செவ்வாய், 6 செப்டம்பர், 2016

பாட்டியின் தூக்கம்

பாட்டியின் தூக்கம்
------------------------------
லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்கமா' என்று பேரன்  கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டாள் . ' தூக்கமா , நானா , இந்த தூக்கச் சனியன் தான் வந்து தொலையவே மாட்டேங்குது ' என்று சலித்துக்கொண்டபடி  போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவளோட துணி மூட்டை ஒன்றை கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடுவாள்.

பாவம் பாட்டி. பகலில் தான் கொஞ்ச நேரம் இப்படி அசந்து விடுவாள். ராத்திரியில் தூக்கம் வராம இங்கும் அங்கும் புரண்டு கொண்டு ஏதாவது அனத்திக் கொண்டே கிடப்பாள்.

எல்லாம்   இந்த எழுபது வயது ஆன  பின்னாடிதான். அந்தக் காலத்திலே என்னமா வேலை பார்ப்பா பாட்டி. ஒரு மரத்து புளியம் பழத்தை அடிச்சு கொண்டாந்து போட்டிருக்கும் . கட்டையை வச்சு அடிச்சு அடிச்சு தோலை உடைச்சுடுவா ஒரே நாளிலே. அது மட்டுமாஅதி காலையிலே இருந்து ராத்திரி வரைக்கும் மாங்கு மாங்கு ன்னு வேலை இருக்கும். வீடு கூட்டறது, நெல்லு குத்தறது , பாத்திரம் கழுவறது , சமையல் வேலை அது இதுன்னு ஒவ்வொரு நாளும் ஓயாத  வேலைதான்.

கல்யாணம் ஆயி புருஷனை பறி கொடுத்துட்டு அடுத்த மாசமே  தம்பி வீட்டோட வந்தவ தான். தம்பி குடும்பம். பெரிய குடும்பம். பொண்ணு , பிள்ளைங்கன்னு அத்தனை பேரையும் வளர்த்து ஆளாக்கி வருஷங்கள் ஓட பேரன் பேத்திகளை வளர்க்கிற பொறுப்பு.
            
          அதுவும் இந்தப் பேரன்னா அவளுக்கு ரெம்ப பிரியம். அவனும் அவளைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டே தான் தூங்குவான்.  சின்னப் பிள்ளையிலே சிரங்கு வந்து ரெம்பக் கஷ்டப் பட்டான். குளிக்க ஊத்துறப்போ சீயக்காய் பட்டா அவ்வளவுதான். பாட்டிக்கு அடி உதை தான். எல்லாத்தையும் பொறுமையா வாங்கிக்கிடுவா. அது தவிர, அடிக்கடி காய்ச்சல்  வேற. ஓமியோபதி உருண்டை கொடுத்து பத்தியச் சாப்பாடு போட்டு மூணு நாளு ஆகி காய்ச்சல் தணிஞ்சு ஓமத் தண்ணி ஊத்தி குளிப்பாட்டி விடுற வரைக்கும் துடிச்சு போயிடுவா. சீக்காளிப் புள்ளைன்னு ரெம்பச் செல்லம்.

ஆவணி ஞாயிற்றுக்   கிழமை  புரட்டாசி சனிக்கிழமை விரதம் வேற. அன்னிக்கிச்   சாயந்திரம்  சுடச் சுட   தோசை மிளகாய் சட்டினியோடு . அந்த மொந்த தோசையிலே மேலே காத்துக் குமிழி போட்டிருக்கிற சின்ன சின்ன ஓட்டைகளை எண்ணிப் பார்த்துக்கிட்டு அவன் சாப்பிடற அழகை பார்த்து ரசிப்பா.

அந்தப் பேரனுக்கும் பாட்டின்னா கொள்ளைப் பிரியம். பெரியவன் ஆக ஆக , லைப்ரரி யிலே இருந்து பொன்னியின் செல்வன் அஞ்சு பாகத்தையும் எடுத்து வந்து பாட்டிக்குப் படிச்சு காண்பிக்கிறது , அவ தலைக்குப் பேன் பார்க்கிறது , கால் வலி ன்னு படுத்தா  காலை அமுக்கி விடுறதுன்னு பார்த்துக்கிடுவான்.

ஆச்சு. வருடங்கள் ஓடியாச்சு. அடுத்த ஊருக்கு வேலைக்கு போனவன், மாசம் ஒரு வாட்டி வருவான். பழைய மாதிரியே பாட்டி கூட பல்லாங்குழி விளையாட்டும் தாயம் விளையாட்டுமா நாட்கள் ஓடும்தாயச் சோவிய  வீசி விளையாடாம , புடிச்சி வச்சு அஞ்சும் ,ஆறும்பன்னெண்டுமா போட்டு அழுகுணி ஆட்டம் விளையாடி ஒரே சண்டை தான். திரும்ப அடுத்த மாதம் .

 இப்ப பாட்டி தளர்ந்து போயிட்டா. முதல்லே  சொன்ன  மாதிரி  ராத்திரி தூக்கம் வராம கஷ்டப்படுறா   .   ரெம்ப முடியாமப் போகறதுக்குள்ளே  முருகனோட ஆறு படை வீடுகளை பாக்கணும்னு ஆசை பட்டான்னு கூட்டிட்டுப் போனான். ஒவ்வொரு இடத்திலும் இறங்கின உடனே பாட்டியை பாத் ரூம் கூட்டிட்டுப் போயிட்டுத் தான் கோயிலுக்கு கூட்டிட்டுப் போவான். ' சீக்கிரம் வாங்க, கோயில் பூட்டிடப் போறாங்க' என்று கூட வந்தவர்கள் அவசர படுத்தினாலும், பாட்டி ஒண்ணுக்கு போயிட்டு வந்தப்புறம் தான் கோயிலே. அவளின்  உடல் உபாதைகளை புரிந்து நடந்து கொள்ளும் பேரனை பெருமையோடு பார்ப்பாள் பாட்டி.  ரெம்ப திருப்தியுடன் திரும்பி வந்த பாட்டி எல்லாரிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தாள்.

வருடங்கள் ஓட ஓட பாட்டி தளர்ந்து போய் விட்டாள்படுத்த படுக்கை தான். பாயும், தலையணையும். போர்வையும் . அந்தப் பழைய துணி மூட்டையை  கட்டிக் கொண்டே தான் படுத்துக் கிடப்பாள்ஒவ்வொரு தடவையும் பேரன் வந்துட்டுப் போறாப்ப சொல்லுவா . ' நான் செத்தப்புறம் என் உடம்பை பஸ்பமா எரிச்சுப் புடணும்பா. ரெண்டு வேளை குளிச்சு சுத்த பத்தமா வளர்த்த உடம்பு. ஒரு புழு பூச்சி திங்க கூடாது . சுத்தமா எரிச்சு புடணும். '  ' நீ இன்னும் ரெம்ப நாள் இருப்பே பாட்டி'  ' அட ப்  போடா , அடுத்த தடவை நீ வரப்போ நா இருப்பேனோ மாட்டேனோசொன்னவுடனே வந்திருவையிலேகண்கள் கலங்க  கேட்டாள்.

அவள் சொன்ன மாதிரிதான் நடந்ததுஅவன் அயல் நாட்டில் வேலைக்குச் சென்றபோது அது நடந்தே விட்டது. காரியம் முடிந்தபின்தான் வந்து சேர்ந்தான். மெயின் ரோட்டில் இறங்கி ஒத்தையடிப் பாதை வழி நடந்து கண்மாய்க்கு கரையைத் தாண்டி ஊருக்குப் போகும் வழியில் தான் சுடுகாடுஅவன் கால்கள், வீட்டுக்குப் போகாமல் சுடுகாட்டுக்கு விரைந்தன.

அங்கே ஒரு சாம்பல் மேடு. அதற்குப் பக்கத்தில், பாய், தலையணை, போர்வை, அந்த பழைய துணி மூட்டை. . பாட்டியை எரித்த இடம்தான். ஒரு நிமிடம் அந்த சாம்பல் மேடு திடீர் என்று  பாட்டியாக மாறி புரண்டு படுத்த படி ' தூக்கமே வர மாட்டேங்குதுடா' என்ற படி அந்த துணி மூட்டையை இழுத்து கட்டிப் பிடிப்பது போல் ஒரு பிரமைக் காட்சி. அந்த துணி மூட்டை பிரிந்திருந்தது. அதற்குள் தெரிந்தன அவன் பள்ளிப் பிராயத்தில் போட்டிருந்த பழைய டிரவுசர் ,சட்டைகள். கண்கள் பனிக்க நினைத்துக் கொண்டான். ' பாட்டி, எனக்குப் பொண்ணா வந்து பிறப்பியா' ,

-------------------------------------------------------------------நாகேந்திர பாரதி






3 கருத்துகள்:

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள்  --------------------------------- வாழ்க்கை ஓடம்  --------------------- முன்னோடிய ஓடத்தால் பின்னோடிய தென்னைகள் போல் நிழலாக ந...