அன்புள்ள அப்பா - உத்தரகோசமங்கை உறவுகள் - 10
----------------------
'அப்பா கடலை மிட்டாய் வேணும்பா ' அப்பா பக்கத்து கிராமத்தில் இருந்து வாரா வாரம் உத்தரகோசமங்கை வரும்போது எல்லாம் அவன் கேட்கும் வழக்கம் .
கேட்டது உடனே கிடைக்கும் . அதிகமாகவும் கிடைக்கும் , ஊர்த் திருவிழா நேரங்களில் அப்பாவோடு சேர்ந்து தெருவில் பலகாரக் கடைகளைச் சுற்றி வரும்பொழுது கடலை மிட்டாய் ,பொரி உருண்டை, வேர்க்கடலை ,காராச்சேவு, சீனிச்சேவு என்று வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பார் . அது தவிர பக்கத்து கிராமத்திலிருந்து வெறும் கையுடன் வரமாட்டார். பனை மரத் தாய் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு தின்பண்டம் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அதுவும் அந்த கிராமத்தில் அப்பாவுக்கு ஏகப்பட்ட நிலங்கள். அந்த வயல்களின் ஓரங்களில் நிமிர்ந்து நிற்கும் பனைமரங்கள் ஏராளம். அவை அனைத்தும் அவருக்கே சொந்தம். அவற்றை பனை ஏறுபவர்களிடம் குத்தகைக்கு விட்டு விட்டு , அந்தப் பனைப்பொருட்களில் பங்கு கிடைக்கும்படி செய்து கொண்ட ஏற்பாடு இருந்தது . சில நேரம் பனங்கிழங்கு, சில நேரம் பனங்காய் சில நேரம் நுங்கு, பெரும்பாலான நேரம் பதனி என்று ஒவ்வொரு முறை அவர் வரும்போதும் அந்தந்த காலத்திற்கேற்ற அந்த பனைமரத்து உணவு வகைகள் வந்து கொண்டே இருக்கும் .
அதுபோன்று அவன் விடுமுறை நேரங்களில் கிராமத்துக்குச் சென்று தங்கியிருந்த பொழுதெல்லாம் அவன் வந்துவிட்டால் உடனே அதிகாலையில் எழுந்து சென்று ' ஒற்றைப்பனை பதநீர் ருசி 'என்று ஒரு இடத்திற்கு சென்று அந்தப் பதநீரை வாங்கி வருவார் .நுங்கு வாங்கி வந்து அதை கம்பரிச்சு அதாவது வெட்டி அதைத் தோண்டி பதனியில் போட்டு அதைக் கலக்கிக் கொடுத்து அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரசிப்பார்.
அதுபோன்று அந்த நுங்கின் கண்களிலே கட்டை விரலை வைத்து அப்படியே உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடக்கூடிய முறையையும் சொல்லிக் கொடுப்பார் . பனங்காயைச் சுட்டுக் கொடுப்பார் .ஒரு சீசனில், மம்பட்டியோடு சென்று , சடச்சி அம்மன் கோயில் பொட்டலில் முளைக்கப் போட்ட பனங்காய், கிழங்காய் வெளிவர, தோண்டி எடுத்து பனங்கிழங்கை அம்மா இட்லிச் சட்டியில் அவிக்க இவர் நெருப்பில் வாட்டி சுட்டுக் கொடுப்பார்.
இப்படி கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் தினசரி ஏதாவது தின்பதற்கு என்றே கொடுத்துக் கொண்டே இருப்பார் . அந்த வயதில் அவனுக்கும் அவ்வளவு பசி. சில நாள் ராமநாதபுரம் குறுக்குப் பாதையில் நடந்தே சென்று வாங்கி வரும் மாளிகைச் சாமான்களோடு, நகரத்து தின்பண்டங்களும் வரும். வயக்காட்டில் அவர் வரும்போதே ஓடிப்போய் ஒரு பையை வாங்கிக் கொண்டு வந்து அதிலிருக்கும் லட்டு, குலோப் ஜாமுன்.மிக்ஸர் எல்லாம் பிரித்துச் சாப்பிடுவதில் அவனுக்கும் அவன் தங்கைக்கும் ஆர்வம் .
இதுபோல் அவர்களை மட்டுமா கவனித்துக் கொண்டார். ஒரு சிறந்த விவசாயியாக நிலங்களைக் கவனித்து கொண்டார். விவசாய வேலைகள் அத்தனையும் தெரியும். விவசாயத்தில், உழுவது, விதை விதைப்பது ,நாற்று நடுவது களை எடுப்பது , உரம் போடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, பூச்சி மருந்து அடிப்பது கதிர் அறுப்பது , ஒப்படி போடுவது , வைக்கோல் அடிப்பது, மாடு ஓட்டுவது, நெல் மூட்டைகளை சந்தையில் விற்று வருவது, நெல் அவிப்பது, காய வைப்பது , மில்லில் அரைப்பது, அரிசி மூடை தூக்கி வருவது , என்று அவர் செய்த எல்லா வேலைகளையும் , வயக்காட்டு வரப்பிலும், வீட்டிலும் மில்லிலும் சேர்ந்தே இருந்து பார்த்து வந்த அவனுக்கு ஒரே வியப்பு. பெருமையாக இருக்கும். அவனும், சில நேரம் அவரோடு சேர்ந்து வயலில் சேற்றில் இருந்து கொண்டு களையோடு சேர்ந்து பயிரையும் பிடுங்கி செல்லத் திட்டு வாங்கியது உண்டு.
சில நேரம் அவரோடு சேர்ந்து கண்மாய்க்குச் சென்று மீன் பிடிப்பது உண்டு . கழுத்தளவு ஆழத்தில் நின்று கொண்டு அவருடைய வேஷ்டியை அவர் ஒரு பக்கமும், அவன் ஒரு பக்கமும் நின்று பிடித்து அள்ளிக்கொண்டு வந்து கரையில் இருக்கும் கூடையில் கொட்டினால் துள்ளும் கெண்டை, கெளுத்தி மீன்கள்.
மீன் குழம்பு ,கறிக்குழம்பு அவருக்கு மிகவும் பிடிக்கும். மற்றபடி . அரிசி சோறு சாதம் குவித்து வைத்து தான் சாப்பிடுவார் . சாதத்தில் குழம்பை ஊற்றி அவர் சாப்பிடுவதை பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கும். அது தவிர இனிப்பில் அதிக ஆசை. கருப்பட்டியை அப்படியே கடித்துச் சாப்பிடுவார். அந்த அரிசியும் கருப்பட்டியும் தான் அவர் உடலில் ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றி அவர் காலையே எடுக்கும் நாள் வரும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.
அவரோடு சேர்ந்து பதினி காய்ச்சும் இடத்திற்குச் செல்வான். சட்டிகளில் பதனியை ஊற்றி காய்ச்சி அது கருப்பட்டி ஆகின்ற பொழுது சுற்றுப்புறம் சிதறும் அந்த கருப்பட்டி சில்லுகள் தனி ருசி .அதை எடுத்துக் கொடுத்து அதை சுவைக்க வைப்பார். அவரும் அவர் அக்காவும் சிறு வயதில் வீட்டுப் பானையில் உள்ள கருப்பட்டியை எல்லாம் கடித்துக் கடித்து சாப்பிட்ட கதை சொல்லுவார். கம்பங்களிக்கும், கேப்பைக்கூழுக்கும் , கருப்பட்டி கடித்துக் கொண்டு சாப்பிடுவது ஒரு தனி ருசி என்பார். அவனையும் சாப்பிட வைப்பார்.
கிராமத்தில் இருக்கும்போது அவனுக்கும் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பவர். அப்படித்தான் அவனது இளம்பிராய வாழ்க்கை .
அதைத் தவிர சினிமா ஆசை அதிகம் அவருக்கு, சிறுவயதில் இருந்தே ராம்நாட் , பரமக்குடி சென்று சிவாஜி எம்ஜிஆர் படம் பார்த்து வந்து கதை சொல்வார். அவனுக்கு சினிமா ஆர்வத்தை ஊட்டியவர் .உத்தரகோசமங்கையில் பள்ளி நடந்து கொண்டிருக்கும் பொழுதே, சாயந்திரம் பள்ளி மூடுவதற்கு முன்பாகவே ஓரமாக வந்து நின்று விடுவார் .அவரைப் பார்த்தவுடன் , ஆரம்பப் பள்ளி ஆசிரியரும், ' போடா, உங்க அப்பா வந்துட்டாரு ' என்று அவனைக் கிளப்பி விடுவார் .
இருவரும் சேர்ந்து ,பின்பு , சொர்ணாம்பாள் பஸ்ஸில் சென்றார்கள். ஆரம்ப காலத்தில் நடந்தே குறுக்கு பாதையிலே கூட்டிச் செல்வார். ராமநாதபுரம் சென்று சண்முகா தியேட்டரில் முதல் ஷோ ஒரு படம் , அடுத்து குறுக்குப் பாதையில் நடந்து ராஜாராம் தியேட்டர்ஸ் செகண்ட் ஷோ இன்னொரு படம் பார்த்துவிட்டு அங்கிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுத் தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து முதல் பஸ் பிடித்து உத்தரகோசமங்கையில் வந்து அவனை விட்டு விட்டு அவர் கிராமம் நடந்தே திரும்பி விடுவார். இப்படி சினிமா தின்பண்டம் என்பதை நினைத்தாலே அவருடைய நினைவு சேர்ந்தே வருகிறது அவனுக்கு .
அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்த நாட்கள் சிவகங்கை கல்லூரியில் பி யு சி சேர்ந்த நாட்கள் .அப்பொழுது மணி ஆர்டர் பார்மில் ஒரு இடத்தில் நுணுக்கி நுணுக்கி எவ்வளவு எழுத முடியுமோ ' வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளி, உடம்பைப் பார்த்துக்கோ, நல்லா சாப்பிடு ' என்றெல்லாம் எழுதி இருப்பார். படிக்கச் சொல்லி ஒரு வார்த்தை கூட இருக்காது. அவன் நன்றாகக் படிப்பவன் , சிறுவதில் இருந்து எல்லா வகுப்பிலும் முதல் ரேங்க் என்று தெரியும் . உடல் நலம் பற்றிய அறிவுரைகளோடு ஐம்பது ரூபாய் அவ்வப்போது வரும். அதன் மதிப்பு அப்போது அதிகம். அது அவர் வளர்த்து விட்ட அவனின் சினிமா ஆசைக்கே சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டரிலும் அமுதா டாக்கீஸிலும் பாதி செலவாகிப் போகும்.
அவனது இளவயதிலேயே பதினெட்டு வயதிலேயே அவனுக்கு மணமுடித்து வைத்ததிலும் அவரது பங்கு மிகப் பெரியது. மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரைக் குளப் படிக்கட்டுகளில் நடந்த உரையாடல். கிராமத்தில் அடிக்கடி பஞ்சம் வந்து கொண்டு இருந்ததாலும், அவனது பாட்டனார் , தாத்தாக்களின் நிலங்கள் குழந்தைகளின் திருமணங்களுக்கு விற்கப்பட்டு சுருங்கி விட்டதாலும், அவனது மேற்படிப்பு ஆசைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில் அவர் இருப்பதாலும் அவனது அத்தை பெண்ணை மணம் முடித்தால் , அவன் விருப்பப்படி அவனைப் படிக்க வைப்பார் மாமனார் என்ற பல காரணங்களை விரிவாக விளக்கிச் சொல்லி அவனைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததில் பொற்றாமரைக் குளத்திற்கும் பங்கு உண்டு .
அவன் அத்தை மகளை அவ்வப்பொழுது பார்த்து மனதில் ஆசை வளர்த்துக் கொண்டிருந்தாலும் சிவகங்கை கம்மாய் கள்ளி செடிகளில் அவள் பெயரை எழுதி பால் வடிய வைத்திருந்தாலும், ஒப்புக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் மறுத்துப் பேசினான். 'படிப்பு கெடும், வேலை இல்லாமல் எப்படி ' என்றெல்லாம் .
'இன்னும் படிப்பதற்கு உனக்கு மிகவும் ஆர்வம் இருக்கிறது. நீ இதற்குப் பிறகு மருத்துவமோ என்ன வேண்டுமானாலும் படிக்கலாம் அதற்குரிய பண வசதி எல்லாம் உனது மாமாவிடம் தான் இருக்கிறது எங்களால் அந்த அளவு படிக்க வைப்பதற்கு முடியாது. அது தவிர எங்களுக்குள் இருந்த சண்டை தீர்ந்து திருநீறு பூசி சேர்ந்தாய் விட்டது. உன் பாட்டா, தாத்தா , அப்பத்தா எல்லோருக்கும் இதில் ஒப்புதல் உண்டு' என்று பேசப் பேச மீனாட்சி அம்மன் உள்ளிருந்தபடி சிரித்தபடி கேட்டுக் கொண்டு இருந்தாள்.
அதன் பிறகு அவன் மதுரையில் மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிட்டான் , அவ்வப்பொழுது ஊருக்குச் செல்வதும் குறைந்தது . அப்பாவிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்தது .அந்த நெருக்கம் மறுபடியும் வர ஆரம்பித்தது அவன் இந்தியன் வங்கியில் சேர்ந்த பிறகு தான் , அப்பாவிற்கு அவர் அனுப்பியது போல் அவன் மணி ஆர்டர் அனுப்ப ஆரம்பித்த பிறகு தான் .
அவனுக்கு வேலை கிடைப்பதற்கு முன்பு , அவரோ , தனது விவசாயத்தில் கவனமாகவும் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்து கொண்டிருந்தார். மதுரைக்கு வரும் பொழுதெல்லாம் ரயிலிலேயே அரிசி மூட்டை ,மிளகாய் மூட்டை, புளி மூட்டை என்றெல்லாம் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம் . பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் இடத்திலே மாமனார் கொடுப்பது போல் மகனைக் கட்டிக் கொடுத்த இடத்திலே அவரும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டு இருந்தார். மதுரையில் சொந்தங்கள் வீடுகளுக்குச் செல்லும் போதெல்லாம். அங்கே கொல்லையில் தோட்டம் இருந்தால், அந்த விவசாய வேலைகளை ஆவலுடன் செய்து போவார். 'தான் விவசாயி' என்ற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு.
இதற்கு நடுவில் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதற்கு நிலம் விற்பதற்கு அவனும் சென்று கையெழுத்து போட்டு வந்தான். அவன் வேலைக்குச் சேர்ந்த பின்பு , கூத்தாநல்லூர் சென்னை எல்லாம் வந்து இருந்து சென்றார். அவரைக் கூட்டிச் சென்று கோயில்கள், பீச் , என்று காட்டி வந்ததில் மிகவும் மகிழ்ந்தார். ஹோட்டல்களில் அவர் சாப்பிட்டிராத தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தான். சினிமாக்களுக்கு கூட்டிச் சென்றான். அவர் மிகவும் மகிழ்ந்தார்.
அப்போதே அவருக்கு சர்க்கரை வியாதி அதிகமாகி சிரமப்பட, சென்னையில் மருத்துவம் பார்த்து தேறி திரும்பினார் கிராமத்திற்கு. கிராமத்தில் முளைக்கொட்டு உற்சவத்தில் ராமர் வேடம் போட்டு ஒயிலாட்டம் ஆடுவது , பாடுவது என்று வாழந்த வாழ்க்கையை அவர் விட விரும்பவில்லை. அவனது மணி ஆர்டர் கிராமத்திற்குச் சென்று கொண்டு இருந்தது .
ஆனால், அவன் , சென்னை, ஜோத்பூர் என்றெல்லாம் சென்று வேலை பார்த்து வருவதை கிராமத்தில் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார் . கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை நோயால் அவர் உடல்நிலை தளர, அப்பா அம்மாவை அவன் சென்னையில் தனது வீட்டில் அழைத்து வந்து வைத்து மருத்துவம் பார்த்துக்கொண்டு , அவன் மட்டும் பெங்களூர் சென்று வேலை பார்த்து வந்தான். கடைசி மகனுக்கு மணம் முடிக்காமல் சென்று விடுவோமோ என்ற பொறுப்பும் , பயமும் அவருக்கு இருப்பதை அறிந்து, அதற்குரிய முயற்சிகளில் அவனும் அவன் மனைவியும் ஈடுபட, அதைப் பார்த்து அவருக்கு ஒரு திருப்தி . ஆனால் தம்பி திருமணம் நடந்தது அவர் காலத்திற்குப் பிறகே .
சர்க்கரை நோய் அதிகமாகி காலில் புண்கள் வந்து மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலைமை அவருக்கு அப்போது . அவன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் மோகன் சர்க்கரை ஆஸ்பத்திரியில் காண்பித்து அதற்குரிய மருந்துகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து தேறி வந்தார். தெளிவும் வந்தது .அப்போதுதான் அவன் அமெரிக்க செல்லக்கூடிய வாய்ப்பு வந்தது .
அவன் பெங்களூர் செல்வதே பிடிக்காத அவர் அமெரிக்கா செல்ல அனுமதிக்க மாட்டார் என்று அவரிடம் சொல்லாமலே அவன் அமெரிக்கா சென்று விட , செப்டெம்பர் பதினொன்றில் உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட தினத்தன்று அவன் அங்கே இருப்பதும், தப்பித்ததும் அவருக்குத் தெரியப்படுத்தப் பட்டது அவனது மனைவியால். அவரின் கோபம் எப்படி இருந்திருக்கும் என்பதை அவனால் உணர முடிந்தது. அந்த நேரம் தான், அவரின் இடது முழங்காலுக்கு கீழ் பகுதி சர்க்கரை நோயால் எடுக்கப்பட்ட சமயம். அவன் வராத காரணம் இப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது . வருத்தமும் கோபமும் கலந்து அவர் கொதித்துப் போனதாக விபரம் தெரிய வந்தது .
அவனுக்கு எச் ஒன்று விசா வந்து குடும்பத்தையும் கூட்டிச் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்த நேரம் அது . அப்பா அம்மாவுக்கு மதுரையில் வீடு பிடித்து சொந்தங்களிடம் சொல்லி பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டிருந்த நேரம். அவரின் வருத்தம் அவனுக்கு அமெரிக்க வேலையின் ஈடுபாட்டைக் குறைக்கத் தொடங்கியது. நியூயார்க்கின் ஹட்ஸன் நதியின் அக்கரையில் , ஜெர்சி சிட்டியில் நண்பன் ஒருவனிடம் இதைப் பற்றிய கலந்துரையாடல் ஓர் இரவு நேரத்தில் . அவன் நண்பனோ அங்கேயே தங்கி இருப்பதில் ஆர்வம் கொண்டவன். வருங்காலம் ,பண வரவு, குடும்ப முன்னேற்றம் என்று அவன் கூறிய அறிவுரைகளை மறுத்து முடிவெடுத்தான் திரும்புவது என்று . தொடர் நிகழ்வுகளில் சில சங்கடங்கள். முடிவு இவன் முடிவுதான் .
திரும்பி வந்தான் . சென்றான், பார்த்தான், காலின் அரைப்பகுதி இழந்த அவர் அழுகையை. அத்துடன் சேர்ந்த அவர் மகிழ்ச்சியை . அது போதும் அவனுக்கு . காலுக்கு ஜெய்ப்பூர் கால் மாட்டி நடப்பதில் ஆர்வம் காட்டினார். தைரியம் கூடி , மற்ற சொந்தங்களையோடு சேர்ந்து இருக்க கிராமம் திரும்ப விரும்பியவரை மறுத்து . மதுரைச் சொந்தங்களோடு இருந்தால் போதும் என்று அவரையும் அம்மாவையும் மதுரையில் வீட்டில் தங்க வைத்து, பெங்களூரில் ரூமில் இருந்தபடி, சென்னைக்கும் மதுரைக்கும் வாரா வாரம் சென்று இரு குடும்பங்களையும் பார்த்துக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு முறையும் , மதுரை சென்று பார்த்து விட்டு அவன் திரும்பும் போது அவர் பார்வையில் தெரிந்த வருத்தம், கலங்கிய கண்கள். தைரியம் சொல்லி திரும்ப வேண்டிய வேலை , பொறுப்பு. குடும்பத்தின் எதிர்காலம், சம்பளம்.
பெங்களூரில் ஒரு நாள். மதுரை சித்தப்பாவின் போன். 'அப்பா சீரியஸ், உடனே கிளம்பி மதுரை வா ' . சென்றான். அப்பா, அங்கே சேரோடு சேர்ந்தபடி , நெற்றியில் குங்கும சந்தனப் பொட்டோடு , கழுத்தைத் தூக்கிக் கட்டப்பட்ட துண்டோடு . வேட்டி சட்டையோடு , அந்த நிலையில் அவனைப் பார்க்க விரும்பாமல் ,மூடிய கண்களோடு, கழுத்தில் மாலையோடு உட்கார்ந்திருந்தார் . இருப்பதுபோல் . ஆனால் இல்லாமல் . அவனுக்கு அழுகை வரவில்லை.
காரியங்கள், சொந்தங்கள். சுடுகாடு , அவர் முகத்தில் வறட்டி வைக்கும் நேரம்.' இவ்வளவுதானா , இது தான் வாழ்வா, இனி அவர் இல்லையா . இந்த முகம் தெரியாதா இனி ' அப்போதுதான் அழுகை முட்டி வர, பக்கத்தில் இருந்த சித்தப்பா பையனைக் கட்டிக் கொண்டு அழுதான். 'அப்பா , கடலை மிட்டாய் வேணும்பா '
--------------நாகேந்திர பாரதி
இத்துடன் 'உத்தரகோசமங்கை உறவுகள்' தொடர் நிறைவு பெறுகிறது
------------
My Poems/Stories/Articles in Tamil and English







