செவ்வாய், 15 செப்டம்பர், 2026

மண்டாடி - திரைப்பட விமரிசனம்




மண்டாடி - திரைப்பட விமரிசனம் 

----------------


மீனவர் வாழ்வியலின் முக்கிய அங்கமான ' பாய்மரப் போட்டியை ' மையமாக வைத்து ஜனரஞ்சகமான 'மண்டாடி  ' படம் கொடுத்துள்ளார் வெற்றி மாறனின் சிஷ்யர் மதிமாறன். 


முகவை  மாவட்டத்தில்  ( வைகை நதியின் முகத்துவாரம் - ராமனாதபுரம் மாவட்டம் ) பிறந்தவன் என்பதால், நான் இதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும், அதுவும் தியேட்டரில் ஐமேக்ஸ்சில் நடுக்கடலில் நடக்கும் போட்டிக்  காட்சிகளின் பிரமாண்டத்தை அனுபவித்துப்  பார்க்கவேண்டும் என்று  ஆசைப்பட்டு எங்களை வடபழனி 'போரம் மாலில் ஐமேக்ஸ் 'தியேட்டரில் முன்னமே புக் செய்து அழைத்துச் சென்ற என் மகள் ஜானகிக்கு முதலில் நன்றி. 


ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்  படம்  ' வேற லெவல் ', நமது பாரம்பரிய ' பாய் மர விளையாட்டின்' பெருமையை  நமக்கும் உலகுக்கும்  எடுத்துரைக்கும் மண்மணம் , இல்லை கடல் மணம் கமழும்  கவிதை இது. 'முகவை மைந்தன்  ' குழுவின் தலைவனாக ' மண்டாடியாக ' நடிக்கும் சூரி அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்  . இனி இவர் என்றும் ஆக்ஷன் கிங் . 


அதே போல் வில்லனாக வருபவரும் வெறித்தனம்.   சூரியின் முன்னாள்  காதலியாக வரும் மஹிமா படத்தின் இறுதிக்காட்சில் நடிப்பில் தூள் . சத்யராஜ்  உட்பட ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கதாபாத்திரத்தை உணர்ந்த நடிப்பு .


இண்டெர்வெல்லுக்கு முன்பு வரும் நடுக்கடல் பாய் மரப் போட்டியும்  க்ளைமாக்சில் வரும் நடுக்கடல் பாய் மரப் போட்டியும் முகவை மாவட்ட  ' தொண்டி ' ஊருபக்க கடற்பக்கம் எடுத்த பிரமாதமான பிரம்மாண்டமான ஒளிப்பதிவு, ஸ்டண்ட் காட்சிகள். 


நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் விறுவிறுப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை ,  கொண்டு வந்த பாப்கார்னைக் கூடக் கொறிக்காமல், ஒவ்வொரு பிரேமையும் விட்டுவிடாமல் பார்க்க வைத்த விறு விறு படம். தயாரிப்பாளர் இதை, தெலுகு, கன்னடம் , மலையாளம் , ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து  வெளியிட்டிருப்பதே இதன்  வெற்றிக்கு சான்று. 


 ஐமாக்சில் பார்த்த அனுபவம் தனி சுகம். திரும்பி  வந்தபின் , யூடியூபில் இதன் ரெவியூ பார்த்தபின்  , இதன் நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் , டெக்னீஷியன்களுக்கும் குவிந்துள்ள பாராட்டுகளை பார்த்தபின்   இன்னும் ஒருமுறை , இந்தப் படத்தை OTT யில் வந்தபின்னும் பார்க்க வேண்டும். 


--------நாகேந்திரபாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


காத்திருப்பு -குறுங்கதை

 காத்திருப்பு  -குறுங்கதை 

-------------------


வாசலில் காத்துக் கிடப்பதே ஆச்சியின்  வேலையாகி விட்டது. இட்லிக்கடை ஜோலி முடிஞ்சதும் , தனது வயிற்றுக்கும் பூனையின் வயிற்றுக்கும் ஏதோ போட்டு விட்டு இப்படி வெறித்த பார்வையோடு இருக்கும் அவளிடம் ஊர்க்காரர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.


 ' அந்த ஓடுகாலி மகளை மறந்திடு  ஆச்சி. புருஷன் போனப்புறம், இட்லிக் கடை வருமானத்தில் அவளைப்  பார்த்து பார்த்து  வளர்த்தே, படிக்க வச்சே, இப்படி வாத்தியாரோட ஓடிப்போவான்னு நினைக்கவே இல்லை. இனி வரமாட்டா., உன் காலடியில் கிடக்கே இந்தப் பூனை,.  அதுவும் மியாவ் , மியாவ் ன்னிட்டு  அவளை நினைச்சிட்டே உன் கால் மாட்டிலேயே  கிடக்கு. எந்திரி  ஆத்தா’


'ம்ஹூம்.. ' . தெருவை வெறித்த அவ பார்வை மாறவில்லை. 'அவ வருவா , , என் வளர்ப்பு, ஏதோ பருவக் கோளாறில் ஓடிட்டா. நான் ஊத்தின கஞ்சியும், பேசின பிரியமும், அவ ரத்தத்தில் இருக்கு. பருவக் கோளாறு  தெளிஞ்சதும் வருவா, அவளுக்கு நான், எனக்கு  அவள், அவளுக்குத் தெரியும். அவளை வளர்த்த என்னையும், அவள் வளர்த்த இந்தப் பூனையையும் அவ எப்படி மறக்க முடியும், வருவா. '


-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


சைக்கிள் பேசினால் - குவிகம் கவியரங்கக் கவிதை

 

சைக்கிள் பேசினால் - குவிகம் கவியரங்கக் கவிதை 

------------

 

பாராட்டி மகிழ்வதற்குப்

பரிசொன்று உண்டென்றால் - அதை

வாங்குகின்ற தகுதி என்றும்

வவேசு ஆசானுக்கே

 

 நாங்கள் பேசியதும் எழுதியதும்

பிரம்மாண்டம் ஆக்கி விட்டு

நாங்களா பேசினோம் என்று

பிரமிக்க வைத்துவிட்டு

பாராட்டில் மூழ்க வைக்கும்

பண்புக்குத் தலைவர் அவர்.

இந்தக் கவியரங்கின்  தலைவர் அவர்

 

அந்த ஆசானை வணங்கி விட்டு ,

அனைவரையும் வாழ்த்தி விட்டு 

 என் சைக்கிளின்

ஆதங்கம் தொடங்குகிறேன்.

 

----

இப்போது என் சைக்கிள் பேசுகிறது , என்னைப் பார்த்து

----------------

அடேய் பையா

அரை ட்ரவுசர் பையா

என்னடா முறைக்கிறாய்

 

சூட்டும் கோட்டும் போட்டு

காரும் பிளைட்டுமாக

உன் காலம் மாறினாலும்

 

எனக்கு என்றும் நீ

அரை ட்ரவுசர் பையன்தான்

உனக்கு என்றும் நான்

ஓட்டை சைக்கிள் தான்

 

பத்து பைசா வாடகைக்கு

ஒரு மணி நேரம் எடுத்து  

இந்த ஓட்டை சைக்கிளேறி

ஓடின ஓட்டமெல்லாம்

உள்ளே இருக்குதாடா

 

செயின் கழன்றதுவும்

விழுந்து எழுந்ததுவும்

மாட்டும் முயற்சியிலே

கையெல்லாம் கருப்பாகி

கண்ராவி ஆனதுவும்

 

வீட்டில் திட்டு வாங்கி 

விளையாட்டு நின்றதுவும்

திரும்ப ஆரம்பிக்கக் 

காசு திருடியதும்

 

உள்ளத்தின் உள்ளே பார்  

குற்றப் பக்கங்களில்

கொஞ்சம் அதுவும்தான்

 

 

 

ஏற்றிவிட்டு தள்ளி விட்டு

பிடித்தபடி  ஓடிவந்து

தெரியாமல் கையை விட்டு

நீ தெளிவாக ஓட்டுவதை

பார்த்து ரசித்தானே

பழைய நண்பன் அவன்

 

பின்னாளில் ஒருநாளில்

கிராமம்   திரும்பிவந்து

அவனைத் தேடிப் போய்

அவலச் செய்தி கேட்டு

அழுது புலம்பினாயே

 

மறந்தா போயிருப்பாய்

என்னை மறந்தாலும்

அவனை மறக்க மாட்டாய்

உன் அன்பு உள்ளத்தை

அறிந்ததால் சொல்லுகிறேன்

 

ஓட்டை சைக்கிள் போய்

ஒழுங்கான சைக்கிளாய்

என்னையும் வாங்கினாய்

வேலைக்குப் போவதற்கு

 

வெண்ணாற்றுப் பாலம் மேல்

நீ விரைந்த வேகத்திற்கு

துணையாய் இருந்தவன் நான்

துள்ளி உருண்டவன் நான்.

 

துண்டால் துடைத்து விட்டும்

தூய்மை ஆயில்  போட்டும்

பார்த்துப் பார்த்து என்னைப்

பராமரித்த காலம் அது

உன்னை மறப்பேனா

உன் பாசம் மறப்பேனா

 

அத்தோடு நின்றதுவா

உன் அன்பின் ஆழம்

ஊற்று நீராகப்

பொங்கியதே பின்னாலே

 

உந்தன்  மகளுக்கும்

பின்னாளில்  பள்ளி செல்ல

எந்தன் மகளொருத்தியை

ஏந்திச் சென்றாயே

 

இருவருக்கும் நோகாமல்

சைக்கிள் பழக்கி விட்டு

பள்ளி செல்லும் அழகை

பார்த்து ரசித்திருந்தாய்

 

அன்பின் வரலாறு

அத்தோடு முடிந்ததென்று

அழுது காத்திருந்தேன்

 

காத்திருப்பு வீணில்லை

கனவு பலித்தது 

குறிஞ்சி பூத்தது

குளிர்ந்தது உள்ளம் 

 

 

உனக்கும் பேத்தி பிறந்தாள்

எனக்கும்  பேத்தி வந்தாள்

 

பிறகென்ன

இருவரின் விளையாட்டு

உன் வீட்டு மொட்டை மாடியில்

உன் துணையோடுதான்

 

சக்கரங்கள் இருப்பதால்

ஓடுவதை உணர்ந்தவன் நான்

ஆம், காலம் ஓடியது

 

ஒவ்வொரு காலத்திலும் வீட்டின்

ஓரத்தில் ஒதுங்கிய நாங்கள் 

ஒருநாள் காணாமலும் போனோம் 

.

ஸ்கூட்டர், கார் என்று உன்

வாகனங்கள்  மாறின .

வாழ்க்கை  மாறியது

வசதியும் மாறியது

 

வேக வாழ்க்கையில்   இருந்து

ஒருநாள் உனக்கு

விடுதலையும் வந்தது

 

இப்போது

நீயும் கனவு உலகத்தில்

நானும் கனவு உலகத்தில்

 

எனக்கு என்றும் நீ

அரை ட்ரவுசர் பையன் தான்

உனக்கு என்றும் நான்

ஓட்டை சைக்கிள் தான்

 

நாம் மட்டுமா அங்கே

அதோ

உன்னை ஏற்றி விட்டு

என்னைத் தள்ளி விட்ட

அவனும்தான்

 

வா வா

குவிகம் வாய்ப்பளித்த

இந்தக் கவியரங்கக் கனவுலகில்

கண்மாய்க் கரையோரம்

பழைய மண் ரோட்டில்

பழகிப் பார்த்திடுவோம்

அந்தப் பழைய வாழ்க்கையை

------

நன்றி வணக்கம் நாகேந்திர பாரதி

 

---------------


My Poems/Stories/Articles in Tamil and English 


சனி, 12 செப்டம்பர், 2026

பொம்மைப் பாட்டி - குறுங்கதை

 பொம்மைப் பாட்டி - குறுங்கதை 

--------------


அந்தப் பூனை செல்வியின் வருகைக்காகக் காத்திருந்தது. அதோ யூனிஃபார்மோடு உள்ளே நுழையும் செல்வி,   வீட்டு சாவியைக் கொக்கியில் மாட்டிவிட்டு , ஷூவைக் கழற்றிவிட்டு , புத்தகப் பையை இறக்கி வைத்து விட்டு  ஓடி வந்தாள். 


 பூனையைத் தூக்கிக் கொண்டு ' இன்னும் கொஞ்ச நேரம் பொறு , ஹோம் ஒர்க் கொஞ்சம் தான் இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன். அப்புறம் விளையாடலாம். ' என்று சொன்னாலும் பூனை சமாதானம் அடையாமல், தான் இருந்த மூலையையும் , இவளையும் பார்த்து ' மியாவ்  , மியாவ் ' என்றது.


 ' சரி இரு, இந்தப் பாலை மட்டும் குடிச்சுட்டு வந்துடுறேன் , அம்மாவும் அப்பாவும் வேலை முடிச்சுட்டு  வர்றதுக்குள்ளே நம்ம ஒரு  ஆட்டம் ஆடிடலாம்.   ஒரே ஒரு ஆட்டம்தான் சரியா. ' என்றபடி அம்மா பிளாஸ்கில் இவளுக்காக ஊற்றி வைத்திருந்த பாலை குடிக்கும் போது, கிண்ணத்தில் கொஞ்சம் பாலை ஊற்றி பூனையையும் குடிக்க வைத்தாள்.


சரி வா' என்றபடி வயர் இணைத்த பிளக் கை    எடுத்துச் சென்று ஒரு முனையை சுவரின் மூன்று பின் சாக்கெட்டிலும் ,மறு முனையை,  அந்த பாட்டி  பொம்மையின் நெற்றியில் உள்ள இரு பின் சாக்கெட்டிலும் மாட்டி  ரிமோட் மூலம் இயக்க ஆரம்பித்தாள். பாட்டி பொம்மை எழுந்து பாடியபடி ஆட ஆரம்பித்தது. 'வா, நம்மளும் சேர்ந்து ஆடலாம். என்று செல்வியும் பூனையும் ஆட ஆரம்பித்தனர். 


வளர்த்த பாட்டி இறந்தபின், பிரமை பிடித்துப் போய் இருந்த செல்வியின் மனநிலை சரியாக மருத்துவர் ஏற்பாட்டின் படி செய்யப்பட்ட அந்தப் பொம்மை வந்தபின் தான் செல்விக்கும் அவள் பெற்றோருக்கும் வாழ்க்கை  திரும்பியது.  பொம்மையின் உள்ளிருந்த பாட்டியின் ஆவிக்குக்  கண்ணீர் வந்தாலும், பொம்மை ஆடுவதை நிறுத்தவில்லை. 


------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


செவ்வாய், 8 செப்டம்பர், 2026

பொம்மையோ பொம்மை - குறுங்கதை

 

பொம்மையோ பொம்மை - குறுங்கதை

-----------


இடுப்பில்,  சூலக் கையோடு பாப்பா. தலையில்,    பொம்மைகள்   நிறைந்த கூடை. மாட வீதியில்   மனோன்மணி. 


இடப்புறச் சத்திரத்து   ஏழைகளும் ,வலப்புற மாடிவீட்டுப்  பணக்காரர்களும்,   வாங்கப் போவதில்லை.   அடுத்தது கிழக்குத்தெரு. பண்டிகைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துக் கொண்டாடும் நடுத்தரவர்க்கம். 


 கிருஷ்ண ஜெயந்திக்கு வீட்டை அலங்கரித்தும்,  வெண்ணையும், சீடையும் படைத்தும், கண்ணன் காலடித்தடத்தை, அரிசி மாவால் வீடெங்கும் வரைந்தும், கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்கள் தான்   வரப்போகும் கொலுவிற்கு வாடிக்கையாளர்கள். . 


 முன்பு இதே போல் தன்னை இடுப்பில் சுமந்து ,  கையில் ஒரு சூலத்தைக் கொடுத்து போக்கு காட்டி  , கூடையில் பொம்மை சுமந்து சென்ற அம்மாவின் முகம் . ' அம்மா' . உன்னைத் தொடர்ந்து நான். அடுத்து கண்மணிப் பாப்பாவா. ' . 


' பெண் பிள்ளை என்றாலே வீட்டு வேலைகள் என்ற  தலைமுறையின் எச்சமாக என்னையும்  பள்ளிக்கு அனுப்பாமல் ,  இழுத்து விட்டவள் நீ.   இதைத் தொடர விட மாட்டேன்.'


' இவளைப்  பள்ளியில் சேர்ப்பேன். பல கலைகள் கற்பிப்பேன். பொம்மைக் கலையும்தான் .  வளர்வாள் சூலம் ஏந்திய சிங்கப் பெண்ணாக, பலருக்கு வாழ்வளிக்கும் தங்கப் பெண்ணாக  ' . எண்ணம்  கலக்க உரத்த குரல் எழுப்பி கிழக்குத் தெருவில் திரும்பினாள். ' பொம்மையோ பொம்மை , உங்கள் வாழ்வில்  வளம் சேர்க்கும் வண்ண வண்ணப்  பொம்மை ' 


------------------நாகேந்திர பாரதி

  

My Poems/Stories/Articles in Tamil and English  


ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

இரண்டு சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

 இரண்டு சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின்  கதை புதிது நிகழ்வு

-------------------------

நன்றி   அழகியசிங்கர் , நன்றி செல்லப்பா சார்  வணக்கம் நண்பர்களே.

 

முதலில் இதுபோன்று இலக்கியப் பரிசுகள் வழங்கும் ராய செல்லப்பா   சார்  அவர்கட்கும் , இலக்கிய ஆய்வுகள் நடத்தும் அழகியசிங்கர் அவர்கட்கும் நன்றியும் வணக்கமும்.

 

முதலில்

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்  அவர்களின் கூண்டினுள் பட்சி  சிறுகதை

இது  நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியர்  பற்றிய கதை . மனைவியை இழந்த பின்னர், வயதான காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்ள ஒருத்தி வேண்டும் என்று சொந்தக்காரர்கள் வற்புறுத்தியதின்  பேரில் இரண்டாம் மணம் செய்து கொள்கிறார் கதையின் நாயகர். வருபவளும் கணவனை இழந்தவள். இந்த வாய்ப்புக்காகக்  காத்திருந்தவள். நாயகனின் வளமான வாழ்க்கையின் மேல் ஆசைப்பட்டு வாழ வந்தவள். அவரின் பெண்களுக்கும் அவளின் பையனுக்கும்  இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கிறது .

 

படுக்கையில் நெருங்கும் கணவனிடம், அவன் சொத்துக்களைக் கேட்டு தொந்தரவு செய்து சிறிது நகைகள் பெற்றும், தன் மகனுக்கு  திருமணம் செய்தும் சாதித்துக் கொண்டவள் தொடர்ந்து சொத்தில் பங்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்த அவள் மேல் வெறுப்புக் கொண்டு அவ்வப்போது அவளை அவள் மகன் வீட்டில் விட்டு வருவதும் பின்பு கூட்டி வருவதுமாக அவர் வாழ்க்கை தொடர்கிறது.

 

ஒரு நாள், இதே போல் ஒரு சண்டையில் அவர் 'பஸ்ஸில் ஏற்றி விடுகிறேன், நீயே மகன் வீட்டுக்குப் போய்க் கொள்' என்று வெறுப்புடன் பேச அதற்குத் தயாராகும் நாயகி, பக்கத்து வீட்டு தோழியிடம் புலம்ப, அவள் இவளை பொறுமையாக இருக்கச் சொல்லி , சொத்து எங்கும் போய் விடாது என்று தேற்றுகிறாள்.  அதை உணர்ந்து அமைதி ஆகும் நாயகியின் மனதில் பொங்கும் எண்ணம் 'தன்னை இன்னும் ஏளக்காரமா அவர் நடத்த இது ஏதுவாகுமோ என்ற பீதியை உண்டாக்கியது. குழம்பித் தவித்தாள். அவள் மனம் கொந்தளிப்பதைப் போல தேநீர் கொதித்து கொதித்து ஆவியாகிக்கொண்டிருந்தது.' என்று முடிகிறது கதை .

 

இங்கே இருவர் பக்க நியாயங்களும், அநியாயங்களும் வெளிப்படும் விதத்தில் கதையைக் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்துத் திறமை. இருந்தும் நாயகியின் பக்க நியாயமே அதிகமாக வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது.

 

கூண்டினுள் பட்சி . கதையின் தலைப்பு. அந்தப் பட்சி கூண்டுக்குள் இருக்க விரும்பி  வந்த பட்சிதான். ஆனால்  அதன் விருப்பம், கூண்டு தங்கக் கூண்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

 

கதையில் அது வெளிப்படும் விதம் இப்படி .

 

இனி தானும் நிறைய நகைகள போட்டுக்கிட்டு புதுசு புதுசா சேலை கட்டிக்கிட்டு டிசைன் டிசைனா பர்தாக்கள போட்டுக்கிட்டு ஊருக்கு வரலாம் அப்போதே காதரின் சொத்துகள் எல்லாம் தனக்கு வந்துவிட்டதாக ஆசையும் பெருமையும் கொண்டாள் சகர்பானு. மறுபடியும் புதுப்பொண்ணாக காதரின் பங்களா வீட்டுக்குள் நுழையும்போது பட்டும் பீதாம்பரமுமாக மகாராணியாக அரியணையில் அமரப்போகும் சந்தோஷம் பொங்கி வழிய இந்த கனவும் ஆசையும் முன்னைவிட அதிகமானது.

 

அந்தப் பெண்ணின் ஆசை பேராசையோ என்று தோன்றினாலும், வயதான காலத்தில் ஒருவனை நம்பி வாழ்க்கைப்  பட்டிருக்கும் ஒருத்திக்கு தன் சுய மரியாதைக்கும், சுயமான எதிர்காலத்திற்கும் ஒரு பொருளாதார பாதுகாப்பை விரும்புகின்ற அடிப்படை ஆசையும் அதற்குள் அடங்கி இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பக்கத்து வீட்டுத் தோழியிடம் அவள் கொட்டி தீர்க்கும் வார்த்தைகளில் இது வெளிப்படுகிறது .

 

'பிடிகொடுத்தே பேசாத கணவரை, தன்னை மனைவியாக ஒரு மனுஷியாக மதிக்காம எப்பவும் முரண்டு பிடிச்சுக்கிட்டே இரிக்கும் மனுசனை எப்பிடி நம்புறது? பொண்டாட்டியா கூட படுக்கணுமாம். ஆனா சொத்த மட்டும் கேக்கக்கூடாதாம். சொத்தில் பங்கு இல்லயாம்! இதென்ன அநியாயம்? இதுக்கா இந்தாள நா ரெண்டாம் கெட்டு கெட்டுனேன். கொஞ்சம் அனுசரிச்சுப்போங்கனு ஃபாத்திமா ஈஸியா சொல்லிருச்சு. எவ்வளவுதா அனுசரிக்கிறதாம்? ' இந்த வார்த்தைகளில் அவளின் வேதனையையும் நமக்கு விளங்க வைக்கிறார் ஆசிரியர்.

 

'இந்த வீடு என்னோட இரண்டு பெண்களுத்தான். இதில் உனக்கு பங்கில்லை என்றும் தன் ஆசையைப் பூர்த்தி செய்வதற்கும் சமையலுக்கும்தான் சகர்பானுவை கட்டியதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.இதில் அந்த நாயகனின் ஆணாதிக்க மனப்பான்மை வெளிப்படுவதும் தெரிகிறது. 

 

முடிவில்

கணவருக்கு சாயா தயாரிக்க ஆரம்பித்தாள். யாரோ அவளைப் பார்த்து கெக்கொலி போட்டு சிரிப்பதைப்போல உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அறை வெறுமையாக இருந்தது. கணவர்தான் சிரிக்கிறாரோ.

அவள் மனம் கொந்தளிப்பதைப் போல தேநீர் கொதித்து கொதித்து ஆவியாகிக்கொண்டிருந்தது.

 

என்ற முடிவில் அந்தப் பெண்ணின் மேல் நமக்குப்  பரிவு ஏற்படுவதை உணர முடிகிறது.

 

கூண்டுக்குள் வந்து சேர்ந்த பட்சிக்கு, வசதி படைத்த அந்த கூண்டுக்காரன் , தங்கக் கூண்டு செய்து தருவதில் தவறில்லை என்றே தெரிகிறது  . அவள் படுக்கையில் பங்கு கேட்கும் அவனிடம், அவன்  சொத்தில் பங்கு கேட்கும் அவள்   நியாயம் புரிகிறது .

 

--------------

அடுத்து

கவுரி சங்கர் அவர்களின் ' நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ' சிறுகதை .

பல வீடுகளில் 'நடப்பதெல்லாம்  அவர் நினைத்து விட்டதால்' வந்த சிறுகதை  . ஆம் சொந்தங்களுக்குள் நிலவும் பணத்  திமிர் போட்டி பொறாமை நாம் பார்த்தது , பட்டது தானே. அதை இந்தக் கதையில் படிக்கும் போது நாம் உடனே கதையோடு ஒன்றி விடுகிறோம். அவ்வாறு ஒன்ற வைத்தது ஆசிரியரின் எழுத்துத் திறமை.

 

அக்கா, தம்பி , - தம்பியின் மகன் அக்காவின்  மகளை விட மூத்தவன் . முறைப்பையன்.தம்பி நியாயமான முறையில் சம்பாதிப்பவன், அக்காவின் கணவர் கையூட்டு வாங்கி கை நிறைய சம்பாதிப்பவர். வசதிகளில் இருக்கும் வேறுபாடு அக்காவை  பணத்  திமிர் கர்வக்காரி ஆக்கி தம்பியையும் தம்பி மகனையும் வார்த்தைகளாலும் செயல்களாலும்  அவமானப்படுத்த , தம்பி குடும்பம் வேறு ஊருக்கு  மாற்றல் வாங்கிச் செல்கிறது . காலம் ஓடுகிறது. தம்பி மகன் அயல்நாட்டுக் கம்பெனியில் நல்ல சம்பளத்தோடு . அவன் விரும்பும் அயல்நாட்டுப் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு நடக்கிறது. கல்யாணப் பத்திரிகையை அக்காவுக்கும் கொடுத்து வரச் சொல்கிறார் தம்பி, தனது மகனிடம்.

 

தயக்கத்துடன் செல்லும் அவனுக்கு அத்தையின் பிரமாண்ட  பங்களா வாசலில் குறைக்கும் நாயும்,  முறைக்கும் பாதுகாப்பு ஊழியரும், நிலைமையை ஓரளவு காண்பிக்க, உள்ளே செல்லும் அவனுக்கும் அத்தையின் பாரா முகமும் பகட்டுப் பேச்சும், அவள் மாறவில்லை என்பதை காட்டினாலும் பொறுமையோடு தன் கல்யாண விபரங்களைத் தெரிவிக்கிறான். ஒவ்வொரு பேச்சுக்கும் அத்தையின் குதர்க்கமான பதிலும், கோபக்கார ஏச்சும் இவன் பொறுமையைச் சோதித்தாலும் , அப்பாவின் குணத்தோடு அமைதியாக இருக்கிறான்.

 

இறுதியில் அவன் சொல்லும் சம்பள விபரங்கள். அயல்நாட்டு சம்பளம் , இந்திய மதிப்பில் வருடம்  ஒரு கோடி என்றதும் , அத்தையின் பேச்சு மாறுகிறது. தன் மகளை மணமுடிக்கச் சொல்லி அவன் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட , மறுக்கும் மருமகனை மறுபடியும் அவமதித்து அனுப்புகிறார். திரும்புகிற அவன் நினைப்பில்  அந்தக் காவல் நாயின் முறைப்பும் குறைப்பும். அத்தையை  ஒத்திருப்பதாக  எண்ணுவதோடு கதை முடிகிறது.

 

இந்தக் கதையின் சிறப்பு இதில் வரும் வசனங்கள் என்றே தோன்றுகிறது. அத்தையின் வசனங்களில் வெளிப்படும் பணத்  திமிர், வெறுப்பும், கோபமும்,ஏளனமும், பொறாமையும், அந்தக் கதாபாத்திரத்தை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன.

உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு .

ஆரம்பத்தில் தம்பியையும் , தம்பி பையனையும் அவமதிக்கும் ஏளன வார்த்தைகள் இப்படி .

"என்னடா ரமேஷ், உனக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புத்தி வரப்போறது கிடையாது. உங்க அப்பன் எப்படியோ குமாஸ்தாவா வேலையில் சேர்ந்து விட்டான். அதுவும் என்னுடைய அப்பா சிரமப்பட்டு அவனை படிக்க வைத்ததால் மட்டுமே. இல்லேன்னா, அவன் இப்ப பூக்கடையில் பூ வித்துக்கிட்டு இருப்பான். சரி, அவனை விட்டுத்தள்ளு. நீ அவனை விட மோசமால்ல இருக்கிறாய். நீ என்னத்த படிச்சி கிழிக்கப்போகிறாய். நீ பிளஸ் 2 வில் வாங்கின மார்க்கை விட, என்னுடைய பெண் மைதிலி நூற்றைம்பது மதிப்பெண்கள் அதிகம் வாங்கியிருக்கிறாள். அவள் கூட பேசுறதுக்கும், பழகுறதுக்கும் உனக்கு என்ன தகுதி இருக்குன்னு இந்த ஊட்டுக்குள்ள வந்து போய்கிட்டு இருக்கிறாய்? உன்னைப்போன்ற முட்டாளோடு சேர்ந்து என்னுடைய பெண்ணும் கெட்டுப்போய் விடுவாளோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. நீ இந்த வீட்டிற்கு இனிமேல் வரவேண்டாம்.”

.

இறுதியில்  தனது திருமண பத்திரிகை கொடுக்க வரும்  தம்பி பையனின்  சம்பளம்  தெரிவதற்கு முன்பு பேசும் பேச்சு இப்படி 

"அது சரி, அந்த பெண்ணும் நீயும் ஏற்கனவே திருமணம் ஆகி குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறீர்களா ? அல்லது தற்போதைய கலாச்சாரப்படி திருமணம் செய்யாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா ? கேட்பதற்கே சிரமமாகத்தான் இருக்கிறது. தற்போது ஒழுக்கம் மிகவும் குறைந்து விட்டது. அதுவும் நம்முடைய குடும்பத்தில் இப்படி ஒழுக்கம் குறைந்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்போது இதயமே வெடித்துவிடும் போன்று இருக்கிறது.”

 

வேண்டும் என்றால் நீ பார்த்துக்கொண்டு இரு. உன்னை திருமணம் செய்து முடித்த பின்னர், ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் வேறு ஒருவனுடன் குடித்தனம் செய்ய போய் விடுவாள். இப்போது கூட அவள் வேறு எவனையும் காதலனாக வைத்து இருக்கிறாளா என்று தெரியவில்லை.

--------

 

அவனுக்கு வருடம்  ஒரு கோடி சம்பளம்  என்று  தெரிந்தபின் பேசும் பேச்சு இப்படி .

"உன்னுடைய திருமணம் பற்றி பேச வந்திருக்கிறாய். மைதிலிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஒரு வார்த்தை கேட்டாயா?"

 

"வேறு பையன்கள் எதற்கு? நீ தான் இருக்கிறாயே? மைதிலியை நீ திருமணம் செய்து கொள்ளலாமே?”

திருமணம் முடிந்து விட்டதா? இல்லைதானே. அப்படியே திருமணம் நிச்சயம் ஆகியிருந்தாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று எந்த சட்டம் சொல்லுகிறது?”

 

நான் உன்னுடைய அத்தை. உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்கிறேன். வெளிநாட்டுப் பெண்களை நம்பாதே. இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வா. மேற்கொண்டு நாம் பார்த்துக்கொள்ளலாம்.”

 

-----------------

ரமேஷின் பொறுமை எல்லை மீறியது. இருக்கையை விட்டு எழுந்தான்.

"அத்தை எப்படியாவது திருமணத்திற்கு வந்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள். "

அத்தையின் மௌனம் சொல்லாமல் சொல்லியது- "நீ கிளம்பலாம்."

சூட்கேஸை கையில் எடுத்துக்கொண்டவன் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டீப்பாயின் மீது தாம்பாளம் அப்படியே இருந்தது. பத்திரிகையும் பிரிக்கப்படாமல் இருந்தது.

-----------

 

தனது காத்திரமான வசன நடை மூலம் ,இப்படி ஒரு பணத்  திமிர் கர்வம் பிடித்த அகங்கார அத்தையைக் கண் முன் கொண்டு வந்து காட்டி விட்டார் கவுரி சங்கர் அவர்கள். படிப்பவர்க்கு  அவர்கள் பழகிய பல முகங்கள் ஞாபகம் வரலாம். இந்தத் தீய குணங்களின் கொடூரத்தை வெளிப்படுத்திய விதத்தில், இவர்களை அடையாளம் காட்டும் ஒரு சமூகப் பணியை இந்தச் சிறுகதை செய்திருக்கிறது. அதற்கு கவுரி சங்கர் அவர்கட்கு நன்றிகள்.

வாய்ப்புக்கு நன்றி  . வணக்கம்

-------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

திறந்த கதவுகள் -குறுங்கதை

 திறந்த கதவுகள் -குறுங்கதை 

----------

பாழடைந்த அந்தக் கோயிலின் மரக்கதவுகள் கிரீச் சப்தத்துடன் திறக்கப் படுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் தனது தீர்க்கமான கண்களால் உற்றுப் பார்த்தார் விநாயகர். வருவது அவன்தான். நடுங்கும் உடலோடு உள்ளே நுழைந்த அவனால் அவரின் பார்வையைத் தாங்க முடியவில்லை. அவர் நெற்றியில் காய்ந்து கிடந்த அந்த குங்குமக் கோலங்கள் அவன் நினைவைப் பின்னோக்கித் தள்ளின.


'இந்த விநாயகர் சாட்சி. நான் வருவேன் திரும்பி . இதோ இவர் நெற்றிமேல் நான் அப்பும் இந்தக் குங்குமக் குழம்பை குழைத்து எடுத்து உன் நெற்றியில் பூசும் இந்த நிமிடத்தின் மேல் சத்தியம் . ' என்று சொன்ன வார்த்தைகள் அந்த விநாயகர் சிலையின் பின்புறம் சிதைந்த சிவப்புச் சுவற்றில் இருந்து எழும்பி வந்து அவன் மேல் தாக்கின.


இவனுக்காவே காத்திருந்த அந்த இருபது வருடச் சுவற்றின் எதிரொலி. அது காற்றில் எழும்பிப் பறந்து கோயில் வாசல் தாண்டி விரைந்து சென்று, அந்தக் கிராமத்தின் குடிசைக் கதவு ஒன்றைத் திறந்து, பாயில் படுத்திருக்கும் அவள் மேல் பட்டது . அவளுக்குக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் கரைந்து உறைந்திருந்த குரல் அல்லவா. அது அவளை உசுப்பி விட ஓடி வரும் அவள் திறந்திருந்த கோயில் கதவருகே வந்து நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்கிறான் அவன்.


அவர்கள் பேசவில்லை. அவன் அழுதான். அது போதும் . காரணங்கள் அவளுக்குத் தேவை இல்லை. காதலுக்குக் காத்திருக்கத் தெரியும். அது காலத்திற்கும் தெரியும் . விநாயகர் , அவர்களைச் சேர்த்து வைத்த திருப்தியில் மெலிதாகப் புன்னகைத்தார். இனி கதவுகள் திறந்தே இருக்கும்.


--------------நாகேந்திர பாரதி ‎


My Poems/Stories/Articles in Tamil and English 


அழுகைத் தொடர்- கவிதை

 அழுகைத் தொடர்- கவிதை 

------

வயக்காட்டுக் கூலி வேலை முடித்து

வயித்துப் பாட்டுக் காசு கையில் வாங்கி


சாராயக் கடை வாசலிலே கிடக்கும்

போதை ஏறிய புருஷனைத் தாங்கி


வீட்டுக்குள் நுழையும்போது விளம்பரம்

அரசாங்கத் தொலைக்காட்சிப் பெட்டியிலே


நகையை அடகு வைக்க வேணாம்

விக்கிறதே உங்களுக்கு நல்லது


அரிசியை உலையில் கொதிக்க விட்டாள்

அழுகைத் தொடர் பார்க்க ஆரம்பித்தாள்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

 


 சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு 

----------------------------------


அழகியசிங்கரின் இன்றைய கதை புதிது நிகழ்வில் நான் பேசிய இரண்டு சிறுகதைகளின் மதிப்புரைகள்

======

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே.

 

தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆண்டு தோறும் இலக்கியப் போட்டி வைத்து சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி வரும் அண்ணன் ராய செல்லப்பா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.  முதல் மரியாதை. வணக்கம்.

 

அவ்வாறு பரிசு பெற்றுள்ள இரண்டு சிறுகதைகளை மதிப்புரை வழங்கச் சொல்லி வாய்ப்பளித்த அழகியசிங்கர் அவர்கட்கு நன்றி

 

எண்பது வயது எம் எஸ் பெருமாள்  அவர்கள், ஐம்பது வயது அருள் அவர்கள் .இருவரின் கதைகள். 

 

பெருமாள் அவர்களின் கதையில் பண்பாட்டைக் காக்கும்  மனிதர்கள். அருள் அவர்களின் கதையில் பண்பாட்டைச் சிதைக்கும் மனிதர்கள். பளிச்சென்று தெரிந்த இந்த முரண்பாட்டில் மனிதர்களில் எத்தனை  நிறங்கள்  என்று காண்பிக்கும் இந்த எழுத்தாளர்களின்  சமூக சிந்தனை வெளிப்படுவதை ரசித்து வணங்கவும் வாழ்த்தவும் தோன்றுகிறது. இப்போது ஒவ்வொரு  கதையாக எடுத்துக்கொள்ளலாம் .

-------------

முதலில் நாம் அனைவரும் அறிந்த பொதிகை  தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் , பன்முகப் படைப்பாளர் எம் எஸ் பெருமாள் அவர்களின்  ' தாலி தானம் ' சிறுகதை '.

 

‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற திரைப்ப படத் தலைப்பு உடனே ஞாபகம் வந்தது. இந்தக் கதையில்  ஒரு பாட்டியின்  தாலி , அவளின் பேத்திக்குத் தாலியாக அமைகிறது. அந்த முடிவை நோக்கி நகரும் கதையில் நம் கண்முன் மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பாசமும் தெரிகிறது. வேஷமும் தெரிகிறது.

 

முதலில் கதையின் மூச்சைச்  சொல்லிவிட்டு பிறகு நான் ரசித்த   எழுத்தின் வீச்சை விவரிக்கிறேன். மூன்று மகள்களும் இரண்டு மகன்களுமாக வாழும் சுப்பையா பார்வதி தம்பதிகளின் 'காந்திமதி பவனம்' வீட்டில் ஆரம்பத்தில் பேரன் பேத்திகளின்  கலகலப்பு. அந்தப் பேரன் பேத்திகள் பெரியவர்கள் ஆனபின் வருவது  சலசலப்பு .

 

உறவு முறைக்குள் மணமுடிக்க வேண்டி முட்டி போதும் சகோதர சகோதரிகளுக்கு இடமளிக்காது, பேத்தி விருப்பப் படி வேற்று மதத் துணைவனோடு அவளைச்  சேர்த்து வைக்கிறார் தாத்தா. அந்த  மண நாள் அன்று உதவி செய்வது போல் நடித்து , திருமணத்தை உருக்குலைக்கப் பார்க்கும் முறைப்  பையன் பேரனின் சதிச்செயல்களை முறியடித்து , அதற்கு தாலி தானம் செய்து  உதவிய   மனைவியோடு சேர்ந்து  காந்திமதி அம்மனுக்கு  நன்றி சொல்ல முடிகிறது கதை.

 

அது கதையின் மூச்சு. இனி  எழுத்தின் வீச்சு .

------------

கதாபாத்திரங்களின் குணநலன்களை அவர்களின் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆசிரியரின் பாணி மனம் கவர்ந்தது.

 

அந்தக் குடும்பத்தைக் கட்டிக்காக்கும் ஆணி வேர் தாத்தாவின் குணநலன்கள் வெளிப்படும் விதம் இப்படி  .

 

அண்ணன்  பெண்ணை தங்கள் மகன்களுக்கு  மணமுடிக்க, அவரின் மகள்கள், அந்த  ரெண்டு சகோதரிகளும் மோதிக்கொள்ளும் போது

ஏட்டீ..ஒங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமா இது வாழப்போறவதானே அதைத் தீர்மானிக்கணும்' என்று அதட்டி அடக்குவதில் ஆகட்டும்

 

சாதி மதப்  பற்று கொண்டு,  கோபித்து மண வீட்டில் இருந்து கிளம்பப்  பார்க்கும்  உறவினர் ஒருவரிடம் 'பேத்தி ஆசைப்பட்ட மாதிரி அவ சிநேகிதன் ஜான் மனோகரனயே நிச்சயம் பண்ணீட்டோம் அந்த மாப்பிள்ளை ஆசைப்பட்ட மாதிரி நம்ம பக்கத்து வழமைப்படி தமிழ்முறைத் திருமணம் நடத்துதோம்.. நீங்க இருந்து புள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணீட்டு முதல்பந்தியிலெ உக்காந்து சாப்பிட்டுட்டுப் போனாத்தானே எங்களுக்கும் கௌரவமா இருக்கும் என்று அழுத்தமாகவும் உரிமையுடனும் பேசி அந்த உறவினர்  நகரமுடியாமல் நங்கூரம் போடுவதில் ஆகட்டும்

 

அவளை மணமுடிக்க முடியாத ஆத்திரத்தில் மண மண்டபம் வந்திருக்கும் தன் பேரன் ஒருவனின் குணம் அறிந்து 'நெல்லையப்பன் வந்த நோக்கம் சரியில்லையோனு தோணுது பெண்ணுவீட்டு ஆளா ஓடியாடி உபசாரம் பண்ணுதாப்பிலெ பாவலா காட்டுதான் அமுதாவெ கெட்டிக் கொடுக்கலேங்கிற ஆத்திரத்திலெ கலியாணத்தெ நிறுத்த என்னமே சதி பண்ணுதானோன்னு சம்சயமா இருக்கு' என்று சொந்தம் ஒருவரை அவனை கண்காணிக்க அமர்த்துவதில் ஆகட்டும் 

 

அனைவரிடம் ஆசி வாங்க அனுப்பப்பட்ட தாம்பாளத்தில் உள்ள தாலியைத் திருடிவிட்ட பேரனின் சதியை முறியடிக்க,  தன் மனைவிக்கு , பூஜை அறையில் மஞ்சள் தாலி கட்டி , அவளின் தங்கத் தாலியை வாங்கி தாம்பாளத்தில் வைத்து தாலி கட்டும் வைபவத்தை நிறைவேற்றிக் காட்டுவதில் ஆகட்டும்,

 

அந்தத் திருட்டுப் பேரனை தனியே அழைத்துப் போய்

அவன் கையை இறுக்கிப் பிடித்து முறுக்கி “வெள்ளாளன் வீட்டுக் கல்யாணத்திலெ எனக்காக மனுஷக்கறி பிரியாணி பண்ணச் சொல்லீருக்கேன். இப்பந்தானே எளங்கறி சிக்கீருக்கு என்று சீறியபடியே அவன் கன்னத்தில் ஓங்கி அறைவதில் ஆகட்டும்

 

கடைசியாக மனைவியிடம் ' பின்னாடி பேத்திக்கு தாலிபிரிச்சுக் கோக்கையிலெ இந்தப் புதுத் திருமாங்கல்யத்தை சங்கிலியிலெ கொருத்துக்குடுத்து மாப்பிள்ளை கையாலெ போட்டுவிட்றச் சொல்லு.. நடந்த கூத்து நம்ம மூணுபேரோட போகட்டும்என்ன இருந்தாலும் நெல்லையப்பன் நம்ம ரத்தம்லா ஊர்க்காரவுக தூத்த நாமளே எடங்கொடுக்காண்டாம்!“  என்று அந்தத் துஷ்டப் பேரனையும் காப்பாற்றுவதில் ஆகட்டும் ,

அந்தக் குடும்பத்தின் அச்சாணி வேராக நிற்கும் அந்தத் தாத்தா   இந்தக் கதையின் நாயகன் .

 

அவர் குணச்சித்திரத்தை உருவாக்கி  மேற்கூறிய அந்த வசனங்களுக்குள் அவரைப் புகுத்தி நம் கண்முன் அந்தத் தாத்தாவைக் கொண்டு வருகிறார்.

ஆசிரியர் எத்தனையோ திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் அல்லவா. அந்த வாசம் இந்தச் சிறுகதையிலும்  வீசுகிறது .

 

அடுத்து மனதில் பதிவது அவர் மனைவி , பாட்டி பார்வதி .

 

'என்னமோ எங் கழுத்துக்கு கண்டம்'னு காந்திமதி கோடிகாட்டி நெல்லையப்பன் மூலமா கழத்த வச்சிட்டால்லா இதை அவ உண்டியல்லெயே போட்ருவோம் நான் கண்ணெமூடுத காலம்வரைக்கும் மஞ்சக்கயிறே நெலைக்கட்டும்னு குங்குமம் வச்சுவிடுங்க ஐயா என்று நெகிழ்ச்சியுடன் கூறி கணவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள், பழுத்த சுமங்கலி பார்வதி ஆச்சி! ' என்று முடிக்கும் போது நம் பழைய தலைமுறைப்பாட்டி , நம் கண் முன்னே தோன்றுகிறார்.

 

இது  தவிர, மகன்கள், மகள்கள் இவர்களின் உரையாடல்கள் , உரசல்கள் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் இந்தக் காலத்திற்கு ஏற்றபடி வெளிப்படுத்தும் எண்ணங்களும் வார்த்தைகளும் அவர்களையும் நம் கண் முன் கொண்டு வருகின்றன. இன்றைய காலத்தில் நடக்கின்ற பல நிகழ்வுகளையும், பேச்சுக்களையும் கதைக்குள் இணைத்து , அந்தக் குடுமபத்தோடு நம்மையும் உலாவி விட்டு, இறுதியில் கல்யாணம் நல்ல படியாக முடிந்த திருப்தியை நம் மனதில் விதைக்கும் ஐயா எம் எஸ் பெருமாள் அவர்கள் திரைக்கதை எழுதி  இயக்கிய ஓர் திரைப்படத்தை நாம் பார்த்த திருப்தியை உண்டாக்குகிறார்.  அவருக்கு நன்றியும் வணக்கமும்.

 

-----------------------------------

அடுத்து  சேது அவர்கள் எழுதிய 'சுழியம் ' சிறுகதை .

 

நண்பர் சேது அவர்களும் நானும் வெங்கடேசன் அவர்கள் எழுதிய 'வேள்பாரி ' நாவல் ரசிகர்கள் ஆரம்பித்த ' பாரியின் பாணர்கள்’ குழு உறுப்பினர்கள். நண்பர்கள். அவரது கதைக்குப் பரிசு கொடுத்ததற்கு செல்லப்பா  சார் அவர்கட்கு நன்றியும் வணக்கமும்.

 

சுழியம் என்றால் ஒன்றுமில்லாத தன்மையைக் குறிக்கும் பூஜ்யம். கதையின் நாயகி கணித ஆசிரியையின் வாழ்வும் அதுபோல் பூஜ்யமாக இருக்கும் நிலைமையை உருக்கமாகச் சொல்லி அதற்கு காரணமான இந்த சாதி வெறி பிடித்த சமூகத்தைச் சாடுகிறார் தனது கதையில் ஆசிரியர்.

இள வயதில் அவள் காதலித்த வாலிபன் வேறு சாதி என்பதால், இவள் கண் முன்னே அவனைக் கொடூரமாகக் கொன்ற தந்தை , சகோதரர்களைத் தொடர்ந்து, இப்போது நாற்பது வயதிற்கு மேல் அவள் மேல் காதல் கொள்ளும் இன்னொரு ஆசிரியரிடம் இருந்து பிரிப்பதற்காக , மற்றுமொரு தற்கொலை நாடகத்தை அவர்கள் மண வாழ்வு ஆரம்பிக்க இருக்கும் நாள் அன்று , அதே பள்ளியில் அரங்கேற்றும் சாதிவெறி பிடித்த சமுதாயத்தை மறுபடியும் காட்டி ,  வருடங்கள் ஓடினாலும். அந்த வன்மங்கள்  மாறவில்லை என்பதை உணர்ச்சிகரமாகக் காண்பித்து, அந்தப் பூஜ்யத்தோடு ஒன்று சேருமா, அந்த பூஜ்யம் மதிப்பு பெறுமா ' என்ற கேள்வியை ஓரத்தில் நிற்கும் அந்த நாயகனிடமும் நம்மிடமும் விட்டு விடுகிறார் ஆசிரியர்.

 

நண்பர் ஒரு கவிஞரும் கூட என்பதால் , கதை முழுக்க கவிதை நயம் நிரம்பிய வரிகள். அவற்றில் ஒரு சில இங்கே .

 

மழை பெய்யும் அந்த இரவின் வருணனைகள் பல அவள் வாழ்வோடு தொடர்புபடுத்தும்   விதத்தில் இப்படி .

 

தூரத்தில் கேட்கும் இடியோசை, நிலத்தின் ஆழத்திலிருந்து எழும் ஒரு முதிர்ந்த மனிதனின் முனகலைப் போல மெலிதாகக் கேட்டது. புதிய வாழ்க்கை தொடங்கத் துடிக்கும் நாயகியின் மனதின் முனகலோடு தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது .

 

வரப்போகும் மழையின் வாசனை காற்றில் ஈரமாகவும், கனமாகவும் படிந்திருந்தது. அது ஒரு சாதாரண மழையல்ல, நிலத்தின் தழும்புகளைக் கழுவத் துடிக்கும் ஒரு பெருமழை  .

அவள் மனதின் சோகத் தழும்புகளைத்  துடைத்து எறியுமா இனி வரும் நிகழ்வுகள் என்ற ஆர்வம் நம் மனதில் எழுகிறது .

 

'காலையில் எழுந்தபோது வானம் ஒரு அழுக்குத் துணியைப் போலத் தெளிவில்லாமல் இருந்தது.'

ஏதோ சரியில்லை என்ற எண்ணம் நம் மனதில் எழும்புகிறது .

------

இப்படி மழையை மட்டுமா அவள் வாழ்க்கை யோடு இணைக்கிறார். அவள் கணித ஆசிரியை என்பதால், கணிதமும் , இந்தக் கதையில் ஒரு உருவக விளையாட்டு ஆடுகிறது . அந்த ஆட்டம் இப்படி ஆசிரியர் எழுத்தில்  .

பாடம் முடிந்து அவள் கரும்பலகையில் கணித எண்களை அழித்துக் கொண்டு இருக்கிறாள், காட்சிகள் விரிகின்றன நமக்கு அவர் வார்த்தைகளால்  .

 

'கரும்பலகையில் எண்களை அழிப்பது எளிது. ஆனால், மனதின் அடுக்கில் படிந்துவிட்ட கணிதங்கள் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை. அவை தீராத வலியைப்போல எப்போதும் அடிமனதில் கணக்கிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன'.

 

'கரும்பலகையில் எஞ்சியிருந்த அடுத்த எண்ணை அழிக்க இளவரசி கையை உயர்த்தியபோது, அவளது விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. விழிகள் சிவந்து கண்ணீர் திரையிட, அவளது உதடுகள் காற்றோடு காற்றாக ஒரு பெயரை உச்சரித்தன.

"முனியா..."

 

'அடித்து, குத்திக் கிழித்து, அவன் உயிர் பிரியும் தருணத்தில் தீயிட்டுக் கொளுத்தியபோது, அவனது மரண ஓலம் அந்த ஊரின் காற்றில் இன்றும் உறைந்து கிடப்பதாகவே அவள் உணர்கிறாள்.'

 

அவளது வாழ்வின் கணக்குகள் அனைத்தும் நிலைகுலைந்து போயின.

'எண்களின் வளைவுகளுக்கு ஏற்பத் தன் உடலை வளைத்து, கைகளை அசைத்து அவற்றை அழித்தாள். அது எண்களை அழிப்பது போலத் தெரியவில்லை; தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை ஒவ்வொன்றாகத் துடைத்தெறிவது போலிருந்தது'

 

'கடந்து வந்த கசப்பையும், கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் இனிப்பையும் கொண்டுதான் அவள் சூத்திரங்களை அணுகுகிறாள்.'

 

'கரும்பலகையில் எஞ்சியிருந்த அடுத்த எண்ணை அவளது கைகள் அழித்தபோது, உடல் லேசாக அதிர்ந்தது. கன்னங்களில் ஒரு மெல்லிய சிவப்பேறியது. பூபதி வாத்தியாரின் நினைவு அவளைத் தீண்டியது'

 

'இருபத்தி மூன்று வயதில் கலைந்து போன கனவு, சாம்பலில் இருந்து எழும் பறவையைப் போல மீண்டும் ஏன் இப்போது உயிர்த்தெழுகிறது? விடை தெரியாத கணிதச் சிக்கலைப் போல .

 

 மறுநாள் , அந்த வகுப்பறையின் மின்விசிறியில் பிணைக்கப்பட்ட கயிறுகளில் தொங்கிக்கொண்டு இருந்தது அதே ஊரைச் சேர்ந்த யாரோ ஒரு காதல் ஜோடி. அதே கௌரவத்தின் எச்சங்கள், இன்றும் அந்தச் சின்னஞ்சிறு உடல்களில் ரத்தமாக வழிந்து கொண்டிருந்தன. பூபதி அமைதியாய் ஓர் ஓரத்தில் நின்றிருந்தார்.

 

'அந்தப் பள்ளிக்கூட கரும்பலகையில், நேற்றைய சில கணக்குகள் இன்னும் அழிக்கப்படாமலேயே மிச்சமிருந்தன'

 

இந்தக் கணக்குகளின் முடிவில் அவள் பூஜ்யமாக  , சுழியமாக நின்றுகொண்டு இருக்கிறாள். ஓரத்தில் நிற்கும் பூபதி வருவாரா. பூஜ்ஜியத்துடன் சேர்ந்து ஒன்றாகி நிற்பாரா அவர்கள் ஒன்றாவார்களா, அதோ சாதிவெறி  ரத்த எச்சிலுடன் காத்துக் கொண்டு நிற்கும் அந்தச் சமுதாய வெறிநாய்கள் அவர்களை வாழ விடுவார்களா. கேள்வியுடன் முடிகிறது கதை.

 

இப்படிக்  கதை முழுக்கத் தெறித்துக் கிடக்கும் கணக்கு உருவகங்களைத் தொகுத்துப் படித்தாலே போதும் . முழுக்கதையும் ஒரு உருவக நாடகமாக நம் மனக்கண் முன் ஓடுவதை நாம் உணர முடியும்.நண்பர் சேதுவின் எழுத்துத் திறமையினை வியந்து வாழ்த்துகிறேன்.

------

நன்றி வணக்கம்.

-------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  



செவ்வாய், 30 ஜூன், 2026

கனகாம்பரம் (கு ப ரா ) சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 கனகாம்பரம் (கு ப ரா ) சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 


--------------

முன் குறிப்பு : நேரம் கருதி, அன்றைய  கதை புதிது நிகழ்வின் பேச்சில் விடுபட்ட , கு ப ரா காட்டும் , அந்த ஆண்களின் மாறிய மனநிலையையும் , இந்த மதிப்புரையில் சேர்த்து விட்டேன்.🙏


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே.


அழகியசிங்கரின் இந்தப் புதிய முயற்சிக்கு , ஒரே கதையைப் பலர் மதிப்புரை செய்யும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.


மனித மன உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டு வர வல்லவர், அதுவும் பக்கம் பக்கமாக சிறுகதைகள் எழுதிக் கொண்டு இருந்த அந்தக் காலத்திலேயே இரண்டு மூன்று பக்கங்களில் அந்த உணர்வுகளைக் கொண்டு வரும் திறம் வாய்ந்தவர் எழுத்தாளர் கு ப ரா அவர்கள் என்பது நம்மில் பலர் அறிந்ததே.


இந்தக் கனகாம்பரம் சிறுகதையும் அதுபோன்ற ஒன்றே. கதைச் சுருக்கம் இதுதான்.


கிராமத்துப் பெண்ணை மணமுடித்து நகரத்திற்குக் கூட்டி வந்து இங்கே சுதந்திரமாகப் பழகும் விதம் பற்றி பாடம் எடுத்துவிட்டுச் செல்லும் கணவன் திரும்பி வந்தபின் , தன் மனைவி , தான் இல்லாதபோது வீட்டிற்கு வந்த தன் நண்பன் ஒருவனை வீட்டுக்குள் வந்து அமரச் சொன்னதை, மன முதிர்ச்சி இன்றி தவறாகப் புரிந்து கொள்வதையும் , அந்தக் கிராமத்துப் பெண் மன முதிர்ச்சியோடு தன் கணவனைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் போக்கையும் விவரிக்கும் கதை.


படிப்பு குறைந்திருந்தாலும் பழக்கத்தால் அவள் வாசமுள்ள பூ. படித்து விட்டு , பெண்ணுரிமை பற்றி பேசித் திரிந்தாலும் , அந்த நேரத்தில் அவன் வாசமில்லா வெறும் வண்ணப் பூவான கனகாம்பரம் போல்தான் , என்று கனகாம்பரத்தை ஒரு குறியீடாகக் காட்டி முடிகிறது கதை.


முதலில் கதையில் எனக்குப் பிடித்த சில வருணனைகளைச் சொல்லி விட்டு கதையைப் பற்றிய என் கருத்தைக் கூறுகிறேன்.


முதலில் நாயகி சாரதாவின் உருவத்தைக் கொண்டுவரும் வரிகள் .

'விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசுவம் ’ விட்டுக் கட்டிக்கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம்

கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலை மயிரை நடுவே வகிடெடுத்துத்தான் பின்னிக்கொண்டிருந்தாள். பின்னல்கூட நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’ வென்று காதை மூடிக்கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக்கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ணசந்திரன்போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புல்லாக்கு இருந்தது' .


அந்தக் காலக் கிராமத்துப் பெண் சாரதா நம் கண்முன் வருகிறாள் .


அடுத்து அவள் உள்ளத்தைக் கொண்டு வரும் வரிகள் இப்படி .


'அதுக்காக மூணாம் மனுஷனைப்போய் வீட்டுக்குள்ளே வந்து உக்காருங்கறதோ?” என்று மணி ஆத்திரத்தில் கொட்டி விட்டான்.

சாரதாவின் முகம் சடக்கென்று மாறுதல் அடைந்தது. என்ன கிராமாந்தரமானாலும் அவள் பெண்; அளவு கடந்த கோபத்துடன் மணியின் முகத்தை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் எண்ணங்கள் அவன் முகத்தில் அவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன. தனக்கு-தன் பெண்மைக்கு-அவன் செய்த அவமரியாதையை அறிந்தவள்போல அவளுடைய முகத்தில் ஓர் ஆழ்ந்த வெறுப்புக்குறி தோன்றிற்று. பாதி போட்ட பின்னலை அவிழ்த்து முடிந்துகொண்டு கனகாம்பரப் பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டாள்.

இந்த மகத்தான கோபத்தின் முன்பு மணி அயர்ந்து போனான்'


இங்கே அந்தப் பெண்ணின் கள்ளமில்லா உள்ளம் வெளிப்படுகிறது நமக்கு .


இன்னும் கதையைப் பற்றி இரண்டு எழுத்தாளர்கள் பேச இருப்பதால், இந்தக் கதைச் சுருக்கம், பிடித்த வருணனைகள் இவற்றோடு நிறுத்திவிட்டு , கதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை மட்டும் சொல்லுகிறேன்.

------

.

இதைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்த வேறு கதை நிகழ்வுகள் இரண்டு. ஒன்று வில்லிபாரதத்தில் இருந்து. மற்றொன்று நமது இசை புதிது குழு உறுப்பினர் எழுத்தாளர் ரேவதி பாலு அவர்களின் கதையில் இருந்து .


முதலில் வில்லிபாரதத்தின் நிகழ்வின் அந்தக் கவிதை வரிகள் இவை .

' மடந்தை பொன்-திரு மேகலை மணி, உகவே ,மாசு

அறத் திகழும், ஏகாந்த

இடம்தனில், புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?

கோர்க்கவோ ?'" என்றான்


துரியோதனன் இல்லாத நேரத்தில் அவன் மனைவி பானுமதியுடன் கர்ணன் சதுரங்கம் விளையாடிக் கொண்டு இருந்த நேரத்தில், துரியோதனன் வர , எழும் பானுமதியை, தோல்விக்குப் பயந்து எழுகிறாள், என்று அவளைக் கர்ணன் பிடிக்க அவள் மேகலை முத்துக்கள் சிதற , துரியோதனன் , 'அந்த முத்துக்களை எடுத்துத் தரவா , இல்லை மாலையாகக் கோர்த்துத் தரவா ' என்று கேட்கும் இடம்.


மாலை கோர்ப்பது என்பது கோபம் இல்லாமல் நிதானமாகச் செய்யும் வேலை. துரியோதனனன் மனத்தில் நண்பனையும் மனைவியையும் பார்த்து கோபம் வரவில்லை. நண்பன் மீதும் மனைவி மீதும் நம்பிக்கையோடு 'எடுக்கவோ, கோர்க்கவோ' என்கிறான்.


அதே போன்று ' மாசு அறத் திகழும், ஏகாந்த இடம் தனில் ' என்ற வரி மூலம் அவர்கள் தனித்து இருக்கும் அந்த இடத்தில் கர்ணன் மனதிலும் மாசு இல்லை என்று வில்லிபுத்தூரார் கூறுகிறார். அந்த நட்பின் போக்கு அப்படி.


இப்போது கதையில் வரும் இந்தக் கணவனும் அவன் நண்பனும். அவன் இல்லாத நேரத்தில் வரும் அந்தக் கணவனின் நண்பனை , கணவன் நகரத்தில் பழகும் விதம் பற்றி சொன்னபடி ,அவள் புரிந்து கொண்டபடி வரவேற்று வீட்டுக்குள் வரச் சொல்கிறாள் அவன் மனைவி. அப்போது அந்த நண்பனின் எண்ணம் ஆசிரியர் வார்த்தைகளில் .


'படித்த பெண்கள்கூடப் புது மனிதர்களிடம் பேசுவது கஷ்டமாயிற்றே! அப்படியிருக்க, நவநாகரிக முறையில் ஆண்களுடன் பழகுவது என்பதே அறியாத பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண் பிற புருஷ னுடன் பேசுவதென்றால், அது ராமுவுக்கு விபரீதமாகப் பட்டது. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள். தலைகுனிந்த வண்ணமாகவே இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.“இல்லை, அப்புறம் வரேன்” என்று அரைகுறையாகக் கூறித் தலையெடுத்துப் பார்க்காமல் வெகுவேகமாய்ப் போய்விட்டான்.'


இப்போது அங்கே வில்லிபுத்தூரார் வரிகளில் ,' மாசு அறத் திகழும் ஏகாந்த இடம் தனில் ' இருந்த கர்ணனின் தூய மன நிலையோடு ,

அவள் பேசியது ' விபரீதமாகப் பட்டது ' என்று நினைத்து வேகமாக போன இந்த நண்பனின் மாசு உள்ள மன நிலையை ஒப்பிடத் தோன்றியது .

-----

அடுத்து கணவன் திரும்பியவுடன் , மனைவி சொன்னதைக் கேட்ட கணவனின் எதிர்வினை ஆசிரியர் வார்த்தைகளில் .


ஆரம்பத்தில் ' பட்டணத்தில் நண்பர்கள் அடிக்கடி வந்து தேடுவார்கள்; பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்துகொண்டு கதவைச் சாத்திக் கொள்ளக் கூடாது; பட்டணத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்ற சொன்ன அந்தக் கணவனின் மனநிலை இப்போது இப்படி .


'அவள் நடந்துகொண்டுவிட்டது அவனுக்கு அதிருப்தியை உண்டாக் கிற்று. அதன்பிறகு, ‘ஏன் அப்படிச் செய்தாள்? நாம் சொன்னதற்காகக் கீழ்ப்படிந்து நடந்த மாதிரியா அது? அல்லது…’ என்று கொஞ்சம் அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது.சிநேகிதன் என்ன நினைத்திருப்பான்? ‘என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு?’ என்றோ, அல்லது ‘சுத்த அசடு! என்றோ நினைத்திருப்பான். அல்லது…

இம்மாதிரி யோசித்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான்..


' அல்லது ' .. அல்லது .. ' என்று நினைக்கும் இவன் மனைவி மீது வைத்துள்ள அவநம்பிக்கையை அங்கே வில்லிபுத்தூரார் வார்த்தைகளில் ' எடுக்கவோ , கோர்க்கவோ ' என்று கேட்ட துரியோதன னின் நம்பிக்கை மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

-------

இது கதையில் வரும் அந்த இரு ஆண்களின் மனநிலையை , கர்ணன் துரியோதனன் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றிய விதம். அந்த ஆண்களின் முரண்பட்ட மனநிலை. அந்த வேற்றுமை பளிச்சென்று தெரிந்தது .

-----

ஆனால் அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் அவர்கள் அதை உணர்ந்து கொள்வது போல் ஆசிரியர் முடித்துள்ள விதமும் அருமை . அதையும் குறிப்பிட வேண்டும் .


மணியின் மாறிய இறுதி மனநிலை இப்படி .

'அவள் முகத்தில் தோன்றிய துக்கக் குறியைக் கண்டு அவன் பதறிப் போனான்; எழுந்து அவள் தோளைப் பிடித்துக்கொண்டான். “சாரதா!” என்று சொல்லி மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.'


அதே போன்று மாறிய ராமுவின் மனநிலை பிறகு இப்படி.

'தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை!-தன் புருஷனின்

நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்துவிட்டாள்! தன்னையும் நம்பினாள்… அவளா அசடு? அவள்தான் உண்மையான பெண்! நான் சந்தித்த முதல் பெண்!'


இப்படி இந்த இரு நண்பர்களின் மனநிலையின் மாற்றத்தையும் காண்பித்து விடுகிறார். எனவே தான் பின்னால் சாரதா அவனை மன்னித்து அவனோடு பேசும்போது நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது .


------

இப்போது , அந்தப் பெண்ணின், சாரதாவின் மனநிலை. கணவனைப் புரிந்து கொண்டு நடக்கும் ஒரு பெண்ணின் மனநிலை.


கு ப ராவின் 'கனகாம்பரம்' கதையில் சந்தேகப்படும் கணவனிடம் மனைவி நடந்து கொள்ளும் மனநிலை. அழகியசிங்கரின் ' அசோகமித்திரன் பரிசு பெற்ற கதைகள் தொகுப்பில் ரேவதி பாலு அவர்களின் 'அசட்டு மனிதர்கள் ' கதையில் சும்மாவே கோபப்படும் கணவனிடம் மனைவி நடந்து கொள்ளும் மனநிலை. இரண்டிலும் வெளிப்படுவது பெண்களின் பொறுமையும் , புரிந்து கொள்ளும் தன்மையும். அந்த ஒற்றுமை பளிச்சென்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது .


அங்கே ஆண்களின் மனநிலையில் தெரிந்தது வேற்றுமை. இங்கே பெண்களின் மனநிலையில் தெரிந்தது ஒற்றுமை .


ரேவதி பாலு அவர்களின் 'அசட்டு மனிதர்கள்' கதையில் கடைசி வரிகள் 'அசடு அசடு , உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் ஆத்திரப்பட்டு அமர்க்களம் செஞ்சு சண்டை போட மட்டும்தான் தெரியும் . தானே சமாதானமாகவும், எதிராளியைச் சமாதானப்படுத்தவும் தெரியாத ஜென்மம். அப்பத்தா சொல்வது போல் பல்லைக் காட்டி , பரக்க முழிச்சுதான் இவரை வழிக்கு கொண்டு வர வேண்டியிருக்கு ' .


'அசட்டு மனிதர்கள் ' கதையின் அந்த அப்பத்தாதான் அந்த 'கனகாம்பரம்' கதையின் சாரதாவோ என்று எண்ண வைத்த கு ப ராவின் வரிகள் கனகாம்பரம் கதையின் கடைசியில் இப்படி .


“வேண்டாம்!” என்று சாரதா அவன் முகத்தைத் தடவினாள். “நான் சொன்னது” என்று மணி தன் மனத்தை வெளியிட ஆரம்பித்தான்.

“கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே! நீங்கள் சொன்னதில் தப்பென்ன?” என்று சாரதா, பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுரியத்துடன் பேச்சை மாற்றினாள்.'

----

அவனுக்குப் பிடித்த அவன் சொன்னபடி நகரத்துப் பழக்கத்தை ஏற்றுக்கொண்டு அது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதை புரிந்து இப்போது அவன் மனநிலை மாறிய , தவறை உணர்ந்த இப்போதைய நிலையைப் புரிந்து அவனைச் சமாதானப்படுத்தும் நோக்கில் 'கனகாம்பரம் எனக்கும் பிடிக்காதுதான் , நீங்கள் சொன்னதற்காக வைத்தேன், எனவே இப்போது நீங்கள் சொல்வது தப்பில்லை, எனக்குப் பிடிக்காததைத்தானே வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள்' என்பதில் அந்த சாதுரியம் தெரிகிறது.

----

இந்தச் சாதுரியம் கு ப ரா அவர்களின் சாரதாவிடமும் இருந்தது. ரேவதி பாலு அவர்களின் சங்கீதா விடமும் இருந்தது, வேறு வேறு சூழ்நிலைகளில் ,வேறு வேறு காலங்களில் .


இதைச் சாதுரியம் என்பதா , பெண்களின் நிலை என்பதா என்பதை வாசகர்களிடம் விட்டு விடலாம். அதேபோல் ஆண்களின் மனநிலை மஹாபாரதக் காலத்தில் இருந்து கு ப ரா காலத்தில் மாறிவிட்டதோ , இப்போது திரும்பவும் மஹாபாரத காலம் வந்து விட்டதா என்றும் வாசகர்களுக்கு யோசிக்கத் தோன்றலாம் . ஆனால் எல்லாக் காலங்களிலும் மாறும் குரங்கு மனநிலை ஆண்களுடையது. மாறாத நிதானமான மனநிலை பெண்களுடையது என்றும் பொதுவாக எண்ணவும் தோன்றுகிறது

---


இந்தக் கனகாம்பரம் கதையைப் பொறுத்த மட்டில் அந்த நேரத்தில் கணவன், மனைவி, நண்பன் ஆகியோரின் மனநிலையை அப்படியே எழுத்தில் வடித்து , பின்னால் மாறினாலும் , முதலில் வெளிப்பட்ட அந்த வாசமில்லாக் கனகாம்பரக் கணவனைக் , காட்டி விட்டு , அந்த மூவரின் பொதுவான மனநிலைகளையும் கதை முழுக்கக் காட்டி முடிக்கிறார்.

----

அனைத்தையும் தாண்டி எனக்குத் தோன்றுவது , இது எந்தக் காலத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் வளர்ப்பின்படி தோன்றிய அவரவர் மனநிலை தான், அதுவும் மாறக் கூடிய மனநிலைதான் , இது எந்தக் காலத்திலும் ஒட்டு மொத்த ஆண்களுக்கோ , பெண்களுக்கோ அல்லது சமுதாயத்தின் மனநிலையோ அல்ல என்றே முடிவாக நினைக்கத் தோன்றுகிறது. இங்கே மஹாபாரதத் 'துரியோதனன் 'களும், 'கர்ணன்' களும் உண்டு , கனகாம்பர 'மணி' களும் 'ராமு' களும் உண்டு . அவர்களுக்குள் மாறி மாறி வரும் துரியோதனன்களும் , கர்ணன்களும் உண்டுதான் . ஆனால் கு ப ரா அவர்களின் சாரதாக்களும் ரேவதி பாலு அவர்களின் சங்கீதாக்களும் என்றும் சாரதாக்கள் தான். சங்கீதாக்கள்தான் .


-----

இந்தக் கதையில் கனகாம்பரத்தை ஒரு குறியீடாக வைத்து , மாறும் எண்ணங்கள் பலவற்றை நம் முன் காட்சிகளாக ஓட விட்ட கு ப ரா அவர்களுக்கு வணக்கங்கள். அழகியசிங்கர் அவர்கட்கு நன்றிகள்.


------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


மண்டாடி - திரைப்பட விமரிசனம்

மண்டாடி - திரைப்பட விமரிசனம்  ---------------- மீனவர் வாழ்வியலின் முக்கிய அங்கமான ' பாய்மரப் போட்டியை ' மையமாக வைத்து ஜனரஞ்சகமான ...