புதன், 11 மார்ச், 2026

கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

  கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை  புதிது நிகழ்வு 

-----------------

'புதுச் செருப்பு காலைக் கடிக்கும்' என்பார்கள். ரமணன் அவர்களின் இந்தச் 'செருப்பு ' சிறுகதையோ நம் மனதைக் கடிக்கிறது. நாட்டின் நடப்பு உண்மை நிலவரங்கள் கதையாக உருவெடுத்து வரும்போது அவை காலத்தின் கண்ணாடியாக என்றுமே நிலைத்து நிற்கும். அது போன்ற ஒரு சிறுகதை தான் இந்த 'செருப்பு' சிறுகதை .

கணவனை இழந்து, மகனை வளர்த்து வரும் ஒரு ஏழைத் தாயின் டீக்கடையைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள். நம்மில் பலர் பார்த்திருக்கலாம். கதைக் களம் எனது சொந்த மாவட்டம் ராமநாதபுரத்தை ஒட்டிய நெடுஞ் சாலை ஒன்றில் நடப்பதால், என் மனக்கண் முன் இது போன்று அங்கே ரோட்டோரம் இருக்கும் பல டீக்கடைகள் கண் முன் வந்து போயின .

டீக்கடையில் வரும் குறைந்த வருமானத்தில் தங்கள் வாழ்வை ஓட்டி வரும் அந்த அம்மா, மகன் வாழ்வில் மகனுக்கு வரும் ' செருப்பு ' ஆசை கதையை ஆரம்பித்து வைக்கிறது. 'சீட்டுப் பணம் கட்ட வேண்டி இருக்குப்பா ,இன்று வரும் டீக்கடை வருமானத்தில் எப்படியும் வாங்கி விடலாம் ' என்று அவனுக்கு நம்பிக்கை கொடுக்கிறாள் தாய்.


பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலை த் தொழிலாளிகளுக்கு தினமும் கொடுக்கப் படும் டீ யோடு, சம்பள நாளன்று சில நேரம் விற்கப்படும் பலகாரம் சேர்ந்து குறைந்த வருமானம் தான் அந்தக் கடையில் .


அன்று திடீர் என்று ஒரே கூட்டம். பிளாஸ்கில் மகன் எடுத்துச் செல்லும் டீ கப்புகளோடு துரித விற்பனை. மகனுக்கு ஏக குஷி. தொடர்ந்து பல முறை அந்த பிளாஸ்க் நிரப்பட்டு ஒரு டீ அஞ்சு ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் என்று விற்று விட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறான் மகன். எப்படியும் செருப்பு வாங்கி விடலாம் என்ற உற்சாகம் அவன் குரலில்.


'இப்படி ஓடுகிற பையன் படிப்பில் மட்டும் ஏன் கோட்டை விடுகிறான் 'என்ற கவலை தாய் மனதில். இப்போது போலீஸ் பட்டாளம் வருகிறது . அந்த வழி செல்கிற மத்திய அமைச்சருக்கு வேறு கட்சியினர் கறுப்புக்கொடி காட்டிட கூடி இருக்கும் கூட்டம் என்று தெரிகிறது. போலீஸ் ஒழுங்குபடுத்த தடுப்புகளை நிறுத்தி , கட்சினரைத் தள்ள, தள்ளு முள்ளு.

இடையில் சைரன் ஒலிக்க அமைச்சரின் காரோடு பல கார்கள் பவனி. கடைசியில் வந்த கார் மீது ஏதோ ஒரு கல், பிறகு ஒரு செருப்பு வீசப்பட, போலீஸ் தடியடி . கலவரம். கட்சியினர் ஒட கீழே விழுந்த பையன் மிதிபட்டு அடிபட்டு மயங்க, அவன் பிளாஸ்க் உடைந்து சிதற மயக்கம் தெளிந்து எழுந்த பையன் பார்க்கும் இடத்தில ஒற்றைச் செருப்பு . அவன் பார்த்த பாணியில் புது செருப்பு .

அதை அவன் கையில் எடுக்க , ஆசையோடு பார்க்க ,அவன் மேல் விழுகிறது போலீஸ் கை. 'செருப்பு வீசியவன் இவன்தான்' என்று அடித்து இழுத்துச் செல்கிறது.. அழுது புலம்பும் தாயை ,போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லிப் போக, இவள் சென்று பார்க்கும் காட்சி. சட்டை ட்ரவுசர் உரியப்பட்டு ஜட்டியோடு அமர்ந்திருக்கும் பையனைப் பார்த்து இவள் கதற. அப்போது அங்கே வருகிறார் ஒரு பெரிய மனிதர். சமூக ஆர்வலர். வக்கீல்.

'இவனை ஏன் கிரிமினல் குற்றவாளி போல் நடத்துகிறீர்கள்' என்று அவர் இன்ஸ்பெக்டரிடம் கேட்க, இன்ஸ்பெக்டர் , 'இவன் கையில் செருப்பு

இருந்ததை பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள் ' என்று சொல்ல , 'பொய் சாட்சி' என்று கோபப்பட்டு செருப்பை வாங்கிப் பார்த்து . 'இது நம்பர் ஒன்பது . இந்தப் பையன் கால் அளவு அல்ல. இப்படி பொய்யாக கூப்பிட்டு வந்து இவனைக் கொடுமைப்படுத்தியதற்கும் . பொய்ச்சாட்சி சொன்னதற்கும் உங்கள் அனைவர் மேலும் கேஸ் போடப் போகிறேன், வந்து ஏறுங்கள் ஜீப்பிலே கோர்ட்டுக்கு போகலாம் 'என்று அதட்ட , இன்ஸ்பெக்டர் குரல் தணிந்து ,' பையனைக் கூட்டிப் போகச் 'சொல்ல, தாய் அந்தப் பெரிய மனிதருக்கு நன்றி சொல்ல, கிளம்பும் போது பையனிடம் சொல்கிறா ள் அம்மா ,. 'செருப்பு வாங்கிடுவோமடா' . அவன் சொல்கிறான். 'வேண்டாமம்மா. பிளாஸ்க் உடைஞ்சு போச்சு , அதை வாங்குவோம்' என்று சொல்ல உருக்கமாக முடிகிறது கதை.

------

கதையின் வேகமும் விறுவிறுப்பும் அது ஏற்படுத்தும் கோபமும் இரக்கமும் கதையைப் படிக்கும் போது உங்களால் உணர முடியும். என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியரின் எழுத்து நடைக்கு சில உதாரணங்களை மட்டும் இங்கே சொல்லுகிறேன்.

---------------

'வீட்டு வேலை , கட்டிட வேலை எனப் பல அவதாரங்கள் எடுத்ததில் எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதால் , இறுதியாக அவள் செய்த துணிவான முடிவுதான். இந்தச் சொந்தப் பலகாரக் கடை .பேர் தான் பலகாரக் கடையே தவிர பெரும்பாலும் விற்பது டீ, காபி தான் '


'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் ' என்ற சிலப்பதிகார வரிகளுக்கு எடுத்துக்காட்டான அந்த அபலைப் பெண்ணின் அவல நிலை இங்கே அவளுக்குக் 'காட்டுவது டீக்கடையை '., ஆசிரியரின் இந்த வரிகளில் கதையின் ஆரம்பத்தில் .

---

அடுத்து


'அந்தக் கடையில் கஸ்டமர்கள் குறைவுதான் . என்றாவது கம்பெனி அல்லது ப்ராஜெக்ட் அதிகாரிகள் மீட்டிங் என்றால் கூடுதலாக இருபத்தைந்து கப் டீ விற்பனை ஆகும். காவேரியின் கடையில் வாங்கிய டீயை 'உங்களுக்காகவே ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்தது ' என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்ட்ராக்டர் பாராட்டுக்களை வாங்கிக் கொள்வது காவேரிக்குத் தெரியாது. '


'பொய்மையும் வாய்மை இடத்த' என்ற குறளை ' பொய்மையும் வாழ்க்கை நடத்த ' என்று புரட்டிப் போடும் சிலரின் செயல்கள் இந்த வரிகளில்.


----------------

அடுத்து , கறுப்புக் கொடி காட்ட அங்கே கூட்டம் சேர்வதையும் அங்கே நேரம் கடப்பதையும், ஒரு அழகான உவமை மூலம் ஆசிரியர் இணைத்துக் காட்டும் இந்த இடம்.

'வெயிலைப் போலவே கூட்டமும் அதிகம் ஆகிக் கொண்டு இருந்தது . '

சூடான உவமை. நேரமும் சூடு ஏறுகிறது. கூட்டத்தின் சூடும் ஏறுகிறது . சூடான டீ விற்பனையும்ஏறுகிறது. மிகவும் ரசித்த உவமை,காட்சியின் உணர்ச்சியைக் கடத்தும் உவமை.

-----

அடுத்து அந்தத் தாயின் மன உணர்வையும் மகனின் மன உணர்வையும் எடுத்துக் காட்டும் வரிகள்

மகன் டீ விற்கும் வேகத்தைப் பார்த்து மகனின் சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்., பின் ஏன் இந்தப் பையனுக்குப் படிப்பு ஏறவில்லை

என்ற வருத்தமும் எழுந்தது காவேரிக்கு .

ஒரு தாயின் ஏக்கம் இங்கே தெரிகிறது .

'தின்றத்துக்கு ஏதாவது பண்ணு, அதையும் வித்துடலாம்

. கணபதியின் கண்ணில் செருப்பின் விலைசீட்டு மின்னி மறைந்தது. '

மகனின் செருப்பு ஆசை பளிச்சிடும் வேகம் இங்கே .

இந்த இடத்தில் ஆசிரியர் எங்கள் ராம்நாட் வட்டார வழக்குப் பேச்சு ' தின்றத்துக்கு ' மிகவும் பொருத்தமாக போட்டுள்ளார். ரசித்த இடம்.

--

இப்போது தொடர்கிறது விறுவிறுப்பான காட்சிகள்.

ஸ்பீக்கர் வைத்த டிராபிக் க்ளீயரன்ஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் போலீசாரின் வேகம் அதிகம் ஆனது . கம்பித் தடுப்புக்குப் பின்னால் போகாதவர்களைப் பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள் . களேபரமாகியது. அடி தாளாமல் தொண்டர்கள் ஓட, சிலர் அந்தத் தடுப்பின் மேல் விழுந்து மறுபக்கம் இருப்பவர்களை அது நசுக்கியதால் , வேதனையினால் அவர்கள் கத்த ஆரம்பித்தார்கள் . 'ஐயோ என் பிளாஸ்க் 'என கணபதி கத்த அவன் மேல் விழுந்த போலீஸ் அடியால் அவன் மயங்கி தரையில் விழுந்தான் . கிழிந்த கருப்புகொடிகள். அறுந்த செருப்புகள். ஒரு போர் நிகழ்ந்த இடம் போல் மாறி இருந்தது அந்த இடம்.

நான் சில வரிகளை மட்டும் இங்கே சொல்லி உள்ளேன். நீங்கள் முழுவதும் . படிக்கும் போது அந்தக் காட்சியின் வேகத்தை அவர் வரிகளில் கொண்டு வந்திருப்பதை வியந்து படிப்பீர்கள் .

---

தொடர்ந்து மயக்கம் தெளிந்து அவன் பக்கத்தில் கிடந்த புதிய செருப்பைக் கையில் எடுத்துப் பார்க்க , அவனை அறைந்து இழுத்துச் செல்லும் போலீஸ்.

---

போலீஸ் ஸ்டேஷன் நிகழ்ச்சிகளும் தத்ரூபம்..

அடுத்து அங்கே வருபவர். மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, சிறுகுழந்தை நலம், பெண் பாதுகாப்பு, சமூக நீதி ' விஷயங்களுக்காக வழக்கு போடும் சமூக ஆர்வலர். வக்கீல் .


ஒவ்வொரு சட்ட பாயிண்டுகளாக எடுத்துச் சொல்லி இறுதியில் 'சட்டங்களைத்தான் மறந்துட்டீங்க , சொந்தமா சிந்திக்கிறதையும் மறந்துட்டீங்களா ' என்று அந்தச் செருப்பு ஒன்பதாம் நம்பர் செருப்பு என்பதையும் இவன் சிறுபையன் என்பதையும் சுட்டிக்காட்டி அதட்ட , அந்த இன்ஸ்பெக்டர் 'மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார்' என்று கெஞ்சி , பையனை விடுவிக்க , தாய் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு செல்லும்போது மகனிடம் ' நாளைக்கு உனக்கு செருப்பு வாங்கலாம் ' என்றதும் அவன் பொறுப்போடு ' பிளாஸ்க் வாங்கலாம் , செருப்பு வேண்டாம் ' என்று பதில் அளிக்க ,மகன் கணபதியைக் கட்டி அணைத்துக் கொண்டார் காவேரி என்று முடிகிறது கதை.

-------------

நான் மேலே விவரித்தது போல் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வர வைக்கும் வர்ணனைகள், வசனங்கள். அதோடு சேர்ந்து அந்தத் தாயின் பாசமும், மகனின் செருப்பு ஆசையும் , அரசியல்வாதிகள் , காவல் துறையினர் , சமூக ஆர்வலர்கள் போன்றவர்களால் அவர்கள் எப்படிப் பாதிக்கப் படுகின்றனர் , பாதுகாக்கப் படுகின்றனர் என்றவற்றையும் விவரித்து , காலத்தின் கண்ணாடியை நம் பக்கம் திருப்பி வைத்துக் காட்டி, 'முடிவில் நல்லதே நடக்கும்' என்ற நம்பிக்கையும் கொடுத்து முடியும் சிறப்பான கதை.


என் மனதைக் கடித்த இந்தச் ‘ செருப்பு’ படிக்கும் போது உங்கள் மனதையும் கடிக்கும்


ஆசிரியர் ரமணன் அவர்கட்கு வணக்கங்கள். அழகியசிங்கருக்கு நன்றிகள். அனைவர்க்கும் நன்றி. வணக்கம்.


-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

என் சோகக் கதையைக் கேளுங்க - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு

 என் சோகக் கதையைக் கேளுங்க  - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு  

------------------ 


நன்றி சுந்தரராஜன்  சார் வணக்கம் நண்பர்களே. என்  சோகக் கதையைக்   கேளு தாய்க்குலமே ,தந்தைக்  குலமே, தாத்தாக்  குலமே, பாட்டிக்  குலமே  இது என்னுடைய பாட்டைப் பற்றி நான் பட்ட பாடு  .


 இந்த இசை புதிது குழு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே  நான் பாத்ரூம் லே  பாடுவேன் . அந்தச்  சுவர்கள் எதிரொலிச்சு எக்கோ வோடு சேர்ந்த என்னுடைய பாட்டைக்  கேக்குறப்போ எல்லாம்  எனக்கு எஸ்பிபி சார்  குரல் தான் ஞாபகம் வந்துச்சு.  நானும் எஸ்பிபி மாதிரியே  பாடுறேன் அப்படிங்கற ஒரு பிரமை  கூட வந்துச்சு.


 அதனால என்ன ஆச்சுன்னா பேஸ்புக்ல,  முகநூல்ல என்னோட பாட்டுகளை எல்லாம் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம அப்பவே போட ஆரம்பிச்சுட்டேன்.  எனக்கு முகநூலில் நூத்துக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள் .ஆனா எனக்கு அந்தப் பாட்டுக்களுக்கு எல்லாம் ஒரு லைக் கூட வரல . ஒரு மாசம் கழிச்சு ஒரே ஒரு லைக் வந்துச்சு . அது யார் போட்டதுன்னா அது நான் போட்டது தான்.  ஆனா நம்ம ஒரு லைக்குக்கு  மேல போட முடியாது என்கிறதுனால அந்த ஒரு லைக் தான் ஒரு மாசமா ஓடுச்சு என்னோட ஒவ்வொரு பாட்டுக்கும்.  


அடுத்த மாசம் இன்னொரு லைக் வந்துச்சு. அது யாருன்னு பார்த்தா என்னோட  மனைவியோட லைக். அவங்களுக்கு முகநூல் உருவாக்கிக் கொடுத்தது நான் தாங்க. ஆனா அவங்க அதுக்கு பிறகு வீட்டு வேலைகள் ஜாஸ்தி இருந்ததினால் பேஸ்புக் பக்கமே வரல .அப்புறம்  எப்படி இன்னொரு லைக் வந்துச்சுன்னு கேக்குறீங்களா. நீங்க புத்திசாலி .கரெக்டா யோசிச்சுட்டீங்க.  ஆமாங்க அவங்களோட லாகின் பாஸ்வேர்டை உபயோகப்படுத்தி நானே போட்டேன் இன்னும் ஒரு லைக் .


இது ஏன் இந்த லைக் குக்காக இவ்வளவு அலையுறேன்னு கேக்குறீங்களா. இந்த பேஸ்புக்ல என்னோட பிரெண்ட்ஸ் சில பேருக்கு 100 லைக்கு க்கு  மேல வருதுங்க .என்னென்னமோ போடுறாங்க. எல்லாத்துக்கும் லைக். அந்த ஒரு போட்டியினால் தாங்க நானும் இது மாதிரி ஏங்க ஆரம்பிச்சேன் ஆனா ஒண்ணும் நடக்கல .அப்பத்தான்  இன்னும் ஒரு ஐடியா வந்தது.


 சரி இது பேஸ்புக் ரொம்ப கூட்டமா   இருக்கு .நம்ம வாட்ஸ் அப்ல ஒரு சின்ன குரூப் ஆரம்பிச்சு அதுல பாட்டுக்கள் எல்லாம் போட்டா அந்த நண்பர்கள் எல்லாம் லைக் பண்ணுவாங்க .அப்படின்னு ஒரு நம்பிக்கை. இதை  நம்ம அழகிய சிங்கர் கிட்ட சொல்லி இசை புதிது அப்படின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமா அப்படின்னு கேட்டேங்க அவருதான் புதுசு புதுசா ஆரம்பிக்கிறதுல  ரொம்ப ஆர்வமானவராச்சே.


 'ஓகே ஆரம்பிங்க' அப்படின்னுட்டாரு, ஆனா ஒரு கண்டிஷன் போட்டு .'சினிமா பாட்டு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்காதுங்க. கர்நாடிக் மியூசிக் தெரிஞ்ச யாரையாவது ஒருத்தரை சேர்த்து கிட்டு  ஆரம்பிங்க' அப்படின்னாரு .அப்பத்தான் நான் குவிகம்  குரூப்ல நம்ம சாந்தி மேடத்தோட  பாட்டு கேட்ட ஞாபகம் வந்துச்சு


அவங்க கிட்ட கேட்ட உடனே அவங்க உடனே சரி ன்னுட்டாங்க . நாங்க ஒரு பத்து பேரு தினசரி கர்னாடிக்  பிராக்டிஸ் பண்றோம் .ஆரம்ப காலத்தில் இருந்தே கத்துக்கிட்டவங்க . நான் எல்லாரையும் சேர்த்து விடுறேன்.நாங்க பாடுகிறோம், ன்னு வந்தாங்க .ஆனா எல்லாம் ஒரே கர்நாடிக் பாட்டா இருந்துச்சா அவங்களுக்குள்ள லைக் போட்டுக்கிட்டாங்க .என்னோட சினிமா பாட்டு, ஒரே ஒரு பாட்டுக்கு ஒரே ஒரு லைக் தான் வந்துச்சு . அது சாந்தி மேடத்தோடது.வேற வழியில்லே அவங்களுக்கு. 


 என்னடா பண்றது, அப்படின்னு யோசிச்சு அப்புறம் ஒரு ஐடியா வந்துச்சு. நமக்கு தெரிஞ்ச சினிமா பாடல் நண்பர்கள், இந்தியன் பேங்க் ,  நவீன விருட்சம் குரூப்ல இருக்குற வேற  சில பேர் எல்லாம் அதில் சேர்த்து விட்டேன் . இனிமேலாவது நமக்கு லைக் போடுவாங்களா அப்படின்னு நினைச்சா ,   அவங்க  என்ன பண்ணாங்கன்னா எல்லாரும் காலைல வந்து  எல்லாம் ஒரு சினிமா பாட்டு போடுவாங்க .அப்புறம் காணாம போயிருவாங்க.  மறுநாள் காலையில தான் வந்து இன்னொரு பாட்டு போடுவாங்க.  மத்தவங்க பாட்டுகளை கேட்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை . நான் காலையில, மத்தியானம் ,சாயந்திரம் எல்லாம் போய்ப்  பார்க்கிறது. யாராவது ஒரு லைக் போட்டு இருக்காங்களா. ஒரு லைக் கூட கிடையாது. 


இதை பத்தி யோசிக்கறதுக்காக பக்கத்துல அண்ணா  பார்க்குன்னு  ஒண்ணு  இருக்கு கோடம்பாக்கத்தில். அங்கே போய் உட்கார்ந்து அப்படியே கண்ண மூடிக்கிட்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் .அப்பத்தான் திடீர்னு ஒரு ஞானோதயம் வந்துச்சு .இந்த புத்தருக்கு போதி மரத்தடியில் வந்த மாதிரி,  எனக்கு ஒரு புளிய மரத்தடியில் வந்துச்சு. எப்படி வந்துச்சுன்னு தெரியாது.  புளியமரத்து மேல பிசாசுகள் தான் இருக்கும்னு சொல்லுவாங்க.  இந்த பிசாசுகள்னால வந்த ஞானோதயமா   என்னன்னு தெரியல. ஆனா வந்திருச்சு .  


ஆஹா மத்தவங்க பாட்டு கேட்டு  நம்ம ஒரு லைக் கூட போடவில்லை .அப்புறம் எப்படி மத்தவங்க நமக்கு லைக் போடுவாங்க அப்படிங்கிறது மனசுல உரைச்சுச்சு .  மறுநாள் பார்த்தேன் 


கர்நாடிக் மியூசிக் பாட்டு ஏதாவது ஒண்ணு  ரெண்டு கேட்கிறது .சினிமா பாட்டு ஒண்ணு  ரெண்டு கேட்கிறது.  இவர்களுக்கு எல்லாம் லைக் போடுறது அப்படின்னு ஆரம்பிச் சேன். என்ன ஆச்சரியம் . நான் போட்ட லைக் போட்டவங்க எல்லாம் திருப்பி எனக்கு லைக்  போட ஆரம்பிச்சிட்டாங்க .அதான் ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல .ஒரு கன்னத்தில் அடிச்சா இன்னொரு கன்னத்தை காமிங்க .சே சே அது பொருத்தமான பழமொழி இல்ல.     ஏதோ ஒண்ணு. பேச்சிலே ஏதாவது பழமொழி சொல்லணும்னு சில பேரு பொருத்தமே இல்லாத பழமொழி எல்லாம் சொல்லிட்டு அவங்களே ரசிப்பாங்களே,  அது மாதிரி முயற்சி பண்ணினேன். சும்மா. பதிலுக்கு பதில் அப்படிங்குற மாதிரி, அந்த நாலு பேராலே  எனக்கு நாலு லைக் வந்துச்சு. திருப்பி இன்னும் ஒரு நாலு பேருக்கு போட் டேன். இன்னும் ஒரு நாலு லைக் எனக்கு. இப்படி  கொஞ்சம் கொஞ்சமா லைக் கூடிக்கிட்டே போச்சு.


ஆனா  என்ன பிரச்சனையாச்சுன்னா .  நான் இந்த பாட்டு கேக்கிறதாலே  வேற எந்த வேலையும் பண்ண முடியல. காய்கறி வாங்கிட்டு வாங்கன்னு வீட்ல சொன்னா, கொஞ்சம் இருமா ஒரு பாட்டு கேட்டு லைக்  போட்டு வந்துடறேன், அப்படின்னு சொல்ல  வெறுத்துப் போயிட்டாங்க  வீட்டுல . பெரிய பிரச்சனை ஆயிடுச்சு . சாப்பாட்டுக்கே  பிரச்சனை வந்துடும் போல இருந்துச்சு . 


சரின்னு அப்புறம்,  கொஞ்சம் பாதி கேட்கிறது, லைக் போடுறது அப்படிங்கற மாதிரி ஆரம்பிச்சேன்.  நம்ம  ஒரு பத்தடி பாஞ்சா நம்ம நண்பர்கள் நூறு அடி பாய ஆரம்பிச்சிட்டாங்க.   நானாவது பாதி கேட்டு போட்டேன் .அவங்க எதுவும்  கேட்காமலே போட ஆரம்பிச்சிட்டாங்க. 20 , 30 லைக் வர ஆரம்பித்தது . அவங்க  கேக்காம  போட்டாங்கன்னு எப்படி எனக்குத் தெரியும்கிறீங்களா .இப்ப நான் ஒரு மூணு நிமிஷம் பாட்ட அப்ப தாங்க போட்டு இருப்பேன். அடுத்த செகண்ட் ஒரு லைக் சிம்பல் வந்துரும் கேட்டிருக்க முடியுமா. சொல்லுங்க. ஏதோ ஒரு நட்புக்காக , பாசத்துக்காகப் போடுறாங்கன்னு புரிஞ்சு போச்சு. 


இன்னும் சில நண்பர்கள் ஒரு படி முன்னாலேயே போயிட்டாங்க. அதாவது என்ன பண்ணாங்கன்னா' சார் நாங்கள் லைக்கோட இருக்கோம் . பாட்டு சீக்கிரம் போடுங்க . நாங்க லைக் போட்டுட்டு போகணும்,. எங்களுக்கு வேற வேலை எல்லாம் இருக்கு. நாங்க போகணும் '.


'என்னப்பா இவ்வளவு அவசரமா கேக்குறீங்க'ன்னு சொல்லிட்டு நான் ஏதாவது பாட்டு போடுவதற்கு முன்னாலேயே ஒருத்தர்  ஒரு கமெண்ட் போட்டுருவாங்க . 'நீங்க பாடப்போகும் பாட்டு மிகவும் அருமையாக இருந்தது' அப்படின்னு ஒரு கமெண்ட் . இந்த மாதிரி ஒரு போலியான பொய்யான லைக்குகளும் பாராட்டுக்களும் வந்து குவிய ஆரம்பிச்சுச்சு.


 அப்புறம்தான் தெரிஞ்சுச்சு அவங்க அவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு .வராங்க, பாடுறாங்க. சில பாட்டு கேக்குறாங்க. இந்த லைக் கமெண்ட் இதெல்லாம் வேணும்னு நம்ம எதிர்பார்க்க கூடாது. நமக்கு ஏதோ பாடணும்னு  ஆசையா இருக்கு .பாடுவோம் அத்தோடு நிறுத்திக்கணும் .


எனக்கு 100 லைக் வேணும், 200 லைக் வேணும். என் பாட்ட பாராட்டணும் இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு, நம்ம குரூப்ல போனோம்னா இந்த மாதிரி போலித்தனமான லைக்குகளும் பாராட்டுக்களும் தான் வந்து குவியும் .அதுவும் சில பேரு என்ன பண்ணுவாங்கன்னா நம்மள பத்தி ஒண்ணு  எழுத மாட்டாங்க ஆனா நம்ம பாட்டுக்கு ரிப்ளை பண்ணி இருப்பாங்க.


 'பாட்டு நல்லா இருந்துச்சுன்னு ' ஒரு வரி. நம்ம எப்படி பாடினோம்னு விபரம் இருக்காது. அந்தப்  பாட்டைப் பற்றிய தங்களுடைய அறிவை வெளிப்படுத்திகிறதுக்காக என்னோடு பாட்டை  உபயோகப்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துச்சு.  ஏன்னா சும்மா அதைப்   பத்தி எழுத முடியாது. இல்லையா .ஏதாவது ஒரு பாட்டோட  கனெக்ட் பண்ணித்  தானே எழுதணும். அதுக்கு என்னோட பாட்டு தான் கிடைச்சுச்சு .


சில பேரு நான் ஒரு பாட்டு போட்டிருப்பேன். அவங்க இன்னொரு பாட்டைப் பத்தி பாராட்டி எழுதியிருப்பாங்க.  இப்படி எல்லாம் சில பேரு பயங்கர டெக்னிக்கோடா நமக்குப்   பாராட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்காக நாம பாடுவதை நிறுத்த முடியுமா. நம்ம விருப்பத்துக்கு நம்ம சந்தோஷத்துக்கு பாடுவோம் .எப்பவாவது சில பேரு கேப்பாங்க . நிஜமான பாராட்ட போடுவாங்க. 


நானும் அதுமாதிரி தாங்க        போடுறேன். சுருக்கமா சுவையாக,  அவங்க பாடுறதைப்  பற்றி போடுறேன். அதே மாதிரி சில பேரு போடுறாங்க. அது போதும் நமக்கு .quality  is  more  important  than  quantity . இல்லையா. நம்ம பாட்டும் சரி, பாராட்டும் சரி , quality யோட  இருக்கட்டுமே .


அதிகப் பாராட்டும் லைக்கும் quality யோட  வரட்டும்.  அதுவரைக்கும் பொறுமையாகக்  காத்திருப்போம் காத்திருப்பது தானே வாழ்க்கை. 


 நன்றி வணக்கம்


--------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English   


புதன், 11 பிப்ரவரி, 2026

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை 

------------


நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே.

இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான். 


நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் சடலங்களும், திரைசீலைக்குப் பின்னே தெரியும் வெட்டி எடுக்கப்பட்ட இரு கால்களும் , அதை ஒரு மர்ம பங்களாவாக ஆக்கி , அதை விற்க முயலும் அதன் சொந்தக்கார பரம்பரைப் பணக்கார வியாபாரிக்கு இறுதியில் அதை சொன்ன விலைக்கு பாதி விலைக்கு விற்க வைக்கிறது. 


இந்த வியாபாரியும் பல தகிடுதத்தங்கள் செய்து வியாபாரத்தில் செழித்துக்கொண்டிருப்பவன். இதில் பாதி விலைக்கு அதை வாங்கி அதே விலைக்கு மற்றொருவரிடம் ஒத்திக்கு விடும் இன்னுமொரு, மோசக்காரனுக்கு மோசக்கார வியாபாரியைக் காட்டி , அந்த பங்களாவின் மர்மத்தையும் முடிச்சவிழ்த்து விடுகிறார், தனக்கே உரிய பாணியில் ஆசிரியர்.


 மர்மக் கதைகளின்  முடிவைச்  சொல்லக் கூடாது என்பதால் , ஆசிரியரின் எழுத்து நடையில் நான் ரசித்த சில இடங்களை மட்டும் சொல்லி ,முடிவை கதையில் , அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில்  படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் ஒரு வரியில் காட்டப்பட்ட , பக்கத்து மெடிக்கல் கல்லூரியுடன் தொடர்பு  படுத்தி கதை முடிகிறது  என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் . 

-----------

ரசித்த அந்த வர்ணனைகள். முதலில் அந்த நாயக்கர் பங்களா பற்றிய வர்ணனை . 


பங்களாவா அது. அரண்மனை. இருபது செண்டு நிலத்தில் மூவாயிரம் சதுர அடியில் நறுக்கி எடுத்த மைசூர்பாகு    துண்டம் போல் உருண்ட தூணும் தேக்கு ஜன்னலுமாய், சுற்றிவர வாதநாராயண மரமும் வேப்ப மரமும் குசலம் விசாரிக்க, தாஜ் மகால் கணக்குக்கு ஜொலிக்கும் அந்த கட்டடத்திற்கு ஒரு காலத்தில் அசாத்திய கிராக்கி . 


வாசல் புறம் கன்னங்கரேலென்று ஈட்டியாய்க் குத்தி நிற்கிற வாசல் கதவு .  தாண்டி உள்ளே நுழைந்தால் கார் நிற்கும் போர்டிகோ வரை பவழ மல்லிகைச் செடிகளின் குபீர் வளர்ச்சி + வாசம் . 


எங்கும் இல்லாதபடி நாலு மனோரஞ்சித செடி மரங்களுக்கு அந்த பங்களா பிரசித்தம் . பின்பக்கம் தோட்டம் . ஜாதிக்கு ஒரு மரம் சத்தியமாய் உண்டு . ஆங்கிள் கிராதியில் ஊஞ்சல் . இடுப்புயர  சிமெண்டு திட்டில் , சின்ன சைஸ் பிள்ளையார் அன்று அந்தத் தோட்டம் கூட அட்டகாச ரகம்.  

-----

முன்னும் பின்னுமாக கண்முன் கொண்டு வருகிறார்  நாயக்கர் பங்களாவை ஆசிரியர். அந்த இயற்கைக் சூழலோடு கூடிய அந்த அழகிய பங்களாவில் போய்க் குடியேற விரும்புவோர்க்கு அடுத்து வரும் வர்ணனைகள் அதிர்ச்சி அளிக்கும்.

------

ஊரு சுடுகாட்டில் புதைக்கப்படும் கன்னிப்பெண்களின் பிணங்கள் பங்களாவில் இருந்து தோண்டி எடுக்கப்படுவது பங்களாவின் பிரதான மர்மங்களில் ஒன்றாகி விட்டது . ஒருமுறை வீட்டின் உள் ஒரு திரைசீலைக்குப் பின்னே இரண்டு கால்கள் தெரிந்தன .  'யார் அது ஒளிந்து கொண்டு ' ... திரைச் சீலையை விலக்கி விட்டுப் பார்த்தால் இதயத்தைத் தீக்குச்சியால் உரசின மாதிரி ஒரு வலி அங்கே யாரும் இல்லை.   வெட்டி எடுத்த இரண்டே இரண்டு கால்கள் மட்டும் தனியாக. 

----

ஒரே நிமிடத்தில் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுகிறார் ஆசிரியர் தன் எழுத்துத் திறமையால் . இயற்கை அழகோடு நம்மை வா வா என்று ஏங்க வைத்த அந்த நாயக்கர் பங்களா , இப்போது பேய்ப் பங்களாவாக மாறி நம்மைப் போ போ என்று ஓட வைக்கிறது . 


இதற்கு நடுவில் அந்த பங்களாவை விற்க முயலும் சொந்தக்கார வியாபாரியின் வியாபார மோசடிகள்  

----------------

அப்பளம் போடுபவனில் இருந்து யமஹாவை விற்பவன் வரை புரணி கிளப்பி விட்டு சாய்த்த அவன் தந்திரங்கள் .

‘அந்த அப்பளத்திலே மரத்தூள் மாவு கலந்திருக்கு , லிவருக்கு ஆபத்து ,’

‘அந்த யமஹாவா, அது பன்னி அடிச்ச வண்டிங்க , வாங்கினா தொலைஞ்சிங்க .’ 


‘பிஸினஸிலே இதை எல்லாம் பண்ணிதான் பெரிய ஆள் ஆயிருக்கேன்’ என்று பெருமை அடித்துக் கொள்ளும் அவனுக்கு  ஆப்படிக்க மோசக்காரனுக்கு ஒரு மோசக்காரன் வந்து , இப்போது அவனது அந்த பங்களாவை விற்க முடியாத நிலை. 

இறுதியில் பாதி விலைக்கு அதை விற்க முடிவு செய்ய , அதை வாங்குபவன் அந்த மோசக்காரனுக்கு மோசக்காரன். இப்போது அவிழ்கிறது  அந்த பேய்பங்களாவின் மர்ம முடிச்சுகள் . நீங்கள் கதையில், அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில்   படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் . 

----

மிகவும் விறுவிறுப்பான கதை. மர்மத்துக்கு மேல் மர்மம் . அதற்கு நடுவில், ‘நாம் மற்றவரை ஏமாற்றினால் , நம்மை ஏமாற்றவும் ஒருவன் வருவான்’ என்ற ஒரு சிந்தனையையும் கிளப்பி விட்டு கதை முடிகிறது. 

இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மர்மக் கதைகளும் ஆன்மீகக் கதைகளும் எழுதி புகழ் பெற்றவர். ஆன்மிகம் கலந்த அவரது மர்மத் தொடர் கதையான   ' ஆனந்த விகடனில்  வெளிவந்த ' இறையுதிர் காடு  ' நம்மால் மறக்க முடியாத ஒன்று. இந்த ' இந்த நாயக்கர் பங்களா கதை மர்மமும் வியாபார தந்திரமும் கலந்த வித்தியாசமான கதை. படித்து ரசியுங்கள். வாய்ப்புக்கு நன்றி அழகியசிங்கர் . 


-------------நாகேந்திர பாரதி 

  

My Poems/Stories/Articles in Tamil and English  


வெள்ளி, 30 ஜனவரி, 2026

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை 

-------------

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.


தூங்கி எழுந்ததும் அவன் மனது தெளிவாக இருந்தது. இன்னும் எத்தனை நேரத்திற்கு இது இப்படி என்று தெரியாது என்று நினைத்தபோது சிரிப்புதான் வந்தது . அதற்குள் அவளிடம் பேசி விட வேண்டும். ஏன் நேற்று அப்படி .


என்ன நடந்தது நேற்று. வழக்கம் போல் தான். ஆனால் பவுர்ணமியாய் இருந்த அவள் முகம் இருண்டு அமாவாசையாய் ஆனது எப்படி. .அவன் இருப்பது , குடியில் மூழ்குவோரைத் திருத்தும் மனநல மையம். அவள் தினசரி இரவு அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அவர்கள் மனம் அறிந்து சிறிது நேரம் பேசி மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பொது நல சேவகி. அவள் வேலை பார்ப்பது ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் பொது மேலாளராக. இரண்டு குழந்தைகளின் தாய். கணவனும் அரசாங்க அலுவலகத்தில் உயர் அதிகாரி . இந்த சேவை அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு பொது நல சேவை .


அவளின் பரிவான பேச்சுக்கும், கனிவான முகத்திற்கும் காத்துக் கிடக்கும் குடி நோயாளிகள் பல பேர். அவளின் அன்பான பேச்சில் ஒரு தாயின் ஆதரவைக் கண்டு , திருந்திய வாழ்வு பெற்றுத் திரும்பிய பலர் ,அந்த மையத்திற்கு மனைவி குழந்தையோடு வந்து நன்றி சொல்லிச் சென்றதை அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு விதத்தில் குடி நோயாளிகள் மன நோயாளிகள்தானே . அந்தக் கருகிய திரியைக் கண்டு பிடித்துத் திருகி விட்டு ஏற்றி விட்டால் தீபம் எரியத் தொடங்கி விடும்தானே.


அவனை அவன் பெற்றோர் கொண்டு வந்து விட்டுச் சென்று ஒரு மாதம் ஆகிறது . அவனது படிப்பில் அவர்களின் தீவீர கண்டிப்பும் கண்காணிப்பும் தான் அவனை இந்தப் பழக்கத்தில் கொண்டுவந்து சேர்த்ததை அவர்கள் உணரவில்லை.அவள் உணர்ந்து விட்டாள் முதல் முயற்சிப் பேச்சிலேயே. இரவு நேரத்தில் உடலை முறுக்கி அவன் குடிக்கு ஏங்கித் துடிக்கும் போது வரும் அவளின் ஆழ்நிலைப் பேச்சுக்கள் அவனை உள்ளே உள்ளே இழுத்துச் சென்று அவனை அமைதிப்படுத்தித் தூங்கப் செய்யும். அவள் செல்வாள்.


அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று அவன் உள் மனதிற்குள் அவனை அவள் அழைத்துச் செல்ல, அவன் பேசும்போது வந்த வார்த்தைகள். ‘ உமா டீச்சர் ,I need you , நீங்கள் எனக்கு வேண்டும் ‘ . இந்த வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் அவள் தடுமாறியது அவளின் இன்னொரு முகத்தை இழுத்து வர கடுமையான வார்த்தைகள் அவளிடம் இருந்து . ‘ரமேஷ் , எழுந்திரு ‘ . விழித்த அவன் கண்டது அவளின் கோப முகம். அதிர்ந்தவனிடம் , ஒரு நிமிடம் தன் நிலை உணர்ந்து சமாளித்த அவள் அவனைத் தூக்க நிலைக்குக் கொண்டு சென்று விட்டு, கிளம்பினாள்.


மறுநாளும் வந்தாள் தெளிவான முகத்தோடு. அவனின் குடிநிலை மட்டும் அல்ல, அவன் வயதின் அந்தக் குழப்ப நிலையையும் தன் முயற்சியால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு. அவளின் சேவையின் சவால்கள் அவளை உற்சாகப் படுத்துவது அவளின் இன்னொரு முகம்

-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 7 ஜனவரி, 2026

வழியனுப்புதல் -2025 - கவிதை

 வழியனுப்புதல் -2025   - கவிதை 

——-------

( கவிதை வனம் குழுவில் ) 

வழக்கம் போல் நீயும்

வந்தாய் போகிறாய்


ஒவ்வொரு நாளிலும்

பிறந்தாய் இறந்தாய்


உருளும் காலத்தின்

ஓட்டம் தானே நீ


வழியனுப்பும் வரவேற்பும்

தேவையா உனக்கு


உன் வழியில் நீ

எம் வழியில் யாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


காகிதக் கப்பல் - கவிதை

 காகிதக் கப்பல் - கவிதை 

-----------

(கவிதை வனம் குழுவில் ) 


பிஞ்சு விரல்களின்

வளைவுக் கலை ஒன்று


ஓடும் நீரின்

உணர்வைப் புரிந்தபடி


வளைந்தும் நெளிந்தும்

செல்லும் பாதையில்


கல்லும் முள்ளும்

இடறும் நேரம்


கண்ணீர் விடுகின்ற

காகிதக் கிழிசலின்


உணர்வைப் புரிந்து

உருகும் குழந்தை


வாழ்க்கை ஓட்டத்தில்

கலக்கும் போது


காகிதக் கப்பலை

நினைத்துப் பார்க்கும்


காலம் வராமல்

கடவுள் காக்கட்டும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


இல்லத் தலைமை - கவிதை

 இல்லத் தலைமை - கவிதை 

----------------

(கவிதை வனம் குழுவில் ) 


இல்லத் தலைமை

இருவர்க்கும் பொதுவென்போம்


மையல் அறையிலும்

சமையல் அறையிலும்


குழந்தை வளர்ப்பிலும்

பெரியோர் பொறுப்பிலும்


வீட்டுப் பணியிலும்

நாட்டுப் பணியிலும்


இருவர் பங்கும்

இணையாய் இருந்திட்டால்


வீடும் சிறக்கும்

நாடும் செழிக்கும்


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நிதி மேலாண்மை - கவிதை

 நிதி மேலாண்மை - கவிதை 

---------------------

( கவிதை வனம் குழுவில் ) 


பணம் மட்டுமா நிதி

பாதுகாக்கவும் பகிர்ந்து வாழவும்


பாசமும் நிதிதான்

பண்பும் நிதிதான்


அன்பும் நிதிதான்

ஆற்றலும் நிதிதான்


அத்தனை நிதியையும்

ஆவலாய்ச் சேர்ப்போம்


சேர்த்ததைக் கொடுத்து

வாழ்வதே மேலாண்மை

---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நரை கூடும் காதல்-கவிதை

 நரை கூடும் காதல்-கவிதை 

-------------------

(கவிதை வனம் குழுவில் ) 


கண்ணோரம் நெளிகின்ற கோடுகளில்

காதலின் வரிகளின் கவிதை


இதழ்களில் உலர்ந்திட்ட ஈரத்தில்

காதலின் சொற்களின் பக்குவம்


கால்களின் மெதுவான நடையிலோ

காதலின் அமைதியின் கவர்ச்சி


கைகளில் புடைத்திட்ட நரம்புகளில்

காதலின் ரத்தத்தின் ஓட்டம்


கூந்தலில் கலந்திட்ட வெண்மையில்

காதலின் கூடிய தூய்மை


-----------------நாகேந்திரபாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


தெரு விளக்கு - கவிதை

 தெரு விளக்கு - கவிதை 

----------------

( கவிதை வனம் குழுவில் ) 


பாதைக்கு மட்டும் அல்ல

படிப்புக்கும் வெளிச்சம் நான்


என் அடியில் படித்தவர்கள்

எத்தனை பேர் உச்சியிலே


ஓரத்தில் இருந்தாலும்

உதவிக்கு நான் உண்டு


இருட்டுக்கும் திருட்டுக்கும்

என்றுமே எதிரி நான்


மின்சார உயிர் ஊட்டிக்

காப்பதுவோ உம் பொறுப்பு


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

  கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை  புதிது நிகழ்வு  ----------------- 'புதுச் செருப்பு காலைக் கடிக்கும்' என்பார்கள...