வெள்ளி, 20 ஜூன், 2025

மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை

-------------------


மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த சூரியனைப் போல்தான் தன் வாழ்க்கை உள்ளதோ என்று அவள் எண்ணிக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து அந்த மாலைச் சூரியனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


கணவன் குழந்தைகள் எல்லாமே அந்த மேகங்கள் தானோ. அவர்கள் கூட இருக்கும்போது தன்னைப் பற்றிய நினைவே எங்கோ ஒளிந்துகொண்டு தன் சுயமே மறந்து போன பரப்பிரம்ம நிலையோ . இன்னும் கணவன் அலுவலகம் விட்டு வரவில்லை. குழந்தைகளும் பள்ளி விட்டு வரவில்லை. மேகங்கள் விலகிய வெளிச்சம் வந்த நிலையில் இப்போது 'தான் யார், தன் வாழ்க்கையின் நோக்கம் என்ன ' என்ற எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்தன அவளுக்கு, எப்போதும் போல்தான் இந்த நேரத்தில்.


பெற்றோர் படிக்க வைத்து விட்டுப் போய் விட்டார்கள். கணவன் என்று ஒருவரைக் கை காட்டி விட்டு போயாச்சு. அவனுக்கும் தனக்கும் வரப்போகும் முதுமைக்குத் துணையாக வந்தவர்களா இந்தக் குழந்தைகள். இல்லை , 'உங்கள் கடமை எங்களை பெற்றது, வளர்த்தது, நாங்கள் எங்கள் கடமையைச் செய்யப் போகிறோம்' என்று போய் விடுவார்களா.


வேலைக்குப் போகும் பெண்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இருக்கலாம் அவர்கட்குப் பிரச்னைகள் , வீட்டுப் பிரச்னைகளோடு சேர்த்து . ஆனால் அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரம், அவர்களின் படிப்புக்கும், திறமைக்கும் கிடைத்த நேரம். அங்கே ஏதோ ஒரு இன்பம் இருக்கலாம். அது ஏன் தனக்குக் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் பொறுப்பைக் கழித்து விட அவசரமாய்ச் செய்து வைத்த கல்யாணமா. வந்த கணவனும், இவளை சமையலுக்கும், வேலைக்கும் ஆள் கிடைத்து விட்டதாக நினைத்து நடத்தும் கோலமா. 'தான் ஒரு முழுநேர சமையல்காரியாக மாறிவிட்டோமோ ' என்ற நினைப்பே கவலையைக் கொடுத்தது .


பட்டப் படிப்பு சான்றிதழ்கள், எங்கே இருக்கின்றன. அவளுக்கே தெரியாது. இருக்கிறதா, ஏதோ ஒரு பழைய பெட்டியில், கசங்கிப் போய்க் கிடக்கலாம். தேடித் பார்க்க வேண்டும். கணவனிடம் மன்றாடி , ஏதோ ஒரு வேலையில் , படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர வேண்டும். சொந்த சம்பாத்தியத்தில், ஒரு சேலை எடுக்க வேண்டும்.


தன் கூடப் படித்த எத்தனையோ பெண்களை எப்போதாவது , இவள் இடுப்புக் குழந்தையோடு பார்த்து விசாரிக்கும் போதெல்லாம். அவர்கள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் . தானும் அதே அவசரத்தில், அவர்களைப் புறக்கணித்து ஓட வேண்டும். தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஏன் ஒரு நெருங்கிய தோழனோ, தோழியோ அவளுக்கு அமையவில்லை. இவள்தான் யாரிடமும் நெருங்காமல். இருந்து விட்டாளோ. ஆனால் வாட்சப்பில் எத்தனையோ நண்பர்கள். அங்கே இவள் போடும் சமையல் குறிப்புகளுக்கு எவ்வளவோ பாராட்டுக்கள்.


வாட்சப்பில் மணிச் சப்தம். 'உங்கள் சமையல் குறிப்பைப் படித்து வீட்டில் செய்த தின்பண்டம் என் பெற்றோருக்குப் பிடித்திருந்தது . தொடர்ந்து போடுங்கள் மேடம். ' மற்றும் ஒரு மெசேஜ். ' ஏன் நீங்கள் உங்களின் சமையல் திறமையைக் காண்பிக்க ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கக் கூடாது'. சூரியனைப் பார்த்தாள்.அவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.'என்னை மறைக்க முடியாது. நான் ஆடுவது விளையாட்டு. உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கிறேன் உஷ்ணத்தோடு ' என்று சொல்வது போல் தோன்றியது அவளுக்கு. அப்போது சூரியனைச் சுற்றி மேகங்கள் நெருங்கிக் கொண்டு இருந்தன.


அழைப்பு மணி அடிக்கும் சப்தம். குழந்தைகள் வந்து விட்டார்கள்.


-------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 17 ஜூன், 2025

போட்டோ - சிறுகதை

 போட்டோ - சிறுகதை 

--------------------------

மறுபடியும் மதுரையில் திவ்யா . அதே பழைய வீடு, கல்லூரியில் படித்தபோது இருந்த வீடு . அப்பா , அம்மாவுக்கு அந்த வீட்டை இடித்து புது விதமாகக் கட்டுவதில் விருப்பம் இல்லை. இந்த முற்றம், இந்தக் கொல்லை, தாங்கி இருக்கும் அத்தை நினைவுகளைக் கலைக்க விருப்பம் இல்லையாம். அவர்கள் நம்பிக்கை. அந்தப் பழைய திருநீற்று டப்பாவில் கூட அத்தையின் மணம் வீசுகிறதாம். ஆமாம். பாட்டி இருந்தபோது இருந்தபடியே எல்லாம். பூஜை அறை உட்பட.


அப்போதெல்லாம், எல்லாமே அத்தை சாம்ராஜ்யம்தான் . அன்றைய காலை உணவு, குழம்பு , காய்கறி எல்லாமே அவள் விருப்பம்தான். அந்த வயதிலும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும் , வேலையாட்களிடம் வேலை வாங்கிக் கொண்டும் ,சித்தி கல்யாணம், மாப்பிள்ளை பார்த்ததில் இருந்து, கல்யாண மண்டபம் எல்லாமே அவள் பார்த்துப் பார்த்துப் பண்ணியது தான்.


'எல்லாமே அத்தை பார்த்துக் கொள்வாள்'. அந்த வீட்டின் தாரக மந்திரமே இதுதான். எப்படி, எல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது . பள்ளிக்கூடம் கூடப் போனது இல்லை. எல்லாம் பார்த்துப் பழகித் தெரிந்து கொண்டது தான். வாக்கப்பட்டுப் போன இடத்தில் சில வருடங்களிலேயே தாலி அறுத்து வந்ததில் இருந்து இங்கே அவள் தம்பி வீடு தான். இவளின் அப்பாதான் அந்தத் தம்பி. இந்தக் குடும்பம்தான். அவள் வாழ்க்கை என்று ஆகிப்போனது .


ஒருநாள் பொட்டென்று அவள் போனபின் இவள் அம்மாவும் அப்பாவும் பட்ட பாடு. 'மிளகாய் டப்பா எங்கே ' என்ற கேள்வியில் இருந்து அம்மாவும், 'அந்த சிவப்புக் கலர்ப் பணப்பை எங்கே ' என்ற கேள்வியில் இருந்து அப்பாவும் மீண்டு வர ரெம்ப நாட்கள் பிடித்ததைப் பார்த்துக் கொண்டே வளர்ந்தவள் தானே இவள். அதுவும் இவள் தன் சாயல் என்பதில் அத்தைக்கு ஏக சந்தோசம். 'திவ்யாவை ஒண்ணும் சொல்லாதே ' ஒரே வார்த்தை தான் அத்தையிடம் இருந்து அனைவர்க்கும்.


இப்படி அத்தை பொண்ணாக இருந்து வளர்ந்த அவளுக்கு அவள் மறைவு பெரும் அதிர்ச்சிதான். காலம் தான் எல்லாவற்றையும் மாற்றியது. இன்று அவள் சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் உயர் அதிகாரி. அயல் நாடுகள் பல சென்று, தனது பேச்சுத் திறமையால் பல பெரிய ஒப்பந்தங்கள் முடித்து , தனது நிறுவனத்தை இந்தியாவின் உயர்தர நிறுவனமாய் மாற்றியதில் முக்கிய பங்கு அவளுக்கு.


திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை. பழகிய பல ஆண்களின் பார்வைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இள வயதிலேயே ஏற்பட்டு விட்டதால் எந்த ஆணின் மேலும் நம்பிக்கை ஏற்படவில்லை இன்று முதிர் கன்னியாகியும் , தன் அழகு, அறிவு, ஆற்றல் பற்றிய கர்வமும், நம்பிக்கையும் கொஞ்சமும் குறையாமல் வாழும் நவயுக யுவதி அவள். அவளிடம் ப்ரொபோஸ் செய்த எத்தனையோ ஆண்களை நிர்தாட்சண்யமாக நிராகரித்திருந்தாள். காரணங்களை யோசிக்க வில்லை. வேண்டாம் ஆண்துணை என்ற ஒரு பிடிவாதம்.


ஆனால் , ராபெர்ட்ஸை அப்படி நினைக்க முடியாமல் தடுமாறிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. காரணம் எப்போதும் புன்னகை மாறாத அவன் முகமா, அதற்குள் தெரியும் ஒரு குழந்தைத்தனமா, வேலையில் மூளை களைத்துச் சோர்வு அடையும் நேரத்தில் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு ,ஒரு ஜோக் அடித்துச் சிரிக்க வைத்து விட்டு போய்க் கொண்டே இருப்பானே , அந்த அலட்சியமா .


பிறந்த நாள், அலுவலக முக்கிய நாள், இவற்றின் போது அனுப்பும் வாழ்த்துக் குறுஞ்செய்தி மட்டுமே, தனிப்பட்ட செய்தி. மற்றபடி , வேறு சிலர் போல் 'அசடு வழியும், அன்பு என்ற போர்வையில் ஆசை வழியும் ' எந்தக் குறுஞ் செய்தியும் அவனிடம் இருந்து வந்தது இல்லை. இவளது கம்பெனியின் உயர் தர வாடிக்கையாளர்களில் ராபெர்ட்ஸும் ஒருவன்.


நியூயார்க் செல்லும் போதெல்லாம் அவனைச் சந்திப்பது உண்டு. கம்பெனி விஷயமான பேச்சுக்கள், சின்னப் பார்ட்டி அவ்வளவுதான். ஆரம்ப அறிமுகத்தில் ஒரு முறை, ஒரே ஒரு முறை சொல்லி இருக்கிறான் . டெல்லியில் இருந்து இங்கே படிப்பதற்கு வந்தவன், வேலை , தொழில் என்று இன்று அமெரிக்க பிரஜை. திருமணம் ஆகவில்லை. அதற்கு மேல் சொல்லவில்லை . இவளைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. வேலை விஷயம், அவ்வளவுதான். இப்போது ஏன் அவன் நினைப்பு, திரும்பி வந்தாள்.


இதோ தனது தொடர் வேலைகளுக்கும், பிரயாணங்களுக்கும் இடையில் கிடைத்த ஒரு வார இடைவெளியில் மதுரையில் அம்மா அப்பாவுடன் சேர்ந்து அந்தப் பழைய வீட்டில் இருக்கும் ஆசையுடன் வந்திருக்கும் இவளின் எண்ணங்கள் வீட்டின் நினைவில் பின்னோக்கி ஓடின . அந்த வீட்டின் இயல்பு அப்படி இழுத்துச் சென்றது. இதோ இங்கு தானே , அத்தை சடை பின்னி விட்டாள். இதோ இங்கு விழுந்து பட்ட தழும்புதானே இன்னும் முழங்காலில். இன்னும் எத்தனையோ எண்ணங்களில் மூழ்கியவளை அந்தக் குரல் உசுப்பி விட்டது .


'கீரை வாங்கலையோ கீராயி'. இது முத்தம்மா குரல்தான். ஆமாம். அவளேதான். ஓடிப் போய்ப் பார்த்தாள். உடல் தளர்ந்து, முகம் சுருங்கி , ஆனால், அந்தப் புன்னகை மாறாமல் ' கூடையை இறக்கி விடு தாயி '

என்றவளின் கூடையை இறக்கி திண்ணையில் வைத்தவளை மேலும் கீழும் பார்த்து விட்டுக் கேட்டாள். ' நீ திவ்யா தானே . ஒல்லிக் குச்சியா இருந்தவள் , நெடு நெடுன்னு வளர்ந்து உடம்பு பூசின மாதிரி ஆகி , அம்பாள் மாதிரி இருக்கே. அப்படியே உங்க அத்தையோட சந்தன நிறத்தோடு சந்தன மணமும் சேர்ந்து மணக்கிறேடி தாயி ' என்றவளிடம் 'அந்த சந்தன மண உபயம் மிலன் நகர பெர்ப்யூம் பாட்டி 'என்று சொல்லாமல் நினைத்துக்கொண்டு 'எப்படி இருக்கீங்க பாட்டி' என்றாள்.


'எனக்கென்னடியம்மா , இந்தக் கீரையும் , இந்தக் கூடைக்குள் இருக்கிற கிருஷ்ணனும் சோறு போடறான். பொண்ணுங்க புள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணியாச்சு . 'தன் கையே தனக்குதவி 'ன்னு காலையிலே இந்தக் கீரை வியாபாரம். அப்புறம் அவரு, அதான் என் புருஷன் , அவரும் நல்லாத்தான் இருக்காரு , அவரு காய்கறிக் கடையிலே எடுபிடி வேலை , ஓடுது வண்டி, அவருக்கு முன்னாலே ,பொட்டுன்னு ஒரு நாள் போயிடணும். இதுதான், இந்தக் கிருஷ்ணனிடம் வேண்டுதல் ' என்று கூடைக்குள் இருக்கும் அந்தக் குட்டிக் க்ரிஷ்ணனைக் காண்பித்தாள். கிருஷ்ணன் கோயிலில் மட்டும் இல்லை,இந்தக் கீரைக்காரியின் கூடையிலும் இருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு .


அவன் வாயில் வெண்ணை அப்பியிருந்தது.' புள்ளைக்குப் பசிக்கும் இல்லே, அதான், அவனுக்குப் பிடித்த வெண்ணை , அப்பப்போ ஊட்டி விட்டுடுவேன்.' ஒரு கணம் உடல் சிலிர்த்தது திவ்யாவிற்கு. ஆற்று மண்ணைத் தோண்டியவுடன் ஊறி வரும் நீர் போல் ஊற்றெடுத்து வரும் இந்த அன்பைப் பெற, இந்தத் தாயைப் பெற என்ன புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அந்தக் குட்டிக் கண்ணன் ' என்று ஏதோ ஒரு எண்ணம்.


இதற்குள் பாட்டி 'அது சரி, என்னை விடு , உனக்கு எத்தனை புள்ளை' என்றவள் திவ்யா முகம் மாறியதை கவனித்து ' அம்மாடி மன்னிச்சுக்கோ, உடம்பைப் பார்த்தே தெரிஞ்சிருக்கணும் , புள்ளை பெத்த உடம்பு இல்லே, தெரியாம கேட்டுட்டேன் ' . ஆனா , ஒண்ணு தாயி , தோணுது சொல்லிடறேன் , இந்தக் குட்டிக்ரிஷ்ணன் ஏற்கனவே உனக்கு உரியவனை உனக்கு காண்பிச்சுட்டான். நடக்கும் ' என்றபடி, கீரையைக் கொடுத்து அம்மா கொடுத்த காசை வாங்கிக் கொண்டு கிளம்பியவளிடம். ஒரு நூறு ரூபாய் நீட்டினாள் திவ்யா.


' அந்தக் குணம் அப்படியே இருக்கும்மா உனக்கு, அப்போல்லாம், அஞ்சு ரூபாய் உங்கம்மா கீரைக்கு காசு கொடுப்பா, நீ பின்னாலேயே ஓடி வந்து பத்து ரூபாய் குடுப்பே , நீ சேர்த்து வச்ச காசு, வச்சுக்க பாட்டி, பாவமா இருக்கு ' ன்னு. நான் வாங்கிப்பேன். அந்தக் குணம் மாறலே உனக்கு இன்னும். அம்பது ரூபாய் கீரைக்கு காசு உங்க அம்மா கிட்டே , நீ நூறு ரூபாய். உனக்கு எல்லாமே ரெண்டு மடங்கு சந்தோஷமா திருப்பிக் கிடைக்கும் தாயி, உன் பிரிய அத்தையும் கொடுப்பாள். என் குட்டிக் கிருஷ்ணனும் கொடுப்பான் ' என்றபடி வாங்கிக் கொண்டாள்.


திரும்பியவளிடம், அம்மா ஒரு போட்டோ காண்பித்தாள். 'இதை நீ பார்த்திருக்க மாட்டே, அத்தையோட பழைய பெட்டியில் இருந்தது . அத்தை ,மாமாவோட இருக்கிற பழைய போட்டோ ' . அந்தப் போட்டோவில் ராபர்ட்ஸ் சிரித்துக் கொண்டு இருந்தான்.


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


திருடர் பயம் -சிறுகதை

 திருடர் பயம்  -சிறுகதை 

------------------------------

எனக்குத்  திருடர்கள் மேல் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை உண்டுங்க. திருடன் னு சொல்லாம திருடர் னு சொன்னதில் இருந்து நீங்க புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்க. காரணத்தையும் சொல்லிடுறேன்.


ஒரு தடவை , நாங்க வீட்டை விட்டு வெளியூர் போயிருந்தப்ப  ஒரு திருட்டு நடந்திடுச்சு . 'வீட்டை விட்டுட்டுப்  போகாம தூக்கிட்டா வெளியூர் போவீங்க' ன்னு குதர்க்கமா கேட்கக் கூடாது. சரி 'வெளியூர் ' போயிருந்தப்போ' . .  'வீட்டிலே இருந்தா நடக்குமா' ன்னு ஆரம்பிக்காதீங்க. சொல்ல விடுங்க சார்.


எங்கே விட்டேன். ம். திருட்டு. அது என்ன ஆச்சு . அவன் , இல்லை அவர் கஷ்டப்பட்டு கேட்டிலே வெளியிலே இருந்த பலத்த திண்டுக்கல் பூட்டை உடைச்சு , உள்ளே வந்திருக்கார் . குட்டைச் சுவர் தான். ஏறிக் குதிச்சே வந்திருக்கலாம். என்னவோ அவரோட தொழில் தர்மம். உடைக்கணும். அப்பதான் திருடின திருப்தி போலிருக்கு .  அப்புறம் பல    சாவிகள் உபயோகிச்சு கதவோட பூட்டைத் திறந்திருக்கார் . ஒரே சாவியிலும் திறந்திருக்கலாம். ஒரு யூகம் தான். நம்ம வாடகை  வீட்டுக் கதவாச்சே. கஷ்டமா இருந்திருக்கும்னு  நினைக்கிறதிலே ஒரு அல்ப சந்தோசம். 


வெளியே இருக்கிற மெயின் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததாலே உள்ளே இருட்டிலே  கஷ்டப்பட்டிருக்கார் . எப்படித் தெரியும் னு கேட்கிறீங்களா. . அணைஞ்சு போன தீக்குச்சிகள் ரெம்ப கிடந்தது உள்ளே. ஒரு டார்ச் லைட் கூட இல்லாத ஏழைத்  திருடர் அவர்னு நீங்க யூகிச்சுக்கலாம். 


எப்படியோ அலமாரியை உடைச்சு உள்ளே இருக்கிற துணிமணி எல்லாம் வெளியே எடுத்து எறிஞ்சு தேடி இருக்கார் . நாங்க திரும்பிப் போனப்போ இருந்த நிலைமை அது . பாவம் நகையோ பணமோ எதுவும் கிடைக்கலே. உள்ளே இருந்தது  கொஞ்சம் காசுகள். அதுவும் என் பையன் பொழுது போக்காய்ச் சேகரித்த அயல் நாட்டு நாணயங்கள். அதைப்  பார்த்து அவருக்கு இன்னும் கோபம் வந்திருக்கு. 


எப்படிக் கண்டு பிடிச்சேன்னா, ஹால்லே இருந்த டி வியைத் தள்ளி உடைச்சிருக்கார்  சார். அந்த டிவியும் பழைய காலக் குண்டாச் சட்டி டி வி. இந்தக் கால மெல்லிசான டி வி னா கூட தூக்கிட்டு போயிருக்கலாம். அந்தப் பெரிய டி வியை தூக்கிப் போட்டு உடைச்சிருக்கார்  சார்.  நீங்க அவர்  நிலைமையில் இருந்து யோசிச்சு பார்த்தா உங்களுக்குப் புரியும். அய்யய்யோ கோச்சுக்காதீங்க. நிலைமையை புரிஞ்சுக்கிறதுக்காகச்  சொன்னேன். 


அப்புறம் , போலீஸ் வந்து , போலீஸ் நாயும் வந்து , அதுவும் தெரு ஓரம் வரை போயி , அங்கே ஏதோ பிஸ்கட்  பாக்கெட்டை மோந்து பார்த்தது. அதுக்கு பாவம் பசியா இருக்கலாம். ஆனா, போலீஸ் அதை கர்சீப்பால் மூடி எடுத்துக்கிட்டாங்க. வீட்டிலே அவன் உடைச்ச கதவு , பீரோவில் கிடைக்காத கைரேகை அதிலே கிடைச்சிடுமாமாம் . 


எல்லாம் முடிஞ்சு எங்க கிட்டே கேட்டாங்க. 

'என்னென்ன திருடு போயிடுச்சு ' 

'ஒண்ணும்  திருடு போகலை சார் ' 


திருப்பியும் அதே கேள்வி , அதே பதில். 

கடுப்பான போலீஸ்

' திருடனைப் பிடிச்சா என்னத்தைக் கொடுன்னு கேட்கிறது ' 


நம்ம விடுறதா இல்லை .

'சார் , இந்தக் கதவை உடைச்சது, டி வியை உடைச்சதுக்கு காசு கேட்கலாம்ல  சார் '


'யோவ் , அவனே , வெறுத்துப் போயி அவன் பட்ட கஷ்டத்தில் , இங்கே வந்து வேர்வையை சிந்தி , ஒண்ணும் கிடைக்காமப்  போயிருப்பான்.  ஒண்ணு பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நாள் வெளியூர்  போயிட்டு வாங்க. உள்ளூர்த் திருடனா இருந்தா, உங்களைப்   பாத்தா, உதைக்காம விட மாட்டான். ' னாரு.


ஆனா நமக்கு வேலை  இருக்கே . போகலை. ஆனா, அப்பப்போ வெளியே போறப்ப, நம்மை யாரவது உற்றுப் பார்த்தா, இவர் அந்தத் திருடரா இருப்பாரோ ' ங்கிற  பயம் உண்டு. ஆனா நேற்று வரை அப்படி யாரும் வரலை . 


இன்னிக்கு காலையிலே ரோட்டிலே வாக்கிங் போறப்ப, ஓர் ஆளு ரெம்ப நெருக்கத்தில் வந்தாரு .

'ஏன்யா , உனக்கு எதுக்கு இத்தனை பெரிய வீடு, வீட்டைப் பார்த்து ரெம்ப  இருக்கும்னு உள்ளே வந்தா, ஏதோ செல்லாத காசு தான் கும்பல் கும்பலா இருந்தது. இதிலே உன் டி வியை உடைச்சதுக்கு உனக்குப்  பைசா வேணுமா. தெரிய வந்தது. இந்தா ஐநூறு  ரூபாய் வச்சுக்கோ , இதை வச்சு , டிவியை ரிப்பேர் பண்ணி எடுத்துக்கிட்டு வீட்டைக் காலி பண்ணிட்டு ஏதாவது குடிசையில் போய்க்  குடியேறு. அடுத்து  இந்தப் பெரிய வீட்டுக்கு வர்றவனாவது ,பசையுள்ள ஆசாமியா இருக்கான்னு பார்க்கிறேன் ' 


'சொல்லிட்டு  விடு விடுன்னு போயிட்டார்  சார். ஆளு ஓங்கு தாங்க முரட்டு ஆளாய் இருந்ததாலே , ஒண்ணும் பேசாம ,ஐநூறு நூறு வாங்கிட்டு வந்திட்டேங்க. வீடு பாத்துக்கிட்டு இருக்கேங்க. சின்ன வீடா, திருடருக்குப் பிடிக்காத வீடா இருந்தா சொல்லுங்க ப்ளீஸ் . திருடருக்குப்  பிடிச்சது, பிடிக்காதது  உங்களுக்கு எப்படித் தெரியும்னு கோச்சுக்காதீங்க. ப்ளீஸ் சார்', 


--------------------நாகேந்திர பாரதி  


My Poems/Stories in Tamil and English   


எந்திரிங்க அப்பா - சிறுகதை

 எந்திரிங்க அப்பா - சிறுகதை 

------------------------

'பார்த்து வாடா , கருவை முள்ளு ரெம்பக் கிடக்கு '

செருப்பு இல்லாத கால்கள்தான் இருவருக்கும். அவர்கள் நடந்து போனது ஒரு குறுக்குப் பாதையில் . ராமநாதபுரம் சென்று சினிமா பார்க்க .


வழக்கம் போல் அந்த வாரமும் வார இறுதியில் ஆவலோடு பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரம்பப் பள்ளி வாசலை. அதோ வந்து விட்டார் அப்பா. கடைசி மணி அடிக்கும் முன்பே வந்து விடுவார் பக்கத்துக் கிராமத்தில் இருந்து அவன் அப்பா. வாத்தியாரிடம் சொல்லிவிட்டு ஓடி வரும் அவனை அணைத்துக் கொண்டு , புத்தகப் பையோடு அவன் தாத்தா வீட்டில் போய் பையைப் போட்டு விட்டு புறப்பட்டு விடுவார்கள் ராம்நாட்டுக்கு சினிமா பார்க்க.


போகும் வழியெல்லாம், கருவைக் காடும் , அங்கங்கே தேங்கிய தண்ணீரோடு சில கண்மாய்களும். ஒத்தையடிப் பாதையில் நடக்கும்போது பார்க்கப் போகும் எம் ஜி ஆர் படச் சண்டைக்காட்சிகளின் கனவுகளோடு .


'இந்தப் படத்திலும் சிலம்புச் சண்டை உண்டா அப்பா '

'இருக்கும்னுதான் நினைக்கிறேன் , இல்லைன்னாலும் எல்லாச் சண்டையிலும், அந்தக் கை கால் ஸ்டைல் வந்துடும்டா, நல்லா இருக்கும் '.


'அப்பா, அடுத்து எப்பப்பா மீன் பிடிக்கப் போகலாம்'

முன்பு ஒருமுறை உள்ளூர் கண்மாயில் அப்பா வேட்டியின் முனையை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு இடுப்பளவு ஆழத்தில், அலசி வீசியதில் அகப்பட்ட கெண்டையும், கெளுத்தியும். எத்தனை ருசி '

'போவோம்டா, உனக்கு லீவு விடட்டும்'


ராம்நாட் ரயில்வே லைன் வந்தாச்சு. தாண்டிப் போனா ராம்நாடுதான்.

டீக்கடை பன் ,காப்பீ . ஷண்முகா தியேட்டர், ராஜாராம் டாக்கீஸ் ரெண்டிலும் ரெண்டு ஷோ சினிமா பார்த்துவிட்டு, இரவில் பெரியப்பா வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கி விட்டு அதிகாலை முதல் பஸ் பிடித்து தாத்தா வீட்டில் விட்டு விட்டு நடந்தே பக்கத்துக் கிராமம் சென்று விடுவார்.


இது தவிர, பக்கத்து ஊர்த் திருவிழா, உள்ளூர் முளைக்கொட்டு உற்சவம், சித்திரைத் திருவிழா, நடராஜர் ஆருத்ரா தரிசனம், சைக்கிள் ஓட்டும் திருவிழா, வள்ளி கல்யாணத் தெருக்கூத்து, அப்பாவுடன் சேர்ந்து சென்ற இடங்கள் எல்லாம் அவர் வாங்கிக் கொடுத்த தின்பண்டங்கள், சீனிச்சேவு, காராச்சேவு, கடலை மிட்டாய், சவ்வு மிட்டாய், நிலக்கடலை. இதுதவிர , கிராமம் செல்லும் போதெல்லாம், சீசனுக்கு ஏற்றபடி பதினி நுங்கு, பனங்காய். கிழங்கு, நெல் ஒப்படியின் போது வாங்கித்தரும் நிலக்கடலை, மொச்சைப்பயறு, பண்டிகைக்கு ஏற்றபடி, கரும்பு ,கிழங்கு, பயறு .எந்தத் திண்பண்டத்தைப் பார்த்தாலும் அப்பா நினைப்புதான். அதுவும் நுங்கை , நறுக்கி , கட்டைவிரல் விட்டு உறிஞ்சிச் சாப்பிடும் கலையும் அவர் சொல்லிக் கொடுத்த கலைதானே.


முதுமையில் தளர்ந்தபின்பு கிராமத்தில் இருந்து கூட்டி வந்து மதுரையில் வீடு பிடித்து இருக்க வைத்தபின்பு , சில வருடங்களில், சர்க்கரை வியாதியில் எடுத்த கால்களை எண்ணி எண்ணி ஏங்கிய அவர் ஏக்கம். கண்ணீரும் வார்த்தையுமாய் எத்தனை முறை.. மூன்று கிராமம் முழுக்க எத்தனை வயல்கள். எத்தனை வேலையாட்கள், தானும் சேர்ந்து விதைப்பது, நாற்று நடுவது முதல், ஒப்படி வரை உழைத்த கால்களின் , காலங்களின் கண்ணீர்க் கதைகள் அவை.


கால்கள் மட்டுமா, இளம் பருவத்தில், தோளில் தூக்கிச் சென்ற அந்தக் கரங்கள் , கல்லூரி விடுதிக்கு வந்த மணி ஆர்டரில் நுணுக்கி எழுதிய விரல்கள் . 'சனிக்கிழமை தவறாம எண்ணைய் தேய்ச்சுக் குளி, உடம்பைப் பார்த்துக்கோ, படிப்பைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டியதில்லை ' வார்த்தைகள் இருக்கின்றன .


எல்லாம் மூடப்பட்டு , முகம் மட்டும் தெரிய ,முகத்தை மூடச் சொல்லி, கொடுத்த , வறட்டி ஒன்றோடு நிற்கிறான். உடம்பு முழுக்க விறகுகளும் , வறட்டிகளும் மூடி இருக்க , முகத்தை மூட விருப்பம் இன்றி நிற்பவனை மூடச் சொல்லி நிர்ப்பந்திக்கும் உறவினர். மூடப் போகும்போது ‘முகம் சிரிக்காதா, எழுந்து விட மாட்டாரா, என்ற எண்ணத்தோடு . அழுகை பொங்கி வர, அணைக்கும் கரங்கள். இவை அப்பாவின் கரங்கள் இல்லை.


ஒவ்வொரு முறை , அயல்நாட்டில் இருந்து வந்து பார்த்துச் செல்லும்போதெல்லாம் பார்க்கும் ஏக்கப் பார்வையில் தெரிந்த எண்ணம். 'இனி எப்போது வருவாய், வரும்போது நான் உயிரோடு இருப்பேனா' . இதோ சுடுகாட்டில், 'வந்திட்டேன் அப்பா, எந்திரிங்க '


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


அப்பா - கவிதை

 அப்பா - கவிதை 

———-

வட்ட எருவை வைத்தபோது

எட்டிப் பார்த்த நினைவுகள் எத்தனை


இந்த முகத்திற்கு இறுதி நாளா

இனிமேல் இல்லையா எழுந்து நடப்பது


வரப்பில் நடந்த கால்கள் எங்கே

நுங்கை ஊட்டிய விரல்கள் எங்கே


அதிர்ந்து சிரித்த சிரிப்பு எங்கே

சுமைகள் தாங்கிய தோள்கள் எங்கே


ஒவ்வொரு முறையும் பிரியும் போதும்

இனிமேல் பார்ப்பேனே என்ற ஏக்கத்தை


உதட்டில் வெடித்து முழுங்கப் பார்த்து

முடியா உணர்வைக் கண்ணில் காட்டி


சிரித்து மழுப்பி அனுப்பி வைத்த

தந்தைப் பாசத்தின் தகவல் எங்கே


பிறப்பும் இறப்பும் வாழ்வின் ஒழுங்கென

புரிந்தும் கூட அடக்க முடியாத


அழுகை தந்த அன்பின் உருவம்

அப்பா எங்கே , அப்பா எங்கே


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English




வெள்ளி, 13 ஜூன், 2025

போடா, போடி -குறுங்கதை

 போடா, போடி -குறுங்கதை

----------------------------


'என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க.'

ஆமாம், இப்பதான் உன்னை முழுசாய்ப் பார்க்கிறேன். இந்த நெற்றி, இந்த மூக்கு, இந்த வாய், இந்தக் காது, இந்த முடி , எவ்வளவு அழகு நீ '

'ஆமாம், அறுபது வயதுக்கு மேல் தான் என் அழகு தெரியுதா '

அவளை அறியாமல் வந்து விழுந்து விட்டது வார்த்தை.

அவன் கண்களில் பொங்கிய கண்ணீரை அவனால் கட்டுப் படுத்த முடிய வில்லை.


'அதோ , நர்ஸ் பார்க்கிறாங்க, கண்ணைத் துடைச்சுக்குங்க,' என்று கர்சீப் எடுத்துக் கொடுத்தவள் அவன் காதருகே கிசுகிசுக்கிறாள் .


லேசாகக் கையை அமுக்கி விட்டு ' ஐ ஆம் ஓகே ' என்கிறாள். ஓ, இவள் டிகிரி படித்தவள் அல்லவா, அவளுக்குப் பிடித்த சாப்பாடு, அவளுக்குப் பிடித்த சினிமா, பேசியது உண்டா . அவள் படிக்கும் பத்திரிகைகளை பார்த்திருக்கிறான். அதைப் பற்றி ஒரு வார்த்தை.


'வெந்நீர் போட்டாச்சா, காபி ரெடியா, என்ன டிபன், மறுபடியும் இட்லியா,ஆபீஸ் நேரமாச்சு. 'எப்படி சகித்துக் கொண்டாள் தன்னை ' . இது ஒரு தவ நிலையா.


அவள் ஒரு குடும்பச் சுமைதாங்கி என்ற எண்ணத்திலேயே வீட்டுப் பொறுப்புகளை எல்லாம் அவளிடம் தள்ளி விட்டு , அலுவலகம் , நண்பர்கள் என்று திரிந்து விட்டு , அறுபது வயதில் ஆஸ்பத்திரிக்கு அவளைக் கூட்டி வந்திருக்கும் போது அவளைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியும் கூடவே வருகிறது .


இதோ , ஆஸ்பத்திரியில் அலை பாயும் எண்ணங்களோடு அவளைப் பார்க்கும் பார்வை அவளுக்குப் புரிகிறது.


'எனக்குத் தெரியும் உங்களை, நீங்க ஒரு குழந்தை. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை எப்படிப் பார்த்துக்குமோ,

அது போலவே என்னைப் பார்த்துக்கிட்டீங்க. கோபம், பிரியம், சண்டை எல்லாம் கலந்து . '


'ஒவ்வொரு பிரசவத்தின் போதும், என்னை விட நீங்க உள்ளுக்குள் துடித்த துடிப்பு எனக்குத் தெரியும். புள்ளைங்களை வளர்த்து ஆளாக்கினதிலே, என்னை விட உங்க பங்கு தான் பெரிசு '


'உனக்கு தலை வலின்னு கூட சொன்னது இல்லையே . எனக்கு ஒரு காய்ச்சல்னா , எப்படி பார்த்துக்கிட்டே , இப்ப உனக்கு '


'தெரிஞ்சா நீங்க எவ்வளவு துடித்துப் போவீங்கன்னு எனக்குத் தெரியும். என்னாலே முடிஞ்சதை நான் சமாளிச்சேன். பெருசா எதுவும் இதுவரை வரலை. இப்ப வந்திருச்சு , உங்க கிட்டே சொல்லிட்டேன் .'


'அடிப் போடி, எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கே. '


'அடப் போடா, அதோ டாக்டர் வந்துட்டாரு ' என்று அவள் கிசுகிசுக்க , அந்தப் 'போடா 'அவனுக்குப் பிடித்திருந்தது. இனி அவர்கள் குழந்தைகள் தானே ஒருவருக்கு ஒருவர் .


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 4 ஜூன், 2025

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

----------------------------


நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே. 


ஆதி மண்ணின் மணமும், ஆதி மனிதர் மனமும் அறிந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரின் கதை எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது அவரின் பிரதம சீடர் குமார் அம்பாயிரம் அவர்களின் 'ஈட்டி'சிறுகதை. 


இரண்டு நண்பர்களின் மலைப்பாதைப் பயணத்தில் நமக்குக் காணக் கிடைப்பது , மலையின் இயற்கை வளமும் அந்த மலை வாசிகளின் இய்ற்கைக் குணங்களும் . அவர்களின் வாழ்க்கை முறையும்  ' குர்தை' பாஷையும் பிடித்த நண்பன் அவர்களோடே அங்கே தங்கி விட்டான். நாயகன்  தனது 'குதிரை ' பாஷையைத் தக்க வைத்துக் கொண்டு  ஈட்டி முனையோடு மலையில் இருந்து இறங்கி விட்டான். இதற்கு இடையில் கதையில் நமக்குக்     கிடைக்கும் காட்சிகளும் , பேச்சுக்களும் நாம் கற்பனை செய்து இராதவை. அவற்றில் ஒன்றிரண்டை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


முதலில்  அவர்கள் ஏறுகின்ற அந்த மலைப்பாதையில் கிடைக்கும் காட்சிகள் கவிதைக் காட்சிகள் .


செங்குத்தான பாறைகளையும் முகடுகளையும் ஏறிக் கடந்ததும் அங்கே இன்னொரு பூமியைக் கண்டோம். காற்று உதறிச்செல்லும் கம்பளத்தைப் போல் உயர்ந்தும் தாழ்ந்தும் பரந்து விரிந்த பிரதேசம் எங்கள் முன் இருந்தது.

ஏற்கனவே இருள் துவங்கிவிட்டது. நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப் போல் நட்சத்திரங்கள் முளைவிடத் துவங்கின.


கண் விழித்தவுடன் காலையில் தீ வளையங்கள் தோன்றிய திசையை நோக்கினோம். சாம்பலின் சுவடுகூட கண்களுக்கு அகப்பட வில்லை. தடையின்றி வீசும் காற்றில் மலைவெளியில் நாங்கள் நடக்கத் துவங்கினோம். ஆமைகளின் முதுகைப்போல் முகடுகளும் அகடுகளும் அதன் எல்லை எதுவென அறிய முடியாதபடி முடிவற்று வந்து கொண்டு இருக்கின்றன. 

இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுக்கொள்ள முடியாத இடைவெளியில் நிற்கும் மரங்கள், எழுந்து நடக்கத் துவங்கி எதையோ கண்டு நின்றுவிட்ட குழந்தை களைப்போல் வெட்ட வெளியில் எதிர்கொண்டு நின்றன.


பிரமாதமான உவமைகள். ஸ்ரீ நேசன் அவர்கள் சொன்னது போல்  கவிஞராய் இருந்து எழுத்தாளராய் மாறியவர் என்று நமக்குக் காட்டும் வரிகள்.


இவ்வாறு மலை ஏறி அவர்கள் ஒரு மலைக் கிராமத்தைச் சென்றடைகிறார்கள். 


‘தோற்றத்தில் நம்மைப் போலவே மனிதர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் எங்களை அரசனைப் போல் வரவேற்கவுமில்லை, அடிமைகளைப் போல் புறக்கணிக்கவுமில்லை. வயலுக்குப் போய் திரும்பிவரும் தம் குடிகளைப் போன்றே குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் தலை உயர்த்திப் பார்த்தார்கள் எங்களை.’

அந்த ஆதி மக்களின் எளிமையை நம் கண் முன் கொண்டு வரும் வார்த்தைகள்


அடுத்து விரிவது அந்த மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை. 

ஓணான் கொடிகளால் முடைந்த கூடையில் சருகுகளையும் காய்ந்த சுள்ளி களையும் கொண்டு கிராமத்தைச் சுற்றி ஒரு வட்டம் போட்டனர். காய்ந்த மூங்கில் கணுக்களை உரசி வெளியிட்ட தீயை இலைகளில் புகைய விட்டனர். பசிய சாணமும் மலை மண்ணும் பிசைந்து பூசப்பட்ட திண்ணை களில் கூடியமர்ந்து கதைகள் கூறிக்கொண்டோம். எங்கள் கதையில் வந்த குதிரையை நாங்கள் குதிரை என்றோம். அவர்கள் கதையில் வந்த குதிரையை ‘குர்தை’ என்றார்கள்.


இரண்டுமேடுகள் சரியுமிடத்தில் தோன்றி பெருகும் ஓடையை மிக அகலப்படுத்தி நெல் பயிரிட்டார்கள். தண்ணீர், வயலாக மாறிவிட்ட ஓடையில் குழம்பி, நெற்பயிரின் கணுக்கால்களை நனைத்து சாந்தமுற்று வழிந்து வெளியேறுகின்றன.


குன்றுகளில் சரிவிலும் பாறைகளின் இடுக்கிலும் சாமையும் வரகும் உடல்வளைந்து நின்றன. வரகின் கதிர்களை நெருப்பில் வாட்டிக் கொறித்தோம். பச்சை வரகின் பால் சுவையும் வாட்டிய சுவையும் பற்களுக்கிடையே பிழியப்பட்டு அந்த வாழ்வின் சுவையாக இருந்தது. 

அந்த இயற்கையை என்னமாய் நம் கண் முன் கொண்டு வருகிறார் ஆசிரியர்


விதைப்பில் உடனிருந்தோம். அறுவடையில் பங்கெடுத்தோம். 

காலம் ஓடுவதைக் காட்டும் பளிச் வார்த்தைகள் ஆசிரியரிடம் இருந்து .  


நாயகனின் நண்பனுக்கு அந்த இடமும் அவர்களின் வாழ்க்கை முறையும் பிடித்துப் போகிறது . அவன் குதிரையை அவர்களை போல் ' குர்தை ' என்று அழைக்க ஆரம்பித்து விட்டான். நாயகனோ ' குதிரை ' என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறான். 


அந்த ஆதிக்குடிகளின் உடல் அமைப்பைப் பற்றி ஆசிரியர் விவரிக்கும் இடம் எல்லாம் நமக்குத் புதுமையாக இருந்தாலும், அங்கே போய் வந்தவர்களுக்கு பழைமையின் முகத்தைக் காட்டும் இடங்கள். நீங்கள் படித்துப் பாருங்கள். 

நோய்களை அவர்கள் அணுகும் விதமும் மிகவும் வித்தியாசம். 


வெப்பக் காற்றில் பிறப்பெடுக்கும் வைசூரிகளும் முளைவிடும் சீழ்கட்டிகளும் வாடைக்காற்றில் ஊடுருவி வரும் துர்ச்சிந்தை மற்றும் தீயக் கனவுகளில் விளைவென்றார்கள் அவர்கள். 


மனிதர்களை அண்டிப்பிழைக்க முடியாத பருவத்தில் துர்சிந்தையும் தீய கனவுகளும் எட்டிமரத்தில் போய் வசீகரமான கனிகளாக வாழ்கின்றன. 

இன்னமும் நம் கிராமங்களில் பார்க்கும் வேப்பிலைப் படுக்கை, அம்மனுக்கு மாவிளக்கு  போன்ற நிகழ்வுகள் ஞாபகம் வருகின்றன .


இவர்கள்  அங்கே  வந்த நாட்களுக்கு பிறகு ஒருவன் மெதுவாக நொண்டத் தொடங்கி இப்போது படுக்கையாகிவிட்டவனின் உடலில் புகுந்திருக்கும் தீயக் கனவை விரட்டும் சடங்கு உற்றார் சூழ, வளர்பிறையின் மூன்றாம் நாளில் நடக்க இருப்பதாக அறிகிறார்கள். 


நோயுற்ற மனிதனைத் தூக்கி வந்து இறகுப் படுக்கையில் படுக்க வைத்தார்கள், .

மூத்த தாயார் ,பிதற்றத் தொடங்கி இருக்கும் பிரக்ஞையற்ற உடலருகே நெருங்கி கண்களை மூடியபடி ஒவ்வொரு எலும்பினூடாகவும் சதையின் இடுக்குகளிலும் விரல் நுழைத்து அவனுள் புகுந்திருக்கும் தீய கனவினைத் தேடினாள். கண்களை மூடியபடி இடது தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையிலே அவள் விரல்கள் சிறிது நின்றது. அங்கே எந்த காய வடுவும் நோயின் மூலக்குறியும் தென்படவில்லை. தாயாரு மெதுவாக எழுந்து நின்றாள். மூண்ட தீயின் பிரகாசம் அவள் முகத்தைத் தீவிரமாக்கியது. அவள் அறிவித்தாள். இந்த உடலுக்குள் உடையாத ஈட்டியின் முனை இருக்கிறது.


மூப்பன் எழுந்து சப்தமாக “இவனை யார் குத்தியது? குத்தவில்லை யென்றால் யாருடைய ஈட்டி முனை காணாமல் போயுள்ளது? நடுவே வாருங்கள்” என்றான். 


கதையின் தலைப்பான ஈட்டியின் கதை இங்கே தொடங்குகிறது 


அப்போது இளைஞன் ஒருவன்  வட்டத்திற்கு உள்ளே வந்து வணங்கி “தொலைந்து போனது எனது ஈட்டி முனைதான், அது தொலைந்தது நிஜத்தில் அல்ல, நான் கண்ட கனவில்” என அனைவரும் கேட்கும்படி தான் கண்ட கனவினைக் கூறத் தொடங்கினான்.


“இன்னும் பிடுங்காத முற்றிய ஆலிவல்லிக்கிழங்கால் பூமி வெதுவெதுப்படைந்திருந்த இரவில்- (என்ன ஒரு பிரமாதமான மலைக் காட்சி )-  நான், மூக்கன், பொதுக்கன் மூவரும் ஈட்டிகளைத் தூக்கிக்கொண்டு பன்றிகளைத் துரத்திக்கொண்டிருந்தோம். புதர்வளைவில் பன்றிகள் திரும்பும்போது என் ஈட்டி விசையோடு முன்னே பாய்ந்தது.. பன்றிகள் ஓடி மறைந்துவிட்டன. நிலவின் வெட்ட வெளிச்சத்தில் என்னைச் சுற்றி யாருமில்லாத கனவில் ஈட்டி மட்டும் முனை காணாமல் போயிருக்க கம்புடன் தனியே நின்றிருந்தேன்.. அதன் உலோக முனையை மட்டும் காணவில்லை.'


இப்போது தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையில் மூப்பன்  கீறினான் சதையை. கண்களை மூடியபடியே இருந்த தாயாரு கிழிக்கப்பட்ட சதையினூடே விரல் நுழைத்தாள். மெதுவான நடனம் வேகமெடுத்தது. குருதிப் பெருக்கெடுத்த சதைப் பிளவிலிருந்து நடுவிரல் அளவு நீளம் இரண்டு விற்கடை அகலமும் கொண்ட ஈட்டி முனையை உருவி எடுத்து தாயாரு யாவர் முன்பும் வாழை இலையில் வைத்தாள். 


கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கற்களாலும் சொற்களாலும் முச்சந்தியில் அவமானப்படுத்தப்பட்ட பெண்ணைப் போல் இலையில் வைக்கப்பட்ட ஈட்டிமுனை இருந்தது. 


ஈட்டியைத் தொலைத்தவன் அவனை நீராட்டினான். பின் பிளந்த சதையை சாதுவான சொற் களாலும் கல்லரசன் மரத்தில் கொத்தி மண் கலயத்தில் ஏந்தப்பட்ட பாலாலும் மூடினார்கள். வானத்தின் கீழே கலவி முடிந்து மல்லாந்த உடலைப் போல இலைகளைப் பரப்பி’அதில்  அவனைப் படுக்க வைத்தனர்.


பொங்கலிட்ட உணவை உண்டு எல்லோரும் உறைவிடம் புகுந்தனர். ஈட்டியைத் தொலைத்தவன் அவனுக்குக் காவலாக அவனருகிலேயே இரவைக் கழித்தான்.


இன்னமும் நம் கிராமங்களில் கோடாங்கிகள் , குறி சொல்லுதல், போன்ற நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கத்தானே செய்கின்றன.

அந்த மக்களின் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் . 


நம்புவதும் நம்பாததும் நம் இஷ்டம்.

அந்த மலை வாழ் மக்களின் பழக்கங்கள் நமக்குப்  புதுமையாக இருந்தாலும். பார்த்து வந்தவர் படைத்திருக்கும் கதை என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். 


மறுநாள் நாயகன் கிளம்புகிறான். அவனைப் பிரிய விரும்பாத நண்பன் ' 'குர்தை ' என்று சொல்லச்  சொல்கிறான். இவனோ ' குதிரை ' என்றே சொல்லி விட்டு விடை பெறுகிறான்.  


கதையை முடிக்கும்போது, அங்கே யாருக்கும் தெரியாமல்    எடுத்து  வந்த ஈட்டி முனையை அவனது பயணத்தின் ஆதாரமாக சாட்சியாக நம்  முன் வைக்கிறான். . அதன் ஒற்றைக் கண் அவனையும்  நம்மையும்  பார்க்கிறது. ‘ என்று கவிதை நயத்தோடு முடிகிறது கதை  


வித்தியாசமான கதை. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களையும் , நம்பிக்கைகளையும் , மலைப் பாதையின் பயணத்தையும் நம் கண் முன் காட்சியாக்கிக் காட்டும் கதை. 


ஆதி மண்ணின்  மணம் மணக்கும் பல்வேறு கதைகளை இன்னும் படைத்திருக்க வேண்டிய     ஆசிரியர்  குமார் அம்பாயிரம் அவர்கள் இந்த மாதம் இறந்த விபரம் அறிந்து மிக்க வருத்தம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வை நடத்தும் அழகியசிங்கர் அவர்கட்கு நன்றி. வணக்கம். 


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English



பாட்டுப் பாட வா -நகைச்சுவைக் கட்டுரை

 பாட்டுப் பாட வா -நகைச்சுவைக் கட்டுரை 

----------------------------

இந்த வாட்சப் க்ரூப்புகளில் கொரோனா காலத்தில் ஆரம்பித்த இந்தக் கொடுமை இப்போது வேகமாகி விட்டது. கையைக் காலைத் தூக்கத் தெரிந்தவர்கள் நாட்டியமும் கராத்தேயும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து, . பேப்பரில் கோடு போடத் தெரிந்தவர்கள் , ஓவியம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து இப்போ வாய் இருக்கிறவங்க எல்லாம் இசைக் குழுக்கள் ஆரம்பிக்கிறார்கள் . என் நண்பர் ஒருவருக்கும் அதுபோல் ஆசை வந்து ஆரம்பிச்சு , நானும் சேர்ந்துட்டேன்.


என்கிட்டே சொன்னாரு.

'நீங்க தினசரி நான்கு பாட்டுகள் அதிலே போடலாம். தனியாகவோ , உங்க ஒய்ப் கூட சேர்ந்தோ ,'

'சார் , அவங்களுக்குப் பாடத் தெரியாதே சார் '

' காமெடி பண்ணாதீங்க சார், இப்ப உங்களுக்குப் பாடத் தெரியும்னா சேர்த்தோம். உங்க இசை ஆர்வம் தெரியும்ல , அது மாதிரிதான் '

'அவளுக்கு இசை ஆர்வம் இருக்குன்னு உங்களுக்கு எப்படி '

' வெளையாடாதீங்க சார் , அன்னிக்கு சொன்னீங்களே, அவ கிட்டே அடிக்கடி பாட்டு கேக்கிறேன்னு ' .

'அது வசைப் பாட்டு சார்'

'வசைப் பாட்டோ , இசைப் பாட்டோ, பாட்டு பாட்டு தானே .


கொஞ்சம் கவலையோடும், பயத்தோடும் தான் அந்தக் குழுவில் போயி பாட்டு கேட்கணும் . அவ்வளவு ஆர்வத்தோடு அலறுவாங்க .

ஒரு நாள் நானும் என் ஒய்ப்பும் சேர்ந்து ஒரு பாட்டு போட்டோம். அதை நாங்க திருப்பிக் கேட்கத் தேடினா அது எங்கேயோ தொலைஞ்சு போயிருச்சு . அதைத் தேடுற நேரத்திலே மத்தவங்க பாட்டு , எப்படி இருக்குன்னு கேட்கலாம்னு ஒரு பாட்டைக் கேட்டேன்


முதல் பாட்டிலே , குரல்களைக் கேட்டுட்டு இரண்டு பேருமே ஆண்கள் ன்னு தான் நினைச்சேன். ஒருத்தவங்க பேர் பெண் பேர் . இதிலே ஒரு குறிப்பு வேற கீழே. ' 'இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாட விரும்புபவர்கள் எங்களிடம் இதைக் கேட்டுக் கற்றுக் கொள்ளலாம். '


'இவங்க பாட்டை க் கேட்டுக் கத்துக்கிட்டா நமக்குத் தெரிஞ்ச கொஞ்ச நஞ்சம் தமிழும் மறந்து போயிடும் போலிருக்கே ' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.


சரின்னு அடுத்த பாட்டைக் கேட்டேன் .

' நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இசைச்செல்வனும் எனது மனைவி இசைச்செல்வியும் இணைந்து பாடும் பாடல், நாங்கள் கோவையில் வசிக்கிறோம், இதற்கு முன்பு மதுரையில் வசித்தோம் விரைவில் சென்னையில் வசிக்க விருப்பம் ' என்று சொல்லிக் கொண்டே முடிவில் பாட்டில் வசிக்க , இல்லை , பாட்டை வாசிக்க ஆரம்பித்தார்கள். நான் பொறுமை இழந்து , இன்னொரு பாட்டை அழுத்தினேன் ,


அந்தப் பாடகரோ விளக்கம் எதுவும் கொடுக்காமல் பாட ஆரம்பித்து விட்டார். அவசரம். நாங்கள் அழுத்தும் போதே பாதிப் பாட்டு போய் விட்டது . 'ரெகார்டிங் பண்ணாமலேயே பாதிப் பாட்டு பாடி விட்டு மீதி பாட்டைத்தான் ரெக்கார்ட் பண்ணி இருக்கிறார்' என்று புரிந்து கொண்டேன் .


ஏதோ புரியாத மொழி போல் தோன்றியது, கூர்ந்து கவனித்த பின் அது தமிழின் சாயலில் இருப்பதை புரிந்து கொண்டேன் . பல மொழிகள் தெரிந்தவர் போலும். மூன்று லகரங்கள் இரண்டு ரகரங்கள் தாண்டி அவர் ஏழெட்டு லகரங்களும், அஞ்சாறு ரகரங்களும் தாய் மொழிக்குத் தந்து மொழியை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.


அடுத்த பாடகர் பாடுவதற்கு முன் பாட்டின் சரித்திரம் பூகோளம் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டே போனார். நான் பொறுமை இழந்து அடுத்த பாட்டுக்குப் போனேன் .


இவர் கர்நாடக ராக விளக்கம் ஒன்றை விபரமாகச் சொல்லி விட்டு ஆரம்பித்தார். ஆலாபனை என்ற பெயரில் ஆ என்று வாயைத் திறந்தவர் வாயை மூடவில்லை போலும். வாய்க்குள் ஈ ஒன்று புகுந்து இம்சை செய்ய ஆரம்பித்ததால் இரும ஆரம்பித்து விட்டார்.


சரி இதுவும் வேணாம் என்று இன்னொரு ஆடியோவை அழுத்தினேன் . அங்கே தடா , புடா என்று ஒரே சப்தம். அது என்னவோ ஸ்மைல் ன்னு இருக்காமே , அதுலே எல்லோரும் ஸ்மைல் பண்ணிக்கிட்டு பாடணும் போல, அதிலே மியூசிக் வருது ,இவரு குரலையே காணோம். பாட்டு முடியப் போகுது , இவர் பாடவே இல்லை.


முடியும் நேரத்தில் மியூசிக் நிற்க இவர் குரல் மெல்லிசாக , ' இது வரை உங்களிடம் பாடி மகிழ்வித்தது ' இன்னிசைக்குரலோன் ' என்றது. ஏதோ ரயில் பிரயாணத்தில் காசு கேட்கிறதுக்கு முன்னாலே வர குரல் மாதிரி. அது சரி. முன்னாலே இந்தக் குரல்லே தான் பாடியிருக்காரு , அந்த ஸ்மைல் சப்தத்தில் நமக்கு கேட்கலேன்னு அப்பத்தான் புரிஞ்சது . என்ன , அது ஸ்ம்யூல் லா. ஏதோ ஒண்ணு விடுங்க .


சரி இன்னிக்குப் போதும். நாளைக்குப் பார்த்துக்கலாம்னு போனா, முதல் நாள் நான் கேட்ட அந்தப் பாட்டுகளைக் கேட்டுட்டு, மத்தவங்களும் தைரியமா பாடிப் போட ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க போட்ட ஒரு பாட்டு, ஒரே பாட்டை நாங்க தேடவே முடியாத நிலைமை.அழுகை அழுகையா வர்றது .


போதும்னு அந்தக் குழுவை விட்டு வெளியே வந்துட்டேன். இதோ இன்னொரு நண்பர் கூப்புடுறார். அவரோட க்ரூப்பிலே நமது கவிதைகள் எல்லாம் போடலாமாம். தமிழிலே எழுதத் தெரிஞ்சா போதுமாம்.

------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பூட்டிய வீடு - கவிதை

 பூட்டிய வீடு - கவிதை 

--------------------

இந்த வீடு முன்பொரு நண்பகலில்

திறந்து இருந்தது


திண்ணையில் ஆழாக்கு நெல்லுக்கு

அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்

அரைக்கீரையை அம்மாச்சியிடம் கீரைக்காரி


முன்ஹாலில் கட்டிலில் இருந்து வரும்

மெல்லிய குறட்டை மூக்குப் பொடி வாசத்தோடு

தாத்தாவிடம் இருந்து


அடுத்த ஹாலில் தாயம் ஆட்டத்தில்

குத்து வாங்கி காய்களை இழந்து கொண்டிருந்தான்

அப்பத்தாவிடம் பேரன்


அடுத்த சிற்றிடத்தில் தவிட்டுப் பானைக்குள்

குஞ்சு பொறித்ததா கோழி என்று

கூடையைத் தூக்கிப் பார்த்திருந்தாள் பேத்தி


நடு முற்றத் தோட்டத்தில்

கல்லுக் கட்டாத காரணத்தால்

வளைந்து நெளிந்தது புடலை


மதிய உணவு சமைத்துப் படைத்த திருப்தியில்

களைத்துத் தூங்கியது

அடுப்படி


கொல்லைப் பக்க வேப்பமரத்தில்

வெயிலுக்கு ஒதுங்கி இருந்தன

குருவிகளும் மைனாக்களும்


உள்ளே போய்ப் பார்க்கத்தான் ஆசை

கதவு பூட்டிக் கிடக்கிறதே


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 27 மே, 2025

பாட்டிப் பனைமரம் -கவிதை

 பாட்டிப் பனைமரம் -கவிதை 

-----------------------------


பார்த்த மனிதர்க்கெல்லாம்

பாராத முகங்கள்


பனை மரம் ஒன்று மட்டும்

பாசத்தோடு பார்த்தது


பதனியும் நுங்கும்

பனங்காயும் கிழங்கும்


ஊட்டி வளர்த்துவிட்ட

பாட்டிப் பனைமரத்தின்


பேத்தி அதுவென்று

அப்போது புரிந்தது


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தரிசனம் - கவிதை

 தரிசனம் - கவிதை 

--------------


உலகப் புகழ் பெற்று விட்ட

திருவிழாக் கூட்டத்தில்


உள்ளூர் ஜனங்கள் எல்லாம்

வரிசையில் தெருவில் நின்று


அம்மன் தரிசனத்திற்கு

வேர்த்திருந்து காத்திருந்தோம்


பேத்தி போன இடம்

கீழடியின் பொருட்காட்சி


ஜிகர்தண்டா வாயோடு

பழங்காலத் தரிசனத்தில்

--------------- நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை ------------------- மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்ட...