புதன், 11 பிப்ரவரி, 2026

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை 

------------


நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே.

இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான். 


நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் சடலங்களும், திரைசீலைக்குப் பின்னே தெரியும் வெட்டி எடுக்கப்பட்ட இரு கால்களும் , அதை ஒரு மர்ம பங்களாவாக ஆக்கி , அதை விற்க முயலும் அதன் சொந்தக்கார பரம்பரைப் பணக்கார வியாபாரிக்கு இறுதியில் அதை சொன்ன விலைக்கு பாதி விலைக்கு விற்க வைக்கிறது. 


இந்த வியாபாரியும் பல தகிடுதத்தங்கள் செய்து வியாபாரத்தில் செழித்துக்கொண்டிருப்பவன். இதில் பாதி விலைக்கு அதை வாங்கி அதே விலைக்கு மற்றொருவரிடம் ஒத்திக்கு விடும் இன்னுமொரு, மோசக்காரனுக்கு மோசக்கார வியாபாரியைக் காட்டி , அந்த பங்களாவின் மர்மத்தையும் முடிச்சவிழ்த்து விடுகிறார், தனக்கே உரிய பாணியில் ஆசிரியர்.


 மர்மக் கதைகளின்  முடிவைச்  சொல்லக் கூடாது என்பதால் , ஆசிரியரின் எழுத்து நடையில் நான் ரசித்த சில இடங்களை மட்டும் சொல்லி ,முடிவை கதையில் , அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில்  படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் ஒரு வரியில் காட்டப்பட்ட , பக்கத்து மெடிக்கல் கல்லூரியுடன் தொடர்பு  படுத்தி கதை முடிகிறது  என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் . 

-----------

ரசித்த அந்த வர்ணனைகள். முதலில் அந்த நாயக்கர் பங்களா பற்றிய வர்ணனை . 


பங்களாவா அது. அரண்மனை. இருபது செண்டு நிலத்தில் மூவாயிரம் சதுர அடியில் நறுக்கி எடுத்த மைசூர்பாகு    துண்டம் போல் உருண்ட தூணும் தேக்கு ஜன்னலுமாய், சுற்றிவர வாதநாராயண மரமும் வேப்ப மரமும் குசலம் விசாரிக்க, தாஜ் மகால் கணக்குக்கு ஜொலிக்கும் அந்த கட்டடத்திற்கு ஒரு காலத்தில் அசாத்திய கிராக்கி . 


வாசல் புறம் கன்னங்கரேலென்று ஈட்டியாய்க் குத்தி நிற்கிற வாசல் கதவு .  தாண்டி உள்ளே நுழைந்தால் கார் நிற்கும் போர்டிகோ வரை பவழ மல்லிகைச் செடிகளின் குபீர் வளர்ச்சி + வாசம் . 


எங்கும் இல்லாதபடி நாலு மனோரஞ்சித செடி மரங்களுக்கு அந்த பங்களா பிரசித்தம் . பின்பக்கம் தோட்டம் . ஜாதிக்கு ஒரு மரம் சத்தியமாய் உண்டு . ஆங்கிள் கிராதியில் ஊஞ்சல் . இடுப்புயர  சிமெண்டு திட்டில் , சின்ன சைஸ் பிள்ளையார் அன்று அந்தத் தோட்டம் கூட அட்டகாச ரகம்.  

-----

முன்னும் பின்னுமாக கண்முன் கொண்டு வருகிறார்  நாயக்கர் பங்களாவை ஆசிரியர். அந்த இயற்கைக் சூழலோடு கூடிய அந்த அழகிய பங்களாவில் போய்க் குடியேற விரும்புவோர்க்கு அடுத்து வரும் வர்ணனைகள் அதிர்ச்சி அளிக்கும்.

------

ஊரு சுடுகாட்டில் புதைக்கப்படும் கன்னிப்பெண்களின் பிணங்கள் பங்களாவில் இருந்து தோண்டி எடுக்கப்படுவது பங்களாவின் பிரதான மர்மங்களில் ஒன்றாகி விட்டது . ஒருமுறை வீட்டின் உள் ஒரு திரைசீலைக்குப் பின்னே இரண்டு கால்கள் தெரிந்தன .  'யார் அது ஒளிந்து கொண்டு ' ... திரைச் சீலையை விலக்கி விட்டுப் பார்த்தால் இதயத்தைத் தீக்குச்சியால் உரசின மாதிரி ஒரு வலி அங்கே யாரும் இல்லை.   வெட்டி எடுத்த இரண்டே இரண்டு கால்கள் மட்டும் தனியாக. 

----

ஒரே நிமிடத்தில் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுகிறார் ஆசிரியர் தன் எழுத்துத் திறமையால் . இயற்கை அழகோடு நம்மை வா வா என்று ஏங்க வைத்த அந்த நாயக்கர் பங்களா , இப்போது பேய்ப் பங்களாவாக மாறி நம்மைப் போ போ என்று ஓட வைக்கிறது . 


இதற்கு நடுவில் அந்த பங்களாவை விற்க முயலும் சொந்தக்கார வியாபாரியின் வியாபார மோசடிகள்  

----------------

அப்பளம் போடுபவனில் இருந்து யமஹாவை விற்பவன் வரை புரணி கிளப்பி விட்டு சாய்த்த அவன் தந்திரங்கள் .

‘அந்த அப்பளத்திலே மரத்தூள் மாவு கலந்திருக்கு , லிவருக்கு ஆபத்து ,’

‘அந்த யமஹாவா, அது பன்னி அடிச்ச வண்டிங்க , வாங்கினா தொலைஞ்சிங்க .’ 


‘பிஸினஸிலே இதை எல்லாம் பண்ணிதான் பெரிய ஆள் ஆயிருக்கேன்’ என்று பெருமை அடித்துக் கொள்ளும் அவனுக்கு  ஆப்படிக்க மோசக்காரனுக்கு ஒரு மோசக்காரன் வந்து , இப்போது அவனது அந்த பங்களாவை விற்க முடியாத நிலை. 

இறுதியில் பாதி விலைக்கு அதை விற்க முடிவு செய்ய , அதை வாங்குபவன் அந்த மோசக்காரனுக்கு மோசக்காரன். இப்போது அவிழ்கிறது  அந்த பேய்பங்களாவின் மர்ம முடிச்சுகள் . நீங்கள் கதையில், அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில்   படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் . 

----

மிகவும் விறுவிறுப்பான கதை. மர்மத்துக்கு மேல் மர்மம் . அதற்கு நடுவில், ‘நாம் மற்றவரை ஏமாற்றினால் , நம்மை ஏமாற்றவும் ஒருவன் வருவான்’ என்ற ஒரு சிந்தனையையும் கிளப்பி விட்டு கதை முடிகிறது. 

இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மர்மக் கதைகளும் ஆன்மீகக் கதைகளும் எழுதி புகழ் பெற்றவர். ஆன்மிகம் கலந்த அவரது மர்மத் தொடர் கதையான   ' ஆனந்த விகடனில்  வெளிவந்த ' இறையுதிர் காடு  ' நம்மால் மறக்க முடியாத ஒன்று. இந்த ' இந்த நாயக்கர் பங்களா கதை மர்மமும் வியாபார தந்திரமும் கலந்த வித்தியாசமான கதை. படித்து ரசியுங்கள். வாய்ப்புக்கு நன்றி அழகியசிங்கர் . 


-------------நாகேந்திர பாரதி 

  

My Poems/Stories/Articles in Tamil and English  


வெள்ளி, 30 ஜனவரி, 2026

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை 

-------------

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.


தூங்கி எழுந்ததும் அவன் மனது தெளிவாக இருந்தது. இன்னும் எத்தனை நேரத்திற்கு இது இப்படி என்று தெரியாது என்று நினைத்தபோது சிரிப்புதான் வந்தது . அதற்குள் அவளிடம் பேசி விட வேண்டும். ஏன் நேற்று அப்படி .


என்ன நடந்தது நேற்று. வழக்கம் போல் தான். ஆனால் பவுர்ணமியாய் இருந்த அவள் முகம் இருண்டு அமாவாசையாய் ஆனது எப்படி. .அவன் இருப்பது , குடியில் மூழ்குவோரைத் திருத்தும் மனநல மையம். அவள் தினசரி இரவு அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அவர்கள் மனம் அறிந்து சிறிது நேரம் பேசி மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பொது நல சேவகி. அவள் வேலை பார்ப்பது ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் பொது மேலாளராக. இரண்டு குழந்தைகளின் தாய். கணவனும் அரசாங்க அலுவலகத்தில் உயர் அதிகாரி . இந்த சேவை அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு பொது நல சேவை .


அவளின் பரிவான பேச்சுக்கும், கனிவான முகத்திற்கும் காத்துக் கிடக்கும் குடி நோயாளிகள் பல பேர். அவளின் அன்பான பேச்சில் ஒரு தாயின் ஆதரவைக் கண்டு , திருந்திய வாழ்வு பெற்றுத் திரும்பிய பலர் ,அந்த மையத்திற்கு மனைவி குழந்தையோடு வந்து நன்றி சொல்லிச் சென்றதை அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு விதத்தில் குடி நோயாளிகள் மன நோயாளிகள்தானே . அந்தக் கருகிய திரியைக் கண்டு பிடித்துத் திருகி விட்டு ஏற்றி விட்டால் தீபம் எரியத் தொடங்கி விடும்தானே.


அவனை அவன் பெற்றோர் கொண்டு வந்து விட்டுச் சென்று ஒரு மாதம் ஆகிறது . அவனது படிப்பில் அவர்களின் தீவீர கண்டிப்பும் கண்காணிப்பும் தான் அவனை இந்தப் பழக்கத்தில் கொண்டுவந்து சேர்த்ததை அவர்கள் உணரவில்லை.அவள் உணர்ந்து விட்டாள் முதல் முயற்சிப் பேச்சிலேயே. இரவு நேரத்தில் உடலை முறுக்கி அவன் குடிக்கு ஏங்கித் துடிக்கும் போது வரும் அவளின் ஆழ்நிலைப் பேச்சுக்கள் அவனை உள்ளே உள்ளே இழுத்துச் சென்று அவனை அமைதிப்படுத்தித் தூங்கப் செய்யும். அவள் செல்வாள்.


அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று அவன் உள் மனதிற்குள் அவனை அவள் அழைத்துச் செல்ல, அவன் பேசும்போது வந்த வார்த்தைகள். ‘ உமா டீச்சர் ,I need you , நீங்கள் எனக்கு வேண்டும் ‘ . இந்த வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் அவள் தடுமாறியது அவளின் இன்னொரு முகத்தை இழுத்து வர கடுமையான வார்த்தைகள் அவளிடம் இருந்து . ‘ரமேஷ் , எழுந்திரு ‘ . விழித்த அவன் கண்டது அவளின் கோப முகம். அதிர்ந்தவனிடம் , ஒரு நிமிடம் தன் நிலை உணர்ந்து சமாளித்த அவள் அவனைத் தூக்க நிலைக்குக் கொண்டு சென்று விட்டு, கிளம்பினாள்.


மறுநாளும் வந்தாள் தெளிவான முகத்தோடு. அவனின் குடிநிலை மட்டும் அல்ல, அவன் வயதின் அந்தக் குழப்ப நிலையையும் தன் முயற்சியால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு. அவளின் சேவையின் சவால்கள் அவளை உற்சாகப் படுத்துவது அவளின் இன்னொரு முகம்

-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 7 ஜனவரி, 2026

வழியனுப்புதல் -2025 - கவிதை

 வழியனுப்புதல் -2025   - கவிதை 

——-------

( கவிதை வனம் குழுவில் ) 

வழக்கம் போல் நீயும்

வந்தாய் போகிறாய்


ஒவ்வொரு நாளிலும்

பிறந்தாய் இறந்தாய்


உருளும் காலத்தின்

ஓட்டம் தானே நீ


வழியனுப்பும் வரவேற்பும்

தேவையா உனக்கு


உன் வழியில் நீ

எம் வழியில் யாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


காகிதக் கப்பல் - கவிதை

 காகிதக் கப்பல் - கவிதை 

-----------

(கவிதை வனம் குழுவில் ) 


பிஞ்சு விரல்களின்

வளைவுக் கலை ஒன்று


ஓடும் நீரின்

உணர்வைப் புரிந்தபடி


வளைந்தும் நெளிந்தும்

செல்லும் பாதையில்


கல்லும் முள்ளும்

இடறும் நேரம்


கண்ணீர் விடுகின்ற

காகிதக் கிழிசலின்


உணர்வைப் புரிந்து

உருகும் குழந்தை


வாழ்க்கை ஓட்டத்தில்

கலக்கும் போது


காகிதக் கப்பலை

நினைத்துப் பார்க்கும்


காலம் வராமல்

கடவுள் காக்கட்டும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


இல்லத் தலைமை - கவிதை

 இல்லத் தலைமை - கவிதை 

----------------

(கவிதை வனம் குழுவில் ) 


இல்லத் தலைமை

இருவர்க்கும் பொதுவென்போம்


மையல் அறையிலும்

சமையல் அறையிலும்


குழந்தை வளர்ப்பிலும்

பெரியோர் பொறுப்பிலும்


வீட்டுப் பணியிலும்

நாட்டுப் பணியிலும்


இருவர் பங்கும்

இணையாய் இருந்திட்டால்


வீடும் சிறக்கும்

நாடும் செழிக்கும்


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நிதி மேலாண்மை - கவிதை

 நிதி மேலாண்மை - கவிதை 

---------------------

( கவிதை வனம் குழுவில் ) 


பணம் மட்டுமா நிதி

பாதுகாக்கவும் பகிர்ந்து வாழவும்


பாசமும் நிதிதான்

பண்பும் நிதிதான்


அன்பும் நிதிதான்

ஆற்றலும் நிதிதான்


அத்தனை நிதியையும்

ஆவலாய்ச் சேர்ப்போம்


சேர்த்ததைக் கொடுத்து

வாழ்வதே மேலாண்மை

---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நரை கூடும் காதல்-கவிதை

 நரை கூடும் காதல்-கவிதை 

-------------------

(கவிதை வனம் குழுவில் ) 


கண்ணோரம் நெளிகின்ற கோடுகளில்

காதலின் வரிகளின் கவிதை


இதழ்களில் உலர்ந்திட்ட ஈரத்தில்

காதலின் சொற்களின் பக்குவம்


கால்களின் மெதுவான நடையிலோ

காதலின் அமைதியின் கவர்ச்சி


கைகளில் புடைத்திட்ட நரம்புகளில்

காதலின் ரத்தத்தின் ஓட்டம்


கூந்தலில் கலந்திட்ட வெண்மையில்

காதலின் கூடிய தூய்மை


-----------------நாகேந்திரபாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


தெரு விளக்கு - கவிதை

 தெரு விளக்கு - கவிதை 

----------------

( கவிதை வனம் குழுவில் ) 


பாதைக்கு மட்டும் அல்ல

படிப்புக்கும் வெளிச்சம் நான்


என் அடியில் படித்தவர்கள்

எத்தனை பேர் உச்சியிலே


ஓரத்தில் இருந்தாலும்

உதவிக்கு நான் உண்டு


இருட்டுக்கும் திருட்டுக்கும்

என்றுமே எதிரி நான்


மின்சார உயிர் ஊட்டிக்

காப்பதுவோ உம் பொறுப்பு


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


திங்கள், 22 டிசம்பர், 2025

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை 

-----------

(கவிதை  வனம் குழுவில் ) 


துளிர்த்த விதையும்

செடியாய் மாறி


மரமும் ஆகிக்

கனியைக் கொடுக்கும்


கனியைப் கொடுத்துக்

களைத்த பின்னே


மரமும் விறகாய்

மாறிப் போகும்


துளிர்த்த பயிரும்

சாய்ந்த பின்னே


அறுத்துப் போட்டு

உதிர்த்த நெல்லைப்


பிரிந்த வைக்கோல்

மாட்டின் உணவு


சக்கை ஆனபின்

சாவே இயற்கை


வாழ்க்கைத் துளிரும்

வளர்ந்து சாயும்


இயற்கை நியதியை

ஏற்று வாழ்வோம்


------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English


தோள் கொடுக்கும் தோழமை - கவிதை

 தோள் கொடுக்கும் தோழமை - கவிதை 

-----------------

(கவிதை  வனம் குழுவில் ) 


பள்ளியில் இருந்தே

பழகி வந்ததால்


நல்லதும் கெட்டதும்

நடத்திப் பார்த்ததால்


சிரிப்பும் அழுகையும்

சேர்ந்து செய்ததால்


பரிசும் உதையும்

பங்கு போட்டதால்


அவனை நானும்

என்னை நானும்


ஒன்றாய் நினைத்து

உறவு கொண்டதால்


வருடம் ஆனாலும்

வயது போனாலும்


தோள் கொடுப்பான்

தோழன் என்றும்


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


காலக் கண்ணாடி - கவிதை

 காலக் கண்ணாடி - கவிதை 

-------------------

(கவிதை  வனம் குழுவில் ) 


காலக் கண்ணாடியின்

கோலங்கள் பலவிதம்


இலக்கியக் கண்ணாடியில்

எழுத்தின் மாற்றம்


தலைமுறைக் கண்ணாடியில்

கலாச்சார மாற்றம்


அரசியல் கண்ணாடியில்

ஆட்சியின் மாற்றம்


மக்களும் சமூகமும்

மாறும் தோற்றத்தை


காலக் கண்ணாடி

காட்டும் விதத்திலே


வலியும் புரிகிறது

வழியும் தெரிகிறது


--------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை  ------------ நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே. இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர்...