வெள்ளி, 30 ஜனவரி, 2026

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை 

-------------

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.


தூங்கி எழுந்ததும் அவன் மனது தெளிவாக இருந்தது. இன்னும் எத்தனை நேரத்திற்கு இது இப்படி என்று தெரியாது என்று நினைத்தபோது சிரிப்புதான் வந்தது . அதற்குள் அவளிடம் பேசி விட வேண்டும். ஏன் நேற்று அப்படி .


என்ன நடந்தது நேற்று. வழக்கம் போல் தான். ஆனால் பவுர்ணமியாய் இருந்த அவள் முகம் இருண்டு அமாவாசையாய் ஆனது எப்படி. .அவன் இருப்பது , குடியில் மூழ்குவோரைத் திருத்தும் மனநல மையம். அவள் தினசரி இரவு அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அவர்கள் மனம் அறிந்து சிறிது நேரம் பேசி மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பொது நல சேவகி. அவள் வேலை பார்ப்பது ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் பொது மேலாளராக. இரண்டு குழந்தைகளின் தாய். கணவனும் அரசாங்க அலுவலகத்தில் உயர் அதிகாரி . இந்த சேவை அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு பொது நல சேவை .


அவளின் பரிவான பேச்சுக்கும், கனிவான முகத்திற்கும் காத்துக் கிடக்கும் குடி நோயாளிகள் பல பேர். அவளின் அன்பான பேச்சில் ஒரு தாயின் ஆதரவைக் கண்டு , திருந்திய வாழ்வு பெற்றுத் திரும்பிய பலர் ,அந்த மையத்திற்கு மனைவி குழந்தையோடு வந்து நன்றி சொல்லிச் சென்றதை அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு விதத்தில் குடி நோயாளிகள் மன நோயாளிகள்தானே . அந்தக் கருகிய திரியைக் கண்டு பிடித்துத் திருகி விட்டு ஏற்றி விட்டால் தீபம் எரியத் தொடங்கி விடும்தானே.


அவனை அவன் பெற்றோர் கொண்டு வந்து விட்டுச் சென்று ஒரு மாதம் ஆகிறது . அவனது படிப்பில் அவர்களின் தீவீர கண்டிப்பும் கண்காணிப்பும் தான் அவனை இந்தப் பழக்கத்தில் கொண்டுவந்து சேர்த்ததை அவர்கள் உணரவில்லை.அவள் உணர்ந்து விட்டாள் முதல் முயற்சிப் பேச்சிலேயே. இரவு நேரத்தில் உடலை முறுக்கி அவன் குடிக்கு ஏங்கித் துடிக்கும் போது வரும் அவளின் ஆழ்நிலைப் பேச்சுக்கள் அவனை உள்ளே உள்ளே இழுத்துச் சென்று அவனை அமைதிப்படுத்தித் தூங்கப் செய்யும். அவள் செல்வாள்.


அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று அவன் உள் மனதிற்குள் அவனை அவள் அழைத்துச் செல்ல, அவன் பேசும்போது வந்த வார்த்தைகள். ‘ உமா டீச்சர் ,I need you , நீங்கள் எனக்கு வேண்டும் ‘ . இந்த வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் அவள் தடுமாறியது அவளின் இன்னொரு முகத்தை இழுத்து வர கடுமையான வார்த்தைகள் அவளிடம் இருந்து . ‘ரமேஷ் , எழுந்திரு ‘ . விழித்த அவன் கண்டது அவளின் கோப முகம். அதிர்ந்தவனிடம் , ஒரு நிமிடம் தன் நிலை உணர்ந்து சமாளித்த அவள் அவனைத் தூக்க நிலைக்குக் கொண்டு சென்று விட்டு, கிளம்பினாள்.


மறுநாளும் வந்தாள் தெளிவான முகத்தோடு. அவனின் குடிநிலை மட்டும் அல்ல, அவன் வயதின் அந்தக் குழப்ப நிலையையும் தன் முயற்சியால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு. அவளின் சேவையின் சவால்கள் அவளை உற்சாகப் படுத்துவது அவளின் இன்னொரு முகம்

-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 7 ஜனவரி, 2026

வழியனுப்புதல் -2025 - கவிதை

 வழியனுப்புதல் -2025   - கவிதை 

——-------

( கவிதை வனம் குழுவில் ) 

வழக்கம் போல் நீயும்

வந்தாய் போகிறாய்


ஒவ்வொரு நாளிலும்

பிறந்தாய் இறந்தாய்


உருளும் காலத்தின்

ஓட்டம் தானே நீ


வழியனுப்பும் வரவேற்பும்

தேவையா உனக்கு


உன் வழியில் நீ

எம் வழியில் யாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


காகிதக் கப்பல் - கவிதை

 காகிதக் கப்பல் - கவிதை 

-----------

(கவிதை வனம் குழுவில் ) 


பிஞ்சு விரல்களின்

வளைவுக் கலை ஒன்று


ஓடும் நீரின்

உணர்வைப் புரிந்தபடி


வளைந்தும் நெளிந்தும்

செல்லும் பாதையில்


கல்லும் முள்ளும்

இடறும் நேரம்


கண்ணீர் விடுகின்ற

காகிதக் கிழிசலின்


உணர்வைப் புரிந்து

உருகும் குழந்தை


வாழ்க்கை ஓட்டத்தில்

கலக்கும் போது


காகிதக் கப்பலை

நினைத்துப் பார்க்கும்


காலம் வராமல்

கடவுள் காக்கட்டும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


இல்லத் தலைமை - கவிதை

 இல்லத் தலைமை - கவிதை 

----------------

(கவிதை வனம் குழுவில் ) 


இல்லத் தலைமை

இருவர்க்கும் பொதுவென்போம்


மையல் அறையிலும்

சமையல் அறையிலும்


குழந்தை வளர்ப்பிலும்

பெரியோர் பொறுப்பிலும்


வீட்டுப் பணியிலும்

நாட்டுப் பணியிலும்


இருவர் பங்கும்

இணையாய் இருந்திட்டால்


வீடும் சிறக்கும்

நாடும் செழிக்கும்


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நிதி மேலாண்மை - கவிதை

 நிதி மேலாண்மை - கவிதை 

---------------------

( கவிதை வனம் குழுவில் ) 


பணம் மட்டுமா நிதி

பாதுகாக்கவும் பகிர்ந்து வாழவும்


பாசமும் நிதிதான்

பண்பும் நிதிதான்


அன்பும் நிதிதான்

ஆற்றலும் நிதிதான்


அத்தனை நிதியையும்

ஆவலாய்ச் சேர்ப்போம்


சேர்த்ததைக் கொடுத்து

வாழ்வதே மேலாண்மை

---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நரை கூடும் காதல்-கவிதை

 நரை கூடும் காதல்-கவிதை 

-------------------

(கவிதை வனம் குழுவில் ) 


கண்ணோரம் நெளிகின்ற கோடுகளில்

காதலின் வரிகளின் கவிதை


இதழ்களில் உலர்ந்திட்ட ஈரத்தில்

காதலின் சொற்களின் பக்குவம்


கால்களின் மெதுவான நடையிலோ

காதலின் அமைதியின் கவர்ச்சி


கைகளில் புடைத்திட்ட நரம்புகளில்

காதலின் ரத்தத்தின் ஓட்டம்


கூந்தலில் கலந்திட்ட வெண்மையில்

காதலின் கூடிய தூய்மை


-----------------நாகேந்திரபாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


தெரு விளக்கு - கவிதை

 தெரு விளக்கு - கவிதை 

----------------

( கவிதை வனம் குழுவில் ) 


பாதைக்கு மட்டும் அல்ல

படிப்புக்கும் வெளிச்சம் நான்


என் அடியில் படித்தவர்கள்

எத்தனை பேர் உச்சியிலே


ஓரத்தில் இருந்தாலும்

உதவிக்கு நான் உண்டு


இருட்டுக்கும் திருட்டுக்கும்

என்றுமே எதிரி நான்


மின்சார உயிர் ஊட்டிக்

காப்பதுவோ உம் பொறுப்பு


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


திங்கள், 22 டிசம்பர், 2025

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை 

-----------

(கவிதை  வனம் குழுவில் ) 


துளிர்த்த விதையும்

செடியாய் மாறி


மரமும் ஆகிக்

கனியைக் கொடுக்கும்


கனியைப் கொடுத்துக்

களைத்த பின்னே


மரமும் விறகாய்

மாறிப் போகும்


துளிர்த்த பயிரும்

சாய்ந்த பின்னே


அறுத்துப் போட்டு

உதிர்த்த நெல்லைப்


பிரிந்த வைக்கோல்

மாட்டின் உணவு


சக்கை ஆனபின்

சாவே இயற்கை


வாழ்க்கைத் துளிரும்

வளர்ந்து சாயும்


இயற்கை நியதியை

ஏற்று வாழ்வோம்


------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English


தோள் கொடுக்கும் தோழமை - கவிதை

 தோள் கொடுக்கும் தோழமை - கவிதை 

-----------------

(கவிதை  வனம் குழுவில் ) 


பள்ளியில் இருந்தே

பழகி வந்ததால்


நல்லதும் கெட்டதும்

நடத்திப் பார்த்ததால்


சிரிப்பும் அழுகையும்

சேர்ந்து செய்ததால்


பரிசும் உதையும்

பங்கு போட்டதால்


அவனை நானும்

என்னை நானும்


ஒன்றாய் நினைத்து

உறவு கொண்டதால்


வருடம் ஆனாலும்

வயது போனாலும்


தோள் கொடுப்பான்

தோழன் என்றும்


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


காலக் கண்ணாடி - கவிதை

 காலக் கண்ணாடி - கவிதை 

-------------------

(கவிதை  வனம் குழுவில் ) 


காலக் கண்ணாடியின்

கோலங்கள் பலவிதம்


இலக்கியக் கண்ணாடியில்

எழுத்தின் மாற்றம்


தலைமுறைக் கண்ணாடியில்

கலாச்சார மாற்றம்


அரசியல் கண்ணாடியில்

ஆட்சியின் மாற்றம்


மக்களும் சமூகமும்

மாறும் தோற்றத்தை


காலக் கண்ணாடி

காட்டும் விதத்திலே


வலியும் புரிகிறது

வழியும் தெரிகிறது


--------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


மண் வாசனை - கவிதை

 மண் வாசனை - கவிதை 

——-

(கவிதை  வனம் குழுவில் ) 


விழுந்து புரண்ட

பிறந்த மண்


எழுந்து ஓடிய

பிறந்த மண்


உள்நாடும் வெளிநாடும்

உழைத்துக் களைத்து


திரும்பி வந்து

சேர்ந்த மண்


எரிப்பதோ புதைப்பதோ

இங்கேதான் என்று


வந்து சேர்ந்த

சொந்த ஊரின்


மண் வாசத்தில்

தாயின் பாசம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை  ------------- எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு...