வியாழன், 28 செப்டம்பர், 2023

நாகரிக உடை - சிறுகதை

 நாகரிக உடை - சிறுகதை 


---------------------------------------


'வந்துட்டாளுக ,பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கோயிலுக்கு . சாமி கும்பிட வர்ற அழகா இது. ஒரு சேலை கட்டிக்கிட்டு லட்சணமா வருவோம்னு தெரியல .இது எல்லாம் படிச்சு என்னத்த கண்டுச்சுக . ஒரு நாகரீகமே தெரியல. ஒரு பணிவு அடக்கம் ஒண்ணும் கிடையாது. இந்தத் தலைமுறையே ரெம்பக் கெட்டுப் போச்சு. இவளுகளைச் சொல்லி பிரயோசனம் இல்லே. இப்படி வளர்த்த இதுகளோட அம்மா , அப்பாவைச் சொல்லணும். ரெம்பச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்காங்க. ' இப்படி முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் வாயை அடைப்பதற்கு என்ன வழி வித்யாவிற்கு . ஒரே வழி தான். ஒரு முறைப்பு. அவ்வளவு தான், அத்தனை பெண்களின் வாய்களும் அடைத்துப் போயின.


பேசாமல் நின்று கொண்டிருந்தாள் வித்யா .அந்த இடத்தில் ஒரு நீண்ட அமைதி. யாருக்குமே வாயே இல்லாதது போன்ற ஒரு அமைதி .கோயில் கதவு திறந்தது. .ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு போகும் அவசரம். இதுவரை வித்யாவைப் பற்றி புரணி பேசிக் கொண்டு இருந்த அந்தப் பெண்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு , திட்டிக் கொண்டு . ' நான்தாண்டி முன்னாலே வந்தேன். உனக்கு என்னடி அவ்வளவு அவசரம். இங்கே என்ன அரசாங்க இலவச அரிசியா கொடுக்கிறாங்க . இல்லே ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்களா. சாமியைக் கும்பிடத்தானே போறோம் ' என்று கண்டபடி பேசிக் கொண்டு சண்டையிடும் அந்தப் பெண்களை விட்டுச் சற்று தள்ளியே நின்றாள் வித்யா.


அந்த சலசலப்பு அடங்கி அவர்கள் சென்ற பின்பு மெதுவாக உள்ளே நுழைந்தாள் வித்யா. கோயிலுக்கு உள்ளேயும் அதே சத்தம்தான். 'சீக்கிரம் கும்பிடணும் திருப்பிப் போய் வீட்டு வேலைஎவ்வளவு கிடக்குது . இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாமியை கும்பிடாமல் இருக்கக் கூடாதுன்னு தான். என்ன பண்றது. '


வித்யா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் . ' இது என்ன கோயிலுக்கு வருவது ஒரு கடனா, கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு போவது ஒரு சடங்கா' என்று நினைத்துக் கொண்டாள் , ஓரமாக ஒதுங்கி இருந்து அவர்களெல்லாம் சாமி கும்பிட்டு அந்த கசமுசா சத்தம் அடங்கிய பிறகு நிதானமாக உள்ளே நுழைந்தாள் . ஒவ்வொரு சன்னதியாக நின்று மனம் உருக கடவுளை வேண்டிக் கொண்டு சுற்றுப்புறம் எல்லாம் சுற்றி விட்டு திரும்பி வந்து ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தாள் .


' அந்தக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்த பெரியவர்கள் அமைத்த எந்திரங்கள், தந்திரங்களால், இது போன்ற கோயில்களில் கிடைக்கும் அமைதி , தியானத்தை எவ்வளவு விரைவாக மனதிற்குள் கொண்டு வந்து விடுகிறது ' என்று கோயிலின் பெருமையை நினைத்து , நமது முன்னோர்களின் இந்தச் சேவையை நினைத்து உருகி அவர்களை வணங்கி வெளிவந்தாள் .


திரும்பி வரும்போது வாசலில் கும்பலாக நின்று கொண்டிருந்த அந்த பெண்கள் கூட்டம் மறுபடியும் இவளை வம்புக்கு இழுத்தார்கள். ' இப்படியெல்லாம் பேண்ட் சட்டையையோடு வர்றவளுகளைப் பார்க்கிறதுக்கே பசங்க வராங்க கோயிலுக்கு. கோயிலின் புனிதமே இவர்களால் கெட்டுப் போயிடுச்சு ' என்று இரைந்தவர்களுக்குத் தக்க பதில் கொடுக்க வேண்டும் என்று அந்தப் புதுமைப் பெண்ணின் மனம் துடித்தது.


கோபப்படாமல் அமைதியாகச் சொன்னாள். ' கோயிலுக்குள் செல்லும்போது உங்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று தான் அமைதியாக இருந்தேன். இப்பொழுது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பேண்ட் சட்டையில் எனது உடல் எங்காவது தெரிகிறதா. உங்களுடைய சேலைகளைப் பாருங்கள். . உங்களின் இடுப்புச் சதைகள் தொங்குவது தெரிகிறது. பின்பக்கம் முதுகு முக்கால் வாசிக்கு மேல் தெரிகிறது. முகத்தை மறைப்பதற்கு உங்கள் முக்காட்டை உபயோகிக்கும் வேகம், உங்கள் முன்பக்கம் மறைக்கக் காட்டுவதில்லை. இந்த ஒரு அமைப்போடு, நீங்கள் முழுவதும் மறைத்து உடை உடுத்தி பேண்ட் சட்டையோடு வந்திருக்கும் என்னை கேலி செய்கிறீர்களே . இது நியாயமா . நாகரிக உடையாய் இருந்தாலும் இது நல்ல உடை தானே . நான் சேலை உடுத்துவதைக் குறை சொல்லவில்லை. அதை உடுத்தும் முறையில் இருக்கும் சில விஷயங்களை மட்டும் தான் சொல்கிறேன். ' என்று நயமாகச் சொல்லிவிட்டு நடந்த வித்யாவை பார்த்து வாய் அடைத்துப் போய் நின்றனர் அந்த பெண்கள் அனைவரும்.


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


மாயக் கண்ணன் - சிறுகதை

 மாயக் கண்ணன் - சிறுகதை 

------------------------------------------------------------------------


அந்தக் கோயிலில் கிருஷ்ணன் கொள்ளை அழகு .அவனைப் பார்ப்பதற்குக் கண்கள் கோடி வேண்டும் .இருக்கும் இரண்டு கண்களையும் விரித்தபடி காத்திருந்தார்கள் அந்தப் பெண்கள் அந்த வரிசையில். அந்தக் கோயிலில் ஒரு கட்டுப்பாடு. உள்ளே பேச்சுக் கூடாது .பஜனை கூடாது. வாய் ஒன்று இருப்பதையே மறந்த நிலையில் , அகல விரிந்த கண்களோடு காத்திருந்தார்கள் அந்தப் பெண்கள். கிருஷ்ணனை வணங்கி விட்டு பிரசாதம் வாங்கிவிட்டு சென்று கொண்டே இருக்க வேண்டும். தொன்று தொட்டு வரும் வழக்கம்.


கிருஷ்ணன் பாடல்களை எல்லாம் மனதிற்கு உள்ளே அனுப்பிவிட்டு வாய் மூடிகளாய் அவர்கள் அந்த வரிசையில் காத்திருந்தார்கள். பத்துப் பத்துப் பேராகத்தான் உள்ளே அனுமதி. இவர்கள் முறை வந்தது. உள்ளே சென்றார்கள். அந்தக் கிருஷ்ணனின் பேரழகில் மயங்கி அவர்கள் கண்கள் அவனைக் கண் கொட்டாமல் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். கடலும் வானும் கொண்டிருக்கும் நிறத்திற்கும் இந்த நீல நிற வண்ணன் தான் காரணமா. உலகத்தை உய்விக்கும் அந்தக் கார்மேகத்துக்குள் ஒளிந்திருந்து காக்கும் கடவுள் இவன்தானே .


விண்ணையும் மண்ணையும் காக்கின்ற அந்தக் கண்ணபிரான் அங்கே அமைதியாக அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தபடி இருந்தான். இவர்கள் பேச முடியாத காரணத்தால் மனதில் இருக்கும் எண்ணங்களை எல்லாம் கண்களின் வழி காட்டி முடித்தார்கள். ஒரு நிமிடம் அந்தக் கோபியர்களாகவே மாறி , அந்தக் கண்ணனுடன் மான சீகமாகக் கலந்தார்கள்.


இப்பொழுது ஒரு குரல் ' பாட விரும்புவர்கள் பாடலாம் ' . எங்கிருந்து வந்தது இந்த அசரீரி. அந்த கண்ணன் வாயிலிருந்து தானோ . பட்டர் சுற்று முற்றும் பார்த்தார். ஒருவரும் இல்லை. குரல் மறைந்து விட்டது . மறுபடி வந்தது. இப்போது உள்ளிருந்து வந்ததை உணர முடிந்தது , அந்தக் கண்ணனிடம் இருந்து. பட்டரின் உடல் நடுங்கியது . கூப்பிய கைகளோடு இந்தப் பெண்களைப் பார்த்துச் சொன்னார். 'பெண்களே உங்கள் உள்ளத்தில் இருக்கும் வார்த்தைகளைக் கொட்டுங்கள். கண்ணன் புகழ் பாடுங்கள்.'


அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் 'கண்ணா முகுந்தா , கண்ணா முகுந்தா' என்று கதறி அழுதார்கள். அவர்கள் வீட்டுச் சோகங்கள் எல்லாம் அங்கே வடிந்து வடிந்து வழிய அதில் மூழ்கி அவற்றை எல்லாம் தனக்குள் வாங்கி அருள் புரிந்தபடி அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தான். ' இதுவும் உன் விளையாட்டுத் தானா ' என்றபடி அந்த கோவிலின் பட்டர் ஒரு பக்கம் நின்றபடி கண்ணீர் பொழியக் கை கூப்பி நின்றார்.


'இந்தப் பெண்களைப் பார்த்ததும் கோபியர் ஞாபகம் வந்து விட்டதா கண்ணா , இல்லையென்றால் இப்படிக் கூப்பிட்டு பாடச் சொல்லுவாயா ' என்ற பட்டர் பக்தியில் உருக, அந்தப் பெண்கள் , அடக்கி வைத்த வார்த்தைகள் எல்லாம் பாடல்களாய் வாய் திறந்து கொட்ட , அவர்களின் அகன்ற கண்கள் ஆனந்தக் கண்ணீரில் இன்னும் விரிய , விஷயம் தெரிந்து வந்த அந்த ஊர் பக்கத்து ஊர் மக்களால் என்றும் இல்லாத திருநாளாய் அன்று அந்தக் கண்ணன் கோயில் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உண்டியலும் நிரம்பி வழிந்தது .


கோயிலில் குறைந்த கூட்டத்தால் , உண்டியல் வருவாய் குறைந்து, பாழடைந்து கிடந்த அந்தக் கண்ணன் கோயிலைச் சிறப்பாக வடிவமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கு கண்ணனே துணை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் , கண்ணனின் பின்னிருந்து குரல் வரவழைக்க தான் செய்த அந்தத் தவற்றை மன்னிக்கும் படி கேட்டு நின்ற அந்த பட்டருக்கு புன்னகையையே பரிசாய் அளித்து நின்றான் அந்த மாயக் கண்ணன்.


----------------------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


ரயில் பயண அனுபவம் - கட்டுரை

  ரயில் பயண அனுபவம் - கட்டுரை 

--------------------------------------------

போன தடவை  பஸ் அனுபவத்தைப்  பார்த்தோங்க . இப்ப கொஞ்சம் ரெயில் அனுபவத்தைப்  பார்க்கலாம்.  ரயில் பயணத்தில் பக்கத்திலே இருந்தவர் கொடுத்த  பிஸ்கட் சாப்பிட்டுட்டு மயங்கிப்  போய் பர்ஸைப்  பறி கொடுத்தவங்களைப் பத்தி  எல்லாம் பேப்பர்ல அடிக்கடி வர்றதைப்  பார்த்த உடனே, 'சரி நம்ம  ரெம்ப  கவனமா இருக்கணும்னு'  யோசிச்சுத் தான்  ரெயிலிலே ஏறினேங்க .


 இப்ப போன தடவை மெட்ராஸ்ல இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸிலே போன அனுபவம் தான். கொஞ்ச நேரத்திலேயே   'காபி காபி' ன்னு  சுத்தி சுத்தி வராங்க.  ஒரு சொட்டு கூட வாங்கிக்  குடிக்கலியே.   அதுல ஏதாவது மயக்க மருந்து போட்டு இருந்தாங்கன்னா  என்ன பண்றது. 


அப்புறம் இந்த பாக்கெட் இட்லி தோசை வேற . பிஸ்கட்ல மட்டும்தான் தடவ முடியுமா ,  இட்லி தோசையில தடவ முடியாதா என்ன.  ஆனா விடமாட்டேங்குறாங்க. கும்பலா  கிளம்பி இருப்பாங்க போல  இருக்கு . வடை கெட்லெட்  வேற  வரிசையா வந்துகிட்டே இருக்குங்க . வாசம் மூக்கைத் துளைக்குது .' பர்ஸ் பத்திரம்' னு நினைச்சுக்கிட்டு ஒண்ணு கூட வாங்கிச் சாப்பிடலேங்க .


   அப்புறம் பார்த்தா கூல்டிரிங்ஸ்  வரிசையாக .  எல்லாம் கலர் கலரா இருக்கு. மயக்க மருந்து பல கலர்ல வருது போல . எல்லாத்தையும் வாங்கிச்  சாப்பிடுறாங்க. குடிக்கிறாங்க.  எப்படி இவ்வளவு தைரிய மா இருங்காங்க. இவங்கல்லாம், பேப்பர் படிக்கிறது இல்லையோ .  அவங்களுக்கு ஒண்ணும்  பண்ணலைங்கிறதும் தெரியுது.  .  சிலர் உடம்பு க்கு  மயக்க மருந்து கூட ஒத்துக்கிடும் போல. ஒண்ணும் செய்யாது போல. நமக்கு லேசா தூறல் போட்டாலே தும்மல் வந்துடும்,   நம்ம மூக்குக்கு தெரிஞ்சுடும். 


 மயக்க மருந்து ஸ்ட்ராங்கா இருந்தா  , பெரிய டேஞ்சர் ஆயிடும். எதுக்கு  ரிஸ்க் எடுக்கணும் .என்ன ஒரு கஷ்டம் . காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலியா . லேசா தலையைச் சுத்துது . பக்கத்து சீட்டுக்காரர், ' சார் , இந்த பிஸ்கட்டைச் சாப்பிடுங்க .  பசி மயக்கம்  போலிருக்கு , ' என்ற படி என் வாயில் பிஸ்கட்டைத் திணிக்கிறார்.


 ' வேணாம். வேணாம்  ' எனக்குக் குரல் எழும்பலை. 'காலையிலே இருந்து சாப்பிடலியா ,   சரியாயிடும் சார்  'அவர் குரல் பாதி மயக்கத்தில் கேக்குது.


--------------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English



நிறம் தேடும் முகங்கள் - கவிதை

 நிறம் தேடும் முகங்கள் - கவிதை 

--------------------------------------------

போலித்தனம் புனைந்த

எத்தனை முகங்கள்


சிரிப்புக்கு உள்ளே

பொறாமை புதைத்தும்


அழுகைக்கு உள்ளே

வஞ்சம் புதைத்தும்


உள்ளே கருப்பும்

வெளியே வெளுப்புமாய்


எத்தனை நிறத்தைத்

தேடும் முகங்கள்


கலப்பட நிறத்தைத்

தேடுதல் விடுத்து


உள்ளும் புறமும்

ஒன்றாய் இருக்கும்


உண்மை நிறத்தைத்

காட்டுதல் நன்று


-------------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


நட்பு - கவிதை

 நட்பு - கவிதை 

-------------------


உள்ளத்து ஆழத்தில்

ஓடிய ரகசியப்

பாரத்தைத் தூக்கிப்

போட்டது யாரிடம்


சின்ன நோய்களில்

சிரமப் பட்டதும்

கண்களில் ஈரம்

கசிந்தது யாரிடம்


பதவியில் உயர்வைப்

பார்த்த போதெலாம்

தோள்களைத் தட்டிய

கைகள் யாரிடம்


முன்னேற்றப் பாதையின்

ஒவ்வொரு முக்கிலும்

முட்களை நீக்கிய

விரல்கள் யாரிடம்


துன்பமும் தொல்லையும்

துரத்திய போதிலே

தோள் தேடி ஓடித்

துவண்டது யாரிடம்


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 27 செப்டம்பர், 2023

அகதிகள் - சிறுகதை

 அகதிகள் - சிறுகதை 

-------------------------------------------------


காத்துக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த வேனுக்காக. அவர்களின் கண்களில் அந்தக் கொடுமைக் காட்சிகள் விரிந்து விரிந்து கிடக்கின்றன . வாய் அடைத்துப் போய் விட்டது. இனி இந்த மண், இவர்கள் பிறந்து வளர்ந்த மண். இவர்களுக்குச் சொந்தம் இல்லை. அடுத்த மாநிலம் செல்லக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசே அனுப்பி வைக்கிறது.


இவர்களின் உணர்வுகளை யார் புரிந்து கொள்வார்கள். அதோ அங்கே அஜர்பைஜானில் இருந்து ஆர்மேனியாவுக்கு ஓடிக் கொண்டிருக்கும் அந்த அகதிகளுக்கு ஒரு வேளை புரியலாம் . வாழ்ந்த மண் இனி தங்களுக்குச் சொந்தமில்லை என்ற உள்ளத்தை உறைய வைக்கும் உண்மை.


குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு தோழிகளுடன் பாதி நேரம் தொலை பேசியில் பேசி விட்டு மீதி நேரம் வேலை பார்க்கும் அந்த பெண்களுக்குப் புரியுமா, இல்லை, வசதியான அடுப்படியில் பாதி நேரம் தொலைக்காட்சி பாதி நேரம் என்று பார்க்கும் வசதி பத்தாமல் ஓயாமல் அலுத்துக் கொண்டு இருக்கும் அந்தப் பெண்களுக்குப் புரியுமா.


சமுதாய பொறுப்புணர்வு உள்ள சில பெண்களுக்கும் வீடே அகதிக் கூடமாகவும் இருக்கும் சில பெண்களுக்குப் புரியலாம் இந்தப் பெண்களின் நிலைமை



நேற்று வரை இருந்த இடம் இப்போது சொந்தமில்லை . நேற்று வரை உழுத மண் இப்போது சொந்தம் இல்லை. அகதிகள் .கணவர், பையன்கள் பிடித்துச் செல்லப்பட்டு சிறையில் . வீடுகள் இடிக்கப்பட்டு . பெண்களை மட்டும் பரிதாபப்பட்டு அடுத்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள் . அந்த மாநிலத்தில் என்ன நடக்கும். என்ன சாப்பாடு, எந்த இடம், என்ன சம்பாத்தியம். எப்படி சம்பாத்தியம். அங்கும் இவர்கள் அந்நியர் என்று அடையாளப் படுத்தப்பட்டால், அடுத்து எந்த மாநிலம்.


நேற்று கணவனோடு நிலவைப் பார்த்துச் சாப்பிட்டது .நிலவில் இறங்கி விட்டது இயந்திரம். அடுத்து அங்கே அனுப்பி வைக்கப்படலாம். நேற்று தந்தையோடு கடைக்குச் சென்று வாங்கி வந்த பொம்மைகள். இடிபாடுகளுக்கு இடையில் . 'உங்களுக்கு உயிர் மட்டுமே உத்தரவாதம். ஓடுங்கள்.' இங்கே நிற்கும் இவர்கள் தோழிகளாக மாறலாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யலாம்.


வேறு மாநிலத்தில், அடுத்த அடுத்த மாநிலத்தில், இவர்களின் வாழ்க்கை எவ்வளவோ மாறிப்போகலாம். ஆனால் பிறந்து வளர்ந்த அந்த மண்ணின் வாசம், அந்த மூச்சுகளில் இருந்து கொண்டு. அந்தக் குடும்ப வாழ்க்கை அவர்கள் பேச்சுக்களில் இருந்து கொண்டு. காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வேனுக்காக.


------------------------------நாகேந்திர பாரதி ‎

 

My Poems/Stories in Tamil and English 

 

இன்றோடு முடிவதில்லை - கவிதை

 இன்றோடு முடிவதில்லை - கவிதை 

---------------------------------------------------

இன்றோடு முடிவதில்லை

இந்த வாழ்க்கை


இருக்கின்ற நாட்களிலே

இன்பம் உண்டு


வந்திருந்த துன்பமெல்லாம்

வழி காட்டி


வாழ்க்கையினைப் போதித்த

போதி மரம்


தவறுகளும் தப்புகளும்

தந்த தெல்லாம்


தண்டனைகள் இல்லையடா

பாடங்கள்


படித்ததில் பாடம் கற்று

படிப் படியாய்


ஏறிடுவோம் வாழ்க்கையிலே

இன்பம் உண்டு


----------------------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English


செவ்வாய், 26 செப்டம்பர், 2023

அனுபவப் பகிர்வுரை - குவிகம் நிகழ்வு

 அனுபவப் பகிர்வுரை - குவிகம்  நிகழ்வு 

--------------------------------------------------------------------


நன்றி . சுந்தரராஜன் சார். வணக்கம் நண்பர்களே. 


இன்றைக்கு குவிகம் நிகழ்வில் முதல் உதவி ங்கிற நிகழ்ச்சிக்குப் பதிலா இதை அரேஞ் பண்ணி இருக்கிறதால எனக்கும் சில வருடங்களுக்கு முன்னாலே நடந்த முதல் உதவி நிகழ்ச்சி பற்றி சொல்லலாம்னு நினைக்கிறேன் 


கொஞ்ச நாளா மாடிப்  படி  ஏறுறப்போ தொண்டைக்குள் கீழே ஏதோ ஒரு மாதிரி சிரமமா இருந்துச்சுங்க, களைப்பா இருந்துச்சு.  ஆஞ்சியோகிராம் பண்ண  சொன்னாங்க. டெலிகிராம் நிறுத்தினப்  பிறகு இது  ஏதோ புது கம்யூனிகேஷன் போலிருக்கு. தகவல் அனுப்பினா பதில் வரும்னு நினைச்சு  போஸ்ட் ஆபீஸ் போனா  அவங்க   ஆஸ்பத்திரி போகச் சொன்னாங்க.


அங்கே போனா அவங்க நம்மளை படுக்கப்  போட்டு , ஏதோ பாதி கொண்டை ஊசி மாதிரி  மணிக்கட்டு  நரம்பில் குத்தி அது  வழியா என்னமோ இதய நரம்புகளில் இறக்கி போட்டோ எடுத்து  காமிச்சாங்க. இதயத்திலே அஞ்சு அடைப்பு இருக்காம். அந்தக்  காலத்திலே நம்ம ஏழெட்டுப்     பொண்ணுங்களை லவ் பண்ணி  இருக்கோமே.  அஞ்சு தான் இருக்கான்னு சந்தேகமாக்   கேட்டா இது காதல் அடைப்பு இல்லையாம். இதய ரத்த நாளங்களில்  அடைப்பாம் .


நம்ம நண்பர்கள் ஒண்ணு ரெண்டு  பேருக்கு ஒரு அடைப்பு  இருந்து ஆபரேஷன் பண்ணிய   ஞாபகம்  வந்துச்சு. நமக்கு அஞ்சு  இருக்கிறதிலே ஒரு நிமிஷம் பெருமையா இருந்தாலும் ஆஹா  ஆபத்துன்னு அப்புறம் தான் உறைச்சது.


அதிலேயும் மூணு அடைப்பு, எழுபது, எண்பது, தொண்ணுறு  பெர்ஸண்டாம். பள்ளிக்கூடத்தில் கிடைக்காத பெர்ஸன்டேஜ் இங்கே கிடைச்சதை எண்ணி சந்தோசப்   படுறதா . வருத்தப்  படுறதா  . அப்புறம் 'ஆபரேஷன் பண்ணுறதா ஸ்டென்ட்  வைக்கிறதா ன்னு  ' கண்ணகியா , மாதவியா ' ன்னு ஒரு பட்டி மன்றம்.  கடைசியிலே  ஸ்டென்ட் வைக்கிறதுன்னு முடிவாச்சு .


நமக்கு ஸ்டென்டுன்ன உடனே அந்தக் காலத்திலே டூரிங்  டாக்கீஸ் இல்  பார்த்த எம் ஜி ஆர் ஸ்டெண்டு தான் ஞாபகம் வரது.  ஸ்டெண்டு வைக்க ஸ்டெண்டு மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் மாதிரி ஒரு பயில்வான்  வருவாரோன்னு தோணுச்சு. ஆனா வந்தவர் நம்ம ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி டாக்டர். அவர் சொன்னாரு. . இது வேறயாம். வலை  மாதிரி ஏதோ ஒண்ணை உள்ளே நுழைச்சு இதய நாளத்தை நிமித்தி  இதை வச்சுருவாங்களாம்.  அடைப்பு சரியாகி ரத்த ஓட்டம் நல்லா  ஆயிருமாம்.


சரின்னு போயி 'கேத்தோ லேப்' பிலே போயி படுத்தா ஒரு  மணி நேரத்திலே மூணு அடைப்பிலேயும் ஸ்டென்ட் வச்சாச்சு.  நடுவிலே அப்பப்போ ஏதோ 'டப்' 'டப்' புன்னு பலூன் வெடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு . அப்புறம்  சொன்னாங்க. கை நரம்பு வழியா ஊசி வழி சின்ன வயர் நுழைச்சு  இதய நரம்பு வரை போயி அதுக்கு  மேலே பலூன் நுழைச்சு அதை  வெடிக்க வச்சு , அதுக்கு மேலே ஸ்டென்ட் வச்சு செட்  பண்ணியாச்சாம். பலூன் கொஞ்சம் ஜாஸ்தி ஆச்சாம்.


நினைச்சுக்கிட்டேன். 'முன்னாலே சொல்லியிருந்தா பேரன் பேத்திக்கிட்டே இருந்து   கொஞ்சம் பலூன் வாங்கிக் கொண்டாந்து கொடுத்திருக்கலாமே ன்னு.' சொல்லலே. 'அது வேற பலூன் , இது வேற பலூன்' ன்னு . 'அது வேற வாயி இது வேற வாயி' ன்னு வடிவேலு மாதிரி  மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டு வாயை அடக்கிக்கிட்டேன் .


அப்புறம் என்னங்க. ஐ சி யு விலே ஒரு ராத்திரி . ரெண்டு  கைகளிலேயும் நரம்புகளில் ஊசி மாட்டி விட்டு  மருந்து ஏறுது .  திரவம் ஏறுது. அப்புறம் ஏதோ கருவிகள் மூலமா, ஆக்சிஜென் , மூச்சு, இதயத்துடிப்பு எல்லாம் நம்பர் நம்பரா தெரியுது. இந்த நேரம் பார்த்துதான் நமக்கு உச்சந் தலையிலே அரிக்குது. சிஸ்டர் கிட்டே  சொல்லலாமான்னு பார்த்தா , அவங்களும் ரெம்ப பிசியா இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கிட்டே டாக்டர் கிட்ட என்னென்னமோ நம்பர்களை சொல்லிக்கிட்டு இருக்காங்க. டாக்டரும் நோட் பண்ணிக்கிறாங்க.


 நம்ம கிட்ட வந்து ஏதோ கேட்கிறாங்க. நம்மளும் தலையாட்டுறோம். சிஸ்டர் சொல்லுறாங்க.  20 , 99 , 85  ன்னு .  ஏதோ குறியீடுகள். நம்மளும் சும்மா ‘253’  ன்னு  சொல்லலாம்னு தோணுது. வாயை அடக்கிக் கிட்டேன் . எதுக்கு வம்பு. இந்த நம்பர்  எதுக்கு குறியீடுன்னு கேட்டா என்ன சொல்றது.


மறு நாள் வார்டு  ரூமுக்கு மாத்தியாச்சு. காலை , மதியம்,  இரவு, சாப்பாட்டுக்கு முன்பு, சாப்பிட்டு பின்பு ன்னு மூணு வேளை   சாப்பாடு, ஆறு வேளை  மாத்திரைன்னு மூணு நாள் ஓடிச்சு.   அப்புறம் டயட்டீஷியன் வந்து இதய , சர்க்கரை நோயாளிகளுக்கு உரிய  உணவு விவரம் சொல்றாங்க. ஆப்பிளாம். பாதாமாம். ஜூஸாம்.  சூப்பாம். காசு ? டெஸ்ட், ஆபரேஷன், சாப்பாடு எல்லாமே காசு தானே . சரி நமக்கு, பையன், பொண்ணு பார்த்துக்கிறாங்க. நாட்டிலே  எவ்வளவு ஏழைகள். அவர்களோட உடல் நலத்திலே எவ்வளவு  பிரச்சினைகள். எல்லாம் அரசாங்கம் தான் பாத்துக்கணும், சரிதானே.


சரி விடுங்க. நம்ம பிரச்சினையை நம்ம பாப்போம். நாட்டுப் பிரச்சினையை நல்ல தலைவர்கள்(!) பாத்துக்கிருவாங்க.  வீட்டுக்கு வந்தாச்சு. நண்பர்கள் உறவினர்கள் வருகை. நலம் விசாரிப்பு.   அவங்க, வேற படிப்பு படிச்சு, வேற வேலை பாக்கிறதாத் தான் இது  வரை நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ   தான் தெரியுது அவங்க ஒவ்வொருவரும் உள்ளுக்குள்ளே டாக்டருன்னு .  ஹார்ட் பத்தியும்   ஸ்டென்ட் பத்தியும் எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காங்க.  கூகிள் ஆண்டவரே இவங்க கிட்டே வந்து கேட்கலாம் போலிருக்கு.   என்ன ஒண்ணு, ஒரே மாதிரி சொல்லாம ஒவ்வொருத்தரும்  ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க.


சிலர் 'தும்மக் கூடாது. இருமக் கூடாதுங்' க்கிறாங்க. ஏங்க  இதெல்லாம் நம்ம கையிலே- இல்லையில்லை- நம்ம மூக்கிலேயாங்க இருக்கு . அது பாட்டுக்கு வர்றது. அடக்க  முடியுமா . சரி , அப்படியே மூக்கு வழி வந்துட்டாலும், அந்த  'ஸ்டென்ட் ' எப்படித்தான் இருக்குன்னு நம்மளும் பாத்துக்கிடலாம்  இல்லையா .சில பேர் ஒரு மாதம் கழித்து ' ஸ்விம்மிங்' கே    போகலாம்னு சொல்றாங்க. அது சரி, அதுக்கு நம்ம முதல்லே  'ஸ்விம்மிங்' கத்துக்கணுமே. இவங்க கத்து தருவார்களா .


என்னமோ போங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. பேசாம டாக்டர் கிட்டேயே போயி கேட்டுரலாம்னு  அவர் முன்னாலே போய் உக்காந்தா அவர் சொல்லுறதுக்கு எல்லாம் ' எஸ் சார்' ஓகே சார் ' ன்னு சொல்லுக்கிட்டு இருக்கோம். நம்ம டாக்டர் பாஸ்கரன் சார் கிட்டே கிட்டே மட்டும் தான் பிரென்ட் மாதிரி பேச முடியுது. மத்த டாக்டர் கிட்டே இல்லே பயம்.   நம்ம கேக்க வந்தது எல்லாம் மறந்து போயிடறது. வீட்டுக்கு வந்த பிறகு தான்  ஒண்ணொண்ணா ஞாபகம் வரது. டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில்  டேபிள் டாபிக் பேச்சு பேசப் போயி ஒண்ணுமே ஞாபகம் வராம சீட்டிலே வந்து உக்காந்ததும் ஒண்ணொண்ணா ஞாபகம் வருமே , அது  மாதிரி.


சரி விடுங்க. பகவான் சொன்ன மாதிரி ' நடந்ததெல்லாம்  நல்லதே , நடப்பதும் நல்லதே, நடக்கப் போவதும் நல்லதே ' ன்னு  நினைச்சுக்கிட்டு நம்ம பாட்டுக்கு வழக்கம் போல நிதானமா நம்ம  வேலைகளைப் பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான், என்ன நான் சொல்றது .

-------------------------------------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

-------------------------------------------------------------------------------------- 

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே. 

பெற்றோரை இழந்த பலருக்குத்  தங்கள் தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை  கவிஞர் வைரமுத்து அவர்களின் ' தூரத்து உறவு ' கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும் கொண்டு வரலாம் . ரத்த உறவு ' தூரத்து உறவாக மாறும் பரிதாபத்தை அப்படியே உருக்கமாகக் காட்டும் கதை. அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலருக்கு அனுபவமாய் இருக்கும் கதை. 


பெற்றோரைப் பிரிந்து அமெரிக்காவில்  வாழும் மகன் ஈமக்கிரியை செய்ய இங்கு வரும்போது காட்டும் காட்சி 


அந்த வருணனைகள் சில . 

மரணம் இறந்தவர்களுக்கே சாதகம் செய்கிறது . அதுதான் அவர்களின் இனிமையான நினைவுகளை மட்டுமே அழைத்து வருகிறது .  

இந்த நாயகனும்  அது போல அசை  போடுகிறான் . அப்பாவின் நினைவுகளை இவ்வாறு .


'என்ன வேணும்னாலும் பண்ணுங்க . எம் பையனை அடிக்க மட்டும் கூடாது . ' என்று பள்ளிக்கூட வாத்தியாரிடம் பணிவான எச்சரிக்கை விடுத்தது . இன்சூரன்ஸ் லோன் போட்டு இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தது  . பர்சில் வெங்கடாஜலபதி படத்திற்கு கீழே , மீசை முளைக்காத மகனின் பழைய போட்டோ வைத்திருந்தது . முதல் முறை மகன் அமெரிக்கா போனபோது விக்கி விக்கி அழுதது . ஒவ்வொன்றாய் நினைவு வந்து ' அப்பா நல்லவர்தான் போலிருக்கிறதே ' என்று சிபாரிசு செய்தன.  


இங்கே ஆசிரியர் சில விஷயங்களை நம் யூகத்திற்கு விட்டு விடுகிறார். இடையில் அப்பா கெட்டவர்  என்று அவன் நினைவில் ஊறி ப்  போன விஷயங்களை சொல்லாமல் மறைத்து .  இப்போது , தனது இளம் வயது நினைவுகள் வந்து , அவரின் உடலைப் பார்த்து  அவன் வருத்தப்படுவது  போல் காட்டுகிறார்.  . 


அடுத்து அவன் மனதில் வரும்  வரும் தத்துவம் ' இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப் போகிறது எனக்கு உயிர் தந்த உடல் . நேற்று வரை அப்பா ஓர் உயிர். இன்று உடல் . நாளை வெறும் சொல். ' அப்போது  

 அந்த உணர்வை மாற்றும் மனைவியின் சொல். அமெரிக்காவில் இருக்கும் மனைவியின் சொல். அவள் சொல்லி விட்டது ' சடங்குகளில் தள்ளி நில்லுங்கள். ஏதாவது இன்பெக்சன் வந்து தொலையப் போகிறது . இப்போது அமெரிக்க வாழ்க்கை முறை பற்றி ஒரு கிண்டல்   ' மனைவி ' கௌ ' . கவுசல்யாவின் சுருக்கம். இவன் ஷிவ்  சிவராமனின் சுருக்கம். 


மனைவியின் கட்டளைக்குச் செவி சாய்க்கும் விதமாக ' எதற்கும், நாளைக்குச் சாம்பலைப் பாலிதீன் பையில் இட்டு ரப்பர் பேண்ட் சுற்றிக் கொடுங்கள் ' என்று சொல்லி விட்டு வந்தான். வெந்து தணிந்தது கூடு . மொட்டை அடிப்பதை மறுத்து நீண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்து விட்டு , வங்காள விரிகுடாவில் கால் நனையாமல் அஸ்தி கரைத்து வீடு திரும்புகிறான். 


அங்கே அடுத்த ஆட்டம் ஆரம்பம். மனைவி சொல்லி அனுப்பி இருக்கிறாள். 'அம்மாவுக்கு மட்டும் அந்த வீடு எதற்கு . அதை விற்றுவிட்டு , அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வாருங்கள்' என்று . அதை நடை முறைப்படுத்தும் விதத்தில்  அந்த நாயகனின்  செயல்கள் அடுத்து . 


வீடு திரும்பியபோது ' சிவராமா ' என்று கதறி அழுதாள்  அம்மா. ரத்த சோகை. நீரிழிவு . நார் போல் இளைத்திருந்தாள் .

' நாந்தான் முந்துவேன்னு நினைச்சேன் . அவரு முந்திட்டாரு' 

'கடைசியா என்ன சொன்னாரும்மா  ' 

'நான் போயிட்டா நீ எப்படித்தான் இருக்கப் போறியோ '

'ஏன்  நான் இல்லையா' - அவன் அவசரமாய் மகனானான். 

'இல்லையே சிவராமா  இல்லையே  , அவரை பிழைக்க வைக்க வேணாம் , சாகும்போது பக்கத்துலே கூட இல்லையே '

'என்னம்மா பண்றது , தூரம். '

'ஆமப்பா, எல்லாமே தூரமாய்ப் போச்சு .'  


கதையின் தலைப்பு இப்போது கத்தி போல் பாய்கிறது . ரத்த சொந்தம் தான். ஆனால் அமெரிக்கா  போய்த்  தூரமாய்ப் போய்விட்ட ' தூரத்துச் சொந்தம் ' 



ஒரு வாரம் ஆகிறது . மகன் வேலையை ஆரம்பிக்கிறான். 

'அம்மா, எப்படித்தான் தனியா இருக்கப் போறியோ '

'என்கூட அமெரிக்கா கூட்டிட்டுப் போறேன். வரியா, நீ வரமாட்டே' 

'என்கூட அமெரிக்கா கூட்டிட்டுப் போறேன். வரியா, நீ வரமாட்டே' 


கேள்விக்கும் பதிலுக்கும் ஆன இடைவெளியை தன் விருப்பதையிட்டு நிரப்பிக் கொண்ட மகனைப் புரிந்தும் புரியாதது போல் பார்த்தாள் அம்மா. 


'பரவாயில்லை, இந்த வீட்டிலேயே இருந்துட்டுப் போயிடுறேன் .' 


'அது எப்படிம்மா தனியா இருப்பே 


'துணைக்கு யாருப்பா வருவா '


'துணை இருக்கிற இடத்திற்கு நீதான் போகணும் அம்மா '


கொஞ்சம் கொஞ்சமாக அவன் பேசும் பேச்சு ஏதோ கடமை. பாசம் இல்லை. 


'ஈ  சி ஆர் ரோட்டிலே , பழத் தோட்டம்  '


'முதியோர் இல்லத்திற்கு வியாபாரப் பெயரா '


'வீட்டை விடப் பாதுகாப்பா இருக்கும் '


'அப்ப வீடு' 


'வீட்டை வித்திடலாம்னு நினைக்கிறன் .'


'அப்பா வாழ்ந்த வீடப்ப '


'அசோகரும் அக்பரும் வாழ்ந்த வீட்டையே காணோம் . இதுதான் எதார்த்தம். புரிஞ்சுக்கம்மா  '


அம்மா வாயடைத்துப் போனாள் .


அங்கே முதுமையிலும், நோயிலும் தவிக்கும் அந்தத் தாயின் நிலைமை , நம் கண்களையும் கலங்கடிக்கிறது . ஆனால். அந்தப் பாசமில்லா மகன் அடுத்தடுத்து , மனைவி சொல்லி விட்ட காரியங்களை படிப்படியாகச் செய்கிறான். 


அடுத்து வீடு விற்கும் காட்சிகள். கருப்பும் வெளுப்புமாக பணம் இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக  கை மாறும்போது நம் நாட்டு அரசியல் , சமூக  நிலைமைகள் பற்றிய  கண்ணோட்டம். மூன்று மாதங்கள் ஓடின. அவள் முதியோர் இல்லத்திற்குச் செல்லும் நாள் .

அன்று அந்தத் தாய் கேட்கும் கேள்வி 


'எனக்கு ஒரு ஆசை '

 என்றாள் அம்மா. 

அப்பா கடைசியாகக் கிடத்தப்பட்டிருந்த கூடத்தில் வெறுந் தரையில் விழுந்தாள் . இப்படியும் அப்படியும் உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள் . நனைத்தாள். ' போயிட்டு வரேன் ' என்ற பொருளற்ற மரபுத் தொடரைச்  சொல்லிக் கொண்டாள் .செம்பருத்திச் செடிகளையும் , தென்னை மரங்களையும் கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டாள் . 



அடுத்து முதியோர் இல்லக் காட்சிகள். 'இனிமே உங்களுக்கு மட்டும் இல்லே, எங்களுக்கும் இவங்க அம்மாதான் ' என்றார் பழத்தோட்டத்தின் காப்பாளர். 

மாசம் பன்னிரெண்டாயிரம் என்று ஐந்து மாதம் அறுபதாயிரம் கொடுத்தான் . 'மருத்துவச் செலவு தனி 'என்றார். 


அம்மாவிடம் விடை பெறும்  தருணம். உருக்கத்தை வார்த்தைகளில் கொட்டுகிறார் வைரமுத்து அவர்கள். 


மகன் கைகளைப் பிடித்துக் கொண்டு ' அடிக்கடி பேசப்பா சிவராமா ' என்று தாடை பிடித்துக் கெஞ்சினாள் அம்மா. 'ஆகட்டும்' என்று சொல்லி வைத்தான் மகன். வாசலில் நின்று தூணைப் பிடித்த படி மகன் போன வாடகைக்  காரையே பார்த்தபடி நின்றாள் . திருப்பத்தில்  கண்ணாடி இறக்கிக் கை காட்டுவான் என்பது அவளது ' பெத்த ' நம்பிக்கை. கவிஞரின் பொருள் பொதிந்த வார்த்தைகள். பெத்த நம்பிக்கை. பெருத்த நம்பிக்கை. இரு பொருள் இங்கே மறை பொருளாக  . அதனாலேயே ஒரு கையை உயர்த்தியபடியே நின்றாள். கார் தான் மறைந்தது , கண்ணாடி இறங்கவில்லை . உயர்த்திய கரம் கீழே விழுந்தது. படிப்பவர்கள் கண்களில் கண்ணீர் நிறைய வைக்கும் காட்சி .



அடுத்தது அமெரிக்க காட்சி . 

மனைவியின் வரவேற்பு அங்கே . பணம் பற்றிய பேச்சு . இவளுக்காக இவன் வாங்கி வந்த அல்வா பற்றிய பேச்சு .  அவன் இயல்பான வாழ்க்கை முறை. அப்பா, அம்மாவோடு அவன் சென்னையில் இருந்த தருணங்கள்  போலித்  தருணங்கள். பாசம் இல்லாத பாசாங்கு தருணங்கள் என்று வெளிப்படும் கணவன் மனைவி உரையாடல்கள்.


 இந்த வாழ்க்கை முறையின் காரணங்கள் என்ன. தெரியாது . பெற்றோருடன் கூட இருந்து வளரவில்லையா அவன் . இல்லை பெற்றோர் பின்னால் மாறிப் போய் இவனைத் துன்புறுத்தினார்களா. இப்போது முதுமையில் மாறி ஏங்கிக்  கிடந்தார்களா. இவன் மனைவியின் மோகத்தில் மூழ்கி விட்டானா . விடை தெரியாக் கேள்விகள் கதையில் . 


அவனுக்கு சாண்ட் விச் , ரொட்டி , பழங்கள் , காபி கொடுத்து அவன் ஸ்வீட் கேட்கும் போது மறுக்கிறாள் மனைவி . 'அப்பா இறந்து தான் மூணு மாசம் ஆச்சே ,' என்ற அவன் கேள்விக்குப் பதில் .' உங்க அம்மா இறந்து இன்னும் மூணு மணி நேரம் கூட ஆகலை. உங்க மூட் மாறிடக் கூடாதுன்னு தான் உடனே சொல்லலை.முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்துச்சு . 


அவன் அப்படியே தலையில் கை வைத்து தரையில் சரிந்து சுவரில் சாய்ந்தான். 

அவன் மனைவி, ''இமோஷனைப் பார்க்காதீங்க. ப்ரோமோஷனைப் பாருங்க. இன்னுமொரு அலைச்சல் வேண்டாம். இறுதிச் சடங்கை இங்கே இருந்தே செஞ்சுடலாம். 'என்று அந்த முதியோர் இல்லக்  காப்பாளரிடம் செய்ய வேண்டியவற்றைச் சொல்லி விட்டு , இவர்கள் ஸ்கைப் மூலம் கம்ப்யூட்டரில் அம்மா எரிவதை பார்த்தபடி இருக்கிறார்கள் . ' டீ ஆறிடும் ' குடிங்க ' என்கிறாள் மனைவி என்று முடிகிறது கதை 


உருக்கமான கதை. இன்றைய தலைமுறையில்  குடும்ப நிலவரத்தின்  கலவரத்தைக் காட்டும் கதை. ரத்த உறவுகள் தூரத்து உறவுகளாய்  மாறி விட்டதைக் காட்டும் கதை.  பாசத்திற்கும் பணத்திற்கும் நடக்கும் போட்டியில் பணம் ஜெயித்து பாசம் தோற்று , ரத்த சொந்தங்கள் எல்லாம் தூரத்து சொந்தங்கள் ஆகும் நிலைமையைத் தோல் உரித்துக் காட்டும் கதை.  நன்றி வணக்கம். 


---------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English   


உன்னை நேசி - கவிதை

 உன்னை நேசி - கவிதை 

——————-------------------—


சுவர் காத்து வரைகின்ற

சித்திரம் இது


சுய நலத்தில் அடங்கியுள்ள

பொது நலம் இது


படுக்கையில் படுத்தபடி

பாராள முடியாது


பாரத்தைச் சுமக்கின்ற

பகல் கனவு கூடாது


எழுந்து வர வேண்டும்

இரும்பாக  வர வேண்டும் 


உடலையும் உள்ளத்தையும்

உருக்காக  வைத்தால்தான்


ஊருக்கு உழைக்கின்ற

உற்சாகம் ஊற்றெடுக்கும்


உன்னையும் நேசித்து

உலகையும் நேசித்தால்


எல்லோரும் இன்புற்று

இருக்கின்ற நிலை கிட்டும்   


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 



உறங்கப் பழகும் இரவுகள் - கவிதை

 உறங்கப் பழகும் இரவுகள் - கவிதை 

————————————---------------------

பேப்பர் போடும்

வேலை அதிகாலை 


தொடரும் பாக்கெட்

பாலும் காலையில்


திரும்பி வந்து

அப்பாவின் டீக்கடை


பள்ளி செல்லும்

பஸ்கள் பார்வைக்கு


சைக்கிளில் அலையும்

வேலையில் மாலை


எடுப்புப் சாப்பாட்டில்

மூன்று வேளை


இருமல் அம்மாவிற்கு

இடையில் சேவை


உறக்கம் பழகும்

இரவில் வந்திடும்


கலர்க் கலராய்க்

கற்பனைக் கனவுகள்


———நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


நாகரிக உடை - சிறுகதை

 நாகரிக உடை - சிறுகதை  --------------------------------------- 'வந்துட்டாளுக ,பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கோயிலுக்கு . சாமி கும்பிட வர்ற...