வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தீர்ப்பு - சிறுகதை

 தீர்ப்பு - சிறுகதை

-------------------------------


'வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சையில் தேறி டாக்டர் ஆகுறதுக்கு வேண்டிய விஷயங்கள்லே கவனம் வைக்கணும்.'


' பிரெண்ட் அரட்டை, டிவி சீரியல், கம்பியூட்டர் கேம்ஸ் எல்லாம் தள்ளி வைச்சுட்டுப் படிக்கணும்' என்ற அம்மாவின் அறிவுரையை வழக்கம் போல் அலக்ஷியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஸ்டார் ப்ளஸ்ஸில் வரும் கிரைம் த்ரில்லரைப் பார்க்கச் , சேனலை மாற்றினாள் வித்யா.


'எப்பப் பாரு , கொலை, கொள்ளை, துப்பறியுறது , கோர்ட் ஸீன், இதெல்லாம் பார்த்து ஏண்டி குழம்பணும், எவ்வளவு குடும்பக் கதை சீரியல் வருது , அதைப் பார்த்து வாழ்க்கைன்னா என்னன்னு புரியறதை விட்டுட்டு, ஏண்டி இப்படி'


'ஆமா, குடும்பக் கதை பார்த்து , மாமியார் கூட எப்படி சண்டை போடுறது, புருஷனை எப்படி தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போறது இத்யாதி எல்லாம் கத்துக்கணுமாக்கும்'


' போன வருஷம், அப்படிப் பார்த்துதானே , பக்கத்து வீட்டுக் கோமளம்

புருஷனை விட்டுட்டு எவனையோ இழுத்துட்டு ஓடிப் போனா, இந்தக் கதையெல்லாம் இங்கே விடாதேம்மா, எனக்குத் தெரியும்,

I know ' என்று அம்மாவைக் கத்தரித்து விட்டு டிவியில் வந்த கோர்ட் சீனில் மூழ்கினாள்.


'என்னமா வாதாடுறா , ஒவ்வொரு பாயிண்டும், அந்தப் பெண்ணைக் கெடுத்தவனுக்கு மரண தண்டனை கொடுக்கிற அளவு எப்படி வைக்கிறா, ஜட்ஜ் எவ்வளவு பெருமையோடு அந்த இளம் பெண் வக்கீலைப் பார்க்கிறார், அவரு வேலை ஈஸியாய் போச்சுல்லே, இந்த மாதிரி அயோக்கியர்களை ஒழிச்சுக் கட்ட இப்படி வக்கீல்கள் தான் தேவை ' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,


அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்குள் ராஜா வர , ' இப்படிச் செல்லம் கொடுத்துத்தான் கெடுத்து வச்சிருக்கீங்க, உங்க பெண்ணரசியை, அதோட பிரெண்ட்ஸ் எல்லாம் நீட்டுக்கு இப்பவே டியூஷன் போக ஆரம்பிச்சாச்சு, இது தன்னோட வாழ்க்கைக்குப் பின்னாலே என்ன தேவைன்னு ஒண்ணும் யோசிக்காம , டிவியில் வர டயலாக்குக்கு கை தட்டிக்கிட்டு கொட்டம் அடிக்குது, நீங்க ஒண்ணுமே சொல்லுறது இல்லே' என்று குற்றம் சாட்டும் அம்மாவுக்கு ' ஸ்டாப் , ஒரு வசனம் விட்டுப் போச்சு, உள்ளே போம்மா ' என்று விரட்டினாள் மகள்.


ராணியை அழைத்துக்கொண்டு மகளின் ரூமுக்குள் சென்ற ராஜா, ' ஒரு விஷயம் புரிஞ்சுக்க ராணி , இந்தக் காலக் குழந்தைகளுக்கு நம்மை விட உலகத்தைப் பற்றி நல்லாவே தெரியும், இந்தப் பத்தாவது முதல் யூனிட் டெஸ்டில் அவதானே பஸ்ட், இந்த டாக்டர் படிப்புன்னு நீ அடிக்கடி சொல்றது அவளுக்குப் பிடிக்கலே , விட்டுடு, இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, அதற்குள் எவ்வளவோ மாற்றங்கள், சமுதாயத்திலும் , அவளிடமும் ' என்றவன் அங்கே சுவரில் வித்யா வரைந்து மாட்டி இருந்த அந்தப் படத்தைக் காட்டினான்.


' இவர் யார் தெரிகிறதா , அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் பல வழக்குகள் எடுத்து வாதாடி ஜெயித்துக் கொடுத்து அங்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வரை உயர்ந்து , பெண்களுக்குத் தீங்கு இழைப்பவர்களுக்கு எமனாக விளங்கி ' notorious R B G ' என்று பெயர் எடுத்த 'ரூத் பேடர் கின்ஸ்பேர்க் ', அவரோட படத்தை இங்கே வரைஞ்சிருக்கா, அங்கே கிரிமினல் சீரியல் , புரியுதா,' என்றவன் தொடர்ந்தார்.


' உடனே குடுகுடுன்னு ஓடிப் போயி , லாயருக்கு படிக்கறதும் நல்ல பியூச்சர் தாண்டி ' ன்னு உசுப்பேத்தி விடாதே, அடுத்த வருஷம், இந்த இடத்திலே அன்னை தெரசா படத்தை வரைஞ்சு மாட்டுனாலும் மாட்டுவா, அவ போக்குக்கு விட்டுடு, பிளஸ் டூ முடிச்சுட்டு , நம்ம கிட்டே கேக்க வந்தா, அந்த நேரத்தைப் பொறுத்து நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லலாம் , she knows ' என்றவனைப் பார்த்து ' சரியான தீர்ப்பு , நீ என் ராசாடா ' என்று கொஞ்சியபடி கட்டிப் பிடிக்க வந்தவளைத் தடுத்து ' ம்ஹூம், இந்த மூட் இங்கே வரக் கூடாது , இது அவ ரூம், இங்கே வேணாம் ' என்று செல்லமாகச் சொன்னான் ராணியின் ராசா .


------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சந்தோஷங்கள் - கவிதை

 சந்தோஷங்கள் - கவிதை 

-------------------

முற்றத்துப் புடலைக்குக்

கல் கட்டி விடும்

சந்தோஷம்


சுகப்பேறு பார்த்தவளுக்கு

சேலை பணம் தரும்

சந்தோஷம்


பத்து முட்டைகளும் குஞ்சாக்கிய

தாய்க்கோழி பார்க்கும்

சந்தோஷம்


அழகரை ஆற்றில் பார்த்து

ஊர் திரும்பிய

சந்தோஷம்


அழிஞ்ச கண்மாய் மீன்களின்

குழம்பு ருசியில்

சந்தோஷம்


அப்பத்தாவின்  சந்தோஷங்களை

அசை போட்டபடி

நியூயார்க் பாரில்


நுரை ததும்பும் பீருக்கு

நொறுக்குத் தீனியோடு

பேரனின்  சந்தோஷம்


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


மழை - கவிதை

 மழை - கவிதை 

-----------

பேஞ்சும் கெடுக்கும்

காஞ்சும் கெடுக்கும்


மழை மட்டுமா

மனமும் கூடத்தான்


அடங்கி வந்தால்

அமிர்தமாய் இனிக்கும்


அடங்க மறுத்தால்

நஞ்சாய் மாறும்


ஆறும் குளமுமாய்

அமைந்து போனாலும்


சேரப் போவது

கடலில் தானே


ஜீவன் சேர்வது

பரத்தில் என்ற


சேதி புரிந்தால்

சிரமம் இல்லை


ஆறும் மனம்

அமைதிக் குளம்


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 19 மார்ச், 2025

ஒரு கப் காப்பி - சிறுகதை

 ஒரு கப் காப்பி - சிறுகதை 

---------------------------

' கோமளம் , ஒரு கப் காப்பி கிடைக்குமா .'' கேட்டு அரை மணி நேரம் ஆச்சும்மா '

' அவ்வளவு அவசரம்னா, போயி போட்டுக்க வேண்டியதுதானே . குமார் ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கான். அவனுக்கு டிபன் பண்ணிக்கிட்டு இருக்குறது தெரியலையா, காது தான் போச்சு . கண்ணும் அவிஞ்சு போச்சா ' .


அவர் ஒன்றும் பேசவில்லை.

அப்போதுதான் ரூமின் உள்ளிருந்து ஹாலுக்கு வந்துகொண்டு இருந்த குமார் கேட்டான்.

'என்ன வேணுமாம் கிழத்துக்கு '


'ம். காப்பி , குடிச்சுட்டு ஆபீஸ் போகணுமாம். ரெம்ப அவசரமாம். கேட்டு அரை மணி ஆச்சுதாம். ஆபீஸ் போனப்போ இது படுத்தின பாடு கொஞ்சமா, நஞ்சமா. மறக்க முடியுமா, கொஞ்ச நேரம் நம்மை நிம்மதியா இருக்க விட்டுச்சா, அப்பா, என்ன ஆக்ரோஷம் பேச்சிலே, ஆபீசுக்குப் போற நேரத்திலே கொஞ்சம் லேட்டா ஆனாலும் , கத்துன கத்து,'


' உன்னை மட்டுமாம்மா படுத்துச்சு , என்னை ஒரு நாளாவது ஸ்கூல் கூட்டிட்டுப் போயிருக்கா, எல்லாம் அம்மா பாத்துக்குவா, ஆபீஸ் ஆபீஸ் . என் கல்லூரிக்கு ஏதோ லோன் போட்டு பீஸ் கட்டிச் சேர்த்து விட்டதோடு சரி, ஒரு நாளாவது 'என்ன படிக்கிறே, எதுவும் வேணுமா ' ன்னு ஒரு வார்த்தை கேட்டுருக்கா . நானாப் படிச்சு , வேலை தேடி சேர்ற சமயம், சரியா இதுக்கும் ஆபீஸ் வேலைக் காலம் முடிய, ஏதோ நான் வேலைக்குப் போறதால குடும்பம் நடக்குது.'


' இதிலே காபிக்கு அரை மணி நேரம் ஆச்சா, இன்னிக்கு கிழத்திற்குக் காபி கொடுக்காதேம்மா. அது என்ன பழக்கம். ரெண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை காபி . அதுதான் அந்தக் காலத்திலே ஆபிஸில் அடிக்கடி குடிச்ச பழக்கம், இனிமே நிறுத்திடு. காலையிலே ஒரு கப் கொட்டிக்கிடுச்சுல்ல . போதும் , '


'எனக்கு டிபன் பாக்ஸ் ரெடியா, இப்பவே கால் மணி நேரம் லேட்டு. பஸ் பிடிச்சுப் போக எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். இது மாதிரி அங்கே ஒரு மேனேஜர் கிழம் ஸ்ட்ரிக்ட் . என்ன திட்டு திட்டப் போகுதோ' என்று கிளம்பினான் .


அடுத்த நொடி , ரூமுக்குள் இருக்கும் டி வி முன்னால் போய் உட்கார்ந்து விட்டாள் கோமளம். 'இந்நேரம் சீரியல் ஆரம்பிச்சிருக்கும். பாவம். அந்த மாமியார் மருமகள் கிட்டே படுற பாட்டைப் பார்த்து அழணும் . ' உள்ளே ஓடினாள்.


அஞ்சு வருஷத்திற்கு முன்னால் , ஒரு ஞாயிற்றுக் கிழமை அந்தப் பிரம்மாண்டமான கடைக்குப் போய், கோமளம் ஆசையாய்ப் பார்த்துக் கேட்ட அந்த டிஜிட்டல் கலர் டி வி யை வாங்கிக் கொடுத்த ஞாபகம் வந்தது. 'இவருக்கு அந்த டி வியும் கிடையாது. காபியும் இப்ப கிடைக்காது' .


அவருக்குத் தெரிந்தாலும் சில கேள்விகளை அவ்வப்போது அவரே உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு பதிலும் சொல்லிக் கொண்டு அமைதியாக இருப்பது ஒரு தினசரிப் பழக்கம் ஆகிவிட்டது அவருக்கு .


'வீட்டுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டு தானே இருந்தோம். அப்புறம் ஏன் இந்த வெறுப்பு அவர்களிடம். அவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவரை ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாதவர்கள் இப்போது ஏன் இப்படி . '


'தனக்கு வேலை இல்லாததாலா , நோய் வாய்ப்பட்டு விட்டதாலா,' . பலமுறை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு பதிலும் தெரிந்தவர் தான் அவர். 'வேலை வேலை ' என்று திரிந்த காலத்தில், கோமளத்திடமோ , குமாரிடமோ ஒரு வார்த்தை அவர் பிரியமாய்ப் பேசியது இல்லை. '


புரிந்தது அவருக்கு. 'எல்லாம் வாங்கிப் போட்டால் போதுமா, கூட இருந்து பேச வேண்டாமா. வெளியே அடிக்கடி கூட்டிப் போக வேண்டாமா, லீவ் நாட்களிலும், நண்பர்களோடு வெளியே திரிந்த நேரமே அதிகம். எல்லாம் உள்ளே இறுகிப் போய்க் கிடந்தது இப்போது இளகி வெளியே எரிமலைக் குழம்பாக கக்குகிறது . புரிகிறது. ஆனால் காலம் கடந்து போனதும் புரிகிறது .


குமாரின் வேதனை புரிகிறது. ஆனால் கோமளம் , அவளும் எப்படி மறந்து போனாள், அதற்கும் முந்திய ஒரு இளமைக் காலத்தை .


அவருக்கு அடிக்கடி இருமல் வந்து படுத்தும் போது அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல எவ்வளவு அலுத்துக் கொள்கிறான் குமார். அவன் சிறுவயதில் சளி, இருமலில் அடிக்கடி அவதிப்பட்டு இரவில் மூச்சு விடச் சிரமப் பட்ட போதெல்லாம், அவனைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, டாக்டர் நண்பரின் வீட்டுக்குச் சென்று அவரைத் தொந்தரவு செய்து அவர் ஒரு ஊசி போட்டவுடன் அவன் மூச்சு சரியாக அவர் அடைந்த நிம்மதி. அவனுக்கு ஞாபகம் இருக்காது. ஆனால் கோமளம். அவளுக்குத் தெரியுமே. அவளுமா மறந்து விட்டாள்.


பின்னால் வந்த அவசர வேலைக் காலத்திற்கும் முன்னால் ஒரு காலம் இருந்ததே அது கோமளத்திற்கு மறந்து போய் இருக்கலாம் . அவருக்கு மறக்க வில்லை.மறக்காது .


அதுதான் அவருக்கு இப்போது எப்போதும் நினைவில் வந்து . அந்த நாற்காலியில் அமர்ந்து இருக்கும் அவர் எண்ணங்களில் வந்து தாலாட்டும்.


அப்போது தான் அவருக்குக் கோமளத்துடன் திருமணம் ஆகி இருந்தது . அவர் ஒரு கிளார்க்தான். ஆபீசர் ஆவதற்கு முன்னால் இருந்த அமைதியான காலம். அவளோடு சேர்ந்து சென்ற சினிமாக்கள். கோயில்கள். பூங்காக்கள். ஒவ்வொன்றாக அவர் மனக்கண்ணில் வந்து தாலாட்டாக மாற , அப்படியே தூங்கி விடுவார். அந்த சன்னல் வழி வந்த காற்றும் , அந்த நாற்காலியின் சுகமும் தான் அவருக்குப் பகல் தூக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.


' சோறு வந்து கொட்டிக்கிறது தானே' என்ற குரலுக்கு விழித்து கைத்தடியை ஊன்றி எழுந்து உள்ளே போய் அடுப்படி சேரில் அமர்ந்து ஏற்கனவே தட்டில் போட்டு வைத்திருக்கும் சாதம். குழம்பு , காய் சாப்பிட்டு தட்டைக் கழுவி விட்டு, திரும்ப வந்து அதே நாற்காலியில் கனவுக் காலம். சேர்ந்து அமர்ந்து அவள் பரிமாறியதும், சில சமயம் ஊட்டி விட்டதும் கனவில் வந்து கண்கள் கலங்கும்.


அந்தப் ப்ரோமோஷனை அவர் ஒத்துக் கொண்டு இருக்கக் கூடாது. ஆபீசர் ஆனபின் சம்பளம் அதிகம் ஆகி, புது வீடு, டி வி , இன்னும் எத்தனையோ குடும்பத்திற்கு வேண்டியது எவ்வளவோ வாங்கி போட்டார். அவர் மட்டுமா அனுபவித்தார். அவர்களும் சேர்ந்து தானே.


ஆனால் அவர்களுடன் பேசிச் சிரித்த நேரம் போய், எப்போதும் வீட்டிலும் ஆபீஸ் நினைப்பே. அவர்களுடன் எரிந்து விழுந்த , கத்திய, ஒதுக்கிய நாட்கள் ஆரம்பித்தது அப்போது தான். அதைப் பற்றி யோசிக்கவே நேரம் இல்லாமல் போனதே. அந்த நினைவுகளின் அழுத்தம் தானே இப்போது அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மனதிற்குள்ளேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தவர் , ஒருநாள் , நாற்காலியில் சாய்ந்தபடியே இறந்து போனார்.


கோமளமும் குமாரும் . ' கிழம் போயிடுச்சு ' என்று தான் மனதில் நினைத்தபடி எல்லாக் காரியங்களையும் முடித்து விட்டனர். ஆனால் அந்த நாற்காலி அதே இடத்தில். அதை வேறு இடத்திற்கு மாற்றவும், அதை உபயோகப்படுத்தவும் அவர்கள் ஏனோ நினைக்கவில்லை. ஆனால் , அந்த ஓரச் சன்னலை மட்டும் சாத்தியே வைத்தனர். அவர் இருந்த காலத்தில் அது எப்போதும் திறந்தே இருந்தது .


சில வருடங்கள் ஆனபின் இப்போது கோமளத்திற்கு டி வி யில் உள்ள விருப்பம் போய் அந்த ஹாலில் வந்து அமர்ந்து அந்த நாற்காலியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பழக்கம் வந்து விட்டது. மூலையில் அமர்ந்து அந்த நாற்காலியையே பார்த்துக் கொண்டு இருப்பாள் . அது லேசாக ஆடுவது போல் ஒரு பிரமை. அவர் அதில் அமர்ந்து இருந்த நாட்கள் உள்ளுக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது .என்ன பாடு படுத்தினோம் அவரை , அவரின் கடைசி நாட்களில் .


குமார் கூட ஒரு நாள் கேட்டு விட்டான். ' ஏம்மா,இப்படி ஏதோ பறி கொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்கே.' 'ஒண்ணுமில்லேடா ' என்ற படி முந்தானையால் , மூக்கைத் துடைத்தபடி போய் விடுவாள் கோமளம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவள் மனதிற்குள் திரும்பும் பழைய நினைப்பை அவன் புரிந்து கொள்வானா. 'வேலை வேலை' என்று பரபரப்பாகத் திரியும் அவனுக்கு நிச்சயம் புரியாது என்பது அவளுக்கு இப்போது புரிய ஆரம்பித்து இருக்கிறது .


ஒரு முறை, ஏதோ ஒரு நினைப்போடு எழுந்து , அந்த ஓரச் சன்னலைத் திறந்து வைத்து விட்டு ஹால் ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அதன் வழி வந்த வெய்யிலின் மஞ்சள் வெளிச்சம் சுவரிலும், நாற்காலியிலும் , தரையிலும் பட்டுத் தெறித்தது. ஒரே மஞ்சள் ஒளி. , பக்கத்து வீட்டில் இருந்து ஹோலி அன்று வந்து விளையாடிய குழந்தைகளின் ஹோலி மஞ்சள் பொடி சுவற்றிலும் தரையிலும் ஒட்டி இருப்பதிலும் அந்த வெளிச்சம் தெறிக்க, குப்பென்று மஞ்சள் நிறம். சன்னல் ஓரம் வைத்திருந்த செடியில் பூத்திருந்த மஞ்சள் பூவும் சேர்ந்து கிளப்பி விட்ட ஞாபகம் .


'மஞ்சள் பூசிக் குளிச்சுட்டு நீ வர்ற ஒவ்வொரு நேரமும், உன்னை விழுந்து கும்பிடணும்னு ஏண்டி தோணுது ' என்ற அவரின் வார்த்தைகளில் கிறங்கி விழுந்த அந்தக் காலமும். அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் கண்களில் தெரிந்தன. இப்போது சன்னல் வழி வந்த காற்று நாற்காலியைத் தாலாட்ட , அசைந்தது நாற்காலி.


'கோமு ஒரு கப் காபி கிடைக்குமாடி'

'இதோ ' என்றபடி எழுந்தவள் , அப்படியே தரையில் அமர்ந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் .


----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


சனி, 15 மார்ச், 2025

சிறுகதை மதிப்புரை - 'கதை புதிது ' நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - 'கதை புதிது ' நிகழ்வு 

------------------------------------------

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே 

மூத்த எழுத்தாளர் நரசையா ஐயா அவர்கட்கு வணக்கத்துடன் ஆரம்பிக்கிறேன் .அவர்களின் ' ஒருத்தி மகன் ' சிறுகதை .

மார்ச் 2003  ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சிறுகதை  

'எல்லாவற்றையும் கடந்த ஆத்மாவுக்குத் தந்தை, தந்தையாக இருப்பதில்லை; தாய் தாயாக இருப்பதில்லை; அது எல்லாமே கடந்த நிலையாகி விடுகிறது.’ என்ற உபநிஷத் வரியோடு ஆரம்பிக்கும்  கதை  அதை விளங்க வைக்கும் வகையில் விரிகிறது ஒரு வாழ்க்கையாக .

தந்தை யாரென்று தெரியாது வருந்தும்   ஒருவன் . தந்தை யாரென்று தெரிந்தும்    அதை வெறுக்கும் இன்னொருவன். இவர்களின் வருத்தத்தையும் வெறுப்பையும் போக்கும்   போதி மரமாக     ஒரு முதியோர் இல்லம். இவற்றை இணைத்துப் பின்னப்பட்டுள்ள கதையில் வருகின்ற உபநிஷக் கிளைக்கதைகள் பலவற்றின் மூலம் நம் முன்னோர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் எத்தனையோ விஷயங்களை  எப்போதோ சொல்லி வைத்து விட்டார்கள் என்பதையும் நமக்கு உணர வைக்கிறார் ஆசிரியர். 


ஒருத்தி மகனாக வளர்ந்தவன் அவன். ஒரு ஜோடியின் மகனாக அல்ல. அவன் தாய் இறந்தபின்பும் அவ்வாறே அறியப்படுகிறான். தான் படும் சிரமங்களை அவன் உணரும் போதே அவன் தாய் உயிருடன் இருந்தபோது எத்தனை சிரமங்களை அனுபவித்து இருப்பாள் என்று அவனால் உணர முடிகிறது . அவனுக்கு ஆறுதலாக அவன் நண்பன். அவன் கதை வேறு மாதிரி. அவன் சொல்கிறான். 

 ”நீ வருந்துவது உனக்குத் தந்தை யாரெனத் தெரியவில்லை என்று! நான் வருந்துவதோ, தந்தை இன்னாரெனத் தெரிந்ததால் மட்டுமல்ல; எல்லோராலும் ‘அவர் பையன்’ என்று கூறப்படும்போது.” நண்பனின் தந்தை குடிகாரன். 


அந்த நண்பனுக்கு இவன் ஆறுதல் சொல்கிறான் ஒரு உபநிஷக் கதை மூலம் . அது அஷ்டாவக்கிரன் கதை. அவன் கருவில் இருக்கும்போதே ,  அருளோடு இருந்து , தந்தையின் தவறான மந்திர உச்சரிப்பால், வருந்தி உடல் கோணி அஷ்ட கோணலோடு பிறந்தாலும் தன் அறிவுத்திறமையால் அஷ்டாவக்கிரக் கீதையை உலகுக்கு அருளியவன். அதே போன்று நீயும் உன்னை ஆக்கிக் கொள்ளலாம்’ என்று அந்த குடிகாரத் தந்தையின் மகனுக்கு தான் ஆறுதல் சொல்லியதை நினைத்துக்கொள்ளும் நேரம், தந்தை யாரென்றே தெரியாத  தான் என்ன நினைத்துக் கொள்வது என்று வருந்தும் அவன் கேள்விக்குப் பதில் ஒரு முதியோர் இல்லத்தில் கிடைக்கிறது . 


அங்கே இறந்து போன ஒரு முதியவருக்கு கடைசி அனுஷ்டானங்கள் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. அவரது மகன்கள் அயல்நாட்டில். அந்த இல்லத்திற்கு பணம் மட்டும் அனுப்பிக் கொண்டு. எப்போதாவது வந்து பார்த்துக் கொண்டு. அவர் இறந்த தகவல் தெரிந்ததும்  'வர இயலாது , நீங்களே எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள் . பணம் அனுப்பி விடுகிறோம் ' என்ற பதில் அவர்களிடம் இருந்து. இந்த நேரத்தில் இவனும் இவன் நண்பனும் அங்கே போய்ச் சேர்கிறார்கள். 


தந்தை  யார் என்று தெரியாத  நாயகனுக்குத் தானே அந்த முதியவருக்கு  இறுதிச் சடங்குகள் செய்ய ஆசை. ஆனால் அது சரியா , தவறா என்ற குழப்பம். எவரை வேண்டுமானாலும் தாயாக ஏற்றுக் கொள்ளலாம் . ஆனால் தந்தையாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற குழப்பம் .

இப்பொழுது வருகிறது இன்னொரு உபநிஷக் கதை.  அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் இன்னொரு முதியவர் மூலம். 


அது சண்டோக்ய உபநிஷத்தில் வரும் கதை.


ஒரு பையன் தனது தாயிடம் வேதங்கள் படிக்கவிருக்கும் விருப்பத்தைத் தெரிவித்தான். தாயார் சொன்னார்: ‘மகனே, நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் ஒதுக்கப்பட்டவளாகவே இருந்துள்ளேன். நான் பல இல்லங்களுக்கு வேலை செய்து கொண்டிருந்தேன். உன் தந்தை யாரென நான் அறியேன். என் பெயர் ஜபலா. உனக்கு சத்யகாமா என்று பெயர்’ என்றாளாம்! ஒரு முனிவரிடம் சென்று வேதம் கற்றுக்கொள்ள தனக்குள்ள ஆசையை சத்யகாமா தெரிவித்த போது முனிவர் அவனது பெற்றோரைப் பற்றிக் கேட்டார். அவனோ சிறிதும் சங்கோஜமின்றி தாயார் சொன்னதைச் சொன்னான். கேட்ட முனிவர், ‘இவ்வளவு தைரியமாக உண்மையைச் சொன்ன நீதான் உண்மையில் உத்தமன்! உயர்குலத்தோன்’ என்று கூறி வேதங்கள் கற்றுத் தந்தார்!’. என்று அந்தக் கதை முடிகிறது . 


தொடர்கிறது அவர் பேச்சு . ஞாக்யவல்கியர் என்ற ஒரு மகா முனிவர். அவர் பிரஹதாரண்ய உபநிஷத்தில் கூறுகிறார்:

‘ஆத்மா… பசி, தாகம், துக்கம், அதிருப்தி எல்லா வற்றையும் கடந்தது. அது முதுமை, சாவு இவற்றையும் கடந்தது. அந்த நிலையில் ஒரு தந்தை தாய் பெற்றோராக இருப்பதில்லை. வேதங்கள்கூட வேதங்களாக அந்நிலையில் இருக்காது!

எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை அது !

அந்நிலையை அடைந்த ஒருவனுக்கு துக்கமும் ஆனந்தமும் ஒன்றுதான்!' 


என்று அவர் சொல்லிப்போக இவன் மனது தெளிவு பெறுகிறது. அந்த நண்பன் சொன்னான். “உன் முகத்தில் உறுதி தெரிகிறது. இனி சமூகம் என்ன நினைத்தால் என்ன என்பதால் நீ இதைச் செய்வதாகத்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், நீ உனது மன ஆறுதலுக்காகவே இதைச் செய்கிறாய் என்பதும் இதைச் செய்வதால் ஒரு இறந்தவரின் உடலை மிகவும் மரியாதையுடன் அனுப்பிவிட்டதால் நீ அடையும் சந்தோஷமும் அவர்களுக்குப் புரியாது!’


இதற்குப் பதில் நாயகனிடம் இருந்து இவ்வாறு வருகிறது .

“புரிய வேண்டாம். அச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இனி எனக்கில்லை!” என்று கூறிவிட்டுக் கர்மானுஷ்டானங்களை இவன் முடித்துவிட்டுத் திரும்புகையில் அந்த ஆசிரமக் காப்பாளர் தனது கண்களைத் துடைத்துக்

கொண்டார்! என்று முடிகிறது கதை. 


நுணுக்கமான மன உணர்வுகளைச்  சிறப்பாக விவரித்து, சிலர் வாழ்க்கையின் சங்கடங்கள் சிலவற்றை அப்படியே கதையில் கொண்டு வந்து அதற்கு வேதங்களின் விளக்கம் மூலம் முடிவும் கொடுத்து எழுதப்பட்டுள்ள சிறப்பான சிறுகதை. 


'ஒருத்தி மகன்'  சிறுகதை ஆசிரியர் மூத்த எழுத்தாளர் நரசையா அவர்களுக்கு நன்றி  கலந்த வணக்கம் . 

அழகியசிங்கர் அளித்த வாய்ப்புக்கு நன்றி வணக்கம். 


----------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


புதன், 12 மார்ச், 2025

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

-------------


நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . வணக்கம் ரகோத்தமன் சார்


நண்பர் ரகோத்தமன் அவர்களின் ' ஓட்டம் சிறுகதை. கதையின் தலைப்பு மட்டும் அல்ல. கதையும் படிக்கப் படிக்க ஓட்டம் தான். அதுவும் பைக்கில் ஏறி  சாலையில், பாலத்தில் , சந்தில், ரெயிலில்  ஓட்டம். அத்துடன் சேர்ந்து ஓடும் மன ஓட்டம்.  சினிமா என்ற சிங்கத்தின் மேல் உள்ள ஆசையால் கிராமம் விட்டு  நகரம் வந்து , இங்கே மனிதப் புலிகளிட மும்  கரடிகளிடமும்  மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு, இருந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பேய்களிடமும் பிசாசுகளிடமும் கூட மாட்டிக்கொண்டாலும் பரவாயில்லை, தன் எழுத் துத் திறமையால், சினிமா என்ற சிங்கத்தின் பிடரி பிடித்து ஏறி இயக்குனராக அமர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதை. 


எத்தனையோ பிரபல இயக்குனர்கள், இப்படி ஊரை விட்டு வந்து சினிமாத் துறையில் உலகப் புகழ் பெற்றுள்ள வரலாறு நம்மில் பலருக்குத் தெரியும். அவனுக்கும் தெரிந்திருக்கிறது. அந்த ஆசை. மாடும் மனையுமாய்  வாழ்ந்த கிராம வாழ்வை விட்டு இங்கே ஹோட்டலில் சர்வராய் இன்னும் பல கிடைத்த வேலைகள் எல்லாம் பார்த்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறான். தன் நோக்கம் நோக்கி. 


கதையின் நடுவில் ஆசிரியர் விடுகின்ற சில வாக்கியங்கள் அந்தந்தக் கதாபாத்திரங்களின் நிலைமையை நமக்கு நச்சென்று  விளக்குகின்றன. 


உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு 

'இருவேளை உணவுடன். சோத்துக்குச்,சொன்னது வேலை என்பார்கள்.' இந்த வாக்கியம் காட்டி விடுகிறது நாயகன்  நிலைமையை.


'அவர் ஒரு முதலை வாய்க்குள்ள தலைய விட்டுருக்கிற சங்கடத்த அனுபவிச்சிக்கிட்டு இருக்காரு. அவரோட நாற்காலியின் வெளிப்பாடும் அப்படிதான் இருக்கும் '

இது காட்டி விடுகிறது உதவி  கிடைக்கும் என்று நம்பிப் போகப்  போகின்ற , அந்த இயக்குனரின் நிலையை. 


அவரவர்க்கு அவரவர் பிரச்னை. இதற்கு நடுவில் தான் அவர்கள் மற்றவர்க்கு உதவும் மனநிலைக்கு வருவது . 


இதற்கு நடுவில் கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி செய்வது அவர் காட்டுகின்ற அந்தக் காட்சிகளும் அதற்குரிய வர்ணனைகளும். 

உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு .


'புலி நன்றாகவே இருசக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம்.

புலி மீண்டும் ஓர் ஐந்து விநாடிகள் சிவப்பில் தேங்கி நகர்ந்தது.

சிறிது தூரம் தள்ளினேன். உயிர் கொண்டது இஞ்சின். சில நொடிகளில் பறக்க ஆரம்பித்தது புலி. புலி வளைவில் சரிந்து கொண்டே பேசியது' 

புலி என்று உருவகப்படுத்தப்படும் நண்பரின் பைக்கில் நாயகனோடு சேர்ந்து நம்மையும் சேர்ந்து பயணம் செய்ய வைக்கும் வருணனைகள். 


அடுத்து, அந்த டான்ஸ் டைரக்டர் இருக்கின்ற வீடு இருக்கின்ற இடம்.  

'சிறிது நேரத்தில் ஒரு முட்டுச் சந்து போன்ற தெருவில் நுழைந்தது. அதன் இறுதிக்குச் சென்றதும் முட்டுச் சந்தாக இல்லாமல், இடப்புறம் குறுகிய தெருவாக நீண்டது. அக்குறுகிய தெரு 200 அடிக்குள்ளாகவே தன்னை அகலப்படுத்திக் கொண்டு விரிந்தது. அவ்விரிவின் இறுதியில் கருங்கல் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்த வீட்டின் கேட்டின் முன்னால் புலி வாகனத்தை ஓரங்கட்டியது. பெரிய கேட்தான். பக்கத்தில் ஆள் நுழைந்து செல்ல ஒரு சிறிய கேட். சிறிய கேட்டின் வலப்பக்கத்துச் சுவரில் ‘காவிலி சுந்தரம்மா பவனம்’ என்று பொறிக்கப் பட்டிருந்தது.

இடப்பக்கச் சுவரில் ‘காவிலி ரெங்கய்யா’ என்ற பெயருக்கு கீழ் டான்ஸ் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டிருந்தது.

சிறிய கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.'


அந்த வீட்டையும் அது இருக்கின்ற இடத்தையும் அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர். 


இப்படி காட்சிப்படுத்தும் வருணனைகளும் , உருவகப்படுத்தும் மனிதர்களும், உணர்ச்சிப்படுத்தும் நாயகனின் மனநிலையும் சேர்ந்து நம்மைக்  கதையோடு ஒன்ற வைத்து விடுகின்றன. 


அவன் வீட்டில் இருந்து அவன் தங்கை பணம் கேட்டுப் பேசுவது, இவர் ஒருவரிடம் கடன் வாங்கி மற்றவரின் கடனை வாங்கி அடைத்துக் கொண்டு இருக்கின்ற வாழ்க்கையும் கலந்து  நாயகன் மேல் ஒரு பரிதாப உணர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன. 


இறுதியில் கதை இவ்வாறு முடிகிறது .


வீரய்யா, கரடி., தங்கை, புலி என்று மாறி மாறி காட்சிகள் எந்த விஷயத்தை முதலில் அணுகுவது? மனதில் சுமை அழுத்திற்று. ரயிலோ அந்த நெரிசலைச் சுமந்துகொண்டு, தாளம் தப்பாமல் ஓடிக்கொண்டிருந்தது. எந்த மனித இரைச்சலையும் பொருட்படுத்தாமல்.


பைக்கின் ஓட்டத்தில் தொடங்கி ரயிலின் ஓட்டத்தில் முடியும் நாயகனின் மன ஓட்டம்  

நாயகன் மேல் இரக்க உணர்வை ஏற்படுத்தி அவன் வாழ்வில் வசந்தம் மலர நம் மனம் விரும்புகிறது


கதையைப் படித்தவுடன், கண்ணதாசனின் இந்த வரிகளை ப்  பாடி நாயகனுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற  மனநிலை நமக்கு வருகிறது. 

'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் , வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை , எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் '

 என்று கூறி நாயகனின் திரைப்பட இயக்குனர் கனவு பலிக்க வாழ்த்துகிறோம். 


பைக்கில் அழைத்துச் செல்லும் புலி நண்பனுக்கே பைக் வாங்கிக் கொடுக்க நினைக்கும் அந்த நாயகனின் நல்ல உள்ளம்  கொடை உள்ளம் , இந்தக் கதையை எனக்குப் படிக்கக் கொடுத்த அழகியசிங்கருக்கும் அவன் கதையைப் படித்து வாழ்த்திய நமக்கும் பரிசுகள் அளிக்க நினைக்கும்  என்ற நம்பிக்கையோடு , கதை ஆசிரியர் ரகோத்தமன் அவர்களுக்கும்  , மதிப்புரை பேச வாய்ப்பளித்த அழகியசிங்கருக்கும் 

 நன்றி கூறி முடிக்கிறேன். நன்றி. வணக்கம். 


----------- நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அவளா இவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

 அவளா இவள்  - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

---------------------------------


அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் . அதில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ' நான் இப்படியா இருக்கேன் ' என்று அவள் அடம் பிடித்து அழுத ஞாபகம் வருகிறது. அப்போது மறைத்து வைத்த அந்த ஓவியம், பின்னால் அவளோடு சேர்ந்து இருந்த காலத்திலும் அவளுக்குக் காண்பிக்க வில்லை அவன். இப்போது அவள் பிரிந்த பின் தான் எடுத்துப் பார்க்கிறான் இப்போது . அவளா இவள்.


ஆரம்பப் பள்ளிப் பருவத்தோடு, அவள் அப்பாவின் வேலை மாறுதலோடு, அவர்கள் நட்பு அப்போதைக்கு முடிந்தது. ஆனால் அதன் நினைவுகள் பசுமையாக எப்போதும் . இப்போதும் தான். மோசமான நினைவுகளை அவள் விட்டுச் சென்று விட்ட இப்போதும் தான். அந்த ஆரம்பப் பள்ளிப் பருவத்திலே அவர்கள் சேர்ந்து சென்ற ஊருணிப் பூந்தோட்டம். கோயில் பிரகாரப் பேச்சு. மறக்க முடியாது.


மறக்க முடியாததால் தான், அவளை , இளமை பொங்கும் மங்கையாக , ஆரம்பப் பள்ளிப்பருவ நினைவுகளின் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஐந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு ஆங்கில இலக்கிய நிகழ்வில் சந்தித்தபோது , அவளது அறிமுகத்தை , அமைப்பாளர் சொன்னவுடன் புரிந்து கொண்டு, அவளின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு அசந்து போய் நின்ற தருணம். சாக்ரடீஸ் முதல் பீத்தோவன் வரை அவள் எடுத்துக் காட்டிய, அலசிய தத்துவ , இசை விளக்கங்கள் அவனை அவளிடம் ஈர்த்தன. அதன் பின் அவளிடம் அறிமுகம் செய்து கொண்ட போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி. அதில் ஏமாந்து போன தருணம் அது.


பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். இருவரின் பெற்றோர்களும் மறைந்து விட்ட காரணத்தால், அவர்கள் தனித்தனித் துறைகளில் , பிரபலமாக ஆகிக் கொண்டு இருந்த காரணத்தால், அவர்களைத் தடுப்பதற்கு யாருமில்லை. ஆனால், பின்புறம் பேசுபவர்கள் பலர். அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை ,


அவன் ஓவியத் திறமை பற்றி அவளுக்கு இன்னும் சந்தேகம் தான். அவன் அவளை வரைந்த அந்த முதல் ஓவியத்தால் ஏற்பட்ட சந்தேகம். இன்னும் மாறவில்லை .


ஒரு படத்தைப் பார்த்துக் கேட்டாள்

'இதனால் என்ன சொல்ல வருகிறாய் '

. 'ஏதாவது சொல்லணுமா' என்றான்

' எனக்குப் புரியலையே'

'உனக்குப் புரியணுமோ'


'அப்புறம் எதுக்குப் படம் வரையிறே '

'எனக்குப் புரியுது , வரையிறேன் '.

' யாரும் வாங்க வேண்டாமா'

' பலர் வாங்குகிறார்கள். பாராட்டுகிறார்கள் . உன்னை வாங்கச் சொல்லலையே '


அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை

ஆனால் அவளுக்கு அவனிடம் பிடித்தது இந்தத் திமிர் .


அவனுக்கும் அவளைப் பிடிக்கும்.

அவளது திமிர் வேறு மாதிரி.


'நமது தமிழ்ப் படைப்புகளை படித்ததில்லை' என்று சொல்லிக் கொள்வாள் .

'இசை என்றால் பீத்தோவன்

தத்துவம் என்றால் சாக்ரடீஸ்

ஓவியம் என்றால் பிக்காஸோ

கதை என்றால் ஓட் ஹவுஸ் ' .

என்று அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பாள். அவன் கேட்டுக் கொண்டு இருப்பான். அது அவளுக்குப் பிடித்து இருந்தது


ஒரு நாள் அவளிடம் கேட்டான்.

'திருக்குறள் பிடிக்காதா, பி சுசிலா பிடிக்காதா, சித்தன்ன வாசல் பிடிக்காதா, சுஜாதா பிடிக்காதா 'என்று

'பிடிக்காது என்று சொல்லவில்லையே'

'பின் ஏன் அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அந்த அயல்நாட்டுப் படைப்பாளிகளை மட்டுமே சொல்கிறாய் .அதிகம் படித்திருக்கிறாய் என்று காட்டிக் கொள்ளும் ஆசையா. '

'அப்படி ஒன்றும் இல்லையே'

அந்தத் திமிர் அவனுக்குப் பிடித்திருந்தது.

அவனுக்கு அது பிடிக்கிறது என்பதால் அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது .


அன்று ஒரு நாள் அவர்கள் இணைந்த நேரம். அதில் அவளுக்கு பிக்காஸோவின் புதுமை இருந்தது , பீத்தோவனின் உருக்கம் இருந்தது. சாக்ரடீஸி ன் உணர்வு இருந்தது . ஓட் ஹவுஸின் சிரிப்பு இருந்தது . அவளுக்குப் பிடித்து இருந்தது .


'இவ்வளவு இருக்கிறதா இதில்' என்றாள்

'இன்னும் இருக்கிறது ' என்றான்.

அன்று முதல் அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினர்.


கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் . அவன் ஓவியத்தின் திறமையால் உலகப் புகழ் பெற்று அவன் ஓவியங்களை வைத்து 'மிலானில் 'நடந்த ஓவியக் கண்காட்சிக்கு அவனுடன் சென்றிருந்தாள்.

அங்கே அவனுடன் நெருங்கிப் பழகுவதில் ஆர்வம் காட்டிய அந்த வெள்ளைக்காரப் பெண்களை அவளுக்குப் பிடிக்கவில்லை.


அவளின் ஆங்கிலப் பேச்சுகளுக்கு கூடிய கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருந்த நேரம். அவளின் உருவத்திலும் , முகத்திலும் கூடுகின்ற வயதின் தளர்ச்சி தெரிய ஆரம்பித்த நேரம். தன் பேச்சை விட, தன்னைப் பார்க்க வந்த கூட்டமே அதிகம் முன்பு என்று அவளுக்குப் புரிய வந்த நேரம். அடிக்கடி அவனுடன் தகராறு .


ஒருமுறை அவன் மேல் அவள் வீசி எறிந்த சில்வர் பிளேட்டின் குறி தப்பியதால் அவன் கண் தப்பித்தது. ஓவியனான அவன் கண்ணை நோக்கி வைத்த குறி தவறி விட்டதே என்று அவள் அலறியபோது தான், அவளின் மனநோயின் தீவிரம் அவனுக்குப் புரிந்தது. இருந்தும் அவளைப் பிரிய அவனுக்கு விருப்பம் இல்லை.


அந்தக் கிராமத்துக் கோயில் பிரகாரத்தில் அவன் கையைப் பிடித்து நடந்து வந்த அந்தப் பெண்ணின் உருவம். விரித்த முடியோடு, விழித்த கண்ணோடு , முழங்கால் வரை மறைத்த ஸ்கர்டோடு அவன் கையைப் பிடித்து நடந்து வந்த அவள் . அவன் ஓவியத் திறமையை, அந்த வயதிலேயே அவனுக்கு உணர வைத்த அந்தப் பெண் அல்லவா அவள் .


நெருங்கிய நண்பர் , நரம்பியல் நிபுணர், டாக்டர் பாஸ்கரனிடம் அழைத்துச் சென்று காண்பித்தும் பயனில்லை. 'சிறிது நாட்கள் பிரிந்து இருக்க முயற்சி செய்யலாம் ' என்றார். மருந்துகளின் மயக்க நிலையில் அவளே ஒரு முறை சொன்னாள் . 'என்னால் உனக்கு எப்போதும் ஆபத்துதான். நாம் பிரிவதே ஒரே வழி' . பிரிந்தார்கள்.


குற்றாலத்தில் அவளின் நெருங்கிய தோழியின் வீட்டில் அடைக்கலம். மறுபடி பேச்சுப் பயிற்சி. இப்போது தமிழில். தேவாரம், திருவாசகம். என்று தமிழ்ப் பக்தி இலக்கியத்தில் பயிற்சி. ஆன்மீகக் கூட்டங்களில் அவளுக்கென்று ஒரு தனி அங்கீகாரம் . தனிக் கூட்டம். தமிழ் நாட்டின் பல கோயில் விழாக்களில் அழைப்பு. பக்தி மயமான வாழ்வில், திருநீற்று நெற்றியோடு அவள் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் அவள் வரும்போது, எழுந்து நின்று வணங்கினார்கள். அவள் அவனிடம் பேசுவதில்லை. அவர்கள் சந்திக்கவில்லை .


ஒரு நாள் அவளிடம் இருந்து போன் வந்தது

'நான் இப்போது சென்னை வந்திருக்கிறேன் ' .

' ஏதோ பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முடிந்தால் சந்திக்க வா , முகவரி இது '

'வரமாட்டேன் 'என்று பதில் அளித்தான் .


மற்றும் ஒரு முறை வாட்சப் செய்தி ' நியூ யார்க்கில் , புதிதாகக் கட்டியுள்ள சிவன் கோயிலில் ' திருவாசகம் ' பற்றிய சொற்பொழிவு . தொடர்ந்து ஒரு மாதம் அங்கே தான். பாஸ்டன், சிகாகோ , சான் பிரான்சிஸ்கோ என்று பல இடங்களின் கோயில்கள் . நாளை அமெரிக்கா செல்கிறேன் இன்று பார்க்கலாமா ' . முகவரியுடன் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தாள். திருநீற்று நெற்றியோடு அவள் தோற்றம், வாட்சப் செய்தி .


அவன் வரைந்த அவளின் இளம் வயது ஓவியத்தைத்தான் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவளா இவள் . ' இது போதும் பெண்ணே எனக்கு . என் திறமையை நீ வெளிக்கொணர்ந்த தருணத்தை எனக்கு நினைவு படுத்தும் இந்த எனது முதல் ஓவியம் ,இது போதும் எனக்கு . '


அவளைப் பார்க்க அவன் போகவில்லை.அன்று இரவு நைட் டின்னருக்கு அழைத்திருந்தாள் அவனது இன்னொரு தோழி .இவளுக்கு இவன் ஓவியம் பிடிக்கும். .


---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


காத்திருப்பவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

 காத்திருப்பவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

-------------------------------------


வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் தான் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் அசை போட்டபடி கிளம்பிய அவள் தோளில் தொங்கும் லெதர் பேக்கின் சுமை கொஞ்சம் தான். ஒரு சிறிய கண்ணாடி, சின்ன செண்டு பாட்டில், ஸ்டிக்கர் பொட்டு அட்டை , ஒரு சிறிய பர்சில், கொஞ்சம் ரூபாயும், சில நாணயங்களும் இரண்டு வட்ட டிபன் பாக்ஸ் டப்பாக்கள். ஒன்றில் தயிர் சாதம், ஊறுகாய் , மற்றொன்றில் இரண்டு இட்லிகள், மிளகாய்ப் பொடியோடு, ஒரு சிறிய வாட்டர் பாட்டில் .


வாசலில் பூத்துக் குலுங்கித் தொங்கும் கொன்றைப்பூக்களின் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் மயங்கி விட்டு தூரத்தில் இருந்து வரும் கோயில் மணி ஓசையின் இசையிலும் கொஞ்சம் தயங்கி விட்டு நடக்க ஆரம்பித்தாள் அவள். அந்தச் செயல்களுக்கு அவளின் மனச் சுமையைக் கொஞ்சம் இறக்கி விடும் சக்தி உண்டு என்பது அவள் உணர்ந்தது .


அவளுக்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்புவது போல் தன் பூக்களை ஆட்டும் கொன்றை மரம் அவள் கூடவே வளர்ந்த மரம். எதையும் எதிர்பாராமல் அவளுக்குத் துணையாக நிற்கின்ற மரம். அவள் சாதியில் சொந்தங்களுக்கு கிடைக்காத , அவளுக்கு மட்டும் கிடைத்த அந்த மஞ்சள் நிறம் கூட அவை கொடுத்தது தானோ என்ற பிரமை கூட அவளுக்கு சில சமயம் தோன்றுவது உண்டு.


அந்த நிறமும் அவளின் செழிப்பான உடலும் அவளுக்கு ஒரு சுமையோ என்று கூட சில சமயம் தோன்றியது உண்டு. ஏறிச் செல்லும் பேருந்து களிலும், இறங்கி நுழையும் அலுவலகத்திலும், தன் அறிவை விட இந்த அழகுக்குத் தான் அதிக மதிப்போ என்றும் அவள் எண்ணியது உண்டு. அப்போதெல்லாம், அழகில்லாத தன் சொந்தக்காரப் பெண்கள் மேல் அவளுக்கு ஒரு பொறாமை கூட ஏற்படுவது உண்டு .


எவ்வளவு சுதந்திரமாக நினைப்பதைப் பேசிக்கொண்டு, நினைப்பதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். தான் செல்லும் இடங்களிலும் , பேசும் வார்த்தைகளிலும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதில் தெரிகின்ற குறிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு பழகத் துடிக்கின்ற எத்தனை ஆண்கள். அதைப் பார்த்து பொறாமையில் தெறிக்கும் சில பெண்களின் கண்கள். அதில் தெறிக்கும் நெருப்பு இவளைச் சுடும் உணர்வு . அத்துடன் அவளின் நடுத்தர ஏழ்மையையும் நோயுற்ற பெற்றோரையும் பற்றியும் அறிந்த அலுவலக நண்பர்களின் இரட்டைப் பேச்சுக்களை ஒதுக்கும் நிர்ப்பந்தம்.


இத்தனைக்கும் நடுவில் அவள் மனதில் ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவன் அந்தக் கொன்றை மரத்தடியில் இரவு நேரத்தில் அவளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பான். அவளைத் தீர்க்கமாகப் பார்த்து , அவளிடம் மென்மையாகப் பேசி அவளைக் கிறங்கடிப்பான். அவள் கையை இறுக்கப் பிடித்து இருப்பான்.


உள்ளிருந்து வரும் அம்மாவின் ' எங்கேடி போய்த் தொலைஞ்சே ' என்ற அம்மாவின் குரலுக்குப் பயந்து அவள் ஓட முயலும்போது, ' மெதுவாகப் போ, தரையில் கிடக்கும் கொன்றைப்பூ காலைக் குத்தி விடாமல் நடந்து போ ' என்று அவளை மெதுவாக அணைத்து விடுவித்து அனுப்பி வைப்பான். அவள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டிருக்கும் அவனாலேதான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


ஒவ்வொரு மாலையும் அவள் வேலை முடிந்து வேர்வையின் போர்வையில் விரைந்து வீடு திரும்பும் வேகத்திற்கு காரணமும் அவன்தான். அன்று மாலையும் அப்படித்தான். உள்ளே நுழைந்தவள் என்றும் இல்லாத அதிசயமாய் அவளது அம்மா, அடுப்படியில் தட்டுத் தடுமாறி காபி போட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விரைந்தவள், ' விடும்மா , நான் பார்க்கிறேன் ' என்று விரைந்தாள் .


' யார் வந்திருக்காங்க தெரியுமா , நம்ம கிராமத்தில் இருந்து . இருபது வருஷமா விட்டுப் போன தொடர்பு திரும்ப வந்திருக்குடி , ஞாபகம் இருக்கா, உனக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகுது . அப்ப உனக்கு அஞ்சு வயசுதான் . அவன்தான் உன்னை முதன்முதலா எலிமெண்டரி ஸ்கூல் கூட்டிப் போனான். . அவன் நாலாவது . நீ ஒண்ணாவது . பக்கத்து வீட்டுப் பரிமளம் , உசந்த சாதியா இருந்தாலும் , நம்ம கிட்ட நெருக்கமா பழகினவ . அவ மகன் . '


ஊரிலே நடந்த சாதிப் பிரச்சினையில் மனம் வெறுத்துப் போயி, டீச்சர் வேலையில் இங்கே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு உன் அப்பா இங்கே சென்னைக்கு வந்த பிறகும் பரிமளம் புருஷன் மாணிக்கத்தோட மட்டும் அப்பா தொடர்பு வச்சிருந்தார். ஏதோ விஷயமா அவங்க பையன் இப்ப வந்திருக்கான். 'வந்து சொல்லுறேன்னு' சொல்லிட்டு இப்பதான் வெளியே போனான்.


அவன் முகம் மெதுவாக மனதில் மலர ஆரம்பித்தது. ஆம் , பிடித்த கையை விடாமல் பள்ளிக்கு கூட்டிச் செல்வான். ' டேய் வலிக்குதுடா, கையை விடு ' என்றாலும் விட மாட்டான். ' நீ பாட்டுக்கு ஓடுவே, அங்கெ பாரு எத்தனை மாடு திரியுது . முட்டிடும். அது தான் கொஞ்சம் அழுத்திப் பிடுச்சுட்டேன் வலிக்குதா, ' என்றபடி லேசாக கையைத் தடவி விட்டு , மறுபடி அதே போல் பிடித்துக் கூட்டிச் சென்று , அவள் வகுப்பில் சென்று பெஞ்சில் அமரும் வரை விட மாட்டான். இண்டெர்வெல்லில் பள்ளி வாசலுக்கு வரும் சவ்வு மிட்டாய் வாங்கி அவளுக்குப் பாதி கடித்துக் கொடுப்பான். திரும்பும் போதும், அதே விடாத கைப்பிடி.


வாசலுக்குப் போனாள் கோதை. மாதவன் சிரித்த முகத்தோடு , அப்போது கொன்றை மரத்தருகே வந்து கொண்டிருந்தான். கொன்றைப் பூக்கள் சில அவன் மேல் சரிந்து விழுந்தன. அவள் உடம்பு சிலிர்த்தது. அவன் கையில் மல்லிகைப் பூ சரம் உருண்டு தெரிகின்ற பையோடு . அந்தப் பைக்குள் அவனது திருமணப் பத்திரிகை .


-----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பருவ மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )

 பருவ மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

————

எல்லாமே பக்கத்தில்

இருந்ததாய் ஞாபகம்


நிலமும் நீரும்

நெருப்பும் காற்றும்


வண்ணமும் வாசமும்

எண்ணமும் செயலும்


எல்லாம் புதிதாய்

எல்லாம் இன்பமாய்


மண்ணை விட்டு

விண்ணை நோக்கி


கழுத்தும் நீண்டது

காலமும் மாறியது


—— நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


கால மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )

 கால மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

----------------------

நேற்றுதான் எல் கே ஜி க்ளாசில்

விட்டு விட்டுத் திரும்பினோம்


இன்று பத்தாவது வகுப்பு

ஆரம்பிக்கும் தினமாம்


அன்று அழுதுகொண்டு

பள்ளி வாசலில் காத்திருந்தவள்


இன்று சிரித்துக்கொண்டு

பள்ளி உள்ளே ஓடுகின்றவள்


அதே குழந்தைகள் தான்

ஆனால் பேச்சுகள் பார்வைகள்


காலத்தின் ஓட்டத்தில்

மாறிப் போனவை


பாதைகள் மாறாதிருந்தால்

பயணங்கள் சுகமே


வளமும் நலமுமாய்

வாய்க்கட்டும் எதிர்காலம்


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


பயம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )

 பயம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் ) 

-----------

அன்பாக இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அறிவாக இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அடக்கமாய் இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அருளாக இருக்கிறாய்

பயமாக இருக்கிறது


அழகாகவும் இருக்கிறாய்

அதிகம் பயமாக இருக்கிறது


-------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தீர்ப்பு - சிறுகதை

 தீர்ப்பு - சிறுகதை ------------------------------- 'வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சைய...