மண்ணு தின்னி மரகதம் -உத்திரகோசமங்கை உறவுகள் - 4
----------
(படம் வரைந்தவர் : உஷா பாரதி : நன்றி )
---
('அவனும் அவர்களும் ' என்ற தொடரின் பெயரை 'உத்திரகோசமங்கை உறவுகள்' என்று மாற்றி விட்டேன். ஊரின் பெயரும் தொடரின் தலைப்பில் இருக்கட்டும் என்று )
அவன் மண்ணு தின்று பார்த்ததில்லே இவன் . அவன் பேரும் மரகதம் இல்லே. இருந்தாலும் அவன் பேரையே மறந்து போற அளவுக்கு இந்தப் பட்டப்பேரு அவனுக்கு அமைஞ்சு போச்சு. அவன் சின்னைப்பிள்ளையிலே மண்ணு தின்னதாவும் அதனாலேதான் அவன் வயிறு வீங்கிப் போய் இருக்குன்னு சொல்லி நண்பர்கள் சில பேர் வச்ச பேரு. அவன் வயிறு வீங்கி இருந்தது என்னவோ உண்மை. அவன் சாப்பிடுறப்ப பார்த்தவர்களுக்கு அதன் இன்னொரு காரணமும் புரியும்.
முதல் வடக்குத் தெருவிலே இவன் வீட்டிலே இருந்து அஞ்சாறு வீடு தள்ளி முக்கு வீடுதான் அவன் வீடு . ஓட்டு வீடு. தட்டி வச்ச திண்ணை. காலையிலே அப்பா கூட வயல் வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் தான் திரும்பி வருவான். பள்ளிக்கூடம் பாதியிலே நிறுத்தியாச்சு.
சாயந்திரத்திலே இருந்து நைட் படுக்கப் போற வரைக்கும் அந்தத் தட்டி மறைச்ச திண்ணையிலே இருந்துக்கிட்டு பாடுவான். நல்ல குரல். டி எம் எஸ் பாட்டுதான் பெரும்பாலும். எதுத்தாப்பலே இருக்கிற லைப்ரரியில் இருக்குற இவனுக்கு நல்லாவே கேட்கும். படிச்சுட்டு அவன் வீட்டிலே போயி உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு இருப்பான்.
மண்ணு தின்னி மரகதம் வீட்டிலே அவன் வச்சுக்கிட்டுக் இருக்கிற சினிமாப் பாட்டுப் புத்தகம் எல்லாம் எடுத்துட்டு வந்து காமிப்பான். கட்டுக் கட்டா இருக்கும். எம் ஜி ஆர் , சிவாஜி யில் இருந்து ஜெய்ஷங்கர் , ரவிச்சந்திரன் படம் வரை ஏராளம்.
அப்ப அஞ்சு பைசா பாட்டு புத்தகம். அட்டையில் படத்தோட ஸீன் ஒண்ணு. உள்ளே முதல் பக்கத்திலே .திரைப்படக் கதைச் சுருக்கம். முடிவைச் சொல்லாம ' மீதியை வெள்ளித்திரையில் காண்க ' என்று படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும். தியேட்டரில் வெண்திரை, அழுக்குத்திரை பார்த்திருக்கோம். 'இது என்னடா வெள்ளித்திரைன்னு' கேட்டா சொல்லுவான். 'வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதானே புதுப் படம் வருது . அதுதானப்பு ' என்பான். எல்லா வார்த்தையும் முடியுறது அப்புலேதான். 'வாப்பு, ஒக்காறப்பு , சொல்லுப்பு , சரிப்பு' எல்லாம் 'ப்பு' தான் . அவன் ஸ்டைலு .
பக்கத்து பஞ்சாயத்து போர்ட் ரேடியோவில் இருந்து காலையிலே பக்திப்பாடல்,அப்புறம் நியூஸ், ஒலிச்சித்திரம் , சினிமாப் பாட்டு ஒலித்துக் கொண்டு இருக்கும். அதைக் கேட்டுக் கேட்டுத்தான் பாட்டு ஞானம். அது தவிர முளைக்கொட்டு , மற்ற திருவிழா காலங்களில் எல்லாம் , ஒவ்வொரு தெரு முக்கிலும் கொட்டாய் போட்டு 'வேலன் வேடன் , விருத்தன்' என்று சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாட்டுகளோடு மதுரை திரைப்படப் புகழ் நடிகர்கள் பலர் வந்து நடிப்பார்கள்.
ஸ்பீக்கர் இல்லாமலே எல்லாத் தெருக்களிலும் வந்து ஒலிக்கும் அவர்கள் வெண்கலக் குரல். டி ஆர் மஹாலிங்கம், எம் எம் மாரியப்பா போன்ற பிரபலங்கள் வந்த ஞாபகம் . அவர்கள் பாட்டுக்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டு மனப்பாடம் செய்து விடுவான் மண்ணு தின்னி மரகதம் . மறுநாள் திண்ணையில் ' காயாத கானகத்தே ' ஒலிக்கும் அவன் குரலில் .
முதல் நாள் இரவு பத்துமணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் , மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத்தான் முடியும். தொடர் பாட்டுகள், வசனங்கள். சினிமாப் பாட்டுகளும் நேயர்கள் விருப்பமாக கலந்து பாடுவார்கள் . முன்னால் போய் மண்ணைக் கூட்டி உட்கார்ந்து விடுவான்.சில சமயம் இவன் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து கேட்பது உண்டு. பாதியில் தூக்கம் சொக்கி வீட்டுக்கு வந்து திண்ணையில் படுத்து அந்தப் பாட்டுக்களைக் கேட்டுத் தூங்கி விடுவான் இவன் .
மறுநாள் சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் மரகதம் வீட்டுக்கு சென்று முழுக் கதையும் கேட்டு , பாட்டுக்களை யும் கேட்டு வருவான். மண்ணு தின்னி சினிமா போனதில்லை. இவன் பல சினிமாக்கள் அப்பாவோடு சேர்ந்து ராம்நாட் சென்று ஷண்முகா தியேட்டர், ராஜாராம் தியேட்டரில் ரெண்டு ஷோ பார்த்துவிட்டு மரகதத்திற்கு அஞ்சு பைசா பாட்டு புஸ்தகம் வாங்கி வந்து கொடுத்து 'வெள்ளித்திரையில் கண்ட' மீதிக்கதையையும் சொல்லுவான். மரகதத்திற்கு பரம சந்தோசம். ஒரு சில வாரங்களில் அந்தப் படங்களின் ஒலிச்சித்திரம் பஞ்சாயத்துப் போர்டு ரேடியோவில் கேட்டு ' கரெக்ட்டா சொன்னப்பு கதையை ' என்று பாராட்டுவான்.
ஒருநாள் 'கண் வலி' என்று உள்ளூர் ஆஸ்பத்திரியில் காண்பித்து மருந்து போட்டு கட்டு போட்டுக் கொண்டு இருந்தான். இருந்தாலும் மனப்பாடமாக இருந்த பாட்டுக்களை, அந்தப் பாட்டுப் புத்தகக் கட்டுகள் மேல் தாளம் போட்டுப் பாடிக் கொண்டு இருந்தான். டி எம் எஸ் சின் அவனுக்குப் பிடித்த பாட்டான 'ஆயிரத்தில் ஒருவன் ' பாட்டு ' ஓடும் மேகங்களே ' பாட்டை அடிக்கடி பாடுவான். ' நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் ' என்ற வரியின் போது கண்ணின் கட்டின் வழி மருந்தோடு சேர்ந்து அவன் கண்ணீர் கசியும். 'கண்ணு வலிக்குதப்பு ' என்பான் .கண் மூடியது மூடியது தான். சில நாட்களில் அவன் கண் பார்வை போய் விட்டது. திண்ணையில் இருந்தபடி பாடுவது நிற்கவில்லை.
இவன் வெளியூர் போய் வந்த ஒருநாள் சொன்னார்கள். 'மண்ணு தின்னி மரகதம் போயிட்டாண்டா ' என்பதோடு சேர்த்துச் சொன்னார்கள். 'வயித்து வலியாம் . அவன் மண்ணு தின்னறதை விடலையாம் ' .இவன் நம்பவில்லை. மரகதம், மண்ணு தின்று இவன் பார்த்ததில்லை. உத்திரகோசமங்கை உறவுகளில் ,என்றும் மண்ணு தின்னி மரகதம் ' ஆயிரத்தில் ஒருவனப்பு ' ..
-----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English



