பாட்டுப் பாட வா -நகைச்சுவைக் கட்டுரை
----------------------------
இந்த வாட்சப் க்ரூப்புகளில் கொரோனா காலத்தில் ஆரம்பித்த இந்தக் கொடுமை இப்போது வேகமாகி விட்டது. கையைக் காலைத் தூக்கத் தெரிந்தவர்கள் நாட்டியமும் கராத்தேயும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து, . பேப்பரில் கோடு போடத் தெரிந்தவர்கள் , ஓவியம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து இப்போ வாய் இருக்கிறவங்க எல்லாம் இசைக் குழுக்கள் ஆரம்பிக்கிறார்கள் . என் நண்பர் ஒருவருக்கும் அதுபோல் ஆசை வந்து ஆரம்பிச்சு , நானும் சேர்ந்துட்டேன்.
என்கிட்டே சொன்னாரு.
'நீங்க தினசரி நான்கு பாட்டுகள் அதிலே போடலாம். தனியாகவோ , உங்க ஒய்ப் கூட சேர்ந்தோ ,'
'சார் , அவங்களுக்குப் பாடத் தெரியாதே சார் '
' காமெடி பண்ணாதீங்க சார், இப்ப உங்களுக்குப் பாடத் தெரியும்னா சேர்த்தோம். உங்க இசை ஆர்வம் தெரியும்ல , அது மாதிரிதான் '
'அவளுக்கு இசை ஆர்வம் இருக்குன்னு உங்களுக்கு எப்படி '
' வெளையாடாதீங்க சார் , அன்னிக்கு சொன்னீங்களே, அவ கிட்டே அடிக்கடி பாட்டு கேக்கிறேன்னு ' .
'அது வசைப் பாட்டு சார்'
'வசைப் பாட்டோ , இசைப் பாட்டோ, பாட்டு பாட்டு தானே .
கொஞ்சம் கவலையோடும், பயத்தோடும் தான் அந்தக் குழுவில் போயி பாட்டு கேட்கணும் . அவ்வளவு ஆர்வத்தோடு அலறுவாங்க .
ஒரு நாள் நானும் என் ஒய்ப்பும் சேர்ந்து ஒரு பாட்டு போட்டோம். அதை நாங்க திருப்பிக் கேட்கத் தேடினா அது எங்கேயோ தொலைஞ்சு போயிருச்சு . அதைத் தேடுற நேரத்திலே மத்தவங்க பாட்டு , எப்படி இருக்குன்னு கேட்கலாம்னு ஒரு பாட்டைக் கேட்டேன்
முதல் பாட்டிலே , குரல்களைக் கேட்டுட்டு இரண்டு பேருமே ஆண்கள் ன்னு தான் நினைச்சேன். ஒருத்தவங்க பேர் பெண் பேர் . இதிலே ஒரு குறிப்பு வேற கீழே. ' 'இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாட விரும்புபவர்கள் எங்களிடம் இதைக் கேட்டுக் கற்றுக் கொள்ளலாம். '
'இவங்க பாட்டை க் கேட்டுக் கத்துக்கிட்டா நமக்குத் தெரிஞ்ச கொஞ்ச நஞ்சம் தமிழும் மறந்து போயிடும் போலிருக்கே ' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
சரின்னு அடுத்த பாட்டைக் கேட்டேன் .
' நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இசைச்செல்வனும் எனது மனைவி இசைச்செல்வியும் இணைந்து பாடும் பாடல், நாங்கள் கோவையில் வசிக்கிறோம், இதற்கு முன்பு மதுரையில் வசித்தோம் விரைவில் சென்னையில் வசிக்க விருப்பம் ' என்று சொல்லிக் கொண்டே முடிவில் பாட்டில் வசிக்க , இல்லை , பாட்டை வாசிக்க ஆரம்பித்தார்கள். நான் பொறுமை இழந்து , இன்னொரு பாட்டை அழுத்தினேன் ,
அந்தப் பாடகரோ விளக்கம் எதுவும் கொடுக்காமல் பாட ஆரம்பித்து விட்டார். அவசரம். நாங்கள் அழுத்தும் போதே பாதிப் பாட்டு போய் விட்டது . 'ரெகார்டிங் பண்ணாமலேயே பாதிப் பாட்டு பாடி விட்டு மீதி பாட்டைத்தான் ரெக்கார்ட் பண்ணி இருக்கிறார்' என்று புரிந்து கொண்டேன் .
ஏதோ புரியாத மொழி போல் தோன்றியது, கூர்ந்து கவனித்த பின் அது தமிழின் சாயலில் இருப்பதை புரிந்து கொண்டேன் . பல மொழிகள் தெரிந்தவர் போலும். மூன்று லகரங்கள் இரண்டு ரகரங்கள் தாண்டி அவர் ஏழெட்டு லகரங்களும், அஞ்சாறு ரகரங்களும் தாய் மொழிக்குத் தந்து மொழியை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
அடுத்த பாடகர் பாடுவதற்கு முன் பாட்டின் சரித்திரம் பூகோளம் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டே போனார். நான் பொறுமை இழந்து அடுத்த பாட்டுக்குப் போனேன் .
இவர் கர்நாடக ராக விளக்கம் ஒன்றை விபரமாகச் சொல்லி விட்டு ஆரம்பித்தார். ஆலாபனை என்ற பெயரில் ஆ என்று வாயைத் திறந்தவர் வாயை மூடவில்லை போலும். வாய்க்குள் ஈ ஒன்று புகுந்து இம்சை செய்ய ஆரம்பித்ததால் இரும ஆரம்பித்து விட்டார்.
சரி இதுவும் வேணாம் என்று இன்னொரு ஆடியோவை அழுத்தினேன் . அங்கே தடா , புடா என்று ஒரே சப்தம். அது என்னவோ ஸ்மைல் ன்னு இருக்காமே , அதுலே எல்லோரும் ஸ்மைல் பண்ணிக்கிட்டு பாடணும் போல, அதிலே மியூசிக் வருது ,இவரு குரலையே காணோம். பாட்டு முடியப் போகுது , இவர் பாடவே இல்லை.
முடியும் நேரத்தில் மியூசிக் நிற்க இவர் குரல் மெல்லிசாக , ' இது வரை உங்களிடம் பாடி மகிழ்வித்தது ' இன்னிசைக்குரலோன் ' என்றது. ஏதோ ரயில் பிரயாணத்தில் காசு கேட்கிறதுக்கு முன்னாலே வர குரல் மாதிரி. அது சரி. முன்னாலே இந்தக் குரல்லே தான் பாடியிருக்காரு , அந்த ஸ்மைல் சப்தத்தில் நமக்கு கேட்கலேன்னு அப்பத்தான் புரிஞ்சது . என்ன , அது ஸ்ம்யூல் லா. ஏதோ ஒண்ணு விடுங்க .
சரி இன்னிக்குப் போதும். நாளைக்குப் பார்த்துக்கலாம்னு போனா, முதல் நாள் நான் கேட்ட அந்தப் பாட்டுகளைக் கேட்டுட்டு, மத்தவங்களும் தைரியமா பாடிப் போட ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க போட்ட ஒரு பாட்டு, ஒரே பாட்டை நாங்க தேடவே முடியாத நிலைமை.அழுகை அழுகையா வர்றது .
போதும்னு அந்தக் குழுவை விட்டு வெளியே வந்துட்டேன். இதோ இன்னொரு நண்பர் கூப்புடுறார். அவரோட க்ரூப்பிலே நமது கவிதைகள் எல்லாம் போடலாமாம். தமிழிலே எழுதத் தெரிஞ்சா போதுமாம்.
------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக