புதன், 8 ஏப்ரல், 2026

ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2

 



ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2 

------------------------------

இந்தப் பதிவுக்குரிய படங்களும் புகைப்படங்களும் நானோ, எனது மனைவி  உஷா மேடமோ வரைந்தவை . 'கிளிக் ' கியவை . நேற்றைய உத்திரகோசமங்கை கோயில் உட்புறப் படம் நான் வரைந்தது . இன்றைய ' சிவகாமி ' படம் உஷா மேடம் வரைந்தது. அவர்களுக்கு நன்றி .


------------

திருஉத்திரகோசமங்கை கிழக்கு ஏழுநிலைக் கோபுர வாசல் வழி உள்ளே நுழைந்ததும் கோபுர வாசல் தாண்டியதும் வலது பக்கம் அக்கினி தெப்பக்குளம். அது அக்கினி தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் காரணத்தை யூடியூபில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


இடது பக்கம் நீண்ட நீண்ட கருங்கற்கள் அங்கும் இங்குமாக ஏராளம் இருக்கும். அங்கே பல சிற்பிகள் அந்த கற்களின் மேல் உளி நர்த்தனம் செய்து பல சிலைகளை உருவாக்கி கொண்டு இருப்பார்கள் . அந்த உளியின் சப்தம் அங்கே சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருக்கும்.


அவர்களின் தலைவராக , தலைமைச் சிற்பி, ஸ்தபதி என்று அழைக்கப்படுபவர் அவற்றை மேற்பார்வை இட்டுக் கொண்டு இருப்பார்.அவரும் செதுக்கிக் கொண்டு இருப்பார்.



கிழக்குக் கோபுர வாசலுக்கு மிக அருகில் தான் அவனது பள்ளிக்கூடம் பள்ளிக்கூட இடைவேளையில் கோயிலுக்குள் சென்று , அவர் அருகில் அவர் சிற்பம் செதுக்கும் அழகை ரசிப்பது வழக்கம். ' தள்ளி நில்லு தம்பி ,கல்லு தெறித்து கண்ணிலே விழுந்திடும் ' என்று அவர் எச்சரிப்பது உண்டு

அவர் கண்களை மறைத்து துணி அணிவதில்லை. உளியின் உரசலில் கற்கள் போகும் திசை அவருக்குத் தெரியும்.


நீண்ட கருங்கல்லாகக் கிடந்ததைப், பல நாட்களுக்குப் பிறகு ஒரு உருவமாக மாற்றி நடனம் ஆடும் அழகை அவர் கொண்டு வரும் அந்த கலை வண்ணம், அவர் கை வண்ணம் , உளி வண்ணம், மெய் சிலிர்க்க வைக்கும். . இன்றும் உத்தரகோசமங்கை பிரகாரங்களில் அவரும் அவரது குழுவினரும் செதுக்கிய சிற்பங்கள் உண்டு. ஒரு உருவத்தின் வாய்க்குள் அடங்கி வெளியே வராமல் உருளும் கல் ஒன்று , பின்னிக் கொண்டிருக்கும் பாம்புகள், அந்தக் கலையின் திறமைக்கு சில துளி சான்றுகள். இன்னும் சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை எத்தனையோ .


அப்போதுதான் , கல்கியின் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்திருந்த வயது. அவனது அப்பத்தாவிற்கு, அவன் ஒரு கையில் ஈர்வேலி (பேன் எடுக்கும் நீண்ட சீப்பு ) கொண்டு தலையில் இழுத்து, விழும் பேனைக் குத்திக் கொண்டு , மறு கையில் தடிமன் ஆன சிவகாமியின் சபதம் புத்தகப் பக்கங்களை புரட்டிக் கொண்டு படித்துக் காண்பித்துக் கொண்டு இருந்த காலம். மகேந்திர பல்லவர் நரசிம்ம பல்லவரிடம் சொல்லும் இந்த வசனம் . அதன் சாரத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். நிஜ வசனங்களை சிவகாமியின் சபதத்தில் படித்துக் கொள்ளலாம்

---

மகேந்திர பல்லவன் நரசிம்மனிடம் சொல்லும் கருத்து:


“இது சாதாரண கல் அல்ல, நரசிம்மா!

கல்லில் உயிர் ஊற்றுவது தான் கலை.

இந்தக் கற்கள் பேசும்…

நம்மைப் போல் மனிதர்கள் மறைந்தாலும்,

இவை நம்முடைய எண்ணங்களையும் புகழையும் நிலைநிறுத்தும்.”


அவர் மேலும் சொல்வது:


“நாம் இன்று இருக்கிறோம், நாளை இல்லாமலாகிவிடலாம்.

ஆனால் இந்தச் சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பேசும்.

அதனால்தான் நான் போரை விடக் கலையைக் காதலிக்கிறேன்.”


இதற்கு நரசிம்மன் உணர்ச்சியுடன்:


“அப்பா, கல்லில் உயிர் இருக்கிறதா?”


மகேந்திரன்:


“உயிர் இருக்கிறது…

அதை பார்க்கும் கண்ணும், உணரும் மனமும் இருந்தால்!”


----------

இதைப் படித்துவிட்டுச் சென்று அந்தச் சிற்பியைப் பார்க்கும் போதெல்லாம் கற்களுக்கு உயிர் கொடுத்த 'ஆயனச் சிற்பியாகவே ' அவர் தெரிந்தார் அவனுக்கு . அந்த ' ஆயனச் சிற்பி ' க்கு மகள் இல்லை, சிவகாமி இல்லை என்பதை கல்கியின் சிவகாமியின் சபதம் கதை படித்தவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


திருநீற்று ஓதுவார் -அவனும் அவர்களும் - 1

 



திருநீற்று ஓதுவார் -அவனும் அவர்களும் - 1 

------------------------------

திருஉத்திரகோசமங்கை கோயிலின்  வடக்கு வாசல் பக்கம் வெளி வரும்போது அங்கே திண்ணையில் படுத்திருந்தவர் மெதுவாக எழுந்து தடியை ஊன்றியபடி நடந்து செல்வதைப் பார்த்தான் . நெற்றி,  நெஞ்சு கைகள் முழுக்க பட்டை பட்டையாக பூசப்பட்ட திருநீறு அவரை அவனுக்கு அடையாளம் காட்டியது .


அருகில் நெருங்கிச் சென்று , 'ஐயா , ஓதுவார் ஐயா ' என்றவுடன் திடுக்கிட்டுத் திரும்பியவர் , 'யாரு ' என்று கண்களை இடுக்கிப் பார்த்தார். ' ஐயா , நான்  கோயில் பழைய பேஷ்கார் நடராஜ பிள்ளை பேரன் ' . என்றதும், 'ஓ அவரா, மறக்க முடியாதுப்பா உன் தாத்தாவை எல்லாம் , என்னை எப்படி கண்டுபிடிச்ச, அப்ப எப்படி இருந்தேன், இப்ப எலும்பும் தோலும் தான் ' . ஐயா உங்க திருநீறை வச்சுதான் கண்டுபிடிச்சேன் .'


'ஆமா அதுதானே அப்பவும் இப்பவும் என் அடையாளம் ' என்றவரிடம் சிறிது நேரம் பேசி அவரை அவரது வீடு வரை சென்று விட்டுவிட்டு பஸ்ஸில் திரும்பும்போது மனதிற்குள் ஒலித்தது அவரது கணீர் குரல் .


'மந்திரமாவது நீறு

வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு

துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு

சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

திருஆல வாயான் திருநீறே! '


நெஞ்சுவரை தூக்கிக் கட்டப்பட்ட நாலு முழ வேட்டியோடு ,அவரது கட்டுமஸ்தான  உடம்பெங்கும் பூசப்பட்ட திருநீறோடு, தனது கணீர்க்  குரல் எடுத்து ஓதுவார் ஸ்வாமிகள் இந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்பதற்கே கூடியிருக்கும் கூட்டம்.


எல்லாப் பூஜைகளுக்கு முன்னும், நடுவில்  அலங்காரத்திற்குத்  திரையிடப்படும்போதும் மக்களை இசையெனும் இன்ப வெள்ளத்தில் மயக்கி மகிழ்ச்சியோடு காத்திருக்க வைக்கும் மகத்தான இசை வாணர் அவர்.


'ஏன் தாத்தா , இம்புட்டுத் திருநீறு பூசியிருக்காரு இவரு  ' என்ற கேள்விக்கு தாத்தா சொல்லிய ஞானசம்பந்தர்  திருநீற்றுப் பதிகம் பாடிய வரலாறும், கூன் பாண்டியனின் வெப்ப நோய் தீர்ந்த வரலாறும் திருநீற்று மகிமையை எடுத்துச் சொல்ல அதன் மருத்துவ குணமும் தெரிய வந்தது. 


அப்போதெல்லாம், வீட்டில் எல்லாவற்றுக்கும் திருநீறே மருந்து. தேள் கடிக்குத்  திருநீறு குழைத்துப் பூசுவது.வயிற்று வலிக்கு திருநீற்று  பசை வயிற்றின் மேல். காலையில் குளித்து முடித்து விட்டு வந்தவுடன் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டு  , வாயில் கொஞ்சம் திருநீறை வைத்து விடுவது .  காரணங்கள் புரிய ஆரம்பித்த வயது .


தொடரும் நாதஸ்வர, தவில் இசை என்று இசையும் பக்தியும் கலந்த கோயில் நிகழ்வுகளில் எல்லாம் பிரதானமாகத் தெரிந்தவர் அந்த ஓதுவார் ஸ்வாமிகள். பிறகு திருவிழாக்  காலங்களில் சாமியும் அம்மனும்  தெரு உலா வரும்போது ஓதுவார் ஐயா பாடிக்கொண்டு போக அதற்குத்  தலை ஆட்டிக்கொண்டு எங்கள் தாத்தா நடந்து சென்ற காட்சியும் கண் முன்னே வந்து போனது .


அங்கே அம்மனுக்கும்  சாமிக்கும் , எத்தனை வித அபிஷேகங்கள், எத்தனை வித  தீப ஆராதனைகள். இந்த அபிஷேக ஆராதனைகளால், கோயிலின்  உள்ளே உள்ள காற்று மண்டலத்தில் ஏற்படும் அதிர்வலைகள் உருவாக்கும்  ஆரோக்கிய விஷயங்களை பற்றி பின்னால் தான் தெரிந்து கொண்டோம் .


அப்போதெல்லாம் கோயிலுக்குள் ஆவலுடன் அவன் எதிர்பார்த்த  தருணம் , ஓதுவாரின் இசையும் ,  பிரசாதம் கொடுக்கும் தருணமும் தான். . பரிசாரகர்கள் பக்தியுடன் சமைத்த பிரசாதங்களை  சாமிக்கும் அம்மனுக்கும் , அர்ச்சகர்கள் மூடியும் திறந்தும் ரகசியமாகக் காண்பித்து விட்டு  ,  சுற்றுப் பிரகாரம் சுற்றி விட்டு வருவார்கள் .


நாம் பொறுமையோடு காத்திருக்கும் நேரத்தில் ஓதுவார் அய்யாவின் தேவார  திருவாசகப் பாடல்கள்தான் நம் பசியை மறக்க வைக்கும் இசை அமுதம் . அதற்குப் பிறகு கிடைக்கும் அந்தப் பிரசாதங்கள் சில சமயம் ,சுண்டல்  ,  சில சமயம், சர்க்கரை சாதம், சில சமயம் தயிர் சாதம் என்று அவற்றின் ருசி இப்போதும் நாவில் எச்சில் ஊற வைக்கிறது . அதோடு சேர்த்து ஓதுவார் ஸ்வாமிகளின் நினைவும் தான். நாவில் தேவார இசையை ஊற வைக்கும் .


———நாகேந்திர பாரதி 


குறிப்பு : இன்னும் தொடரும் திருஉத்திரகோசமங்கை  நினைவுகள். அவர்களின் நினைவுகள்  . அந்த நினைவுகளை இப்படி நெடுந்தொடராய் எழுத நினைத்ததன் காரணம் முதலில் சில வருடங்களுக்கு முன்பு நமது இரா. முருகன் சார் அவர்கள் எழுதிய 'ரெட்டைத்தெரு ' சிவகங்கை பற்றிய இளம்பிராயக்  கட்டுரைகள். நானும் சிவகங்கையில் பி யு சி படித்த நினைவுகளைக் கிளப்பி விட அப்போது நான் கதை புதிது குழுவில் எழுதிய மதிப்புரையில் ' திருஉத்திரகோசமங்கை ' பற்றி எழுத வேண்டும் என்று எழுதியது. தொடர்ந்து சமீபத்தில்  , ரம்யா வாசுதேவன் அவர்கள்  கலை புதிது குழுவில்  எழுதிய ' அவளும் நானும் '  தொடர் அந்தப் பழைய ஆசையை மறுபடி உசுப்பி விட்டது .  . நான் பார்த்த,  பழகிய பலர்  இதில் வருவார்கள் .  இந்த ' அவனும் அவர்களும் ' தொடரில்  . . நன்றி.


------------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English 


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை மதிப்புரை - கலை புதிது குழுவில்

 துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------

குவிகம் சுந்தரராஜன் அவர்களின் இளவல் , நண்பர் யாரோ ராமமூர்த்தி அவர்களின் சரித்திரக் குறும்புதினம் 'துருவா தேவி ', மார்ச் மாத குறும்புதினம் இதழில். இந்தியச்   சரித்திரத்தின் சுவாரசியமான நிகழ்வுகளைக் கதைகளாக எழுதி  அவற்றை , 'சரித்திரம் பேசுகிறது ' என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக வெளியிட்டவர் நமது ராம மூர்த்தி அவர்கள் என்பது நம்மில் பலர் அறிந்ததே. 


அண்ணன் சுந்தரராஜன் அவர்கள் ஆங்கில இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில்  தொடராக எழுத , தம்பி ராமமூர்த்தி இந்திய இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில் தொடராக எழுத , படித்து மகிழ்ந்த நமக்கு இந்தத்  ' துருவா தேவி ' யும் இலக்கிய இன்பம் அளிக்கும் இரண்டாம் சந்திரகுப்தனின்   கதையாக வெளிவந்துள்ளது.


'குப்தர்கள் காலம்  பொற்காலம்  ' என்று பள்ளிப்பருவத்தில் தேர்வில் கட்டுரை எழுதி மதிப்பெண்கள் வாங்கிய ஞாபகம் வந்தது. அந்தப் பொற்காலத்தின் அகமும் புறமும் கலந்த  இந்தக் கதை அன்றே வந்திருந்தால் நாம் இதையும் சேர்த்து எழுதி , அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்போம் என்று தோன்றியது. 


என்ன செய்வது , அப்போது நமது ராமமூர்த்தி அவர்களும் பள்ளிப் பாடம் படித்துக் கொண்டு இருந்த சிறுவர் தானே. இன்று சரித்திர ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு அவர் கொடுத்துள்ள இந்தக் குப்தரின் கதையில் காதல், வீரம், பாசம் , துரோகம் , நாடகம் வேஷம் அனைத்தும் கலந்து ஒரு பல்சுவை இலக்கியமாக ' துருவாதேவி 'வந்துள்ளாள். 


காதல் காட்சிகள் , உரையாடல்கள் எல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கும்  திருப்தியைக் கொடுக்கின்றன. உதாரணத்திற்கு துருவா தேவியிடம் உஜ்ஜயினி செல்லும் வழியில் இரண்டாம் சந்திரகுப்தன் பேசும் வசனங்கள்  ' தேவி, ஆண் மயில் தான் அழகு என்று சொல்வார்கள். இல்லை . பொய். பெண் மயில் தான் அழகு ' என்று தொடரும் வசனங்களில் கொஞ்சம் நமது ' கல்கி ' அவர்களின் காதல் நடையைக் கடன் வாங்கி உள்ளார். திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்ற தைரியம் போலும் . 


அதைத் தொடரும் வீர நிகழ்வுகளில், சிங்கத்துடன் இரண்டாம் சந்திரகுப்தன் மோதும் இடங்களில்   சாண்டில்யனின் வேக நடை. இப்படி ஆரம்பமே அகமும் புறமும் கலந்து நம்மை கதைக்குள் இழுத்துச் செல்ல , தொடரும் நிகழ்வுகளில் மன்னர் மரணம் , அண்ணனின் அரசியல் சூழ்ச்சி , எதிரி மன்னனின் படை  எடுப்பு, காதலில் சோகம் , தொடரும் வீர நிகழ்வுகள் , என்று தொடர்ந்து இறுதியில் சுபமாக முடியும் போது ,நமக்கும் ஒரு நல்ல சரித்திரத் திரைப்படம் பார்த்த திருப்தி . 


திரைப்படம் என்று நான் சொல்வதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணமும் உண்டு. 

இடை இடையே அவர் காட்சிகளுக்குப் பொருத்தமான திரைப்பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தியுள்ள விதம் தான். 

'வழி நெடுகக் காட்டு மல்லி, காடே மணக்குது , என்ற சமீப காலப் பாட்டை நினைவுபடுத்தி , கதை போகும் போக்கில்  ' சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் ' ' என்றும் துன்பம் இல்லை , இனித் துயரமில்லை ' என்ற பழைய பாடல் வரை நினைவு படுத்தும் திரைப்பாடல் வரிகளும் அவரது பாணியில் பரவிக் கிடக்கின்றன. மொத்தத்தில் குப்தர்களின் பொற்காலத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் ஒரு ஜனரஞ்சகமான சரித்திரக் குறும்புதினம்.  படித்து மகிழ்வோம். 


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


சிறகு இதழ் மதிப்புரை - கலை புதிது குழுவில்

 சிறகு இதழ்  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------


சிறகு ரவி அவர்களின் 'சிறகு ' இதழோடு( 167 -168 ) இந்த முறை ' இறகு' இணைப்பு. மைக்ரோ கதைகளின் கூடு என்ற அழகான பெயரோடு . சிறகுக்குள் இருப்பதுதானே இறகு. பொருத்தமான பெயரும் கூட .


அவர் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் பாதிக்கு மேல் பெண் எழுத்தாளர்கள், இந்த இறகு இணைப்பில் 150 வார்த்தைகளுக்குள் எழுதிய, மைக்ரோ கதைகள். அவற்றில் பாதிக்கு மேல் நமது அழகியசிங்கரின் கலை புதிது குழும பெண் எழுத்தாளர்கள் . மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்த்துகள் எழுத்தாளர்களுக்கு. நன்றிகள் சிறகு ரவி சார் அவர்கட்கு .


முதலில் அவற்றில் சிலவற்றைப் படித்து விட்டேன். அவை .


நமது அட்மின் சுகன்யா மேடத்தின் கருணை மனம் வெளிப்படும் 'தாம்பூலம் ' சிறுகதை .

அனுராதா மேடத்தின் குறும்பு மனம் வெளிப்படும் 'அனன்யாவின் தம்பிப் பாப்பா '.

அப்பு சிவாவின் விளையாட்டு மனம் வெளிப்படும் ' உப்பு மூட்டை '.

சிறகு ரவி அவர்களின் நகைச்சுவை மனம் வெளிப்படும் ' பெல்ட் '. சசிகலா மேடத்தின் நெகிழ்வு மனம் வெளிப்படும் ' தொடுகையின் இன்பம் '.

கிரிஜா மேடத்தின் ஐடியா மனம் வெளிப்படும் ' ரகளை '.

ரேவதி ராமச்சந்திரன் மேடத்தின் சம்பிரதாய மனம் வெளிப்படும்' பொன்னூஞ்சல் '.

விஜயலக்ஷ்மி மேடத்தின் பயண மனம் வெளிப்படும் 'தேன் நிலவு '.

சாய் ரேணு மேடத்தின் துப்பறியும் மனம் வெளிப்படும் ' மணி'.

சுரேஷ் அவர்களின் புத்திசாலி மனம் வெளிப்படும் ' பொன்னூஞ்சல் கனவு '


இப்படி 150 வார்த்தைகளுக்குள் தேன் சொட்டும் தேன் கூடு இந்த மைக்ரோ கதைக் கூடு.


இத்துடன் வழக்கம் போல் தேர்ந்தெடுத்த கதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் சிறகு இதழ். படித்து மகிழுங்கள்


----------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


சனி, 4 ஏப்ரல், 2026

'ஆரிரரோ ' சிறுகதை மதிப்புரை - கதைபுதிது நிகழ்வு

'ஆரிரரோ ' சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு 

---------------------------

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே


சுந்தரபாண்டியன் அவர்களின் ' ஆரிராரோ ' சிறுகதை


'மலடி'  என்று சொந்தங்களால் அவமானப் படுத்தப்படும் ஒரு பெண் எடுத்த முடிவைச் சூசகமாகக் காட்டி 'ஆரிராரோ ' என்று அவள் தன் பெண்ணை தாலாட்டுவதோடு முடியும் கதை. 


ஆரம்பமே அட்டகாசம். அந்த ஊரின் காலை நேரத்தின் வர்ணனையோடு  கதையும் ஆரம்பிக்கிறது . நாயகி சொர்ணம் பெண் குழந்தை பெற்று தாயாரின் வீட்டில் இருக்கிறாள் . அங்கே அவள் பாட்டியும் அத்தையும் விடியக் கருக்கலிலேயே எழுந்து, பின்புறக் களத்துக் கிணத்தில் நீர் சேந்தி,  அண்டாக்களையும் குடங்களையும் நிரப்பி , முற்றம் தெளித்து பெருக்கி ,  கோலம் போட்டு நிமிர்வதற்கும் , சொர்ணம் தூங்கி விழிக்கவும் சரியாக இருந்தது . குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் . வயிறு பசித்தால் மட்டும் தாங்க மாட்டாள் . இந்த இடத்தில் குழந்தையை  ' வயிற்றுக் கள்ளி  '  அதாவது பசி தாங்க  மாட்டாள் என்று வட்டார வழக்குப் பேச்சில் சொல்லும்போதே கதையின் சஸ்பென்ஸும் ஆரம்பித்து விடுகிறது .


இப்போது குழந்தை பெற்றவளைப் பார்க்க வரும் சித்தியின் பேச்சு , அவளை சொர்ணத்தின் அம்மா வரவேற்பது என்று வரும் உரையாடல்களில் , கிராமத்துப் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள்  வந்து விழுகின்றன அழகாக.


அந்தச் சித்தி அவள் அக்காவிடம், சொர்ணத்தின் அம்மாவிடம் ' ஆமாக்கா இப்பதான் மொத க்  காருக்கு வந்தேன் , சுகமாயிருக்கியா , இனிமே சுகத்துக்கென்ன , கட்டிப் பொண்ணு வந்துட்டா , கட்வுள் இப்பதான் கண்ணைத் தொறந்திருக்காரு '


ஒரு வருஷமா , ரெண்டு வருஷமா, பத்து வருஷமா இல்லாம போச்சே ,பாக்காத கோயிலா , பிடிக்காத டாக்டரா , கடுக்கற  ஜோசியன் கரெக்ட்டாதான் சொல்லி இருக்கான் ,  சொர்ணம் வயித்தில சொக்கத் தங்கம் வரத்தான் செய்யும்னு '


குழந்தை அழவே சொர்ணத்திடம் கொடுத்தாள் சித்தி .


'ஆவு ஆவு ன்னு பறக்குது வயித்துக் கள்ளி ' , அவ அப்பனை மாதிரி '


சொர்ணம் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கணவன் ஆறுமுகம் அங்கே வருகிறான் . ' என்னடி , காலையிலேயே என்னைத் திட்டுறே , நானென்ன வயித்துக் கள்ளனா '


'நான் உங்களையா சொன்னேன் '

பின்ன அவ அப்பன்னா வேற யாரு '


சொர்ணம் தலை குனிந்தாள்  என்ற வரிகளில் கதையின் சஸ்பென்ஸ் லேசாக அவிழ்கிறது .


இப்போது அவள் கணவனைப் பற்றிய விபரங்கள். சென்னையில் தனியார் கம்பெனியில்   கேஷியர் உத்தியோகம் . அவன் நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்தில் குழந்தை பிறந்து விட இவர்களுக்கு மணம்  ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால்  பத்து வருஷத்திலே அவளை அவன் படுத்திய பாடு . 'கடவுளுக்கு கண் இருந்தா கலங்கிப் போவாருன்னு ' சொர்ணத்தோட அப்பா சொல்ற அளவுக்கு  கொடுமை .


பெரம்பூரில் சிறிய வீடு . தண்ணீர்க் கஷ்டம். என்று அந்த நடுத்தரக் குடும்ப வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு முக்கியக்  கருவுக்கு , ஆம் கரு வராத கருவுக்கு ‘ உடனே வந்து விடுகிறார் ஆசிரியர். மூணு வருஷமா குழந்தை வரல்லே. உடனேயே ' சொர்ணத்தோட  மாமியாரோட வார்த்தை , அவள் சம்பந்தியமா கிட்டே இப்படி .


'என்ன செய்வீங்களையோ , ஏது செய்வீங்களோ , எனக்கு பேரப்பிள்ளை வேணும் ' சொர்ணத்தின் மனதில் ஆழமாகப்  பதிந்த வார்த்தைகள் இவை என்பது நமக்கு கதையின் முடிவில் தான் புரியப் போகிறது .


தொடர்வது சொர்ணத்தின் பெற்றோர் எடுக்கும் முயற்சிகள் .


முதலில் முப்பந்தரம் இசக்கியம்மனுக்குப் பொங்கல்


அடுத்தமுறை திருவனந்தபுரம் டாக்டர் பாலகிருஷ்ணன் . அவர் சொல்வது. ' இவளிடம் எந்த மிஸ்டேக்கும் இல்லை,  அவ புருஷனைக் கூட்டிட்டு வாங்க . ' அவள் புருஷன்  அதற்கு மறுக்க , சொர்ணத்துக்கும் மாமியாருக்கும்  வாய்ச்சண்டை இப்படி.


‘நீ மலடு , உன் பெரியம்மா பெண்ணுக்கு குழந்தை இல்லே, அந்த வம்சம்தானே நீ ' என்று குத்த பதிலுக்கு சொர்ணம் ' பெரியம்மா மகளுக்கு குத்தம் இல்லே அந்த அத்தானுக்குத்தான் குறை ன்னு டாக்டர் சொல்லிட்டாரு '


அப்ப என் மகன் மலடனா


ஒங்க புள்ளைய அனுப்பி சோதிச்சுப் பாருங்க , எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா என்ன '


என்று தொடர்ந்த சண்டையில் முடிவில் அவள் கணவன் , நாகர்கோவில் டாக்டர் நடேசனிடம் பார்க்கச் சொல்ல , அவர் ஏற்கனவே இவர்கள் சொல்லி வைத்திருந்த படி , அவள் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கச் சொல்ல , சொர்ணத்தின் பெற்றோர் தவித்துப் போய், மற்றும் ஒரு டாக்டரிடம் , மாதம் ஒருமுறை நாகர்கோயில் விஜயம் செய்யும் , டாக்டர் முத்துகாளியைப்  பார்க்க, சொர்ணத்தையும் அவள் கணவன் ஆறுமுகத்தையும்  அனுப்ப , அவர் கொடுத்த ஏராள மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கணிசமான பணத்தையும் கொடுத்து விட்டு திரும்புகின்றனர்.


இந்த இடத்தில குழந்தைப் பேறுக்குத் தவிக்கும் தம்பதிகளை வைத்து எத்தனை மருத்துவர்கள், எத்தனை மருத்துவமனைகள் தொழில் நடத்துகின்றன என்ற காட்சியை நாம் தொலைக்காட்சிப் பெட்டியிலே பார்ப்பது எல்லாம் ஞாபகம் வரும்படி , அந்த சமுதாய பிரச்னையை நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர்.


அந்தப் பெண் சொர்ணத்தின் மேல் நமக்கு அனுதாபம் ஏற்படும் படி கதையைக்  கொண்டு செல்கிறார் ஆசிரியர். 


அடுத்து வருவது கிளைமாக்ஸ் சீன்


சாத்தான்குளம் கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் செல்கிறது சொர்ணத்தின் குடும்பம். வண்டியை ஓட்டி வருபவன்  முத்துப் பாண்டி. சொர்ணத்தின் அத்தை பையன். அரைக் கிறுக்கு, அநாதை. சொர்ணத்தின் வீட்டில் வளர்ந்தவன். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவான். உடல் வாட்ட சாட்டமாக தேர்த் தடிகளைப் போல.


அவர்கள் அனைவரும் சாத்தாங்கோயிலில் பொங்கல் இட்டு பாயாசம் வைத்து , சாப்பிட்டு அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு , மறுநாள்


காலை திரும்புகிறார்கள். சொர்ணத்தின் முகத்தில் சாத்தாவின் அருள் கிட்டியது போல தனிக் களை.


சில நாட்கள் கழித்து, சொர்ணத்தின் அம்மா, வாயெல்லாம் பல்லாக வருவோர் போவோரிடம் எல்லாம் சொல்வது ' சொர்ணம்  குளிக்காம  இருக்காளாம், எழுத்து வந்திருச்சு '.


தொடர்வது சந்தோஷ நிகழ்வுகள்.டாக்டர் முத்துக்காளியின் மருந்துதான் காரணம் என்று அம்மா சொல்ல , சாத்தாவின் செயல்தான் என்று அப்பா சொல்ல , சொர்ணம் புருஷனைக் கடைக்கண்ணால் பார்க்க , அவன் ஆண்மை நிரூபிக்கப் பட்ட மகிழ்வில் இரண்டும் தான் என்று சொல்கிறான். வளைகாப்பு , குழந்தை பிறப்பு என்று அந்தக் குடும்ப நிகழ்வுகளை எல்லாம் ஆசிரியர் அந்த தெக்கத்திப் பழக்கங்களோடு அழகாக விவரிக்கிறார். கதையில் படியுங்கள் .


குடுமபம் அனைவரும் சேர்ந்து இருந்து சாப்பிட்டு முடிக்க  , பின்கூடத்தில் சாத்தாங்கோயிலுக்கு வண்டி ஓட்டி வந்த முத்துப் பாண்டி, சொர்ணத்தின் அத்தை பையன் , அரைக்கிறுக்கு வயிறு புடைக்க மூன்றாவது முறையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். சொர்ணம் குழந்தைக்கு 'ஆராரோ ,ஆரிராரோ '  என்று அர்த்தத்தோடு தாலாட்டினாள். குழந்தை மீனு பாட்டின் அர்த்தம் தெரியாமலே தூங்கிப் போனாள். முத்துப்பாண்டி பெரிதாக ஏப்பம் விட்டான். நல்லவேளை குழந்தை விழிக்கவில்லை . அவள் கணவன் ஆறுமுகத்திற்கும் தூக்கம் கண்களை சுழற்றியது .


கதையின் கடைசியில் வருகின்ற அந்த ' அர்த்தம் ' என்ற வார்த்தையிலும்,  ஆரம்பத்தில் வந்த 'வயிற்றுக் கள்ளி ' என்ற வார்த்தையிலும் கதையின்  முழு அர்த்தமும் நமக்குப் புரியும்படி கதையை முடிக்கிறார் ஆசிரியர்.


'பொம்பள மனசு ஆழம் ' என்ற சினிமாப்  பாடலும்   நினைவுக்கு வந்தது  . அதோட சேர்ந்தே இக்காலத்தின் குழந்தைப் பேறு மருத்துவனைகளின் செயல்களும் ,   செயற்கைக் கருத்தரிப்பின்  விபரங்களும்  அக்காலத்தில்  குழந்தைப் பேறு இல்லாமல்  கொடுமைப்படுத்தப்பட்டுப்  பத்து வருடங்களாகச் சொர்ணத்தின் மனம் பட்ட பாடும் சேர்ந்தே நினைவுக்கு வந்தன. படிக்கும்போது உங்களுக்கும் இவை அனைத்தும் நினைவுக்கு வரலாம்.  ஆசிரியருக்கும் அழகியசிங்கருக்கும், கேட்ட அனைவருக்கு நன்றி. வணக்கம்.


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


செவ்வாய், 31 மார்ச், 2026

அளவுகோல்கள்- கவிதை

 அளவுகோல்கள்- கவிதை 

-------

தன்னை அளப்பதற்குத்

தயாரித்த அளவுகோலை


மற்றவரை அளப்பதற்கு

மாற்றி முயற்சித்தால்


வளையும் நெளியும்

ஒடியும் உடையும்


அளவுகோல் இழப்பது

அவரவர் இஷ்டம்


அவரவர் கையில்

அவரவர் அளவுகோல்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


புதன், 11 மார்ச், 2026

கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

  கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை  புதிது நிகழ்வு 

-----------------

'புதுச் செருப்பு காலைக் கடிக்கும்' என்பார்கள். ரமணன் அவர்களின் இந்தச் 'செருப்பு ' சிறுகதையோ நம் மனதைக் கடிக்கிறது. நாட்டின் நடப்பு உண்மை நிலவரங்கள் கதையாக உருவெடுத்து வரும்போது அவை காலத்தின் கண்ணாடியாக என்றுமே நிலைத்து நிற்கும். அது போன்ற ஒரு சிறுகதை தான் இந்த 'செருப்பு' சிறுகதை .

கணவனை இழந்து, மகனை வளர்த்து வரும் ஒரு ஏழைத் தாயின் டீக்கடையைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள். நம்மில் பலர் பார்த்திருக்கலாம். கதைக் களம் எனது சொந்த மாவட்டம் ராமநாதபுரத்தை ஒட்டிய நெடுஞ் சாலை ஒன்றில் நடப்பதால், என் மனக்கண் முன் இது போன்று அங்கே ரோட்டோரம் இருக்கும் பல டீக்கடைகள் கண் முன் வந்து போயின .

டீக்கடையில் வரும் குறைந்த வருமானத்தில் தங்கள் வாழ்வை ஓட்டி வரும் அந்த அம்மா, மகன் வாழ்வில் மகனுக்கு வரும் ' செருப்பு ' ஆசை கதையை ஆரம்பித்து வைக்கிறது. 'சீட்டுப் பணம் கட்ட வேண்டி இருக்குப்பா ,இன்று வரும் டீக்கடை வருமானத்தில் எப்படியும் வாங்கி விடலாம் ' என்று அவனுக்கு நம்பிக்கை கொடுக்கிறாள் தாய்.


பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலை த் தொழிலாளிகளுக்கு தினமும் கொடுக்கப் படும் டீ யோடு, சம்பள நாளன்று சில நேரம் விற்கப்படும் பலகாரம் சேர்ந்து குறைந்த வருமானம் தான் அந்தக் கடையில் .


அன்று திடீர் என்று ஒரே கூட்டம். பிளாஸ்கில் மகன் எடுத்துச் செல்லும் டீ கப்புகளோடு துரித விற்பனை. மகனுக்கு ஏக குஷி. தொடர்ந்து பல முறை அந்த பிளாஸ்க் நிரப்பட்டு ஒரு டீ அஞ்சு ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் என்று விற்று விட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறான் மகன். எப்படியும் செருப்பு வாங்கி விடலாம் என்ற உற்சாகம் அவன் குரலில்.


'இப்படி ஓடுகிற பையன் படிப்பில் மட்டும் ஏன் கோட்டை விடுகிறான் 'என்ற கவலை தாய் மனதில். இப்போது போலீஸ் பட்டாளம் வருகிறது . அந்த வழி செல்கிற மத்திய அமைச்சருக்கு வேறு கட்சியினர் கறுப்புக்கொடி காட்டிட கூடி இருக்கும் கூட்டம் என்று தெரிகிறது. போலீஸ் ஒழுங்குபடுத்த தடுப்புகளை நிறுத்தி , கட்சினரைத் தள்ள, தள்ளு முள்ளு.

இடையில் சைரன் ஒலிக்க அமைச்சரின் காரோடு பல கார்கள் பவனி. கடைசியில் வந்த கார் மீது ஏதோ ஒரு கல், பிறகு ஒரு செருப்பு வீசப்பட, போலீஸ் தடியடி . கலவரம். கட்சியினர் ஒட கீழே விழுந்த பையன் மிதிபட்டு அடிபட்டு மயங்க, அவன் பிளாஸ்க் உடைந்து சிதற மயக்கம் தெளிந்து எழுந்த பையன் பார்க்கும் இடத்தில ஒற்றைச் செருப்பு . அவன் பார்த்த பாணியில் புது செருப்பு .

அதை அவன் கையில் எடுக்க , ஆசையோடு பார்க்க ,அவன் மேல் விழுகிறது போலீஸ் கை. 'செருப்பு வீசியவன் இவன்தான்' என்று அடித்து இழுத்துச் செல்கிறது.. அழுது புலம்பும் தாயை ,போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லிப் போக, இவள் சென்று பார்க்கும் காட்சி. சட்டை ட்ரவுசர் உரியப்பட்டு ஜட்டியோடு அமர்ந்திருக்கும் பையனைப் பார்த்து இவள் கதற. அப்போது அங்கே வருகிறார் ஒரு பெரிய மனிதர். சமூக ஆர்வலர். வக்கீல்.

'இவனை ஏன் கிரிமினல் குற்றவாளி போல் நடத்துகிறீர்கள்' என்று அவர் இன்ஸ்பெக்டரிடம் கேட்க, இன்ஸ்பெக்டர் , 'இவன் கையில் செருப்பு

இருந்ததை பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள் ' என்று சொல்ல , 'பொய் சாட்சி' என்று கோபப்பட்டு செருப்பை வாங்கிப் பார்த்து . 'இது நம்பர் ஒன்பது . இந்தப் பையன் கால் அளவு அல்ல. இப்படி பொய்யாக கூப்பிட்டு வந்து இவனைக் கொடுமைப்படுத்தியதற்கும் . பொய்ச்சாட்சி சொன்னதற்கும் உங்கள் அனைவர் மேலும் கேஸ் போடப் போகிறேன், வந்து ஏறுங்கள் ஜீப்பிலே கோர்ட்டுக்கு போகலாம் 'என்று அதட்ட , இன்ஸ்பெக்டர் குரல் தணிந்து ,' பையனைக் கூட்டிப் போகச் 'சொல்ல, தாய் அந்தப் பெரிய மனிதருக்கு நன்றி சொல்ல, கிளம்பும் போது பையனிடம் சொல்கிறா ள் அம்மா ,. 'செருப்பு வாங்கிடுவோமடா' . அவன் சொல்கிறான். 'வேண்டாமம்மா. பிளாஸ்க் உடைஞ்சு போச்சு , அதை வாங்குவோம்' என்று சொல்ல உருக்கமாக முடிகிறது கதை.

------

கதையின் வேகமும் விறுவிறுப்பும் அது ஏற்படுத்தும் கோபமும் இரக்கமும் கதையைப் படிக்கும் போது உங்களால் உணர முடியும். என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியரின் எழுத்து நடைக்கு சில உதாரணங்களை மட்டும் இங்கே சொல்லுகிறேன்.

---------------

'வீட்டு வேலை , கட்டிட வேலை எனப் பல அவதாரங்கள் எடுத்ததில் எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதால் , இறுதியாக அவள் செய்த துணிவான முடிவுதான். இந்தச் சொந்தப் பலகாரக் கடை .பேர் தான் பலகாரக் கடையே தவிர பெரும்பாலும் விற்பது டீ, காபி தான் '


'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் ' என்ற சிலப்பதிகார வரிகளுக்கு எடுத்துக்காட்டான அந்த அபலைப் பெண்ணின் அவல நிலை இங்கே அவளுக்குக் 'காட்டுவது டீக்கடையை '., ஆசிரியரின் இந்த வரிகளில் கதையின் ஆரம்பத்தில் .

---

அடுத்து


'அந்தக் கடையில் கஸ்டமர்கள் குறைவுதான் . என்றாவது கம்பெனி அல்லது ப்ராஜெக்ட் அதிகாரிகள் மீட்டிங் என்றால் கூடுதலாக இருபத்தைந்து கப் டீ விற்பனை ஆகும். காவேரியின் கடையில் வாங்கிய டீயை 'உங்களுக்காகவே ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்தது ' என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்ட்ராக்டர் பாராட்டுக்களை வாங்கிக் கொள்வது காவேரிக்குத் தெரியாது. '


'பொய்மையும் வாய்மை இடத்த' என்ற குறளை ' பொய்மையும் வாழ்க்கை நடத்த ' என்று புரட்டிப் போடும் சிலரின் செயல்கள் இந்த வரிகளில்.


----------------

அடுத்து , கறுப்புக் கொடி காட்ட அங்கே கூட்டம் சேர்வதையும் அங்கே நேரம் கடப்பதையும், ஒரு அழகான உவமை மூலம் ஆசிரியர் இணைத்துக் காட்டும் இந்த இடம்.

'வெயிலைப் போலவே கூட்டமும் அதிகம் ஆகிக் கொண்டு இருந்தது . '

சூடான உவமை. நேரமும் சூடு ஏறுகிறது. கூட்டத்தின் சூடும் ஏறுகிறது . சூடான டீ விற்பனையும்ஏறுகிறது. மிகவும் ரசித்த உவமை,காட்சியின் உணர்ச்சியைக் கடத்தும் உவமை.

-----

அடுத்து அந்தத் தாயின் மன உணர்வையும் மகனின் மன உணர்வையும் எடுத்துக் காட்டும் வரிகள்

மகன் டீ விற்கும் வேகத்தைப் பார்த்து மகனின் சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்., பின் ஏன் இந்தப் பையனுக்குப் படிப்பு ஏறவில்லை

என்ற வருத்தமும் எழுந்தது காவேரிக்கு .

ஒரு தாயின் ஏக்கம் இங்கே தெரிகிறது .

'தின்றத்துக்கு ஏதாவது பண்ணு, அதையும் வித்துடலாம்

. கணபதியின் கண்ணில் செருப்பின் விலைசீட்டு மின்னி மறைந்தது. '

மகனின் செருப்பு ஆசை பளிச்சிடும் வேகம் இங்கே .

இந்த இடத்தில் ஆசிரியர் எங்கள் ராம்நாட் வட்டார வழக்குப் பேச்சு ' தின்றத்துக்கு ' மிகவும் பொருத்தமாக போட்டுள்ளார். ரசித்த இடம்.

--

இப்போது தொடர்கிறது விறுவிறுப்பான காட்சிகள்.

ஸ்பீக்கர் வைத்த டிராபிக் க்ளீயரன்ஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் போலீசாரின் வேகம் அதிகம் ஆனது . கம்பித் தடுப்புக்குப் பின்னால் போகாதவர்களைப் பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள் . களேபரமாகியது. அடி தாளாமல் தொண்டர்கள் ஓட, சிலர் அந்தத் தடுப்பின் மேல் விழுந்து மறுபக்கம் இருப்பவர்களை அது நசுக்கியதால் , வேதனையினால் அவர்கள் கத்த ஆரம்பித்தார்கள் . 'ஐயோ என் பிளாஸ்க் 'என கணபதி கத்த அவன் மேல் விழுந்த போலீஸ் அடியால் அவன் மயங்கி தரையில் விழுந்தான் . கிழிந்த கருப்புகொடிகள். அறுந்த செருப்புகள். ஒரு போர் நிகழ்ந்த இடம் போல் மாறி இருந்தது அந்த இடம்.

நான் சில வரிகளை மட்டும் இங்கே சொல்லி உள்ளேன். நீங்கள் முழுவதும் . படிக்கும் போது அந்தக் காட்சியின் வேகத்தை அவர் வரிகளில் கொண்டு வந்திருப்பதை வியந்து படிப்பீர்கள் .

---

தொடர்ந்து மயக்கம் தெளிந்து அவன் பக்கத்தில் கிடந்த புதிய செருப்பைக் கையில் எடுத்துப் பார்க்க , அவனை அறைந்து இழுத்துச் செல்லும் போலீஸ்.

---

போலீஸ் ஸ்டேஷன் நிகழ்ச்சிகளும் தத்ரூபம்..

அடுத்து அங்கே வருபவர். மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, சிறுகுழந்தை நலம், பெண் பாதுகாப்பு, சமூக நீதி ' விஷயங்களுக்காக வழக்கு போடும் சமூக ஆர்வலர். வக்கீல் .


ஒவ்வொரு சட்ட பாயிண்டுகளாக எடுத்துச் சொல்லி இறுதியில் 'சட்டங்களைத்தான் மறந்துட்டீங்க , சொந்தமா சிந்திக்கிறதையும் மறந்துட்டீங்களா ' என்று அந்தச் செருப்பு ஒன்பதாம் நம்பர் செருப்பு என்பதையும் இவன் சிறுபையன் என்பதையும் சுட்டிக்காட்டி அதட்ட , அந்த இன்ஸ்பெக்டர் 'மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார்' என்று கெஞ்சி , பையனை விடுவிக்க , தாய் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு செல்லும்போது மகனிடம் ' நாளைக்கு உனக்கு செருப்பு வாங்கலாம் ' என்றதும் அவன் பொறுப்போடு ' பிளாஸ்க் வாங்கலாம் , செருப்பு வேண்டாம் ' என்று பதில் அளிக்க ,மகன் கணபதியைக் கட்டி அணைத்துக் கொண்டார் காவேரி என்று முடிகிறது கதை.

-------------

நான் மேலே விவரித்தது போல் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வர வைக்கும் வர்ணனைகள், வசனங்கள். அதோடு சேர்ந்து அந்தத் தாயின் பாசமும், மகனின் செருப்பு ஆசையும் , அரசியல்வாதிகள் , காவல் துறையினர் , சமூக ஆர்வலர்கள் போன்றவர்களால் அவர்கள் எப்படிப் பாதிக்கப் படுகின்றனர் , பாதுகாக்கப் படுகின்றனர் என்றவற்றையும் விவரித்து , காலத்தின் கண்ணாடியை நம் பக்கம் திருப்பி வைத்துக் காட்டி, 'முடிவில் நல்லதே நடக்கும்' என்ற நம்பிக்கையும் கொடுத்து முடியும் சிறப்பான கதை.


என் மனதைக் கடித்த இந்தச் ‘ செருப்பு’ படிக்கும் போது உங்கள் மனதையும் கடிக்கும்


ஆசிரியர் ரமணன் அவர்கட்கு வணக்கங்கள். அழகியசிங்கருக்கு நன்றிகள். அனைவர்க்கும் நன்றி. வணக்கம்.


-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

என் சோகக் கதையைக் கேளுங்க - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு

 என் சோகக் கதையைக் கேளுங்க  - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு  

------------------ 


நன்றி சுந்தரராஜன்  சார் வணக்கம் நண்பர்களே. என்  சோகக் கதையைக்   கேளு தாய்க்குலமே ,தந்தைக்  குலமே, தாத்தாக்  குலமே, பாட்டிக்  குலமே  இது என்னுடைய பாட்டைப் பற்றி நான் பட்ட பாடு  .


 இந்த இசை புதிது குழு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே  நான் பாத்ரூம் லே  பாடுவேன் . அந்தச்  சுவர்கள் எதிரொலிச்சு எக்கோ வோடு சேர்ந்த என்னுடைய பாட்டைக்  கேக்குறப்போ எல்லாம்  எனக்கு எஸ்பிபி சார்  குரல் தான் ஞாபகம் வந்துச்சு.  நானும் எஸ்பிபி மாதிரியே  பாடுறேன் அப்படிங்கற ஒரு பிரமை  கூட வந்துச்சு.


 அதனால என்ன ஆச்சுன்னா பேஸ்புக்ல,  முகநூல்ல என்னோட பாட்டுகளை எல்லாம் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம அப்பவே போட ஆரம்பிச்சுட்டேன்.  எனக்கு முகநூலில் நூத்துக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள் .ஆனா எனக்கு அந்தப் பாட்டுக்களுக்கு எல்லாம் ஒரு லைக் கூட வரல . ஒரு மாசம் கழிச்சு ஒரே ஒரு லைக் வந்துச்சு . அது யார் போட்டதுன்னா அது நான் போட்டது தான்.  ஆனா நம்ம ஒரு லைக்குக்கு  மேல போட முடியாது என்கிறதுனால அந்த ஒரு லைக் தான் ஒரு மாசமா ஓடுச்சு என்னோட ஒவ்வொரு பாட்டுக்கும்.  


அடுத்த மாசம் இன்னொரு லைக் வந்துச்சு. அது யாருன்னு பார்த்தா என்னோட  மனைவியோட லைக். அவங்களுக்கு முகநூல் உருவாக்கிக் கொடுத்தது நான் தாங்க. ஆனா அவங்க அதுக்கு பிறகு வீட்டு வேலைகள் ஜாஸ்தி இருந்ததினால் பேஸ்புக் பக்கமே வரல .அப்புறம்  எப்படி இன்னொரு லைக் வந்துச்சுன்னு கேக்குறீங்களா. நீங்க புத்திசாலி .கரெக்டா யோசிச்சுட்டீங்க.  ஆமாங்க அவங்களோட லாகின் பாஸ்வேர்டை உபயோகப்படுத்தி நானே போட்டேன் இன்னும் ஒரு லைக் .


இது ஏன் இந்த லைக் குக்காக இவ்வளவு அலையுறேன்னு கேக்குறீங்களா. இந்த பேஸ்புக்ல என்னோட பிரெண்ட்ஸ் சில பேருக்கு 100 லைக்கு க்கு  மேல வருதுங்க .என்னென்னமோ போடுறாங்க. எல்லாத்துக்கும் லைக். அந்த ஒரு போட்டியினால் தாங்க நானும் இது மாதிரி ஏங்க ஆரம்பிச்சேன் ஆனா ஒண்ணும் நடக்கல .அப்பத்தான்  இன்னும் ஒரு ஐடியா வந்தது.


 சரி இது பேஸ்புக் ரொம்ப கூட்டமா   இருக்கு .நம்ம வாட்ஸ் அப்ல ஒரு சின்ன குரூப் ஆரம்பிச்சு அதுல பாட்டுக்கள் எல்லாம் போட்டா அந்த நண்பர்கள் எல்லாம் லைக் பண்ணுவாங்க .அப்படின்னு ஒரு நம்பிக்கை. இதை  நம்ம அழகிய சிங்கர் கிட்ட சொல்லி இசை புதிது அப்படின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமா அப்படின்னு கேட்டேங்க அவருதான் புதுசு புதுசா ஆரம்பிக்கிறதுல  ரொம்ப ஆர்வமானவராச்சே.


 'ஓகே ஆரம்பிங்க' அப்படின்னுட்டாரு, ஆனா ஒரு கண்டிஷன் போட்டு .'சினிமா பாட்டு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்காதுங்க. கர்நாடிக் மியூசிக் தெரிஞ்ச யாரையாவது ஒருத்தரை சேர்த்து கிட்டு  ஆரம்பிங்க' அப்படின்னாரு .அப்பத்தான் நான் குவிகம்  குரூப்ல நம்ம சாந்தி மேடத்தோட  பாட்டு கேட்ட ஞாபகம் வந்துச்சு


அவங்க கிட்ட கேட்ட உடனே அவங்க உடனே சரி ன்னுட்டாங்க . நாங்க ஒரு பத்து பேரு தினசரி கர்னாடிக்  பிராக்டிஸ் பண்றோம் .ஆரம்ப காலத்தில் இருந்தே கத்துக்கிட்டவங்க . நான் எல்லாரையும் சேர்த்து விடுறேன்.நாங்க பாடுகிறோம், ன்னு வந்தாங்க .ஆனா எல்லாம் ஒரே கர்நாடிக் பாட்டா இருந்துச்சா அவங்களுக்குள்ள லைக் போட்டுக்கிட்டாங்க .என்னோட சினிமா பாட்டு, ஒரே ஒரு பாட்டுக்கு ஒரே ஒரு லைக் தான் வந்துச்சு . அது சாந்தி மேடத்தோடது.வேற வழியில்லே அவங்களுக்கு. 


 என்னடா பண்றது, அப்படின்னு யோசிச்சு அப்புறம் ஒரு ஐடியா வந்துச்சு. நமக்கு தெரிஞ்ச சினிமா பாடல் நண்பர்கள், இந்தியன் பேங்க் ,  நவீன விருட்சம் குரூப்ல இருக்குற வேற  சில பேர் எல்லாம் அதில் சேர்த்து விட்டேன் . இனிமேலாவது நமக்கு லைக் போடுவாங்களா அப்படின்னு நினைச்சா ,   அவங்க  என்ன பண்ணாங்கன்னா எல்லாரும் காலைல வந்து  எல்லாம் ஒரு சினிமா பாட்டு போடுவாங்க .அப்புறம் காணாம போயிருவாங்க.  மறுநாள் காலையில தான் வந்து இன்னொரு பாட்டு போடுவாங்க.  மத்தவங்க பாட்டுகளை கேட்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை . நான் காலையில, மத்தியானம் ,சாயந்திரம் எல்லாம் போய்ப்  பார்க்கிறது. யாராவது ஒரு லைக் போட்டு இருக்காங்களா. ஒரு லைக் கூட கிடையாது. 


இதை பத்தி யோசிக்கறதுக்காக பக்கத்துல அண்ணா  பார்க்குன்னு  ஒண்ணு  இருக்கு கோடம்பாக்கத்தில். அங்கே போய் உட்கார்ந்து அப்படியே கண்ண மூடிக்கிட்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் .அப்பத்தான் திடீர்னு ஒரு ஞானோதயம் வந்துச்சு .இந்த புத்தருக்கு போதி மரத்தடியில் வந்த மாதிரி,  எனக்கு ஒரு புளிய மரத்தடியில் வந்துச்சு. எப்படி வந்துச்சுன்னு தெரியாது.  புளியமரத்து மேல பிசாசுகள் தான் இருக்கும்னு சொல்லுவாங்க.  இந்த பிசாசுகள்னால வந்த ஞானோதயமா   என்னன்னு தெரியல. ஆனா வந்திருச்சு .  


ஆஹா மத்தவங்க பாட்டு கேட்டு  நம்ம ஒரு லைக் கூட போடவில்லை .அப்புறம் எப்படி மத்தவங்க நமக்கு லைக் போடுவாங்க அப்படிங்கிறது மனசுல உரைச்சுச்சு .  மறுநாள் பார்த்தேன் 


கர்நாடிக் மியூசிக் பாட்டு ஏதாவது ஒண்ணு  ரெண்டு கேட்கிறது .சினிமா பாட்டு ஒண்ணு  ரெண்டு கேட்கிறது.  இவர்களுக்கு எல்லாம் லைக் போடுறது அப்படின்னு ஆரம்பிச் சேன். என்ன ஆச்சரியம் . நான் போட்ட லைக் போட்டவங்க எல்லாம் திருப்பி எனக்கு லைக்  போட ஆரம்பிச்சிட்டாங்க .அதான் ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல .ஒரு கன்னத்தில் அடிச்சா இன்னொரு கன்னத்தை காமிங்க .சே சே அது பொருத்தமான பழமொழி இல்ல.     ஏதோ ஒண்ணு. பேச்சிலே ஏதாவது பழமொழி சொல்லணும்னு சில பேரு பொருத்தமே இல்லாத பழமொழி எல்லாம் சொல்லிட்டு அவங்களே ரசிப்பாங்களே,  அது மாதிரி முயற்சி பண்ணினேன். சும்மா. பதிலுக்கு பதில் அப்படிங்குற மாதிரி, அந்த நாலு பேராலே  எனக்கு நாலு லைக் வந்துச்சு. திருப்பி இன்னும் ஒரு நாலு பேருக்கு போட் டேன். இன்னும் ஒரு நாலு லைக் எனக்கு. இப்படி  கொஞ்சம் கொஞ்சமா லைக் கூடிக்கிட்டே போச்சு.


ஆனா  என்ன பிரச்சனையாச்சுன்னா .  நான் இந்த பாட்டு கேக்கிறதாலே  வேற எந்த வேலையும் பண்ண முடியல. காய்கறி வாங்கிட்டு வாங்கன்னு வீட்ல சொன்னா, கொஞ்சம் இருமா ஒரு பாட்டு கேட்டு லைக்  போட்டு வந்துடறேன், அப்படின்னு சொல்ல  வெறுத்துப் போயிட்டாங்க  வீட்டுல . பெரிய பிரச்சனை ஆயிடுச்சு . சாப்பாட்டுக்கே  பிரச்சனை வந்துடும் போல இருந்துச்சு . 


சரின்னு அப்புறம்,  கொஞ்சம் பாதி கேட்கிறது, லைக் போடுறது அப்படிங்கற மாதிரி ஆரம்பிச்சேன்.  நம்ம  ஒரு பத்தடி பாஞ்சா நம்ம நண்பர்கள் நூறு அடி பாய ஆரம்பிச்சிட்டாங்க.   நானாவது பாதி கேட்டு போட்டேன் .அவங்க எதுவும்  கேட்காமலே போட ஆரம்பிச்சிட்டாங்க. 20 , 30 லைக் வர ஆரம்பித்தது . அவங்க  கேக்காம  போட்டாங்கன்னு எப்படி எனக்குத் தெரியும்கிறீங்களா .இப்ப நான் ஒரு மூணு நிமிஷம் பாட்ட அப்ப தாங்க போட்டு இருப்பேன். அடுத்த செகண்ட் ஒரு லைக் சிம்பல் வந்துரும் கேட்டிருக்க முடியுமா. சொல்லுங்க. ஏதோ ஒரு நட்புக்காக , பாசத்துக்காகப் போடுறாங்கன்னு புரிஞ்சு போச்சு. 


இன்னும் சில நண்பர்கள் ஒரு படி முன்னாலேயே போயிட்டாங்க. அதாவது என்ன பண்ணாங்கன்னா' சார் நாங்கள் லைக்கோட இருக்கோம் . பாட்டு சீக்கிரம் போடுங்க . நாங்க லைக் போட்டுட்டு போகணும்,. எங்களுக்கு வேற வேலை எல்லாம் இருக்கு. நாங்க போகணும் '.


'என்னப்பா இவ்வளவு அவசரமா கேக்குறீங்க'ன்னு சொல்லிட்டு நான் ஏதாவது பாட்டு போடுவதற்கு முன்னாலேயே ஒருத்தர்  ஒரு கமெண்ட் போட்டுருவாங்க . 'நீங்க பாடப்போகும் பாட்டு மிகவும் அருமையாக இருந்தது' அப்படின்னு ஒரு கமெண்ட் . இந்த மாதிரி ஒரு போலியான பொய்யான லைக்குகளும் பாராட்டுக்களும் வந்து குவிய ஆரம்பிச்சுச்சு.


 அப்புறம்தான் தெரிஞ்சுச்சு அவங்க அவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு .வராங்க, பாடுறாங்க. சில பாட்டு கேக்குறாங்க. இந்த லைக் கமெண்ட் இதெல்லாம் வேணும்னு நம்ம எதிர்பார்க்க கூடாது. நமக்கு ஏதோ பாடணும்னு  ஆசையா இருக்கு .பாடுவோம் அத்தோடு நிறுத்திக்கணும் .


எனக்கு 100 லைக் வேணும், 200 லைக் வேணும். என் பாட்ட பாராட்டணும் இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு, நம்ம குரூப்ல போனோம்னா இந்த மாதிரி போலித்தனமான லைக்குகளும் பாராட்டுக்களும் தான் வந்து குவியும் .அதுவும் சில பேரு என்ன பண்ணுவாங்கன்னா நம்மள பத்தி ஒண்ணு  எழுத மாட்டாங்க ஆனா நம்ம பாட்டுக்கு ரிப்ளை பண்ணி இருப்பாங்க.


 'பாட்டு நல்லா இருந்துச்சுன்னு ' ஒரு வரி. நம்ம எப்படி பாடினோம்னு விபரம் இருக்காது. அந்தப்  பாட்டைப் பற்றிய தங்களுடைய அறிவை வெளிப்படுத்திகிறதுக்காக என்னோடு பாட்டை  உபயோகப்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துச்சு.  ஏன்னா சும்மா அதைப்   பத்தி எழுத முடியாது. இல்லையா .ஏதாவது ஒரு பாட்டோட  கனெக்ட் பண்ணித்  தானே எழுதணும். அதுக்கு என்னோட பாட்டு தான் கிடைச்சுச்சு .


சில பேரு நான் ஒரு பாட்டு போட்டிருப்பேன். அவங்க இன்னொரு பாட்டைப் பத்தி பாராட்டி எழுதியிருப்பாங்க.  இப்படி எல்லாம் சில பேரு பயங்கர டெக்னிக்கோடா நமக்குப்   பாராட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்காக நாம பாடுவதை நிறுத்த முடியுமா. நம்ம விருப்பத்துக்கு நம்ம சந்தோஷத்துக்கு பாடுவோம் .எப்பவாவது சில பேரு கேப்பாங்க . நிஜமான பாராட்ட போடுவாங்க. 


நானும் அதுமாதிரி தாங்க        போடுறேன். சுருக்கமா சுவையாக,  அவங்க பாடுறதைப்  பற்றி போடுறேன். அதே மாதிரி சில பேரு போடுறாங்க. அது போதும் நமக்கு .quality  is  more  important  than  quantity . இல்லையா. நம்ம பாட்டும் சரி, பாராட்டும் சரி , quality யோட  இருக்கட்டுமே .


அதிகப் பாராட்டும் லைக்கும் quality யோட  வரட்டும்.  அதுவரைக்கும் பொறுமையாகக்  காத்திருப்போம் காத்திருப்பது தானே வாழ்க்கை. 


 நன்றி வணக்கம்


--------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English   


புதன், 11 பிப்ரவரி, 2026

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை 

------------


நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே.

இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான். 


நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் சடலங்களும், திரைசீலைக்குப் பின்னே தெரியும் வெட்டி எடுக்கப்பட்ட இரு கால்களும் , அதை ஒரு மர்ம பங்களாவாக ஆக்கி , அதை விற்க முயலும் அதன் சொந்தக்கார பரம்பரைப் பணக்கார வியாபாரிக்கு இறுதியில் அதை சொன்ன விலைக்கு பாதி விலைக்கு விற்க வைக்கிறது. 


இந்த வியாபாரியும் பல தகிடுதத்தங்கள் செய்து வியாபாரத்தில் செழித்துக்கொண்டிருப்பவன். இதில் பாதி விலைக்கு அதை வாங்கி அதே விலைக்கு மற்றொருவரிடம் ஒத்திக்கு விடும் இன்னுமொரு, மோசக்காரனுக்கு மோசக்கார வியாபாரியைக் காட்டி , அந்த பங்களாவின் மர்மத்தையும் முடிச்சவிழ்த்து விடுகிறார், தனக்கே உரிய பாணியில் ஆசிரியர்.


 மர்மக் கதைகளின்  முடிவைச்  சொல்லக் கூடாது என்பதால் , ஆசிரியரின் எழுத்து நடையில் நான் ரசித்த சில இடங்களை மட்டும் சொல்லி ,முடிவை கதையில் , அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில்  படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் ஒரு வரியில் காட்டப்பட்ட , பக்கத்து மெடிக்கல் கல்லூரியுடன் தொடர்பு  படுத்தி கதை முடிகிறது  என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் . 

-----------

ரசித்த அந்த வர்ணனைகள். முதலில் அந்த நாயக்கர் பங்களா பற்றிய வர்ணனை . 


பங்களாவா அது. அரண்மனை. இருபது செண்டு நிலத்தில் மூவாயிரம் சதுர அடியில் நறுக்கி எடுத்த மைசூர்பாகு    துண்டம் போல் உருண்ட தூணும் தேக்கு ஜன்னலுமாய், சுற்றிவர வாதநாராயண மரமும் வேப்ப மரமும் குசலம் விசாரிக்க, தாஜ் மகால் கணக்குக்கு ஜொலிக்கும் அந்த கட்டடத்திற்கு ஒரு காலத்தில் அசாத்திய கிராக்கி . 


வாசல் புறம் கன்னங்கரேலென்று ஈட்டியாய்க் குத்தி நிற்கிற வாசல் கதவு .  தாண்டி உள்ளே நுழைந்தால் கார் நிற்கும் போர்டிகோ வரை பவழ மல்லிகைச் செடிகளின் குபீர் வளர்ச்சி + வாசம் . 


எங்கும் இல்லாதபடி நாலு மனோரஞ்சித செடி மரங்களுக்கு அந்த பங்களா பிரசித்தம் . பின்பக்கம் தோட்டம் . ஜாதிக்கு ஒரு மரம் சத்தியமாய் உண்டு . ஆங்கிள் கிராதியில் ஊஞ்சல் . இடுப்புயர  சிமெண்டு திட்டில் , சின்ன சைஸ் பிள்ளையார் அன்று அந்தத் தோட்டம் கூட அட்டகாச ரகம்.  

-----

முன்னும் பின்னுமாக கண்முன் கொண்டு வருகிறார்  நாயக்கர் பங்களாவை ஆசிரியர். அந்த இயற்கைக் சூழலோடு கூடிய அந்த அழகிய பங்களாவில் போய்க் குடியேற விரும்புவோர்க்கு அடுத்து வரும் வர்ணனைகள் அதிர்ச்சி அளிக்கும்.

------

ஊரு சுடுகாட்டில் புதைக்கப்படும் கன்னிப்பெண்களின் பிணங்கள் பங்களாவில் இருந்து தோண்டி எடுக்கப்படுவது பங்களாவின் பிரதான மர்மங்களில் ஒன்றாகி விட்டது . ஒருமுறை வீட்டின் உள் ஒரு திரைசீலைக்குப் பின்னே இரண்டு கால்கள் தெரிந்தன .  'யார் அது ஒளிந்து கொண்டு ' ... திரைச் சீலையை விலக்கி விட்டுப் பார்த்தால் இதயத்தைத் தீக்குச்சியால் உரசின மாதிரி ஒரு வலி அங்கே யாரும் இல்லை.   வெட்டி எடுத்த இரண்டே இரண்டு கால்கள் மட்டும் தனியாக. 

----

ஒரே நிமிடத்தில் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுகிறார் ஆசிரியர் தன் எழுத்துத் திறமையால் . இயற்கை அழகோடு நம்மை வா வா என்று ஏங்க வைத்த அந்த நாயக்கர் பங்களா , இப்போது பேய்ப் பங்களாவாக மாறி நம்மைப் போ போ என்று ஓட வைக்கிறது . 


இதற்கு நடுவில் அந்த பங்களாவை விற்க முயலும் சொந்தக்கார வியாபாரியின் வியாபார மோசடிகள்  

----------------

அப்பளம் போடுபவனில் இருந்து யமஹாவை விற்பவன் வரை புரணி கிளப்பி விட்டு சாய்த்த அவன் தந்திரங்கள் .

‘அந்த அப்பளத்திலே மரத்தூள் மாவு கலந்திருக்கு , லிவருக்கு ஆபத்து ,’

‘அந்த யமஹாவா, அது பன்னி அடிச்ச வண்டிங்க , வாங்கினா தொலைஞ்சிங்க .’ 


‘பிஸினஸிலே இதை எல்லாம் பண்ணிதான் பெரிய ஆள் ஆயிருக்கேன்’ என்று பெருமை அடித்துக் கொள்ளும் அவனுக்கு  ஆப்படிக்க மோசக்காரனுக்கு ஒரு மோசக்காரன் வந்து , இப்போது அவனது அந்த பங்களாவை விற்க முடியாத நிலை. 

இறுதியில் பாதி விலைக்கு அதை விற்க முடிவு செய்ய , அதை வாங்குபவன் அந்த மோசக்காரனுக்கு மோசக்காரன். இப்போது அவிழ்கிறது  அந்த பேய்பங்களாவின் மர்ம முடிச்சுகள் . நீங்கள் கதையில், அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில்   படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் . 

----

மிகவும் விறுவிறுப்பான கதை. மர்மத்துக்கு மேல் மர்மம் . அதற்கு நடுவில், ‘நாம் மற்றவரை ஏமாற்றினால் , நம்மை ஏமாற்றவும் ஒருவன் வருவான்’ என்ற ஒரு சிந்தனையையும் கிளப்பி விட்டு கதை முடிகிறது. 

இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மர்மக் கதைகளும் ஆன்மீகக் கதைகளும் எழுதி புகழ் பெற்றவர். ஆன்மிகம் கலந்த அவரது மர்மத் தொடர் கதையான   ' ஆனந்த விகடனில்  வெளிவந்த ' இறையுதிர் காடு  ' நம்மால் மறக்க முடியாத ஒன்று. இந்த ' இந்த நாயக்கர் பங்களா கதை மர்மமும் வியாபார தந்திரமும் கலந்த வித்தியாசமான கதை. படித்து ரசியுங்கள். வாய்ப்புக்கு நன்றி அழகியசிங்கர் . 


-------------நாகேந்திர பாரதி 

  

My Poems/Stories/Articles in Tamil and English  


ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2

  ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2  ------------------------------ இந்தப் பதிவுக்குரிய படங்களும் புகைப்படங்களும் நானோ, எனது மனைவி  உஷா மேடம...