சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு
----------------------------
நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே.
ஆதி மண்ணின் மணமும், ஆதி மனிதர் மனமும் அறிந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரின் கதை எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது அவரின் பிரதம சீடர் குமார் அம்பாயிரம் அவர்களின் 'ஈட்டி'சிறுகதை.
இரண்டு நண்பர்களின் மலைப்பாதைப் பயணத்தில் நமக்குக் காணக் கிடைப்பது , மலையின் இயற்கை வளமும் அந்த மலை வாசிகளின் இய்ற்கைக் குணங்களும் . அவர்களின் வாழ்க்கை முறையும் ' குர்தை' பாஷையும் பிடித்த நண்பன் அவர்களோடே அங்கே தங்கி விட்டான். நாயகன் தனது 'குதிரை ' பாஷையைத் தக்க வைத்துக் கொண்டு ஈட்டி முனையோடு மலையில் இருந்து இறங்கி விட்டான். இதற்கு இடையில் கதையில் நமக்குக் கிடைக்கும் காட்சிகளும் , பேச்சுக்களும் நாம் கற்பனை செய்து இராதவை. அவற்றில் ஒன்றிரண்டை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் அவர்கள் ஏறுகின்ற அந்த மலைப்பாதையில் கிடைக்கும் காட்சிகள் கவிதைக் காட்சிகள் .
செங்குத்தான பாறைகளையும் முகடுகளையும் ஏறிக் கடந்ததும் அங்கே இன்னொரு பூமியைக் கண்டோம். காற்று உதறிச்செல்லும் கம்பளத்தைப் போல் உயர்ந்தும் தாழ்ந்தும் பரந்து விரிந்த பிரதேசம் எங்கள் முன் இருந்தது.
ஏற்கனவே இருள் துவங்கிவிட்டது. நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப் போல் நட்சத்திரங்கள் முளைவிடத் துவங்கின.
கண் விழித்தவுடன் காலையில் தீ வளையங்கள் தோன்றிய திசையை நோக்கினோம். சாம்பலின் சுவடுகூட கண்களுக்கு அகப்பட வில்லை. தடையின்றி வீசும் காற்றில் மலைவெளியில் நாங்கள் நடக்கத் துவங்கினோம். ஆமைகளின் முதுகைப்போல் முகடுகளும் அகடுகளும் அதன் எல்லை எதுவென அறிய முடியாதபடி முடிவற்று வந்து கொண்டு இருக்கின்றன.
இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுக்கொள்ள முடியாத இடைவெளியில் நிற்கும் மரங்கள், எழுந்து நடக்கத் துவங்கி எதையோ கண்டு நின்றுவிட்ட குழந்தை களைப்போல் வெட்ட வெளியில் எதிர்கொண்டு நின்றன.
பிரமாதமான உவமைகள். ஸ்ரீ நேசன் அவர்கள் சொன்னது போல் கவிஞராய் இருந்து எழுத்தாளராய் மாறியவர் என்று நமக்குக் காட்டும் வரிகள்.
இவ்வாறு மலை ஏறி அவர்கள் ஒரு மலைக் கிராமத்தைச் சென்றடைகிறார்கள்.
‘தோற்றத்தில் நம்மைப் போலவே மனிதர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் எங்களை அரசனைப் போல் வரவேற்கவுமில்லை, அடிமைகளைப் போல் புறக்கணிக்கவுமில்லை. வயலுக்குப் போய் திரும்பிவரும் தம் குடிகளைப் போன்றே குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் தலை உயர்த்திப் பார்த்தார்கள் எங்களை.’
அந்த ஆதி மக்களின் எளிமையை நம் கண் முன் கொண்டு வரும் வார்த்தைகள்
அடுத்து விரிவது அந்த மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை.
ஓணான் கொடிகளால் முடைந்த கூடையில் சருகுகளையும் காய்ந்த சுள்ளி களையும் கொண்டு கிராமத்தைச் சுற்றி ஒரு வட்டம் போட்டனர். காய்ந்த மூங்கில் கணுக்களை உரசி வெளியிட்ட தீயை இலைகளில் புகைய விட்டனர். பசிய சாணமும் மலை மண்ணும் பிசைந்து பூசப்பட்ட திண்ணை களில் கூடியமர்ந்து கதைகள் கூறிக்கொண்டோம். எங்கள் கதையில் வந்த குதிரையை நாங்கள் குதிரை என்றோம். அவர்கள் கதையில் வந்த குதிரையை ‘குர்தை’ என்றார்கள்.
இரண்டுமேடுகள் சரியுமிடத்தில் தோன்றி பெருகும் ஓடையை மிக அகலப்படுத்தி நெல் பயிரிட்டார்கள். தண்ணீர், வயலாக மாறிவிட்ட ஓடையில் குழம்பி, நெற்பயிரின் கணுக்கால்களை நனைத்து சாந்தமுற்று வழிந்து வெளியேறுகின்றன.
குன்றுகளில் சரிவிலும் பாறைகளின் இடுக்கிலும் சாமையும் வரகும் உடல்வளைந்து நின்றன. வரகின் கதிர்களை நெருப்பில் வாட்டிக் கொறித்தோம். பச்சை வரகின் பால் சுவையும் வாட்டிய சுவையும் பற்களுக்கிடையே பிழியப்பட்டு அந்த வாழ்வின் சுவையாக இருந்தது.
அந்த இயற்கையை என்னமாய் நம் கண் முன் கொண்டு வருகிறார் ஆசிரியர்
விதைப்பில் உடனிருந்தோம். அறுவடையில் பங்கெடுத்தோம்.
காலம் ஓடுவதைக் காட்டும் பளிச் வார்த்தைகள் ஆசிரியரிடம் இருந்து .
நாயகனின் நண்பனுக்கு அந்த இடமும் அவர்களின் வாழ்க்கை முறையும் பிடித்துப் போகிறது . அவன் குதிரையை அவர்களை போல் ' குர்தை ' என்று அழைக்க ஆரம்பித்து விட்டான். நாயகனோ ' குதிரை ' என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறான்.
அந்த ஆதிக்குடிகளின் உடல் அமைப்பைப் பற்றி ஆசிரியர் விவரிக்கும் இடம் எல்லாம் நமக்குத் புதுமையாக இருந்தாலும், அங்கே போய் வந்தவர்களுக்கு பழைமையின் முகத்தைக் காட்டும் இடங்கள். நீங்கள் படித்துப் பாருங்கள்.
நோய்களை அவர்கள் அணுகும் விதமும் மிகவும் வித்தியாசம்.
வெப்பக் காற்றில் பிறப்பெடுக்கும் வைசூரிகளும் முளைவிடும் சீழ்கட்டிகளும் வாடைக்காற்றில் ஊடுருவி வரும் துர்ச்சிந்தை மற்றும் தீயக் கனவுகளில் விளைவென்றார்கள் அவர்கள்.
மனிதர்களை அண்டிப்பிழைக்க முடியாத பருவத்தில் துர்சிந்தையும் தீய கனவுகளும் எட்டிமரத்தில் போய் வசீகரமான கனிகளாக வாழ்கின்றன.
இன்னமும் நம் கிராமங்களில் பார்க்கும் வேப்பிலைப் படுக்கை, அம்மனுக்கு மாவிளக்கு போன்ற நிகழ்வுகள் ஞாபகம் வருகின்றன .
இவர்கள் அங்கே வந்த நாட்களுக்கு பிறகு ஒருவன் மெதுவாக நொண்டத் தொடங்கி இப்போது படுக்கையாகிவிட்டவனின் உடலில் புகுந்திருக்கும் தீயக் கனவை விரட்டும் சடங்கு உற்றார் சூழ, வளர்பிறையின் மூன்றாம் நாளில் நடக்க இருப்பதாக அறிகிறார்கள்.
நோயுற்ற மனிதனைத் தூக்கி வந்து இறகுப் படுக்கையில் படுக்க வைத்தார்கள், .
மூத்த தாயார் ,பிதற்றத் தொடங்கி இருக்கும் பிரக்ஞையற்ற உடலருகே நெருங்கி கண்களை மூடியபடி ஒவ்வொரு எலும்பினூடாகவும் சதையின் இடுக்குகளிலும் விரல் நுழைத்து அவனுள் புகுந்திருக்கும் தீய கனவினைத் தேடினாள். கண்களை மூடியபடி இடது தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையிலே அவள் விரல்கள் சிறிது நின்றது. அங்கே எந்த காய வடுவும் நோயின் மூலக்குறியும் தென்படவில்லை. தாயாரு மெதுவாக எழுந்து நின்றாள். மூண்ட தீயின் பிரகாசம் அவள் முகத்தைத் தீவிரமாக்கியது. அவள் அறிவித்தாள். இந்த உடலுக்குள் உடையாத ஈட்டியின் முனை இருக்கிறது.
மூப்பன் எழுந்து சப்தமாக “இவனை யார் குத்தியது? குத்தவில்லை யென்றால் யாருடைய ஈட்டி முனை காணாமல் போயுள்ளது? நடுவே வாருங்கள்” என்றான்.
கதையின் தலைப்பான ஈட்டியின் கதை இங்கே தொடங்குகிறது
அப்போது இளைஞன் ஒருவன் வட்டத்திற்கு உள்ளே வந்து வணங்கி “தொலைந்து போனது எனது ஈட்டி முனைதான், அது தொலைந்தது நிஜத்தில் அல்ல, நான் கண்ட கனவில்” என அனைவரும் கேட்கும்படி தான் கண்ட கனவினைக் கூறத் தொடங்கினான்.
“இன்னும் பிடுங்காத முற்றிய ஆலிவல்லிக்கிழங்கால் பூமி வெதுவெதுப்படைந்திருந்த இரவில்- (என்ன ஒரு பிரமாதமான மலைக் காட்சி )- நான், மூக்கன், பொதுக்கன் மூவரும் ஈட்டிகளைத் தூக்கிக்கொண்டு பன்றிகளைத் துரத்திக்கொண்டிருந்தோம். புதர்வளைவில் பன்றிகள் திரும்பும்போது என் ஈட்டி விசையோடு முன்னே பாய்ந்தது.. பன்றிகள் ஓடி மறைந்துவிட்டன. நிலவின் வெட்ட வெளிச்சத்தில் என்னைச் சுற்றி யாருமில்லாத கனவில் ஈட்டி மட்டும் முனை காணாமல் போயிருக்க கம்புடன் தனியே நின்றிருந்தேன்.. அதன் உலோக முனையை மட்டும் காணவில்லை.'
இப்போது தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையில் மூப்பன் கீறினான் சதையை. கண்களை மூடியபடியே இருந்த தாயாரு கிழிக்கப்பட்ட சதையினூடே விரல் நுழைத்தாள். மெதுவான நடனம் வேகமெடுத்தது. குருதிப் பெருக்கெடுத்த சதைப் பிளவிலிருந்து நடுவிரல் அளவு நீளம் இரண்டு விற்கடை அகலமும் கொண்ட ஈட்டி முனையை உருவி எடுத்து தாயாரு யாவர் முன்பும் வாழை இலையில் வைத்தாள்.
கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கற்களாலும் சொற்களாலும் முச்சந்தியில் அவமானப்படுத்தப்பட்ட பெண்ணைப் போல் இலையில் வைக்கப்பட்ட ஈட்டிமுனை இருந்தது.
ஈட்டியைத் தொலைத்தவன் அவனை நீராட்டினான். பின் பிளந்த சதையை சாதுவான சொற் களாலும் கல்லரசன் மரத்தில் கொத்தி மண் கலயத்தில் ஏந்தப்பட்ட பாலாலும் மூடினார்கள். வானத்தின் கீழே கலவி முடிந்து மல்லாந்த உடலைப் போல இலைகளைப் பரப்பி’அதில் அவனைப் படுக்க வைத்தனர்.
பொங்கலிட்ட உணவை உண்டு எல்லோரும் உறைவிடம் புகுந்தனர். ஈட்டியைத் தொலைத்தவன் அவனுக்குக் காவலாக அவனருகிலேயே இரவைக் கழித்தான்.
இன்னமும் நம் கிராமங்களில் கோடாங்கிகள் , குறி சொல்லுதல், போன்ற நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கத்தானே செய்கின்றன.
அந்த மக்களின் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் .
நம்புவதும் நம்பாததும் நம் இஷ்டம்.
அந்த மலை வாழ் மக்களின் பழக்கங்கள் நமக்குப் புதுமையாக இருந்தாலும். பார்த்து வந்தவர் படைத்திருக்கும் கதை என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.
மறுநாள் நாயகன் கிளம்புகிறான். அவனைப் பிரிய விரும்பாத நண்பன் ' 'குர்தை ' என்று சொல்லச் சொல்கிறான். இவனோ ' குதிரை ' என்றே சொல்லி விட்டு விடை பெறுகிறான்.
கதையை முடிக்கும்போது, அங்கே யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்த ஈட்டி முனையை அவனது பயணத்தின் ஆதாரமாக சாட்சியாக நம் முன் வைக்கிறான். . அதன் ஒற்றைக் கண் அவனையும் நம்மையும் பார்க்கிறது. ‘ என்று கவிதை நயத்தோடு முடிகிறது கதை
வித்தியாசமான கதை. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களையும் , நம்பிக்கைகளையும் , மலைப் பாதையின் பயணத்தையும் நம் கண் முன் காட்சியாக்கிக் காட்டும் கதை.
ஆதி மண்ணின் மணம் மணக்கும் பல்வேறு கதைகளை இன்னும் படைத்திருக்க வேண்டிய ஆசிரியர் குமார் அம்பாயிரம் அவர்கள் இந்த மாதம் இறந்த விபரம் அறிந்து மிக்க வருத்தம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வை நடத்தும் அழகியசிங்கர் அவர்கட்கு நன்றி. வணக்கம்.
----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English