வெள்ளி, 26 ஜூலை, 2024

பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை 

--------------------------------

பூக்களைப் பறிக்காதீர்கள்

என்று சொல்லாதீர்கள்


இவை பறிக்க வேண்டிய

பூக்கள்


பறித்துக் கசக்க வேண்டிய

பூக்கள்


கசக்கி முகர வேண்டிய

பூக்கள்


முகர்ந்து உணர வேண்டிய

பூக்கள்


உணர்ந்து பகிர வேண்டிய

பூக்கள்


ஆம் , இவை

புத்தகப் பூக்கள்


———-நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 25 ஜூலை, 2024

கூரைத் தீயில் குஞ்சுகள் - கவிதை

 கூரைத் தீயில் குஞ்சுகள் - கவிதை 

-----------------------------

கூரைத் தீயின் ஓரச் சிவப்பு

வேடிக்கை காட்டியது

வினாடி நேரம்தான்


விறுவிறென்று மேலேறி

விழுந்ததும் தெரிந்தது

தீ சுடும் என்று


தோல் எரிந்து கரியாகி

துவளும் போது


பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்

அப்பா நினைப்போடும்

பாடம் சொல்லித் தரும்

அம்மா நினைப்போடும்

தோளில் தூங்க வைக்கும்

தாத்தா நினைப்போடும்

பக்கத்தில் படுத்திருக்கும்

பாட்டி நினைப்போடும்


துடிதுடித்தபடியே

தூங்கிப் போனோம்


-------------------------நாகேந்திர பாரதி

பல வருடங்களுக்கு முன்பு இதே ஆடி முதல் வெள்ளி அன்று கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் கருகிய அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி


My Poems/Stories in Tamil and English 


ஆவி அணைஞ்சுச்சா - கவிதை

 ஆவி அணைஞ்சுச்சா - கவிதை 

----------------------------------------

குனிஞ்சு படிக்கிறப்போ

குப்புன்னு மின்னுச்சா

நிமிந்து பாத்தாக்க

நெருப்புன்னு தெரிஞ்சுச்சா


ஓடக் கிளம்புறப்போ

ஓலைத்தீ தடுக்குச்சா

சுத்திக் கரும்புகையா

கண்ணைக் கருக்குச்சா


கத்திக் குரலெடுக்க

தொண்டை அடைச்சிருச்சா

தண்ணித் தாகத்தில்

நாக்கு வறண்டுடுச்சா


வீட்டாரின் நினைப்பெல்லாம்

விக்கலாய் வந்துச்சா

வெளையாண்ட இடமெல்லாம்

கண்ணுக்குள் ஓடுச்சா


பக்கத்துப் பையன் மேல்

பாழும் தீ பத்துச்சா

பயந்து ஓடுறப்போ

பாதை மறந்துடுச்சா


என்னமோ மேல் விழுந்து

உடம்பெல்லாம் எரிஞ்சுச்சா

'ஆ ஊ ' ன்னு அலறிட்டு

ஆவி அணைஞ்சுச்சா


----------------------நாகேந்திர பாரதி

பல வருடங்களுக்கு முன்பு இதே ஆடி முதல் வெள்ளி அன்று கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் கருகிய அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி

-------------


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 18 ஜூலை, 2024

'தளம்' - பத்திரிகை விமரிசனம்

 'தளம்' -  பத்திரிகை விமரிசனம் 

---------------------------------------------------------


'தளம் ' ஆசிரியர் நண்பர் பா ரவி அவர்களுடன் , முன்பு புத்தகக் கண்காட்சியில் அழகியசிங்கர் அவர்களின் நவீன விருட்சம் ஸ்டாலில் பேசிக்கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்டது .


' தளம் ' கலை இலக்கிய இதழ் மூலம் . சமூக, கலை , இலக்கிய உலகின் நுட்பமான நவீன விஷயங்களை ஆராய்ந்து வாசகர்கட்கு அறிமுகப்படுத்த வேண்டும் '

என்று அவர் சொன்னது இந்த ஜூன் மாத காலாண்டு இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரைகள் மூலம் வெளிப்படுவது தெரிய வந்தது. ஒவ்வொரு காலாண்டு இதழ் படிக்கும் போதும் இதே உணர்வு ஏற்படுவது உண்டு.


இந்த இதழில்

காஃப்காவின் படைப்புலகம் பற்றிய அழகிரிசாமி அவர்களின் கட்டுரைகள்

சுதிர் கக்கரின் உளவியல் ஆய்வுகள் பற்றிய முரளி அவர்களின் கட்டுரை

ஆலீஸ் மன்றோவின் சிறுகதைகள் பற்றிய ரவீந்திரன் அவர்களின் கட்டுரை

லால்சிங் தில்லின் கவிதைகள் பற்றிய லாவண்யா அவர்களின் கட்டுரை

அலெக்சாண்டர் சுக்ரோவின் திரைப்பட உலகு பற்றிய ரவீந்திரன் அவர்களின் கட்டுரை

ஜெயகாந்தன் பற்றிய அம்ஷன் குமார் அவர்களின் கட்டுரை

மற்றும் நமது நண்பர்கள் பலரின் புதுமைக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று

குவிந்து கிடக்கும் இந்த இலக்கியச் சோலையில் பயணம் செய்வது அறிவுக்கு இன்பம் பயக்கும் அழகிய பயணம்.


உதாரணத்திற்கு ஓரிரு வரிகள் இரா முரளி அவர்களின் சுதிர் கக்கரின் உளவியல் ஆய்வுகள் கட்டுரையில் இருந்து


'பெருவாரியான இந்தியர்கள் ஆன்மீகத்தின் பால் நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டுள்ளதற்குக் காரணம் , ஜோதிடர்கள், துறவிகள் மற்றும் மந்திரவாதிகள் போன்றோரே. உளவியல் பகுப்பாய்வு முறை மூலம் அவற்றின் அறியப்படாத பகுதிகளை வெளிப்படுத்த இயலும் என்பது கக்கரின் நிலைப்பாடு .'


'இந்திய ஆன்மீகத்தில் பேசப்படும் சூக்கும சரீரம் என்பது மூளை செயல்பாட்டின் மிக நுணுக்கமான செயல்பாடே. அதைத் தாண்டி ஆன்மா என்ற ஒன்று இல்லை என்பதே நிலைப்பாடு '


'ராமகிருஷ்ணரின் சீடராய் இருந்த மகேந்திர நாத் குப்தா என்பவரின் பதிவுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீக அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார் கக்கர் '


'தரிசனங்கள், ஒளி அனுபவங்கள், உடலுக்கு வெளியே ஆன்மா சஞ்சாரம் செய்வது அவற்றின் உள்ளடக்கம் என்ன, அர்த்தங்கள் என்ன என்பதைப் பகுத்தறிவது தேவை என்று கக்கர் கூறுகிறார்.


ராமகிருஷ்ணரை வைத்து ,ஆன்மீக அனுபவங்கள் என்ற அனுபவ வெளியை மூளையின் செயல்பாட்டுக்குள் கொண்டு வந்து விளக்கியுள்ளார் கக்கர் .


அதே போல் , இந்தியக் குருமார்கள் எப்படி உளவியல் நிபுணர்களாக மாறி , சிஷ்யர்களின் துயர் துடைக்கின்றனர் என்பதை உளவியல் பகுப்பாய்வின் மூலம் விளக்குகின்றார். பூசாரிகளாய் இருந்த குருநாதர்கள் வழிகாட்டிகளாகி, புனிதர்களாகி , கடவுள் என்று கருதும் சூழ்நிலைக்கு எப்படி மாறினார்கள் என்றும் விளக்குகிறார். எப்படி இந்தக் குருமார்கள் உளப்பிரச்சினை கொண்டவர்களைக் கவர்கின்றனர் என்றும் விளக்குகின்றார்,


இவருடைய புத்தகங்கள் பற்றிய விரிவான உரையாடல்கள் ஆன்மீகம் பற்றிய சரியான புரிதலை உருவாக்கும் ' என்று கட்டுரையை முடிக்கிறார் முரளி அவர்கள்.


நான் எடுத்துக்காட்டியுள்ள வரிகள் சாம்பிள் தான். நடுவில் அவர் எடுத்துக்காட்டும் கக்கரின் உளவியல் ஆய்வு பற்றிய பல ஆன்மீக வாதிகளின் நடவடிக்கைள் பற்றிய எடுத்துக்காட்டுகள் படிப்பவர்க்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அளிக்கலாம். மொத்தத்தில் அறிவு பூர்வமான ஆராய்ச்சி என்று புரிகிறது. கக்கரின் ஆய்வுகளை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. படித்து சிந்திக்கலாம்.


இந்த இதழில் உள்ள அத்தனை படைப்புகளும் , படித்துக் கடந்து போய் விடக் கூடியவை அல்ல, சிந்திக்க விரும்புவோர்க்குச் சிந்தனைச் செல்வங்கள். படித்து மகிழலாம் .


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 16 ஜூலை, 2024

சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரைக் கட்டுரை  - கதை புதிது நிகழ்வு 

---------------------------------


நன்றி அழகியசிங்கர். வணக்கம் ரெஜினா மேடம் . வணக்கம் நண்பர்களே.

ரெஜினா சந்திரா அவர்களின் ரோலர் கோஸ்டர் சிறுகதை .

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும்

கீழல்லார் கீழல்லவர்

என்று ஆசிரியர் எடுத்துக்காட்டும் திருக்குறளுக்கு ஏற்ற சிறுகதை.


வசதியால் மேல்வர்க்கம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போரின் எண்ணங்கள் கீழ் நிலையிலும் ,வசதியால் கீழ்வர்க்கம் என்று நாம் நினைப்போரின் எண்ணங்கள் மேல் நிலையிலும் இருப்பதை எடுத்துரைக்க , பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஒரு ஆட்டோ ட்ரைவரையும் , அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் இருவரையும் வைத்துப் பின்னப்பட்ட கதை.


இந்த அறிவுரைக்கும் மேலாக குழந்தைகளின் மன ஓட்டத்தை அப்படியே சித்தரித்துக் காட்டும் விதத்தில் கதையின் சிறப்பு இன்னும் கூடுகிறது .


ரோலர் கோஸ்டர் என்ற தலைப்புக்கு ஏற்ப, இங்கும் அங்கும் மேலும் கீழுமாக தம் குழந்தைகளின் குறும்புத் தனங்களால் ஆட்டி வைக்கப்படும் அந்த அம்மாக்களின் நிலைமை ரோலர் கோஸ்டருக்குள் ஏறி அவதிப்பட்ட நம்மில் பலருக்கும் புரியும் . புரியாதவர்க் கும் புரிய வைக்கும் கதை.


சரி, கதைக்கு வரலாம்.


ப்ரியாவின் மகனும், அனிதாவின் இரண்டு மகள்களும் படிக்கும் பள்ளி அவர்கள் வீட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருப்பதால், அவர்களைக் கூட்டிச் சென்று திரும்பக் கூட்டி வர, சங்கர் என்ற ஆட்டோக்காரர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று அந்த ஆட்டோக்காரர் அண்ணனுக்கு விபத்து என்பதால், அவர் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து திரும்பக் கூட்டி வர இயலாத நிலை என்று தகவல் வந்ததும் , ப்ரியாவும் அனிதாவும் கிளம்புகிறார்கள் பள்ளிக்கு .


போகும் வழியில் அவர்கள் பேசிக் கொண்டு செல்வது இது .

'போன வாரம் ஆட்டோ கட்டணத்தை 500 ரூபாய் ஏத்திக் கேட்டான், நம்ம முடியாதுன்னு சொன்னதாலே இப்படி ஆரம்பிச்சுட்டான். ரெம்ப தொந்தரவு கொடுத்தா ஆளை மாத்த வேண்டியதுதான்' என்று தாங்களாகவே ஆட்டோக்காரன் பொய் சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனைப் பற்றி மட்டமாகப் பேசிக் கொண்டு செல்கிறார்கள்.


ஆச்சு. பள்ளிக்கூடம் வந்தாச்சு. இவர்களைப் பார்த்தவுடன், குழந்தைகளுக்கு குதூகலம். ' அய்யா அம்மா வந்தாச்சு ' என்று அவர்கள் ஓடி வரும்போதே அம்மாக்களுக்கு ' ரோலர் கோஸ்டர் ' ஆரம்பித்தாய் விட்டது. படிக்கும் நமக்கு , நம் குழந்தைப் பருவத்திற்கே செல்லும் அனுபவம் கிடைக்க ஆரம்பித்தாய் விட்டது கதையில் .


ஆம், அந்த மழலைகளின் மனதிற்குள்ளே நுழைந்து அவர்கள் பேசும் பேச்சு, செய்யும் சேட்டை எல்லாம், நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர்.


'அம்மா அதுதான் எங்க புது தமிழ் மிஸ் , இதுதான் நேஹா, இதோ பிரணவ், அவனுக்கு பர்த்டே , அது தான் கலர் டிரஸ் போட்டிருக்கான் ' . குழந்தைகளின் குதூகலம் நமக்கும் தொற்றுக் கொள்கிறது .


இப்போ, அவர்களுக்குத் திரும்புறதுக்கு ஆட்டோ புக் பண்ணப் பார்த்தா ஒண்ணும் கிடைக்கலை, உடனே அனிதாவோட பொண்ணு ' அம்மா , நான் ஒண்ணு சொல்லட்டுமா, நாம மெட்ரோ ரெயில்லே வீட்டுக்குப் போலாமா ' அப்படின்னு ஆசையோடு கேட்கிறா .


‘ஹே சூப்பர் ஐடியா , நான் மெட்ரோலே போனதே இல்லை , சூப்பர் ஐடியா , ப்ளீஸ், ப்ளீஸ் ' மற்ற ரெண்டு வாண்டுகளும் சேர்ந்துடுச்சு .

பிரியா ' ஆட்டோவிலே அஞ்சு பேர் சேர்ந்து போக முடியாது , மெட்ரோவிலே செலவும் கம்மி , சரி போகலாம் ' ன்னு சொன்னதும், உடனே ஒரு வாண்டு ஓடிப்போய் அதோட பிரென்ட் நேஹா கிட்ட சொல்லுச்சு


' நேஹா, நேஹா, நாங்க மெட்ரோவிலே வீட்டுக்குப் போறோமே ' .


போற வழியிலே , ஐஸ் கிரீம் கடை. எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே செல்பீ வேற எடுத்து அப்பாக்களுக்கு அனுப்பியாச்சு


ஆச்சு. மெட்ரோ ஸ்டேஷன் வந்தாச்சு . உள்ளே போனதும். ஒரு வாண்டு ' அம்மா, அம்மா , இது ஏர்போர்ட்டாமா , அந்த சீட்டை அந்த மெஷின்லெ நாந்தான் வைப்பேன் '

இன்னொன்னு ' நான்தான் வைப்பேன் ' தகராறு .


ஹய்யா, ஸ்டேஷன் ஜில்லுன்னு இருக்கு, தண்டவாளமே காணோம் , ட்ரெயின் எங்கே நிக்கும் '


அம்மா, அம்மா, நான் அந்த எஸ்கலெட்டரிலே மேலே ஏறிப் போயி திரும்பி படி வழியா கீழே இறங்கி வரவா, எனக்குப் பயமா கிடையாதும்மா .' மூணு .வாண்டுகளும் மாத்தி மாத்திப் பேச்சு .


அந்த வழவழப்பான நடை மேடையிலே ஓடி சர் சர்ன்னு நின்னு போன் போட்டோவுக்கு போஸ் வேற . ரெயில் வந்தாச்சு. உள்ளே ஏறி உட்கார்ந்தாச்சு . ஆனால் கேள்விகள் நிக்கலை


' அம்மா நானும் நிக்கவா , அந்த அக்கா மாதிரி, மேலே பிடிச்சுக்கிட்டு தொங்கவா ,


அங்கே ஏன் அந்த சீட்டு மடிச்சிருக்கு .

கேமெரா படம் இருக்கு, கமெரா எங்கேம்மா


ட்ரைனுக்குள் சாப்பிட்டா பனிஷ்மெண்ட்டா , ஏன்


ஒரு செல்பி எடுங்கம்மா '


அம்மா , தினசரி மெட்ரோலியே போலாமா


இருக்கையிலே மேலே ஏறி இறங்குறது , ' ஜாலி , ஜாலி ' ன்னு கூச்சல் .


நடுவில் ஒரு நிறுத்தம். அம்மாக்கள் ரெண்டு பேரும் ' ஏய் , கம்பியைப் பிடி, விழுந்துடுவே, பாப்பாவைப் பிடி, வெளியே ஓடிடப் போறா '.


'அடுத்த நிறுத்தத்தின் பெயர் , செனாய் நகர், செனாய் நகர் ' அப்படின்னு ஒரு வாண்டு கூடவே சேந்து கத்துது .


இதுக்குள்ளே அதுகளை ஒழுங்கு படுத்த ' ஏய் , இந்தத் திருக்குறள் படி ' .என்றாள் ப்ரியா . 'எனக்குத் தெரியுமே , எங்க பாடத்தில் இருக்கே, ஆனா , ஏன் இதுக்கு கரடி படம் போட்டிருக்கு ' என்ற கேள்விக்கு பதில் இல்லை ப்ரியாவிடம் .


இப்போ இவங்க இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தாச்சு . உள்ளே இருக்கிறவங்க எல்லாம், இந்தக் குழந்தைகளுக்கு டாடா சொல்ல , இதுகளும் ' டாட்டா டாட்டா , ன்னு சொல்லிகிட்டே இறங்குச்சுங்க .


'ப்ளீஸ் மைண்ட் தி கேப் , மைண்ட் தி கேப் ' கிக்கீ , கிக்கீ ' ன்னு அந்த மெஷின் குரல் மாதிரி இதுகளும் பேசிக்கிட்டே இறங்க, எல்லோருமே லிஃப்டுக்கு உள்ளே நுழைஞ்சாச்சு .


உள்ளே இருக்கிறவங்க டிரஸ் கலரைச் சத்தம் போட்டு ' ரெட் , ப்ளூ , க்ரீன் ' ன்னு சொல்லிக்கிட்டே வெளியே வந்து ' சுவற்றில் இருக்கும் போட்டோக்களை பார்த்து ' ஏ, இந்தப் பாப்பா, நான் டிவியில் பார்த்திருக்கேன். அம்மா, அம்மா, ஆஸ்பத்திரியலே போயி, எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வாங்கிட்டு வாம்மா ' . மாற்றி மாற்றி மூன்று வாண்டுகளின் சப்தம்.


நடுவே நகரும் படிக்கட்டில் ஒண்ணு ஏற ' ஓடாதே, ஓடாதே , விழுந்துடப் போறே ' என்று பிரியா கத்த , அந்த படிக்கட்டு நிற்க, எல்லோரும் முன்னே சரிய , பிரியா பெருவிரலில் நல்ல அடி . அப்பத்தான், ஒரு வாண்டு எமெர்ஜென்சி பட்டனை அமுக்கி இருக்கிறது தெரிய வந்துச்சு .


பிரியாவுக்கு பயம், மயக்கம் வர்ற மாதிரி பிபி எகிறது . 'போலீஸ் வந்து பிடிக்கப் போறாங்க ' என்று அலற அனிதா சமாதானப்படுத்தி, வந்த செக்யூரிட்டியிடம் , 'சின்னப்பையன், தவறுதலா அமுக்கிட்டான் ' ன்னு சொல்ல ' அவர் ' சரி , நான் பார்த்துக்கிறேன் ' ன்னு நகர, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தா போதும்னு ஆயிடுச்சு ரெண்டு அம்மாக்களுக்கும்.


சரியான ரோலர் கோஸ்டு ரைடு தான் அவங்களுக்கு. படிக்கிற நமக்கு , அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து , குதூகலமாய்ப் பயணம் செய்த உணர்வு . பாவம் அந்த அம்மாக்கள் .


வெளியே வந்தா, 'அய்யா, நம்ம ஆட்டோ அங்கிள் நிக்கிறாங்க ' என்று வாண்டுகள் குதிக்க ' என்னப்பா , ஆஸ்பத்திரியில் அண்ணனைப் பார்க்கப் போகலியா '

'இல்லேம்மா, அது பேர்க் குழப்பம், என் அண்ணன் இல்லே. உடனே ,ஸ்கூலுக்குப் போனேன், நீங்க மெட்ரோவில் போயிட்டதா சொன்னாங்க. அதான், இந்த வீட்டுப் பக்க ஸ்டாப்பில் வந்து நிக்கிறேன். ஏறுங்க, புள்ளைங்களை மடியில் வச்சிக்கிருங்க ' என்றதும் அம்மாக்கள் இருவருக்கும் மெட்ரோ ரெயிலில் பார்த்த குறள் ஞாபகம் வந்தது.


மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும்

கீழல்லார் கீழல்லவர்


என்று முடிகிறது கதை.


அந்த அம்மாக்களுக்கு குறளின் அர்த்தம் புரிந்தது. ஆட்டோக்காரரின் குணமும் புரிந்தது. தங்கள் தவறும் புரிந்தது. நமக்கு , குழந்தைகளோடு குழந்தைகளாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது . மெட்ரோ ரெயிலில் ஏற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டு விட்டது . வரட்டுமா. நன்றி .


----------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 12 ஜூலை, 2024

முடிச்சுகள் -சிறுகதை

 முடிச்சுகள் -சிறுகதை 

———-

அவளுக்கு உள்ளுக்குள் குழப்பம் , அந்தக் கனவை நினைக்கும் போது . உண்மைதானே . தான் வெட்ட நினைக்கும் அந்தக் கட்டு , தானே போட்டுக் கொண்ட கட்டுத்தானே .


அவனைக் காதலித்துத்தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொய்த்த அந்த அலுவலக ஆடவர்கள் பார்வையில் இவன் பார்வையில் ஒரு வித்தியாசம் . அதில் ஒரு மயக்கமும் ஏக்கமும் இருந்தது அவளை ஈர்த்தது .


மதிய நேர உணவு இடைவேளையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் காண்டீனில் , இவளும் இவள் தோழியும் இருக்கும் இடத்தைத் தேடி வந்து இவளின் தோழியுடன் பேசியபடியே சாப்பிடும் பழக்கம் அவனுக்கு . புதிதாய் வந்தவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து நெருக்கம் ஆகி விட்ட தோழி அவள் . அவள் கணவனும் பக்கத்து செக்சனில் இருந்து வந்து சேர்ந்து கொள்வான் . அவர்கள் மூவரும் ஏற்கனவே நெடுநாள் பழக்கம் .


ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு அவர்கள் பேசுவது இவளுக்குப் புதுமையாக இருக்கும் . இவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி . படித்ததும் லேடீஸ் காலேஜ் . அண்ணன் தவிர மற்ற ஆண்களுடன் , உறவினர் ஆண்களுடன் கூட பேச கூச்சம் .


‘என்ன உங்க பிரெண்ட் பேசுறத்துக்குக் கூட காசு கேட்பாங்க போலிருக்கு ‘என்றுதான் அவன் ஆரம்பித்தான் . மெலிதான புன்னகையுடன் அவள் ‘ அதெல்லாம் இல்லைங்க ‘ என்றபோது வந்தது அவனின் முதல் கவிதை அம்பு ‘ ஒரு ரோஜாவில் இருந்து உதிர்ந்தது பனித்துளி ஒன்று ஜில்லென்று ‘ . அன்று இரவு முழுக்க அவள் மனதில் ஓடியது அது . ‘நான் ரோஜாவா , என் வார்த்தை பனித்துளியா ‘ . நடு இரவில் எழுந்து சென்று நைட்டியோடு கண்ணாடியில் பார்த்து ‘ இப்போது என்ன சொல்வான் ‘ என்று நினைத்துப் பார்த்தாள் .


மறு நாள் முதல் அவளிடம் மாற்றம் . பக்கத்து சீட் தானே . ஏதோ சந்தேகம் கேட்பது போல் அவனிடம் அடிக்கடி பேச , புரிந்து கொண்டது அவன் மட்டும் அல்ல , சற்றே தள்ளி இருந்த அவள் தோழியும் தான் . இப்போது அவன் கவிதைகள் நேரடியாக அவளிடம் பரிமாற்றம் . கவிதை வளர்த்தது அந்தக் காதலை .


ஒரு நாள் அவள் தோழி அவளிடம் சொன்னாள் . ‘ அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் . உன் பெற்றோரிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசி விட்டானாம் . ‘ . அப்போது ஒலித்த போனில் அவள் அப்பா தகவலை உறுதி செய்தார் மதுரையில் இருந்து .


‘ பையன் பேசினாரும்மா . நம்ம ஆளுங்கதான் . சாதி முதற்கொண்டு எல்லா விஷயமும் உன் ஆபிஸ் ரெக்கார்டில் இருந்து தெரிஞ்சு தான் விரும்புறாரு . விபரமான பையன் தான் . எங்களுக்குப் பிடிச்சிருக்கு . உனக்கு ஓகே தானே ‘ என்றபோது ,  அவளைச் சுற்றிப் போட்ட முதல் முடிச்சு அவளுக்குத் தெரியவில்லை .


அடுத்தடுத்த முடிச்சுகள் தொடர்ந்தன . முதல் இரவு அன்று விலகிய அவன் சொன்னது . ‘பாதுகாப்பான நாள் பார்த்து வைத்துக் கொள்ளலாம். குழந்தைச் செலவு இப்போது வேண்டாம் . இருவர் சம்பளத்தில் முதலில் தங்கை திருமணம் . அடுத்து வீடு வாங்க வேண்டும் . மூன்று வருடம் கழித்துதான் முதல் குழந்தை . குழந்தையின் வளர்ப்புச் செலவுக்கும் வேண்டிய சேமிப்பு செய்த பிறகு . எதுவும் பிளான் பண்ணி இருந்தால் தான் சரியாக இருக்கும் ‘ என்றவன் சிரிப்பு ரசிக்கவில்லை முதன் முதலாக அவளுக்கு , முதல் இரவு அன்றே .


தொடர்ந்த நாட்களில் இறுகிய முடிச்சுகள் .

‘ இந்த ஸ்லீவ்லெஸ் லாம் போட வேண்டாமே . ‘

‘நைலெக்ஸ் நல்லாவா இருக்கு , காட்டன் புடவைதானே கச்சிதமா இருக்கு ‘

‘லிப்ஸ்டிக்கெல்லாம் தேவையா ‘


எதிர்க்க நினைக்கும் போதெல்லாம் . அவன் நெருங்கி அவள் காதருகே கிசுகிசுக்கும் கவிதை வரிகளில் வெளிப்படும் அவளின் அழகின் பெருமிதம்,

சுற்றிய முடிச்சுக்களை சேர்த்துக் கொண்டு அணைக்கச் சொல்லும் .


ஆனால் இன்றையக் கனவு , முடிச்சுகளை வெட்ட முயற்சிக்கும் கத்தியின் சுழற்சியோடு அவள் . ‘அவள் நானா . என் உள்மன வெளிப்பாடா இது ‘ என்று அவள் குழம்பும்போது , அவள் பக்கத்தில் படுத்திருந்த அவன் புரண்டு ‘ உன் உதட்டோர மச்சத்தின் ஓரத்தில் என் ஏக்கத்தை இறக்கி வைக்க இடம் கொடுப்பாயா ‘ என்று கேட்க இடம் கொடுத்தாள் , இறுகியது முடிச்சு .  கழன்றது கத்தி .


———நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சனி, 6 ஜூலை, 2024

போகும் பாதையெங்கும் - கவிதை

 போகும் பாதையெங்கும் - கவிதை 

————

போகும் பாதையெங்கும்

பூவும் இருக்கலாம்

முள்ளும் இருக்கலாம்


முள் குத்தும் வலியைத்

பூ தடவி ஆற்றலாம்

புண் ஆகா திருக்கலாம்


பார்த்து நடப்பதற்கும்

பழக்கம் ஆகலாம்

பக்குவம் கிடைக்கலாம்


வாழ்க்கைப் பாதையிலே

வசந்தமும் இருக்கலாம்

வாட்டமும் இருக்கலாம்


நடப்பது என்பது

முடிவான பின்பு

நடப்பது நடக்கட்டும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


ஆன்மக் குளியல் - சிறுகதை

 ஆன்மக் குளியல் - சிறுகதை 

————-


‘ இந்த சதைக் குவியலா நீ ‘ அவளுக்குள் இருந்த அந்த இள முகம் , அவளைப் போல் , தலையின் குளியல் துண்டோடு , ஆனால் திரும்பிய நிலையில் அவளைப் பார்த்தபடி , அவளுக்குள் இருந்து கேட்க , அவள் விழித்தாள் .


குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இது என்ன குரல் .‘நான் நீ தான் பெண்ணே ‘ என்று சொன்ன அந்தக் குரல் தொடர்ந்தது . ‘ உன்னையே நன்றாக உற்றுப் பார் . குழந்தைப் பருவத்தில் இருந்த உடலா இது , குமரிப் பருவத்தில் இருந்ததா இது . ‘


‘இந்த இடைப்பட்ட காலங்களில் எத்தனை மாற்றம்

காலத்தின் மாற்றத்தில் , பருவத்தின் வளர்ச்சியில் , பூத்தும் குலுங்கியும் , தளர்ந்தும் போன உடல் . போகமும் ரோகமும் அனுபவித்து இன்பமும் துன்பமும் இதுவென்று மயங்கிக் கிடக்கும் உடல் . ‘


‘பத்து வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்துச் சிரித்தவர்களும் , பழகி மகிழ்ந்தவர்களும் , இப்போது உன்னைப் பார்க்காது போவதை உன் உடலின் புறக்கணிப்பாய் உணர்ந்து உள்ளுக்குள் புழுங்குவதை உணர்ந்ததால் தான் உன்னிடம் கொஞ்சம் பேசிப் போக வந்தேன் ‘ என்றது அந்தக் குரல் .


‘ இவை எல்லாம் உனக்கெப்படித் தெரியும் ‘

‘ அடி அசடே , முதலில் நான் சொன்னதை மறந்து விட்டாயா , நீதான் நான் ‘


‘ குழப்புகிறாய் ‘

புரியும்படி சொல்லவா , உன் மனச்சாட்சி என்று வைத்துக் கொள்ளேன் ‘

‘புரிகிறது , என் உடற் கவர்ச்சி குறைவதைக் கவனிக்கக் கூடாதா நான் ‘


‘கவனி , ஆனால் கவலைப்படாதே . இது உடலின் இயற்கை என்று ஒத்துக்கொள் . கவர்ச்சிக்கன்னிகளாய் பார்க்கப்பட்ட எத்தனை நடிகைகள் தளர்ந்து துவண்டு இருக்கும் படங்களைப் பார்க்கத் தானே செய்கிறாய் ‘


‘உண்மை , ஆனால் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது ‘

அதற்குத்தான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வந்தேன் . உற்றுக் கேள் ‘


‘ இந்த உடல் அல்ல நீ . இது உன் பெற்றோரால் உனக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டது . காலத்தால் வளர்க்கப் பட்டது . இதன் கவர்ச்சியில் பிறரைப் போல் நீயும் மயங்கிக் கிடந்தாய் வளர் பிறைக் காலத்தில் . இப்போது தேய்பிறை ஆரம்பித்ததும் திணறுகிறாய் . இந்த உடல் அல்ல நீ ‘


‘ இதைச் சரியான நேரத்தில் உணர்த்தவே நான் நீ குளிக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து வந்தேன் . உன் உடலின் மாற்றங்களை நீ உணரும் நேரத்தில் தான் உன்னுள் இருக்கும் மாறாத என் அழகை , என் உணர்வை நீ அறிய முடியும் . உற்றுப் பார் . நீதானடி நான் . ‘


‘உன் குழந்தைப் பருவக் குறும்பு மனம் என்னிடம் அப்படியே இருப்பதைப் பார் . உன் குமரிப் பருவ அறிவுணர்ச்சி அப்படியே இருப்பதைப் பார் . உன் வளர்ந்த பருவ அன்பும் , அடக்கமும் , மதிப்பும் , மரியாதையும் , ஞானமும் என்னிடம் ஜொலிப்பதைப் பார் . ‘


‘உன் கண்களால் பார்க்க முடியாது . உன் உணர்வுகளால் என்னைப் பார்க்க முடியும் . நான் தானடி நீ . நீதானடி நான் . நாம் உணர்வால் கலந்தவர்கள் . காலம் நம்மை மெருகேற்றுமே தவிர , இந்த உடலைப் போல் துருவாக்காது . புரிந்ததா பெண்ணே .’


தன்னிலைக் குளியல் முடிந்து தண்ணீர்க் குளியல் ஆரம்பம் அவளுக்கு .


குளித்து முடித்து உடை அணியும் போது , தன் உடலும் வேறு ஒரு உடை , ஒட்டிய உடை என்ற உண்மை உணர்ந்தாள் .


அவள் முகத்தருகே திரும்பி இருந்த அந்த ஆன்ம முகம் நேர் ஆகி இப்போது ஒன்று சேர்ந்து இருந்தது . அப்போது விழித்த கண்கள் மாறி இப்போது கருணைக் கண்களாய் மாற , வீதி உலா புறப்படும் அம்மன் போல் , குளியல் அறை விட்டு வெளியில் வந்தாள் .


———நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


வியாழன், 4 ஜூலை, 2024

திருஷ்டிப் பொம்மை - சிறுகதை

 திருஷ்டிப் பொம்மை - சிறுகதை 

-----------------------------------

மெல்லிய கறுப்புக் கம்பிகளால் சுற்றிச் சுற்றி பின்னப் பட்டு ஒரு குழப்ப உருவம் போல் காட்சி அளிக்கும் அந்தத் திருஷ்டிப் பொம்மையை வாங்கி வந்தான் சேகர். அவனுக்கும் அவன் மனைவி சுந்தரிக்கும் அவர்கள் மேல் கண் திருஷ்டி பட்டு விடக் கூடாது என்ற நினைப்பு . நேற்று அசாம் ஸ்டேட் லாட்டரியில் , அந்த லாட்டரிச் சீட்டுக்குப் பத்து லட்சம் பரிசு விழுந்தது தெரிந்த முதலாய் இதே நினைப்புதான். வேறு ஏதோ ஒரு பயமும்தான் . இதே நினைப்பில் அவர்கள் இரவில் தூக்கம் வராமல் கஷ்டப் பட்டதால் முன்கூட்டியே இந்த திருஷ்டிப் பொம்மை வரவு.


அவன் வாங்கி வந்த பொம்மையை இப்படியும் அப்படியும் வளைத்து உற்றுப் பார்த்தாள் சுந்தரி. அது ஏதோ அவளிடம் சொல்ல வருவது போல் ஒரு பிரமை.

' ஏங்க இது என்னமோ பேசுதுங்க'

'பைத்தியம் , பொம்மை எப்படிப் பேசும் '

'இல்லேங்க, 'நான் உங்க வீட்டுக்கே இப்ப வந்துட்டேன் , அப்படி'ன்னு சொல்லுதுங்க '


சேகர் அந்தப் பொம்மையை உற்றுப் பார்த்தான். அவனைப் பார்த்து அது லேசாக சிரிப்பது போல் இருந்தது .

அவனுக்கும் கொஞ்சம் பயம் வந்தது. 'ஆமாம்டி , லேசா சிரிச்சுதடி'


இப்பொழுது அவனுக்குக் கேட்டது

' எனக்கு எல்லாம் தெரியும் , என்னை ஏமாற்ற முடியாது '

' என்ன தெரியும் உனக்கு '


இப்போது காலிங் பெல் அடிக்கும் சப்தம். திருஷ்டிப் பொம்மையை சோபாவின் ஓரம் வைத்து விட்டுச் சென்று கதவைத் திறந்தான். அடுத்த தெரு ரமேஷ் .

' என்னப்பா, நம்ம கிட்டே சொல்றதில்லையா ,'

'உனக்கு யார் சொன்னா '

'நீ சொல்லாட்ட எனக்கு நியூஸ் தெரியாமப் போயிருமா .'

'என்ன, இதெல்லாம் நியூசிலே வராதே ' என்று குளறினான்.


' உன் பக்கத்து சீட்டு ராஜேஷ் தான் நியூஸ் அறிவிப்பாளர். பயப்படாதே, அவனோ , நானோ உன்கிட்டே எதுவும் கேட்க மாட்டோம். ஒரு காபி கூடக் கிடையாதா .'

'என்னப்பா ' என்று தடுமாறியவனிடம் , ' ப்ரோமோஷன் லிஸ்டில் உன் பேர் இருக்காமே . அடுத்த மாசம் வந்திருமாமே

'அப்பாடா' ' என்று பெருமூச்சு விட்டவன் ' சுந்தரி , காபி கொண்டு வா'


'இதோ ஒரு நிமிஷம்' என்று அடுப்படிக்குச் சென்றாள் சுந்தரி. அங்கே அடுப்படி மேடையில் அந்தத் திருஷ்டிப் பொம்மை.

அலறப் போனவளை எச்சரித்தது அது. 'சத்தம் போட்டா எல்லாம் சொல்லிடுவேன் ' என்று மிரட்டியதும் அடங்கியவள் , வெளியே வந்து , 'ஏங்க, பால் தீந்து போச்சுங்க ' என்றதும் , 'பரவாயில்லைங்க , நான் வரேன் ' என்று கிளம்பினான் ரமேஷ் .


இப்போது லேசான சிரிப்புச் சப்தம். 'வீட்டிலே ஒரு லிட்டர் பால் பிரிட்ஜில் வச்சுக்கிட்டே இல்லேங்கிறியே சுந்தரி ' என்றது அந்தத் திருஷ்டிப்பொம்மை சோபாவில் இருந்தபடி. ' நீ எப்படி அடுப்படியில் இருந்து இங்கே ' என்றவளைப் பார்த்து ' இது இங்கே தானேடி இருக்கு ' என்றான் முகம் வெளிறியபடி சேகர்.


'போதும் இந்த விளையாட்டு , உடனே அந்த லாட்டரிச் சீட்டை , அசாம் ஸ்டேட் அலுவலகத்துக்கு அனுப்பி விடு . அந்தச் சீட்டில் இருக்கும் ஆபீஸ் நம்பருக்குப் போன் செய்து உண்மையைச் சொல். ரெயில்வே ஸ்டேஷனில் கிடந்தது இந்தச் சீட்டு. வாங்கியவர் யாரோ தவறி விட்டு விட்டார். ஏதோ ஒரு உந்துதலில் எடுத்து வந்தவன், நேற்றைய ரிசல்ட் தேதிக்குக் கம்பியூட்டரில் வந்த அசாம் லாட்டரிச் சீட்டு ரிசல்டில் பத்து லட்சம் பரிசு பார்த்து ஆசைப்பட்டு விட்டாய். செய் இதை , இல்லாவிட்டால் .. ' என்று மிரட்டியது பொம்மை.


திஹார் ஜெயில் வாசல். அழுதபடி சுந்தரி .சேகர் கண் முன்னே , வந்து போனார்கள் , பல நண்பர்கள் , உறவினர்களும். 'சேகர் நீயா இப்படி ' . காதுகளைப் பொத்திக் கொண்டவன், 'சுந்தரி அந்தப் போனை எடு ' என்றான்.


அந்தத் திருஷ்டிப் பொம்மையிலே இருந்து கிளம்பிய புகை ஒன்று சுந்தரியின் ஹாண்ட் பேக்கில் நுழைந்து அந்த லாட்டரிச் சீட்டில் இருந்த நாக்கு நீட்டிய,கண்கள் உருண்ட அசாம் நாட்டுக் கிராம அம்மன் படத்தில் போய் ஒன்றியது .


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


என்ன தவம் செய்தனை - கட்டுரை

 என்ன தவம் செய்தனை -  கட்டுரை 

---------------------


சுகன்யா மேடம் கொடுக்கும் தலைப்புகளில் வாரா வாரம் பேசியதைத் தொகுத்தாலே , நமது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி அனைவர்க்கும் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது . அதன் இன்னும் ஒரு பகுதியாக, மகன், மகள் பற்றிய இதையும் சேர்த்துக் கொள்ளலாம் .


சில நேரங்களில் நாம் சிலரிடம் நடந்து கொண்ட விதம் பற்றிய சில பழைய நினைவுகள், அவர்கள் இப்போது நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி ஒப்பிட்டுப் பார்க்கையில் நெகிழ்வை உண்டாக்குவது உண்டு .


உதாரணத்திற்கு நாங்கள் சமீபத்தில் அமெரிக்கா சென்ற பொழுது , மகனும் , மகளும் ஒவ்வொரு விஷயத்திலும் எங்களைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட விதம் , நான் அவர்களிடம் அவர்களின் குழந்தைப் பருவத்தில், எவ்வளவு கண்டிப்பாகவும் சில சமயம் திட்டவும் செய்திருக்கிறேன் என்பதை எல்லாம் நினைக்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி நெகிழ வைத்தது . அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது .


விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அங்கங்கே ஏர் போர்டுகளில் எங்களுக்கு வீல் சேர் வசதிகளை செய்து வைத்திருந்து நடப்பதைக் குறைத்த விதம், விமானத்தின் உள்ளும், இருவருக்கும் ஓர சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்து பாத் ரூம் சென்று வர இடைஞ்சல் இல்லாத படி ஏற்பாடு செய்த விதம் . வருகின்ற உணவுகளை ருசித்துப் பார்த்து , எது எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று அறிந்து சாப்பிட வைத்தது என்ற விமானப் பயண அனுபவம், நான் அவர்களின் இளம் பருவத்தில் அழைத்துச் செல்லும் இடங்களில் , பஸ்களிலும் ரெயில்களிலும் அவசரமாக ஏற்றி இறக்கிய விதமும் , வாங்கிக் கொடுப்பதைச் சாப்பிட வைத்த விதமும் நினைவில் வந்து கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பின.


அடுத்து அங்கே வீட்டில் தங்குவதற்கு தனி ரூம் ,தேவையான வசதிகளோடு ஏற்பாடு செய்து கொடுத்தது , எங்களை எப்போதும் அவசரப் படுத்தாமல் ,நாங்கள் விழித்த பின்பே , வெளியில் செல்லும் பயணம் பற்றிய முடிவு செய்தது . வெளி ரெஸ்டாரண்டுகளில் உள்ள உணவு வகைகளை முன்பாகவே நெட் மூலம் தெரிந்து, எங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவு இருக்கும் இடங்களுக்கே அழைத்துச் சென்றது போன்றவற்றை நினைத்தபோது , நான் , பயணங்களில் அவர்களை அதிகாலை உசுப்பி விட்டது, அவர்களுக்கு ஆரோக்கியம் என்று நினைத்த உணவுகளை வற்புறுத்திச் சாப்பிட வைத்தது போன்ற நினைவுகளை எழுப்பி விட்டது . .


எங்களின் ஆர்வமும் ஆசையும் புரிந்து , அதற்கேற்ற இடங்களாக, நூலகம், இசை நிகழ்வு, காப்பி ரெஸ்டாரண்ட் , விளையாட்டு, நீச்சல் , டோஸ்ட்மாஸ்டர் , என்று பார்த்துப் பார்த்துக் கூட்டிச் சென்றது . வீட்டில் சுகர் , பிபி போன்றவற்றை செக் அப் செய்து அதற்கேற்ற படி வீட்டில் உணவு முறை , வெளியூர் செல்வது போன்ற பல விஷயங்களைத் திட்டமிட்டது , மற்றும் அமெரிக்காவில் நாங்கள் முன்பு பார்க்காத இடங்களாக , நயாகரா, டிஸ்னி உலகம் போன்ற இடங்களுக்கு முறையே , மூன்று நாட்கள், ஒரு வாரம், என்று நிதானமாக இருந்து பார்க்கும் படி திட்டமிட்டு ஏற்பாடு செய்தது , அந்த இடங்களில், மிகவும் வேகமான, உடலைக் கஷ்டப்படுத்தும் மகிழ்வு ரைடுகளைத் தவிர்த்து எங்களுக்கு ஏற்ற மகிழ்வு ரைடுகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்தது ,பிரம்மாண்ட டிஸ்னி உலகில் எங்கும் நடக்க அவசியம் இல்லாமல், நாங்களே இயக்கும் எலெக்ட்ரிக்கல் வாகனம் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொடுத்தது . நமக்கு விருப்பமான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தது , மலைப் பாங்குப் பாதையிலே சேர்ந்து வாக்கிங் வந்தது என்று ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது , அவர்களின் இளம் பருவத்தில் பெரும்பாலும் நமக்குப் பிடித்த இடங்கள், படங்கள், புத்தகங்கள் அவர்களுக்கும் பிடிக்கும் என்று நாமே முடிவு செய்து நடந்து கொண்ட விதம் பற்றி யோசிக்க வைத்தது .


அவர்களின் குழந்தைப் பருவ, இளம் பருவத்திலே,நாம் எத்தனை முறை அவர்களை அவசரப் படுத்தி இருக்கிறோம், திட்டி இருக்கிறோம் என்ற நினைவுகள் கூடவே வந்து கலங்க வைத்து கண்களை மறைத்த நேரங்கள் பல.


ஆனால் அந்தக் காலத்திலே , என் துணைவியார் , அவர்கள் கூடவே இருந்து, அவர்களுடன் கலந்து பேசி குழந்தை வளர்ப்பில் கருணையும் கண்டிப்பும் கலந்து காட்டி , அவர்கட்குத் தேவையானவை செய்து , அவர்கட்குப் பிடித்த உணவுகள் அளித்து வளர்த்து வந்த விதம் அதைச் சமன் செய்து இருக்கலாம். அந்த அமைதியும் , அன்பும். எனது வேகத்தையும், அவசரத்தையும் , கண்டிப்பையும் சமன் செய்து இருக்கும் என்றே தோன்றுகிறது ,


மாசச் சம்பளத்தை முழுவதையும் மனைவியிடம் கொடுத்து விட்டோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டு , வாரம் ஒரு முறை , ஞாயிறு மட்டும் குழந்தைகளுடன் விளையாடுவது , வெளியே கூட்டிச் செல்வது தவிர மற்ற நாட்களில், வேலை , அது சம்பந்தப்பட்ட படிப்பு, நண்பர்களுடன் அரட்டை என்றே இருந்த ஞாபகம் வரும்போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்கிறது. காலம் கடந்த வருத்தம். .


அப்படி இருந்தாலும். அம்மாவுக்குக் கொடுக்கும் அதே அன்பையும் , ஆதரவையும் எனது மகனும், மகளும் இருவரும் எனக்கும் கொடுத்துக் கவனித்த விதம், சில நேரம், குற்ற உணர்வும், நன்றி உணர்வும் கலந்த ஒரு விதமான உணர்வை எனக்கு ஏற்படுத்தியது உண்மை. .


இங்கு சென்னை வீட்டில் இருப்பது வேறு. இது நம்ம சாம்ராஜ்யம். அங்கு முழுக்க முழுக்க அவர்களையே நம்பி இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் சிறப்பு. நம்மைப் பற்றிப் புரிந்து பக்குவப்பட்டு விட்ட அவர்களுக்குள்ளும் ஒருவித டென்ஷன் இருந்திருக்கலாம். உள்ளுக்குள் அன்பு கொட்டிக் கிடந்தாலும் , அவ்வப்போது சுருக்கென்று கோபித்துக் கொள்ளும் , உணர்ச்சி வசப்படும் இந்தப் ' பெருசை ' ஒழுங்கா எந்தப் பிரச்னையும் இல்லாம பார்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். அவர்களும் பெற்றோர் ஆகி விட்ட இந்தக் கால கட்டத்தில், எங்களையும் குழந்தைகளாக நினைக்கும் பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டதாகத் தோன்றியது .


என் போன்ற பெருசுகள் குழந்தைகள் ஆகும் நிலை வந்து விட்டதாகவே தோன்றுகிறது . குழந்தைகள் பெருசுகள் ஆகி விட்ட நிலையும் தெரிகிறது. அவர்கள் என்னைப் போன்ற அவசரப் பெருசாக ,ஆவேசப் பெருசாக இல்லாமல், அமைதியான, அன்பான பெருசுகளாய் இருப்பதற்கு , வளர்த்த மனைவிக்குத் தான், அவர்களின் அம்மாவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.


மகனை , மகளைப் பற்றி நினைக்கையில் , அவர்களுக்கு நன்றி சொல்வதை விட , ' இவன் தந்தை என் நோற்றான் கொல் ' என்பதற்கு இலக்கணமாக இயங்கும் இவர்களைப் பெற , எனக்கு நானே 'என்ன தவம் செய்தனை 'என்றே சொல்ல வேண்டும் .' தந்தை , தனது மக்களுக்குச் செய்யும் நன்மை, அவர்களைக் கற்றோர் அவையிலே முதன்மையாக இருக்கச் செய்தல் ' என்ற குறளுக்கு ஏற்றபடி சிறு ' நன்மை ' நான் ஓரளவு செய்திருப்பேன் என்றே தோன்றுகிறது . நன்மை செய்த முறையிலே தவறு இருக்கலாம் . நன்மை செய்ததில் திருப்தி.


---------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 



சிறுகதை மதிப்புரை - கட்டுரை

 சிறுகதை மதிப்புரை - கட்டுரை 

------------------------------------------------------------------------------------------------


நன்றி அழகிய சிங்கர் வணக்கம் நண்பர்களே . நமது பூவராக மூர்த்தி அவர்களின் 'சின்னப் பிள்ளை' என்ற சிறுகதை. சின்னப் பிள்ளை என்றவுடன் ஏதோ ஒரு சின்னக் குழந்தையை பற்றிய கதையாக இருக்குமோ என்று தோன்றியது . ஆனால் கதை ஆரம்பத்திலேயே அவர் அதை விடுவித்து விடுகிறார் . சின்னப்பிள்ளை என்பது தியாகிகள் பென்ஷன் வாங்கும் ஒரு முதியவரின் பெயர்.


இந்தக் கதை அந்த முதியவருக்கும் அந்தப் பென்ஷன் பிரிவில் இருக்கும் ஒரு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ' நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டில் மனைவியுடன் மனஸ்தாபம். சின்ன விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் ஆபீஸ் புறப்படும் போது மன அமைதியைக் கெடுக்கிற மாதிரி சண்டை. எல்லாம் சேர்ந்து கொண்டு. அதற்காக இப்படியா நடந்து கொள்வது' என்று அவர் கதையை ஆரம்பிக்கும் போதே நமக்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கி விடுகிறார் .


'என்ன நடந்தது ஏன் இந்த நாயகன் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறான் ' என்ற கேள்வி நம் மனதில் எழுந்து விடுகிறது. பிறகு அந்த நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் பின்னோட்டமாக நம்மை அழைத்துச் செல்கிறார்.


'நல்லா இருக்கீங்களா ஐயா' என்ற குரல் . சின்னப் பிள்ளை எத்தனையோ முறை வந்து இருக்கிறார் நானும் அன்போடு பேசி இருக்கேன் ஆனா நேத்து ' என்று நிறுத்தி அந்த பென்ஷன் பிரிவினுடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்கிறார். . இவர் 5, 6 வருடம் அந்த பென்ஷன் பிரிவில் இருக்காரு எல்லாரும் இவரிடம் வந்து உதவி கேட்பார்கள் .ஒரே காலனியில் இருந்து ஒரு பத்து பதினஞ்சு பேரு வருவாங்க. தியாகி பென்ஷன் வாங்குறவங்க. எல்லாம் வயசு 80 க்கு மேல , இவர் இந்த பெரியவர் சின்னப் பிள்ளை எப்பவும் தனியாத்தான் வருவார் ' அப்படின்னு சொல்லிட்டு டக்குனு இப்போதைக்கு இருக்கக்கூடிய இடத்திற்கு வராரு ஆசிரியர். அதாவது பிளாஷ்பேக் போறது, திரும்பி தற்காலத்துக்கு வருவது அப்படின்னு கதையை ஒரு சஸ்பென்ஸோட கொண்டு போறாரு.


இப்ப என்ன நடக்குது . ஷேர் ஆட்டோ நிக்குது. 'காந்தி காலனிக்கு இங்கே இறங்குங்க' அப்படின்னு டிரைவர் சொன்னதும் ,இவர் இறங்கி அந்த விலாசத்தை பக்கத்தில் இருக்கிறவங்க கிட்ட காமிச்சிட்டு வழி கேட்டு உள்ள போயிட்டு இருக்காரு காந்தி காலனிக்குள்ள.


இப்போ மறுபடி பிளாஷ் பேக். எப்பவுமே பென்ஷனுக்கு இரண்டு நாள் இருக்கும்போதே போட்டுடுவாங்க. . இல்லே, கடைசி நாளிலே எல்லாருக்கும் கொடுத்துடுவாங்க .ஆனா அன்னைக்கு வந்து இவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்ததால் இந்த பென்ஷன் அதிகாரி எல்லாருக்கும் கொடுக்கக் கூடிய ஏற்பாடு பண்ணல. இப்ப அந்தச் சின்னப் பிள்ளை வந்திருக்காரு. வந்து.' என்னங்க பென்ஷன் பணம் வாங்கிக்கலாமா ' 'இன்னிக்கி போடல ' . அவரு போயிட்டாரு. அப்புறம் மதிய உணவு இடைவேளை. அதுவரை அங்கே தான் இருந்த சின்னப் பிள்ளை வந்து 'பென்ஷன்' ' ஐயா போட்டீங்களா. இன்னும் சாப்பிடலை நான் . ' . என்று கேட்கும்போது அந்த முதியவரின் மனநிலை நமக்கு ஏற்படும்படி உருக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.



'ஒவ்வொரு மாசமும் கரெக்ட்டா போட்டுறோம்ல. இந்த மாசம் இன்னும் போடலை. போயிட்டு நாளைக்கு வாங்க , நான் சாப்பிடப் போறேன்' என்று அந்த பென்ஷன் அதிகாரி எழுந்து போகிறார். இவர் மெதுவாக நடந்து வாசல் நோக்கிச் செல்கிறார்.


ஆனால் அன்று நைட் இந்த அதிகாரி கனவில் வருகிறார் சின்னப்பிள்ளை . ' நல்ல இருக்கீங்களா ஐயா' சின்னைப்பிள்ளை குரல் . இவருக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுத் து. 'நம்ம கடமையில் தவறி விட்டோமே. மற்றவரிடம் அன்பாக இல்லாமல் ,என்ன வாழ்க்கை இது . அன்னைக்கு ஏதோ வீட்ல பிரச்னை அனுப்பிவிட்டேன். பாவம் அந்த வயசானவர் என்ன செய்வார் அவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ . பாவம் சாப்பிடாம வந்தாரு அவர்கிட்ட போய் மன்னிப்பு கேட்கணும்னு' சொல்லிட்டு காலையில ஆபீஸ் போனவர் , அவர் வருவார் என்று வெயிட் பண்ணி பாக்குறாரு .



ரொம்ப பேரு வந்தாங்க ஆனா சின்னப்பிள்ளை வரவே இல்ல . 'என்ன ஆச்சு நேத்து அவருக்கு ஏதும் பிரச்னை ஆகி இருக்குமோ' அப்படின்னு இவருக்கு ஒரே கஷ்டமாயிருச்சு. அவரு விலாசத்தை எழுதிக்கிட்டுத் தான் இப்ப இங்கே காந்தி காலனியில் நடந்து வந்துட்டு இருக்காரு.


அவர் மன ஓட்டம். ' வீட்டிலே சின்னப்பிள்ளை இருப்பாரு. உட்காரச் சொல்லுவாரு . இந்தப் பக்கம் வந்தேன், பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் ' என்று சொல்லலாம் ' என்று நினைத்தபடி வந்தார் . தெரு முக்கில் திரும்பும்போது அந்த முக்குல இருந்து சங்குச் சத்தம் கேட்குது . சங்குச் சத்தம் கேட்டா என்னங்கறது நமக்குத் தெரியும் . 'யாரோ ஒருத்தர் இறந்துட்டார்.' அந்த முனையிலே எல்லாரும் சோகமா இருக்காங்க கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .


'நேத்து வந்தவர் பென்சன் கிடைக்காம மனமுடைஞ்சு போய் இறந்து போயிட்டாரோ அவர் இறப்புக்கு நான் காரணமாயிட்டேனே ' என்று வருத்தத்தோடு திரும்புகிறார் இவர். அங்கு திரும்பி வரும் ஆட்டோவை நிறுத்தி ஏற ஆட்டோ ட்ரைவர் சொல்றார்.' இறந்து போனவரு பொண்ணு வீட்டில் இருக்கிறார். நேத்து ஏதோ பையன் மருமகள் எல்லாம் வந்தாங்களாம் அப்படியே பேசிக்கிட்டு இருந்தவர் 'வங்கிக்குப் போயிட்டு வந்தது அசதியா இருக்குன்னு' ராத்திரி கஞ்சி குடிச்சிட்டுப் படுத்தவர் காலையில் சாஞ்சிட்டாரு. ரொம்பக் கஷ்டமா இருக்கு' .


ஆட்டோ ட்ரைவர் சொல்லச் சொல்ல, இவர் மனதுக்குள் ' எதுவும் சொல்லி இருப்பாரோ, நம்ம தான் அதுக்குக் காரணம். வேற யாருக்காவது தெரிந்திருக்குமா . தெரியாட்டாலும். மறைமுகமாவது நம்ம தானே காரணம். நம்ம செஞ்சது தப்புத் தானே, எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் . இங்கே போனதோடு, நம்ம போய் அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போட்டு அவர் முகத்தைப் பார்த்து ஒரு மன்னிப்புக் கேட்டு வந்திருக்கலாம். ஒரு மனிதாபிமானமே இல்லாமே ஒரு கோழையா திரும்பினதை நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு' என்று மனதிற்குள் குழம்பியபடி வந்து ஆபீஸ் வந்து உட்கார்ந்து சீட்ல இருக்கிறப்போ, பக்கத்து சீட் கேசவன் . ' வந்துட்டியா , பென்சனர் எல்லோரும் கேட்டாங்க ' என்று சொல்ல இவர் சீட்டில் உட்கார்ந்து பாக்குறாரு. சீட்டில் உட்கார்ந்து அப்படியே பார்க்கிறாரு


அங்கே வாசல் கதவு திறந்து யாரோ ஒரு இன்ஸ்பெக்டர் வரார் . இவருக்குப் பயமா இருந்துச்சு. இதயம் படபடன்னு அடிக்குது . 'விஷயம் தெரிஞ்சிருச்சு. விசாரிக்கப் போறாரு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். நம்ம அவரைத் தனியாக் கூட்டிட்டு போய் சரண் அடைஞ்சிடலாம் ' என்று நினைக்க , இன்ஸ்பெக்டர் இவரிடம் வந்து '


'சார் , நீங்கதானே தியாகி பென்ஷன் பார்க்கிறீங்க ' என்று கேட்க ' ஆம் ' என்றவரின் உடல் வேர்த்துக் கொட்டுகிறது . அவர் ' எங்க அம்மா வண்ணாரப் பேட்டை ப்ராஞ்சிலே பென்ஷன் வாங்கிறாங்க. ஏதோ அரியர்ஸ் வரணுமாம், உங்களைப் பார்க்கச் சொன்னாங்க' என்றதும் , மூச்சைச் சரி செய்து அவருக்கு வேண்டியன செய்து கொடுக்கிறார்.



அப்போது கேசவன் ' சாப்பிடப் போகலாமா ' என்று கேட்கிறார்.. மனைவி நல்ல டிபன் தான் கொடுத்திருந்தாலும் இவர் குற்ற உணர்ச்சியோடு ' எனக்குப் பசிக்கலை நீ சாப்பிடு ' என்று சொல்லி விட்டு ஏதோ நினைவில் உக்காந்துட்டு இருக்கார் .


குற்றம் உள்ள மனசு இல்லையா குறுகுறுக்கிறது.' நம்மாலேதான் அவரு போயிட்டாரு ' என்று ரொம்ப வருத்தத்தோட கண்ணீரோடு இருக்கும்போது , ஒரு குரல் கேட்கிறது .


இப்போது கதை ,நாயகனின் வார்த்தைகளில் .


'நல்லா இருக்கீங்களா ஐயா ' சின்னப் பிள்ளை உயிரோடு முழுவதுமாக நின்று கொண்டிருந்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 'வாங்க சின்னப் பிள்ளை' என்று அவரை உட்கார வைத்து எழுதிக் கொடுத்து ஓடிப் போய் பணம் வாங்கி வந்து கொடுத்தேன்.


சின்னப் புள்ள 'ரொம்ப நன்றி ஐயா, காலைல தெருவிலே ஒரு பங்காளி செத்துட்டாரு. அதுதான் வர லேட்டாயிடுச்சு மன்னிச்சுக்கங்க '

'அதனால என்ன வந்துட்டீங்களே அதுவே போதும் ' அவருக்கு ஒன்றும் புரியவில்லை 'எனக்கும்தான் நான் ஏன் இப்படி இருக்கேன்னு புரியல 'அப்படின்னு சொல்லிக் கதை முடிகிறது .


இந்த கதை ஒரு இரக்கமுள்ள மனிதனின் , மன இயல்புகளை ,மிக இயல்பாகக் காட்டியுள்ள கதை. எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் மற்றவரிடம், மனித நேயத்துடன், கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். அப்புறம் நாம் வருத்தப்படும்படி இருக்கக் கூடாது ' என்று அறிவுறுத்தும் . அருமையான கதை.


கதை நிகழ்வுகளை ஆசிரியர் எடுத்துச் செல்லும் விதத்தில் , அந்த பிளாஷ் பேக் முறையில் ஒரு சஸ்பென்ஸ் , கதையின் நாயகன் மனம் பேசும் வார்த்தைகளில், இயல்பான மனிதர் ஒருவரின் எண்ண ஓட்டம். பயம். வருத்தம். பச்சாதாபம் , இறுதியில் ஒரு மகிழ்ச்சி என்று சிறப்பாகக் கதையைக் கொண்டு சென்று கச்சிதமாக உணர்வு பூர்வமாக, நாயகனோடு சேர்ந்து நாமும் நிம்மதிப் பெருமூச்சு விடும் விதத்தில் முடிக்கிறார் மூர்த்தி அவர்கள் . வாழ்த்துகள் .


அனைவர்க்கும் நன்றி


----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை  -------------------------------- பூக்களைப் பறிக்காதீர்கள் என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டிய பூக்கள் பறித...