பரோபஹாரத் தம்பதியர் -சிறுகதை
------------------------------------------------------------------
பார்வதியும் சங்கரும் மனமொத்த பரோபகாரத் தம்பதியர் .
பார்வதிமுதல் நாள் வைத்து மீந்து போய், விறைச்சுப் போய் , காஞ்சு போய்க் கிடக்கும்இட்லிகளை அடுத்த நாள் வேலைக்காரியிடம் கருணையோடுகொடுத்து விட்டுச் சொல்வாள். ' பாவம், உன் புள்ளைகள்ளாம் பசியோடு இருக்கும். கொண்டு போய்க் கொடும்மா.' வாங்கிக்கொண்டு போகும் வேலைக்காரி போற வழியில் அதைக் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுச் செல்வதும் வழக்கமான கதைதான். ஆனால் பார்வதியோ, அடுத்த வீட்டு அம்புஜத்திடம் ' பாவம், வேலைக்காரி புள்ளைங்க. எப்பவும் கஞ்சிதான். நான் தான் எங்கவீட்டிலே மீஞ்சி போற பூப்பூவான இட்லிகளை கொடுத்து விடுவேன். இந்த குணம் எனக்கு சின்ன புள்ளையிலே வந்திடுச்சு ' என்றுசொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வாள்.
அவள் கணவன் சங்கர் அவளுக்கும் மேலே. அன்று வந்து அவளிடம்சொன்னான். ' பாரு. இன்னிக்கு பாரேன். ரோட்டிலே ஒரு சின்னக்கல்லு கிடந்தது. அதை எடுத்து பக்கத்து குப்பைத் தொட்டியில்வீசி எறிஞ்சிட்டு வந்தேன். என்னதான் நாம் செருப்புப்போட்டிருந்தாலும் , செருப்புப் போடாத எவ்வளவு ஏழைகள் அந்தரோட்டு வழியா நடந்து போறாங்க. அவங்க காலிலே அது பட்டுபுண்ணாகி செப்டிக் ஆகி ஆஸ்பத்திரி போனா எவ்வளவு செலவு. அவங்களை அந்தக் கஷ்டத்தில் இருந்து காப்பாத்தின ஒரு திருப்திஎனக்கு . ' ' உங்க மனசு யாருக்கு வருங்க. இருங்க. இதைப்போயி நான் அம்புஜத்திட்டே சொல்லிட்டு வந்திர்றேன். ' என்றுஅவசரமாகப் பக்கத்து வீட்டுக்குக் கிளம்புவாள் பாரு என்கிற பார்வதி .
போகும்போது கசங்கி இத்துப் போன அவளது பழையசேலைகளையும் எடுத்துப் போவாள். தன் கணவன் பெருமையைமுதலில் சொல்லி விட்டு ' அம்புஜம் , யாரோ முதியோர் விடுதியில்இருந்து வருவாங்கன்னு சொன்னியே. அவங்க கிட்டே இந்தசேலைகளையும் கொடுத்திடுறீயா. பாவம், ஏதோ நம்மாலேமுடிஞ்சது. இதெல்லாம் போன வருஷம் தீபாவளிக்கு புதுஸாவாங்கினது. இந்த மாதிரி டிசைன் எல்லாம் அந்த பெருசுகபார்த்திருக்கவா போகுது . பாவம். அனுபவிக்கட்டுமே ' என்றுகொடுத்த அந்த அஞ்சு வருஷ அரதப் பழசு சேலைகளைஅருவெறுப்போடு பார்த்த அம்புஜம் ' அங்கே ஓரமாய் வைம்மா' என்றாள் . அவளுக்குத் தெரியாதா என்ன. பார்வதியின் பண்பும்பரோபகாரமும். ஏதோ பக்கத்து வீடாச்சே என்று சகிச்சுக்கொண்டிருக்கிறாள். இன்னும் எவ்வளவு நாளைக்கோ தெரியாது.
சங்கர் அலுவலகத்தில் படுத்தும் பாடோ மிகவும் மோசம். யாராவதுஅலுவலகத்தில் ஓய்வு பெற்று அவர்களுக்கு உபசார விழாநடத்துவதற்கு ஒவ்வொருவரிடமும் பணம் வசூலிக்கும் போது முதல்ஆளாய்ப் போய் பத்து ரூபாய் எழுதி விட்டுச் சொல்வான். ' எல்லோரும் சேர்ந்து அவருக்கு நல்ல ஒரு கிப்ட்டா வாங்கிக்கொடுங்கப்பா. அதுக்குத் தான் முதல் ஆளா வந்து மொய்எழுதிட்டேன் ' என்று சொல்லி தன்னைப் பாராட்டிக் கொள்வான். அவர்களுக்குத் தெரியாதா, முதல் ஆளாய் ஏன் எழுதுகிறான் என்று. யாராவது முதலில் நூறு ரூபாய் எழுதி விட்டால் இவனும் நூறு எழுதவேண்டுமே.
இப்படித்தான் அன்னிக்கி அடுத்த தெரு பாக்கியத்தைத் தெருவிலே பார்த்தப்போ அவ உடுத்தியிருந்த சிவப்புக் கலர் புடவை அவளுக்கு நல்லாயிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு தன் கணவர் தனக்கு எடுத்துக் கொடுத்துள்ள பல விதமான புடவைகளின் நிறம் , தரம் பற்றியும் அது தனக்கு எவ்வளவு எடுப்பாக இருக்கிறது என்பதைப் பற்றியும் ஒரு கால் மணி நேரம் புராணம் பாடினாள் . பாக்கியத்திற்கு சந்தேகம் . ‘இவ என்னைப் புகழுறாளா , இல்லே , இதை சாக்கா வச்சுக்கிட்டு தன்னைப் பற்றி சுய தம்பட்டம் அடிச்சுகிறாளான்னு . விட்டா இன்னும் அரை மணி நேரம் சுய புராணம் பாடிக்கிட்டு இருப்பாள்னு புரிஞ்சு ‘ வேலை இருக்கு பாரு , வரட்டா ‘ என்று கத்தரித்துக் கொண்டு போனவளைப் பற்றி வீட்டில் வந்து புருஷனிடம் கம்பளைண்ட் . ‘ என்னங்க அவளை புகழ்ந்து பேசுனதுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போயிட்டா ‘
பாருவும் சங்கரும் இப்படி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்
'ஏம்மா , நம்ம மத்தவங்களைப் புகழ்ந்து பேசறதோட பொருளாவும் பணமாவும் எவ்வளவு உதவி பண்ணிக்கிட்டு இருக்கோம். யாருமே நம்மைப் புரிஞ்சு பாராட்ட மாட்டேங்கிறாங்களே .’
' ஆமாங்க. காலம் கலி காலங்க . சாமிக்குத் தெரியுங்க , நம்மளைப் பத்தி. ‘‘நாம பாருங்க. கோயிலுக்குச் சென்று தினசரிபிரார்த்தனை பண்ண தவறுவதில்லை. அங்கே உண்டியலில்தினசரி பத்து பைசா போடறோம், பிச்சைக்காரங்க இப்பெல்லாம் பத்து பைசா போட்டா திருப்பி நம்ம கிட்டேயே கொடுத்துறதாலே, அதை மட்டும் நிறுத்திட்டோம். என்ன பண்றது, நம்ம பரோபகாரம்சாமிக்குப் புரியுது , இந்தப் பிச்சைக்காரங்களுக்கு புரியலையே ' என்று புலம்புவாள் .
பாவங்க இவங்க. அதுதான் இவங்க பரோபகாரக் குணத்தைஉங்ககிட்டே சொல்லி பகிர்ந்துட்டேன். நீங்களாவது இவங்களைப்பாராட்டி கமெண்ட் போடுவீங்க தானே.
என்ன, நானா , நான் அப்போதே என்னோட வழக்கமானபாணியிலே அவங்க கிட்டே சொல்லிட்டேங்க.
'பார்வதி அம்மா .நீங்க கொடுத்த பூப்பூவான இட்லியும் புதுப்புடவையும் மத்தவங்களைப் பாராட்டுற உங்கள் குணமும் உங்கள் புகழ் சொல்லும் .
சங்கர் அய்யா, நீங்கள் எடுத்து எறிந்த சின்னக் கல்லும், எடுத்துக்கொடுத்த பத்து ரூபாயும் என்றென்றும் உங்கள் புகழ் பாடும்.
இருவரும் சேர்த்து போட்ட உண்டியல் காசு பத்து பைசாவும் இறைவன் மனதில் என்றும் இருக்கும்.. ' .
என்னங்க, இது போதும்ல . உங்க பங்குதான் பாக்கிங்க இப்ப.
-------------------------------------நாகேந்திர பாரதி