வெள்ளி, 22 செப்டம்பர், 2023

எனக்குள்ளே - கவிதை

 எனக்குள்ளே - கவிதை 

———————---------------------------


நடையும் ஓட்டமுமாய்

குடும்பமும் வேலையுமாய்


பாசமும் நேசமுமாய்

கண்ணீரும் கோபமுமாய்


கடனும் கவலையுமாய்

பணமும் பதட்டமுமாய்


இன்பமும் துன்பமுமாய்

இளமையும் முதுமையுமாய்


எனக்குள் தான்

எத்தனை பேர்கள்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


படிப்படியாய் - கவிதை

 படிப்படியாய் - கவிதை 

--------------------------------

தாங்குதல் முதல் படி

முத்தம் அடுத்த படி

முகம் சேர்த்தல் மூன்றாம் படி

அழுதல் அடுத்த படி

அடைக்கலம் இறுதிப் படி

அம்பாளின் அடியினிலே

அடியேனின் சரணப் படி

------------ நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கூடுசாலை - சிறுகதை மதிப்புரை

 கூடுசாலை - சிறுகதை மதிப்புரை 

----------------------------------------------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே  ., எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கதை ‘மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை   சிறுகதை.  சிறு கதையில் இடம், நேரம், கருத்து மூன்றும் மிகவும் தெளிவாக , திறமையாக  காண்பிக்கப்பட்டுள்ளன , கையாளப் பட்டுள்ளன.  மிகவும் விறுவிறுப்பான வேகமான கதை .

இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை.  நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த ஊரின் இரண்டு பெரிய மனிதர்களின் கவுரவப் பிரச்னைக்காக பழி வாங்கப்படும் வாயில்லா ஜீவன்கள்  ,  வண்டி காளை மாடுகள் .

இரண்டு குன்றுகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் வளைந்து வளைந்து செல்லும்  அந்தக்  கூடு சாலை யிலே  நடக்கும் ஒரு மாட்டு வண்டிப் போட்டிக் கதையை , இரு மனிதர்களின் கவுரவப் போட்டிக் கதையை  மிகவும் விறுவிறுப்போடு நாம் ரசிக்கும் படி எழுதி உள்ளார் ஆசிரியர். 


ஒரே ஊரில் வாழும் ஒரு மிராசுதாருக்கும் கவுண்டருக்கும் நடக்கும் கவுரவப் பிரச்சனையாக இதைக் காட்டி அதற்கு அந்த வண்டி மாடுகள், வண்டியோட்டிகளால்  படும் பாட்டை உருக்கமாகக் காட்டி அந்த வாயில்லாச் சீவன்கள் மேல் நமக்குக்  கருணை வரும்படி அவற்றை இவர்கள் படுத்தும் கொடுமைகளை எல்லாம்  விரிவாக விளக்கி, கடைசியில் அந்த மாடுகளின்  ரத்தம்  பார்த்து அதன் உரிமையாளர்களுக்கே பரிதாபம் வந்து அவர்களின் கவுரவப் போட்டியை நிறுத்தி வைப்பதாகக் காட்டி முடிக்கிறார்


ஆனால் அந்த முடிவு வருவதற்கு முன்னால் , ஆசிரியர் காட்டியிருக்கும் காட்சிகள் அந்தப் பெரியவர்களின் கவுரவப் போட்டிக்கு நிழலாக மாறும் அந்த மாட்டு வண்டிப் போட்டியை நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றன.    

நிலவு வெளிச்சத்தில், மெல்லிய இருட்டில் அந்தச் சாலையை அவர் வருணிக்கும் விதமே அந்த இடத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்று விடுகிறது . அதைத் தொடர்ந்து அங்கே செல்லுகின்ற மாட்டு வண்டிகளின் வருணனை. தொடரும் பண்ணையார்  , வண்டி ஓட்டி உரையாடல்.  அந்த வண்டியில் பூட்டியுள்ள மாடுகளைப் பற்றிய விபரங்கள். கூடு கொம்புச் செவலை , நீர்க்காலுக் கரம்பை, விரி கொம்பு - கவுண்டர் வீட்டு மாடுகள் . அவர் இப்போது வாங்கியிருக்கும் எடக்காடன்  ,  பண்ணையார் வண்டியில் இப்போது பூட்டியிருக்கும்   மயிலைக் காளை , புது மாடு பில்லை என்று மாடுகளின் வகைகளைப் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்கும் போது அவர் மாடுகளைப் பற்றி எந்த அளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று புரிகிறது . 


அதற்குப் பிறகு மாடுகளை வெறி பிடித்த படி பந்தயத்தில் ஓட வைக்கும் கொடூர  விபரங்கள் . சாட்டை அடி , இளுவை இழுத்து விடுறது , விலாப்பக்கத்திலே முழங்கையை மடக்கிக் குத்துறது  , பிடி கயிறை வெடுக்குன்னு சுண்டி இழுக்கிறது , சாட்டையைத் திருப்பி மட்டை அடியா போடுறது , வாலைப் பிடிச்சு நுனிக்கு மேலே நறுக்குன்னு கடிக்கிறது , முள்ளை எடுத்து அடி வயித்தில் குத்துறது ,அப்பா, பயங்கரமான விபரங்கள், அந்த வண்டி ஓட்டி மாடுகளைப் படுத்தும் பாட்டில் அவை வெறி பிடித்தது போல் வேதனையோடு ஓடும் விபரங்களில் , வார்த்தைகளின் வேகம் . அப்பப்பா 


வண்டிச் சக்கரங்களின் கடகட சப்தம். கப் கப் என்று நடை வீசி கால் பரவுவது தெரியாமல் , கண்ணுக்குத் தெரியாத நடை வேகம், காளைகள் இரண்டும் கிடுகிடுவென ஆடின. உடல்கள் பதறின. பாய்வதிலேயே அவைகளின் கவனம் . சாலையே அதிரும்படி மிதி போட்டுப் போயின . சரளைகளில் பட்ட காற்  குளம்புகளின் காலடியில் தீப்பொறிகள் சிதறித் தெறித்தன .


இப்போது இரண்டு வண்டிகளும் பக்கத்து பக்கத்தில் , கவுண்டரின் மாட்டு வண்டி ஓட்டும் மூக்கன், அவன் வண்டிச் சக்கரத்தின்  நடு மூக்கு பண்ணையார் வண்டி மாட்டின் கழுத்தில் உரச, ரத்தம் .பண்ணையார் வண்டி ஓட்டி  வீராச்சாமி , மிராசுதார் வண்டி மாட்டின் மேல் சாட்டையை பிசாசு மாதிரி வீசி  விளாச அதன் முதுகிலும் ரத்தம். வர்ணனைகளில் நம்மையே பதற வைத்து விடுகிறார் சி சு செல்லப்பா அவர்கள்.


இப்போது கிளைமேக்ஸ் . தனது மாட்டின் காயம் பார்த்து மனம் இளகிய மிராசுதார், ஓரமா நிறுத்து, சாணி அப்பு  காயத்திலே . என்று இறங்கி , வாய் ஓரம் நுரை ததும்பி , நாகம் போல் மூச்சு விட்ட காயம் பட்ட காளையை ஆசுவாசப்படுத்தி , ' நாசம், வண்டி , மாடு, வீம்பு எல்லாம்தான். நாமே எத்தனை தடவை தும்பு தெறிச்சு , முளைக்குச்சி உருவி, சாவி ஒடிஞ்சு  எவ்வளவு துன்பப் படுத்தி இருக்கிறோம் ' என்று தன்னிலை உணர்ந்து வருந்துவது போல்.  அதன் பின் , மிராசுதார் வண்டியில் ஏறிப் புறப்பட , கவுண்டர் வண்டியும் பின்னால் மெதுவாகத் தொடர ஒன்றுமே நடக்காதது போல் அந்த வண்டிகள் இரண்டும் அந்த கூடு சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக  போவதாக முடிக்கிறார் கதையை. புயலுக்குப் பின் அமைதி.


நடுவில் கதையில் வரும் மிராசுதார், கவுண்டர் வசனங்களிலும் , அந்த மாட்டு வண்டி ஓட்டிகள் வீராச்சாமி, மூக்கன் பேச்சுகளிலும்    தெறித்த அந்த மூர்க்கமும், கவுரவமும் , அந்த அப்பாவி மாடுகளின் மேல் வன்முறையாகப் பாய்ந்து  அவற்றின் ரத்தம் பார்த்து கொஞ்சம் ஓய்ந்து ' அசை நடையாகவே விடு ' என்று இரக்கமாக மாறுவதாக ஆசிரியர் முடித்திருந்தாலும், இரக்கமாக மாறுவதாக ஆசிரியர் முடித்திருந்தாலும்  ,   ‘போட்டியில் ஜெயித்த மிருக வெறியும் , வாயில்லா ஜீவனின் ரத்தம் கண்ட இரக்கமும் ‘ கலந்த குரலில் மிராசுதார் பேசினார் . என்று ஒரு இடத்தில் எழுதுகிறார் ஆசிரியர்.. இது போன்ற உணர்வுகளை நுணுக்கமான உணர்த்தும்  வசனங்களையும் , அந்த வண்டி ரேஸின் உக்கிர வர்ணனைகளையும்  , நீங்கள் கதையைப் படித்துத்தான் அனுபவிக்க வேண்டும்.


 கதையின் மாந்தர்களின் ரோஷ வேகத்தையும், கவுரவ வெறியையும் இவ்வளவு ஆக்ரோஷமாக இந்தக் கதையில் படித்து உணர்ந்த நமக்கு '  இந்த மனிதர்களின் மன மாற்றம் எத்தனை நாளைக்கு'  என்ற எண்ணம்தான் வருகிறது . இந்த போலிக் கவுரவ மனிதர்கள் மாறப் போவதில்லை.. அந்த மனிதர்களின் ரோஷம்  மறுபடி பொங்கும், அந்த மாடுகள் மேல் பாயும், திரும்ப அந்த கூடு சாலையில் ரத்தம் தெறிக்கும், என்றே தோன்றுகிறது, நன்றி வணக்கம். 


-------------------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


திங்கள், 18 செப்டம்பர், 2023

கலையும் மேகம் - கவிதை

 கலையும் மேகம் - கவிதை 


————————-----------------

ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொரு காட்சி


ஓடும் மேகத்தால்

மாறும் ஓவியங்கள்


நகரும் காலத்தின்

நடப்பைக் காட்டுகிறதா


மாறும் பெண்களின்

மனங்களைக் காட்டுகிறதா


சேரும் செல்வத்தின்

செலவைக் காட்டுகிறது


நிலையாமை ஒன்றே

நிலைத்தது என்ற


நிலைமையைச் சொல்லி

கலைந்து போகிறதா


———நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


ஊஞ்சல் பெண் - கவிதை

 ஊஞ்சல்  பெண் - கவிதை 

———————---------------------—


ஒளிந்து நெளிந்து

ஒழுகும் ஒளியில்


பச்சை மரங்களின்

பரவசம் ரசித்து


காட்டுப் பூக்களைக்

கட்டிய கயிற்றில்


உல்லாசமாய் ஊஞ்சல்

ஆடுவது சரிதான்


விழுந்து விடாமல்

வேகத்தைக் குறைத்திடு


உன்னுள்ளே குடியிருக்கும்

எனக்கும் இப்போது


மூச்சு வாங்குகிறது

முட்டாள் பெண்ணே


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நினைத்துப் பார்க்கிறேன் - கவிதை

 நினைத்துப் பார்க்கிறேன் - கவிதை 

———————————-------------------------

தெருப்புழுதி முழங்காலில் 

ஏறுமட்டும்  விளையாட்டு


கண்மாய்த் தண்ணீரைக்

கலக்கி நீச்சல்கள்


மனப்பாடப் பாட்டுகளை

ஒப்புவிக்கும் உற்சாகம்


திருவிழாக் கூட்டத்தில்

தின்பண்டக் கடைகள்


பக்கத்தூருக் கொட்டாயில்

பார்த்த சினிமாக்கள்


நினைத்துப் பார்க்கையிலே

நீண்ட பெருமூச்சு 


———-நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English


காதல் ரோஜாவே - கவிதை

 காதல் ரோஜாவே - கவிதை 

-----------------------------------

முள்ளாகத்தான குத்தினாய்

புரியாத காலம்


குத்திய வலியும் இனித்தது

காதலின் கணக்கு


மலராகத் தான் மணக்கிறாய்

புரிந்த காலம்


பூவின் மென்மையில் மகிழ்கிறேன்

காதலின் வெற்றி


அவ்வப்போது கொஞ்சம்

குத்தித்தான் விடுகிறாய்


இனித்தது வலியென்று

சொன்னது தப்பா


--------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

அவள் வருவாளா - சிறுகதை

 அவள் வருவாளா - சிறுகதை 

--------------------------------------------------------------


 காலை எட்டரை மணி  பீனிக்சில் , அமெரிக்காவில் . அவன் வேலை அந்த நேரமே ஆரம்பித்து விடும் .இங்கே  மாலை ஒன்பது மணி இந்தியாவில் .


வழக்கம் போல் இரவு கோயிலுக்குச் சென்று திரும்பி இருப்பாள் சங்கரி  என்று நினைத்தபடி பீனிக்சில் , சுந்தர் , மல்டி  மில்லியன் டாலர் பிசினஸ் ஒன்றின் காண்ட்ராக்டின் பக்கங்களை ஆப்பிள் கம்பியூட்டரில் புரட்டியபடி  இருந்தவன், இரண்டு இடங்களில்  திருத்தம்  செய்து டெலிகாமில் லூசியிடம் சொல்லி விட்டு கம்பியூட்டரில் send  பட்டனை அழுத்தியவுடன் ,  உள்ளே வந்த ராபர்ட்  கைகளில் அவனுக்குப் பிடித்தமான அந்த உயர் தரக் காபியின் மணம் அவன் நாசிகளிலும் அதன் ருசி  சிறிது நேரத்தில் அவன்இதழ்களிலும் . 


மல்டி பில்லியன் டாலர் கம்பெனியின் முதலாளியின் ரசனைக்கு ஏற்றபடி அமைக்கப்பட்ட அந்தக்  கம்பெனியின்  சுவற்றில் அதற்கேற்ற சித்திரங்கள், சுற்றிலும் ஒருமுறை பார்த்து விட்டு ஒரு நீண்ட பெருமூச்சொன்றை விட்டு தன்  முன் மேஜையில் தங்க பிரேம் போட்டோவில் சிரிக்கும் அவளை உற்றுப் பார்த்தான்.


' ஏன்  சங்கரி  , ஏன் இப்படி மாறிட்டே.. இருபது வருடங்களுக்கு முன்பு  இங்கு வந்தபோது எப்படி இருந்தோம். நியூ யார்க் நகரில்  தெருத் தெருவாக இரவில் சுற்றினோமே . உனக்குக்  குறிப்பிட்ட ஒரு   காபி தான்  பிடிக்கும் என்பதற்காகத் தேடித் தேடி நியூ யார்க்கின் இட்டலி  டவுனில் ஒரு கடையில் காபி சாப்பிட்டு திரும்பும் போது துப்பாக்கியுடன் வழி மறித்த அந்த முரடனை நான் காலை மடக்கி உதைத்த உதையில்  அவன் சுருண்டு விழுந்து ஓட  , சிறு குழந்தை போல  கை  தட்டிச் சிரித்து  , திடீர் என்று என் இதழோடு இதழ் பதித்தாயே ' என்று நினைத்தபடி  , தன் உதடுகளை அனிச்சையாகத் துடைத்தான். அதில் காபி கசந்தது. இப்போதைய வாழ்க்கை போல் .


நான் என்ன செய்தேன். சாதிக்க வேண்டும் , சாதிக்க வேண்டும் என்று படித்து, உழைத்து இன்று மல்டி  பில்லியன்  டாலர் கம்பெனி. ஆனால்.

உன்னை இழந்து விடுவேனோ. குழந்தைகள் இரண்டு . பெண்கள் . ஒவ்வொரு வருடமும் ஒன்றாகத் தொடர்ந்து   . நம் உறவின்  நெருக்கத்தால் .  அவர்கள் பிறந்தபின் ,  ஒரு சிறு பிரிவு வந்து விட்டதோ.


நியூ யார்க்கில் இருந்து கம்பெனி விரிவுபடுத்த  பீனிக்ஸ் வந்து ஏற்பட்ட பிரிவு சில வருடங்கள் தானே. அந்த இரண்டு வருடங்கள் குழந்தை வளர்ப்பு, என்னதான், துணைக்கு  ஆட்களும் வேண்டிய வசதிகளும் இருந்தாலும் நான் வந்து இருந்தது மாதம் ஓரிரு நாட்கள். பிறகு பீனிக்ஸ் வந்தபின்னும் , என்னுடன் ஒட்டாமல் , குழந்தைகள் குழந்தைகள் என்றே அவற்றோடு படிப்பு, விளையாட்டு காலம் ஓட , அவர்கள் பெரியவர்கள் ஆக, சிறிது சிறிதாக அவர்களிடம் ஏற்பட்ட கலாச்சார மாற்றம் உன்னை வெகுவாகப்  பாதித்தது புரிகிறது.


கோயில் , குடும்பம் , குறுகிய வட்ட நண்பர்கள் என்று வளர்ந்திருந்த உனக்கு, அவர்களின் விரிவான வட்ட நண்பர்கள், பார்ட்டி , கதவைச் சாத்திக் கொண்டு அவர்களின் சாட்டிங் அதிர்ச்சிதான். ஆனால் எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கை உனக்கு ஏன்   இல்லை.


இந்த தொழில் சாம்ராஜ்யத்தை விட்டு நான் எப்படி அங்கே வர முடியும். இந்த நட்பு வட்டத்தை விட்டு அவர்கள்தான் எப்படி வர முடியும்.  அப்பா அம்மா வுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம் . அவர்களும் அந்த நட்பு வட்டத்தை விட்டு வர விரும்பவில்லை . அவர்களே அப்படி இருக்கும்போது நம் குழந்தைகள் எப்படி அவர்களின் நட்பு வட்டத்தை விட்டுப் பிரிவார்கள் .


உனக்கு எல்லாவற்றிலும் ஒரு சந்தேகம். மூத்தவள் கராத்தேயில் ப்ளாக் பெல்ட்.  தைரிய சாலி. போன வாரம்  ஜாக்கிங் சென்று திரும்பிய அவளை வழி மறித்த முரடனை அவள் விட்ட கிக்கில் அவன் டெஸ்டிகிள்  தகர,  வலியால் துடித்த அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வந்திருக்கிறாள். தெரியுமா . நினைக்கும் போதே லேசான புன்சிரிப்பு சுந்தர் முகத்தில்.


 நேற்று இரவு சில நண்பர்களுடன் பார்ட்டி சென்ற போது என்ன சொல்லி விட்டுச்  சென்றாள் தெரியுமா. ' dad , dont worrry , I will keep my virginity and  present it  as a gift to my friend who is going to live together with me eternally  '. இதை நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று தெரியவில்லை.


உன்னோட அப்பா  ரெம்ப ஸ்ட்ரிக்ட். மிலிட்டரி மேன் என்று சொல்வாயே. அது உனக்குப் பிடிக்கவில்லை என்றும்  சொல்வாயே. அப்போது நான் ' அழகான பெண்களின் அப்பாக்கள் அப்படித்தான் இருப்பார்கள். அப்படி இருந்தாதான், என்னைப் போல அழகான , அறிவான பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியும் ' என்று சொன்னபோது மூக்கைச் சுளித்து ஒரு சிரிப்பு  சிரித்தாயே , மறக்க முடியுமா.


' அவரைப் போல் நானும் என்  அழகான பெண்களை ஸ்ட்ரிக்ட் ஆக வளர்க்க வில்லை என்று நினைக்கிறாய் . உனக்கு ஒரு நீதி, அவர்களுக்கு ஒரு நீதியா' . என்னமோ போடி .     


ரெண்டாவது பெண் ' எனக்குக் கல்யாணமே வேண்டாம், நான் கம்பியூட்டரில் பெரிய சாதனை செய்யணும் ‘ என்று படிப்பு , கம்பியூட்டர் என்று ரூமுக்குள் அடைந்து கிடக்கிறாள் என்று உனக்கு வருத்தம் . இருபது வயதில் அவர்கள் அறிவின் வளர்ச்சி அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய் .


அதை விடு . உன்னைப் பிரிந்து நான் தவிக்கும் தவிப்பு உனக்குத் தெரியாதா . உன் சுண்டு விரலைக் கேட்டுப் பார் . அது சொல்லும் . உன் சுண்டு விரலோடு என் சுண்டு விரலைச் சேர்த்துக் கொண்டு தூங்கித்தானே எனக்குப் பழக்கம் .


 ‘இது என்ன பழக்கம் பச்சைக் குழந்தை மாதிரி ‘என்று நீ சீண்டிய போதெல்லாம் , ‘நீ அம்பாள் மாதிரி, எனக்குப் பாதுகாப்பு  ‘ என்று நான் சொல்ல ‘ ஆமாம் , ‘நான்தான் அந்த அங்காளம்மன் , ‘ என்று நீ அபய போஸ்  கொடுக்க  ‘ அடியேன்  அபயம் தாயே , சரணம் ‘ என்று உன் காலடியில் சரிய ‘ நீ ‘ இது அபாயம் பிள்ளாய் ‘ என்று தூக்கி அணைக்க ‘. அதற்கு மேல் .. நினைக்க முடியவில்லை அவனால் . அவள் வணங்கும் அந்த அங்காளம்மன் தான் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று மனம் உருக அங்காளம்மனை வேண்டிக் கொண்டான் .



கண்கள் பனித்தன . ‘ அந்த அன்பெல்லாம் எங்கே போயிற்று  சங்கரி ‘ என்று   நினைக்கும் போதே லேசான விம்மல் வர , அடக்கிக் கொண்டு கம்மிய குரலில்  டெலிகாமில் ‘ லூசி  , கால்  மேடம்  ‘ என்றான்  சுந்தர்  . 


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


வெள்ளி, 8 செப்டம்பர், 2023

மயங்காதே மனமே - கவிதை

 மயங்காதே மனமே - கவிதை 

————————---------------------------—

உலகமே கிராமமாய்

ஒன்றான காலத்தில்


கலாச்சார மாற்றங்கள்

கலந்து விட்ட கோலத்தில்


பழம் பெருமை பேசுவதும்

பயந்து கிடப்பதுவும் 


பயனில்லை இன்று

பாய்வதுவே நன்று


மயங்காத மனதோடு

தயங்காத துணிவோடு


புதுமைகள் படைப்பதற்குப்

புலிப்பாய்ச்சல் பாய்வோம்


தரணியை ஆள்வதற்குத்

தயாராவோம் தைரியமாய் 


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஆனந்தக் கொண்டாட்டம் - கவிதை

 ஆனந்தக் கொண்டாட்டம் - கவிதை 

————————————-----------------------

இயற்கை கொடுத்தவை

எல்லாமே இலவசம்


தென்றல் காற்றும்

பறவைகள் பேச்சும்


பூவின் மணமும்

புல்லின் அசைவும்


பார்த்தும் கேட்டும்

முகர்ந்தும் உணர்ந்தும்


ரசிக்கப் பழகும்

தன்மை வாய்த்தால்


ஒவ்வொரு நாளும்

ஆனந்தக் கொண்டாட்டம்


———நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


அன்புடைய ஆசிரியரே - கவிதை

 அன்புடைய ஆசிரியரே - கவிதை 

———————————--------------------------

அந்தக் காலத்து

ஆசிரியர் நீங்கள்


அன்பும் அறிவும்

அடக்கமும் நிறைந்தவர்


சொல்லிலும் செயலிலும்

சுத்தம் காத்தவர்


பாடத்தை மனதிலே

பதிய வைத்தவர்


குருவே தெய்வமென்று

கும்பிட வைத்தவர்


இந்தக் காலத்துப்

பத்திரிகைச் செய்தியில்


சாதியும் மதமும்

பாலின வன்முறையும்


ஆசிரியர் குலத்திலும்

அமிழ்ந்து கிடப்பதைப் 


படிக்கும் போது

பதறும் நெஞ்சம்


அடுத்த தலைமுறை

ஆண்டவனே  தஞ்சம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


செவ்வாய், 5 செப்டம்பர், 2023

நாளை மாறலாம் - கவிதை

 நாளை மாறலாம் - கவிதை 

———————-----------------------------

நேற்று இன்று நாளை என்று

காலம் போடும் கோலம்


இன்று ஒன்று நன்று என்று

இக்கணத்தில் வாழ்வோம்


இன்பம் துன்பம் இயல்பு என்ற 

நற்குணத்தில் சேர்வோம்


நாளை என்ற நாளும் ஓர்நாள்

இன்று என்று மாறும்


இக்கணத்தில் வாழும் வாழ்வால்

இன்பம் என்றும் சேரும்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பாலைவன நாட்கள் - கவிதை

 பாலைவன நாட்கள் - கவிதை 

—————————----------------------—

வேலையில்லா வாலிபனாய்

வீதியிலே திரிந்த நாட்கள்


வேதனையின் காதலனாய்

முகவரி இல்லாத கடிதமாய்


பொறுக்கியவர் எல்லாம்

முத்திரையைக் குத்த


போகும் இடம் தெரியாமல்

புண்ணாகித் திரிந்த நாட்கள்


புயலும் ஒருநாள் ஓய்ந்து 

புன்னகையும் ஒருநாள் பூத்தாலும்


காயங்கள்  தழும்பாகி இருக்கும்

பாலைவன நாட்கள்


———நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English  


என்னை விட்டுப் போகாதே - கவிதை

 என்னை விட்டுப் போகாதே - கவிதை 

———————————-----------------------—-

போவதற்கும் இருப்பதற்கும்

காரணங்கள் தேடுவது

கண்ணாமூச்சி விளையாட்டு


முடிவுகளின் ஆரம்பம்

சொந்தமோ சூழ்நிலையோ

சொல்லுவதில் பயனில்லை


சொல்லி விட்டு

என்னை விட்டுப் போகாதே

சோகத்தில் மூழ்கி விடுவேன்


சொல்லாமல் போய் விடு

தேடித் கொண்டிருக்கும்

சுகமாவது மிச்சமிருக்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


ரெயில்வே கேட் - கவிதை

 ரெயில்வே கேட் - கவிதை 

---------------------------------------------


கூட்டத்தோடு சேர்ந்து வெயிலும் ,

மூடிய அந்த ரெயில்வே கேட்டை 

வெறித்துப் பார்த்துக் கொண்டு 

இருக்கும் 


தார் ரோட்டை உருக்கும் 

தனலான  வெயில் நேரம் 

மேற்கே போக வரும் 

மதுரை ரெயில் நேரம் 


அடைத்த கேட்டருகே 

பெட்ரோல் புகை நாற்றம் 

அதற்குள் பீடிப் புகையோடு 

மடித்துக் கட்டிய கைலிகள் 


அனைவரையும் நிறுத்திய 

பெருமைச் சிரிப்போடு 

இடுப்புக் கேட்டுச் சாவியோடு 

வெத்திலை வாய்ச் சிகப்பன் 


பத்து டிக்கெட்டை 

பாக்கெட்டில் வைத்துக் கொண்டு 

விசிலை எடுத்துப் பார்த்துக் கொண்டு 

ரெயில்வே ஆபீசர் 


திருவிழாத்  தேரோட்டம் பற்றி 

பேசித் தீர்க்கும் 

விடுமுறைக் குடும்பம் 


கைகளில் எண்ணெய்ப் 

பிசுக்கை விட்டு விட்டு 

வயிற்றுக்குள் போய்க் 

கொண்டிருக்கும் வடைகள் 


கழுவிய கண்ணாடி டம்ளர்களில் 

மஞ்சள் டீ பாதி நுரையோடு 

போய் வந்து கொண்டு இருக்கும் 


வெள்ளரிப் பிஞ்சுகளை

 விற்கும் சிறுசுகளிடம் 

பேரம் பேசும் பெருசுகள் 


ரப்பர்  செருப்பை விலக்கி விட்டு 

தார் ரோட்டுச் சூட்டைத் 

தடவிப் பார்த்தபடி  

அலுத்தபடி 


கருவாட்டுக் கூடையோடு 

டிக்கெட் வாங்காமல்

காத்திருக்கும் கிழவி 


திடீரென்று ஆபீசரின் விசில் 

கொஞ்சம் மக்கர் பண்ணி விட்டு 

சரியாக ஊதும் 


தண்டவாளம் தடதடக்க 

வந்து சேரும் வண்டி 

கொஞ்ச நேரப் பரபரப்பு 


அதன்பின் வெயில் மட்டும் தனியாக 

விரியும் கேட்டை 

வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் 


-----------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மனதின் ஒளி - கவிதை

 மனதின் ஒளி - கவிதை 

——————————————

மனதில்  தூய்மை இருந்தால்

சொல்லில் வாய்மை பிறக்கும்


சொல்லில் வாய்மை பிறந்தால்

செயலில் நேர்மை இருக்கும்


செயலில் நேர்மை இருந்தால்

செகத்தில் நன்மை விளையும்


செகத்தில் நன்மை விளைந்தால்

சிறப்பும் செழிப்பும் சேரும்


சிறப்பும் செழிப்பும் ஜொலிக்க 

மனதின் எண்ண ஒளியே மூலம் 

——----------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நிலவிலே உலவலாம் - கவிதை

 நிலவிலே உலவலாம் - கவிதை 

—————————------------------------—-


கற்பனை கலைந்தது

காட்சி குலைந்தது


நிலாவிலே உலவிய

காதலும் கவிதையும்


பூமிக்குத் திரும்பும்

புண்ணியம் நடந்தது


இங்கிருக்கும் தெருக்கள்

எவ்வளவோ தேவலாம்


கோடியில் செலவிட்டு

குபேரர் செல்கின்ற


நிலவே வேண்டாம்

பூமி போதும்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பொல்லாங்கு பேச வேண்டாம் - கவிதை

 பொல்லாங்கு பேச வேண்டாம் - கவிதை 

—————————————-----------------------—-

அவரவர் பேச்சு

அவரவர் எண்ணம்


அவரவர் எண்ணம்

அவரவர் வளர்ப்பு


அவரவர் வளர்ப்பு

ஆண்டவன் விதிப்பு


அவர் இவர் என்று

அது இது என்று


அடிக்கடிப்  பேசி

நாட்களைக்  கழித்தால்


பொன்னான நேரம்

மண்ணாகிப் போகும்


————நாகேந்திர பாரதி 



My Poems/Stories in Tamil and English 


வாழ்வே கொண்டாட்டம் - கவிதை

 வாழ்வே கொண்டாட்டம் - கவிதை 

————————————-----------------—-

பிறந்து வந்தாச்சு

இறப்பதும் நிஜமாச்சு


இதற்கு நடுவிலே

ஏனிந்தச் சோகம்


இன்பமும் துன்பமும்

இயற்கையின் இரு நிலை


ஏற்றுக் கொள்வதே

என்றுமே மன நிலை


வருவது வரட்டும்

போவது போகட்டும்


மூச்சு நின்று

முடியும் வரை போராடு


வாழ்க்கை வாழ்வதற்கே

வழியிருக்கு கொண்டாடு


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


காதலே நிம்மதி - கவிதை

 காதலே நிம்மதி - கவிதை 

————--------------------------------———

பார்க்கும் போதெல்லாம்

பரவசம் தருவதால்


பேசும் போதெல்லாம்

பேரின்பம் கிடைப்பதால்


தொட்டால் போதுமே 

துன்பம் மறைவதால் 


நினைக்கும் நேரமும்

நெஞ்சம்  களிப்பதால் 


காதலே நிம்மதி

கடவுளின் சந்நிதி


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


காதற் புயல் - கவிதை

 காதற் புயல் - கவிதை 

—————---------------------------

இதயக் கடலில் எழுந்த புயல்

இங்கும் அங்கும் அலையும் கயல் 

பதியம் போட்டு வளரும் அலை

பயத்தை உதறி உயரும் கலை


ஊரும் நாடும் உதறிப் போகும்

உள்ளம் சேர்ந்து உருக்காய் ஆகும் 

பேரும் புகழும் விலக்கும் வேகம்

பின்னிப் போன  காதல் மோகம் 


எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து

இங்கே இணைந்து இறுகிக்  கலந்து

மங்கா விளக்காய் மனதில் இறுத்தி

மாறாக் காதல் உள்ளம் உறுதி


எண்ணக் கரையை உடைத்துப் போடும்

எல்லாத் திசையும் அடித்துச் சாடும்

மின்னல் இடியும் துணைக்குச் சேரும்

மிரட்டும் சொந்தம் தளர்ந்து சோரும்


சின்னா பின்னமாய் சிதறும் சாதி

சேர்ந்த நீரில் இல்லை பாதி

கண்கள் துடித்த கடலும் மாறும்

காதற் புயலும் கரையைச் சேரும்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பள்ளிக்கூடச் சீர்திருத்தம் - கட்டுரை

  பள்ளிக்கூடச்  சீர்திருத்தம்    - கட்டுரை 

------------------------------------------------------------------------

இப்போ புள்ளைங்க சந்தோஷத்துக்காக சில ஸ்கூல்ல சில வசதிகள் பண்ணப்  போறாங்களாமே .குறைச்ச மார்க் வாங்கி இருந்தாலும் ,பெயிலாய்ப் போனாலும் அடுத்த கிளாசுக்குத்  தூக்கி போடப்  போறாங்களாம் . தூக்கிப் போடுறப்போ கொஞ்சம் வலி  இல்லாம பார்த்துப்  போடணும். அத்தோடு சேர்ந்து இன்னும் சில விஷயங்களையும்  பண்ணிக்  கொடுத்தா பிள்ளைகளுக்கு ரொம்ப வசதியா இருக்கும் .


  இப்ப வீட்ல பகலில் அம்மா பார்த்து வர்ற  சீரியல் எல்லாம் அவங்க பார்க்க முடியலை . பண்டிகைக்  காலங்களில் எல்லா பெரியவங்களும் ஒண்ணா  கூடி இருக்கிற  நேரங்களில் எல்லாம் சீரியல் சம்பந்தப்பட்ட சில பொது அறிவுக்  கேள்விகளுக்கு பிள்ளைகளால் சரியா பதில் சொல்ல முடிவதில்லை .எனவே பள்ளிக்கூடங்களில் சீரியல் பார்க்கிறதுக்கு டிவிக்களையும்  ஏற்பாடு பண்ணணும் . விளம்பர இடைவேளைகளில் பாடம் நடத்தலாம். அதுதான் ரொம்ப நேரம் வருமே.


புட்பால் ,  கிரிக்கெட் போன்ற  விளையாட்டு விஷயங்கள் எல்லாம் தெளிவாக இருந்தால் தானே பசங்க  முழுமையான மனுஷங்களாக  உருவாக முடியும். அப்பல்லாம் லீவு விட்டிறலாம்.   அது மாதிரி விஜய் அஜித் படம் ரிலீஸ் நேரங்களிலும் லீவ் விட்டுறணும் . விடலைன்னாலும் கட் அடிச்சிட்டுப்  போகத்தான் போறாங்க நம்மளே விட்டுட்டா  அட்டெண்டன்ஸ் பர்சன்டேஜ் பிரச்சனை ஸ்கூலுக்குக்  குறையாமல் பாத்துக்கலாம் . முடிஞ்சா ஸ்கூல்லே இருந்து  தியேட்டருக்கு பஸ் அரேஞ்ச் பண்ணி டிக்கெட் கொடுத்து  அனுப்பி வச்சா புள்ளைங்க சந்தோஷம் பிச்சுக்கும்..


  அப்புறம் மத்தியான சாப்பாடு, சாய்ந்திர டிபன் எல்லாம் ஸ்கூல்ல நல்லா வெரைட்டியா பண்ணிப்  போட்டா சாப்பாட்டு ருசிக்கே புள்ளைங்க தவறாமல் பள்ளிக்கூடம் வந்துருவாங்க .  சமையல் பண்ண சங்கடப்படுற சில தாய்மார்களுக்கும் மனசு மகிழ்ந்துடும் . சாப்பாட்டு வாசம், பாத்திரம்   கழுவுறது இந்த சத்தமெல்லாம் வாத்தியார்களுக்கு பாடம் எடுக்கறப்ப  கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனா போகப்  போக அந்த வாசம்  பிடிச்சுகிட்டே அவங்க பாடம் நடத்தப்   பழகிடுவாங்க.


  அப்புறம் வாரக் கடைசியில் இந்த குரோர்பதி அமிதாப்பச்சன் ஸ்டைல்ல க்விஸ்  ஸ்கூலில் நடத்தலாம் .பாடத்தை ரிவைஸ்  பண்ண மாதிரியும்  இருக்கும். பிள்ளைங்களுக்குக்  கொஞ்சம் காசு  கிடைச்ச மாதிரியும் இருக்கும்.   இவ்வளவு மாற்றங்களோட  ஸ்கூல் நடத்தினால் பசங்க எவ்வளவு ஜாலியா ஸ்கூலுக்கு வருவாங்கன்னு யோசிச்சுப்  பாருங்க. சட்டுபுட்டுன்னு இதையும் பண்ணி போட்டீங்கன்னா நல்லா இருக்கும் . அதான், பெயிலா போனாலும், அடுத்த கிளாஸ்ல போய் உட்கார்ந்து கொள்ளலாம்னு  சீர்திருத்தம் கொண்டு வர போறாங்களாமே . இதையும் சேர்த்துப் பண்ணிட்டாப் போச்சு.,


------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


தண்ணி வண்டி - சிறுகதை

  தண்ணி வண்டி - சிறுகதை 

--------------------------------------------

 'ரெண்டு  குடம் தான் கணக்கு அதுக்கு மேல கிடையாது' கண்டிப்பாகச்  சொல்லிவிட்டு 'அடுத்தடுத்து 'என்று விரட்டிக் கொண்டிருந்தான் தண்ணி வண்டி வேலு .ஒவ்வொரு இடத்திலும் இதே பிரச்சனை. பத்துத்  தெருவுக்கு இந்தத்  தண்ணி வேணும் .கடைசித்  தெருவுல தண்ணி பத்தாம தினசரி தகராறு.  கடைசி ஆளுக்குத்  தண்ணி திருப்பி விட்டதும் , தும்பிக்கைக்  குழாயைத்  தூக்கித்  தண்ணித்  தொட்டி மேல போட்டு 'ரைட்' என்று கத்தினான்.  


அந்தப்  பெரிய வாகனம் கிளம்பி தண்ணீரை விசிறியபடி அடுத்த தெருவை  நெருங்கும்போது அங்கே கலர்க்  கலர் பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக  நெருக்கி அடித்துக்  கொண்டு இவனுக்காகக் காத்துக்  கொண்டிருந்தன.  வண்டியை நிறுத்தியதும்  தான் தாமதம். 'காச்சு மூச்சு' என்று ஒரே சத்தம் .'நான் முன்னாடியே  குடத்தை வச்சிட்டு  வீட்டுக்குப்  போய் புள்ளையை விட்டுட்டு வந்தேன். அதுக்குள்ள குடத்தைத்  தூக்கி பின்னால வச்சுட்டாளுக .'  பெண்களின் சண்டைச்  சத்தத்தோடு தண்ணீர் வடியும் ''ப் ச்ச் ச் ச்''  சத்தம்  பீடியைப்  பல்லில் இறுக்கிய  படி 'இந்தச்  சனியன் புடிச்ச வேலை எப்பத் தான் தொலையும். காலையிலிருந்து சாயந்திரம் வரை இதே வசவு சத்தம். கேட்டுக்  கேட்டு காது புளிச்சுப்  போச்சு 'என்று சலித்துக் கொண்டான் மனதிற்குள் வேலு. 


  காலையில் கிளம்பி நுங்கம்பாக்கம் தண்ணி டேங்க் போக வேண்டியது. தண்ணீர் நிரப்பிய லாரியோடு டிரைவர் கந்தசாமி கத்துவான்.' என்ன துரை ஆடி அசஞ்சு  வர்றீங்க.  தொத்துங்க  சீக்கிரம் ' என்ற  படி லாரியை விருட் ' என்று கிளப்புவான்.  ஒவ்வொரு தெருவாய் நிறுத்தி கணக்குப்  பார்த்து ஒழுங்காக இரண்டு குடம்  மட்டும் .அதுல  தாட்சண்யம்  பார்க்கிறது இல்லை.  முடிஞ்சதும்  ரைட் சொல்லி  ஒவ்வொரு தெருவிலும் ஒருத்தருக்கு ரெண்டு குடம்  மட்டும்.   திருப்பி மறுபடியும் ரைட் சொல்லி நடுவிலே ரோட்டோரக் கடையிலே 'டீ ' அப்புறம் , மத்தியானம்  வாடிக்கை மெஸ்ஸிலே சாப்பாடு. முடிச்சு சாயந்திரம் வீடு திரும்பறப்போ உடம்பு ஒவ்வொரு பார்ட்டும் 'கழட்டிப் போடு'  என்று கேட்டு வலிக்கும். 


  எப்பவாவது சாராயம் ஊத்திக்கிட்டா அன்னைக்கு உடம்பு வலி இருக்காது ஆனா வீட்டுல வள்ளி பேச்சைக் கேட்டு உள்ளுக்குள்ள வலியாயிடும் .' என்னடா பிழைப்பு இது' என்று அலுத்துப்  போய் வீடு வந்தான். வாசலில் கிடந்த நாலு செருப்புகளை பார்த்ததும் 'அப்பா அம்மா வந்திருக்காங்க போலிருக்கு'. ' வாங்கப்பா வாங்கம்மா 'வரவழைத்த புன்னகையோடு உள்ளே நுழைந்தவனை  முறைத்துப் பார்த்தபடி நின்றார்கள் அவன் அப்பனும் ஆத்தாளும். வள்ளி  பக்கம் திரும்பினான், அவள் முகவாயை உயர்த்தியபடி  ஸ்டவ்வைப்   பற்ற  வைத்தாள் , அவனுக்கு 'டீ'ப் போட .


' என்ன இது ஏண்டா  நம்ம ராமசாமி தெருவுக்கு நீதானே தண்ணி ஊத்துற,'

;ஆமா நான் தான்'

 இது என்ன பால் ஊத்துற கணக்கா . ஏண்டா நம்ம மாப்பிள்ளை சோமு  இரண்டோட சேர்த்து இன்னொரு குடம் தண்ணி கேட்டானாமே.  முடியாதுன்னு மறுத்திட்டியாமே ' பொரிந்தார்  அப்பா . அவருக்கு அவர் கவலை. ரெண்டு தடவை மகளை இவர்  வீட்டுக்கு அனுப்பிட்டானே மருமகன் எதுக்கோ கோச்சுக்கிட்டு .


 வேலு எங்கே முகத்தைப் பார்த்தான். கையையும் குடத்தையும் பார்த்து கரெக்டா சொல்லிச்  சொல்லி பழகிப்  போயிருச்சு இதுல மாப்பிள்ளையை எங்கே பார்த்தான் . பார்த்திருந்தாலும் கூட ஒரு குடம் கொடுத்திருக்கப் போறதில்லே.  இவன் சொல்லி யாருக்கு புரியும் . ' சரி சரி நாளைக்குப்  பாத்துக்கிறேன்' என்றபடி 'டீ ' யை வாங்கிக் குடித்தபடி .  ஓரத்தில் இருக்கும் தண்ணீர் குடங்களைப்  பார்த்தான் . மூன்று குடங்கள் .


 ' மாமா வர்றாங்கன்னு , இன்னைக்கு இன்னொரு குடம்  தண்ணி வாங்கி வச்சேன் நல்லவேளை இந்தத் தெருவுக்கு     நீங்க  வந்திருந்தா இந்த மூணாவது குடம்  எனக்கு கிடைச்சிருக்குமா என்னவோ' என்றபடி அவள் கொடுத்த தண்ணீரை ' வேண்டாம்டி, இப்பதானே டீ குடிச்சேன் ' என்றான், பாதி காலியான குடங்களைப் பார்த்தபடி. . 


------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


குழந்தை உலகம் - கவிதை

 குழந்தை உலகம்  - கவிதை 

---------------------------------------------

குழந்தை உலகத்தில்

 கொஞ்சமே இடம் உண்டு

 தாயுண்டு தந்தையுண்டு

 பால் உண்டு படுக்கை உண்டு


 வயிற்றுப்  பசியால்

 வருகின்ற அழுகை உண்டு

 தாயைப் பார்த்தவுடன்

 தானாகச்  சிரிப்புண்டு


 நடைபழகி விழுவதுண்டு

எழுந்து நடப்பதுண்டு 

 தாங்கிடுவாள் தாய் என்று

 ஓடி வந்து சாய்வதுண்டு 


  விளையாட்டு பொம்மையைப் 

  பிடுங்கினால் அழுகை உண்டு

 வீதியெல்லாம் வியப்புண்டு 

 வெளிச்செல்ல விருப்பமுண்டு


 அம்மாவின் இடுப்புண்டு 

அப்பாவின் கையுண்டு

 மாறி மாறிப்  பயணிக்கும்

 மறக்காத தெருக்களுண்டு


 டாட்டாக்கள் சொல்வதற்கு

 விரல்களுக்குப்  பழக்கம் உண்டு 

அப்பா திரும்பியதும் 

ஆசையுடன் ஓட்டம் உண்டு


  வீட்டுக்கு வருகின்ற

 விருந்தாளி பயம் உண்டு

 முத்தத்தின் எச்சிலுக்குக் 

 கன்னத்தில் மறுப்புண்டு 


 இரவின் இருட்டுக்கு

 அம்மாவின் அணைப்புண்டு

  அப்படியே கால் போட்டு

 தூக்கத்தில் சுகம் உண்டு


 வயது போவதுண்டு 

உலகம் விரிவதுண்டு 

இயந்திர வாழ்க்கையின் 

அங்கம்  ஆவதுண்டு 


தொலைந்து போன 

குழந்தை உலகத்தை 

எப்போதோ நினைப்பதுண்டு 

ஏக்கம் வருவதுண்டு


-----------------------------நாகேந்திர பாரதி 



My Poems/Stories in Tamil and English 


நீரில் விழுந்த நிலவாக - கவிதை

 நீரில் விழுந்த நிலவாக - கவிதை 

—————————---------------------—-

நெளிந்து வளைந்து

கலைந்து திரும்பி


நீரில் விழுந்த

நிலவாய் நினைவு


வரும் போகும்

வாட்டும் வதைக்கும்


இரவு முடியும்

நினைவு மறையும்


என்று நினைத்து

ஏங்கிக் கிடந்தால்


பகலில் சூரியன்

நீரில் நெளிவான்


———நாகேந்திர பாரதி

Poems/Stories in Tamil and English 



பிஞ்சிலே பழுக்கிறது - கவிதை

பிஞ்சிலே பழுக்கிறது - கவிதை 

—————————------------------------—-

கல்வித்  திட்டத்தில்

படிப்படியாய் இருந்தாலும்


கைபேசி கணிணி

ஏற்றிவிடும் எங்கேயோ


தொல்லைக் காட்சியும்

தூக்கிவிடும் தூரத்தில்


எங்கோ போய்விட்டு

இறங்க வழியின்றி


பிஞ்சிலே பழுத்து

பிய்ந்து உதிர்ந்து விடும்


————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


பாரம் சுமக்கும் வேர்கள் - கவிதை

 பாரம் சுமக்கும் வேர்கள் - கவிதை 

——————————----------------------—-

விதைத்த போதே

விதிக்கப் பட்டது


பாரம் சுமந்து

பழக்கப் பட்டது


பூவாய் மலர்ந்துக்

காயாய் விளைந்து


கனியாய்க் கனிந்ததைக்

காண முடியாமல்


பூமிக்கு உள்ளேயே

புதைந்து கிடப்பது


வேர் முட்டிக் கொஞ்சம்

வெளியே வந்தாலும்


கால் தட்டி விழுவோர்

வெட்டிக் குறைப்பது


ஒரு நாள் புயலில்

மரமும் சாய


வெளியே வந்து

விம்மிக் கிடப்பது


பாரம் விழுந்து

பளுவும் குறைந்தாலும்


சொந்தம் போன

சோகத்தில் அழுவது


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நிலாச் சோறு நாட்கள்- கவிதை

 நிலாச் சோறு நாட்கள்- கவிதை 

——————————---------------


மொட்டை மாடிக்கு

முடி முளைத்த நாட்கள்


இரைச்சல் சப்தத்திற்கு பலர்

ஏறிட்டுப் பார்த்த நாட்கள்


அத்தனை சொந்தமும்

அருகருகே அமர்ந்து


பேசிச்    சிரித்ததும்

ஊட்டி உண்டதும்


பார்த்திருந்த நிலவோடு 

சேர்ந்திருந்தன மேகங்கள் அன்று


இன்றும் பௌர்ணமி தான்

மேகங்களைக் காணோம்


—————-நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


புதன், 16 ஆகஸ்ட், 2023

ஒற்றைச் சிறகோடு - கவிதை

 ஒற்றைச் சிறகோடு - கவிதை 

—————————---------------------


சேர்ந்து படபடத்த

சிறகுகளை விட்டு


உதறி எறியப்பட்ட

உணர்ச்சித் தருணம்


கிழித்துப் பறந்திருந்த

காற்றே துணையாகி 


ஏந்திப் பறந்து செல்லும்

இயற்கை முரண்


ஒற்றைச் சிறகாகப் 

பயணிக்கும் பரிதாபம் 


உணர்ந்து பார்த்தோர்க்கு

உள்ளுக்குள் வலிக்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெற்றி என் பக்கம் - கவிதை

 வெற்றி என் பக்கம் - கவிதை 

————————-----------------------—-


எண்ணமும் செயலும்

ஒன்றாய் இருப்பதால் 


ஒன்றாய் இருப்பதும் 

நன்றாய் இருப்பதால் 


நன்றாய் இருப்பதும்

நாட்டுக்காய் இருப்பதால் 


நாட்டுக்காய் இருப்பது

வீட்டுக்கும் சேர்வதால்


வெற்றி நிச்சயம்

என் பக்கம் நம் பக்கம்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

மூழ்கிப் போனவன் - சிறுகதை

 மூழ்கிப் போனவன் - சிறுகதை 

----------------------------------------------------

  'ஆண் பிள்ளைங்க அழக்கூடாதுன்னு சொன்னவங்க காதலிக்காதவங்களாகத்தான் இருக்கணும்'  ரவியின் கண்களில்  வழியும் கண்ணீர் அவன் காதலுக்குச்  சாட்சி .


  அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது.  அவனிடம் தான்  முதலில் வந்து கேட்டாள் .  'திருநெல்வேலியில் இருந்து மாறுதலாகி வந்திருக்கேன். அக்கௌன்ட் செக்சன் இதுதானே'   . அந்த மாறுதல் லெட்டரைக்  கொடுத்த அந்த மென்மையான விரல்கள் அவன் மனதில் உடனே இறங்கின.   நிமிர்ந்த போது நீல  நிறக் கண்கள்.  அதற்கேற்றாற்  போல் முகத்திற்குமேல் படர்ந்திருந்த  நீல நிறத்  துப்பட்டா  செதுக்கிய மூக்கு.  செவ்விதழ்கள். ஜிவ்வென்று இறங்கியது அவள் முகம் அவன் இதயத்திற்குள். 


 அதற்குப் பின், அவள் வேலை செய்த விதம்  ,அனைவரிடமும் பழகிய விதம், அந்தப் பண்பான சிரிப்பு. பைத்தியமாகிப்  போனான். அவள்   விடுமுறை எடுக்கும் ஒவ்வொரு நாளும்  ஒரு யுகமாகக்  கழியும்.   அவள் திரும்பும் நாள் ஒரு வசந்த நாளாக மாறும். பேசினான் .பழகினான்.  காதலைச்  சொல்லத்  தயங்கினான் .மறுத்துவிட்டால்  என்ன செய்வது.


  அவள் வீட்டு முகவரி தெரிந்துகொண்டு அந்த வீதிகளில் விடுமுறை நாட்களில் அலைந்தான்.   அவள் கடைத்தெரு செல்லும் போதும் கம்ப்யூட்டர் வகுப்புக்குச்  செல்லும் போதும் அவள்  பின்னாலயே சுற்றினான் . அவளுக்குத்  தெரிந்து போனது.


 ஒரு நாள் மதிய நேரம் உணவு இடைவெளியின் போது  சொன்னாள் .

 ' எனக்குப்  பிடிக்கல.'

' ஏன்'

' உங்களுக்குப்  பொறுப்பு இருக்கு.  பதவி உயர்வு வரும் நேரம்.  நேரத்தை வீணடிக்காதீர்கள்.  உங்கள் தம்பி தங்கை வாழ்வு உங்கள் கையில் தான் இருக்கு .மறந்துடாதீங்க '.


அவள்   நாசுக்காகப்  பேசிய விதம்  அவள் மேல் அதிகம் காதல் கொள்ள வைத்தது.

'  உங்க துணை எனக்குக்  கிடைக்காதா' என்று கேட்டான்.

 ' கஷ்டம்'

 'ஏன்'

 ' சொல்லத்  தெரியல'

'  என்னைப்  பிடிக்கலையா'

'  அப்படி இல்லை'

 ' வேறு எப்படி'  

'கொஞ்ச நாள் போகட்டும் '

 'எவ்வளவு நாள்

'  ஒரு வருடம்  '

'ஜாஸ்தி '

'தேவை அவ்வளவு நாள்.  நீங்க படியுங்கள்  படிக்கிறதோடு நிறுத்திக்கங்க .  ஆபீஸ்ல என்னை அடிக்கடி  பார்க்கிறது எல்லாம் வேணாம். . நீங்க படிப்பிலே வேலையிலே மூழ்கிப் போய்  சீக்கிரம்  மேனேஜர் ஆகணும். '

  இது அனுமதியா அறிவுரையா நாகரிக மறுதலிப்பா  .


புரியாமல் தவித்தான்.   ஆனால் அதன் பின்  அவள் வீட்டுப் பக்கம் போவதைத்  தவிர்த்து விட்டான் 

 படிப்பு ,படிப்பு ,பதவி உயர்வு, மாறுதல் ,பம்பாய் .

' போயிட்டு வாங்க' புன்முறுவல் முகம்.

 புரியாமல் போனான்.


  பம்பாய் போனபின் வேலைப்பளு. வாழ்க்கை மாறியது. தம்பி, தங்கை, படிப்பு ,வேலை என்று நாட்கள் பறந்தன .இரண்டு வருடங்கள் கடுமையான உழைப்பு. வேலையிலேயே மூழ்கிப் போனான். . மேனேஜர் ஆகியாச்சு.   இப்போது  தங்கை திருமணத்திற்குப்  பத்திரிக்கை வைக்க வந்திருக்கிறான்.   மறுபடி அந்த அலுவலகத்தில். உள்ளே  நுழைந்து பழைய நண்பர்களைப்  பார்த்துப்  பேசும்போது கண்கள் ரமாவைத்  தேடின .   


புரிந்து கொண்ட நண்பன்  சொன்னான். ரமாவுக்குப்  போன மாதம் கல்யாணம் ஆயிடுச்சு. திரும்பத் திருநெல்வேலிக்கு மாறுதல் வாங்கிட்டுப்  போயிட்டாங்க.  உன்னப்   பத்தி அடிக்கடி கேட்பாங்க.  நீ தான் நாங்க போட்ட மெசேஜ் எதுக்குமே  பதிலே போடலை .  வேலையிலேயே மூழ்கிப்  போயிட்ட போலிருக்கு. . அத்தோட குடும்பப்  பொறுப்பிலேயேயும்    மூழ்கிட்டேன்னு நாங்க பேசிக்கிட்டோம், ரமாவும் தான். '


  ஆண்பிள்ளைங்க  அழக்கூடாதுன்னு  காதலிக்காதவங்க தான்  சொல்லுவாங்க. 


--------------------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


அன்புள்ள அன்புக்கு -கவிதை

 அன்புள்ள அன்புக்கு -கவிதை 

—————————-------------------—

கொஞ்ச நாட்களாகக்

காணாமல் போய் விட்டாய்


கூட்டுக் குடும்பங்கள்

குலைந்து போனதாலா


உலகம் ஒன்றாகி

உருவம் மாறியதாலா


இயற்கை அறிவு போய்

செயற்கை ஆனதாலா


வாயின் பேச்சு போய்

விரல் வீச்சு ஆனதாலா 


லைக்காக மாறியதால்

தொலைந்து போய் விட்டாய்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வல்லமை வேண்டுமே - கவிதை

 வல்லமை வேண்டுமே - கவிதை 

--------------------------------------------

உலகம் ஒன்றான 

ஓட்டம் வாழ்க்கையில் 


நன்மையும்  தீமையும் 

உலக மயம் 


வேண்டிய தெல்லாம் 

விரலின்  நுனியிலே 


கைபேசி வாழ்க்கையில் 

காலம் கழிகிறது 


அன்பு பேசி அறிவு பேசி 

ஆதரவு பேசி 


அனைவரையும் நேசித்து 

வாழும் வாழ்க்கைக்கு 


வேண்டிய வல்லமையை 

தேடித் திரிகிறோம் 


------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


மரம் தேடும் மழைத்துளி - கவிதை

 மரம் தேடும் மழைத்துளி - கவிதை 

—————————---------------------——-


தேடும் மழையின் துளி எல்லாம்

திரும்ப அழைக்கும் திறன் உண்டு


கூடி நிற்கும் மரக்கூட்டம்

குளிர வைக்கும் மேகத்தை


ஓடிச் செல்லும் மேகத்தை

நிறுத்தி வைக்கும் நெடு நேரம்


பொழியும் மழையின் வேகத்தால்

புதிய உணர்வில் பூத்து வரும்


தன்னை வளர்க்கும் மழைத் துளியைத்

தானே அழைக்கும் திறம் உண்டு


வேர்கள் விரைந்து உள் ஓடி

நிலத்தின் நீரையும் எடுத்து வரும்


காட்டை அழித்து ஒழிப்பதனால்

ஒற்றை மரங்கள் நீர் தேடும்


காட்டைக் காத்து வளர்த்திட்டால்

தெரிந்து பொழியும் மழை எங்கும் 


——————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள் 

-------------------------------------


கலவரம் 

-------------------


துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பித்து

தனித்துக் கிடக்கிறது

செருப்பு


தெரு 

-----------------


முந்தாநாள் பெய்த மழையில்

நேற்று முளைத்தது

சாக்கடை




ஞாபகம் 

---------------------


பைப்பாஸில் கடக்கும் போது

தூரத்தில் இருந்து வரும்

வேர்க்கடலை வாசம்


ஆகாயம் 

------------------


வெளிச்சத்தைத் திருடியவன் விட்டுச் சென்ற

அடையாளக் குறிகளாய்

நட்சத்திரங்கள்


--------------------------------------நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கொலு பொம்மைகள் - சிறுகதை

 கொலு பொம்மைகள் - சிறுகதை 

-------------------------------------------------

 புரட்டாசி அமாவாசை அன்னிக்கி  முதல் நாள் பெட்டிக்குள் இருக்கிற எங்களுக்கெல்லாம் விடுதலை. அங்க  வைக்கோலால் ஏற்பட்ட முதுகு அரிப்பு எல்லாம் போயி, மறுநாள் அமாவாசை அன்னிக்கி  கொலு  படிக்கட்டில் ஜம்முன்னு நிக்கிறது சுகமா இருக்கும்.  சுத்தி  கலர் லைட் வேற  ஜொலிக்கும்.  புதுசா மால்லே  இருந்து வாங்கி வந்த அம்மன் சாமி பொம்மைகளுக்கு விசேஷக்  கவனிப்பு கொடுப்பாங்க.  எங்களுக்குக் கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் .

 


அப்புறம்  மாமி, கொலு பார்க்க  வர்றவங்க கிட்ட எல்லாம் ஒப்பிக்கிற வசனம்.  'இந்த செட்டு புதுசா வாங்கினது.மால்லே   ஏசி இருந்தாலும் புது பட்டு புடவை வேற கசகசன்னு இருந்துச்சு. இதைத்  தேடிப்  புடிச்சி  வாங்குறதுக்குள்ள அவரு வேற பத்துத்  தடவை இந்த புது ஐபோன்னுக்கு  கால் போட்டாரு'  என்று பொம்மையோடு சேர்த்து மற்ற புது வரவுகளை பற்றியும் , இல்லை, புது செலவுகளை பற்றியும் ஒரு பெரிய புராணமே பேசுவார்.


 


'  மாமி வீட்டு சுண்டல் நல்லா இருக்குன்னு வந்து இருந்தா  இந்த வசனங்களையும் கேட்கத்தானே வேணும் ' அத்தோடு வீட்டு  மருமகளின் சுருதி பிசகுன பாட்டையும் கேட்டுத்தான் ஆகணும்.  அதுவும் இப்ப இசைக்கெல்லாம்  வாட்ஸப் க்ரூப் இருக்கே  .அதுல போய் இந்த அம்மா பாடி அவங்க பாடுன பாட்டுக்கெல்லாம் கேட்காமலே 'பாவம்னு' பத்து தம்ஸ்அப்  விழுந்துருக்க,  அவங்க  பிரமாதமா பாடுறோம்னு   நினைச்சுக்கிட்டு   இங்க  பாடுவாங்க அதையும் சகிச்சுக்கணும்.   

இது தவிர அவங்க ஆம்படையான், மாமியோட பையன்  வேற. நானும் அந்த க்ரூப்பிலே இருக்கேன் நானும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டுத்  தினசரி அங்கே  'ஆஹா ஓஹோ ' ன்னு பாராட்டுவாங்க. அப்புறம் அங்கெ இருக்கிற ஒருத்தர் ஒருத்தர் , அவரு சின்ன புள்ளைல இருந்து கேட்ட பாகவதர், டி எம் எஸ் இருந்து ஆரம்பிச்சு ஜேசுதாஸ் , ஹரி ஹரன் வரைக்கும் என்னோட குரல் சாயலோடு பாடுறாங்க ' ன்னு ரெண்டு பக்கத்துக்கு கமெண்ட் போட்டு அரை மணி நேரம்  பேசியிருக்காரு ' ன்னு சொல்லி அதை வேற காமிப்பாங்க. கேட்க வைப்பாங்க. அவர்   ஒவ்வொரு நிமிஷத்திற்கும் நடுவிலே அஞ்சு நிமிஷம் அமைதி காத்து பேசி முடிக்கறதைக் கேட்குறதுக்குள்ளே நமக்கு சுண்டல் பசி எடுக்க ஆரம்பிச்சுடும்.  


  அதோட விடுவாங்களா .  அப்புறம்  அவங்க வீட்டு பேரனும் பேத்தியும்  பண்ணி வச்சிருக்கிற அந்த மண்ணு தோட்டம், வீடு இதப்பத்தி எல்லாம் ஒரு வண்டி வசனம் வரும் .  அதோட இதுக்கும் கூட கலைக்கும் கூட  ஏதோ  வாட்சப் க்ரூப் இருக்காமே.  .   அதுல போயி இவங்க போட்ட   போட்டோக்களை எல்லாம்  காண்பிப்பாங்க. அதுக்கு ஒரு நாலு அஞ்சு பேரு 'பிரமாதம்,. நல்லா இருக்குன்னு 'சொல்லிட்டாங்களாம் அதையும் பெருமை அடித்துக்கொண்டு ,அங்கே  ஒரே இசை , கலை  வாட்சப் க்ரூப்புகளிலே இவங்க பெருமை ' பத்தி தான் பேசிக் கிட்டு இருப்பாங்க  .


   பிள்ளைங்களோட பெருமை சொன்னாதானே தெரியும் . படிப்புல மக்கா இருந்து பாஸுக்கு பார்டர்  மார்க் வாங்கி இருந்தாலும் இந்த கலை வண்ணமாவது இருக்கேன்னு  காட்டுறதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்குவாங்க . க்ரூப் ஆரம்பிச்சவங்க  நல்லது தானே பண்ணி இருக்காங்க.. பாடுற திறமை, படம் வரையற திறமை இருக்கோ இல்லையோ , ஒருத்தரை ஒருத்தர் பாராட்டுற திறமையை வளர்த்து விட்டுருக்காரேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். இல்லீன்னா பாத்ரூம் லே மட்டும் பாடிக்கிட்டு இருந்த , அந்த சுவர்லே நகத்தால் படம் வரைஞ்சுக்கிட்டு இருந்த இத்தனை பேருக்கு இவ்வளவு சந்தோசம் வந்திருக்குமா. நல்ல விஷயம் தானே. அவங்களை  வாழ்த்தலாம்.


 அப்புறம் இன்னொரு விஷயங்க. ஆயுத பூஜைக்கு ரெண்டு  நாள் முன்னாடி  இந்த மாமியும் மருமகளுமா மத்தவங்க வீட்டுக்குக்  கொலு  பாக்குறதுக்கு ஒரு அவசர ட்ரிப் அடிப்பாங்க பாருங்க . பாத்துட்டு வந்து புரணி பேசுவாங்க  .

 'அலமேலு விட்டு போளியிலே  இனிப்பு பத்தாது . சந்திரிகாவுக்குப்  பொங்கல்   பண்ணவே தெரியலே.

 கல்லு வேற கிடந்தது.  வேணி தந்த ப்ளவுஸ்  பிட்  சரியில்லை. சுமதி தந்தது , அது என்ன குங்கும டப்பாவா, ஓரத்திலே நெளிஞ்சு இருந்துச்சு . '  இப்படி பார்க்கப்  போனவங்க கொடுத்த பணடங்களைப் பத்தி  எல்லாம்  பேசிகிட்டு இருப்பாங்க. இதே மாதிரி தான்  இவங்க வீட்டுப் புரணியும்  அங்கே ஓடுறது தெரியாம.

 

 இதெல்லாம் விடுங்க . விஜய தசமி அன்னிக்கு ராத்திரி பூஜை பண்ணிட்டு சாஸ்திரத்துக்கு எங்களை எல்லாம் கவுத்து போடுவாங்க பாருங்க.  கவுத்து போட்டுட்டு துக்கப் படுவாங்க .'  பிள்ளைங்க மாதிரி பார்த்துட்டு திருப்பி எல்லாத்தையும் பொட்டிக்குள்ள போடணும்னு நினைக்கிறப்போ மனசே கேட்க மாட்டேங்குது  '. இப்ப எங்க கண்களில் இருந்தும் கொஞ்சமா கண்ணீர் கசியுங்க.

 

-------------------------------------------------------நாகேந்திர  பாரதி


My Poems/Stories in Tamil and English 


சாபங்கள் பெற்ற குயில் - கவிதை

 சாபங்கள் பெற்ற  குயில் - கவிதை 

———————————---------------------—

பறவைக் குயிலின்

சாபம்  ஒரு விதம்


குஞ்சு பொறிக்கவே 

கூடு தேட வேண்டும்


பாவைக் குயிலின்

சாபம் வேறு விதம்


இருக்கும் கூடே

இறுக்கும் வேதனை


பாடிப் பறக்க

முடியாக் கொடுமையில்


இருந்து கிடக்கும்

இறக்கும் வரைக்கும்


—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


சோத்துக்கு என்ன செய்வோம் - கவிதை

 சோத்துக்கு என்ன செய்வோம் - கவிதை 

—————————————----------------------------—

காடு கழனி எல்லாம்

வீடு      நகரம்      ஆச்சு


நாடு உலகம்  ஆகிக்   

கிராமம் தொலைஞ்சாச்சு 


கோதுமை  பருப்பு எல்லாம்

இறக்குமதி யாய் ஆச்சு


அறிவு ஒண்ணு மட்டும்

ஏற்றுமதி யாய் ஆச்சு


அரிசிச்  சோறு மாறி

பிஸ்ஸா பர்கர் ஆச்சு


—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


முதுகில் சுமக்கும் மூட்டைகள் - கவிதை

 முதுகில் சுமக்கும் மூட்டைகள் - கவிதை 

--------------------------------------------------------------------

இறக்கி வைக்க விரும்பாத 

இன்ப மூட்டைகள் 


விரும்பித் தேடிய 

குடும்ப வாழ்க்கை 


மேடும் பள்ளமும் 

சேர்ந்த பாதை 


இன்பமும் துன்பமும் 

இணைந்த  நாட்கள் 


போகும் தொலைவும் 

நேரமும் தெரியாது 


இறக்கும் போது 

இறங்கிப் போகும் 


அதுவரை சுமையும் 

சுகமே சுகமே 

-------------------------------நாகேந்திர  பாரதி 

 

My Poems/Stories in Tamil and English 


வியாழன், 3 ஆகஸ்ட், 2023

இதயக் கல்வெட்டு - கவிதை

 இதயக் கல்வெட்டு - கவிதை 

——————————-

கீறி எழுதியதால்

கிழிந்த இதயத்தில்


ஊறி வழிகின்ற

ஒவ்வொரு சொட்டிலும்


உந்தன் பெயரே

உருண்டு வருகிறது


நாளைக் கடத்தாமல்

நாளையே வந்து விடு


இன்று இதயத்தின்

ரத்தத் துளிகளின்


ஈரத்தைக் காயவைத்து

இருப்பேன் உயிரோடு


—————நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


நடுங்காத நட்பு - கவிதை

 நடுங்காத நட்பு - கவிதை 

——————--------------------------—

பொக்கை வாயர்கள்

நிறைந்த பூங்காவில்

பக்கத்தில் அமர்ந்திருக்கும் இவனிடம் 

எப்போது ஏற்பட்டது நட்பு


ஆறாம் வகுப்பில்

ஆசிரியரிடம் அடி வாங்கி அழுதபோது

ஆறுதல் சொன்னானே  அப்போதா


காதலித்த பெண்ணுக்குக்

கடிதம் சுமந்து போனானே

அப்போதா


அவளை மனைவியாக்க

மறுத்த பெற்றோரிடம்

மல்லுக்கு நின்று

மணமுடித்து வைத்தானே

அப்போதா


வேலை பிரித்த ஊர்களை

கடிதத்தால் ஒட்ட வைத்து

தூரத்தை வென்றானே

அப்போதா


குடும்பம் பெரிதாக

கொடுக்கல் வாங்கல்களில்

நாட்களை நகர்த்தினோமே

அப்போதா


மக்களுக்கு  மணமுடித்து

மனைவிகளும்  சேர்ந்து போக

தனி மரங்களாய்த்

தவித்து நின்றோமே

அப்போதா


ஊன்று கோலின்

ஓரத்தில் இருக்கும்

அவன் ஒல்லிக் கையை

அழுத்தும் போது தெரிகிறது


அந்த விரல்களின் நடுக்கத்தில்

இந்த நடுங்காத நட்பின்

ஆரம்ப விதை

போன பிறவியில் என்று புரிகிறது


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


இரண்டில் ஒன்று - சிறுகதை

 இரண்டில் ஒன்று - சிறுகதை 

————————-----------------------—

வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா என்று திகைக்க வைக்கும் அதே ரோஜா முக அழகிதான் .


ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள் . அந்த கம்பெனி எக்சிகியூடிவ் வேணு .


சோமு அரசாங்கக் கம்பெனியில் கிளார்க் . தூரத்துச் சொந்தம் . வீடு சென்னையின் மற்றொரு பகுதியில் . அடிக்கடி பார்த்துப் பழகியவன் . அவள் மேல் உயிராய் இருப்பவன் .


இது பெரியவர்கள் பார்த்துச் செய்ய வேண்டிய விஷயம் ‘ என்று இவளிடம் ப்ரொபோஸ் செய்த இருவரிடமும் சொல்லி இருந்தாள் . இருவரின் குடும்பத்தினரும் இவள் வீட்டுக்கே வந்து பெண் கேட்டுச் சென்றுள்ளனர் . ஆனால் , அவளைச் சுதந்திரமாக வளர்த்திருந்த அவள் தந்தையோ ‘ உன்னால் இதில் முடிவெடுக்க முடியும் , அது தான் நல்லதும் கூட ‘ என்று சொல்லி விட்டார் .


மனத்தராசில் இருவரின் செயல்களையும் ஏற்றிப் பார்த்தாள் .


அன்றொருநாள் வேணு அழைத்தான் ‘ என் பிறந்த நாளை , அனாதைக் குழந்தைகளோடு சேர்ந்து கொண்டாடுகிறேன் . முடிந்தால் அவசியம் வரவும் ‘ அவனுடன் சேர்ந்து அந்த ஆசிரமத்திற்குச் சென்றது . கள்ளம் கபடம் இல்லாத அந்தக் குழந்தைகளின் சிரிப்பு இப்போதும் கண் முன்னால்.

மற்றொரு முறை இவள் ரத்த தானம் செய்யச் சென்ற போது அங்கே வேணுவைச் சந்தித்தது .


சோமு ஒருநாள் போனில் பேசினான் . ‘உங்க குரலைக் கேட்டு ரெம்ப நாளாச்சு . கேட்கணும்னு தோணுச்சு . அதான் பேசினேன் . சாரி ‘ என்று ஆரம்பித்துப் பேசிக் கொண்டிருந்தான் .

ஒரு அடை மழை யன்று மாலை மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன் வந்து காத்துக் கிடந்தான் . ‘ காலையிலே அடிச்ச வெயிலுக்கு நீங்க குடை கொண்டு போயிருக்க மாட்டீங்கன்னு தெரியும் . அதான் ‘.


பல மாதங்கள் இருவருடனும் பழகிய பல நிகழ்ச்சிகளை எடை போட்டுப் பார்த்தாள் . ‘சமூகப் பிரக்ஞய் உள்ள வேணுவா , என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் சோமுவா ‘ செல்போன் ஒலித்தது . பேசியவன் சோமு .


‘உங்களுக்கு ஏற்றவர் வேணுதாங்க . அவரால்தான் உங்களை வசதியா வச்சிருக்க முடியும் . நீங்க மஹாராணி மாதிரி வாழணும் . நான் அதைப் பார்த்து ரசிக்கணும் . அது போதுங்க எனக்கு ‘ என்று தழுதழுத்த சோமுவைச் சமாதானப் படுத்தி விட்டு வேணுவின் எண்ணைத் தொட்டாள் .


அவள் மனம் முழுக்க நிறைந்திருந்தது , அவள் வாழ்வளிக்க வேண்டிய தம்பி தங்கைகளும் , பெற்றோரும் , அத்தோடு வேணுவும்தான் . சோமுவின் நினைவோ அவ்வப்போது வந்து போகும்தான் .


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கையிலே ஆகாசம் - கவிதை

 கையிலே ஆகாசம் - கவிதை 

—————————----------------------

அஞ்சு விரல் விரிச்சாலே

அவதரிப்பான்  ஞாயிறு


இரட்டை ஞாயிற்றை

இருப்பில் வைத்தபடி


ஆகாசம் கைக்குள்ளே

அடக்கி வைத்தபடி


ஒவ்வொரு உறுப்பினுள்ளும்

சக்தியை உள்வைத்து


வெளியே தேடுவது

வெட்டி வேலைதானே


உடலுக்குள் மனதிற்குள்

அறிவுக்குள் அமைந்துள்ள


அத்தனை சக்தியையும்

ஆராய்ந்து வெளிப்படுத்தி


வீட்டிற்கும் நாட்டிற்கும்

வெளிச்சம் கூட்டிடுவோம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


அஞ்சறைப் பெட்டி - கவிதை

 அஞ்சறைப் பெட்டி - கவிதை 

———————---------------------—— 


பிறந்த வீட்டின்

பெருமை உணர்வு


நாத்தனார் மாமியார்

நர்த்தன நாடகம் 


இரண்டும் கெட்டான்

கணவன் பார்வை


ஏங்கும் அன்பின்

இரைச்சல் சப்தம்


எல்லாம் போட்டு

மூடி வைக்க


அடுப்படி அறையில்

அஞ்சறைப் பெட்டி 


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 31 ஜூலை, 2023

கனாக் கண்டேன் - கவிதை

 கனாக் கண்டேன் - கவிதை 

————————----------------——

ஆகாயத்தில் இருந்து

இறங்கிய  நட்சத்திரம்


அழுது கொண்டிருந்த

குழந்தை கையில்


தன்னை ஒப்படைத்துச் 

சிரிக்க வைத்த காட்சி


கனவுக்குப் பொருளிருந்தால்

அவரவர் அர்த்தத்தில்


புரிந்து கொள்ளலாம்

புரியாமலும் போகலாம் 


————-நாகேந்திர  பாரதி


My Poems/Stories in Tamil and English 


அக்னிச் சூடுகள் - கவிதை

 அக்னிச் சூடுகள் - கவிதை 

———————--------------------------

தம்ளர் ஒன்று தூக்கில்

தொங்கும் தனியாக 


குற்ற உணர்ச்சியின்றிக் 

கடந்து போவார் பலர்


குளிர்ந்த தம்ளர் தான் 

கொதிக்கும் உள்ளே 


தம்ளரின் உள்ளே

தகிக்கும் பகையின்


அக்னிச் சூட்டின்

வெப்பம் வெளியேறும்


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 27 ஜூலை, 2023

இசை புதிது - நேர்முக நிகழ்வு

 இசை புதிது - நேர்முக நிகழ்வு 

------------------------------------------------------------


இசை புதிது - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


மண் சட்டி - சிறுகதை

 மண் சட்டி - சிறுகதை 

———————————

‘சாப்பிட்டியாப்பா ‘

‘உடம்பைப் பாத்துக்கோ ‘

‘தம்பிக்கு இன்னும் கொஞ்சம் ரூபாய் அனுப்பு’

‘தங்கச்சியைக் கவனிச்சுக்கோ ‘


இனிமேல் அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாது . அம்மாவின் உதடுகள் மூடிக் கிடந்தன . அந்த முகத்தில் மயான அமைதி . அது ஒரு மின் மயானம் .


போர்த்தப்பட்டிருந்த புதுப் புடவைகளும் , பூ மாலைகளும் எடுக்கப்பட்டு ஒரே சேலையோடு சுற்றப்பட்ட உடலோடு ,அந்த வண்டி மின் மயான மேடை நோக்கி நகர ஆராம்பித்தது . கூடவே சென்றான் அவன் . சுற்றிலும் அழுகைக் குரல் . அது வரை அடக்கி வைத்திருந்த அவன் கண்ணீரும் மடை திறந்தது . பிள்ளைப்பிராய நினைவுகள் ஒவ்வொன்றாய் மனதில் ஓட ஓடக் கண்ணீர் பெருகியது .


முதல் நாள் இரவு வீடியோ காலில் அம்மாவிடம் பேசியபோது , அவர் கண்களில் கசிந்த ஈரம் . வாயின் அசைவு . இரண்டு நாட்களாகப் பேச்சோ அசைவோ இன்றிக் கிடந்த உடலில் ஏற்பட்ட அசைவுகள் .


இறந்து போன அப்பா பெயர் , தாத்தா பெயர் , அம்மாச்சி பெயர் , குலதெய்வம் பெயர் , உள்ளூர் கிராம அம்மன் பெயர் . அவன் சொல்லச் சொல்ல அம்மா மனதில் கிளம்பிய நினைவலைகள் .


பிறந்தது , வளர்ந்தது , விளையாடியது , மணந்தது , பிள்ளைகள் பெற்றது , வளர்த்தது , எத்தனை ஊர்கள் , எத்தனை கோயில்கள் , கஷ்டங்கள் , நஷ்டங்கள் , சோகம் , மகிழ்ச்சி , . எழுப்ப்பிவிட்ட நினைவலைகள் தான் கண்ணோரக் கசிவா .


நடு நடுவே அவள் புலம்பிக் கொண்டிருந்த வார்த்தைகளும் சேர்ந்தது .


‘எத்தனை மாதங்கள் , ஆஸ்பத்திரியில் ஊசி , மருந்து , மாத்திரை , சத்து நீர் , ரத்தம் ஏற்றி , வலி , வலி , உடம்பே புண்ணாகி , எத்தனை கஷ்டம் , எனக்கும் , சொந்தங்களுக்கும் . போய்ச் சேரவேண்டும் ‘


புலம்பிக் கொண்டிருந்த உள் மனதிற்கு இதமாக வந்து விழுந்தன , அவன் சொன்ன கணவன் பெயர் அப்பா , அம்மா பெயர் , அம்மன் பெயரோடு சேர்ந்து வந்த உள்ளூர்க் கோபுரத் தோற்றம் . சேர்ந்து விளையாடிய சீதா , அதோ அவள் அழைக்கிறாள் . வலி குறைகிறது . நிம்மதி அமைதி .


வந்தது சேதி இரவு .

‘உங்க குரலைக் கேட்கத்தான் இழுத்துக்கிட்டு இருந்த உசிரு அடங்கிப் போச்சு ‘


இதோ அந்த உடல் மின்சார மேடையை நெருங்க , அம்மாவின் கன்னங்களைத் தடவிக் கொடுக்கிறான் . சில்லிப்பு கைகளில் . குனிந்து நெற்றியில் முத்தமிடுகிறான் . ‘பை . ம்மா ‘ .



.அவனை விலக்கி விட்டு அம்மாவின் உடலைத் தூக்கி மேடையோடு ஒட்டிய உருளைத் தகட்டில் வைத்துத் தள்ள , உள்ளே வேகமாக நுழைந்த அந்த உடல் ஒரு இடத்தில் கீழே தணிய குப்பென்று கிளம்பிய சிவப்பு ஜ்வாலையை மறைத்து இறங்கியது ஷட்டர் தகடு ஒன்று .


அரை மணி நேரத்தில் கிடைத்த துணி சுற்றிய மண்சட்டியின் ஓரத்தில் ஒரு சீட்டில் பெயர் ’ மங்கள ராதா ‘ . அந்த மண் சட்டி சுட்டது .


————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


இப்படிக்கு மனைவி- கவிதை

 இப்படிக்கு மனைவி- கவிதை 

———————-----------------------——

கடற்கரையில் பூங்காவில்

காக்க வைத்த காதலி தான்


சேர்ந்தே சிரித்து வந்த

செல்லக் குட்டி தான்


சீராட்டி வளர்த்து வந்த

சொந்தத்தைப் பிரிந்தவள் தான்


நீயே கதி என்று

நம்பி வந்தவள் தான்


சிற்சில மாதங்களில் உன்

சுய ரூபம் புரிந்தவள் தான்


எப்போது விடுதலை என்று

ஏங்கிக் கிடப்பவள் தான்


இல்லறத்தில் ஏமாந்த 

இப்படிக்கு மனைவி தான்

—————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 



ஞாயிறு, 23 ஜூலை, 2023

மனசெல்லாம் மார்கழியாய் - கவிதை

 மனசெல்லாம் மார்கழியாய் - கவிதை 

————————————-------------------------------

வீதிக்குச் சேதி வரும்

சாணியோடு தண்ணீ வரும்


எதிர்த்த வீடு வரை

எத்தனையோ கோலம் வரும்


கோலத்தின் நடுவினிலே

பூசணிப்பூ பூத்து வரும்


பாவைப் பாட்டு வரும்

சாமிக்கும் கூட்டம் வரும்


மனசெல்லாம் மார்கழியாய்

மங்கலமாய் நினைப்பு வரும்


————நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சனி, 22 ஜூலை, 2023

எங்கிருந்து வந்தாய் - கவிதை

 எங்கிருந்து வந்தாய் - கவிதை 

—————————--------------------—

திருப்பத்தில் எதிர்ப்படும்

திடீர் வாகனம் போல்


கோடை இரவிலே

பளிச்சிடும் மின்னல் போல்


காலை மலரிலே

தொங்கும் முத்துப் போல்


எங்கிருந்து வந்தாய்

என்று முதலில் கேட்டாலும் 


ஏன்தான் வந்தாய் என்று

இதயம் புலம்புகிறது


————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


திறக்காத சாளரம் - கவிதை

 திறக்காத சாளரம் - கவிதை 

———————------------------------—-

தட்டிப் பார்த்தாலும்

முட்டி மோதினாலும்


வெளியே இருந்து

திறக்காது சாளரம்


உள்ளே போக வேண்டும்

உள்ளம் உருக்க வேண்டும்


கண்களின்  பேச்சோடு

கண்ணீர் பெருக்க வேண்டும்


உள்ளிருந்து  திறக்கும்

காதல் சாளரம்


——————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


வியாழன், 20 ஜூலை, 2023

அன்பு - கவிதை

 அன்பு - கவிதை 

——-------------------—-

வாய்ப் பேச்சிலும்

வலிந்த சிரிப்பிலும்


உள்ளிருக்கும் பொய்யை 

ஒளித்து வைத்திட்டு


அன்பென்று சொல்லி

அலங்கார நாடகம்


உண்மை அன்புக்குக்

கண்ணொன்றே போதும்


காட்டிக் கொடுக்கின்ற

கருணை சொல்லி விடும்


அன்பைக் கொடுத்து

அன்பை வாங்கிடுவோம்

———— நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


வாழ்க்கையை வார்த்திடுவோம் - கவிதை

 வாழ்க்கையை வார்த்திடுவோம் - கவிதை 

————————————------------------------------—-

கல்லுக்குள் சிற்பத்தைக்

கண்டவன் சிற்பி


காகிதத்தில் ஓவியத்தைக்

கொண்டவன் ஓவியன்


இயற்கைக்குள் கவிதையை

இணைத்தவன் கவிஞன்


பார்க்கின்ற எல்லாமே

பரம்பொருளாம் , ஞானி


வார்க்கின்ற சிந்தனையே

வடிவங்கள் ஆகும்


அழகான  வாழ்க்கையும் 

அவரவர் நினைப்பில்


————நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


திங்கள், 17 ஜூலை, 2023

பேய் வீடு - சிறுகதை

 பேய் வீடு - சிறுகதை 

----------------------------------------

அந்த வீட்டில் இருந்த இரண்டு  பேய்களும்  பேசிக் கொண்டு இருந்தன. 


'இன்று நமக்கு இரையாக இங்கு வந்திருப்பவன் இந்த ஓவியனா. நமது இந்த வீட்டின் உட்புறத்தை  இவன் வரைந்து முடிக்கட்டும்.  அதன் பிறகு இவன் ரத்தத்தைக் குடிக்கலாம். இந்த ஓவியத்தை வெளியே தூக்கி எறிந்தால் பார்ப்பவர்  பலரும் உள்ளே வருவார்கள். தினசரி நமக்கு ரத்த விருந்து தான் .'


அடுத்த பேய் சொன்னது . ' ஆம் , காத்திருப்போம் , அவன் பின்னால் சென்று அவன் எப்படி வரைகிறான்  என்று பார்க்கலாம். ' 


'அந்த மேஜையை எவ்வளவு அழகாக வரைகிறான்  , நமக்கு உடல்கள் இருந்தபோது நாம் உபயோகித்த எத்தனை  சென்ட் பாட்டில்கள் . ஆஹா , எவ்வளவு நுணுக்கமாக அவற்றை வரைகிறான்.இப்போது அவை எதுவும் நமக்கு உபயோகம் இல்லாமல் போய் விட்டனவே . பக்கத்தில் தொங்கும் நமது துண்டின் சுருக்கங்கள் கூட எவ்வளவு அழகாக இவன் தூரிகையில்  வந்து விழுகின்றன .'


'ஆமாம், முகம் பார்க்கும் கண்ணாடி , சன்னல் கண்ணாடி அப்படியே அந்த ஓவியத்தில் ' 


'இப்போது அவன்   அந்த இரண்டு நாற்காலிகளையும் ஓவியத்தில் கொண்டுவந்து விட்டான். வா, நாம் இருவரும்  சென்று அந்த நாற்காலியில்  சென்று அமர்வோம். அந்த நாற்காலி குஷனை அமுக்குவோம். நம்மைப் பார்க்க முடியாத அவன், நாம் அமர்ந்ததும்  , அது  அமுங்கும் விதம் பார்த்தும் , லேசான சப்தம் கேட்டும்  குழம்பட்டும் . பயப்படட்டும்.  . அவன் ரத்தத்தைக் குடிப்பதற்கு முன்னால் , அவன் முகத்தில் தெரியும் அவன் பயத்தைப் பார்த்து  ரசிப்போம். ' 


சென்று அமர்ந்தன. அந்தக் குஷன் அமுங்கியது. அந்த ஓவியன் இப்போது அந்தப் பேய்களை வரைந்து கொண்டு இருந்தான். 


--------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


எங்கே எனது கவிதை - கவிதை

 எங்கே எனது கவிதை - கவிதை 

—————————-----------------------—-

துணையாய் இருந்தது

தொலைந்தது எப்போது


அன்றாடக் காசுக்கு

அலைய ஆரம்பித்த போதா


போதாத காசால்

புலம்ப ஆரம்பித்த போதா


அன்பைக்  கொடுத்தவள்

அகன்று போன போதா


ஏமாற்றம் எல்லாமே

இறுகிப் போனபின்பு


மாற்றம் வரும்

மறுபடி கவிதை வரும்

———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


ஒற்றுமை வாழ்க்கை - கவிதை

 ஒற்றுமை வாழ்க்கை - கவிதை 

——————————————


ஒளியைக் கொடுத்து

உயிரைக் கொடுப்பதால்


விட்டு விலக

விரும்பாத கிரகங்கள்


ஒத்து வாழ்ந்தால் தான்

உதவி வாழ்ந்தால் தான்


சுற்றமும் நட்பும்

சுற்றிச் சுழன்றிடும்


அத்து  வாழ்ந்தாலோ

அதோ கதிதான்


அணைப்பதும் அறுப்பதும்

அவரவர் விதிப்படி


———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


மழைக் காகிதம் - கவிதை

 மழைக் காகிதம் - கவிதை 

———————--------------------------

பிரிவுத் துயரில்

விட்ட கண்ணீரால்

மழைக் காகிதம்

ஆனது மனம்


இதுவே தொடர்ந்தால்

இன்னும் சில நாளே

கிழிந்து உதிர்ந்து

கீழே விழுந்து விடும்


திரும்பி வந்தால்

தேன் மொழி தந்தால்

சொற்களின் கதகதப்பில்

காயும் காகிதம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


துரிதக் கவிதைகள் - சொல் புதிது குழுவில்

 துரிதக் கவிதைகள் - சொல் புதிது குழுவில் 

—————————-------------------------------------------------

1. மெதுவாக எழுதினான் துரிதக் கவிதை


2. நாளையக் கவலை இன்றையச் செயலில்


3. பெய்யாத மழை எப்போது ஓயும்


4. சும்மா இருப்பது கஷ்டம்


5. ஓடுவதில் இருக்கிறது பறத்தல்


————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


அகநக நட்பது நட்பு - கவிதை

 அகநக நட்பது நட்பு - கவிதை 

————————--------------—-

உடலுக்குத் தெரிவது

உடனடி உணர்ச்சி 


ஓடிடும் அடங்கிடும் 

உடலதன் மகிழ்ச்சி 


உள்ளத்தில் உணர்வது

ஒப்பிலா உணர்ச்சி


உள்ளுக்குள் என்றுமே

உலவிடும் மகிழ்ச்சி


அகநக நட்பினால்

அடைந்திடும் மகிழ்ச்சி


———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


வெள்ளி, 7 ஜூலை, 2023

உன் மடியே என் விடியல் - கவிதை

 உன் மடியே என் விடியல் - கவிதை 

——————————------------------------—-

புள்ளினத்தின் பண்ணோடும்

பூவினத்தின் மணத்தோடும் 


நல்லுழைப்பு மாந்தர்களின்

அதிகாலை ஒலியோடும்


மென்மையான குளிரோடு

மேல்வீசும் காற்றோடும்


புலர்கின்ற  பொழுதில் 

புது நாளின் வரவில்


இயற்கையின் மடியிலே

எப்போதும் என் விடியல்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நரையும் திரையும் - கவிதை

நரையும் திரையும் - கவிதை 

————————-----------------------—

ஓடும் காலத்தோடு

சேர்ந்து ஓடி


திரும்பிப் பார்த்தால்

எங்கும் இருட்டு


வந்த பாதையின்

வெளிச்சம் எங்கே


பசுமை  எங்கே

பனித்துளி எங்கே


தென்றல் எங்கே

தேனமு தெங்கே


நரையும் திரையும்

கூடிய உடலில்


நினைத்துப் பார்க்க

நெஞ்சம் மட்டும்


—————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


மாற்றங்கள் - கவிதை

 மாற்றங்கள் - கவிதை 

—————----------------------—

மாறாதது ஒன்றே

மாற்றமென்று சொன்னார்கள்


மாறியது எல்லாமே

மாற்றமென்று சொல்லலாமா


உணர்ச்சியைத் தூண்டிவிட்டு

உன்மத்தம் ஆக்கி விட்டு


வன்முறை வளர்த்து விட்டு

வாழ்க்கையைக் குலைத்து விட்டு


வளர்கின்ற விஞ்ஞான

மாற்றமெல்லாம் மாற்றமா 


ஏற்றத்தைத் தருகின்ற 

எண்ணத்தைத்  தூண்டுகின்ற 


மாற்றத்தை வரவேற்போம்

மற்றதெல்லாம் ஏமாற்றம்


—————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English   


கருணை இல்லம் - சிறுகதை

 கருணை இல்லம்  - சிறுகதை 

---------------------------------------------

அந்த வீடியோவைப்  பார்த்தவுடன் நாகப்பனுக்குக்  கண் கலங்கியது. வயது முதுமை ஒருவரை இப்படியும் படுத்தும் என்பதைக்  கண்கூடாகப்  பார்க்கும் பொழுது தான் முதுமையை பற்றிய ஒரு பயம் வருகிறது.  என்ன செய்வது. அப்பொழுது கண்மாய்க்குப்     பத்துத்  தரம்  நடந்து,  தலையிலும் இடுப்பிலும் குடத்தைச்  சுமந்து வந்த அம்மாவின் ஞாபகம் வந்தது . அதே அம்மா இப்போது  எழுந்து உட்கார கூட முடியாமல் அவளைத்  தாங்கிப்  பிடித்தபடி ஜூஸ் புகட்டிக் கொண்டிருக்கிறாள்  அந்தக் கருணை இல்லத் தலைவி. தான் கருணையுடன் அவன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் விபரத்தை அடிக்கடி வீடியோவில் அனுப்பி வைப்பாள் அந்தத் தலைவி சுமதி. 


மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அந்த இல்லத்திற்கு அனுப்பினாலும் இப்படிப்   பரிவோடு பார்த்துக் கொண்டு , தேவைப்பட்டால் நர்ஸ் , டாக்டர் உதவியும் அளித்து , டயப்பர் மாற்ற , தூக்கிச் சென்று குளிக்க வைக்க பல பேர் துணையும் வைத்துக் கொண்டு , பேச்சுத்துணைக்கும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் இந்த இல்லம் அம்மாவுக்கு வசதி என்று தானே அங்கே  சேர்த்துள்ளான் . வீட்டில் அவரவர் வேலை அவருக்கு. பேச்சுத் துணை இருக்காது. ஓரிரு வேலையாட்கள்  போதாது கவனிக்க . அதுவும் இருபத்து  நாலு மணி நேரம் மருத்துவ உதவியோடு வீட்டில் கிடைக்குமா. 

 

ஆனால்  சொந்தங்கள் என்ன சொல்கிறார்கள். 'அம்மாவை வீட்டில் வைத்து பார்த்துக்கிறதுக்கு மனசு இல்ல கருணை  இல்லத்தில் சேர்த்துட்டான்' என்று வாய்கிழியப்  பேசுகின்ற சொந்தங்களில்  ஒருவர் கூட ஒரு தரம் கூட அம்மா  மூன்று மாதங்கள் இருந்த  அந்த  ஆஸ்பத்திரியில்  வந்து பார்க்கவில்லை. .இப்பொழுது பேசுவதில் குறைச்சல் இல்லை என்று எண்ணிக்கொண்டான் .பல  லட்ச ரூபாய் செலவழித்து டாக்டர்  எவ்வளவோ டெஸ்ட்டுகள்  எடுத்துப் பார்த்து ,இனிமேல் பார்க்க முடியாது என்று சொல்லியபின் என்ன செய்வது. வாழ்வின் நாட்கள் நகர்ந்து கடைசிக் காலம் வரும்போது  ,  இந்தக்  கருணை இல்லங்களின் அவசியம் எவ்வளவு தேவை என்று எண்ணியவனின் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. 


 'பூவாயி  ,  உனக்கு  நெல்லு காயப்போட எங்க வீட்டு வாசல்தான் கிடைத்ததா' என்று கோபத்துடன் கத்திய படி  வந்த மங்கம்மாவை அலட்சியமாகப்   பார்த்தபடி பூவாயி அவளது பிள்ளைகளோடு சேர்ந்து கோரப்பாயில் காயப்  போட்டிருந்த நெல்லைச்  சுருட்டி எடுத்துக்கொண்டு முளைக்கொட்டுத்  திண்ணைப்  பக்கம் சென்றாள் .


 'ஏதோ இந்த கிராமத்து ரோடு முழுக்க இவுகளோட  மாதிரி 'என்று முணுமுணுத்தபடி சென்றவளிடம்  'அப்படி என்னடி முணுமுணுக்கிற,  அதி காலையில  எந்திரிச்சு கூட்டிப்  பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டு வச்சிருந்தா,  அதுக்கு மேல வந்து கோரப்  பாயைப்  போட்டு நெல்லு காய  வைப்பீகளாக்கும்'  என்று கத்திவிட்டு , கண்மாய்க்குத் தலையிலும் இடுப்பிலும் குடங்களைத் தூக்கிக் கொண்டு  தண்ணீர் எடுக்கக் கிளம்பினாள்  மங்கம்மா.  


 அவ்வப்போது  நடக்கின்ற வாடிக்கைதான் இது.  நெல்லை அவித்துக்  காயப்  போடுவதற்கு இடம் தேடுவதிலே அந்த கிராமத்து பெண்களுக்கு எல்லாம் இவர்கள் வீட்டு முன் உள்ள பெரிய பொட்டல் மேல்தான் கண்.  நன்கு  வெயில் வந்து காய்வதற்கு ஏற்ற இடம். குடத்தோடு கிளம்பிய மங்கம்மா,  அப்பொழுதுதான் வரப்பில்  வந்து கொண்டிருந்த நாகப்பனைப்  பார்த்தாள்  . 'வாடா வா வா ' என்றபடி தன் மகனை வரவேற்று வீட்டுக்குத் திரும்பி  உள்ளே கூட்டிப் போனவள் அவனைத் தடவிக் கொடுத்து . 'முந்தி  பார்த்ததுக்கு இப்ப இளைச்சு போயிட்ட, வருஷத்துக்கு இரண்டு மூணு  தடவை தான் வர்றே. வீட்டு வேலை, ரெண்டு புள்ளைகளைப் பாத்துக்கிறதிலேயே என் நேரம் ஓடிடுது  அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள் பிறந்துட்டதனால உன்னை தாத்தா வீட்டில் கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டியதாய் போச்சு. அம்மா மேல பாசம் இல்லாமல் போயிடுவேன்னு பயமாவும் இருக்கு'  என்றபடி பார்த்த அம்மாவை,  வரவழைத்துக் கொண்ட பாசத்துடன் பார்த்தான் நாகப்பன். 


'சரி  , இரு , நான் போயி தண்ணீ எடுத்திட்டு வந்துர்றேன். அப்பா வந்ததும் மீன் பிடிச்சிட்டு வந்து ,  மீன் குழம்பு வச்சு தர்றேன். சாப்பிட்டுப்  போ எப்பவும் போல வந்த உடனே அவசரமா ஓடாத ' . அவனுக்கு என்னமோ அந்த கிராமத்தில் இருப்பதைவிட தாத்தா வீட்டில்  சின்ன டவுனில் இருப்பதுதான் பிடித்திருந்தது . சிறுபிள்ளையிலிருந்து வளர்த்த தாத்தா அம்மாச்சி அல்லவா,  கூடவே அவனைக் கவனித்துக் கொள்ள சின்னம்மாக்கள் வேறு . 


ஆனால் அம்மாச்சி தான் எப்படியும் வருஷத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது அவனை வலுக்கட்டாயமாகக்  கிராமத்துக்கு அனுப்பி வைப்பாள் . தன்  பொண்ணு மேல இருக்கிற பாசம்.  பேரப்  புள்ளைக்கு அம்மா பாசம் போயிடக்கூடாதுன்னு அனுப்பி வைப்பாள் . அவளும் ஒரு தாய்தானே. ஏற்கனவே , பொண்ணைக் கிராமத்தில் கட்டிக் கொடுத்த கவலை. செல்லமா வளர்த்த பொண்ணு , வயக்காட்டு வேலை, கண்மாய்க்குத் தண்ணீ எடுக்கப் போறதுன்னு கஷ்டப்படுறதைப் பார்த்திருக்காளே. 


'என்ன பண்றது . மாப்பிள்ளை பாசக்காரர் . கட்டிக் கொடுத்தாச்சு. மத்தப் பொண்ணுங்களுக்கு டவுன் மாப்பிள்ளைகள். கிராமத்து மாப்பிள்ளைன்னாலும் பொண்ணை நல்லா பார்த்துக்கிறார் . இதோட வருஷத்துக்கு ஒண்ணா மூணு புள்ளை பெத்துட்டா. எல்லாம் இங்கே வந்து  தான் பிரசவம் பார்த்து அனுப்பினோம்  . அவ நல்லா  இருக்கணும் ' என்று சாமியை வேண்டிக்கொள்வாள் அடிக்கடி.  


 பொண்ணுக்கு வேண்டியது எல்லாம் மூட்டை கட்டி அப்பப்போ போயி கொடுத்துட்டுதான் வருவாள்.  

அடுத்தடுத்த புள்ளைங்க வந்துட்டதாலே வளர்க்க முடியாம கஷ்டப் படுவாளேன்னுதான் இவனைத்  தங்கள் வீட்டிலேயே வச்சு படிக்க வச்சு பார்த்துக்கிடுறாள். அம்மா பாசம் பேரனுக்கு போயிடக்கூடாதுன்னு தான் அவனையும் அப்பப்போ கிராமத்துக்கு  அனுப்பி வைப்பாள்.  அவனும்  ஏதோ ஒரு ஒப்புக்கு வந்து இருந்து விட்டு, அப்பா , அம்மா, தம்பி , தங்கையோடு பேசிவிட்டுச்  செல்வான் .அவனுடைய நட்பு வட்டாரம் அன்பு வட்டாரம் எல்லாமே அங்கே தாத்தா அம்மாச்சி இருக்கின்ற அந்த ஊரில் தான் .


இப்பொழுது தான் வயக்காட்டில் இருந்து களைத்துப்  போய் வந்த அப்பா 'இரு பதநீ வாங்கிட்டு வர்றேன். , நுங்கும் வெட்டிட்டு  வர்றேன்'  என்றபடி திரும்பினார்.   சென்று சிறிது நேரத்தில் அவர்கள் வயக்காட்டு  வரப்பு ஓரத்தில் இருந்த பனை மரத்திலிருந்து அப்போதுதான் இறக்கிக் கொண்டிருந்த பதனியை  வாங்கிக்கொண்டு அந்த மரமேறியை நுங்கு வெட்டித் தரச்  சொல்லி வாங்கிக் கொண்டு வந்து நுங்கை பதமாகச் சீவி , நாகப்பன்  கட்டை விரலை விட்டுத் தோண்டி உறிஞ்சிச்   சாப்பிடும் அழகை பார்த்து ரசித்தனர் அவன் பெற்றோர். கூடவே தம்பி தங்கையும் நுங்கு சாப்பிட,  'நான் போகணும் அப்பா ' என்றபடி கிளம்பி விட்டான். தடுக்க முடியவில்லை.  அவர்  கூடவே மெயின் ரோட்டுக்கு வந்து அவனைத்  தாத்தா வீட்டுக்கு பஸ் ஏற்றிவிட்டு திரும்பினார் . 


அவரும்  அவ்வப்பொழுது மாமனார் வீட்டுக்கு  வந்து அவனைப்  பக்கத்து டவுனுக்குச்  சினிமாவுக்குக்  கூட்டி சென்று ரெண்டு ஷோ பார்த்துவிட்டு , அங்கேயே சொந்தக்காரர் வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கி விட்டு , அதிகாலை பஸ்ஸைப் பிடித்துத் திரும்புவது வழக்கம்.  எனவே அவனுக்கு அம்மாவை விட அப்பாவின் மேல் ஒட்டுதலும் பாசமும் ஜாஸ்தி தான் . 


அவன் படித்து முடித்து  வேலை பார்த்து அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு என்று தனியாக ஒரு இடத்தில் வீடு அமைத்துக்  கொடுத்து, பிறகு அப்பா இறந்த பின்பு அம்மாவைக் கவனித்து , முதுமையில் வந்த நோய்க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரே முடியாது என்று சொன்ன பிறகு, அம்மாவைப்  பார்த்துக் கொள்வதற்கு என்று அந்த முதுமைப் பிரச்னைகளைக் கவனித்துக் கொள்ளும் சரியான இடத்தில் தான்  சேர்த்துள்ளான்  . 


அவன் உடன் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை .  அம்மாவைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அந்த அம்மா தான் அந்த மங்கம்மா தான் இப்பொழுது அந்த  இல்லத்தில் படுக்கையில் படுத்து இருக்கிறார் .ரெம்ப நேரம் உட்கார முடியாது. அவரது  முதுகைத்  தாங்கியபடி அவருக்கு ஜூஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த விடுதியின் தலைவி சுமதி.


   '  சின்ன புள்ளையிலேயே  இருந்து கூடவே இருந்து வளர்க்கல,  அதனாலே வீட்ல வச்சு பார்க்க முடியாத அளவுக்கு   பாசம் போயிடுச்சா உனக்கு' என்று போனில் அவனைக் கேட்கின்ற  அம்மாவிடம் என்ன சொல்வது. '   இந்த வயதில் அவளைப்  பார்த்துக்கொள்ள   வசதி உள்ள இடத்தில்தானே விட்டிருக்கிறோம். எண்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆகிவிட்டது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவளுக்குக்  கூடவே இருந்து பராமரிக்கவும் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கவும் ஆட்கள் இருக்கக்கூடிய இடம்தானே தேவை இப்போது . சேர்ந்து இருந்து ஏதாவது பிரச்னை வந்து மனஸ்தாபத்தோடு ஒட்டாமல் வீட்டில் இருக்கும் எத்தனை  முதியோர்களை அவன் பார்த்திருக்கிறான்.    அந்தக் கருணை இல்லம்தானே   அவளுக்குப்  பொருத்தமான இடம் இந்தக் கடைசிக் காலத்தில்  .


---------------------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


நினைக்காத நேரமேது - கவிதை

 நினைக்காத நேரமேது - கவிதை 

——————————---------------------—

வசத்துக்குள் இல்லாமல் 

தூங்கும் நேரத்திலும்


வாசத்தைக் காட்டிக்

கனவுக்குள் வருகின்றாய்


எஞ்சிய  நேரமெல்லாம்

ஏக்க நேரம் தான்


இந்தப் பிறவிக்கு

இதுதான் விதி என்றால்


என்ன செய்யட்டும்

எண்ணிக் கிடக்கின்றேன்


நினைக்காத நேரத்திற்கு

நெஞ்சுக்குள் இடமில்லை

——————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


பொன் பொழுது - கவிதை

 பொன் பொழுது - கவிதை 

——————----------------------—-

பொழுதைப் பொன்னாக்கும்

புத்தி நம்மிடமே


காலத்தை வீணடித்துக்

கண்ட கண்ட செயல் செய்து


மனதையும் உடலையும்

மயங்கச் செய்து விட்டு


போதவில்லை பொழுதென்று

புலம்பிக் கொண்டிருந்தால்


இருக்கும் காலமும்

ஏளனம் செய்து விடும்


பொழுதைப் பொன்னாக்கும்

புத்தி நம்மிடமே


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


எனக்குள்ளே - கவிதை

 எனக்குள்ளே - கவிதை  ———————--------------------------- நடையும் ஓட்டமுமாய் குடும்பமும் வேலையுமாய் பாசமும் நேசமுமாய் கண்ணீரும் கோபமுமாய் கடனு...