மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
---------------------------------------------------------------------------------------------------------
மேன்மை தரும் மன்றம் - யூடியூபில்
மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
---------------------------------------------------------------------------------------------------------
மேன்மை தரும் மன்றம் - யூடியூபில்
தலித் இலக்கியம் - நவீன விருட்சம் நிகழ்வு
-------------------------------------------------------------------------------
சொலவடைகள் - குவிகம் நிகழ்வு
-------------------------------------------------------------
நகைச்சுவைத் திறன் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
-------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவைத் திறன் - யூடியூபில்
தூரத்தில் சென்றவள் - விருட்சம் நிகழ்வில் கவிதை
------------------------------------------------------------------------------------------
தூரத்தில் சென்றவள் - யூடியூபில்
எதிர்காலம் - தமிழூற்றில் திட்டமிடாப் பேச்சு
---------------------------------------------------------------------------
பட்டிமன்றப் பேச்சு - குவிகம் சுந்தரராஜன் பிறந்த நாள் விழா
----------------------------------------------------------------------------------------------------
பட்டிமன்றப் பேச்சு - யூடியூபில்
தூரத்தில் சென்றவள் - கவிதை
---------------------------------------------
வயிற்றின் அழுகைக்கும்
வலியின் அழுகைக்கும்
மொழியைப் புரிந்திருந்து
மூலம் தீர்த்திடுவாள்
பாடம் புரியாமல்
பரிதவிக்கும் பொழுதினிலே
கூடப் படித்திருந்து
குறையைத் தீர்த்திடுவாள்
புழுதிக் காலோடு
புரண்டு வருகையிலே
கழுவிச் சேலையினால்
காலைத் துடைத்திடுவாள்
காலம் ஓடுகையில்
காதல் கூடுகையில்
பாலம் அமைந்தந்த
படுக்கை போட்டிடுவாள்
வயதின் முதிர்ச்சியிலே
வாழ்க்கைத் தளர்ச்சியிலே
துயரத்தில் நம்மை விட்டு
தூரத்தில் சென்றிடுவாள்
------------------------------------நாகேந்திர பாரதி
தூரத்து மாம்பழம் - கவிதை
-------------------------------------------
ஓரக் கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடி விட்டு
தூரத்து மாம்பழமாய்
தொங்குவதை விட்டுவிடு
நேரத்தில் விழுந்துவிடு
நெருக்கத்தில் வந்துவிடு
காலத்தில் கனிந்தால்தான்
காதலுக்கு மரியாதை
பாலுக்கும் வயதானால்
பழுதாகித் திரிந்துவிடும்
பாலைக்கு நீராக
பாய்ந்து வந்துவிடு
ஏழைக்குச் சோறாக
இன்பம் தந்துவிடு
நாளைக்கு வந்துவிடு
நம்பிக்கை தந்துவிடு
காலைக்குக் காத்திருப்பேன்
கண்ணுக்குள் உன்னோடு
---------------------------------நாகேந்திர பாரதி
குறுங்கவிதைகள்
--------------------------------------
வேர்கள்
————--------------------------
விழுதுகள் வந்து விட்டாலும்
விட்டுவிடாது மரத்தை
வேர்கள்
————
வெயில்
———-
ஏழைகளின் வாழ்வில் மட்டும்
இருட்டில் கூட
வெயில்
————
பொய்கள்
————-
தேவைப் படும் நேரத்தில்
தீங்கில்லாத பொய்களே
வாழ்க்கை
————
----------------------------நாகேந்திர பாரதி
புகைப்படப் புனிதர் - கவிதை
——————————————————
ஆமா என்ற சொல்லுக்கு
அடுத்த சொல் தெரியாதவர்
மாமா என்ற வார்த்தைக்கு
மகத்துவம் சேர்த்தவர்
மகளின் மணாளன் என்ற
மனத்தின் அன்போடு
மகனும் இவன்தான் என்ற
மகிழ்ச்சியில் இருந்தவர்
காலத்தின் கொடுமையினால்
கடுமையாய் நோய்வாய்ப்பட்டு
பொசுக்கென்று போய்விட்டு
புகைப்படமாய் ஆனவர்
மாலையிட்டு வணங்குகின்ற
மாலைப் பொழுதில் எல்லாம்
மங்கலமாய் வாழ்கவென்ற
மன வாழ்த்து புகைப்படத்தில்
—————நாகேந்திர பாரதி
மழையும் விதையும் - கவிதை
——————————------------------—-
முதல் கவிதைக்கு
முத்தம் கொடுத்து
அச்சில் ஏற்றிய
ஆசிரியர் அன்பு
அப்போது தெரியவில்லை
அதுதான் மழையென்று
விழுந்தது மழையென்று
விதைக்குத் தெரியுமா
விட்டுச் செடியாகி
வெளியே வந்தபின்தான்
கவிதை வனத்திலே
கலந்த பின்புதான்
இப்போது தெரிகிறது
அதுதான் மழையென்று
——————- நாகேந்திர பாரதி
மண்ணில் வானவில் - கவிதை
————————————----------------------------—-
ஏழுவண்ண வானவில்லாய்
இந்த மண்ணில் முளைத்து
ஏழுவித குணங்களாய்
எங்களுக்குக் காட்டி
அன்பும் அறிவும்
அமைதியும் ஆனந்தமும்
உண்மையும் உழைப்பும்
உயர்வும் காட்டி
எங்களை விட்டு
இறைவனைத் தொட்டு
எப்போ தாவது
இறங்கி வந்து
வானத்து வில்லாய்
வாழ்த்துவார் அப்பா
—————நாகேந்திர பாரதி
விடியலைத் தேடும் இரவுகள் - கவிதை
————————————--------------------------------
வேலையில்லா வாலிபன் நான்
வேதனையின் காதலன் நான்
என்னை எழுதியவன் சமுதாயம்
எழுதியவன் முகவரியை
எழுதாமல் விட்டதனால்
எடுத்தவர்கள் ஏதேதோ
எழுதினார்கள்
என் மேல்
ரத்த முத்திரை குத்தப்பட்டு
வன்முறை முகவரி
எழுதப்படும் போதெல்லாம்
ஏ சமுதாயமே
நீ ஏன் குதிக்கிறாய்
என் மேல்
முகவரி எழுதாமல் விட்டது
உன் குற்றம்
விடியலைத் தேடும்
இரவாய் என்னை
வீதியிலே விட்டது
உன் குற்றம்
———— நாகேந்திர பாரதி
கடந்து சென்ற தென்றல் - கவிதை
—————————--------------------------——-
துண்டோடு சேத்து
பனியன் ஜட்டியும்
கழட்டிப் போடுடா
துவைச்சுப் போடுறேன்
அறுபது வயதிலும்
குறையாத அன்போடு
குழந்தையாய் நினைத்து
அப்பத்தா சொன்னது
ஊட்டி விட்டது
உறங்க வைத்தது
படிக்க வைத்தது
பழக வைத்தது
வேலை தேடி
வெளிநாடு போனது
ஓலை வந்ததும்
ஓடி வந்தது
சுடுகாட்டில் கிடந்த
சேலை மூட்டையைக்
கட்டி அழுதது
மயங்கி விழுந்தது
நடந்து வந்த
நினைவாய் நின்றது
கடந்து சென்ற
தென்றல் ஒன்று அது
———————நாகேந்திர பாரதி
கண்ணுறங்கும் கவிதை - கவிதை
——————————-----------------------——
பகல் நேரத்தில்
படுத்துகிற பாட்டில்
எப்படா தூங்குமென்று
ஏங்க வைக்கும்
இரவு நேரத்தில்
தூங்கும் போது
எப்போது எழுமென்று
ஏங்க வைக்கும்
குறும்பும் கூச்சலுமாய்
குழந்தை படுத்தினாலும்
காலையில் எழும்வரை
கண்ணுறங்கும் கவிதை
———————நாகேந்திர பாரதி
கவர்ந்த புலவன் - கவிதை
——————————————
என்னைக் கவர்ந்த
புலவன் இவன் - என்
எண்ணம் வளர்த்த
புலவன் இவன்
இவன்
கவிதையில் விளையாடி
பாடலில் தலை சீவி
நடந்த பருவம்
என் இளம் பருவம்
காதலைப் பாடினான்
கடமையைப் பாடினான்
சாதலைப் பாடினான்
சகலமும் பாடினான்
ஆத்திகம் பாடினான்
நாத்திகம் பாடினான்
அத்தனை கருத்துமே
அனுபவித்துப் பாடினான்
இவன் வாழ்க்கை -ஒரு
திறந்த புத்தகம்
அதில்
இன்பமும் இருந்தது
துன்பமும் இருந்தது
நன்மையையும் இருந்தது
தீமையும் இருந்தது
தெரிந்து படிப்பது - நம்
திறமையில் இருக்கிறது
—————-நாகேந்திர பாரதி
உருகும் மனம் - கவிதை
------------------------------------------------------------------
மணலைக் குவித்துக் கலைத்தோமே
அப்போது சொல்லவில்லை
மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமே
அப்போது சொல்லவில்லை
தூரக் கடலை ரசித்தோமே
அப்போது சொல்லவில்லை
துணிகள் நனைய நடந்தோமே
அப்போது சொல்லவில்லை
ஓரப் படகில் ஒளிந்தோமே
அப்போது சொல்லவில்லை
உன்னை என்னை மறந்தோமே
அப்போது சொல்லவில்லை
காலம் கடந்து சொல்கின்றாய்
காதல் மறக்கச் சொல்கின்றாய்
கன்னிப் பெண்ணே வாழ்த்துக்கள்
காதல் வாழும் நெஞ்சுக்குள்
உன்னை மறக்க முடியாமல்
உள்ளே பொங்கும் நெருப்புக்குள்
உலைத் தீயில் உருகும் மனம்
ஒன்றும் வேண்டாம் போடி போ
-------------------------------
உள்ளுக்குள் ரௌத்ரம் - கவிதை
————————————-------------------—-
தான் மட்டும் தழைக்கட்டும் தோழர் எல்லாம்
தரைப்பட்டுக் கிடக்கட்டும் என்ற எண்ணம்
ஊனொட்டி உயிரொட்டி உலகைக் காக்க
உருவெடுத்து விட்டோரைப் பார்த்தாலே
வராதா ரௌத்ரம்
நான் என்ற எண்ணத்தால் அகந்தை கொண்டு
நல்லவரை எல்லாமே நசுக்கி விட்டு
தேன் என்று வெளியினிலே காட்டிக்கொண்டு
தேளாகத் திரிவோரைப் பார்த்தாலே
வராதா ரௌத்ரம்
தீயோரைத் திருத்திடுவோம் முடியாதென்றால்
தீயாக்கிப் பொசுக்கிடுவோம் , நல்லோர் எல்லாம்
ஒன்றாகக் கூடிடுவோம் உலகைக் காப்போம்
உள்ளுக்குள் இருக்கின்ற ரௌத்ரத்தை
உழைப்பாக்கி உயர்ந்திடுவோம்
————— நாகேந்திர பாரதி
வண்ணத்துப் பூச்சி - கவிதை
——————————————————————-
பாட்டுப் போட்டியும்
பேச்சுப் போட்டியும்
ஓட்டப் போட்டியும்
உற்சாகத் தருணங்கள்
படங்கள் வரைந்து
பாராட்டு பரிசுகள்
பரத நாட்டிய
ஆடை அணிகலன்கள்
எத்தனை வண்ணங்கள்
இருந்த பருவம்
காலம் வந்ததும்
கணவன் வந்ததும்
குடும்பம் வேலை
குழந்தை வந்ததும்
ஒவ்வொரு வண்ணமாய்
உதிர்ந்து போனதால்
வண்ணம் தொலைத்தது
வண்ணத்துப் பூச்சி
————நாகேந்திரபாரதி
கல்யாண மண்டபம்- கவிதை
---------------------------------------
மண்டபத்து வாசலில்
கழற்றிப் போடும் செருப்புக்கு
சில அடையாள நினைவுகள்
வரவேற்பு சந்தனத்திற்கு
கல்யாண வீட்டாரின்
பொறுக்கியெடுத்த அழகிகள்
போவது அழகிப் போட்டிக்கா
திருமண வரவேற்புக்கா
புரியாத அலங்கோலம்
வந்து வரவேற்கட்டும் என்று
விறைப்பாய்ச் சென்றமரும்
ஓர நாற்காலிகள்
இது மாதிரி இடங்களில் மட்டும்
சொந்தம் என்று தெரிய வரும்
சில தூரத்துப் பச்சைகள்
அட்சதையைக் கையை விட்டு
அய்யர் மேல் எறிகின்ற
உச்சஸ்தாயி நேரங்கள்
அப்புறம் போகலாமே என்றபடி
தானாக நகர்கின்ற
பந்திக் கால்கள்
மற்றவர்கள் மொய்க் கணக்கை
நோட்டம் இட்டபடி
நீட்டுகின்ற நோட்டு
லட்டா தேங்காயா என்று
தடவிப் பார்த்தபடி
வாங்குகின்ற பைகள்
வீட்டுக்கு வந்தபின்தான் தெரிகிறதோ
போட்டு வந்த புதுச் செருப்பு
வேறு யாருடையதோ என்று
---------------------------------------- நாகேந்திர பாரதி
கல்லறை பேசினால் - கவிதை
—————————————-------------
தள்ளாத வயதினிலும்
தாங்கித் தாங்கி
நடந்து வந்து
உண்மையான தர்மத்தை
உபதேசம் செய்தேனே
மதச் சண்டை மாறவில்லை
சாதிச் சண்டை தீரவில்லை
பெண்ணடிமை போகவில்லை
பெருஞ்செல்வம் பிரியவில்லை
பேச்சு மட்டும் போகவில்லை
இன்னும் ஒருமுறை நான்
எழுந்து வரப் போவதில்லை
என் காலம் போயாச்சு
உங்க காலம் ஆயாச்சு
பொழைக்கத் தெரியலைன்னா
போங்கடா வெங்காயம்
———————நாகேந்திர பாரதி
முதல் வசந்தம்- கவிதை
————————————
வனத்தின்
முதல் வசந்தம்
வாழ்க்கையின்
முழு வசந்தம் ஆனது
பதினெட்டு வயதில்
பார்வைகளின் பரிமாற்றம்
பார்த்தவர் ஏற்பாட்டில்
எல்லாமே பரிமாற்றம்
அன்று தொடங்கிய
அன்பும் அறனும்
இன்றும் தொடர்வது
இறைவன் கட்டளை
வாழ்த்தும் வயது
வந்து விட்டாலும்
வாழ்த்தைக் கேட்டு
வளரும் வசந்தம்
————————நாகேந்திர பாரதி
எல்லாமே மாயம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
---------------------------------------------------------------------------------------
மீதியான பக்கங்கள்- கவிதை
———————————----------——
ஆரம்பப் பக்கங்கள்
அற்புத மானவைதான்
அரண்மனை வீடும்
ஆளும் பேருமாய்
படிப்பும் பாட்டும்
பாசமும் நேசமுமாய்
அழுக்குப் படிந்தது
எப்போது பக்கங்களில்
அவனைப் பார்த்த
அந்தப் பொழுதிலா
அவனைச் சேர்ந்த
அந்திப் பொழுதிலா
புரண்ட பக்கங்கள்
புரட்டிப் போட்டன
ஓடிப் போனதால்
ஒழுக்கம் போனதால்
மீதிப் பக்கங்கள்
கசங்கிக் குப்பையில்
——————நாகேந்திர பாரதி
விளைந்த வியர்வைகள் - கவிதை
—————————————---------------——
விதைகள் மட்டுமா
விளைந்து செழிக்கும் ,
வியர்வைகளும் கூடத்தான்
கூட்டிப் பெருக்கிக்
குப்பை கழிக்கும்
வீட்டம்மா வியர்வை
காட்டைத் திருத்திக்
கழனி ஆக்கும்
வீட்டய்யா வியர்வை
நாட்டில் நிலவும்
நச்சைப் போக்கும்
நாட்டய்யா வியர்வை
வீடும் நாடும்
விளங்க உழைக்கும்
வீரர் வியர்வை
எல்லாம் சேர்ந்து
விளைந்து செழிக்கும்
—————நாகேந்திர பாரதி
முன்னாடி திரும்பு - கவிதை
—————————------------------------
கட்டம் போட்ட சேலை
கவ்வுதடி இடுப்பை
கொண்டை மேலே பூவு
கொல்லுதடி வாசம்
ஏத்தி வச்ச குடத்தில்
தளும்புதடி மனசு
குளத்தங்கரை வராத
கோபமாடி பொண்ணே
நெத்திச்சுட்டி வாங்கியாற
நேரமாச்சு புள்ளே
உனக்குப் புடுச்சதுன்னு
சொன்னியேடி நேத்து
மாலைக் கருக்கலு
மயக்குதடி என்னை
பின்னழகு காட்டி
பித்தனாக்கிப் போட்டே
முன்னழகு வேணுமடி
முன்னாடி திரும்பு
————நாகேந்திர பாரதி
நினைவில் நிற்கும் காதல் - கவிதை
————————-------------------------—————
இதழோர ஈரங்கள் உலர்ந்தாலும்
இதழில் நெளியும் சிரிப்பில்
என்றும் இளமை
நடையில் தளர்ச்சி தெரிந்தாலும்
நடையின் நாணத் தவிப்பில்
என்றும் இளமை
உடலின் இறுக்கம் குறைந்தாலும்
உடலின் இன்ப உணர்வில்
என்றும் இளமை
முதுமைக் காலம் வந்தாலும்
முதிர்ந்த அன்பு மனதில்
என்றும் இளமை
நேரம் காலம் நகர்ந்தாலும்
நினைவில் நிற்கும் காதலில்
என்றும் இளமை
———— நாகேந்திர பாரதி
கல்யாண மண்டபம் -' நவீன விருட்சம்' கவிதை வாசிப்பு
------------------------------------------------------------------------------------------
தொகுப்புரை - விருட்சம் கதைஞர்கள் நிகழ்வு
----------------------------------------------------------------------------------
குறுங்கவிதைகள்
--------------------------------------
பனி
———-
காதல் பார்வையின் கதகதப்பில்
காணாமல் போனது
கண்ணீர்ப் பனி
————
மின்னல்
————
மின்னி மறையும் வாழ்க்கையைச்
சொல்லி ‘இடி'த்தும்
ஆசைகள்
————
கனவுகள்
———————
இன்றைய நனவுகள் எல்லாமே
நேற்றைய சிலரின்
கனவுகள்தான்
—————
வைகறை
—————
அன்பே உலகை
ஆளும் நிலை வந்தால்
அதுவே வைகறை
———
------------------------------------நாகேந்திர பாரதி
டுமீல் - சிறுகதை
———---------------------—
அந்த பிஸ்டலில் குண்டுகளை நிரப்பவில்லை அவன் . அவளின் அப்பாவை மிரட்டுவதே நோக்கம் .
‘ஐயா , உங்க பொண்ணும் நானும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம் . சாதியைச் சொல்லி நீங்க எங்களைப் பிரிக்க நினைக்கிறது சரியில்லே . எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலே . உங்களைக் கொன்னுட்டு தப்பிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே . உயிர் மேல் ஆசை இருந்தா எங்களைச் சேர்த்து வையுங்க ’ என்று மிரட்டும் அவன் துப்பாக்கிக்கு முன்பு செயல் இழந்து நின்றார் அவர் .
அப்போது மாடியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் உள்ளே ஓடி தந்தையின் அலமாரியில் இருந்த , முழுதும் நிரப்பப்பட்டு இருந்த அந்த பிஸ்டலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள் .
‘அடப்பாவி , கொலை செய்யும் அளவு துணிந்து விட்டாயே . உன் குணம் தெரியாமல் உன்னைக் காதலித்து விட்டேனே . என் அப்பாவைக் காப்பாற்ற வேண்டுமே ‘ என்ற எண்ணத்தோடு ஓடி வந்து மாடியில் இருந்து அவன் மார்பை நோக்கிக் குறி பார்த்து , விசையை இழுத்து விட்டாள் .
‘டுமீல் ’ ,
—————நாகேந்திர பாரதி
யாதுமாகி நின்றவன் - கவிதை
—————————-------------------------------
வெளியில் தேடினால்
விடையாய்க் கிடைக்காதவன்
உள்ளுக்குள் தேடினால்
உணர்வாய்த் தெரிபவன்
எனக்குள் மட்டும் அல்ல
உனக்குள்ளும் இருப்பவன்
நன்மையையும் தீமையுமாய்
நம்மை நடத்துபவன்
நானும் நீயும்
ஒன்றென்று உணர்த்துபவன்
——————-நாகேந்திர பாரதி
பிடுங்கிய பயிர் - கவிதை
---------------------------------------------------
என்னைப்
பார்க்காமல் போயிருக்கலாம் அவள்
பார்த்தபின்
சிரிக்காமல் போயிருக்கலாம் அவள்
சிரித்தபின்
பேசாமல் போயிருக்கலாம் அவள்
பேசியபின்
தொடராமல் போயிருக்கலாம் அவள்
தொடர்ந்தபின்
பிரியாமல் போயிருக்கலாம் அவள்
காதல் பயிர் வளர்க்க
நீரைப் பாய்ச்சிவிட்டு
பயிரைப்
பிடுங்காமல் போயிருக்கலாம் அவள்
—————-நாகேந்திர பாரதி
பரோபஹாரத் தம்பதியர் -சிறுகதை
------------------------------------------------------------------
பார்வதியும் சங்கரும் மனமொத்த பரோபகாரத் தம்பதியர் .
பார்வதிமுதல் நாள் வைத்து மீந்து போய், விறைச்சுப் போய் , காஞ்சு போய்க் கிடக்கும்இட்லிகளை அடுத்த நாள் வேலைக்காரியிடம் கருணையோடுகொடுத்து விட்டுச் சொல்வாள். ' பாவம், உன் புள்ளைகள்ளாம் பசியோடு இருக்கும். கொண்டு போய்க் கொடும்மா.' வாங்கிக்கொண்டு போகும் வேலைக்காரி போற வழியில் அதைக் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுச் செல்வதும் வழக்கமான கதைதான். ஆனால் பார்வதியோ, அடுத்த வீட்டு அம்புஜத்திடம் ' பாவம், வேலைக்காரி புள்ளைங்க. எப்பவும் கஞ்சிதான். நான் தான் எங்கவீட்டிலே மீஞ்சி போற பூப்பூவான இட்லிகளை கொடுத்து விடுவேன். இந்த குணம் எனக்கு சின்ன புள்ளையிலே வந்திடுச்சு ' என்றுசொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வாள்.
அவள் கணவன் சங்கர் அவளுக்கும் மேலே. அன்று வந்து அவளிடம்சொன்னான். ' பாரு. இன்னிக்கு பாரேன். ரோட்டிலே ஒரு சின்னக்கல்லு கிடந்தது. அதை எடுத்து பக்கத்து குப்பைத் தொட்டியில்வீசி எறிஞ்சிட்டு வந்தேன். என்னதான் நாம் செருப்புப்போட்டிருந்தாலும் , செருப்புப் போடாத எவ்வளவு ஏழைகள் அந்தரோட்டு வழியா நடந்து போறாங்க. அவங்க காலிலே அது பட்டுபுண்ணாகி செப்டிக் ஆகி ஆஸ்பத்திரி போனா எவ்வளவு செலவு. அவங்களை அந்தக் கஷ்டத்தில் இருந்து காப்பாத்தின ஒரு திருப்திஎனக்கு . ' ' உங்க மனசு யாருக்கு வருங்க. இருங்க. இதைப்போயி நான் அம்புஜத்திட்டே சொல்லிட்டு வந்திர்றேன். ' என்றுஅவசரமாகப் பக்கத்து வீட்டுக்குக் கிளம்புவாள் பாரு என்கிற பார்வதி .
போகும்போது கசங்கி இத்துப் போன அவளது பழையசேலைகளையும் எடுத்துப் போவாள். தன் கணவன் பெருமையைமுதலில் சொல்லி விட்டு ' அம்புஜம் , யாரோ முதியோர் விடுதியில்இருந்து வருவாங்கன்னு சொன்னியே. அவங்க கிட்டே இந்தசேலைகளையும் கொடுத்திடுறீயா. பாவம், ஏதோ நம்மாலேமுடிஞ்சது. இதெல்லாம் போன வருஷம் தீபாவளிக்கு புதுஸாவாங்கினது. இந்த மாதிரி டிசைன் எல்லாம் அந்த பெருசுகபார்த்திருக்கவா போகுது . பாவம். அனுபவிக்கட்டுமே ' என்றுகொடுத்த அந்த அஞ்சு வருஷ அரதப் பழசு சேலைகளைஅருவெறுப்போடு பார்த்த அம்புஜம் ' அங்கே ஓரமாய் வைம்மா' என்றாள் . அவளுக்குத் தெரியாதா என்ன. பார்வதியின் பண்பும்பரோபகாரமும். ஏதோ பக்கத்து வீடாச்சே என்று சகிச்சுக்கொண்டிருக்கிறாள். இன்னும் எவ்வளவு நாளைக்கோ தெரியாது.
சங்கர் அலுவலகத்தில் படுத்தும் பாடோ மிகவும் மோசம். யாராவதுஅலுவலகத்தில் ஓய்வு பெற்று அவர்களுக்கு உபசார விழாநடத்துவதற்கு ஒவ்வொருவரிடமும் பணம் வசூலிக்கும் போது முதல்ஆளாய்ப் போய் பத்து ரூபாய் எழுதி விட்டுச் சொல்வான். ' எல்லோரும் சேர்ந்து அவருக்கு நல்ல ஒரு கிப்ட்டா வாங்கிக்கொடுங்கப்பா. அதுக்குத் தான் முதல் ஆளா வந்து மொய்எழுதிட்டேன் ' என்று சொல்லி தன்னைப் பாராட்டிக் கொள்வான். அவர்களுக்குத் தெரியாதா, முதல் ஆளாய் ஏன் எழுதுகிறான் என்று. யாராவது முதலில் நூறு ரூபாய் எழுதி விட்டால் இவனும் நூறு எழுதவேண்டுமே.
இப்படித்தான் அன்னிக்கி அடுத்த தெரு பாக்கியத்தைத் தெருவிலே பார்த்தப்போ அவ உடுத்தியிருந்த சிவப்புக் கலர் புடவை அவளுக்கு நல்லாயிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு தன் கணவர் தனக்கு எடுத்துக் கொடுத்துள்ள பல விதமான புடவைகளின் நிறம் , தரம் பற்றியும் அது தனக்கு எவ்வளவு எடுப்பாக இருக்கிறது என்பதைப் பற்றியும் ஒரு கால் மணி நேரம் புராணம் பாடினாள் . பாக்கியத்திற்கு சந்தேகம் . ‘இவ என்னைப் புகழுறாளா , இல்லே , இதை சாக்கா வச்சுக்கிட்டு தன்னைப் பற்றி சுய தம்பட்டம் அடிச்சுகிறாளான்னு . விட்டா இன்னும் அரை மணி நேரம் சுய புராணம் பாடிக்கிட்டு இருப்பாள்னு புரிஞ்சு ‘ வேலை இருக்கு பாரு , வரட்டா ‘ என்று கத்தரித்துக் கொண்டு போனவளைப் பற்றி வீட்டில் வந்து புருஷனிடம் கம்பளைண்ட் . ‘ என்னங்க அவளை புகழ்ந்து பேசுனதுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போயிட்டா ‘
பாருவும் சங்கரும் இப்படி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்
'ஏம்மா , நம்ம மத்தவங்களைப் புகழ்ந்து பேசறதோட பொருளாவும் பணமாவும் எவ்வளவு உதவி பண்ணிக்கிட்டு இருக்கோம். யாருமே நம்மைப் புரிஞ்சு பாராட்ட மாட்டேங்கிறாங்களே .’
' ஆமாங்க. காலம் கலி காலங்க . சாமிக்குத் தெரியுங்க , நம்மளைப் பத்தி. ‘‘நாம பாருங்க. கோயிலுக்குச் சென்று தினசரிபிரார்த்தனை பண்ண தவறுவதில்லை. அங்கே உண்டியலில்தினசரி பத்து பைசா போடறோம், பிச்சைக்காரங்க இப்பெல்லாம் பத்து பைசா போட்டா திருப்பி நம்ம கிட்டேயே கொடுத்துறதாலே, அதை மட்டும் நிறுத்திட்டோம். என்ன பண்றது, நம்ம பரோபகாரம்சாமிக்குப் புரியுது , இந்தப் பிச்சைக்காரங்களுக்கு புரியலையே ' என்று புலம்புவாள் .
பாவங்க இவங்க. அதுதான் இவங்க பரோபகாரக் குணத்தைஉங்ககிட்டே சொல்லி பகிர்ந்துட்டேன். நீங்களாவது இவங்களைப்பாராட்டி கமெண்ட் போடுவீங்க தானே.
என்ன, நானா , நான் அப்போதே என்னோட வழக்கமானபாணியிலே அவங்க கிட்டே சொல்லிட்டேங்க.
'பார்வதி அம்மா .நீங்க கொடுத்த பூப்பூவான இட்லியும் புதுப்புடவையும் மத்தவங்களைப் பாராட்டுற உங்கள் குணமும் உங்கள் புகழ் சொல்லும் .
சங்கர் அய்யா, நீங்கள் எடுத்து எறிந்த சின்னக் கல்லும், எடுத்துக்கொடுத்த பத்து ரூபாயும் என்றென்றும் உங்கள் புகழ் பாடும்.
இருவரும் சேர்த்து போட்ட உண்டியல் காசு பத்து பைசாவும் இறைவன் மனதில் என்றும் இருக்கும்.. ' .
என்னங்க, இது போதும்ல . உங்க பங்குதான் பாக்கிங்க இப்ப.
-------------------------------------நாகேந்திர பாரதி
குறுங் கவிதைகள்
-------------------------------------
புல்லாங்குழல்
———————-
வாய் வழி விடும் மூச்சில்
வரிசை வரிசையாய்
வர்ணங்கள்
———
அஞ்சலி
————
இருக்கும் போது எதிர்ப்பு
இறந்த பின்
அஞ்சலி
—————
மகிழ்ச்சி
—————
ஒன்று இரண்டு மூன்றாம்
அலைகளும் ஓய்ந்தன
இருக்கிறோம்
——————
ஆணிவேர்
——————
அன்பின் அழுத்தமே அகிலத்தில்
ஆழமாய் இறங்கட்டும்
ஆணிவேராய்
—————
------------------------------நாகேந்திர பாரதி
சிகரம் தொடு- கவிதை
————————————-
சொல்லினில் வாய்மை வைத்து
செயலினில் தூய்மை வைத்து
முயற்சியில் முழுமை வைத்தால்
சிகரம் தொடுவது அரிதோ
நண்பரில் நல்லார் வைத்து
பகைவரே அல்லார் வைத்து
பாதையில் கவனம் வைத்தால்
சிகரம் தொடுவது அரிதோ
குடும்பத்தைச் சிறப்பாய் வைத்து
குவலயம் செழிக்க வைத்து
கூடியே உழைப்பை வைத்தால்
சிகரம் தொடுவது அரிதோ
———————நாகேந்திர பாரதி
ரேஷன் தண்ணி - சிறுகதை
-------------------------------------------------
பக்கெட் நிரம்பி தண்ணீர் வழிந்து தூம்பு வழி போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் காத்தாயி. ,பாத்ரூமில் சத்தம் கேட்டு போய்ப் பார்த்த காத்தாயிக்கு அழுகையே வந்துவிட்டது. குழாயை திறந்து விட்டால் தண்ணீர் நிரம்பியதைப் பார்த்து மூடுவதில்லை .'ஆமா யாரும்மா குழாயை திறந்து விட்டது. எம்புட்டு தண்ணி வேஸ்டா போயிட்டு இருக்கு' என்று கத்தியபடி பைப்பை இறுக்கி மூடினாள். உள்ளே தலை வாரிக்கொண்டு இருந்த அம்புஜம் அலட்சியமாகப் பதில் சொன்னாள் . 'தண்ணி தான் நாள் முழுக்க வருதே . ஏதோ ஞாபகத்தில் அப்படியே விட்டுட்டேன் அதுக்கு ஏன் இப்படி கத்துற' என்று வாயை அடக்கியவளிடம் ஒன்றும் சொல்ல முடியா விட்டாலும் ' தண்ணின்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட காத்தாயி தன் கிராமத்தை நினைத்துப்பார்த்தாள் .
கந்தனுக்கு வாக்கப்பட்டு மதுரை வருவதற்கு முன்னாடி பதினெட்டு வருஷம் இருந்த பரசுப்பட்டி கிராமத்தில் நாலு மைல் நடந்து போய் அங்கு இருந்த அந்த ஊற்றுக் கிணற்றில் வாளியைப் போட்டு மணிக்கணக்காக உட்கார்ந்து இருந்து தண்ணி ஊற ஊறக் காத்திருந்து இரண்டு குடம் பிடித்து வர எத்தனை சண்டை .அதையெல்லாம் அம்புஜம் கிட்ட சொல்லி இருந்தாலும் ஒரு அலட்சியம்.
'வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து தண்ணியை மேல ஏத்துறமே . மத்த வீடுங்க மாதிரி , வீட்டைத் தினசரி தேச்சு விடவா சொல்றேன். மூன்று நாளைக்கு ஒருமுறை தான் உன்ன கழுவச் சொல்கிறேன். பெரிய பக்கெட் மூணிலேதான் தண்ணீரை பிடித்து வைக்கிறேன். இப்படிப் போற தண்ணி போகட்டுமே .ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் இல்லை' என்று கேட்டபடி வந்த அம்புஜத்தைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாக வந்தது காத்தாயிக்கு.
'
‘உன்னோட நம்மளால பேச முடியாது தாயி .ஏதோ மனசிலே தோணிச்சு . சொன்னேன். கோச்சுக்காதே' என்றபடி பரபரவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது காயப்போடுவது , வீடு துடைப்பது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு நெற்றி வேர்வையை முந்தானையால் துடைத்தபடி 'போயிட்டு வர்றேன்' என்றபடி வீட்டுக்கு விரைந்தாள் காத்தாயி . ஆச்சு. அஞ்சு வீடும் முடிஞ்சாச்சு. காலையில் முழுக்க சொந்த வீட்டு வேலை. மத்தியானத்தில் இருந்து சாயங்காலம் வரை அஞ்சு வீட்டு வேலை . மாசம் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய்.
அவ புருஷன், ஆபிசர் கணக்கா கரெக்டா ஆறு மணிக்கு . வீட்டுக்கு வந்துடுவான். பாவம் வெயில்ல தண்ணி வண்டியிலே தெருவெல்லாம் சுத்திட்டு, வந்தவுடனே வீட்டுல காத்தாயி இருந்து கருப்பட்டி காபி போட்டு கொடுத்தா மனசெல்லாம் நிறைந்து முகமெல்லாம் பல்லாயிடும் அவனுக்கு.
கருப்பா இருந்தாலும் முக லட்சணம் அவனுக்கு. தனக்கு வெளுத்த தோல் இருந்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்து போனது அந்த சிரித்த முகத்துக்காகத்தான் . தூரத்து சொந்தம்தான். நினைப்பு வேகத்தில் வீடு வந்து பூட்டு திறந்து, பாலை அடுப்பில வச்சு, ஓரம் சுட்டு சுயநினைவு வந்தது. 'எப்படி வந்தேன் இம்புட்டு வெரசா அவனை நினைச்சுகிட்டே ' என்று வெட்கம் வந்தது அவளுக்கு.
' ஏ புள்ள' என்ற குரலுக்கு ஓடிப் போய்க் கதவை திறந்த காத்தாயி ஆடிப்போனாள். காலில் பேண்டேஜ் கட்டோடு நொண்டி நொண்டி உள்ளே வரும் அவனைப் பார்த்து 'அடி ஆத்தே என்ன ஆச்சு எப்படி ஆச்சு' என்று பதறினாள் . 'ஒண்ணும் இல்ல, நம்ம தண்ணி வண்டி முக்குத் தெருவுல திரும்பறப்போ அப்போ பிடி நழுவிடுச்சு. உடனே ஆஸ்பத்திரி போயி ஊசி போட்டு ,மீதித் தெருவெல்லாம் போயி தண்ணி ஊத்திட்டு, திரும்பி வர்றேன். எல்லாம் உன் நினைப்பு வந்து தான் கை நழுவிடுச்சு' என்று சிரித்தான்.
அவன் காலைத் தடவி விட்டபடி காத்தாயி ' உடனே வர வேண்டியதுதானே அத்தோடு ஏன் சுத்தினே ' என்று கரிசனமாகக் கேட்க அவள் முகத்தையே உற்றுப்பார்த்த கந்தன், 'என்ன இது இப்படிக் கலங்கி போச்சுகண்ணு. லேசான காயம்தான். விட்டுத்தள்ளு .நம்மள நம்பி எவ்வளவு குடும்பம் தண்ணிக்காக குடத்தோட காத்துக் கிடக்கு. நம்ம போகலைன்னா வேற ஆளை ஏற்பாடு பண்ணனும் .நேரத்திற்குப் போக முடியாது. அதுவும் அந்த புது ஆளுக்கு அந்தக் கூட்டத்தை மேய்க்கத் தெரியணும். நான் போய் நின்ற உடனே வந்து விடுவாங்க பாரு. அதுல ஒரு ஆளுக்கு ரெண்டு குடம் பார்த்து பார்த்து ஊத்தணும். நைசா நாலஞ்சு கொண்டு வந்துடுவாங்க. எவ்வளவு பொறுப்பான வேலை தெரியுமா ' என்று முகமெல்லாம் பெருமையாக பேசும் கணவனிடம் குறும்பாகக் கேட்டாள் . ‘பெரிய கலெக்டரு, ரொம்பத்தான் பொறுப்பு' என்று கிண்டலடித்தாள்.
'அப்படிச் சொல்லாத புள்ள. இன்னைக்கு தேதியிலே , இம்புட்டுத் தண்ணிக் கஷ்டத்துல நாங்கதான் சாமி மாதிரி பல பேருக்கு' என்று பெருமையாகச் சொன்னான் . 'தண்ணீர்க் கஷ்டம்' என்றதும் வீணாகப் போய் கொண்டு இருந்த அந்த அம்புஜம் வீட்டுத் தண்ணி தான் ஞாபகம் வந்தது அவளுக்கு. உடனே புருஷனிடம் அதை விலாவாரியாக சொல்லிவிட்டாள் .
'அந்த அம்புஜம் புருஷன் எங்க பெரிய ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறாரு . எனக்கு சம்பளம் வாங்க போறப்போ பாப்பேன். மனுஷன் ஒண்ணாம் நம்பர் அயோக்கியன் . ஊழலோ ஊழல். ஒரு கையெழுத்துக்கு ஆயிரம் ரூபா. அவர் பொஞ்சாதி எப்படி இருக்கும். அந்த மாதிரி வீட்டுக்கு எல்லாம் நீ வேலைக்கு போகாதே என்று நான் பலமுறை சொல்லியாச்சு. நீ விடமாட்டேங்கிறே' என்றான். 'என்னய்யா பண்றது மாசம் ஆயிரம் ரூபாயை விட மனசில்லை . அதுவும் இப்ப புள்ளை ஒண்ணை வயித்திலே ஏத்தி விட்டுட்டே. சேர்க்க வேண்டாமா அவனுக்கு ' என்றவளிடம் ' ஏய் , உனக்கு ஒண்ணுமே தெரியாது. நான் தான் ஏத்தி விட்டுட் டேனா ' என்று நெருங்கியவனைத் தள்ளிவிட்டாள் . 'கால்லே பேண்டேஜ் வலி, இது வேறையா தள்ளிப்போய்யா ' என்று வெட்கத்துடன் சிரித்தாள் .
ஓரத்தில் பிடித்து வைத்திருந்த அந்த இரண்டு குடத் தண்ணி அவர்களுக்கு ஒரு நாளைக்குக் குடிக்க ,சமைக்க போதுமானது தான். குளிக்க, துவைக்கத் தான், பொது இடத்திலே ,உப்புத்தண்ணீ வர்ற , கக்கூஸ், பாத்ரூம் இருக்கே. பச்சையும் மஞ்சளுமாகப் பார்த்து வாங்கி வந்த குடங்களைத் தூக்கிக் கொண்டு காலையில் முதல் தெரு முடிந்து இவர்களின் இரண்டாம் தெருவுக்கு அவன் வரும்போது , கூட்டத்தோடு கூட்டமாகக் காத்திருந்து பிடித்து வைத்த இரண்டு குடங்கள்.
' என் புருஷன் வேலையிலே ரொம்ப ஸ்ட்ரிக்ட்' பெருமை அவளுக்கு. 'உன் புருஷன் தானே, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு கூட கேட்கலாமே' என்று கேட்ட பக்கத்து வீட்டு சரசுவை வாயாலேயே ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கி விட்டாள் . அன்னையிலிருந்து அவளோட பேச்சு வார்த்தையே கிடையாது. 'என் புருஷன் வேலையிலே சுத்தம் ' என்று ரொம்ப பெருமை காத்தாயிக்கு. 'என்ன கேள்வி கேட்டுப் புட்டா ' என்று மாய்ந்து போன அவள் , அன்னைக்கு ராத்திரி கந்தன் கிட்ட சொல்லிச் சொல்லி புலம்பினாள் . அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் 'போதும் போதும்' என்று ஆகிவிட்டது அவனுக்கு. உள்ளூர அவனுக்கும் பெருமைதான். அவனை முழுசா புரிஞ்சுக்கிட்ட பொண்டாட்டி கிடைச்சிருக்காளே .
மறுநாள் அம்புஜம் வீட்டுக்கு போனபோது அம்புஜம் புருஷனிடம் பொரிந்து கொண்டிருந்தாள். 'என்ன பெரிய ஆபிஸர் நீங்க .இன்னையிலே இருந்து தினமும் ஒரு மணிநேரம் தான் தண்ணி விடுவாங்களாம் . செக்ரெட்டரி கிட்ட கேட்டீங்களா.'
'தண்ணீர் கஷ்டம் அதனால லாரிக்காரன் முதலில் கொடுத்ததிலே கால்வாசிதான் ஊத்த முடியும்னுட்டான் . வேற எவனும் கிடைக்கல. என்ன பண்றது. ரேஷன் தண்ணிதான். எத்தனை பேர் நிற்கிறார்கள் ரோட்டுல பார்த்தியா. நமக்கு வீட்டுக்குள்ளேயே ஒரு மணி நேரமாவது வருவதை நினைச்சு சந்தோஷப்படு 'என்று சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தான் .
உள்ளே நுழைந்த காத்தாயியைப் பார்த்ததும் படக்கென்று வாயை மூடிக் கொண்டாள் அம்புஜம், வந்து சொன்னாள் . 'அடியே , தண்ணி இனிமே ஒரு மணி நேரம்தான்.பார்த்து செலவு பண்ணுடி. படபடன்னு தண்ணி சம்பந்தப்பட்ட வேலைகளை எல்லாம் அரை மணி நேரத்துல முடிச்சுட்டு மூன்று பக்கெட்டுகளிலும் புடிச்சு வச்சுடு.'
அவள் பாதி வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்து 'என்னடி பக்கெட்டிலே புடிச்சு வச்சுட்டியா . துவைச்ச தண்ணியை , தொட்டிச் செடிக்கு ஊத்தி விட்டுட்டு. மீதி இருந்தா கக்கூசுக்கு ஊத்தி விடு " என்றாள் . ராத்திரி புருஷனிடம் இதைச் சொல்லும்போதே காத்தாயி வயிற்றுக்குள் பையன் உதைக்க 'அவனுக்கும் சிரிப்பு வந்துடுத்து போலிருக்கு . கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்' என்றபடி எழுந்து சென்றாள் காத்தாயி . காத்திருந்தான் கந்தன்.
------------------நாகேந்திர பாரதி
குறுங் கவிதைகள்
---------------------------------------------
வெளிச்சம்
————————
எந்த மதிப்பும் இல்லை
இருட்டு இல்லாமல்
வெளிச்சத்திற்கு
மொட்டு
———-
சருகாகிப் பறந்து போகின்ற
பூவைப் பார்த்தால்
மலராது
—————
மழை
———-
விரித்த குடைக் கம்பி
வரையும் கோலமாய்
வீட்டுக்குள்
—————
அழகி
———-
முதியவர் கை பிடித்து
கடக்கும் அழகியிடம்
முகத்தழும்பு
———
------------------------நாகேந்திர பாரதி
குறள் வெண்பாக்கள்
-----------------------------------------
இறை வணக்கம்
-----------------------------------
எல்லா உயிரும் இறைவன் இயக்கமே
நல்லோர் வகுத்த நயம்
சொல்லும் செயலும் சுவையாய் அமைந்திட
அல்லும் பகலும் அவன்
உள்ளே வெளியே உலவும் மனமதன்
துள்ளல் நிறுத்தத் துதி
தன்மை தவத்தில் தவழ்ந்திட ஓங்கிட
உண்மை இறைக்குள் ஒடுங்கு
இவனே அவன்தான் அவனே இவன்தான்
சிவனே நமக்குள் சிறப்பு
———————-நாகேந்திர பாரதி
நினைவலைகள் - சிறுகதை
—————————————
ஆச்சு . அந்த ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் இருந்தாச்சு . அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல பஸ் வந்தாச்சு . டிரைவர் ஆட்டோமேட்டிக் கதவைத் திறக்க வேண்டியது தான் பாக்கி .
ஒரே பில்டிங்கில் இத்தனை வருடங்கள் இருந்தும் இந்த இரண்டு நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டது அதிகம் . அந்த முஸ்லீம் பெரியவர் சலீமுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் . கைத்தடியோடு நடந்து வந்து இவர்கள் வீட்டுக் கதவுகளை அவர் தட்டிய நாள் அவர்களால் என்றும் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது .
சுந்தரும் சித்ராவும் மணமுடித்து வருடங்கள் மூன்றாகியும் மகப் பேறு இல்லாமல் தவிக்கும் நிலைமை சலீமுக்கு அவர் வீட்டு வேலைக்காரி மூலம் தெரிய வந்தபோதே அவர் முடிவு செய்து விட்டார் , அவர்களை இந்த ரெசார்ட்டுக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று .
நகரின் நெரிசல் உடலை வருத்தி , வீட்டில் மாமியார் பேச்சு மனதை வருத்தி சித்ரா சுந்தரிடம் சேர்ந்த நிமிடங்கள் மழலைச் செல்வத்தை வரவழைக்க முடியாத நிமிடங்கள்தானே .
இந்த ரிசார்ட்டில் கழித்த இரண்டு இரவுகளின் இனிமை நினைவுகள் அவள் உடலில் தங்கி தரப்போகும் மகிழ்வு இன்னும் பத்தே மாதங்களில் என்ற நம்பிக்கை அந்த இருவருக்கும் இப்போது .
அந்த பாதி வழுக்கைத் தலையர் ராபர்ட் அவர் மனைவி மேரி இவர்களின் நிலைமை வேறு . வளர்த்து ஆளாக்கிய பெண்ணும் பிள்ளையும் நியூயார்க்கிலும் லண்டனிலும் அவரவர் குழந்தைகளோடு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இவர்களுக்கு வேண்டிய பொருளுதவியை வங்கியிலும், பாசத்தை தொலைபேசியிலும் மாதாமாதம் வழங்கிக் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு வெறுமையை அவர்கள் அனுபவித்து வருவதை வாக்கிங் செல்லும் போது ராபர்ட் மூலம் அறிந்து கொண்டவர் சலீம் .
இந்த இரண்டு நாட்களும் அந்தக் கடலோர அமைதியும் தனிக் குடிலின் தன்மையும் அவர்கள் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்தி விட்ட எழுச்சியும் மகிழ்ச்சியும் அவர்கள் முகத்தில் பிரகாசிப்பதை முன்னால் சென்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும் .
அடுத்த ஜோடி முனியன் , அஞ்சலை அவர்கள் பிள்ளை குமார் . முனியன் தினசரி குடித்து விட்டு வந்து செய்யும் கலாட்டா அந்தக் குடியிருப்பில் உள்ள அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தானே . இவருக்கு மட்டும் தெரியாதா என்ன . முனியனை இந்த ட்ரிப்புக்கு சம்மதிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாயிற்று பெரியவர் சலீமுக்கு .
வந்த அன்று இரவே அவர்களை அந்தக் கடற்கரையோரம் அழைத்துச் சென்று அந்த மணற்பரப்பில் ஓடி விளையாடிய குமாரைச் சுட்டிக்காட்டி அவன் பொறுப்பை எடுத்துரைத்து அவர் பேசிய பேச்சுக்கள் , தொடர்ந்த அந்த இரண்டு நாட்களிலும் ஏதோ ஒரு மாற்றத்தை முனியனிடம் ஏற்படுத்தி இருப்பதாகவே தோன்றியது சலீமுக்கு .
ஒவ்வொரு இரவும் அந்தக் கடற்கரையின் ஒரு இருண்ட மூலையில் சென்று அவர் சில மணி நேரம் அமர்ந்திருந்து அழுது விட்டு வருவது அவர்கள் யாருக்குமே தெரியாதுதான் .
பல வருடங்களுக்கு முன்பு , பாத்திமாவும் அவரும் வந்து சில நாட்கள் இங்கே தங்கியிருந்த போது இரவு நேரத்தில் அந்த இருண்ட மூலைக் கடலோர அலைகளில் நீந்திக் கழித்தபோது , ஒரு நாள் , ஐயோ , ஒரு உயர்ந்த அலை ஒன்று வந்து பாத்திமாவைத் தூக்கிச் சென்றபோது இவர் தொடர்ந்து நீந்த முயல , ஒரு முரட்டு அலை இவரை இழுத்து எறிய , இவரின் அலறல் கேட்டு வந்த பாதுகாப்பு இளைஞர் சிலர் , கடலுக்குள் ஏறிப்போய் இழுத்து வந்து போட்டது பாத்திமாவின் இறந்த உடலைத்தானே .
வாழ்வில் பிடிப்பை இழந்த அவர் வருடம் ஒருமுறை அதே நாளில் இங்கே வந்து அந்த இருண்ட மூலையில் அமர்ந்து பாத்திமாவின் நினைவில் மூழ்கி அழுது திரும்புவது வழக்கமாகப் போயிற்று .
ஒரு நாள் கனவில் பாத்திமா வந்து சொன்னாள் . ‘ உங்களின் துன்பம் மட்டும் தானா பெரிது . இந்தக் குடியிருப்பில் வாழும் ஒவ்வொருவரிடமும் எத்தனை துன்பங்கள் . அந்தத் துன்பத்தைப் போக்க நீங்கள் ஏன் அவர்களை இந்த ரிஸார்டுக்குக் கூட்டி வந்து அவர்கள் வாழ்வில் இன்பம் மலரச் செய்யக் கூடாது . நான் மறைவதற்கு முன்பு எத்தனை மகிழ்வான தருணங்கள் நமக்கு இங்கே , மறந்து விட்டீர்களா ‘ . அதன்பின் ஆரம்பித்தது தானே இந்தப் பழக்கம் .
நினைவுகளில் மூழ்கிப் போய் கடைசியில் நின்றிருந்த சலீமை அழைத்த குரல் , சிறுவன் குமாரிடம் இருந்து .
‘ நீங்க முன்னாலே வந்து முதல்லே ஏறுங்க தாத்தா , பஸ்ஸோட ஆட்டோமேட்டிக் கதவு திறக்கப் போகுது ‘
———— நாகேந்திர பாரதி
கோழிக்குஞ்சுகள் - கவிதை
------------------------------------------------
உன் இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாட்கள்
தவுட்டுப் பானைக்குள்
தவழ்ந்து வந்த நாட்கள்
இரவுக்குள்
உன் சிறகுக்குள்
நாங்கள் மூக்கை மட்டும் நீட்டி
முழித்து முழித்துத் தூங்குவதை
நீ தூங்காமல்
பார்த்து ரசிப்பாய்
நீ கெக்கெக்கே என்றால்
உணவுண்ண அழைப்பு
நீ 'கேகேகே ' என்றால்
பகையென்ற எச்சரிக்கை
உன் கால்களின்
வேகக் கிண்டலில்
எங்கள் விருந்து
எழும்பி வரும்
நாங்கள் பிட்டம் ஆட்டி
ஓடி வருவதைப்
பெருமையுடன் பார்ப்பாய்
நாங்களும்
எங்கள் பிஞ்சுக் கால்களால்
'விறுவிறு' வென்றால்
விருந்து மறைந்து போகும்
நீ கொத்திக் கொடுப்பாய்
நாங்கள் கத்திச் சிரிப்போம்
அந்தக் கழுகின் நிழலுக்கோ
உன் இறக்கை விரியும்
கால்கள் எழும்பும்
கழுத்து உயரும்
உன் பார்வையின் கூர்மையில்
அந்தக் கழுகே பறந்தோடும்
இப்படி எங்களைப்
பொத்திப் பொத்தி வளர்த்தவளே
அது எப்படி
நாங்கள் வளர்ந்த பின்னே
எங்களைக் கொத்தி கொத்தி
விரட்டுகிறாய்
நாங்கள் தனியாக வாழ்ந்து பார்க்க
எங்களைத் தள்ளி வைக்கிறாயா
தாங்கவில்லை அம்மா
உன் இறகு மடிக்கு
இரவெல்லாம்
ஏங்குகிறோம்
------------------------------------நாகேந்திர பாரதி
புண்படுத்தாத நகைச்சுவை - தமிழூற்றில் திட்டமிடாப் பேச்சு
---------------------------------------------------------------------------------------------------------
புண்படுத்தாத நகைச்சுவை - யூடியூபில்
-------------------------------------------------------------
இவர நீங்க எப்போதாவது
சந்தித்திருக்கலாம். 'என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு
சொல்றேன்' என்று தான் ஆரம்பிப்பார்.' காபி
எப்படி இருக்கு' என்று கேட்டாலும் சரி, 'இந்தக் கணக்கு
உதைக்குதே' என்று அலுவலகத்தில் கேட்டாலும் சரி, எல்லாவற்றுக்கும் இதே
மாதிரி தான் ஆரம்பிப்பார் .
உதாரணத்துக்கு நேற்று அலுவலக மீட்டிங்கில் மேனேஜர் தெரியாத்தனமாக கேட்டுவிட்டார். 'நான்
நம்ம கம்பெனி வரவு செலவு விவரங்களை
எல்லாம் சொல்லி, எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகள் அனைத்தையும் சொல்லிட்டேன்
. இதைப்பற்றி உங்க ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்'
என்று சொன்னதுதான் தாமதம், இவர்
எழுந்துவிட்டார் .
'என்னோட
இருபது வருட அனுபவத்தை வச்சு
இதை எடை போட்டுப் பார்த்ததிலே நீங்க
சொன்ன விஷயங்கள் எல்லாம் ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கிறதா தோணுது.
அனுபவ முத்திரையே இல்லை.
இந்த பிரசன்டேஷன்களை எனக்கு மெயிலில் அனுப்பி வையுங்கள். நான் எல்லாத்தையும் மாத்தி
நாளைக்கு அனுப்பி வைக்கிறேன்.' என்றார்.
' ஏன்
இப்பவே சொல்லுங்களேன்' என்றதற்கு
' இதுதான்
தப்புங்கிறது. எதையும் ஆற அமர யோசித்து
நல்லா முழுமையா அலசிப் பார்த்துத் தான்
சொல்ல முடியும். என்னோட இருபது வருஷ அனுபவத்தை
வச்சு சொல்றேன்.'
' அப்ப நீங்க வெளிய
போகலாம் நாங்க இப்ப பேசி முடிச்சு,
போர்டு மீட்டிங் இருக்கு, அனுப்பப் போகிறோம்' என்றவுடன் கோபமாக வெளியே வந்துவிட்டார்.
இது போல் எத்தனை
முறை அவமானப்பட்டாலும் அவர் திருந்தவே
இல்லை. அன்றைக்கு ரோட்டோரக் கடையில் காபி
ஆர்டர் செய்து விட்டு இவர் தனது இருபது
வருட காபி அனுபவத்தை சொல்லப் போய்
'இவருக்கு காபி கிடையாது' என்று
காபிக் கடைக்காரர்
சொல்லி விட்டு மேலும்
சொன்னார்.
' உங்க
இருபது வருஷ காபியை குடிக்கணும்னா
அந்த முக்கில ரைட்டிலே திரும்பி போனீங்கன்னா
அங்க இருக்கிற இடத்தில் கிடைக்கும்' என்று
சொல்லி அனுப்ப , இவரும் கர்ம சிரத்தையாக
அங்கே போய்ப் பார்த்தால்
ஒரு குட்டி சுவரும் அதற்கு பக்கத்தில் ஒரு கழுதையும் நின்று
கொண்டிருந்தது. கீழே 'காப்பி கிளப்' என்ற போர்டும்
மங்கிப் போய்க் கிடந்தது.
அலுவலகத்தில் மற்றவர் உடுத்தும்
ஆடை விஷயங்களிலும் இவராகவே போய் இவரது இருபது வருட
அனுபவ அபிப்பிராயங்களை சொல்வார். ‘இந்த பேண்ட்டை கீழ்ப் பக்கம்
கொஞ்சம் பெருசாக்கி 'பெல் ' மாதிரி ஆக்கிப் போட்டீங்கன்னா பிரமாதமா இருக்கும். என்னோட
இருபது வருஷ அனுபவத்தை வச்சுச் சொல்றேன். ' 'அய்யா, அதெல்லாம் பழைய கால பேஷன் ' என்றாலும்
ஒத்துக்கொள்ள மாட்டார்.
இவரது தொந்தரவு
பொறுக்க முடியாமல் இவரது மனைவியும்
அவ்வப்பொழுது இவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக தகவல். ஒருமுறை இவர் தனது
மனைவியிடம் சொன்னார்.' எனது 20 வருட அனுபவத்தை பற்றி
உனக்குப் பிடிக்காவிட்டால் 10 வருட அனுபவத்தை பற்றி
மட்டுமாவது சொல்கிறேன் , கேளேன் ' என்று
சொல்ல ஆரம்பித்ததும் அவர் மனைவி ‘சரி’
என்று கேட்க அவர்
இப்படி ஆரம்பித்தார். ' எனது இரண்டு பத்து
வருட அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ' இப்படி
அவரால் அவரது இருபது வருட அனுபவத்தில் இருந்து
விலகி வரவே முடியவில்லை.
இப்படியாக இருந்த இவர் ஒரு நாள்
அலுவலகத்தில் இருபது வருடம்
பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்தது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று மாலை அவரோடு சேர்ந்து
அவர் வீட்டுக்குச் சென்றபோது
தான் விபரம் தெரியவந்தது. பக்கத்து வீட்டில் புதிதாக வந்துள்ள வயதானவர் ஒருவர் இவர் காம்பவுண்டுக்குள் நுழையும் போதே
இப்படி வரவேற்றார்.' என்னோட அம்பது வருஷ
அனுபவத்துல ஆபீஸ்
விட்டு கரெக்டா ஆறு மணிக்கே வீட்டுக்குள்
நுழைகிற ஆளை இப்பத்தான்
பார்க்கிறேன். உம்மைத் தான்
சொல்றேன் ஓய்' . இந்த
வரவேற்பு நம் பக்கம் திரும்புவதற்குள் நாங்கள்
இடத்தைக் காலி செய்துவிட்டு வந்து
விட்டோம்.
----------------------------------நாகேந்திர பாரதி
சாலைக்கொரு சோகம் - கவிதை
--------------------------------------------------------
கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே
கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே
மண் ரோடாய் நானிருந்த அந்தக் காலம்
மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்
சேற்றுமண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்
சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும்
காற்று வர மண் பறந்து வீசி ஓடும்
காலத்தில் செடிகளிலே பூக்கள் ஆடும்
ஓரத்தில் வளர்ந்திருந்த புற் செடியும்
ஒத்திகைப் பேச்சுக்கு உடன் படியும்
காலடியும் கால்நடையும் வண்டிகளும்
மிதிக்கையிலே வலி தாங்கி மண் இளகும்
காலத்தின் மாற்றத்தால் தாராய் ஆனேன்
கல்லாகி மண்ணாகிக் கருப்பாய்ப் போனேன்
வானத்து நீரோடு வாழ்க்கை இல்லை
வாய்த் துணைக்கு வாய்த்திருந்த புல்லும் இல்லை
இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்
விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்
எப்போதும் எனக்குள்ளே ஏக்கச் சோகம்
என்னுள்ளே துடிக்கின்ற மண்ணின் தாகம்
-----------------------------------------நாகேந்திர பாரதி
கடவுள் உருவம் - சிறுகதை
---------------------------------------------
உள்ளே நுழைந்த உடனேயே மரகதம் சொன்னாள் ' போன வாரம் லோன் ஆபீசர் வந்துட்டு போனாருங்க. ஒரு வாரத்துல பணத்தை கட்டலைன்னா கேசு போட்டுருவாங்களாம் '.
' இருபது ஆயிரம் ரூபாய். எப்படிப் புரட்டுவது'.
டவுன்ல மண்ணு வண்டி அடிச்சிட்டு ஒரு வாரம் கழிச்சு இப்பத்தான் திரும்பி வருகிறான் வேலன் . கையில் இருப்பது ஆயிரம் ரூபாய். தலை சுற்றுவது போல் இருந்தது . விழ இருந்தவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் மரகதம்.
' என்ன ஆச்சுங்க, வாங்க, வைத்தியர் கிட்ட போயிட்டு வந்துடலாம்'
' வேணாம் புள்ள, ஒரு வாரம் வெயிலில் அலைஞ்சது . அந்தத் தலைவலி தைலத்தை எடுத்து வா. எல்லாம் சரியாயிடும்.'
இரண்டு வருடங்களாக மழை பொய்த்துப் போய் வறண்டு போன பூமி. வாங்கிய கடன் வட்டி போட்டு வளர்ந்திருக்கிறது. ஆபீஸர் நல்லவர் தான். அவரும் எத்தனை நாள்தான் பொறுப்பார் . அதுவும் மேலதிகாரி தொந்தரவு வேறு. அவர் கோர்ட்டுக்குப் போனால் இருக்கிற வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. சாணி மெழுகிய தரைதான். மேலே கூரை தான். ஆனால் உயிர் ஆச்சே. இதுவும் போனால் எங்கே இருப்பது. மானம் மரியாதை எல்லாம் ?
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மரகதத்துக்கு அழுவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் கொழித்த பூமிதான். இந்த மண்ணுத் திண்ணையிலே இருந்து பார்த்தால் இப்போது காய்ந்து போய்க் கிடக்கும் பூமி அப்போ விளைந்த பூமி தான் .
குழைந்த மண்ணோடு நீர் கலந்து கிடந்த வயலில், கூடையில் இருக்கும் விதைநெல் மணிகளை வீசி எறிந்து விதைத்த நாட்கள். வளர்ந்த நாத்தோடு சேர்த்து வளர்ந்த களை எடுக்க பக்கத்து ஊர் பொண்டுகளைக் கூலி பேசி அழைத்து வந்த நாட்கள். அதிகாலை எழுந்து போய் வயலில் தண்ணி பாய்ச்சி விட்டு தோளில் மம்பட்டியோடு நடந்து வந்தது. கதிர் முற்றி அறுத்துப் போரடித்துப் போட்டு வைக்கப்பட்ட வைக்கோல் படைப்பின் மேல் உட்கார்ந்து அவித்த மொச்சை சாப்பிட்டது .
கனவு போல் தெரிந்தது .ஆகாயம் ரெண்டு வருஷமா ஊத்தாம விட்டதாலே இருந்த நெல்லோடு சேர்த்து விதை நெல்லையும் சேர்த்து அவித்து சாப்பிட்டு இப்ப ரேஷன் அரிசியில் ஜீவன் . பக்கத்து டவுனிலே மண்ணு வண்டி அடிச்சு வந்த காசு ரெண்டு பேரு வயித்துப் பாட்டுக்குத் தான் வருது. இதிலே மரகதம் வயித்திலே இன்னொரு ஜீவன்.
வாசலில் சைக்கிள் சப்தம். பேங்க் ஆபீஸர் தான் . 'வேலா சந்தோச சமாச்சாரம். உங்க எல்லார் கடன்களையும் தள்ளுபடி செய்யச் சொல்லி ஆர்டர் வந்துருச்சு. ' சொல்லிவிட்டு ' வரட்டுமா' என்றபடி பெடலை உந்திச்செல்லும் அவர் உருவத்தில் கடவுள் தெரிந்தார் வேலனுக்கும் மரகதத்திற்கும் .
-------------------------------------------------------நாகேந்திர பாரதி
இலை உதிர் காலம் - கவிதை
--------------------------------------------------------
அந்த மரங்களுக்கு வலிக்கிறது
நகக் கண்களைப் பெயர்த்தெடுக்கும் வலி
உதிரும் நகங்களாய்ப் பழுத்த இலைகள்
திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
இந்தக் காற்றுக் காலத்தில்
இப்படியொரு கண்றாவி
இங்கும் அங்குமாய்
ஆடிக்கொண்டு வேறு
கூட்டமாய்ச் செல்லும் பறவைகள்
கடந்து செல்கின்றன
கூப்பிட்டால் மட்டும்
வரவா போகின்றன
நெருக்கி அடித்து
இலைகள் இருந்தால்
உள்ளுக்குள் வந்து
உட்கார்ந்து கொள்ளும்
இந்தக் குச்சிகளில் வந்து
மாட்டிக் கொண்டால்
இறகுகளுக்கு வலிக்கும் என்று
தெரியாதா என்ன
சூரியன் கூட முறைத்துப் பார்க்கிறான்
அவனுக்கும்
அந்த பச்சை இலைகளைப் பார்த்து
தனது சூட்டைத் தணிக்கும் சந்தோஷம்
பறிபோன கோபம்
இந்த நிலவும் இரவில்
இலையுதிர்ந்த மரத்தை
ஏனோதானோ என்றுதான்
பார்த்துப் போகிறது
ஒரு மழை வரட்டும்
கம்புகளின் காம்புகள்
விரிந்து இலைகள் வரும்
விரைந்து இலை மூடி
கனத்த பச்சையாகி
காட்டும் அழகை
அப்போது
காய் வரும் , பழம் வரும்
காணாமல் போன
பறவைகளும் வரும்
-----------------------------------நாகேந்திர பாரதி
தேறுதல் சேதி -சிறுகதை
--------------------------------------------
கைரேகை மாதிரி கண்மாய் முழுக்க ரேகைகள். பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் களிமண். அங்கங்கே வாடிப்போய் நிற்கும் கருவை மரங்கள். கண்ணீரை அடக்க முடியவில்லை வேலனால்.
கரையை முட்டி மோதும் தண்ணீருக்குள் இந்தக் கரையில் இருந்து அந்த கரைக்குப் போட்டி போட்டு நீச்சல் அடித்தது , கண்மாய் மே ட்டு சகதி வழுக்காமல் நடக்க பையன் மணிக்குப் பழகிக் கொடுத்தது, எல்லாம் படம் போல் ஓடியது.
'பொதுக், பொதுக் ' என்று வழுக்கி விடும் அந்த மேட்டுக் களிமண் இப்போது இறுகிப்போய்
விறைத்து, வெறும் பாதத்தைக் குத்துவதை உணர முடிந்தது. . கண்மாய் நடுவே தோண்டி உள்ள கிணற்றைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் . 'வாளி கால் வாசி முங்கியதும் மடங்கிப் படுத்து விடுவதாக' மனைவி ருக்கு சொன்னது நினைவுக்கு வந்தது .'இந்த ஊத்துத் தண்ணியும் இன்னும் எத்தனை நாளைக்கு ' பெருமூச்சுவிட்டபடி வீடு திரும்பினான் வேலன் .
முழங்கால் வரை புழுதியோடு ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்த மணி அவனைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்டான் .'அப்பா , தூக்கு' .அவனைத் தூக்கி தனது கை மடக்கில் உட்கார வைத்துக் கொண்டு வீட்டுக்குள் குனிந்து நுழைந்தான்.
'கூரையெல்லாம் காஞ்சு போச்சு . புதுக்கூரை வேயணும். பச்சை ஓலை இல்லையே .பனைமரம் எல்லாம் சீக்காளி மாதிரி தொங்கிப் போய் நிக்குது. எல்லாமே மழைக்கு ஏங்கி காஞ்சு போய்க் கிடக்குது. இந்த மானம் ஏன் இப்படிப் பழி வாங்குது. சாமி குத்தம் இருக்குமுன்னு நினைச்சு, தேவி அம்மன் கோயிலுக்கு கிடா வெட்டி ஊர் கூடி பொங்கல் வச்சாச்சு, கருக்க மாட்டேங்குதே '
அலுப்போடு தரையில் உட்கார்ந்த வேலன் முன் நெளிந்து போன அலுமினியத் தட்டை நகர்த்தினாள் ருக்கு. 'பழைய சோறும் ஊறப்போட்ட மிளகாயும்' . தண்ணிக் குடம் தூக்கி வந்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. ' என்ன புள்ள உடம்புக்கு ஒண்ணுமில்லையே' கவலையோடு கேட்டான் . 'ஒண்ணும் இல்ல இடுப்பெல்லாம் வலிக்குது'.
'நான் தைலம் தடவி விடறேன் அம்மா, எல்லாம் சரியாயிடும்' என்ற அருமை மகன் மணியைக் கட்டிப்பிடித்து 'என் ராசா' என்று முத்தம் கொடுத்தாள் . இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கின்ற குழந்தைச் செல்வத்தின் வாயில் ஒரு கவளம் பழைய சோற்றை உருட்டி ஆசையோடு ஊட்டி விட்டாள் .
ஊட்டி விட்டபடி வேலனிடம் மகிழ்ச்சியோடு சொன்னாள் ' ஏங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா, தேர்தல் வருதாமே , தேதி சொல்லிட்டாங்களாமே . இனி கட்சிக்காரங்க எல்லாம் வந்து காசு, துணிமணி எல்லாம் கொடுப்பாங்க. கொஞ்ச நாள் ஓடும் ' என்று நம்பிக்கையோடு பேசும் ருக்குவைப் பார்த்தபடி இருந்தான் வேலன் .
------------------------------------------நாகேந்திர பாரதி
நண்பர்கள் -சிறுகதை
---------------------------------------------
நண்பர்கள் இருவர் . ஒருவர் மற்றவர் நம்பிக்கையை மாத்தப் பாக்கிறாங்க , முடியலியே . . ஒருவர் புராணக் கதைகள் தெரிந்த புதுக்கவிதை எழுத்தாளர் , . மற்றவர் இங்கர்சால் கருத்தில் மூழ்கிய சிறுகதை எழுத்தாளர்.
ஒருநாள் நாத்திக நண்பர் எழுத்தாளர் பாணியிலே
"நதிக்கு உள்ளே ஓடும் காட்டாறு போல, மனதுக்குள் பெருக்கெடுக்கும் காதல் போல, உங்கள் மனதின் உள்ளே போய்த் தேடிப் பார்த்தால் உண்மை புரியும், ஏன் கடவுளை வெளியே தேடுகிறீர்கள் " என்றார் .
ஆத்திகர் " உள்ளே போய்த் தேட எனக்கு நேரம் இல்லை. நான் கோயிலுக்குப் போகணும். ' ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
இன்னொரு நாள், ஆத்திக நண்பர் , நாத்திகரிடம் சொன்னாரு , புதுமைக் கவிஞர் அல்லவா . புதுக் கவிதை பாணியில் ,
" இறைவன் என்னருகே வந்து அமர்ந்தான், நானும் பேசவில்லை, அவனும் பேசவில்லை. ." ' இது மாதிரி , இறைவன் உங்க கிட்ட வர வேண்டாமா ' என்றார் .
"எனக்குப் பேசுற இறைவன் தான் வேண்டும். " என்ற நாத்திகருக்கு அந்தப் புதுக் கவிதையை நினைத்துப் பொங்கிய சிரிப்பில் கண்ணீர் நிறைந்தது .
தத்தம் நம்பிக்கையில் அழுத்தம் கொண்ட இவர்கள் மற்றவர்கள் நம்பிக்கையை மாற்ற நினைத்துக் கிண்டல் செய்து கொண்டு , முயற்சி செய்து கொண்டே இருந்தாலும், மாறாத நட்போடு இருந்தார்கள். ஒருவேளை அந்த நட்புதான் கடவுளோ .
--------------------------------------நாகேந்திர பாரதி
எந்திரன் - சிறுகதை
---------------------------------------------------
செயற்கை அறிவூட்டப்பட்ட இயந்திர மனிதனுக்குள் உலகின் பல்வேறு மதங்களின் இலக்கியங்களை அந்தந்த மொழிகளிலேயே பதிந்து வைத்திருந்தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் , மதங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் , வேறுபட்ட மனிதர்களின் மன உணர்வுகளையும் சேர்த்திருந்தான் .
பல்வேறு கருத்துகளைப் பற்றி அந்த இயந்திர மனிதனிடம் கேட்டால் , மனிதர்களின் மன உணர்வோடு அந்த மொழியிலேயே பதில் சொல்லும்படி பழக்கிருந்தான்.மொழி பெயர்ப்பு வசதியும் உண்டு .
ஆராய்ச்சியின் நோக்கம் ஆரம்ப காலத்தில் எல்லா மதங்களுக்கும் அன்பே அடிப்படை என்பதை இலக்கிய, சமுதாய , கால பூர்வமாக நிறுவி உலகில் மத நல்லிணக்கத்தை உருவாக்குவதே.
அந்த இயந்திர மனிதனுக்கு ' ஆத்திகன் ' என்று பெயரிட்டு ,இவனை ' ஆண்டவனே ' என்று அழைக்கும்படி பழக்கப்படுத்தி வைத்திருந்தான் .
அன்று பசியைப் பற்றி அவன் 'ஆத்திகனே ' என்று அழைத்துக் கேட்ட கேள்விக்கு , எல்லா மத இலக்கியங்களையும் ஆராய்ந்து , எல்லாக் காலங்களிலும், எல்லா மொழிகளிலும் ஏற்பட்ட ஏழையின் உணர்வைத் தமிழில் மொழிபெயர்த்து இயந்திர மனிதன் ,
"முதல்லே சாப்பாடு போடு, அப்புறம் பேசலாம் ஆண்டவனே ," கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.
-------------------------------------நாகேந்திர பாரதி
திருடன் - சிறுகதை
-----------------------------------
சேதுக்கரைக் கடற்கரையோர இருண்ட மூலையில் முனியாண்டிக்காகக் காத்திருந்தது அந்தக் கள்ளத் தோணி. அரசியலிலும் காவல் துறையிலும் இருக்கும் கருப்பு ஆடுகளுக்கு லக்ஷக்கணக்கில் வருமானத்தைக் கொடுத்துக் கொண்டு , புராதானப் பொருட்களை விரும்பும் கோடீஸ்வரக்காரர்களுக்காகக் , கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் புரளும் கடத்தல் தொழிலின் அங்கம் அந்தக் கள்ளத் தோணி.
பக்கத்தில் உள்ள அந்தப் பாழடைந்த நடராஜர் கோயில் கதவின் பூட்டுகள் , முனியாண்டியின் கள்ளச்சாவிக்கு நெகிழ்ந்து கொடுத்தன . தமிழ்நாட்டில் பராமரிப்பு குன்றிய கோயில்களின் கலைப் பொக்கிஷங்களைத் திருடித் தரும் கூட்டத்தின் அடிமட்டக் கையாள் .
புதர்கள் மண்டிக்கிடந்த பிரகாரம் தாண்டி , கர்ப்பக்கிரகக் கதவையும் திறந்து , டார்ச் லைட்டை அந்த நடராஜர் சிலை மேல் அடித்தான். கைகளை விரித்து ,கால்களைத் தூக்கி ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருந்த நடராஜரின் கண்களில் இருந்து பாய்ந்த ஆனந்த ஒளி தன்னைப் பக்திப் பரவசம் ஆக்குவதை ஒரு புதிய அனுபவமாக உணர்ந்த முனியாண்டி ,குடும்பத்தின் வறுமையையும் மீறி
'"ஆண்டவனே, என்னை மன்னித்து விடு ," கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.
--------------------------------நாகேந்திர பாரதி
நடிகன் - சிறுகதை
---------------------------------------
'கட் , கட்' என்ற இயக்குனர் , மேகநாதனிடம் வந்து அலுத்துக் கொண்டார். ' என்ன தம்பி , பத்து டேக் ஆயாச்சு. என்ன ஆச்சு ' என்றவரின் மனதில் ஓடிய எண்ணம் .' எவ்வளவு பெரிய நடிகன் இவன், இவன் சிவனடியாராய் நடித்த படம் பார்த்து விட்டு வந்த ரசிகர் கூட்டம் எழுப்பிய 'நமச்சிவாய' கோஷம். ஆழ்வாராய் நடித்த படம் பார்த்து தியேட்டருக்குள்ளேயே ஒலித்த ' நமோ நாராயணா ' நாமம். என்ன ஆயிற்று இன்று. ‘யோசிக்க யோசிக்கத் தெளிவானது அவர் மனம்.
மேகநாதனிடம் சென்று சொன்னார் ."தம்பி, நீங்க ' என்னை ஆத்திகனாகவே இருக்க விடு ' ன்னு சொல்லுங்க. நாங்க டப்பிங்கில் மாத்திக்கிறோம். " என்றதும் எழுந்து வந்தான். ஒரே டேக் தான். உணர்ச்சிப் பிழம்பாகி கண்ணீர் விட்டு அவன் சொன்ன அந்த வசனத்திற்கும், உடல் மொழிக்கும், அனைவரும் கை தட்டினார்.
டப்பிங்கில் 'ஆத்திகன் ' நாத்திகனாக மாற்றப்பட, சரி பார்த்துக் கொண்டு இருந்த இயக்குனரின் திரையில் மேகநாதன்,"என்னை நாத்திகனாகவே இருக்கவிடு ," கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான் திரையில் . சேர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த மேகநாதன் , 'அய்யா , நான் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுகிறேன், இந்தப் படத்தில் இருந்து என்னை எடுத்து விடுங்கள் . என் ரசிகர்களை நான் திசை திருப்ப விரும்பவில்லை ' என்றான் .
-------------நாகேந்திர பாரதி
தலைவன் - சிறுகதை
-------------------------------------
வடக்குத்தெரு வேணு, முனியசாமி கோயில் விழாத் தலைவன் . தெக்குத்தெரு கருப்புசாமி திருவிழாவுக்கு எதிராக முனியசாமி விழாவை நடத்த , மதுரையில் இருந்து ஏற்பாடுகள் செய்ய வேணுவால்தான் முடியும் என்று உசுப்பி விட்ட பெரியவர்கள் வார்த்தைக்கு வளைந்து விட்டான் . தலைமுறை தலைமுறையைத் தொடரும் திருவிழாத் தகராறு .
அன்று கருப்புசாமி தேர் வடக்குத்தெருவில் நுழைந்தபோது , வேணு ஏற்பாடு செய்திருந்த கரகம், நாயனம், சைக்கிள் தீப்பந்தம் தெருவை மறைத்திருந்தன . அப்போது தேர் உள்ளிருந்து வெளியேறிய அரிவாளும் ஈட்டியும் , வடக்குத்தெரு ஆட்கள் மேல் வீசப்பட , இதற்காகவே காத்திருந்ததுபோல், இவர்கள் கைகளிலும் அரிவாள். எப்படி இது. வேணுவுக்கே தெரியாத ஏற்பாடு . குறுக்கே புகுந்த வேணுவின் தோளில் விழுந்தது வெட்டு. எறியப்பட்டு விழுந்த அவன் முன்னே கோயில் கொடிக்கம்பம் .
----------------------------------------------------நாகேந்திர பாரதி
சூரிய உதயம் - கவிதை
-----------------------------------------
பனைமரத் திடையே பகலவன் தோன்ற
பார்த்த நிலவுப் பெண்பயம் கொள்ள
தனிமை கண்டு தவித்த அப்பெண்
தவழ்ந்திடும் மேகம் தாயென மறைய
தினைகதிர் கொய்ய நின்றிடும் மறவர்
தினவுதோள் பொங்கி ஆர்த்திடும் வேளை
சுனையிடைத் திகழும் சுந்தரக் கொக்கொடு
சுருதியைச் சேர்க்கும் புள்ளினம் ஒருபால்
கணைதொடு கயல்விழி மாதரும் கூடி
வளைகரம் ஒலிக்க வாவியில் ஆடி
இணையிலாப் பொருளை மனதிலே ஏற்றி
எழுகதிர் கண்டு போற்றினர் பாராய்
-----------------------------------------------நாகேந்திர பாரதி
காதலன் -சிறுகதை
-------------------------------------------------------------
'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ' என்ற சிவ வாக்கியச் சித்தர் பாடல் நாத்திகப் பாடல் போல் தோன்றினாலும் , உள்ளிருக்கும் ஆத்திகக் கருத்தை உணராமலேயே, கோயிலுக்குக் போகத் தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த சுந்தரத்தை இழுத்துக் கொண்டு வந்து மதுரை ஆடி வீதி திருவள்ளுவர் மண்டபத்தின் அருகே உட்கார்த்தி வைத்துவிட்டான் அவன் நண்பன் சேகர். அன்று சிறப்புச் சொற்பொழிவு செய்பவர் பக்திச் செல்வி என்ற பட்டப் பெயரோடு விளங்கும் பார்வதி .
பழந்தமிழ் இலக்கியம், பக்திப் புராணங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து, பக்தி மணம் கமழும் சொற்பொழிவுகளைக் , கோயில்கள் தோறும் சென்று உரையாற்றி இறைவனுக்கே தன்னை சமர்ப்பித்துக் கொண்ட இளம் பெண் பார்வதி . கும்பிடச் சொல்லும் தோற்றத்தோடு அவள் அங்கே வரும்போதே எழுந்து நின்றவர் பலர். தன்னை அறியாமலே தானும் எழுந்து நின்றான் சுந்தரம்.
'நமச்சிவாய வாழ்க , நாதன் தாள் வாழ்க' என்று ஆரம்பித்த பார்வதி ஆற்றிய பக்தி உரைக்குள் சுந்தரத்தை மூழ்க வைத்தது அந்தக் குரலா, அதற்குள் இருந்த பக்தியா, அந்தக் கம்பீரத் தோற்றமா . ஒன்றுமே புரியாமல், பார்த்தது பார்த்தபடி, கேட்டது கேட்டபடி மயங்கிக் கிடந்தான் சுந்தரம். இறுதியாக 'ஹர ஹர மஹா தேவா ' என்ற இசைப் பாடலின் இனிய குரலில் ஆழ்ந்து போன சுந்தரத்தை ' முடிந்தது உரை, எழும்பு ,வீட்டுக்குப் போகலாம் ' என்று எழுப்பியவன் சேகர். ஏதோ ஒரு இடத்தில் எங்கோ சென்றது போல் இருந்தது மட்டும் இப்போது ஞாபகம் வந்தது சுந்தரத்திற்கு.
'சேகர் , அடுத்து இவங்க சொற்பொழிவு எங்கே' என்று கேட்டு , ஒவ்வொரு ஊர்க் கோயிலாகப் போய் , குடும்பம் மறந்து , பார்வதி சொற்பொழிவைக் கேட்பதே, தன் வாழ்வின் பயன் என்று கிடந்தான். பார்வதி அருகில் செல்வதே இல்லை. தூரத்தில் இருந்து அவளைப் பார்ப்பதே, அவள் குரலைக் கேட்பதே போதும் ' என்று பைத்தியம் போல் இருந்தான். அவனைத் திருப்பி அழைத்து வர சேகரின் துணையையே நாடினர் சுந்தரம் குடும்பத்தார். ' என்னென்னே புரியலேடா , இது பக்தியா, வேற என்னன்னே தெரியலே, பார்வதி குரலை ஒரு நாள் கேட்காட்டாலே பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிடுறேண்டா ' கலங்கிய சுந்தரத்தை இழுத்துச் சென்று மதுரை சோமசுந்தரர் சன்னதி முன் நிறுத்தி , ஆரம்பித்த இடத்திலேயே தான் இதன் முடிவு கிடைக்க வேண்டும். 'வேண்டிக் கொள் இப்படி ' என்று சேகர் சொன்னதை இறைவனைப் பார்த்தபடி சொன்னான் ' சுந்தரம் .
"ஆண்டவனே, என்னை நாத்திகனாகவே இருக்க விடு ," கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.
-----------------------------------------நாகேந்திர பாரதி
'தாழமுக்கம்' சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------------
நன்றி அழகியசிங்கர், வணக்கம் நவீன விருட்சம் நண்பர்களே .
மென்மையான சோகம் கலந்த காதல் கதைகள், எனக்குப் படிக்கப் பிடிக்கும், எழுதவும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்ட அழகியசிங்கர் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கும் கதை ஈழ எழுத்தாளர் தாட்சாயணி அவர்கள் படைத்துள்ள இந்தத் ' தாழமுக்கம் ' கதை.
'தாழமுக்கம் ' என்ற தலைப்பே படிக்கும் ஆவலைத் தூண்டியது. படித்து முடித்தபின்தான் இந்தத் தலைப்பின் பொருள் விளங்கியது. நாம் நமது தொலைக்காட்சி, வானொலிச் செய்திகளில் மழைக் காலத்தில் அடிக்கடி கேட்போமே ,' வங்கக் கடலில் உருவாயிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் , சென்னையிலே, அதற்கு மேலோ கீழோ, இன்றோ நாளையோ, மிதமாகவோ , கனமாகவோ , மழை பெய்தோ பெய்யாமலோ இருக்கலாம் என்று. அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தான் தாழமுக்கம். தாழ் ப்ளஸ் அமுக்கம். தாழ்வான அழுத்தம். எவ்வளவு அழகான ஈழத் தமிழ். இது போன்று இனிமையான தமிழ் வார்த்தைகள் இந்தக் கதை உரையாடல்களில் கலந்து வந்து , இந்தக் கதைக்கே, ஒரு சங்கீதப் பின்னணியைக் கொடுக்கிறது . கே வி மஹாதேவன் அவர்களோட கர்னாடிக் மியூசிக் பின்னணி மாதிரி.
வழக்கமான காதல் கதைதான். பெற்றோரை எதிர்த்து மணமுடிக்கும் காதலர்கள் படும் கஷ்டத்தைச் சொல்லும் கதைதான். ஆனால் அதற்குத் தேர்ந்தெடுத்திருக்கும் லாக்டௌன் காலமும் அதில் அன்றாட வேலையும் கிடைக்காமல் , வெளியேற முடியாமல் தவிக்கும் அந்தத் தொழிலாளி காதலன் நிலையும் , நமக்கும் பரிச்சயமான இந்தக் காலச் சூழ்நிலையாய் இருப்பதால் நம்மை உடனே கதையோடு ஒன்ற வைத்து விட்டது.
இரால் மீன் சாப்பிட ஆசைப்படும் காதல் மனைவிக்கு அதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கும் தன்னை எண்ணி வருத்தப்படும் அந்த இளைஞனின் ஆதங்கத்தோடு ஆரம்பிக்கும் இந்தக் காதல் அடுத்தடுத்து ஆசிரியர் காண்பிக்கும் காட்சிகள் எல்லாமே மென்மையான காதல் காட்சிகள்.
ஆரம்பத்தில் கோயில் நந்தவனத்தில் அவள் பூப்பறித்து மாலையாக்கி கடவுளுக்குப் படைக்கும் கைங்கரியத்துக்கு இடைஞ்சலாக , பக்கத்தில் கோயில் கட்டுமான வேலை செய்து கொண்டு இருக்கும் அவன் ரேடியோவை அலற வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்பது. அதை அவள் நிறுத்தச் சொல்லும் போது அவன் வம்பு வளர்ப்பது , பிறகு மறுநாள் அவன் அவளுக்காக அதை நிறுத்துவது ,
' Pity follows love ' என்று ஒரு shakespearen வரி வருமே. இரக்கத்தைத் தொடர்ந்து காதல் வந்துடும் என்று. அது மாதிரி , அவன் அவளுக்காகத் தனக்குப் பிடித்தமான சினிமாப் பாடல்களையே நிறுத்திட்டான்னாதும் , அவன் மேலே ஒரு பிரியம் வந்துடுது அவளுக்கு.. அவன் உடல் உழைப்பின் களைப்பை மறக்க பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்ததை இவளுக்காக நிறுத்தியதை உணர்ந்து அந்த இரக்க உணர்வு காதலாக மாறுகிறது
சில நாட்களிலே அவளுக்கும் அந்தப் பாட்டுக்களைக் கேட்கும் ஆசை வந்து , 'எனக்காகப் பாட்டை ஒருத்தரும் நிப்பாட்ட வேண்டாம் , மெல்லப் போடலாம் , பிரச்னை இல்லை ' என்று கேட்பது, என்று மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் அந்தக் காட்சிகளும் வருணனைகளும் அந்த நந்தவனத்தின் நந்தியாவட்டைப் பூக்களும் , பொன்னூச்சிப் பூக்களுமாய் நம் முன் மலர்கின்றன. நீங்க அதெல்லாம் படிச்சு அனுபவிக்கணும்.
அவர்கள் பரிமாறிக் கொண்ட புன்னகைகள், பார்வைகள் தொடர்ந்து , அவள் பரீட்சையில் இரண்டாம் முறை தோல்வி அடைஞ்சுடுறா. எதிர் பார்த்தது தானே. காதல் பாடம் படிக்கும்போது மற்ற பாடம் எல்லாம் மனதிலே ஏறாது தானே.'அவனை விட வேறொரு வெகுமதி தனக்குத் தேவை இல்லை ' என்று அவள் எண்ணத் தொடங்கி விட்டாள் ' என்ற வரிகளில் அந்தக் காதலின் ஆழத்தை நமக்குக் காட்டி விடுகிறார்.
பிறகென்ன, , நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாத அவள் , அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் இவனை மணமுடித்து , அந்த ஓலைக் குடிசையில், மண் தரை வீட்டில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறாள்.
இந்த நேரம் லாக் டவுன் வந்துடுது. இந்த லாக் டவுனைப் பத்தி சொல்றப்போ தான், நமக்கும் நமக்குத் தெரிந்த எவ்வளவு பேர் அன்றாட கூலி வேலை செய்யும் எவ்வளவு பேர், எப்படி எல்லாம் வறுமையில் கஷ்டப்பட்டார்கள் என்பது நினைவுக்கு வந்து, கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது .
வெளியிலும் போக முடியாமல், வேலையும் கிடைக்காமல், சாப்பாட்டுக்கு அரிசி இல்லாமல் , நண்பன் ஒருவன் கொண்டு வந்து கொடுக்கும் கழிவு மரக்கறிகளை சமைத்து உண்டு கொண்டிருக்கும் அந்த வறுமை நிலையைக் காட்டும் இடங்களில் எல்லாம், அந்த வறுமையையும் மீறி , அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அன்பையும், காதலையும் ஆசிரியர் வெளிப்படுத்தும் இடங்கள் உணர்ச்சிகரமானவை.
இங்கே ஆண் பெண் மன உணர்வுகளையும் அருமையா சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
சவுகரியமான இருந்த இவளைக் கஷ்டப்பட வைச்சுட்டோமேன்னு அவன் புழுங்கிக்கிட்டே இருப்பான். அவள் அமைதியா எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அமைதியா இருப்பா.
ஒன்றிரெண்டு காட்சிகள் சொல்றேன் .
காலையிலே எந்திரிச்சதும் அடுப்பில் குவிந்திருந்த சாம்பலை அள்ளி உள்ளங்கையில் ஏத்திக்கிட்டு அவ பாட்டுக்கு பல்லு விளக்கப் போறா. இவன் பார்த்து வருத்தப்படுறான்.
“சாம்பலைத் தேய்த்து பல் விளக்கிக் கொண்டிருந்த அவளைப் பார்க்க அவனுக்கு நெஞ்சு எரிந்தது. அவளது வீட்டில் பற்பசை இல்லாமல் ஒரு நாளும் பல் துலக்கியிருக்க மாட்டாள் .'”
அவ அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம பல்லு விளக்கிட்டு வந்து தேநீர் போட ஆரம்பிக்கிறா
இன்னும் ஒரு காட்சி
இவன், யார் கிட்டேயும் எதுவும் கேட்க மாட்டான். ஆனால் இவளுக்காக நண்பனிடம் கேட்டு அவன் கொண்டு வந்து கொடுத்த மரவள்ளிக் கிழங்கையும் தேங்காயையும் இவள் கிட்டே குடுக்கிறான். ,
அதை அவிக்கப் போட்டுட்டு வர்றாள் அவள் 'இண்டையப் பாட்டை ஒருவாறு சமாளிச்சுப் போடலாம்' என்றபடி , அவனிடம் தேநீரை நீட்டி விட்டு அவன் அருகே அமர்ந்தாள் . அவன் அவளது நெற்றியை வருடி விட்டான் ' .
அவள் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமம் அவளுக்கு ஒரு புது சோபையைத் தருவது போலிருந்தது
அப்போது ' தாழ முக்கம் ' ஏற்பட்டு, மழை பொழிய ஆரம்பிக்கிறது .
அவனை நெருங்கி உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு மிடறாய் தேநீரை உறிஞ்சிக் கொண்டு மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். காற்றில் குளிர் கூடத் தொடங்கியது . அவள் அவனது தோள்களைக் கட்டிக் கொண்டாள் .
அவனுக்கு தேநீரின் ருசியையும் அவளின் நெருக்கத்தையும் அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது .
இந்த நேரத்திலே பொதுவா யாருக்கும் என்ன நினைப்பு வரும். உங்களுக்குத் தெரியாதது இல்லே. ஆனா, இங்கே தான் அந்த காதல் அன்பு வெளிச்சிடும் பளிச்சிடும் வரிகள் வர்றது. .
“
அவன் நினைக்கிறான்.
“இரவு குளிர் கூடினால் ,ஆனா போர்வை இல்லாமல் , அவள் குளிரில் கொடுகப் போகிறாளே எனத் தோன்றியது . '
அவனே அவளுக்குப் போர்வையாய் மாறக் கூடிய அந்த சந்தர்ப்பத்திலே கூட,, அவளுக்குப் போர்வை வாங்கி கொடுக்க முடியாமல் இருக்கிறோமோ என்ற நினைப்பு வருகிறதே, அது உடலை மீறிய உள்ளக் காதல் அல்லவா.
அந்த அன்பையும் , காதலையும் , காதலித்து மணந்த அவளை சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும் இந்த லாக் டௌன் காலத்து கஷ்டத்தை ,தனது இயலாமையை நினைத்து அவன் தவிக்கும் தவிப்பை வெளிப்படுத்தும் இடங்கள் உருக்கமான இருக்கின்றன.
நீங்கள் படித்து ரசிக்க வேண்டும். என்னைப் போல் ரெம்ப உணர்ச்சி பூர்வமானவராய் இருந்தால் படிக்கும் போதே, உள்ளுக்குள் அழ வேண்டும்
அதன் பின், அவள் அவித்த அந்த மரவள்ளிக் கிழங்கை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பாதி மரவள்ளிக் கிழங்கை அவன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவன் கத்திக் கொண்டு வருகிறான்.
'இந்த மழையினால் பேயாட்டம் ஆடும் பனை மரம் வெட்ட ஆள் தேடுகிறார் ' என்று
உடனே இவன் கிளம்பி விடுகிறான். வேலைக்குப் போனா உடனே காசு கிடைக்குமே. அவளுக்கு வேண்டியதை வாங்கிடலாமே .
'சாப்பிட்டுட்டுப் பொங்கோவனப்பா ' ராகினியின் குரல் அவனை இழுக்க அவன் திரும்பிப் பார்த்தான்.
நீர் சாப்பிடும். நான் வரேக்கை அரிசி வாங்கி வாறன் , நாளைக்கு இறாலோடைதான் சாப்பாடு '
அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை .
எந்தத் தாழமுக்கம் வந்தாலென்ன என்பது போல் அவன் உறுதியோடு நடக்க ஆரம்பித்தான்.
என்று முடிக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா விலே ஒரு இடம் உண்டு. ஆண்டனி கிளியோபாட்ரா கிட்டே சொல்வான்.
Let rome melt in tiber,
Here is my space
'ரோமாபுரியே டைபர் நதியில் மூழ்கினால் என்ன, இதோ இருக்கிறது என் இடம். இவள் மடி ' என்று .
அதைப் போல், தாழமுக்கு வந்து எவ்வளவு சேதம் வந்தால் என்ன, எனக்கு ஒரு வேலை கிடைக்கப் போகிறது , இவளுக்கு இவள் விரும்பிய இறால் மீன் வாங்கி வந்து கொடுக்கப் போகிறேன். அது போதும் ' என்று
கஷ்டங்களைக் கொடுக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அந்தக் காதல் தம்பதியருக்கு, அந்த லாக் டவுன் காலத்தில் கஷ்டம் தீர்க்க வந்து விட்டதாக முடிக்கிறார். வறுமையிலும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் அந்தக் காட்சிகளை எல்லாம், இனிமையான ஈழத் தமிழில் கவிதைகளாகப் படைத்திருக்கும் விதத்தில் இந்தக் காதல் கதையை வித்தியாசப் படுத்திக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர் தாட்சாயிணி அவர்கள். அவர்க்கு வாழ்த்துக்கள். விருட்சம் அழகியசிங்கருக்கு நன்றிகள்
நன்றி. வணக்கம்
'
---------------------------------நாகேந்திர பாரதி
மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு ------------------------------------------------------------------------------------...