சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு
-----------------------------------
நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே .
லட்சுமிஹர் அவர்களின் 'கித்தானுடைய வண்ணப்பேழை' சிறுகதை பற்றிய என் மதிப்புரை .
நம்மில் சில பேருக்கு நம்மோடு பழகிய சில பெண்களின் ஞாபகங்கள் துரத்திக் கொண்டே இருக்கலாம். தூங்க விடாமல் செய்யலாம். ஏங்கிக் கொண்டே இருக்கச் செய்யலாம். அவை வண்ண வண்ணக் கனவுகளாக வந்து தொந்தரவு செய்து கொண்டும் இருக்கலாம்.
அதைக் கதையாகவோ, கவிதையாகவோ எழுதவோ அல்லது ஒரு திரைப்படமாகவோ எடுக்கவோ தூண்டிக் கொண்டும் இருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு நாயகனின் கதையாகவே
இந்தக் கதையை நான் நினைக்கிறேன். ஆசிரியரின் எழுத்து வன்மையால் ,இந்த க் கதையில் வரும் சவப் பெட்டி ஒன்று உயிர் கொண்டு எழுந்து நடமாடுகிறது. அதன் எண்ணங்கள் வண்ணங்களாக மாறி ' வண்ணப் பேழையாக ' மாறி நாயகனையும் அவன் நண்பனையும் மட்டுமா படுத்துகிறது . நம்மையும் தான் .
கதையின் நடுவில் நாயகனின் நண்பன் சொல்வது போல் ,
“நிச்சயமாக ..நம்மைப் பைத்தியம் என்று கூட நினைக்கக் கூடும்..”
என்ற வரிகளுக்கேற்ப படிக்கும் சில வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் நவீன விருட்சம் வாசகர்கள் ஆயிற்றே .நாம் அப்படி அல்லவே. எந்தக் கதைக்குள்ளும் ஊடுருவி அதன் உள்ளுணர்வை நம் போக்கில் புரிந்து ரசித்துப் பாராட்டுபவர் ஆயிற்றே.
சுருக்கம் இதுதான். ஒரு பெண்ணின் நினைவால் பாதிக்கப்படும் ஒரு கலைஞனின் எண்ண ஓட்டம்.
ஆரம்பிக்கும் இடம், அவனும் இன்னொரு கலை நண்பனுமாகத் தூக்கி வரும் ஒரு வண்ணச் சவப் பெட்டி. வண்ணப் பேழை . அதன் பின்னூட்டமாக வருகிறது ஒரு பெண்ணின் சவப் பெட்டி. அதன் மேல் இவன் வைத்த வண்ணப் பூக்களின் மாலை. அந்த வண்ணங்களின் பின்னணியில் , அவள் ரசித்த வண்ணங்களின் வாசம். அதை இவன் ரசித்த எண்ணங்களின் நேசம்.
அது அவர்கள் சந்தித்த முதலும் கடைசியுமான நாள். அப்போது அவர்கள் பிரிந்த போது இவனை விழுங்கிச் சென்று விட்ட அவள் பார்வை. அப்போதே அவன் எண்ணத்தால் சவமாகி விட்டான். இப்போதோ இவள் என்றுமே சவமாகி விட்டாள். அவள் ரசித்த வண்ணங்களைப் பற்றி அவள் பேசிய வார்த்தைகள் மட்டுமே இவன் கைவசம் இப்போது .
அதை வைத்து இவன் வாழவேண்டும் இனிமேல். ஒரு கலைஞனின் துணையோடு, அவள் ரசித்த வண்ணங்களை பூசிய வண்ணப் பேழை ஒன்றைத் தயார் செய்து ( கித்தான் என்ற வார்த்தைக்கு வண்ணப் பூச்சுக்கு வழி வகுக்கும் கேன்வாஸ் என்று ஒரு பொருளும் உண்டு என்று தெரிய வந்தது கூகிள் மூலம் ) துணைக்கு ஒரு கலை நண்பனையும் அழைத்துக்கொண்டு , அதைத் தூக்கிக் கொண்டு ஒரு கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இருக்கும் மூன்று அறைகள் கொண்டஇவன் வீட்டின் மையத்தில் வைத்து விட்டு யோசிக்க ஆரம்பிக்கிறான். நண்பனோடு பேச ஆரம்பிக்கிறான்.
அவன் உணர்வுகளோடு ஒன்ற முடியாத வாசகர்கள் சில பேருக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கும் வரிகள் இனிமேல் தான் ஆரம்பிக்கின்றன. எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. கதை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது இதில் இருந்து தான்.
ஒன்றிரெண்டு வரிகளை அப்படியே எழுத்தாளரின் வார்த்தைகளில் இங்கே கொடுக்கிறேன். முழுவதும் நீங்களே படித்து ரசியுங்கள்.
----
அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரணங்களின் நீட்சியைக் குறைக்க அப்பெட்டியினை மீண்டும் கைக்கொள்ள வேண்டியிருந்தது.அதற்கெனத் தனி அறை கொடுத்து அதற்குக் காவலாக இருவரும் வீட்டின் மையத்திற்கு வந்தடைந்தோம். அப்புள்ளியின் சுழற்சி எந்த மனக் கணக்குகளுக்கும் சரிவரத் தீர்வளிக்காது சுதந்திரப் போக்கைத் தேர்ந்தெடுத்திருந்தது.
---
அதை கொண்டு வந்து இங்குச் சேர்த்த பின்னர் நினைத்ததை விட ஒரு வித மாறுதல்கள் பயத்தினால் மூளையைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.இருவரும் அச்சவப்பெட்டி வந்தது முதல் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை.கிறுக்குப் பிடித்தது போல எதையோ உளறிக்கொண்டே இருந்தான் நண்பன்.
அது உனக்கான ஒன்றல்ல என்பதில் உறுதியாக இரு..” என்றேன்..என்னை எதிர்கொள்ளத் தயார் நிலையிலிருந்தவன்..
“அப்படியா..நீ கூறியது போலவே அச்சவப்பெட்டியினை என்னால் காண முடிந்தது..ஆனால் அதில் தீட்டப்பட்டிருக்கும் வண்ணங்களைப் பற்றிய கதையை என்னிடம் நீ சொல்லவே இல்லை …”
என்றவன் உடனே ,
“உள்ளிருந்து அவள் வெளிப்படுத்தும்..அல்லது தீட்டிக்கொண்டிருக்கும் வண்ணங்கள் என்று அதைப் பார்த்த உடன் புரிந்து கொண்டேன்…”
என சொல்லியதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.அவளுடனும்,என்னுடைய கதையினுடனும் பயணிக்காத ஒருத்தன் வேறொரு புள்ளியை வந்தடைந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.அவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை
“அவள் அதை மாற்றிக்கொண்டே இருக்கிறாள்..அதனுள் இன்புற்றுக் கிடக்கும் தொனியினில் நம்மிடம் வேடிக்கை காட்டுகிறாள்.தனது கித்தானின் மூலம்.. எதை ஞாபகப்படுத்துகிறது என்பதை உன்னால் உணர முடிகிறதா?..” என்கிற அவனின் கேள்விக்குத் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்.
என்னைப் பார்த்துச் சிரித்தவனாக “.உறுதியாக இரு இது உனக்கானது இல்லை..நிம்மதியாக உறங்கு ..” என்று என்னை ஏறிட்டுப் பார்க்க மறுத்தவன் தனது கண்களை மூடிக்கொண்டான்…
-----
எண்ணங்களை பொறுக்க முடியாத இருவரும் சென்று அங்கே அந்த வண்ணப் பேழை வைக்கப்பட்டு இருந்த அறையைத் திறக்கச் செல்கிறார்கள்.
-----
அடுத்து கதையின் இறுதிக் காட்சி அவர் வரிகளில்
“உள்ளே இருந்து அவள் தீட்டிக் கொண்டிருப்பது நமக்கானது..”என்று சொல்லும் போது விளங்காத சில கூறுகள் இப்போது ஒன்றுபடத் தொடங்கியிருந்தது.
நண்பன் இப்போது ‘திற’ என்றான்.சாவியாக என்னை ஏற்றுக் கொண்டதன் விளைவாய் அக்கதவு தன்னைத் துறக்க..கண்களை கூச்செறியும் வகையில் அவ்வறை முழுவதும் தீட்டியிருந்த வண்ணங்கள் என்னை மூச்சு முட்டச் செய்தது.அதன் ஒவ்வொரு நுணக்கங்களிலும் வெளிப்படும் குரலை அறிந்திட விழைந்த எனக்கு இது மகிழ்வின் வெளிப்படுத்துதல் என்பதை உணர்ந்தேன்.
அந்த ஆனந்த கூவலை இதுவரை பார்த்திடாத வலி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது.முடிவுறா அவ்வண்ணங்களில் அவளின் முகத்தைத் தேட முற்பட்டேன்.என்னிடமிருந்து மறைந்து விளையாடத் தொடங்கியிருந்தாள்.அந்த வண்ணப்பேழையின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது.
முடிகிறது கதை . இந்த நேரத்தில் நாயகனின் மரணக்கூவல் ஆரம்பித்த அந்த இடத்தையும் சொல்லி முடிப்பது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அது இது .
----------
போனமுறை நண்பர்களுடனான பயணத்தின் போதே இவளைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது.அவளின் இறுதி நிமிடங்களை மட்டுமே எனக்கு அவள் அளிக்க எண்ணினாள் போலும்.இப்படியாகக் கூட இருக்கும்,அவளுடைய கடைசி பார்வை முழுவதும் நிறைந்திருந்தவன் நான் என்பதை அவளின் நினைப்பு உறுதி செய்து கொண்டே இருந்தது.அவளுக்குப் பிடிக்கும் என்று கூறியிருந்த வண்ணங்களில் எனது மலர் வளையத்தை அவள் மேல் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.அவளுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றாலும் அவளுக்குப் பிடித்த வண்ணங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவதின் பால் அவளைச் சுமந்திருந்த சவப்பெட்டி இதுவரை இறுதி ஊர்வலங்களுக்கு பயன்படுத்தாத வண்ணக் கலவைகளால் நிரம்பியிருந்தது.அதன் சாயலிலேயே இதை முழுவதுமாக வடிக்கச் சொல்லியிருந்தேன்.அதன் ஒரு அங்குலம் கூட மாறாது நினைவில் இருக்கும் ஒன்றை மீண்டும் செய்யச் சொல்லி இங்கு வரை சுமந்து வந்திருக்கிறேன்..
-------------
நாயகனின் ' மரணக் கூவலில் ' அப்படி ஆரம்பித்த கதை 'ஆனந்தக் கூவலில்' இப்போது முடிகிறது .
‘அந்த ஆனந்த கூவலை இதுவரை பார்த்திடாத வலி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது.முடிவுறா அவ்வண்ணங்களில் அவளின் முகத்தைத் தேட முற்பட்டேன்.என்னிடமிருந்து மறைந்து விளையாடத் தொடங்கியிருந்தாள்.அந்த வண்ணப்பேழையின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது’
---------
தேடி அலைந்த அவன் அவளைக் கண்டு கொண்டான் இங்கே . இனி , அவனது கதையில் , இயக்கத்தில் அவள் திரைப்படமாக நம் முன்னே நடமாடும் நாள் தொலைவில் இல்லை என்று நமக்குத் தோன்றுகிறது . அதோ அவள் ரசித்த வண்ணங்களை இப்போது அவள் பூசி விளையாட ஆரம்பித்து விட்டாள். வண்ணப் பூச்சுக்கு வழி வகுக்கும் கித்தான் ,கேன்வாஸ் போல், இவனது எண்ணப் பூச்சுக்கு வழி வகுக்கும் கேன்வாஸின் , கித்தானின் வண்ணப் பேழைக்குள் இருந்து வெளியேறி அவள் முகம் தெரிகிறது நமக்கும் . நன்றாகவே தெரிகிறது . நன்றி வணக்கம்.
-------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக