செவ்வாய், 30 ஜூன், 2026

கனகாம்பரம் (கு ப ரா ) சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 கனகாம்பரம் (கு ப ரா ) சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 


--------------

முன் குறிப்பு : நேரம் கருதி, அன்றைய  கதை புதிது நிகழ்வின் பேச்சில் விடுபட்ட , கு ப ரா காட்டும் , அந்த ஆண்களின் மாறிய மனநிலையையும் , இந்த மதிப்புரையில் சேர்த்து விட்டேன்.🙏


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே.


அழகியசிங்கரின் இந்தப் புதிய முயற்சிக்கு , ஒரே கதையைப் பலர் மதிப்புரை செய்யும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.


மனித மன உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டு வர வல்லவர், அதுவும் பக்கம் பக்கமாக சிறுகதைகள் எழுதிக் கொண்டு இருந்த அந்தக் காலத்திலேயே இரண்டு மூன்று பக்கங்களில் அந்த உணர்வுகளைக் கொண்டு வரும் திறம் வாய்ந்தவர் எழுத்தாளர் கு ப ரா அவர்கள் என்பது நம்மில் பலர் அறிந்ததே.


இந்தக் கனகாம்பரம் சிறுகதையும் அதுபோன்ற ஒன்றே. கதைச் சுருக்கம் இதுதான்.


கிராமத்துப் பெண்ணை மணமுடித்து நகரத்திற்குக் கூட்டி வந்து இங்கே சுதந்திரமாகப் பழகும் விதம் பற்றி பாடம் எடுத்துவிட்டுச் செல்லும் கணவன் திரும்பி வந்தபின் , தன் மனைவி , தான் இல்லாதபோது வீட்டிற்கு வந்த தன் நண்பன் ஒருவனை வீட்டுக்குள் வந்து அமரச் சொன்னதை, மன முதிர்ச்சி இன்றி தவறாகப் புரிந்து கொள்வதையும் , அந்தக் கிராமத்துப் பெண் மன முதிர்ச்சியோடு தன் கணவனைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் போக்கையும் விவரிக்கும் கதை.


படிப்பு குறைந்திருந்தாலும் பழக்கத்தால் அவள் வாசமுள்ள பூ. படித்து விட்டு , பெண்ணுரிமை பற்றி பேசித் திரிந்தாலும் , அந்த நேரத்தில் அவன் வாசமில்லா வெறும் வண்ணப் பூவான கனகாம்பரம் போல்தான் , என்று கனகாம்பரத்தை ஒரு குறியீடாகக் காட்டி முடிகிறது கதை.


முதலில் கதையில் எனக்குப் பிடித்த சில வருணனைகளைச் சொல்லி விட்டு கதையைப் பற்றிய என் கருத்தைக் கூறுகிறேன்.


முதலில் நாயகி சாரதாவின் உருவத்தைக் கொண்டுவரும் வரிகள் .

'விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசுவம் ’ விட்டுக் கட்டிக்கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம்

கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலை மயிரை நடுவே வகிடெடுத்துத்தான் பின்னிக்கொண்டிருந்தாள். பின்னல்கூட நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’ வென்று காதை மூடிக்கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக்கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ணசந்திரன்போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புல்லாக்கு இருந்தது' .


அந்தக் காலக் கிராமத்துப் பெண் சாரதா நம் கண்முன் வருகிறாள் .


அடுத்து அவள் உள்ளத்தைக் கொண்டு வரும் வரிகள் இப்படி .


'அதுக்காக மூணாம் மனுஷனைப்போய் வீட்டுக்குள்ளே வந்து உக்காருங்கறதோ?” என்று மணி ஆத்திரத்தில் கொட்டி விட்டான்.

சாரதாவின் முகம் சடக்கென்று மாறுதல் அடைந்தது. என்ன கிராமாந்தரமானாலும் அவள் பெண்; அளவு கடந்த கோபத்துடன் மணியின் முகத்தை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் எண்ணங்கள் அவன் முகத்தில் அவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன. தனக்கு-தன் பெண்மைக்கு-அவன் செய்த அவமரியாதையை அறிந்தவள்போல அவளுடைய முகத்தில் ஓர் ஆழ்ந்த வெறுப்புக்குறி தோன்றிற்று. பாதி போட்ட பின்னலை அவிழ்த்து முடிந்துகொண்டு கனகாம்பரப் பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டாள்.

இந்த மகத்தான கோபத்தின் முன்பு மணி அயர்ந்து போனான்'


இங்கே அந்தப் பெண்ணின் கள்ளமில்லா உள்ளம் வெளிப்படுகிறது நமக்கு .


இன்னும் கதையைப் பற்றி இரண்டு எழுத்தாளர்கள் பேச இருப்பதால், இந்தக் கதைச் சுருக்கம், பிடித்த வருணனைகள் இவற்றோடு நிறுத்திவிட்டு , கதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை மட்டும் சொல்லுகிறேன்.

------

.

இதைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்த வேறு கதை நிகழ்வுகள் இரண்டு. ஒன்று வில்லிபாரதத்தில் இருந்து. மற்றொன்று நமது இசை புதிது குழு உறுப்பினர் எழுத்தாளர் ரேவதி பாலு அவர்களின் கதையில் இருந்து .


முதலில் வில்லிபாரதத்தின் நிகழ்வின் அந்தக் கவிதை வரிகள் இவை .

' மடந்தை பொன்-திரு மேகலை மணி, உகவே ,மாசு

அறத் திகழும், ஏகாந்த

இடம்தனில், புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?

கோர்க்கவோ ?'" என்றான்


துரியோதனன் இல்லாத நேரத்தில் அவன் மனைவி பானுமதியுடன் கர்ணன் சதுரங்கம் விளையாடிக் கொண்டு இருந்த நேரத்தில், துரியோதனன் வர , எழும் பானுமதியை, தோல்விக்குப் பயந்து எழுகிறாள், என்று அவளைக் கர்ணன் பிடிக்க அவள் மேகலை முத்துக்கள் சிதற , துரியோதனன் , 'அந்த முத்துக்களை எடுத்துத் தரவா , இல்லை மாலையாகக் கோர்த்துத் தரவா ' என்று கேட்கும் இடம்.


மாலை கோர்ப்பது என்பது கோபம் இல்லாமல் நிதானமாகச் செய்யும் வேலை. துரியோதனனன் மனத்தில் நண்பனையும் மனைவியையும் பார்த்து கோபம் வரவில்லை. நண்பன் மீதும் மனைவி மீதும் நம்பிக்கையோடு 'எடுக்கவோ, கோர்க்கவோ' என்கிறான்.


அதே போன்று ' மாசு அறத் திகழும், ஏகாந்த இடம் தனில் ' என்ற வரி மூலம் அவர்கள் தனித்து இருக்கும் அந்த இடத்தில் கர்ணன் மனதிலும் மாசு இல்லை என்று வில்லிபுத்தூரார் கூறுகிறார். அந்த நட்பின் போக்கு அப்படி.


இப்போது கதையில் வரும் இந்தக் கணவனும் அவன் நண்பனும். அவன் இல்லாத நேரத்தில் வரும் அந்தக் கணவனின் நண்பனை , கணவன் நகரத்தில் பழகும் விதம் பற்றி சொன்னபடி ,அவள் புரிந்து கொண்டபடி வரவேற்று வீட்டுக்குள் வரச் சொல்கிறாள் அவன் மனைவி. அப்போது அந்த நண்பனின் எண்ணம் ஆசிரியர் வார்த்தைகளில் .


'படித்த பெண்கள்கூடப் புது மனிதர்களிடம் பேசுவது கஷ்டமாயிற்றே! அப்படியிருக்க, நவநாகரிக முறையில் ஆண்களுடன் பழகுவது என்பதே அறியாத பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண் பிற புருஷ னுடன் பேசுவதென்றால், அது ராமுவுக்கு விபரீதமாகப் பட்டது. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள். தலைகுனிந்த வண்ணமாகவே இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.“இல்லை, அப்புறம் வரேன்” என்று அரைகுறையாகக் கூறித் தலையெடுத்துப் பார்க்காமல் வெகுவேகமாய்ப் போய்விட்டான்.'


இப்போது அங்கே வில்லிபுத்தூரார் வரிகளில் ,' மாசு அறத் திகழும் ஏகாந்த இடம் தனில் ' இருந்த கர்ணனின் தூய மன நிலையோடு ,

அவள் பேசியது ' விபரீதமாகப் பட்டது ' என்று நினைத்து வேகமாக போன இந்த நண்பனின் மாசு உள்ள மன நிலையை ஒப்பிடத் தோன்றியது .

-----

அடுத்து கணவன் திரும்பியவுடன் , மனைவி சொன்னதைக் கேட்ட கணவனின் எதிர்வினை ஆசிரியர் வார்த்தைகளில் .


ஆரம்பத்தில் ' பட்டணத்தில் நண்பர்கள் அடிக்கடி வந்து தேடுவார்கள்; பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்துகொண்டு கதவைச் சாத்திக் கொள்ளக் கூடாது; பட்டணத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்ற சொன்ன அந்தக் கணவனின் மனநிலை இப்போது இப்படி .


'அவள் நடந்துகொண்டுவிட்டது அவனுக்கு அதிருப்தியை உண்டாக் கிற்று. அதன்பிறகு, ‘ஏன் அப்படிச் செய்தாள்? நாம் சொன்னதற்காகக் கீழ்ப்படிந்து நடந்த மாதிரியா அது? அல்லது…’ என்று கொஞ்சம் அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது.சிநேகிதன் என்ன நினைத்திருப்பான்? ‘என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு?’ என்றோ, அல்லது ‘சுத்த அசடு! என்றோ நினைத்திருப்பான். அல்லது…

இம்மாதிரி யோசித்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான்..


' அல்லது ' .. அல்லது .. ' என்று நினைக்கும் இவன் மனைவி மீது வைத்துள்ள அவநம்பிக்கையை அங்கே வில்லிபுத்தூரார் வார்த்தைகளில் ' எடுக்கவோ , கோர்க்கவோ ' என்று கேட்ட துரியோதன னின் நம்பிக்கை மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

-------

இது கதையில் வரும் அந்த இரு ஆண்களின் மனநிலையை , கர்ணன் துரியோதனன் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றிய விதம். அந்த ஆண்களின் முரண்பட்ட மனநிலை. அந்த வேற்றுமை பளிச்சென்று தெரிந்தது .

-----

ஆனால் அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் அவர்கள் அதை உணர்ந்து கொள்வது போல் ஆசிரியர் முடித்துள்ள விதமும் அருமை . அதையும் குறிப்பிட வேண்டும் .


மணியின் மாறிய இறுதி மனநிலை இப்படி .

'அவள் முகத்தில் தோன்றிய துக்கக் குறியைக் கண்டு அவன் பதறிப் போனான்; எழுந்து அவள் தோளைப் பிடித்துக்கொண்டான். “சாரதா!” என்று சொல்லி மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.'


அதே போன்று மாறிய ராமுவின் மனநிலை பிறகு இப்படி.

'தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை!-தன் புருஷனின்

நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்துவிட்டாள்! தன்னையும் நம்பினாள்… அவளா அசடு? அவள்தான் உண்மையான பெண்! நான் சந்தித்த முதல் பெண்!'


இப்படி இந்த இரு நண்பர்களின் மனநிலையின் மாற்றத்தையும் காண்பித்து விடுகிறார். எனவே தான் பின்னால் சாரதா அவனை மன்னித்து அவனோடு பேசும்போது நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது .


------

இப்போது , அந்தப் பெண்ணின், சாரதாவின் மனநிலை. கணவனைப் புரிந்து கொண்டு நடக்கும் ஒரு பெண்ணின் மனநிலை.


கு ப ராவின் 'கனகாம்பரம்' கதையில் சந்தேகப்படும் கணவனிடம் மனைவி நடந்து கொள்ளும் மனநிலை. அழகியசிங்கரின் ' அசோகமித்திரன் பரிசு பெற்ற கதைகள் தொகுப்பில் ரேவதி பாலு அவர்களின் 'அசட்டு மனிதர்கள் ' கதையில் சும்மாவே கோபப்படும் கணவனிடம் மனைவி நடந்து கொள்ளும் மனநிலை. இரண்டிலும் வெளிப்படுவது பெண்களின் பொறுமையும் , புரிந்து கொள்ளும் தன்மையும். அந்த ஒற்றுமை பளிச்சென்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது .


அங்கே ஆண்களின் மனநிலையில் தெரிந்தது வேற்றுமை. இங்கே பெண்களின் மனநிலையில் தெரிந்தது ஒற்றுமை .


ரேவதி பாலு அவர்களின் 'அசட்டு மனிதர்கள்' கதையில் கடைசி வரிகள் 'அசடு அசடு , உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் ஆத்திரப்பட்டு அமர்க்களம் செஞ்சு சண்டை போட மட்டும்தான் தெரியும் . தானே சமாதானமாகவும், எதிராளியைச் சமாதானப்படுத்தவும் தெரியாத ஜென்மம். அப்பத்தா சொல்வது போல் பல்லைக் காட்டி , பரக்க முழிச்சுதான் இவரை வழிக்கு கொண்டு வர வேண்டியிருக்கு ' .


'அசட்டு மனிதர்கள் ' கதையின் அந்த அப்பத்தாதான் அந்த 'கனகாம்பரம்' கதையின் சாரதாவோ என்று எண்ண வைத்த கு ப ராவின் வரிகள் கனகாம்பரம் கதையின் கடைசியில் இப்படி .


“வேண்டாம்!” என்று சாரதா அவன் முகத்தைத் தடவினாள். “நான் சொன்னது” என்று மணி தன் மனத்தை வெளியிட ஆரம்பித்தான்.

“கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே! நீங்கள் சொன்னதில் தப்பென்ன?” என்று சாரதா, பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுரியத்துடன் பேச்சை மாற்றினாள்.'

----

அவனுக்குப் பிடித்த அவன் சொன்னபடி நகரத்துப் பழக்கத்தை ஏற்றுக்கொண்டு அது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதை புரிந்து இப்போது அவன் மனநிலை மாறிய , தவறை உணர்ந்த இப்போதைய நிலையைப் புரிந்து அவனைச் சமாதானப்படுத்தும் நோக்கில் 'கனகாம்பரம் எனக்கும் பிடிக்காதுதான் , நீங்கள் சொன்னதற்காக வைத்தேன், எனவே இப்போது நீங்கள் சொல்வது தப்பில்லை, எனக்குப் பிடிக்காததைத்தானே வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள்' என்பதில் அந்த சாதுரியம் தெரிகிறது.

----

இந்தச் சாதுரியம் கு ப ரா அவர்களின் சாரதாவிடமும் இருந்தது. ரேவதி பாலு அவர்களின் சங்கீதா விடமும் இருந்தது, வேறு வேறு சூழ்நிலைகளில் ,வேறு வேறு காலங்களில் .


இதைச் சாதுரியம் என்பதா , பெண்களின் நிலை என்பதா என்பதை வாசகர்களிடம் விட்டு விடலாம். அதேபோல் ஆண்களின் மனநிலை மஹாபாரதக் காலத்தில் இருந்து கு ப ரா காலத்தில் மாறிவிட்டதோ , இப்போது திரும்பவும் மஹாபாரத காலம் வந்து விட்டதா என்றும் வாசகர்களுக்கு யோசிக்கத் தோன்றலாம் . ஆனால் எல்லாக் காலங்களிலும் மாறும் குரங்கு மனநிலை ஆண்களுடையது. மாறாத நிதானமான மனநிலை பெண்களுடையது என்றும் பொதுவாக எண்ணவும் தோன்றுகிறது

---


இந்தக் கனகாம்பரம் கதையைப் பொறுத்த மட்டில் அந்த நேரத்தில் கணவன், மனைவி, நண்பன் ஆகியோரின் மனநிலையை அப்படியே எழுத்தில் வடித்து , பின்னால் மாறினாலும் , முதலில் வெளிப்பட்ட அந்த வாசமில்லாக் கனகாம்பரக் கணவனைக் , காட்டி விட்டு , அந்த மூவரின் பொதுவான மனநிலைகளையும் கதை முழுக்கக் காட்டி முடிக்கிறார்.

----

அனைத்தையும் தாண்டி எனக்குத் தோன்றுவது , இது எந்தக் காலத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் வளர்ப்பின்படி தோன்றிய அவரவர் மனநிலை தான், அதுவும் மாறக் கூடிய மனநிலைதான் , இது எந்தக் காலத்திலும் ஒட்டு மொத்த ஆண்களுக்கோ , பெண்களுக்கோ அல்லது சமுதாயத்தின் மனநிலையோ அல்ல என்றே முடிவாக நினைக்கத் தோன்றுகிறது. இங்கே மஹாபாரதத் 'துரியோதனன் 'களும், 'கர்ணன்' களும் உண்டு , கனகாம்பர 'மணி' களும் 'ராமு' களும் உண்டு . அவர்களுக்குள் மாறி மாறி வரும் துரியோதனன்களும் , கர்ணன்களும் உண்டுதான் . ஆனால் கு ப ரா அவர்களின் சாரதாக்களும் ரேவதி பாலு அவர்களின் சங்கீதாக்களும் என்றும் சாரதாக்கள் தான். சங்கீதாக்கள்தான் .


-----

இந்தக் கதையில் கனகாம்பரத்தை ஒரு குறியீடாக வைத்து , மாறும் எண்ணங்கள் பலவற்றை நம் முன் காட்சிகளாக ஓட விட்ட கு ப ரா அவர்களுக்கு வணக்கங்கள். அழகியசிங்கர் அவர்கட்கு நன்றிகள்.


------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


ஞாயிறு, 7 ஜூன், 2026

'புது மொட்டு' சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 


'புது மொட்டு' சிறுகதை  மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

-----------------

நன்றி அழகியசிங்கர் .  வணக்கம் நண்பர்களே. தங்களது கதைகளை தாங்களே சொல்வது போன்ற   இது போன்ற புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தும் அழகியசிங்கருக்கு வாழ்த்துக்கள். அவரது கலைபுதிது குழுவிலும் இதுபோன்று தங்கள் கதைகளை தாங்களே சொல்லலாம் என்று கேட்டுக் கொண்டு சில நண்பர்கள் அங்கும் சொல்லி வருகிறார்கள் . கதைகளிலே ' படித்தவர் பார்வை , படைத்தவர் பார்வை  , என்று இரண்டு விதம் உண்டு என்பார்கள். இங்கே படைத்தவர் பார்வையோடு , அவர்களின் புரிதலோடு அந்தக் கதைகளைக் கேட்பதில் மகிழ்ச்சி. 

------

  

 இப்பொழுது எனது கதைக்கு வரலாம் .ஒரு  முறை  நான் குடும்பத்துடன் சென்னை பொருட்காட்சி சென்றிருந்த பொழுது அங்கிருந்த 'தாவர நர்சரி பள்ளியிலே' ரோஜாக்கள் வைத்திருந்ததைப்  பார்த்து  

 அதை வாங்க வேண்டும் என்று எனது மகள்  சொல்ல நாங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம் . அதை ஆர்வத்துடன்  பராமரித்த  மகளுக்கு யூனிட் டெஸ்ட் வந்துவிட்டதால்  எங்களை அந்த வேலைகளை பார்க்க சொல்லிவிட்டு அவள்  படிப்பில் முழுமூச்சாக இருந்தாள்  . 


அப்பொழுது ஒரு ரோஜா மொட்டு மலர்ந்து இருந்தது  படிப்பில் மூழ்கி உள்ள அவள் அந்த மலர்ந்த பூவைப்   பார்ப்பதற்கு 'அவள் வருவாளா'  என்ற ஒரு எண்ணத்தோடு அந்தக்  கதை எழுதி இருந்தேன்.  'அவள் வருவாளா' என்று தலைப்பு கொடுத்திருந்தேன். அதுதான் நான் வைத்த முதல் பெயர். அது ' புது மொட்டு ' என்று கல்கி எடிட்டரால் மாற்றப்பட்டு 2003  இல் கல்கி இதழில் 'அறிமுக எழுத்தாளர் ' என்று எனது புகைப்படத்தோடு வெளியான எனது முதல் சிறுகதை . இந்தக் கதை வெளிவந்த அடுத்த வாரம் நேயர் கடிதத்தில் பாராட்டுக் கடிதங்கள் வந்திருந்தன. அவர்களின்  வீடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சி அது என்று

எனது மின்புத்தகம்  சிறுகதை தொகுப்பு பதினொன்று 'மனங்களின் மணங்கள்' தொகுப்பில் ' அவள் வருவாளா ' என்ற தலைப்பில் இந்தச் சிறுகதை உள்ளது. 

.  

  இப்பொழுதும் எனது பேத்தி நீட் போன்ற பரீட்சைகளுக்குப்  படித்துக் கொண்டிருக்கும் பொழுது  அவளுக்கு  பெயிண்டிங் போன்ற பல கலைகளில் ஆர்வம் இருந்தாலும் கூட அதற்கு  நேரம் ஒதுக்க முடியாத நிலைமை இருப்பதை பார்க்கின்றேன்.  இதுபோன்று இந்த கால இளைய தலைமுறையினருக்கு இருக்கக்கூடிய சிரமங் களால் படிப்பு என்பது  எப்படி ஒரு பாரமாக மாறிவிட்டது என்ற ஒரு கருத்து இன்றும் நாம் உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.


 அந்த ஒரு மெசேஜ் பற்றி கல்கி  எடிட்டர் அவர்கள் அப்போதே சொன்னார்கள்  எழுதிய முறை மிகவும் சரளமான நடையிலே அதிக  வர்ணனைகள் எதுவும் இல்லாமல் அளவாக தெளிவாக ஆற்றொழுக்காக  இருந்ததாகவும் சொன்னார்கள். 


கதை மிகவும் சிறியதுதான். ரெண்டு பக்கங்களுக்கு மேலே கதை எழுதக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்ட விதிப்  படி எழுதிய கதை . நான் மேலே சொன்ன கருத்து தான்.  அதில் உள்ள எளிமையான வருணனைகளையும் அன்பான  உரையாடல்களையும் சிலவற்றை மட்டும் சுருக்கமாக சொல்கிறேன் .


அந்த பொருட்காட்சி தாவர நர்சரியில் நடக்கும்  உரையாடலில் ஆரம்பிக்கிறது கதை.

ரோஜா தொட்டி வாங்கலாமாப்பா'  என்று  கெஞ்சிய  மகளிடம் 'ஓ வாங்கலாமே' என்று  பிரியத்துடன் சொன்ன  நாதன் 'இன்னும் அரை மணி நேரம்' என்று வலிக்கும் கால்களிடம் சொல்லி வைத்தான் .  அவனும் நளினியும் மகள் ஆஷா உடன் பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ரோஜா செடி வைத்திருந்த நர்சரி கடையை பார்த்த ஆஷாவின் முகம் எல்லாம் மலர்ச்சி . 

இன்ஜினியரிங் படிப்பவளுக்கு பாட்டனியிலும்  ஆர்வம் .


இந்த முதல் பாராவில் அந்தக்  குடும்பத்து நபர்களின் குண நலன்கள்  வெளிப்படுகின்றன. அப்பாவின் நடந்து வந்த  களைப்பு , அதையும் மீறிய அப்பாவின்  அன்பு,  படிப்பிலும் , விருப்பிலும்  முரண்பட்ட  மகளின்   ஆர்வம்,   எல்லாம் உடனே நம் கண் முன் கொண்டு வரும் காட்சியில் வார்த்தைகள் .


அடுத்து ஒரு பின்னோட்டம். அதில் வெளிப்படும் மகளின் ரோஜாச்செடி ஆர்வம் .  



தினசரி காலை வீட்டுக்கு வரும் ரோஜாக் காரனிடம் பார்த்து பார்த்து வாங்கும் சிவப்பு மஞ்சள் ரோஜாக்கள் எல்லாம்  இங்கே செடிகளின் மேல் பூத்து நிற்கும் அழகைப்  பார்த்த அவளுக்கு  ஏகக் குஷி அந்த கதர் வேட்டி சட்டை கடைக்காரர் செடியை பாதுகாக்கும் முறைகளை கம்மிய  குரலில் விளக்க - அவர் எத்தனை முறை  இந்த முறைகளை அங்கே வந்தவர்களிடம் சொல்லி இருப்பார் என்பதை அந்த ' கம்மிய குரல் ' என்ற வார்த்தையில் கொண்டு வருகிறார் ஆசிரியர். 


 ' செங்கல் வைத்து அதன்மேல் தொட்டி  வைக்கணும் வெயில் நேராகப் படக்கூடாது  மண்ணைக் கிளறி விட்டு  உரம் போடணும்.  மாதம் ஒரு முறை மண் மாற்றியே ஆகணும்  .செடியை பூச்சி அரித்தால் மருந்து  தெளிக்கணும், தினமும் ரெண்டு முறை தண்ணீர் ஊற்றணும் ' . 

 ரோஜாச் செடி வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ள ஆலோசனையும் கிடைக்கிறது .


ரொம்ப நேர யோசனைக்கு பிறகு இளம் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் பன்னீர் ரோஜாச்  செடியை பூத்தொட்டி யோடு தூக்கி வரும் பொறுப்பு நாதனிடம் கொடுக்கப்பட ,  'நான் கொஞ்ச நேரம் தூக்கிக்கிட்டு வரேன் 'என்ற மனைவியின் வற்புறுத்தலை முறுவலுடன்  மறுத்துவிட்டு 'பூ நசுங்காம '  என்றபடி அந்தச் செடியையே  பார்த்தபடி வரும் மகளின் ஆர்வத்தை  ரசித்தான் நாதன். 


இந்த வார்த்தைகளில்  அந்தக் குடும்பத்தின்  அன்பையும்  ஆர்வத்தையும்  நம் கண்முன் தெரிய வைக்கிறார் ஆசிரியர். 


 வீட்டுக்கு வந்ததும் பால்கனிக்கு ஓடி செங்கல் வைத்து செட்டப் செய்த பின் தான் நிம்மதியை அடைந்தாள் ஆஷா.  அந்த வாரம் முழுக்க ரோஜா புராணம் தான் தண்ணீர் ஊற்றுவது உரம் போடுவது ,காம்பை வெட்டி  விடுவது, கல்லூரிக்குச் செல்லும்போது செடிக்கு  'டாட்டா  சொல்வது , சினேகிதியை  அழைத்து  வந்து ரோஜா வளர்ப்பு பற்றி கதைகள் சொல்வது ,ஆஷாவுக்கு வேறு நினைப்பே இல்லை .தூங்கப்போகும் முன்பு செடியைப்  பார்த்து ரசிப்பாள் . 


அந்த இளம்பெண்ணின் மகிழ்ச்சியை அழகாக எளிமையாக ஆடம்பரம் அற்ற வார்த்தைகளில் நம் முன் காட்டுகிறார் ஆசிரியர். 


'அப்பா இங்கே வாங்க இந்த மொட்டு எவ்வளவு சமத்தா இலைகளுக்கு  மத்தியில உக்காந்து இருக்கு பூத்த உடன் எப்படி கம்பீரமா தலையை நீட்ட போகுது ' என்றாள் .  'பூவும் பொண்ணும்  வளர்ற வரை  பெத்தவங்க நடுவுல சமத்தா இருப்பாங்க வளர்ந்த பின்பு 'என்று மகளைச் சீண்டினாள் நளினி '  அவ உன் பொண்ணு தானே'  என்று  நளினியை அவன் சீண்டியதும் நளினியின் ஆஷாவும் அவனைச்  செல்லமாய் பிராண்டினார்கள்,


 இந்தக் காட்சியில் கிண்டலும் கேலியும் கலந்து அந்தக் குடும்பத்தின் அன்பு வாழ்க்கையை சில வரிகளில் விவரித்து விடுகிறார் ஆசிரியர். 


 இப்போது கிளைமாக்ஸ் .


 கல்லூரியில் டெஸ்ட் வந்துவிட்டது இரவு நீண்ட நேரம் கண் விழித்து படித்தாள் ஆஷா.  காலையில் தாமதமாக எழுந்து கிளம்பும் போது 'அம்மா செடிக்கு தண்ணீர் ஊற்றிடு  ப்ளீஸ் , காம்பு  கட் பண்ணிட்டியா ,அப்பா ,  மண் மாத்தணும்' சாப்பிடக்  கூட நேரமில்லாமல் பறந்தாள்  ஆஷா.  அந்த வாரம் முழுக்க பரீட்சை மும்முரத்தில்  ஆஷா  செடியைப்  பார்க்க பால்கனிக்குப்   போகவே இல்லை அங்கே புது  மொட்டு ஒன்று பூத்திருந்தது . காத்திருந்தது . பரீட்சை முடிவதற்குள் வாடி விழுந்து விடுமே அவள் வருவாளா .  முடிகிறது கதை. 


சுருக்கமான வரிகளில்  பூ மேல் அவள் வைத்திருந்த அன்போடு , அந்தப் பூவுக்கே அவள் மேல் அன்போடு பூத்து , காத்திருக்கும் அதன் ஏக்கத்தோடு கவிதை நயத்தோடு ,  படிப்பவர்க்கும்  ஒரு ஏக்கத்தை எழுப்பி விட்டு முடிகிறது கதை. 


இந்தக் கதையை நானே மறுபடி படித்தபோது கதையின் ஓட்டத்தில் உணர்ச்சியில் மூழ்கி, நான் எழுதியது என்பதையே மறந்து , மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பாராட்டுவது போல் கொஞ்சம் அதிகமாகவே பாராட்டி இருக்கலாம்.மன்னிக்கவும். நன்றி  வணக்கம். 


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


கனகாம்பரம் (கு ப ரா ) சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 கனகாம்பரம் (கு ப ரா ) சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  -------------- முன் குறிப்பு : நேரம் கருதி, அன்றைய  கதை புதிது நிகழ்வின் பேச்...