஞ்சு போன தீக்குச்சிகள் ரெம்ப கிடந்தது உள்ளே. ஒரு டார்ச் லைட் கூட இல்லாத ஏழைத் திருடர் அவர்னு நீங்க யூகிச்சுக்கலாம்.
எப்படியோ அலமாரியை உடைச்சு உள்ளே இருக்கிற துணிமணி எல்லாம் வெளியே எடுத்து எறிஞ்சு தேடி இருக்கார் . நாங்க திரும்பிப் போனப்போ இருந்த நிலைமை அது . பாவம் நகையோ பணமோ எதுவும் கிடைக்கலே. உள்ளே இருந்தது கொஞ்சம் காசுகள். அதுவும் என் பையன் பொழுது போக்காய்ச் சேகரித்த அயல் நாட்டு நாணயங்கள். அதைப் பார்த்து அவருக்கு இன்னும் கோபம் வந்திருக்கு.
எப்படிக் கண்டு பிடிச்சேன்னா, ஹால்லே இருந்த டி வியைத் தள்ளி உடைச்சிருக்கார் சார். அந்த டிவியும் பழைய காலக் குண்டாச் சட்டி டி வி. இந்தக் கால மெல்லிசான டி வி னா கூட தூக்கிட்டு போயிருக்கலாம். அந்தப் பெரிய டி வியை தூக்கிப் போட்டு உடைச்சிருக்கார் சார். நீங்க அவர் நிலைமையில் இருந்து யோசிச்சு பார்த்தா உங்களுக்குப் புரியும். அய்யய்யோ கோச்சுக்காதீங்க. நிலைமையை புரிஞ்சுக்கிறதுக்காகச் சொன்னேன்.
அப்புறம் , போலீஸ் வந்து , போலீஸ் நாயும் வந்து , அதுவும் தெரு ஓரம் வரை போயி , அங்கே ஏதோ பிஸ்கட் பாக்கெட்டை மோந்து பார்த்தது. அதுக்கு பாவம் பசியா இருக்கலாம். ஆனா, போலீஸ் அதை கர்சீப்பால் மூடி எடுத்துக்கிட்டாங்க. வீட்டிலே அவன் உடைச்ச கதவு , பீரோவில் கிடைக்காத கைரேகை அதிலே கிடைச்சிடுமாமாம் .
எல்லாம் முடிஞ்சு எங்க கிட்டே கேட்டாங்க.
'என்னென்ன திருடு போயிடுச்சு '
'ஒண்ணும் திருடு போகலை சார் '
திருப்பியும் அதே கேள்வி , அதே பதில்.
கடுப்பான போலீஸ்
' திருடனைப் பிடிச்சா என்னத்தைக் கொடுன்னு கேட்கிறது '
நம்ம விடுறதா இல்லை .
'சார் , இந்தக் கதவை உடைச்சது, டி வியை உடைச்சதுக்கு காசு கேட்கலாம்ல சார் '
'யோவ் , அவனே , வெறுத்துப் போயி அவன் பட்ட கஷ்டத்தில் , இங்கே வந்து வேர்வையை சிந்தி , ஒண்ணும் கிடைக்காமப் போயிருப்பான். ஒண்ணு பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வாங்க. உள்ளூர்த் திருடனா இருந்தா, உங்களைப் பாத்தா, உதைக்காம விட மாட்டான். ' னாரு.
ஆனா நமக்கு வேலை இருக்கே . போகலை. ஆனா, அப்பப்போ வெளியே போறப்ப, நம்மை யாரவது உற்றுப் பார்த்தா, இவர் அந்தத் திருடரா இருப்பாரோ ' ங்கிற பயம் உண்டு. ஆனா நேற்று வரை அப்படி யாரும் வரலை .
இன்னிக்கு காலையிலே ரோட்டிலே வாக்கிங் போறப்ப, ஓர் ஆளு ரெம்ப நெருக்கத்தில் வந்தாரு .
'ஏன்யா , உனக்கு எதுக்கு இத்தனை பெரிய வீடு, வீட்டைப் பார்த்து ரெம்ப இருக்கும்னு உள்ளே வந்தா, ஏதோ செல்லாத காசு தான் கும்பல் கும்பலா இருந்தது. இதிலே உன் டி வியை உடைச்சதுக்கு உனக்குப் பைசா வேணுமா. தெரிய வந்தது. இந்தா ஐநூறு ரூபாய் வச்சுக்கோ , இதை வச்சு , டிவியை ரிப்பேர் பண்ணி எடுத்துக்கிட்டு வீட்டைக் காலி பண்ணிட்டு ஏதாவது குடிசையில் போய்க் குடியேறு. அடுத்து இந்தப் பெரிய வீட்டுக்கு வர்றவனாவது ,பசையுள்ள ஆசாமியா இருக்கான்னு பார்க்கிறேன் '
'சொல்லிட்டு விடு விடுன்னு போயிட்டார் சார். ஆளு ஓங்கு தாங்க முரட்டு ஆளாய் இருந்ததாலே , ஒண்ணும் பேசாம ,ஐநூறு நூறு வாங்கிட்டு வந்திட்டேங்க. வீடு பாத்துக்கிட்டு இருக்கேங்க. சின்ன வீடா, திருடருக்குப் பிடிக்காத வீடா இருந்தா சொல்லுங்க ப்ளீஸ் . திருடருக்குப் பிடிச்சது, பிடிக்காதது உங்களுக்கு எப்படித் தெரியும்னு கோச்சுக்காதீங்க. ப்ளீஸ் சார்',
--------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக