புதன், 18 டிசம்பர், 2024

சிறுகதை மதிப்புரை - கட்டுரை

 

சிறுகதை மதிப்புரை - கட்டுரை 

-------------

அழகியசிங்கரின்  கதை புதிது நிகழ்வில் நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சிறுகதை பற்றி நான் பேசிய மதிப்புரை 

--------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே. நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சிறுகதை . தங்கேஸ் அவர்கள் கவிஞர், ஆசிரியர் என்பது கதையைப் படித்தவுடன் அவரைத் தெரியாதவர்களுக்கும் படித்தவுடன் புரிந்து விடும். அவ்வளவு மென்மையான கவிநயமும். மாணவர்களின்  மனநயமும் வெளிப்படும் கதை. 


தலைமை ஆசிரியர் ஒரு மரகதப் புறாவை ரசிக்கும் வர்ணனைகளோடு கதை ஆரம்பிக்கிறது . இப்படி .

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக அமர்ந்திருந்தன. தலையுச்சியில் முளைத்திருந்த அழகு கருங்கொண்டையை அவைகள் இடமும் வலமும் ஆட்டியபடியே அபிநயிக்கும் போது கண்களுக்கு மிகச் செல்லங்களாக மாறி காட்சி தந்தன. உச்சிக் கருங் கொண்டையைப் பார்த்தால் பிளவுபட்ட அலகு போல் விரிந்திருக்கும்..

சாதாரணமாகப் பார்த்தால் குருவி வாயைத் திறந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரியும். சற்று கூர்ந்து கவனித்தால் தான் அது அலகு அல்ல அதன் ஸ்பெசல் கொண்டை என்று கண்டுபிடிக்க முடியும். கழுத்துக்கும் கீழே பக்கவாட்டில் புசுபுசுவென்று வளர்ந்திருக்கும் தாடைமுடிகளுக்கருகில் காதோரம் ஒரு முழு ரூபாய் நாணயத்தை மதுரை மீனாட்சி குங்குமத்தில் குழைத்து பொட்டிட்டது போல அப்பியிருக்கும் அடர் குங்குமச் சிவப்பு. அதற்கு பவளத் தோடு மாட்டி விட்டது போல அப்படி பாந்தமாக பொருந்திப்போனது. நாளெல்லாம் குழந்தையை வேடிக்கை பார்ப்பதைப்போல இந்தக் குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்று தோன்றிய போது பள்ளியின் முதல் மணி ஒலித்தது.'


ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரின் பார்வையில் கவி நயத்தோடு ஆரம்பிக்கிறது  கதை. தொடரும் கதையில் ஒரு சிறுவனின் சேட்டைகள் பற்றிய விபரங்கள். பீடி, சிகரெட்டு, மது பாட்டில், குடும்பக் கட்டுப்பாடு சாதனம், சிறுமிகளிடம் சில்மிஷம், ரவுடி உறவினர்களின் மிரட்டல் என்று பல்வேறு ஆசிரியர்கள் அந்தத் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யும் விபரங்கள், இவரே பார்க்கும் விஷயங்கள் என்று தொடரும் போது இந்தக் காலத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் எப்படி எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்ற நினைப்பு நம் மனத்தைக் கலவரப்படுத்துகிறது . அந்தச் சேட்டைப் பையன் ' சசி ' எல்லாவற்றிற்கும் சமாதானமாகச் சொல்லும் காரணங்கள்  ஒரு பக்கம் சிரிப்பை வரவழைத்தாலும் மற்றொரு புறம் அது போன்ற பசங்களின் சீரழிவை நினைத்து வருத்தத்தையும் வரவழைக்கிறது . 


இடை இடையே வரும் இயற்கை வருணனைகள் நம்மைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகின்றன. அவற்றில் சில. அந்தப் பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் கிடைக்கும் காட்சிகள் . 


காலை வெய்யில் தூவானம் ஏரியில் பச்சைப் பட்டுத்துகிலை உதறி விரித்தது போல படர்ந்து பரந்து கொண்டிருந்தது. தூரத்தில் காலை சூரிய வெளிச்சத்தில் இரைச்சல் பாறைக்கருகில் வெள்ளி அலைகள் கெண்டை மீன்களைப் போலத் துள்ளி விளையாடி கொண்டிருந்தன. கம்பன் சொன்ன “அலகிலா விளையாட்டு ”இது தான் போலும்.

தூவானம் போகிற புதர் மேட்டில் ஓரு யானை குடும்பம், தம்பதி சம்மேதரராய் இரண்டு குட்டிகளுடன் ஈத்தை குருத்தை ஒடித்து ஒடித்து தின்று கொண்டிருப்பதை இங்கிருந்தே மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை விரட்டுகிற பாவனையில் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவர்களின் அருகில் சென்று தாங்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.


இப்போது ஒரு பையன் வந்து அந்தச் சேட்டைப் பையன் 'சசி' யின் பையில் இருக்கும் 'மரகதப் புறா' குஞ்சு ஒன்றைக்  கொண்டுவந்து இந்த தலைமை ஆசிரியரிடமும். ஆசிரியர்களிடம்  காண்பிக்கிறான்.


மருது பைக்குள் கையை விட்டு இழுக்க அந்த பச்சை உயிரி அவன் கையோடு வந்தது.

மரகத வண்ணச் சிறகுகள். செஞ்சாந்து கழுத்து. அதில் கோதுமை மாவை துவி விட்டது போல ஒரு ஆங்காங்கே ஒரு மினு மினுப்பு. அடியில் சிவந்து நுனியில் வெளுத்து சற்று மஞ்சள் பூசிய மிளகாய்ப்பழ அலகு.குறு குறுவென்று பார்க்கும் நீலமணிக்கண்கள்,

மரகதச் சிறகுகளுக்கும் கீழே சிப்பிக் காளான் நிறத்தில் அடுக்கடுக்கான கீழடுக்கு சிறகுகள். அதே வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் நீண்ட வால். கழுத்துக்கும் கீழே ஊதாப்பூவின் மீது இலேசாக செந்துருக்கம் பூசியது போல மினு மினுக்கும் தாடை . செல்லமாகக் குலுங்கும் தொப்பை வயிறு .

.

அது சாரின் உள்ளங்கைகளில் பயந்து போய் நடுங்கிக் கொண்டேயிருந்தது பார்ப்பதற்கு அழுவது போல இருந்தது

“ அழுகுது சார் ”

“ காட்டுக்குள்ள திரியுறத இப்படி பைக்குள்ள போட்டு பூட்டி வச்சா, அழுகாம என்னடா செய்யும். ஃபாரஸ்ட்காரங்க பார்த்தாங்கன்னா பதினஞ்சு வருசம் உள்ள புடிச்சுப் போட்ருவாங்க ”

“சார் இத வித்தா நல்லா காசு கிடைக்கும்”

“இப்ப என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். கூப்பிடுறா இதை புடிச்சிட்டு வந்தவனை” என்றார் பி.டி சார்.

துரத்தில் வரும் போதே சசிக்கு விசயம் தெரிந்து விட்டது.

முகத்தை ஒரு மாதிரி அப்பாவியாக வைத்துக் கொண்டு தயங்கி தயங்கி பக்கத்தில் வந்து நின்றான்.

“எங்கடா புடிச்ச இத ?”

“சார் வரும் போது தேயிலைக்காட்டுக்குள்ள நொண்டிகிட்டு கிடந்தது அதுதான் மருந்து போடலாம்னு எடுத்துட்டு வந்தேன்” என்றான்

அப்புறம் ஏண்டா எங்ககிட்ட சொல்லலை ?

“சார் பர்ஸ்ட் பீரியட் ஆரம்பிச்சது. அப்படியே படிக்கிற ஆர்வத்துல எல்லாம் மறந்துட்டேன் ”

“ ஓஹோ அப்பிடியா சார் நான் சொல்லலை பய நல்ல படிப்பாளின்னு”

“சரி ,இதை என்ன செய்யப்போற ?”

“சார், வளர்ப்பேன் சார்”

“சரி, எவ்வளவுக்கு விப்ப ?” என்றார் மிகவும் எதேச்சையாக கேட்பது போல.

“மரகதப்புறாவுக்கு நல்ல விலை கிடைக்கும் சார் ” வாய் தவறி சொல்லி விட்டு நாக்கை கடித்துக்கொண்டான்  'சசி' .


தன் தவறு அனைவர்க்கும் தெரிந்து விட்டது என்று பதட்டத்தில் அந்தப் பையன் நிற்கும் போது தலைமை ஆசிரியர் என்ன செய்யப் போகிறார் என்று நம்மையும் எதிர்பார்த்துக் காக்க வைக்கிறார் ஆசிரியர்.


தலைமை ஆசிரியர் யோவான் சொல்கிறார். 


 

“ இந்தாடா” என்றபடி அந்தக் கிளிப்பச்சையை நான் அவன் கையில் கொடுத்தேன்.

அதை எதிர்பார்க்கவேயில்லை அவன் . வாங்கும் போது அவன் கைகள் இலேசாக நடுங்கினதை உணர்ந்தேன். அவன் கைகளுக்குள் சென்றதும் அது இலகுவாகத் தன்னை அங்கே அமர்த்திக் கொண்டது. சிறிது நேர அமைதி தாங்கொண்ணாததாக இருந்தது.

“வாங்க எல்லோரும் போகலாம் அவன் அதை என்ன செய்யணுமோ செஞ்சிகிறட்டும்” என்றேன் நான்.

அவன் எதுவுமே பேசாமல் அந்தப் பறவையை கைகளில் வைத்து பார்த்தபடியே இருந்தான். நாங்கள் ஒரு எட்டு கூட வைத்திருக்கவில்லை. அதற்குள் என்ன நினைத்தானோ மெல்லப் படிக்கட்டுகளின் வழியாக இறங்கி விளையாட்டு மைதானத்திற்குள் சென்றான்.

எதிர்பாராத ஒரு கணத்தில் வலது கையை மேலே உயர்த்தி கீழே இறக்கி அதை வேகமாக தலைக்கு மேலாக உயர்த்தினான். அந்தப்பறவைக்கு முதலில் இந்த திடீர் சீர்குலைவைப் புரிந்து கொள்ள முடியவில்லை . பதட்டத்தில் தன் பிடிமானத்திற்காக அவனது உள்ளங்கைகளை தன் கொக்கிக் கால்களால் நன்றாக அழுத்தியபடியே விழுந்து விடாமல் இருக்க படபடவென்று அவன் உள்ளங்கைக்குள்ளேயே சிறகடித்தபடியே இருந்தது.

இப்போது மாணவர்கள் அவர்களை அறியாமலேயே ஹோவென்று பெருங்குரலெடுத்து கூச்சலிட்டபடி கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவன் இரண்டாவது முறையும் அது போலவே செய்த போது காற்றில் தத்தித் தத்தி சிறகடிக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் கூட பறந்திருக்காது .அதற்குள் காம்பவுண்ட் சுவருக்கருகில் நின்ற சிறிய கொய்யா மரத்தடியின் மடியில் பொத்தென்று விழுந்தது. மாணவர்கள் மறுபடியும் ஹோவென்று பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்குள் அது எழுந்து மெல்லச் சிறகடித்து சற்று தொய்வாகப் பறந்து பின்னர் சட்டென்று விரைவாகி சவுக்கு மரங்களின் ஊடாகப் பறந்து பறந்து ஒரு பச்சைப்புள்ளியாக தூவானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சசி எதுவுமே பேசாமல் வெறும் உள்ளங்கையை ஏந்திய நிலையிலேயே அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தான். மாலை நேரப் பொன் மஞ்சள், புற்களின் மீது பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது.. ஒரு கணம் அவன் நெற்றியிலும் அந்த இளம் பச்சை வெய்யில் படர்ந்து போனது.


என்று முடிகிறது கதை . 


கவித்துவ மனம் கொண்ட இளகிய மனம் கொண்ட அந்த தலைமை ஆசிரியரின் செயல், அந்த சேட்டைப் பையனின் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி இருப்பதை நாமும் உணர்ந்து கொள்ள முடிகிறது . 


அந்தத் தலைமை ஆசிரியர் பள்ளிக்குழந்தைகளுக்கு மட்டும் பாடம் நடத்தவில்லை.படிக்கும் நமக்கும் பாடம் நடத்துகிறார். மன்னிப்பாலும் அன்பாலும்  முடியாதது எதுவும் இல்லை என்பதை சேட்டைப் பையன் சசி திருந்தும் முடிவில் காண்பித்து நண்பர் கவிஞர், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்  தங்கேஸ் அவர்கள்,  கவித்துவம்  மிக்க   ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். அவருக்கு வாழ்த்துகள். நன்றி 


--------------நாகேந்திர பாரதி 

  

My Poems/Stories in Tamil and English 


புகைப்படம் - கவிதை

 புகைப்படம் - கவிதை 

--------------- 

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்

கழற்றியதும் தெரிந்தது


மாலையோடு மாட்டியிருந்த

புகைப்படத்தில் தூசி


சிந்திய கண்ணீரைச்

சேர்த்துத் துடைக்கையிலே


தண்ணீர் தேவையில்லை

துண்டை ஈரமாக்க


தூசி தொலைந்தது

சிரித்தபடி அப்பா

------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English are available at  


நம்பிக்கை - கவிதை

 நம்பிக்கை - கவிதை 

————


கோயில் கிடையாது

கோபுரம் கிடையாது


உண்டியல் கிடையாது

ஊரும் கிடையாது


ஒதுக்குப் புறத்திலே

ஒத்தை வேப்பமரம்


குத்திவச்ச வேல் கம்பு

குதிரையிலே முனுசாமி


கும்பிட்டுப் போனாலே

கூடுறதாம் நெனைச்சதெல்லாம்


பத்துத் தலைமுறையாய்ப்

பத்து ஊரு சனத்திற்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நிழலும் நிஜமும் - கவிதை

 நிழலும் நிஜமும் - கவிதை 

———

நிழல்கள் 

சில சமயம் 

முன்னால் போகின்றன 

சில சமயம் 

பின்னால் வருகின்றன 

சில சமயம் 

பதுங்கிக் கொள்கின்றன 

நிஜங்களும் கூட 

அப்படித்தானோ

எல்லாம் 

நேரத்தைப் பொறுத்தது 

———-நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சனி, 30 நவம்பர், 2024

சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு 

--------------

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே.

கோபிகிருஷ்ணன் அவர்களின் 'குற்றமும் தண்டனையும் ' சிறுகதை .

இரண்டு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்வைச் சொல்லும் கதையை எடுத்துக் கொண்டு , நமது மனக் குழப்பங்களையும், பெண்ணுரிமைக் கருத்துக்களையும், வாழ்வைப் பற்றிய பல தத்துவக் கருத்துக்களை யும் இணைத்து நகைச்சுவை கலந்து சொல்லிப் போகிறார்.


முதல் தம்பதி களில் கணவன் கொஞ்சம் ஆணாதிக்க மனப்பான்மையும், மனக் குழப்பம் உள்ளவனாகவும் அதே சமயம் அதை அவ்வப்போது உணர்ந்து திருந்த முயற்சிப்பவனாகவும் காட்டப் படுகிறான். அவன் மனைவி சம்பிரதாய முறைப்படி வாழும் சராசரி ஹிந்துப் பெண் .கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதுபவள், இவரைப் போன்ற கல்லோ புல்லோகூட ஒரு நல்ல பெண்ணுக்குக் கணவனாக வாய்க்கும்பொழுது அவை எந்தக் குறையுமில்லாமல் பவித்திரப்படுத்துப்பட்டுக் கௌரவிக்கப் பட்டு விடுவதாகவும் குறிப்பிடுகிறார்.


ஒரு நாள் , மாலை, இந்தக் கணவன் ,இவர் ' ஜே கேயின் உரை ஒன்றை கேட்பதற்கும் இவரது நண்பர் ஒருவர் வீட்டில் தாஸ்தாவாஸ்கியின் ' குற்றமும் தண்டனையும் ' திரைப்படம்  பார்ப்பதற்கும் , ஏற்பாடு செய்து ஆவலோடு இருப்பவருக்கு அவை இரண்டுமே நிறைவேறாமல் போய் விடுகின்றன . அலுவலக வேலையாலும், தொலைக்காட்சி நிகழ்வின் விபரம் பேப்பரில் தவறாக வெளிவந்த காரணத்தாலும் இப்படி நடந்து விடுவதால், மிகவும் மன வருத்தத்தோடு வீடு திரும்ப நேரம் அதிகம் ஆகி, கதவு திறக்கும் வீட்டு சொந்தக்காரம்மா இவரிடம் வெறுப்போடு பேச , அந்தக் கோபத்தில் இவர் மனைவியைக் கோபமாகத் திட்டி விட்டு படுத்துத் தூக்கம் வராமல் புரள்கிறார்,


இந்த நிகழ்வுகளை ஆசிரியர் விவரிக்கும் விதத்தில் , மனக் குழப்பம் உள்ள ஒரு மனிதனின் உள்ள உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்.


உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு .


அலுவலக வேலை முடிய நேரம் ஆகி விட்டதால் , ஜேகேயின் உரையைக் கேட்க முடியாத எரிச்சலை ஆசிரியர் வெளிப்படுத்தும் இந்த இடம் .


. ‘தொழில் மூலமாக நீ கடவுளைத் தரிசிக்கிறாய்’ என்ற கார்லைலின் கூற்றை மனதிற்குக் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்தேன். எனக்கு எரிச்சல்தான் அதிகரித்தது. உண்மையிலேயே எந்தக் கடவுளின் உருவத்தையும் நான் வணங்காதவனாகையாலும், கடவுளைத் தரிசிக்க வேண்டிய எந்தவித நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டதில்லையாலும், கடவுள் என்று தனியாக வெளியில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவனாகையாலும் எனக்கு எல்லாச் சமாதானங்களும் சப்பைக்கட்டு மடத்தனங்களாகத் தோன்றின.


ஜே.கே. சொல்லும் முறையைக் கையாண்டும். என்னுள் ஏற்பட்ட எரிச்சலை அகற்ற முடியவில்லை. மனம் அதீத்தமாகத்தான் இயங்க ஆரம்பித்தது. கடைசியில் ஜே.கே. மீதே சிறிது எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தது. இவர் ஏன் தன் உரையை 7-15-இலிருந்து 8-15 வரைக்கும் நிகழ்த்தக் கூடாது? அனைவருக்கும் சௌகரியமாக இருக்குமே. கடைசியில் எனக்கு ஒன்று நன்றாகவே தெரிந்தது. நான் உணாச்சிவசப்பட்டிருந்தேன். சீரான மனநிலை கொஞ்சம் குலைந்துதான் போயிருந்தது'

என்று முடிகிறது .


அடுத்து அந்தத் திரைப்படம் பார்க்க நண்பன் வீட்டுக்குச் செல்லும் வழியில் நேரும் இந்த சம்பவம் .


வீட்டைவிட்டுக் கிளம்பினேன்.

வழியில் யாரோ என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. காதில் நன்றாகவே விழுந்தது. ஏனோ அதை நான் மனப்பிரமை என்று எண்ணி புறக்கணித்துவிட்டு நடந்துகொண்டிருந்தேன். சிறிது தூரம் நடந்திருப்பேன். ‘ராஜ்’. இப்பொழுது குரல் என் வலது காதின் மிகச் சமீபத்திலிருந்து கேட்டது. எந்த எண்ணமும் தோன்றுமுன்னமேயே ரமேஷும் அவருடைய நண்பர் ஒருவரும் என் அருகில் இருந்தனர். அவர் மூன்று முறை என் பின்னாலிருந்து அழைத்திருந்தாராம். என்னை யாரோ அழைத்ததை நான் ஒரு முறை நன்றாகவே கேட்டதையும், பிறகு நான் ஏன் திரும்பிப் பார்க்கவில்லை என்ற காரணத்தையும் சொன்னேன். ரமேஷுக்கு என் அர்த்தமற்ற கற்பனைகளும், விசித்திரமான மனப் போக்கும் புதிதல்ல என்பதால் அவருக்கு நான் சொன்னது எந்தவித ஆச்சரியத்தையும் உண்டுபண்ணவில்லை.

என்று முடிக்கிறார்.


அதீத சிந்தனைகளால் மனக் குழப்பத்தில் இருக்கும் ஒரு மனிதனின் மன நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார் இவற்றில் .


அடுத்து , இன்னொரு தம்பதிகளின் வாழ்க்கை. இவரது நண்பரும் அவரது மனைவியும்.

அவர்களை பற்றி இப்படி எழுதுகிறார்.

என் உற்ற நண்பன் கதை மிகவும் பரிதாபத்துக்குரியது. காலை 7-00 மணிக்கு அவன் தொழிற்சாலைக்குச் செல்ல பஸ் பிடிக்க வேண்டும். மனைவியோ குறைந்தது 7-00 மணிவரை தூங்குபவள். அவள் தூக்கத்தைக் கலைப்பது அசாத்தியம். முன் தூங்கி பின் எழுபவள். இந்தக் காலத்து ஜன்மங்கள் அனைத்துக்கும் எழுந்ததும் சூடாக காப்பியோ டீயோ தேவைப்பட்டுத்தொலைக்கிறது. இந்த விஷயத்தில் ஜாதி மத பேதம் இல்லாமல் ஒருவித சந்தோஷமான ஒருமைப்பாடு இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிறது. வீட்டிலுள்ள சுவரையோ ஜன்னலையோ உசுப்பி காப்பி போட்டுத் தரச் சொல்ல முடியாத நிலை. மனைவி சுகமாகப் படுத்து ஆனந்தித்துத் தூங்கும் அழகிய அவலட்சணக் கண்கொள்ளாக் காட்சியை ரசிக்கத் தெரியாத மூர்க்கன் அவன். அழகுணர்வு கொஞ்சமும் இல்லாது எழுந்ததும் வீட்டின் அருகில் இருக்கும் டீக்கடைக்குச் சென்று குடித்துவிட்டு, வீடு திரும்பி, தற்சுகாதாரச் செயல்களை அவசரமாகச் செய்து முடித்துவிட்டு அலுவலுக்கு விரைவான்.


. தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒரு தின சரிச் சடங்காகவே ஆகிவிட்டது அவனுக்கு. உண்மையில் மனைவி சுகமாக ஒய்வெடுத்துக் கொள்ள போதுமான வசதி செய்து தரத் தான் அவன் வேலைக்குப் போகிறான்.

சில சந்தர்ப்பங்களில் அவள் கேட்பதுண்டாம்: ‘பாக்டரியில் என்ன அப்படி வெட்டி முறிக்கிற வேலை! கொஞ்சம் சீக்கிரம் வத்திருந்தால் இன்றைக்கு ஒரு சினிமாவுக்குப் போயிருந்திருக்கலாம். தூக்க முடியாத பெரிய ஒரு

பாறையை முதுகின் மீது ஏற்றி வைத்துக்கொண்டு ஒரு இடத்திலிருந்து நீண்ட தூரம் – தூக்கிச்ச் சென்று இறக்கிவைப்பது அவன் பணியாக இருந்தால் ஒரு வேளை வெட்டி முறிக்கும் வேலையைத்தான் தன் கணவன் செய்கிறன் என்று அவள் ஒப்புக்கொள்ளக்கூடும்.

.

அந்த நண்பனை நான் குறைந்தது வாரம் ஒரு முறை பார்த்து ஒரு தடவை அவன் மனைவி நலன் (துக்கம்) விசாரிப்பேன். அவன் மனைவியைப் பத்திக் நான் ஏதோ கேட்கப் போய், அவன் எரிச்சலின் உச்சகட்டத்தில் ‘அவள்தானே, சுகமாக இருக்கிறாள். நண்பர்களுக்குக் காட்ட அலங்கார அழகான காட்சிப் பொருள், you know, a very beautiful show-piece’ என்று கூறினான். அவன் துக்கம் என் தொண்டையை அடைத்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன. '


என்று அவர்கள் கதையைச் சொல்கிறார்.


இந்த இரு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் காட்டி விட்டு பெண்ணுரிமை பற்றிய பொதுவான பல கருத்துக்களையும் இடையில் சொல்கிறார்.

உதாரணத்திற்கு இது .


ஆண்கள் முறைகேடாக

நடக்க நம் சமூகம் மகத்தான சௌகரியங்கள் செய்து கொடுத்திருக்கிறது. வண்டிக்காரன் சாராயம் குடித்துவிட்டு வந்து தன் மனைவியை உதைத்து வதைத்து நம் உயரிய பண்பாட்டைச் சீர் குலையாமல் காத்து நிற்கும் காட்சி ஒன்றும் அரிதல்ல. கோரத்தைச் சகிக்க முடியாமல் வெளியாட்கள் யாராவது வெளியே கணவனை இழுத்துத் திட்டி இரண்டு உதைகள் கொடுக்க ஆரம்பித்தாலோ, சிறிது நேரம் முன்வரை வதைபட்டுக்கொண்டிருந்த சகதர்மிணி ‘அவரெ அடிக்காதீங்க. பொண்ஜாதி புருஷனுக்குள்ளே ஆயிரம் இருக்கும். நீங்க இதில் எல்லாம் வர வேணாம். நாங்க இண்ணெக்கி அடிச்சிக்குவோம். நாளைக்குச் சேந்துக்குவோம்’ என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கும் சம்பவமும் புதிதல்ல.. இந்த அன்னியோன்னிய லட்சிய தம்பதிகள் இல்லாமல்தான் நம் கலாச்சார தர்மங்கள் எப்படி செழித்தோங்க முடியும்? புரியாத சுப மந்திரங்கள் ஏதோ ஓரு விளங்காத புனிதச் சூழலை உண்டுபண்ண, முன்பின் தெரியாத எவனோ ஒருவன் தன் கழுத்தில் கட்டும் பவித்திரத்தாலி சிலபல வேளைகளில் சுருக்குக் கயிறாக மாறும்போது ஏற்படும் வேதனையின் இன்பத்தை நன்றாகச் சுவைத்தே அனுவித்துக் கொண்டிருக்கும் ஓரு வக்கிரம்பிடித்த பொறுமையின் சிகரம் . காந்தி நம் சம்பிரதாய மகளிர்களில் இன்னும் உயிரோடு நிலவி வருகிறார். சடங்குகளால் பிணைக்கப்பட்ட உறவு இறுதிச் சடங்குவரை நிலைத்திருப்பது நம் கலாச்சாரத்தின் பிரத்தியேக சிறப்பம்சம். கலாசாரம் ஏனோ அதி முக்கியமாகத்தான் கருதப்பட்டுக் கொண்டு வருகிறது.

.

என்கிறார்.


சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் பலவற்றையும் இடையில் சொல்லிப் போகிறார்.


பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர வாழ்வில் வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் விடிவுகாலம் நிகழ்வதில்லை. வாழ்க்கைப் பிரச்சினை. வாழ்க்கையே பிரச்சினை. பழகிப் போவதால் பிரச்சினைகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக அமைந்து விடுகின்றன.பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை சலிப்பை உண்டாக்கும். மிகவும் சரி என்றே நினைக்கத் தோன்றுகிறது, ஆனாலும் பிரச்சினைகள் இருப்பதால் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமைந்துவிடுவதில்லை

தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளா மல் இருப்பதற்கு ஒரு தனி பிரயாசை தேவைப்படுகிறது. மரவுரி ஆடைகள் தரித்து, மரப் பொந்துகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோது மனிதனின் வாழ்க்கை சுவை மிகுந்ததாக இருந்திருக்கலாம், அப்பொழுதைய வாழ்க்கை நிலையில்லாததாக அமைந்திருத்தாலும்கூட. இப்பொழுதும் அதே நிலைதான். ஆனால் ஒரு வேறுபாடு, வாழ்க்கையில் சுவை குன்றி விட்டது, இல்லையேல் அது அறவே ஒழிந்துவிட்டது.


இறுதியாக ' குற்றமும் தண்டனையும் ' என்ற தாஸ்தாவாஸ்கியின்

திரைப்படம் ,கதையின் தலைப்பை நியாயம் செய்யும் படி இப்படி முடிக்கிறார்.


“டீயைச் சுவைத்துக்கொண்டே நினைத்துப் பார்த்தேன். நான் செய்த குற்றம்: என்றைக்குமில்லாமல் அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தொலைக்காட்சி பார்க்கும் நப்பாசை. கிடைத்த தண்டனை: மன உளைச்சல்+வேண்டாத சிந்தனைகள்”


மொத்தத்தில் அதிகமாகச் சிந்திக்கும் ஒரு சாதாரண மனிதனின் மனக் குழப்பங்கள், அவன் சிந்தனைகள் , இவற்றோடு சேர்த்து சில நிகழ் கால சடங்குகளையும் கேலி செய்து , சில தத்துவக் கருத்துக்களையும் நகைச்சுவையோடு சொல்லி முடிக்கிறார். வித்தியாசமான கதை .


முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு உளவியல் நிபுணராக இருந்த கோபி கிருஷ்ணா அவர்களின் அதீத சிந்தனைகள் அவரின் வாழ்வில் பல கஷ்டங்களை ஏற்படுத்தியது என்று தெரிய வரும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அதனால் தான் இது போன்ற வித்தியாசமான கதைகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்தது என்றும் அறிந்து கொள்ள முடிந்தது .. நன்றி


------நாகேந்திர பாரதி


சனி, 16 நவம்பர், 2024

அழுக்கின் அழுக்கு - கவிதை

 அழுக்கின் அழுக்கு - கவிதை 

--------------------

அழுக்கின் அழுக்கிற்கு

ஆரம்பம் ஆராய்ந்தால்

அறியாமை இருளகற்றும்

தீக்குச்சி கிடைத்து விடும்


வன்முறை அழுக்கெல்லாம்

வேலையில்லாச் சகதியினால்

பெண்ணடிமை அழுக்கிற்குக்

கல்வியின்மை காரணமாம்


தீண்டாமை அழுக்கெல்லாம்

திருந்தாத சில பேரால்

ஜாதி வெறி மத வெறியோ

சாத்திரத்தின் கழிவுகளாம்


ஞானமழை பொழிவதற்கு

நல்லோர்கள் வந்து விட்டால்

தானாக மறைந்து விடும்

தாங்கி வந்த அழுக்கெல்லாம்


ஆனாலும் ஒரு கேள்வி

அடி மனதில் எழுவதுண்டு


அன்றாடம் சோறுக்கே

திண்டாடும் பூமியிலே

அடிப்படை வசதிக்கே

அல்லாடும் நாட்டினிலே


மன அழுக்கை நினைப்பதற்கு

நேரமுண்டா மக்களுக்கு


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


இருட்டின் வெளிச்சம் - கவிதை

 இருட்டின் வெளிச்சம் - கவிதை 

---------------------------

வெளிச்சத்தைத் திருடியவன்

விட்டுச் சென்ற

அடையாளக் குறிகளாய்

ஆகாயத்தில் நட்சத்திரங்கள்


இருட்டு

இறைவன் போர்த்திக்கொண்ட

கனத்த போர்வை

அவனைத் தேடுபவர்கள்

இங்கே திண்டாடுவார்கள்

அவனைத் தெரிந்தவர்கள்

இதைக் கொண்டாடுவார்கள்


இது ஒரு

கருப்பு வெளிச்சம்

இது

அடையாளம் காட்டும்

அகங்கள் ஆயிரம்


இங்கே தொலைந்து போனவர்கள்

தங்களைத்

திரும்பப் பெற்றவர்கள்


----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


மௌன சப்தம் - கவிதை

 மௌன சப்தம் - கவிதை 

-------------------------

இலைகளின் மௌன சப்தம்

வேர்களை நீள வைக்கும்


மலர்களின் மௌன சப்தம்

வண்டினை வரவழைக்கும்


மலைகளின் மௌன சப்தம்

மரங்களைச் செழிக்க வைக்கும்


துளைகளின் மௌன சப்தம்

காற்றுக்குக் காத்திருக்கும்


இயற்கையின் மௌன சப்தம்

இறைவனைத் துணைக்கழைக்கும்


இறைவனின் மௌன சப்தம்

உலகினை இயங்க வைக்கும்


மௌனத்தின் மௌன சப்தம்

மனதினை மலர வைக்கும்


----------------------------நாகேந்திர பாரதி 

 

My Poems/Stories in Tamil and English  


வெள்ளி, 15 நவம்பர், 2024

முதல் நாள் - கவிதை

  முதல் நாள் - கவிதை 

———-


முரண்டு பிடித்து

முந்தானையை விடாது


அழும் பிள்ளையை

அதட்டி அனுப்பி விட்டு


வீடு திரும்பிப் பின்

மதியம் ஓடிப்போய்


மணி அடிக்கக்

காத்துக் கிடந்து


அழுதபடி வரும்

பிள்ளையை அணைக்கும்


அம்மாவுக்கும் பள்ளிக்கூடம்

அன்று மட்டும் பிடிக்காது


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 12 நவம்பர், 2024

இடை வெளி -கவிதை

 இடை வெளி -கவிதை 

———-

அடுத்த ஊரே

அப்போது தூரம்


அங்கிருந்த உறவுகளோ

அப்போது பக்கம்


அடுத்த நாடே

இப்போது பக்கம்


இங்கிருக்கும் உறவுகளோ

இப்போது தூரம்


பக்கமோ தூரமோ

இடை வெளியில் இல்லை


———நாகேந்திரபாரதி 


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 11 நவம்பர், 2024

வாழ்க்கை இனிது - கவிதை

 வாழ்க்கை இனிது - கவிதை 

-------------------------------

எடுப்பதில் இல்லை

என்றுமே இன்பம்


கொடுப்பதில் இருப்பதே

குறைவில்லா இன்பம்


எத்தனை காலம்

என்பது தெரியாது


எத்தனை மனிதர்கள்

என்பது தெரியாது


மனிதரும் காலமும்

மறக்க முடியாத


மகிழ்ச்சியைத் தந்து

மகிழ்வது இனிது


------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English  


ரசிகன் - கவிதை

 ரசிகன் - கவிதை  ------------------ அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளைப் பார்க்கத் தோன்றுகிறது அறு சுவை உணவை உண்ணும்போதெல்லாம் அவளோட...