செவ்வாய், 17 செப்டம்பர், 2024

தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை

 தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை 

-----------------------

'அம்மனோ சாமியோ' ரெக்கார்ட் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சு ஐந்து நாள் தொடர் சைக்கிள் ஓட்டம் . முளைக்கொட்டுத் திருவிழா முடிஞ்ச சுருக்கொடு ரங்கசாமி வந்துவிடுவார். மங்கள நாதர் கோயில் கோபுர வாசலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் அந்த மைதானத்தில் , இந்தப் பக்கம் அவனது பள்ளிக்கூடத்துக்கு எதிர்ப்புறத்திலே இருக்கிற அந்த மைதானத்தில் தொடர் சைக்கிள் ஓட்டம் . அவனுக்கு அது ஒரு பெரிய ஆச்சரியம் .’எப்படி ஐந்து நாட்களும் சைக்கிளிலேயே உட்கார்ந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். ‘ அவர் மனைவி பிள்ளைகள் எல்லாம் சுற்றி இருக்க, அவர்கள் அவ்வப்போது கொடுக்கும் , தண்ணீர், சாப்பாடு எல்லாம் சைக்கிளில் இருந்தபடியே வட்டமாக ஓடிக்கொண்டே . தொடர் சைக்கிள் ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறார் .


பள்ளிக்கூடம் விட்டதும் அங்க போய் ஒரு ஐந்து நிமிடமாவது அவர் சைக்கிள் ஓட்டுவதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்து விட்டு தான் அவன் வாணக்கிடங்கு தெரு வழியாக வீட்டுக்கு வருவான். .'உடனே வருவதற்கு என்ன' என்று வீட்டில் அப்பத்தாவின் திட்டு. 'இல்ல அந்த தொடர் சைக்கிள் ஆரம்பிச்சிட்டாங்க .அஞ்சு நாள் ஓட்டப் போறாராம் .' 'அவருக்கு அதாண்டா தொழிலே. அதை வச்சு தான் பொழப்பு ' .' அது சரி , அது எப்படி அப்பத்தா , 5 நாள் சைக்கிள் விட்டு இறங்காமல்' . 'நாலு மணி நேரத்துக்கு ஒரு தடவை இறங்கி கால் மணி நேரம் ரெஸ்ட் உண்டு. '


'அப்படியா நான் போறப்ப எல்லாம் அவர் சைக்கிள்லேயே தான் ஓட்டிக்கிட்டு இருக்காரு . அதுவும் சைக்கிள்லயே என்னென்ன மாதிரி விளையாட்டு எல்லாம் பண்ணுறாரு தெரியுமா. சிலம்பு சுத்தறாரு . தீப்பந்தத்தை தூக்கி போடுறாரு, எல்லாம் சுத்தி சுத்தி வரப்போவே . ' 'நீ போய் படிக்கிற வேலையை பாரு.'


புத்தகத்தைப் புரட்டினாலும் மனம் எல்லாம் ரங்கசாமி மேல் தான் கொஞ்ச நேரம் கழிச்சு 'பிரென்ட் சேதுராஜ் கூடப் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு அந்த மைதானத்துக்கு ஓடினான் .


இப்பொழுது சாயங்காலம் ஆகிவிட்டது . அங்கு பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து எல்லாம் ஜனங்கள் வந்திருக்க , சுற்றி தின்பண்டக் கடைகள். அப்பப்ப அவனுடைய அப்பா, தாத்தா கொடுக்கின்ற பைசாக்களில் இருந்து பத்து பைசா எடுத்து சீனிச்சேவு பொட்டலம் வாங்கி கடித்து சாப்பிட்டு கொண்டு . ஸ்பீக்கர் செட்டில் இருந்து வந்து கொண்டு இருந்தது அப்பொழுது வந்திருக்கிறது ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் பட பாட்டுகள் தான். 'கும்தலக்கடி கும்மா கும்மா கும்மா என்றே ஒரே உற்சாகமான பாட்டுகள் தான் . அந்த ரெகார்ட் போடுற இடத்தைச் சுற்றி வேறு சின்னபசங்க, சின்னப் பொண்ணுங்க கூட்டம்.


ஒரு ஓரத்திலே ஒரு நீளமான கம்பு உச்சியிலே மிட்டாய்களை சுற்றி வைத்து சிவப்பு மிட்டாய் பிசுபசுத்த சிவப்பு மிட்டாய் சுற்றி வைத்து வருபவர்களுக்கெல்லாம் கையில் சவ்வு மிட்டாய் வாட்ச் கட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். அங்கு சென்று இன்னொரு பத்து பைசா செலவு. கையெல்லாம் பிசுபிசுத்துக் கொண்டு திரும்பிப் போனால் வீட்டில் திட்டு கிடைக்கும் எனவே அந்த சவ்வு மிட்டாய் முழுவதும் கடித்து சாப்பிட்டு விட்டு. கையைத் துடைத்து விட்டுத்தான் வீட்டுக்கு திரும்புவான்.


நடுராத்திரியில் அவனுக்கு ஒண்ணுக்கு போவதற்காக அப்பத்தா உசுப்பி விடுவார்கள். எழுந்து வாணக்கிடங்கு தெருவுக்குப் போகும் பொழுது அந்த தெரு வழியாக அப்படியே கிரௌண்டுக்கு ஓடிப் போய் அங்கே பார்த்தான் .'அவர் நடுவில் ரெஸ்ட் எடுக்கிறதே கிடையாது . அப்பத்தா பொய் சொல்றாங்க. 'இந்த ஆழமான நம்பிக்கை வருங் காலத்தில் தானும் அந்த ஹீரோ அங்கிள் போலவே தானும் சைக்கிள் ஓட்ட வேண்டும். அவர் ஐந்து நாட்கள் ஓட்டுகிறார். நான் 10 நாட்கள் ஓட்டுவேன் என்று நினைத்துக் கொண்டு திரும்பினான் .


மறுநாள் முதல் 10 பைசாவுக்கு ஒரு மணி நேரம் வாடகைக்கு சைக்கிள் வாங்கி அதை ஓட்ட ஆரம்பித்து தெக்குத்தெரு நண்பன் மங்களசாமியை துணைக்குச் சேர்த்துக் கொண்டு , கண்மாய்க் கரைப் பக்க ரோட்டில் , சைக்கிள் பழக கீழே விழுந்து முழங்கால் அடிபட்டு , செயின் நழுவ செயினைத் திருப்பி மாற்றும்போது கை எல்லாம் ஒரே பிசுபிசு. . வீட்டில் திட்டு அவனுக்கு .'பரிச்சை எல்லாம் பாஸ் பண்ணி ஏதாவது கவர்மெண்ட் வேலைக்கு போகணும் .பாடங்களை ஒழுங்கா படி நல்ல மார்க் வாங்கிட்டு இருக்க. மனச குழப்பிக்காம ஒழுங்கா படி' என்ற திட்டு .


இதற்கு நடுவில் கிராமத்திலிருந்து அவ்வப்போது வரும் அப்பா மட்டும் அவனோடு சேர்ந்து வந்து அந்த சைக்கிள் ஒட்டியை பார்த்து ' இவன் நம்ம பனைக்குளம் . நாங்க சேர்ந்து தான் அஞ்சாப்பு வரை படிச்சோம் . அப்புறம் நான், விவசாயத்தில் இறங்கிட்டேன். அவன் எங்கேயோ ஓடி போயிட்டான் . பத்து வருஷம் வட நாட்டிலே இருந்து திரும்பி வந்து , அங்கே ஓட்டக் கத்துக்கிட்ட சைக்கிள் விளையாட்டோட இதே பொழப்ப ஆயிட்டான். சுத்துபட்டிக் கிராமம் எல்லாம் எதாவது திருவிழா வந்துட்டா , இவன் சைக்கிள் ஓட்டம் தான்., மத்த நாள் எல்லாம் கஞ்சிக்கு கஷ்டம் தான் '; என்று சைக்கிள் ஒட்டியின் இன்னொரு கோணத்தையும் அவனுக்கு அறிமுகப் படுத்த எங்கோ உதைத்தது அவனுக்கு .


'அப்பா , நான் இது மாதிரி பத்து நாள் தொடர்ந்து ஓட்டணும்பா . ' 'சைக்கிள் ஓட்டப் பழகு. அது ஒரு விளையாட்டா இருக்கட்டும். படிப்பு கவனம் ' என்று அவர் சொன்னது அவன் மனதில் இதமாக இறங்கியது .


அன்று கடைசி நாள் . சைக்கிளில் இருந்தபடி இரண்டு கைகளிலும் தீப்பந்தத்தை ஏந்தியபடி அவர் சுற்றிச் சுற்றி வர, சில கீழத் தெருப் பையன்கள் ,' மாமா , என்னையும் ஏத்திக்கிட்டு 'என்று சொல்ல, அவர்கள் இருவரையும் சைக்கிள் கம்பியில் ஏற்றிக் கொண்டு தீப்பந்தம் சுழற்றி , சுற்றிச் சுற்றி வர இவனுக்கும் ஆசை. ஆனா, 'கீழத் தெருப் பசங்க , ரெம்ப சேட்டை பண்ணுவாங்க , அவனுங்க கூட சேர கூடாது 'என்ற அப்பத்தா எச்சரிக்கை மனதிற்குள் . 'வடக்குத் தெருப் பசங்க சாது 'என்ற பேர் பள்ளிக்கூடத்திலும் உண்டு ஆனா, மார்க் எல்லாம் பர்ஸ்ட் வடக்குத் தெரு தான். கீழத் தெருப் பசங்க விளையாட்டில் கெட்டி . இவன் ஓட்டப் பந்தயத்தில் அவனுங்க கூட , அஞ்சு பேர் ஓடி , அஞ்சாவதா வந்த பெருமை இவனுக்கு உண்டு.


இவனும் சைக்கிளில் ஏற்றச் சொல்லிக் கேட்க, கீழத் தெருப் பசங்க கிண்டல் வேற, 'டேய் , அடிபட்டுடும், உன் அப்பத்தா திட்டுவாங்க. ', எதோ ஒரு வேகத்தில் இவனும் போய் சைக்கிள் வட்டத்தில் நிற்க, ஒரு சுற்று வரும்போது தீப்பந்தம் கை மாற்றி விட்டு, இவனை ஒரு கையில் தூக்கி சைக்கிள் நடுக் கம்பியில் வைத்து வேகம் குறையாமல் ஓட்ட, இவனுக்கு தலை சுற்றியது . சுற்றி தீப்பந்தம் வேறு சுழலுகிறது . சூடு. மயக்கம் வரும் போல் இருக்க , புரிந்து கொண்ட ரங்கசாமி ஒரு சுற்றில் லாகவமாக இவனை இறக்கி விட ,அங்கே வாணக் கிடங்கு தெரு வழியே வந்து கொண்டிருந்த தாத்தா , ஓடி வந்து இவன் முதுகில் ஒரு அடி வைத்து , இவனை இழுத்துக் கொண்டு , வீட்டுக்குப் போக , அங்கே கிடைத்த திட்டுகள் இன்னும் அதிகம். நல்ல வேளை , அடி விழவில்லை. அப்பா இருந்தார் .


அடுத்த வருடம், அதே போல் சவுண்ட் ஸ்பீக்கர் ரவிச்சந்திரன் பாட்டு முழங்க, அவன், தாத்தாவைப் பார்க்க, ' வா போய்ப் பார்த்துட்டு வரலாம் ' என்று கிளம்ப அடுத்து ஐந்து நாட்களும் தாத்தா துணையோடு , தொடர் சைக்கிள் ஓட்ட பார்வை. அங்கே நமுட்டுச் சிரிப்போடு கீழத் தெருப் பசங்க சைக்கிள் கம்பியில் ரெங்கசாமியுடன் ஏறிக் கொண்டு .

---------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை

 தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை  ----------------------- 'அம்மனோ சாமியோ' ரெக்கார்ட் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சு ஐந்து நாள் தொடர...