மேகங்கள் -சிறுகதை
-------------------
மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த சூரியனைப் போல்தான் தன் வாழ்க்கை உள்ளதோ என்று அவள் எண்ணிக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து அந்த மாலைச் சூரியனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கணவன் குழந்தைகள் எல்லாமே அந்த மேகங்கள் தானோ. அவர்கள் கூட இருக்கும்போது தன்னைப் பற்றிய நினைவே எங்கோ ஒளிந்துகொண்டு தன் சுயமே மறந்து போன பரப்பிரம்ம நிலையோ . இன்னும் கணவன் அலுவலகம் விட்டு வரவில்லை. குழந்தைகளும் பள்ளி விட்டு வரவில்லை. மேகங்கள் விலகிய வெளிச்சம் வந்த நிலையில் இப்போது 'தான் யார், தன் வாழ்க்கையின் நோக்கம் என்ன ' என்ற எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்தன அவளுக்கு, எப்போதும் போல்தான் இந்த நேரத்தில்.
பெற்றோர் படிக்க வைத்து விட்டுப் போய் விட்டார்கள். கணவன் என்று ஒருவரைக் கை காட்டி விட்டு போயாச்சு. அவனுக்கும் தனக்கும் வரப்போகும் முதுமைக்குத் துணையாக வந்தவர்களா இந்தக் குழந்தைகள். இல்லை , 'உங்கள் கடமை எங்களை பெற்றது, வளர்த்தது, நாங்கள் எங்கள் கடமையைச் செய்யப் போகிறோம்' என்று போய் விடுவார்களா.
வேலைக்குப் போகும் பெண்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இருக்கலாம் அவர்கட்குப் பிரச்னைகள் , வீட்டுப் பிரச்னைகளோடு சேர்த்து . ஆனால் அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரம், அவர்களின் படிப்புக்கும், திறமைக்கும் கிடைத்த நேரம். அங்கே ஏதோ ஒரு இன்பம் இருக்கலாம். அது ஏன் தனக்குக் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் பொறுப்பைக் கழித்து விட அவசரமாய்ச் செய்து வைத்த கல்யாணமா. வந்த கணவனும், இவளை சமையலுக்கும், வேலைக்கும் ஆள் கிடைத்து விட்டதாக நினைத்து நடத்தும் கோலமா. 'தான் ஒரு முழுநேர சமையல்காரியாக மாறிவிட்டோமோ ' என்ற நினைப்பே கவலையைக் கொடுத்தது .
பட்டப் படிப்பு சான்றிதழ்கள், எங்கே இருக்கின்றன. அவளுக்கே தெரியாது. இருக்கிறதா, ஏதோ ஒரு பழைய பெட்டியில், கசங்கிப் போய்க் கிடக்கலாம். தேடித் பார்க்க வேண்டும். கணவனிடம் மன்றாடி , ஏதோ ஒரு வேலையில் , படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர வேண்டும். சொந்த சம்பாத்தியத்தில், ஒரு சேலை எடுக்க வேண்டும்.
தன் கூடப் படித்த எத்தனையோ பெண்களை எப்போதாவது , இவள் இடுப்புக் குழந்தையோடு பார்த்து விசாரிக்கும் போதெல்லாம். அவர்கள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் . தானும் அதே அவசரத்தில், அவர்களைப் புறக்கணித்து ஓட வேண்டும். தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஏன் ஒரு நெருங்கிய தோழனோ, தோழியோ அவளுக்கு அமையவில்லை. இவள்தான் யாரிடமும் நெருங்காமல். இருந்து விட்டாளோ. ஆனால் வாட்சப்பில் எத்தனையோ நண்பர்கள். அங்கே இவள் போடும் சமையல் குறிப்புகளுக்கு எவ்வளவோ பாராட்டுக்கள்.
வாட்சப்பில் மணிச் சப்தம். 'உங்கள் சமையல் குறிப்பைப் படித்து வீட்டில் செய்த தின்பண்டம் என் பெற்றோருக்குப் பிடித்திருந்தது . தொடர்ந்து போடுங்கள் மேடம். ' மற்றும் ஒரு மெசேஜ். ' ஏன் நீங்கள் உங்களின் சமையல் திறமையைக் காண்பிக்க ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கக் கூடாது'. சூரியனைப் பார்த்தாள்.அவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.'என்னை மறைக்க முடியாது. நான் ஆடுவது விளையாட்டு. உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கிறேன் உஷ்ணத்தோடு ' என்று சொல்வது போல் தோன்றியது அவளுக்கு. அப்போது சூரியனைச் சுற்றி மேகங்கள் நெருங்கிக் கொண்டு இருந்தன.
அழைப்பு மணி அடிக்கும் சப்தம். குழந்தைகள் வந்து விட்டார்கள்.
-------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக