வெள்ளி, 26 ஜூலை, 2024

பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை 

--------------------------------

பூக்களைப் பறிக்காதீர்கள்

என்று சொல்லாதீர்கள்


இவை பறிக்க வேண்டிய

பூக்கள்


பறித்துக் கசக்க வேண்டிய

பூக்கள்


கசக்கி முகர வேண்டிய

பூக்கள்


முகர்ந்து உணர வேண்டிய

பூக்கள்


உணர்ந்து பகிர வேண்டிய

பூக்கள்


ஆம் , இவை

புத்தகப் பூக்கள்


———-நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 25 ஜூலை, 2024

கூரைத் தீயில் குஞ்சுகள் - கவிதை

 கூரைத் தீயில் குஞ்சுகள் - கவிதை 

-----------------------------

கூரைத் தீயின் ஓரச் சிவப்பு

வேடிக்கை காட்டியது

வினாடி நேரம்தான்


விறுவிறென்று மேலேறி

விழுந்ததும் தெரிந்தது

தீ சுடும் என்று


தோல் எரிந்து கரியாகி

துவளும் போது


பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்

அப்பா நினைப்போடும்

பாடம் சொல்லித் தரும்

அம்மா நினைப்போடும்

தோளில் தூங்க வைக்கும்

தாத்தா நினைப்போடும்

பக்கத்தில் படுத்திருக்கும்

பாட்டி நினைப்போடும்


துடிதுடித்தபடியே

தூங்கிப் போனோம்


-------------------------நாகேந்திர பாரதி

பல வருடங்களுக்கு முன்பு இதே ஆடி முதல் வெள்ளி அன்று கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் கருகிய அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி


My Poems/Stories in Tamil and English 


ஆவி அணைஞ்சுச்சா - கவிதை

 ஆவி அணைஞ்சுச்சா - கவிதை 

----------------------------------------

குனிஞ்சு படிக்கிறப்போ

குப்புன்னு மின்னுச்சா

நிமிந்து பாத்தாக்க

நெருப்புன்னு தெரிஞ்சுச்சா


ஓடக் கிளம்புறப்போ

ஓலைத்தீ தடுக்குச்சா

சுத்திக் கரும்புகையா

கண்ணைக் கருக்குச்சா


கத்திக் குரலெடுக்க

தொண்டை அடைச்சிருச்சா

தண்ணித் தாகத்தில்

நாக்கு வறண்டுடுச்சா


வீட்டாரின் நினைப்பெல்லாம்

விக்கலாய் வந்துச்சா

வெளையாண்ட இடமெல்லாம்

கண்ணுக்குள் ஓடுச்சா


பக்கத்துப் பையன் மேல்

பாழும் தீ பத்துச்சா

பயந்து ஓடுறப்போ

பாதை மறந்துடுச்சா


என்னமோ மேல் விழுந்து

உடம்பெல்லாம் எரிஞ்சுச்சா

'ஆ ஊ ' ன்னு அலறிட்டு

ஆவி அணைஞ்சுச்சா


----------------------நாகேந்திர பாரதி

பல வருடங்களுக்கு முன்பு இதே ஆடி முதல் வெள்ளி அன்று கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் கருகிய அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி

-------------


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 18 ஜூலை, 2024

'தளம்' - பத்திரிகை விமரிசனம்

 'தளம்' -  பத்திரிகை விமரிசனம் 

---------------------------------------------------------


'தளம் ' ஆசிரியர் நண்பர் பா ரவி அவர்களுடன் , முன்பு புத்தகக் கண்காட்சியில் அழகியசிங்கர் அவர்களின் நவீன விருட்சம் ஸ்டாலில் பேசிக்கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்டது .


' தளம் ' கலை இலக்கிய இதழ் மூலம் . சமூக, கலை , இலக்கிய உலகின் நுட்பமான நவீன விஷயங்களை ஆராய்ந்து வாசகர்கட்கு அறிமுகப்படுத்த வேண்டும் '

என்று அவர் சொன்னது இந்த ஜூன் மாத காலாண்டு இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரைகள் மூலம் வெளிப்படுவது தெரிய வந்தது. ஒவ்வொரு காலாண்டு இதழ் படிக்கும் போதும் இதே உணர்வு ஏற்படுவது உண்டு.


இந்த இதழில்

காஃப்காவின் படைப்புலகம் பற்றிய அழகிரிசாமி அவர்களின் கட்டுரைகள்

சுதிர் கக்கரின் உளவியல் ஆய்வுகள் பற்றிய முரளி அவர்களின் கட்டுரை

ஆலீஸ் மன்றோவின் சிறுகதைகள் பற்றிய ரவீந்திரன் அவர்களின் கட்டுரை

லால்சிங் தில்லின் கவிதைகள் பற்றிய லாவண்யா அவர்களின் கட்டுரை

அலெக்சாண்டர் சுக்ரோவின் திரைப்பட உலகு பற்றிய ரவீந்திரன் அவர்களின் கட்டுரை

ஜெயகாந்தன் பற்றிய அம்ஷன் குமார் அவர்களின் கட்டுரை

மற்றும் நமது நண்பர்கள் பலரின் புதுமைக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று

குவிந்து கிடக்கும் இந்த இலக்கியச் சோலையில் பயணம் செய்வது அறிவுக்கு இன்பம் பயக்கும் அழகிய பயணம்.


உதாரணத்திற்கு ஓரிரு வரிகள் இரா முரளி அவர்களின் சுதிர் கக்கரின் உளவியல் ஆய்வுகள் கட்டுரையில் இருந்து


'பெருவாரியான இந்தியர்கள் ஆன்மீகத்தின் பால் நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டுள்ளதற்குக் காரணம் , ஜோதிடர்கள், துறவிகள் மற்றும் மந்திரவாதிகள் போன்றோரே. உளவியல் பகுப்பாய்வு முறை மூலம் அவற்றின் அறியப்படாத பகுதிகளை வெளிப்படுத்த இயலும் என்பது கக்கரின் நிலைப்பாடு .'


'இந்திய ஆன்மீகத்தில் பேசப்படும் சூக்கும சரீரம் என்பது மூளை செயல்பாட்டின் மிக நுணுக்கமான செயல்பாடே. அதைத் தாண்டி ஆன்மா என்ற ஒன்று இல்லை என்பதே நிலைப்பாடு '


'ராமகிருஷ்ணரின் சீடராய் இருந்த மகேந்திர நாத் குப்தா என்பவரின் பதிவுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீக அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார் கக்கர் '


'தரிசனங்கள், ஒளி அனுபவங்கள், உடலுக்கு வெளியே ஆன்மா சஞ்சாரம் செய்வது அவற்றின் உள்ளடக்கம் என்ன, அர்த்தங்கள் என்ன என்பதைப் பகுத்தறிவது தேவை என்று கக்கர் கூறுகிறார்.


ராமகிருஷ்ணரை வைத்து ,ஆன்மீக அனுபவங்கள் என்ற அனுபவ வெளியை மூளையின் செயல்பாட்டுக்குள் கொண்டு வந்து விளக்கியுள்ளார் கக்கர் .


அதே போல் , இந்தியக் குருமார்கள் எப்படி உளவியல் நிபுணர்களாக மாறி , சிஷ்யர்களின் துயர் துடைக்கின்றனர் என்பதை உளவியல் பகுப்பாய்வின் மூலம் விளக்குகின்றார். பூசாரிகளாய் இருந்த குருநாதர்கள் வழிகாட்டிகளாகி, புனிதர்களாகி , கடவுள் என்று கருதும் சூழ்நிலைக்கு எப்படி மாறினார்கள் என்றும் விளக்குகிறார். எப்படி இந்தக் குருமார்கள் உளப்பிரச்சினை கொண்டவர்களைக் கவர்கின்றனர் என்றும் விளக்குகின்றார்,


இவருடைய புத்தகங்கள் பற்றிய விரிவான உரையாடல்கள் ஆன்மீகம் பற்றிய சரியான புரிதலை உருவாக்கும் ' என்று கட்டுரையை முடிக்கிறார் முரளி அவர்கள்.


நான் எடுத்துக்காட்டியுள்ள வரிகள் சாம்பிள் தான். நடுவில் அவர் எடுத்துக்காட்டும் கக்கரின் உளவியல் ஆய்வு பற்றிய பல ஆன்மீக வாதிகளின் நடவடிக்கைள் பற்றிய எடுத்துக்காட்டுகள் படிப்பவர்க்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அளிக்கலாம். மொத்தத்தில் அறிவு பூர்வமான ஆராய்ச்சி என்று புரிகிறது. கக்கரின் ஆய்வுகளை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. படித்து சிந்திக்கலாம்.


இந்த இதழில் உள்ள அத்தனை படைப்புகளும் , படித்துக் கடந்து போய் விடக் கூடியவை அல்ல, சிந்திக்க விரும்புவோர்க்குச் சிந்தனைச் செல்வங்கள். படித்து மகிழலாம் .


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 16 ஜூலை, 2024

சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரைக் கட்டுரை  - கதை புதிது நிகழ்வு 

---------------------------------


நன்றி அழகியசிங்கர். வணக்கம் ரெஜினா மேடம் . வணக்கம் நண்பர்களே.

ரெஜினா சந்திரா அவர்களின் ரோலர் கோஸ்டர் சிறுகதை .

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும்

கீழல்லார் கீழல்லவர்

என்று ஆசிரியர் எடுத்துக்காட்டும் திருக்குறளுக்கு ஏற்ற சிறுகதை.


வசதியால் மேல்வர்க்கம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போரின் எண்ணங்கள் கீழ் நிலையிலும் ,வசதியால் கீழ்வர்க்கம் என்று நாம் நினைப்போரின் எண்ணங்கள் மேல் நிலையிலும் இருப்பதை எடுத்துரைக்க , பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஒரு ஆட்டோ ட்ரைவரையும் , அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் இருவரையும் வைத்துப் பின்னப்பட்ட கதை.


இந்த அறிவுரைக்கும் மேலாக குழந்தைகளின் மன ஓட்டத்தை அப்படியே சித்தரித்துக் காட்டும் விதத்தில் கதையின் சிறப்பு இன்னும் கூடுகிறது .


ரோலர் கோஸ்டர் என்ற தலைப்புக்கு ஏற்ப, இங்கும் அங்கும் மேலும் கீழுமாக தம் குழந்தைகளின் குறும்புத் தனங்களால் ஆட்டி வைக்கப்படும் அந்த அம்மாக்களின் நிலைமை ரோலர் கோஸ்டருக்குள் ஏறி அவதிப்பட்ட நம்மில் பலருக்கும் புரியும் . புரியாதவர்க் கும் புரிய வைக்கும் கதை.


சரி, கதைக்கு வரலாம்.


ப்ரியாவின் மகனும், அனிதாவின் இரண்டு மகள்களும் படிக்கும் பள்ளி அவர்கள் வீட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருப்பதால், அவர்களைக் கூட்டிச் சென்று திரும்பக் கூட்டி வர, சங்கர் என்ற ஆட்டோக்காரர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று அந்த ஆட்டோக்காரர் அண்ணனுக்கு விபத்து என்பதால், அவர் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து திரும்பக் கூட்டி வர இயலாத நிலை என்று தகவல் வந்ததும் , ப்ரியாவும் அனிதாவும் கிளம்புகிறார்கள் பள்ளிக்கு .


போகும் வழியில் அவர்கள் பேசிக் கொண்டு செல்வது இது .

'போன வாரம் ஆட்டோ கட்டணத்தை 500 ரூபாய் ஏத்திக் கேட்டான், நம்ம முடியாதுன்னு சொன்னதாலே இப்படி ஆரம்பிச்சுட்டான். ரெம்ப தொந்தரவு கொடுத்தா ஆளை மாத்த வேண்டியதுதான்' என்று தாங்களாகவே ஆட்டோக்காரன் பொய் சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனைப் பற்றி மட்டமாகப் பேசிக் கொண்டு செல்கிறார்கள்.


ஆச்சு. பள்ளிக்கூடம் வந்தாச்சு. இவர்களைப் பார்த்தவுடன், குழந்தைகளுக்கு குதூகலம். ' அய்யா அம்மா வந்தாச்சு ' என்று அவர்கள் ஓடி வரும்போதே அம்மாக்களுக்கு ' ரோலர் கோஸ்டர் ' ஆரம்பித்தாய் விட்டது. படிக்கும் நமக்கு , நம் குழந்தைப் பருவத்திற்கே செல்லும் அனுபவம் கிடைக்க ஆரம்பித்தாய் விட்டது கதையில் .


ஆம், அந்த மழலைகளின் மனதிற்குள்ளே நுழைந்து அவர்கள் பேசும் பேச்சு, செய்யும் சேட்டை எல்லாம், நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர்.


'அம்மா அதுதான் எங்க புது தமிழ் மிஸ் , இதுதான் நேஹா, இதோ பிரணவ், அவனுக்கு பர்த்டே , அது தான் கலர் டிரஸ் போட்டிருக்கான் ' . குழந்தைகளின் குதூகலம் நமக்கும் தொற்றுக் கொள்கிறது .


இப்போ, அவர்களுக்குத் திரும்புறதுக்கு ஆட்டோ புக் பண்ணப் பார்த்தா ஒண்ணும் கிடைக்கலை, உடனே அனிதாவோட பொண்ணு ' அம்மா , நான் ஒண்ணு சொல்லட்டுமா, நாம மெட்ரோ ரெயில்லே வீட்டுக்குப் போலாமா ' அப்படின்னு ஆசையோடு கேட்கிறா .


‘ஹே சூப்பர் ஐடியா , நான் மெட்ரோலே போனதே இல்லை , சூப்பர் ஐடியா , ப்ளீஸ், ப்ளீஸ் ' மற்ற ரெண்டு வாண்டுகளும் சேர்ந்துடுச்சு .

பிரியா ' ஆட்டோவிலே அஞ்சு பேர் சேர்ந்து போக முடியாது , மெட்ரோவிலே செலவும் கம்மி , சரி போகலாம் ' ன்னு சொன்னதும், உடனே ஒரு வாண்டு ஓடிப்போய் அதோட பிரென்ட் நேஹா கிட்ட சொல்லுச்சு


' நேஹா, நேஹா, நாங்க மெட்ரோவிலே வீட்டுக்குப் போறோமே ' .


போற வழியிலே , ஐஸ் கிரீம் கடை. எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே செல்பீ வேற எடுத்து அப்பாக்களுக்கு அனுப்பியாச்சு


ஆச்சு. மெட்ரோ ஸ்டேஷன் வந்தாச்சு . உள்ளே போனதும். ஒரு வாண்டு ' அம்மா, அம்மா , இது ஏர்போர்ட்டாமா , அந்த சீட்டை அந்த மெஷின்லெ நாந்தான் வைப்பேன் '

இன்னொன்னு ' நான்தான் வைப்பேன் ' தகராறு .


ஹய்யா, ஸ்டேஷன் ஜில்லுன்னு இருக்கு, தண்டவாளமே காணோம் , ட்ரெயின் எங்கே நிக்கும் '


அம்மா, அம்மா, நான் அந்த எஸ்கலெட்டரிலே மேலே ஏறிப் போயி திரும்பி படி வழியா கீழே இறங்கி வரவா, எனக்குப் பயமா கிடையாதும்மா .' மூணு .வாண்டுகளும் மாத்தி மாத்திப் பேச்சு .


அந்த வழவழப்பான நடை மேடையிலே ஓடி சர் சர்ன்னு நின்னு போன் போட்டோவுக்கு போஸ் வேற . ரெயில் வந்தாச்சு. உள்ளே ஏறி உட்கார்ந்தாச்சு . ஆனால் கேள்விகள் நிக்கலை


' அம்மா நானும் நிக்கவா , அந்த அக்கா மாதிரி, மேலே பிடிச்சுக்கிட்டு தொங்கவா ,


அங்கே ஏன் அந்த சீட்டு மடிச்சிருக்கு .

கேமெரா படம் இருக்கு, கமெரா எங்கேம்மா


ட்ரைனுக்குள் சாப்பிட்டா பனிஷ்மெண்ட்டா , ஏன்


ஒரு செல்பி எடுங்கம்மா '


அம்மா , தினசரி மெட்ரோலியே போலாமா


இருக்கையிலே மேலே ஏறி இறங்குறது , ' ஜாலி , ஜாலி ' ன்னு கூச்சல் .


நடுவில் ஒரு நிறுத்தம். அம்மாக்கள் ரெண்டு பேரும் ' ஏய் , கம்பியைப் பிடி, விழுந்துடுவே, பாப்பாவைப் பிடி, வெளியே ஓடிடப் போறா '.


'அடுத்த நிறுத்தத்தின் பெயர் , செனாய் நகர், செனாய் நகர் ' அப்படின்னு ஒரு வாண்டு கூடவே சேந்து கத்துது .


இதுக்குள்ளே அதுகளை ஒழுங்கு படுத்த ' ஏய் , இந்தத் திருக்குறள் படி ' .என்றாள் ப்ரியா . 'எனக்குத் தெரியுமே , எங்க பாடத்தில் இருக்கே, ஆனா , ஏன் இதுக்கு கரடி படம் போட்டிருக்கு ' என்ற கேள்விக்கு பதில் இல்லை ப்ரியாவிடம் .


இப்போ இவங்க இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தாச்சு . உள்ளே இருக்கிறவங்க எல்லாம், இந்தக் குழந்தைகளுக்கு டாடா சொல்ல , இதுகளும் ' டாட்டா டாட்டா , ன்னு சொல்லிகிட்டே இறங்குச்சுங்க .


'ப்ளீஸ் மைண்ட் தி கேப் , மைண்ட் தி கேப் ' கிக்கீ , கிக்கீ ' ன்னு அந்த மெஷின் குரல் மாதிரி இதுகளும் பேசிக்கிட்டே இறங்க, எல்லோருமே லிஃப்டுக்கு உள்ளே நுழைஞ்சாச்சு .


உள்ளே இருக்கிறவங்க டிரஸ் கலரைச் சத்தம் போட்டு ' ரெட் , ப்ளூ , க்ரீன் ' ன்னு சொல்லிக்கிட்டே வெளியே வந்து ' சுவற்றில் இருக்கும் போட்டோக்களை பார்த்து ' ஏ, இந்தப் பாப்பா, நான் டிவியில் பார்த்திருக்கேன். அம்மா, அம்மா, ஆஸ்பத்திரியலே போயி, எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வாங்கிட்டு வாம்மா ' . மாற்றி மாற்றி மூன்று வாண்டுகளின் சப்தம்.


நடுவே நகரும் படிக்கட்டில் ஒண்ணு ஏற ' ஓடாதே, ஓடாதே , விழுந்துடப் போறே ' என்று பிரியா கத்த , அந்த படிக்கட்டு நிற்க, எல்லோரும் முன்னே சரிய , பிரியா பெருவிரலில் நல்ல அடி . அப்பத்தான், ஒரு வாண்டு எமெர்ஜென்சி பட்டனை அமுக்கி இருக்கிறது தெரிய வந்துச்சு .


பிரியாவுக்கு பயம், மயக்கம் வர்ற மாதிரி பிபி எகிறது . 'போலீஸ் வந்து பிடிக்கப் போறாங்க ' என்று அலற அனிதா சமாதானப்படுத்தி, வந்த செக்யூரிட்டியிடம் , 'சின்னப்பையன், தவறுதலா அமுக்கிட்டான் ' ன்னு சொல்ல ' அவர் ' சரி , நான் பார்த்துக்கிறேன் ' ன்னு நகர, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தா போதும்னு ஆயிடுச்சு ரெண்டு அம்மாக்களுக்கும்.


சரியான ரோலர் கோஸ்டு ரைடு தான் அவங்களுக்கு. படிக்கிற நமக்கு , அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து , குதூகலமாய்ப் பயணம் செய்த உணர்வு . பாவம் அந்த அம்மாக்கள் .


வெளியே வந்தா, 'அய்யா, நம்ம ஆட்டோ அங்கிள் நிக்கிறாங்க ' என்று வாண்டுகள் குதிக்க ' என்னப்பா , ஆஸ்பத்திரியில் அண்ணனைப் பார்க்கப் போகலியா '

'இல்லேம்மா, அது பேர்க் குழப்பம், என் அண்ணன் இல்லே. உடனே ,ஸ்கூலுக்குப் போனேன், நீங்க மெட்ரோவில் போயிட்டதா சொன்னாங்க. அதான், இந்த வீட்டுப் பக்க ஸ்டாப்பில் வந்து நிக்கிறேன். ஏறுங்க, புள்ளைங்களை மடியில் வச்சிக்கிருங்க ' என்றதும் அம்மாக்கள் இருவருக்கும் மெட்ரோ ரெயிலில் பார்த்த குறள் ஞாபகம் வந்தது.


மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும்

கீழல்லார் கீழல்லவர்


என்று முடிகிறது கதை.


அந்த அம்மாக்களுக்கு குறளின் அர்த்தம் புரிந்தது. ஆட்டோக்காரரின் குணமும் புரிந்தது. தங்கள் தவறும் புரிந்தது. நமக்கு , குழந்தைகளோடு குழந்தைகளாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது . மெட்ரோ ரெயிலில் ஏற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டு விட்டது . வரட்டுமா. நன்றி .


----------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 12 ஜூலை, 2024

முடிச்சுகள் -சிறுகதை

 முடிச்சுகள் -சிறுகதை 

———-

அவளுக்கு உள்ளுக்குள் குழப்பம் , அந்தக் கனவை நினைக்கும் போது . உண்மைதானே . தான் வெட்ட நினைக்கும் அந்தக் கட்டு , தானே போட்டுக் கொண்ட கட்டுத்தானே .


அவனைக் காதலித்துத்தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொய்த்த அந்த அலுவலக ஆடவர்கள் பார்வையில் இவன் பார்வையில் ஒரு வித்தியாசம் . அதில் ஒரு மயக்கமும் ஏக்கமும் இருந்தது அவளை ஈர்த்தது .


மதிய நேர உணவு இடைவேளையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் காண்டீனில் , இவளும் இவள் தோழியும் இருக்கும் இடத்தைத் தேடி வந்து இவளின் தோழியுடன் பேசியபடியே சாப்பிடும் பழக்கம் அவனுக்கு . புதிதாய் வந்தவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து நெருக்கம் ஆகி விட்ட தோழி அவள் . அவள் கணவனும் பக்கத்து செக்சனில் இருந்து வந்து சேர்ந்து கொள்வான் . அவர்கள் மூவரும் ஏற்கனவே நெடுநாள் பழக்கம் .


ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு அவர்கள் பேசுவது இவளுக்குப் புதுமையாக இருக்கும் . இவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி . படித்ததும் லேடீஸ் காலேஜ் . அண்ணன் தவிர மற்ற ஆண்களுடன் , உறவினர் ஆண்களுடன் கூட பேச கூச்சம் .


‘என்ன உங்க பிரெண்ட் பேசுறத்துக்குக் கூட காசு கேட்பாங்க போலிருக்கு ‘என்றுதான் அவன் ஆரம்பித்தான் . மெலிதான புன்னகையுடன் அவள் ‘ அதெல்லாம் இல்லைங்க ‘ என்றபோது வந்தது அவனின் முதல் கவிதை அம்பு ‘ ஒரு ரோஜாவில் இருந்து உதிர்ந்தது பனித்துளி ஒன்று ஜில்லென்று ‘ . அன்று இரவு முழுக்க அவள் மனதில் ஓடியது அது . ‘நான் ரோஜாவா , என் வார்த்தை பனித்துளியா ‘ . நடு இரவில் எழுந்து சென்று நைட்டியோடு கண்ணாடியில் பார்த்து ‘ இப்போது என்ன சொல்வான் ‘ என்று நினைத்துப் பார்த்தாள் .


மறு நாள் முதல் அவளிடம் மாற்றம் . பக்கத்து சீட் தானே . ஏதோ சந்தேகம் கேட்பது போல் அவனிடம் அடிக்கடி பேச , புரிந்து கொண்டது அவன் மட்டும் அல்ல , சற்றே தள்ளி இருந்த அவள் தோழியும் தான் . இப்போது அவன் கவிதைகள் நேரடியாக அவளிடம் பரிமாற்றம் . கவிதை வளர்த்தது அந்தக் காதலை .


ஒரு நாள் அவள் தோழி அவளிடம் சொன்னாள் . ‘ அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் . உன் பெற்றோரிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசி விட்டானாம் . ‘ . அப்போது ஒலித்த போனில் அவள் அப்பா தகவலை உறுதி செய்தார் மதுரையில் இருந்து .


‘ பையன் பேசினாரும்மா . நம்ம ஆளுங்கதான் . சாதி முதற்கொண்டு எல்லா விஷயமும் உன் ஆபிஸ் ரெக்கார்டில் இருந்து தெரிஞ்சு தான் விரும்புறாரு . விபரமான பையன் தான் . எங்களுக்குப் பிடிச்சிருக்கு . உனக்கு ஓகே தானே ‘ என்றபோது ,  அவளைச் சுற்றிப் போட்ட முதல் முடிச்சு அவளுக்குத் தெரியவில்லை .


அடுத்தடுத்த முடிச்சுகள் தொடர்ந்தன . முதல் இரவு அன்று விலகிய அவன் சொன்னது . ‘பாதுகாப்பான நாள் பார்த்து வைத்துக் கொள்ளலாம். குழந்தைச் செலவு இப்போது வேண்டாம் . இருவர் சம்பளத்தில் முதலில் தங்கை திருமணம் . அடுத்து வீடு வாங்க வேண்டும் . மூன்று வருடம் கழித்துதான் முதல் குழந்தை . குழந்தையின் வளர்ப்புச் செலவுக்கும் வேண்டிய சேமிப்பு செய்த பிறகு . எதுவும் பிளான் பண்ணி இருந்தால் தான் சரியாக இருக்கும் ‘ என்றவன் சிரிப்பு ரசிக்கவில்லை முதன் முதலாக அவளுக்கு , முதல் இரவு அன்றே .


தொடர்ந்த நாட்களில் இறுகிய முடிச்சுகள் .

‘ இந்த ஸ்லீவ்லெஸ் லாம் போட வேண்டாமே . ‘

‘நைலெக்ஸ் நல்லாவா இருக்கு , காட்டன் புடவைதானே கச்சிதமா இருக்கு ‘

‘லிப்ஸ்டிக்கெல்லாம் தேவையா ‘


எதிர்க்க நினைக்கும் போதெல்லாம் . அவன் நெருங்கி அவள் காதருகே கிசுகிசுக்கும் கவிதை வரிகளில் வெளிப்படும் அவளின் அழகின் பெருமிதம்,

சுற்றிய முடிச்சுக்களை சேர்த்துக் கொண்டு அணைக்கச் சொல்லும் .


ஆனால் இன்றையக் கனவு , முடிச்சுகளை வெட்ட முயற்சிக்கும் கத்தியின் சுழற்சியோடு அவள் . ‘அவள் நானா . என் உள்மன வெளிப்பாடா இது ‘ என்று அவள் குழம்பும்போது , அவள் பக்கத்தில் படுத்திருந்த அவன் புரண்டு ‘ உன் உதட்டோர மச்சத்தின் ஓரத்தில் என் ஏக்கத்தை இறக்கி வைக்க இடம் கொடுப்பாயா ‘ என்று கேட்க இடம் கொடுத்தாள் , இறுகியது முடிச்சு .  கழன்றது கத்தி .


———நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சனி, 6 ஜூலை, 2024

போகும் பாதையெங்கும் - கவிதை

 போகும் பாதையெங்கும் - கவிதை 

————

போகும் பாதையெங்கும்

பூவும் இருக்கலாம்

முள்ளும் இருக்கலாம்


முள் குத்தும் வலியைத்

பூ தடவி ஆற்றலாம்

புண் ஆகா திருக்கலாம்


பார்த்து நடப்பதற்கும்

பழக்கம் ஆகலாம்

பக்குவம் கிடைக்கலாம்


வாழ்க்கைப் பாதையிலே

வசந்தமும் இருக்கலாம்

வாட்டமும் இருக்கலாம்


நடப்பது என்பது

முடிவான பின்பு

நடப்பது நடக்கட்டும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


ஆன்மக் குளியல் - சிறுகதை

 ஆன்மக் குளியல் - சிறுகதை 

————-


‘ இந்த சதைக் குவியலா நீ ‘ அவளுக்குள் இருந்த அந்த இள முகம் , அவளைப் போல் , தலையின் குளியல் துண்டோடு , ஆனால் திரும்பிய நிலையில் அவளைப் பார்த்தபடி , அவளுக்குள் இருந்து கேட்க , அவள் விழித்தாள் .


குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இது என்ன குரல் .‘நான் நீ தான் பெண்ணே ‘ என்று சொன்ன அந்தக் குரல் தொடர்ந்தது . ‘ உன்னையே நன்றாக உற்றுப் பார் . குழந்தைப் பருவத்தில் இருந்த உடலா இது , குமரிப் பருவத்தில் இருந்ததா இது . ‘


‘இந்த இடைப்பட்ட காலங்களில் எத்தனை மாற்றம்

காலத்தின் மாற்றத்தில் , பருவத்தின் வளர்ச்சியில் , பூத்தும் குலுங்கியும் , தளர்ந்தும் போன உடல் . போகமும் ரோகமும் அனுபவித்து இன்பமும் துன்பமும் இதுவென்று மயங்கிக் கிடக்கும் உடல் . ‘


‘பத்து வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்துச் சிரித்தவர்களும் , பழகி மகிழ்ந்தவர்களும் , இப்போது உன்னைப் பார்க்காது போவதை உன் உடலின் புறக்கணிப்பாய் உணர்ந்து உள்ளுக்குள் புழுங்குவதை உணர்ந்ததால் தான் உன்னிடம் கொஞ்சம் பேசிப் போக வந்தேன் ‘ என்றது அந்தக் குரல் .


‘ இவை எல்லாம் உனக்கெப்படித் தெரியும் ‘

‘ அடி அசடே , முதலில் நான் சொன்னதை மறந்து விட்டாயா , நீதான் நான் ‘


‘ குழப்புகிறாய் ‘

புரியும்படி சொல்லவா , உன் மனச்சாட்சி என்று வைத்துக் கொள்ளேன் ‘

‘புரிகிறது , என் உடற் கவர்ச்சி குறைவதைக் கவனிக்கக் கூடாதா நான் ‘


‘கவனி , ஆனால் கவலைப்படாதே . இது உடலின் இயற்கை என்று ஒத்துக்கொள் . கவர்ச்சிக்கன்னிகளாய் பார்க்கப்பட்ட எத்தனை நடிகைகள் தளர்ந்து துவண்டு இருக்கும் படங்களைப் பார்க்கத் தானே செய்கிறாய் ‘


‘உண்மை , ஆனால் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது ‘

அதற்குத்தான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வந்தேன் . உற்றுக் கேள் ‘


‘ இந்த உடல் அல்ல நீ . இது உன் பெற்றோரால் உனக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டது . காலத்தால் வளர்க்கப் பட்டது . இதன் கவர்ச்சியில் பிறரைப் போல் நீயும் மயங்கிக் கிடந்தாய் வளர் பிறைக் காலத்தில் . இப்போது தேய்பிறை ஆரம்பித்ததும் திணறுகிறாய் . இந்த உடல் அல்ல நீ ‘


‘ இதைச் சரியான நேரத்தில் உணர்த்தவே நான் நீ குளிக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து வந்தேன் . உன் உடலின் மாற்றங்களை நீ உணரும் நேரத்தில் தான் உன்னுள் இருக்கும் மாறாத என் அழகை , என் உணர்வை நீ அறிய முடியும் . உற்றுப் பார் . நீதானடி நான் . ‘


‘உன் குழந்தைப் பருவக் குறும்பு மனம் என்னிடம் அப்படியே இருப்பதைப் பார் . உன் குமரிப் பருவ அறிவுணர்ச்சி அப்படியே இருப்பதைப் பார் . உன் வளர்ந்த பருவ அன்பும் , அடக்கமும் , மதிப்பும் , மரியாதையும் , ஞானமும் என்னிடம் ஜொலிப்பதைப் பார் . ‘


‘உன் கண்களால் பார்க்க முடியாது . உன் உணர்வுகளால் என்னைப் பார்க்க முடியும் . நான் தானடி நீ . நீதானடி நான் . நாம் உணர்வால் கலந்தவர்கள் . காலம் நம்மை மெருகேற்றுமே தவிர , இந்த உடலைப் போல் துருவாக்காது . புரிந்ததா பெண்ணே .’


தன்னிலைக் குளியல் முடிந்து தண்ணீர்க் குளியல் ஆரம்பம் அவளுக்கு .


குளித்து முடித்து உடை அணியும் போது , தன் உடலும் வேறு ஒரு உடை , ஒட்டிய உடை என்ற உண்மை உணர்ந்தாள் .


அவள் முகத்தருகே திரும்பி இருந்த அந்த ஆன்ம முகம் நேர் ஆகி இப்போது ஒன்று சேர்ந்து இருந்தது . அப்போது விழித்த கண்கள் மாறி இப்போது கருணைக் கண்களாய் மாற , வீதி உலா புறப்படும் அம்மன் போல் , குளியல் அறை விட்டு வெளியில் வந்தாள் .


———நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


வியாழன், 4 ஜூலை, 2024

திருஷ்டிப் பொம்மை - சிறுகதை

 திருஷ்டிப் பொம்மை - சிறுகதை 

-----------------------------------

மெல்லிய கறுப்புக் கம்பிகளால் சுற்றிச் சுற்றி பின்னப் பட்டு ஒரு குழப்ப உருவம் போல் காட்சி அளிக்கும் அந்தத் திருஷ்டிப் பொம்மையை வாங்கி வந்தான் சேகர். அவனுக்கும் அவன் மனைவி சுந்தரிக்கும் அவர்கள் மேல் கண் திருஷ்டி பட்டு விடக் கூடாது என்ற நினைப்பு . நேற்று அசாம் ஸ்டேட் லாட்டரியில் , அந்த லாட்டரிச் சீட்டுக்குப் பத்து லட்சம் பரிசு விழுந்தது தெரிந்த முதலாய் இதே நினைப்புதான். வேறு ஏதோ ஒரு பயமும்தான் . இதே நினைப்பில் அவர்கள் இரவில் தூக்கம் வராமல் கஷ்டப் பட்டதால் முன்கூட்டியே இந்த திருஷ்டிப் பொம்மை வரவு.


அவன் வாங்கி வந்த பொம்மையை இப்படியும் அப்படியும் வளைத்து உற்றுப் பார்த்தாள் சுந்தரி. அது ஏதோ அவளிடம் சொல்ல வருவது போல் ஒரு பிரமை.

' ஏங்க இது என்னமோ பேசுதுங்க'

'பைத்தியம் , பொம்மை எப்படிப் பேசும் '

'இல்லேங்க, 'நான் உங்க வீட்டுக்கே இப்ப வந்துட்டேன் , அப்படி'ன்னு சொல்லுதுங்க '


சேகர் அந்தப் பொம்மையை உற்றுப் பார்த்தான். அவனைப் பார்த்து அது லேசாக சிரிப்பது போல் இருந்தது .

அவனுக்கும் கொஞ்சம் பயம் வந்தது. 'ஆமாம்டி , லேசா சிரிச்சுதடி'


இப்பொழுது அவனுக்குக் கேட்டது

' எனக்கு எல்லாம் தெரியும் , என்னை ஏமாற்ற முடியாது '

' என்ன தெரியும் உனக்கு '


இப்போது காலிங் பெல் அடிக்கும் சப்தம். திருஷ்டிப் பொம்மையை சோபாவின் ஓரம் வைத்து விட்டுச் சென்று கதவைத் திறந்தான். அடுத்த தெரு ரமேஷ் .

' என்னப்பா, நம்ம கிட்டே சொல்றதில்லையா ,'

'உனக்கு யார் சொன்னா '

'நீ சொல்லாட்ட எனக்கு நியூஸ் தெரியாமப் போயிருமா .'

'என்ன, இதெல்லாம் நியூசிலே வராதே ' என்று குளறினான்.


' உன் பக்கத்து சீட்டு ராஜேஷ் தான் நியூஸ் அறிவிப்பாளர். பயப்படாதே, அவனோ , நானோ உன்கிட்டே எதுவும் கேட்க மாட்டோம். ஒரு காபி கூடக் கிடையாதா .'

'என்னப்பா ' என்று தடுமாறியவனிடம் , ' ப்ரோமோஷன் லிஸ்டில் உன் பேர் இருக்காமே . அடுத்த மாசம் வந்திருமாமே

'அப்பாடா' ' என்று பெருமூச்சு விட்டவன் ' சுந்தரி , காபி கொண்டு வா'


'இதோ ஒரு நிமிஷம்' என்று அடுப்படிக்குச் சென்றாள் சுந்தரி. அங்கே அடுப்படி மேடையில் அந்தத் திருஷ்டிப் பொம்மை.

அலறப் போனவளை எச்சரித்தது அது. 'சத்தம் போட்டா எல்லாம் சொல்லிடுவேன் ' என்று மிரட்டியதும் அடங்கியவள் , வெளியே வந்து , 'ஏங்க, பால் தீந்து போச்சுங்க ' என்றதும் , 'பரவாயில்லைங்க , நான் வரேன் ' என்று கிளம்பினான் ரமேஷ் .


இப்போது லேசான சிரிப்புச் சப்தம். 'வீட்டிலே ஒரு லிட்டர் பால் பிரிட்ஜில் வச்சுக்கிட்டே இல்லேங்கிறியே சுந்தரி ' என்றது அந்தத் திருஷ்டிப்பொம்மை சோபாவில் இருந்தபடி. ' நீ எப்படி அடுப்படியில் இருந்து இங்கே ' என்றவளைப் பார்த்து ' இது இங்கே தானேடி இருக்கு ' என்றான் முகம் வெளிறியபடி சேகர்.


'போதும் இந்த விளையாட்டு , உடனே அந்த லாட்டரிச் சீட்டை , அசாம் ஸ்டேட் அலுவலகத்துக்கு அனுப்பி விடு . அந்தச் சீட்டில் இருக்கும் ஆபீஸ் நம்பருக்குப் போன் செய்து உண்மையைச் சொல். ரெயில்வே ஸ்டேஷனில் கிடந்தது இந்தச் சீட்டு. வாங்கியவர் யாரோ தவறி விட்டு விட்டார். ஏதோ ஒரு உந்துதலில் எடுத்து வந்தவன், நேற்றைய ரிசல்ட் தேதிக்குக் கம்பியூட்டரில் வந்த அசாம் லாட்டரிச் சீட்டு ரிசல்டில் பத்து லட்சம் பரிசு பார்த்து ஆசைப்பட்டு விட்டாய். செய் இதை , இல்லாவிட்டால் .. ' என்று மிரட்டியது பொம்மை.


திஹார் ஜெயில் வாசல். அழுதபடி சுந்தரி .சேகர் கண் முன்னே , வந்து போனார்கள் , பல நண்பர்கள் , உறவினர்களும். 'சேகர் நீயா இப்படி ' . காதுகளைப் பொத்திக் கொண்டவன், 'சுந்தரி அந்தப் போனை எடு ' என்றான்.


அந்தத் திருஷ்டிப் பொம்மையிலே இருந்து கிளம்பிய புகை ஒன்று சுந்தரியின் ஹாண்ட் பேக்கில் நுழைந்து அந்த லாட்டரிச் சீட்டில் இருந்த நாக்கு நீட்டிய,கண்கள் உருண்ட அசாம் நாட்டுக் கிராம அம்மன் படத்தில் போய் ஒன்றியது .


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


என்ன தவம் செய்தனை - கட்டுரை

 என்ன தவம் செய்தனை -  கட்டுரை 

---------------------


சுகன்யா மேடம் கொடுக்கும் தலைப்புகளில் வாரா வாரம் பேசியதைத் தொகுத்தாலே , நமது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி அனைவர்க்கும் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது . அதன் இன்னும் ஒரு பகுதியாக, மகன், மகள் பற்றிய இதையும் சேர்த்துக் கொள்ளலாம் .


சில நேரங்களில் நாம் சிலரிடம் நடந்து கொண்ட விதம் பற்றிய சில பழைய நினைவுகள், அவர்கள் இப்போது நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி ஒப்பிட்டுப் பார்க்கையில் நெகிழ்வை உண்டாக்குவது உண்டு .


உதாரணத்திற்கு நாங்கள் சமீபத்தில் அமெரிக்கா சென்ற பொழுது , மகனும் , மகளும் ஒவ்வொரு விஷயத்திலும் எங்களைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட விதம் , நான் அவர்களிடம் அவர்களின் குழந்தைப் பருவத்தில், எவ்வளவு கண்டிப்பாகவும் சில சமயம் திட்டவும் செய்திருக்கிறேன் என்பதை எல்லாம் நினைக்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி நெகிழ வைத்தது . அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது .


விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அங்கங்கே ஏர் போர்டுகளில் எங்களுக்கு வீல் சேர் வசதிகளை செய்து வைத்திருந்து நடப்பதைக் குறைத்த விதம், விமானத்தின் உள்ளும், இருவருக்கும் ஓர சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்து பாத் ரூம் சென்று வர இடைஞ்சல் இல்லாத படி ஏற்பாடு செய்த விதம் . வருகின்ற உணவுகளை ருசித்துப் பார்த்து , எது எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று அறிந்து சாப்பிட வைத்தது என்ற விமானப் பயண அனுபவம், நான் அவர்களின் இளம் பருவத்தில் அழைத்துச் செல்லும் இடங்களில் , பஸ்களிலும் ரெயில்களிலும் அவசரமாக ஏற்றி இறக்கிய விதமும் , வாங்கிக் கொடுப்பதைச் சாப்பிட வைத்த விதமும் நினைவில் வந்து கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பின.


அடுத்து அங்கே வீட்டில் தங்குவதற்கு தனி ரூம் ,தேவையான வசதிகளோடு ஏற்பாடு செய்து கொடுத்தது , எங்களை எப்போதும் அவசரப் படுத்தாமல் ,நாங்கள் விழித்த பின்பே , வெளியில் செல்லும் பயணம் பற்றிய முடிவு செய்தது . வெளி ரெஸ்டாரண்டுகளில் உள்ள உணவு வகைகளை முன்பாகவே நெட் மூலம் தெரிந்து, எங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவு இருக்கும் இடங்களுக்கே அழைத்துச் சென்றது போன்றவற்றை நினைத்தபோது , நான் , பயணங்களில் அவர்களை அதிகாலை உசுப்பி விட்டது, அவர்களுக்கு ஆரோக்கியம் என்று நினைத்த உணவுகளை வற்புறுத்திச் சாப்பிட வைத்தது போன்ற நினைவுகளை எழுப்பி விட்டது . .


எங்களின் ஆர்வமும் ஆசையும் புரிந்து , அதற்கேற்ற இடங்களாக, நூலகம், இசை நிகழ்வு, காப்பி ரெஸ்டாரண்ட் , விளையாட்டு, நீச்சல் , டோஸ்ட்மாஸ்டர் , என்று பார்த்துப் பார்த்துக் கூட்டிச் சென்றது . வீட்டில் சுகர் , பிபி போன்றவற்றை செக் அப் செய்து அதற்கேற்ற படி வீட்டில் உணவு முறை , வெளியூர் செல்வது போன்ற பல விஷயங்களைத் திட்டமிட்டது , மற்றும் அமெரிக்காவில் நாங்கள் முன்பு பார்க்காத இடங்களாக , நயாகரா, டிஸ்னி உலகம் போன்ற இடங்களுக்கு முறையே , மூன்று நாட்கள், ஒரு வாரம், என்று நிதானமாக இருந்து பார்க்கும் படி திட்டமிட்டு ஏற்பாடு செய்தது , அந்த இடங்களில், மிகவும் வேகமான, உடலைக் கஷ்டப்படுத்தும் மகிழ்வு ரைடுகளைத் தவிர்த்து எங்களுக்கு ஏற்ற மகிழ்வு ரைடுகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்தது ,பிரம்மாண்ட டிஸ்னி உலகில் எங்கும் நடக்க அவசியம் இல்லாமல், நாங்களே இயக்கும் எலெக்ட்ரிக்கல் வாகனம் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொடுத்தது . நமக்கு விருப்பமான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தது , மலைப் பாங்குப் பாதையிலே சேர்ந்து வாக்கிங் வந்தது என்று ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது , அவர்களின் இளம் பருவத்தில் பெரும்பாலும் நமக்குப் பிடித்த இடங்கள், படங்கள், புத்தகங்கள் அவர்களுக்கும் பிடிக்கும் என்று நாமே முடிவு செய்து நடந்து கொண்ட விதம் பற்றி யோசிக்க வைத்தது .


அவர்களின் குழந்தைப் பருவ, இளம் பருவத்திலே,நாம் எத்தனை முறை அவர்களை அவசரப் படுத்தி இருக்கிறோம், திட்டி இருக்கிறோம் என்ற நினைவுகள் கூடவே வந்து கலங்க வைத்து கண்களை மறைத்த நேரங்கள் பல.


ஆனால் அந்தக் காலத்திலே , என் துணைவியார் , அவர்கள் கூடவே இருந்து, அவர்களுடன் கலந்து பேசி குழந்தை வளர்ப்பில் கருணையும் கண்டிப்பும் கலந்து காட்டி , அவர்கட்குத் தேவையானவை செய்து , அவர்கட்குப் பிடித்த உணவுகள் அளித்து வளர்த்து வந்த விதம் அதைச் சமன் செய்து இருக்கலாம். அந்த அமைதியும் , அன்பும். எனது வேகத்தையும், அவசரத்தையும் , கண்டிப்பையும் சமன் செய்து இருக்கும் என்றே தோன்றுகிறது ,


மாசச் சம்பளத்தை முழுவதையும் மனைவியிடம் கொடுத்து விட்டோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டு , வாரம் ஒரு முறை , ஞாயிறு மட்டும் குழந்தைகளுடன் விளையாடுவது , வெளியே கூட்டிச் செல்வது தவிர மற்ற நாட்களில், வேலை , அது சம்பந்தப்பட்ட படிப்பு, நண்பர்களுடன் அரட்டை என்றே இருந்த ஞாபகம் வரும்போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்கிறது. காலம் கடந்த வருத்தம். .


அப்படி இருந்தாலும். அம்மாவுக்குக் கொடுக்கும் அதே அன்பையும் , ஆதரவையும் எனது மகனும், மகளும் இருவரும் எனக்கும் கொடுத்துக் கவனித்த விதம், சில நேரம், குற்ற உணர்வும், நன்றி உணர்வும் கலந்த ஒரு விதமான உணர்வை எனக்கு ஏற்படுத்தியது உண்மை. .


இங்கு சென்னை வீட்டில் இருப்பது வேறு. இது நம்ம சாம்ராஜ்யம். அங்கு முழுக்க முழுக்க அவர்களையே நம்பி இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் சிறப்பு. நம்மைப் பற்றிப் புரிந்து பக்குவப்பட்டு விட்ட அவர்களுக்குள்ளும் ஒருவித டென்ஷன் இருந்திருக்கலாம். உள்ளுக்குள் அன்பு கொட்டிக் கிடந்தாலும் , அவ்வப்போது சுருக்கென்று கோபித்துக் கொள்ளும் , உணர்ச்சி வசப்படும் இந்தப் ' பெருசை ' ஒழுங்கா எந்தப் பிரச்னையும் இல்லாம பார்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். அவர்களும் பெற்றோர் ஆகி விட்ட இந்தக் கால கட்டத்தில், எங்களையும் குழந்தைகளாக நினைக்கும் பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டதாகத் தோன்றியது .


என் போன்ற பெருசுகள் குழந்தைகள் ஆகும் நிலை வந்து விட்டதாகவே தோன்றுகிறது . குழந்தைகள் பெருசுகள் ஆகி விட்ட நிலையும் தெரிகிறது. அவர்கள் என்னைப் போன்ற அவசரப் பெருசாக ,ஆவேசப் பெருசாக இல்லாமல், அமைதியான, அன்பான பெருசுகளாய் இருப்பதற்கு , வளர்த்த மனைவிக்குத் தான், அவர்களின் அம்மாவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.


மகனை , மகளைப் பற்றி நினைக்கையில் , அவர்களுக்கு நன்றி சொல்வதை விட , ' இவன் தந்தை என் நோற்றான் கொல் ' என்பதற்கு இலக்கணமாக இயங்கும் இவர்களைப் பெற , எனக்கு நானே 'என்ன தவம் செய்தனை 'என்றே சொல்ல வேண்டும் .' தந்தை , தனது மக்களுக்குச் செய்யும் நன்மை, அவர்களைக் கற்றோர் அவையிலே முதன்மையாக இருக்கச் செய்தல் ' என்ற குறளுக்கு ஏற்றபடி சிறு ' நன்மை ' நான் ஓரளவு செய்திருப்பேன் என்றே தோன்றுகிறது . நன்மை செய்த முறையிலே தவறு இருக்கலாம் . நன்மை செய்ததில் திருப்தி.


---------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 



சிறுகதை மதிப்புரை - கட்டுரை

 சிறுகதை மதிப்புரை - கட்டுரை 

------------------------------------------------------------------------------------------------


நன்றி அழகிய சிங்கர் வணக்கம் நண்பர்களே . நமது பூவராக மூர்த்தி அவர்களின் 'சின்னப் பிள்ளை' என்ற சிறுகதை. சின்னப் பிள்ளை என்றவுடன் ஏதோ ஒரு சின்னக் குழந்தையை பற்றிய கதையாக இருக்குமோ என்று தோன்றியது . ஆனால் கதை ஆரம்பத்திலேயே அவர் அதை விடுவித்து விடுகிறார் . சின்னப்பிள்ளை என்பது தியாகிகள் பென்ஷன் வாங்கும் ஒரு முதியவரின் பெயர்.


இந்தக் கதை அந்த முதியவருக்கும் அந்தப் பென்ஷன் பிரிவில் இருக்கும் ஒரு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ' நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டில் மனைவியுடன் மனஸ்தாபம். சின்ன விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் ஆபீஸ் புறப்படும் போது மன அமைதியைக் கெடுக்கிற மாதிரி சண்டை. எல்லாம் சேர்ந்து கொண்டு. அதற்காக இப்படியா நடந்து கொள்வது' என்று அவர் கதையை ஆரம்பிக்கும் போதே நமக்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கி விடுகிறார் .


'என்ன நடந்தது ஏன் இந்த நாயகன் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறான் ' என்ற கேள்வி நம் மனதில் எழுந்து விடுகிறது. பிறகு அந்த நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் பின்னோட்டமாக நம்மை அழைத்துச் செல்கிறார்.


'நல்லா இருக்கீங்களா ஐயா' என்ற குரல் . சின்னப் பிள்ளை எத்தனையோ முறை வந்து இருக்கிறார் நானும் அன்போடு பேசி இருக்கேன் ஆனா நேத்து ' என்று நிறுத்தி அந்த பென்ஷன் பிரிவினுடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்கிறார். . இவர் 5, 6 வருடம் அந்த பென்ஷன் பிரிவில் இருக்காரு எல்லாரும் இவரிடம் வந்து உதவி கேட்பார்கள் .ஒரே காலனியில் இருந்து ஒரு பத்து பதினஞ்சு பேரு வருவாங்க. தியாகி பென்ஷன் வாங்குறவங்க. எல்லாம் வயசு 80 க்கு மேல , இவர் இந்த பெரியவர் சின்னப் பிள்ளை எப்பவும் தனியாத்தான் வருவார் ' அப்படின்னு சொல்லிட்டு டக்குனு இப்போதைக்கு இருக்கக்கூடிய இடத்திற்கு வராரு ஆசிரியர். அதாவது பிளாஷ்பேக் போறது, திரும்பி தற்காலத்துக்கு வருவது அப்படின்னு கதையை ஒரு சஸ்பென்ஸோட கொண்டு போறாரு.


இப்ப என்ன நடக்குது . ஷேர் ஆட்டோ நிக்குது. 'காந்தி காலனிக்கு இங்கே இறங்குங்க' அப்படின்னு டிரைவர் சொன்னதும் ,இவர் இறங்கி அந்த விலாசத்தை பக்கத்தில் இருக்கிறவங்க கிட்ட காமிச்சிட்டு வழி கேட்டு உள்ள போயிட்டு இருக்காரு காந்தி காலனிக்குள்ள.


இப்போ மறுபடி பிளாஷ் பேக். எப்பவுமே பென்ஷனுக்கு இரண்டு நாள் இருக்கும்போதே போட்டுடுவாங்க. . இல்லே, கடைசி நாளிலே எல்லாருக்கும் கொடுத்துடுவாங்க .ஆனா அன்னைக்கு வந்து இவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்ததால் இந்த பென்ஷன் அதிகாரி எல்லாருக்கும் கொடுக்கக் கூடிய ஏற்பாடு பண்ணல. இப்ப அந்தச் சின்னப் பிள்ளை வந்திருக்காரு. வந்து.' என்னங்க பென்ஷன் பணம் வாங்கிக்கலாமா ' 'இன்னிக்கி போடல ' . அவரு போயிட்டாரு. அப்புறம் மதிய உணவு இடைவேளை. அதுவரை அங்கே தான் இருந்த சின்னப் பிள்ளை வந்து 'பென்ஷன்' ' ஐயா போட்டீங்களா. இன்னும் சாப்பிடலை நான் . ' . என்று கேட்கும்போது அந்த முதியவரின் மனநிலை நமக்கு ஏற்படும்படி உருக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.



'ஒவ்வொரு மாசமும் கரெக்ட்டா போட்டுறோம்ல. இந்த மாசம் இன்னும் போடலை. போயிட்டு நாளைக்கு வாங்க , நான் சாப்பிடப் போறேன்' என்று அந்த பென்ஷன் அதிகாரி எழுந்து போகிறார். இவர் மெதுவாக நடந்து வாசல் நோக்கிச் செல்கிறார்.


ஆனால் அன்று நைட் இந்த அதிகாரி கனவில் வருகிறார் சின்னப்பிள்ளை . ' நல்ல இருக்கீங்களா ஐயா' சின்னைப்பிள்ளை குரல் . இவருக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுத் து. 'நம்ம கடமையில் தவறி விட்டோமே. மற்றவரிடம் அன்பாக இல்லாமல் ,என்ன வாழ்க்கை இது . அன்னைக்கு ஏதோ வீட்ல பிரச்னை அனுப்பிவிட்டேன். பாவம் அந்த வயசானவர் என்ன செய்வார் அவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ . பாவம் சாப்பிடாம வந்தாரு அவர்கிட்ட போய் மன்னிப்பு கேட்கணும்னு' சொல்லிட்டு காலையில ஆபீஸ் போனவர் , அவர் வருவார் என்று வெயிட் பண்ணி பாக்குறாரு .



ரொம்ப பேரு வந்தாங்க ஆனா சின்னப்பிள்ளை வரவே இல்ல . 'என்ன ஆச்சு நேத்து அவருக்கு ஏதும் பிரச்னை ஆகி இருக்குமோ' அப்படின்னு இவருக்கு ஒரே கஷ்டமாயிருச்சு. அவரு விலாசத்தை எழுதிக்கிட்டுத் தான் இப்ப இங்கே காந்தி காலனியில் நடந்து வந்துட்டு இருக்காரு.


அவர் மன ஓட்டம். ' வீட்டிலே சின்னப்பிள்ளை இருப்பாரு. உட்காரச் சொல்லுவாரு . இந்தப் பக்கம் வந்தேன், பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் ' என்று சொல்லலாம் ' என்று நினைத்தபடி வந்தார் . தெரு முக்கில் திரும்பும்போது அந்த முக்குல இருந்து சங்குச் சத்தம் கேட்குது . சங்குச் சத்தம் கேட்டா என்னங்கறது நமக்குத் தெரியும் . 'யாரோ ஒருத்தர் இறந்துட்டார்.' அந்த முனையிலே எல்லாரும் சோகமா இருக்காங்க கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .


'நேத்து வந்தவர் பென்சன் கிடைக்காம மனமுடைஞ்சு போய் இறந்து போயிட்டாரோ அவர் இறப்புக்கு நான் காரணமாயிட்டேனே ' என்று வருத்தத்தோடு திரும்புகிறார் இவர். அங்கு திரும்பி வரும் ஆட்டோவை நிறுத்தி ஏற ஆட்டோ ட்ரைவர் சொல்றார்.' இறந்து போனவரு பொண்ணு வீட்டில் இருக்கிறார். நேத்து ஏதோ பையன் மருமகள் எல்லாம் வந்தாங்களாம் அப்படியே பேசிக்கிட்டு இருந்தவர் 'வங்கிக்குப் போயிட்டு வந்தது அசதியா இருக்குன்னு' ராத்திரி கஞ்சி குடிச்சிட்டுப் படுத்தவர் காலையில் சாஞ்சிட்டாரு. ரொம்பக் கஷ்டமா இருக்கு' .


ஆட்டோ ட்ரைவர் சொல்லச் சொல்ல, இவர் மனதுக்குள் ' எதுவும் சொல்லி இருப்பாரோ, நம்ம தான் அதுக்குக் காரணம். வேற யாருக்காவது தெரிந்திருக்குமா . தெரியாட்டாலும். மறைமுகமாவது நம்ம தானே காரணம். நம்ம செஞ்சது தப்புத் தானே, எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் . இங்கே போனதோடு, நம்ம போய் அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போட்டு அவர் முகத்தைப் பார்த்து ஒரு மன்னிப்புக் கேட்டு வந்திருக்கலாம். ஒரு மனிதாபிமானமே இல்லாமே ஒரு கோழையா திரும்பினதை நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு' என்று மனதிற்குள் குழம்பியபடி வந்து ஆபீஸ் வந்து உட்கார்ந்து சீட்ல இருக்கிறப்போ, பக்கத்து சீட் கேசவன் . ' வந்துட்டியா , பென்சனர் எல்லோரும் கேட்டாங்க ' என்று சொல்ல இவர் சீட்டில் உட்கார்ந்து பாக்குறாரு. சீட்டில் உட்கார்ந்து அப்படியே பார்க்கிறாரு


அங்கே வாசல் கதவு திறந்து யாரோ ஒரு இன்ஸ்பெக்டர் வரார் . இவருக்குப் பயமா இருந்துச்சு. இதயம் படபடன்னு அடிக்குது . 'விஷயம் தெரிஞ்சிருச்சு. விசாரிக்கப் போறாரு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். நம்ம அவரைத் தனியாக் கூட்டிட்டு போய் சரண் அடைஞ்சிடலாம் ' என்று நினைக்க , இன்ஸ்பெக்டர் இவரிடம் வந்து '


'சார் , நீங்கதானே தியாகி பென்ஷன் பார்க்கிறீங்க ' என்று கேட்க ' ஆம் ' என்றவரின் உடல் வேர்த்துக் கொட்டுகிறது . அவர் ' எங்க அம்மா வண்ணாரப் பேட்டை ப்ராஞ்சிலே பென்ஷன் வாங்கிறாங்க. ஏதோ அரியர்ஸ் வரணுமாம், உங்களைப் பார்க்கச் சொன்னாங்க' என்றதும் , மூச்சைச் சரி செய்து அவருக்கு வேண்டியன செய்து கொடுக்கிறார்.



அப்போது கேசவன் ' சாப்பிடப் போகலாமா ' என்று கேட்கிறார்.. மனைவி நல்ல டிபன் தான் கொடுத்திருந்தாலும் இவர் குற்ற உணர்ச்சியோடு ' எனக்குப் பசிக்கலை நீ சாப்பிடு ' என்று சொல்லி விட்டு ஏதோ நினைவில் உக்காந்துட்டு இருக்கார் .


குற்றம் உள்ள மனசு இல்லையா குறுகுறுக்கிறது.' நம்மாலேதான் அவரு போயிட்டாரு ' என்று ரொம்ப வருத்தத்தோட கண்ணீரோடு இருக்கும்போது , ஒரு குரல் கேட்கிறது .


இப்போது கதை ,நாயகனின் வார்த்தைகளில் .


'நல்லா இருக்கீங்களா ஐயா ' சின்னப் பிள்ளை உயிரோடு முழுவதுமாக நின்று கொண்டிருந்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 'வாங்க சின்னப் பிள்ளை' என்று அவரை உட்கார வைத்து எழுதிக் கொடுத்து ஓடிப் போய் பணம் வாங்கி வந்து கொடுத்தேன்.


சின்னப் புள்ள 'ரொம்ப நன்றி ஐயா, காலைல தெருவிலே ஒரு பங்காளி செத்துட்டாரு. அதுதான் வர லேட்டாயிடுச்சு மன்னிச்சுக்கங்க '

'அதனால என்ன வந்துட்டீங்களே அதுவே போதும் ' அவருக்கு ஒன்றும் புரியவில்லை 'எனக்கும்தான் நான் ஏன் இப்படி இருக்கேன்னு புரியல 'அப்படின்னு சொல்லிக் கதை முடிகிறது .


இந்த கதை ஒரு இரக்கமுள்ள மனிதனின் , மன இயல்புகளை ,மிக இயல்பாகக் காட்டியுள்ள கதை. எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் மற்றவரிடம், மனித நேயத்துடன், கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். அப்புறம் நாம் வருத்தப்படும்படி இருக்கக் கூடாது ' என்று அறிவுறுத்தும் . அருமையான கதை.


கதை நிகழ்வுகளை ஆசிரியர் எடுத்துச் செல்லும் விதத்தில் , அந்த பிளாஷ் பேக் முறையில் ஒரு சஸ்பென்ஸ் , கதையின் நாயகன் மனம் பேசும் வார்த்தைகளில், இயல்பான மனிதர் ஒருவரின் எண்ண ஓட்டம். பயம். வருத்தம். பச்சாதாபம் , இறுதியில் ஒரு மகிழ்ச்சி என்று சிறப்பாகக் கதையைக் கொண்டு சென்று கச்சிதமாக உணர்வு பூர்வமாக, நாயகனோடு சேர்ந்து நாமும் நிம்மதிப் பெருமூச்சு விடும் விதத்தில் முடிக்கிறார் மூர்த்தி அவர்கள் . வாழ்த்துகள் .


அனைவர்க்கும் நன்றி


----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


டிஸ்னி உலக அனுபவம் - கட்டுரை

 டிஸ்னி உலக அனுபவம் - கட்டுரை 

------------------------


எதிர் வீட்டில் அதே பெரியவர் , எங்களைப் பார்த்துக் கொண்டு, தான் எங்கும் வெளியே செல்ல முடியாத அதே முதுமை விரக்தியோடு , நாங்கள் அந்தத் தெருவில் ஓடி ஆடி விளையாடுவதையும் , அடிக்கடி காணாமல் போய் விட்டு சில நாட்கள் கழித்து திரும்பி களைப்போடு காரில் இருந்து இறங்கிச் செல்வதையும் பார்த்துக் கொண்டு. அவரின் கண் திருஷ்டியோ , வேறு யாரின் கண் திருஷ்டியோ தெரியாது, ஒரு அதிர்ச்சியான நிகழ்வு நேற்று .ஆனால் முடிவு சுபம். நன்றியாக நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை வேண்டுதல் .திரும்பியதும் நிறைவேற்ற வேண்டும். அதன் விபரம் கட்டுரையின் கடைசியில் .


இப்போது டிஸ்னி உலக அனுபவம். கார்ட்டூன் என்றாலே மிக்கி , மின்னி , , சிப் அண்ட் டேல் ஞாபகம் தானே வருகிறது . பேரன், பேத்திகளுக்குக் கேட்கவா வேண்டும். உலகின் மிகப் பெரிய டிஸ்னி உலகம் பிளோரிடாவின் ஓர்லாண்டோவில் இருக்கும், டிஸ்னி உலகம் போகும் பிளான் சொன்னதும் சஞ்சனா, காவ்யனின் உற்சாகத்துக்குக் கேட்கவே வேண்டாம்.


ஒரு வாரம் முன்பிருந்தே அதைப் பற்றிய யூடியூப் சேனல் வீடியோக்கள் எல்லாம் பார்த்து அவர்கள் பார்க்க விரும்பும் பார்க்குகள் , ரைடுகள் எல்லாம் சொல்லி அதற்கேற்பவே அந்த ஒரு வாரம் பிளான். இரண்டு நாட்கள் , காரில் போக, வர . பனிரெண்டு மணி நேர பகல் பயணம், திரும்ப பனிரெண்டு மணி பகல் பயணம் , அமெரிக்காவின் கிழக்குக் கடல் அட்லாண்டிக் கடல் ஓரச் சாலை , வடக்கு தெற்கை இணைக்கும் இணைக்கும் ஐ 95 , அமெரிக்காவின் பிரபல நீண்ட சாலையின் வேகப் பயணம். தொடர்ந்து அதி வேகக் கார்கள். மற்றும் அதிக ட்ரக்குகள் பலவித கார்களை ஏற்றிக் கொண்டு, ரோட்டோரம், போலீஸ் ஜீப்புகள் அங்கங்கே . வேகத்தை மீறுவோரைக் கவனித்துக் கொண்டு. மணிக்கு 70 மைல்கள் , 110 கிலோமீட்டர் வேகம் அதிக பட்சம்.மூன்று ஸ்டேட்கள் தாண்டி, நார்த் கரோலினா, சவுத் கரோலினா, ஜார்ஜியா , அடுத்து புளோரிடா . கனடா ஓரம் தொடங்கி மியாமி வரை செல்லும் நீண்ட பயண நேரம் , பகல் நேரம் இரண்டு நாட்கள் கழித்தால், கிடைத்தது ஐந்து நாட்கள்.


அங்கே டிஸ்னி உலகில் பெரிய நான்கு பார்க்குகள் பலவிதமான ரைடுகளோடு . யூனிவேர்சல் ஸ்டுடியோவில் மூன்று பெரிய பார்க்குகள் பலவிதமான ரைடுகளோடு. ரைடு என்பது ஏதாவது ஒரு சினிமாப் படத்தோடு தொடர்புடைய அனுபவத்தை , வேக ராட்டினங்கள் , வேக ரெயில் பயணங்கள் , காடு மலைக்கு நடுவே, நீர் ,நெருப்புக்கு நடுவே திகிலோடு, திருப்பங்களோடு பயணம் செய்வது . ஸ்டார் வார்ஸ். ஜுராசிக் பார்க், ஹாரி பாட்டர் , என்று பல பிரம்மாண்ட படங்கள், டிஸ்னி, யூனிவேர்சல் ஸ்டுடியோ படங்கள் சம்பந்தப் பட்ட அனுபவங்கள். அத்தனையும் பார்ப்பதென்றால், ஒரு மாதம் தங்க வேண்டும். நமக்கு இருந்ததோ ஐந்து நாட்கள்.


மேஜிக் கிங்டம், எப்காட் , ஹாலிவுட் ஸ்டுடியோ என்ற மூன்று டிஸ்னி பார்க்குகள். யூனிவேர்சல் ஸ்டுடியோ , ஐலண்ட் ஆப் அட்வென்ச்சர் என்ற இரண்டு யூனிவேர்சல் பார்க்குகள் முடிவாயின. டிஸ்னி லாண்டில் அனிமல் கிங்டம், கட் . யூனிவேர்சலில் வல்கனோ பே, கட் .நடுவில் நேரத்தைப் பொறுத்து அட்லாண்டிக் பீச் ஒன்று என்று முடிவு செய்தவர்கள் வாண்டுகள்.


நானும் மனைவியும் அங்குள்ள எலெக்ட்ரிக் வண்டி ஒன்றில் ஊர் கோலம் . எனது மனைவி முன்பே டிரைவிங் கற்றுக் கொண்டு லைசென்ஸ் வாங்காமல் விட்டு விட்டார்கள். அந்தப் பழைய அனுபவம் அவர்கட்கு உதவியது . எனக்கு , நான் பல முறை சொல்லியது போல் , வீட்டு காம்பௌண்டுக்குள் இப்போதும் ஓட்டுகின்ற அனுபவம் உதவியது . நடுவில் அங்கங்கே சில பாதுகாப்பான ரைடுகளில் பயணம்.


நடுவில் அமெரிக்க உணவுகள். மைதாவின் பல வித அவதாரங்கள். பர்கர், வேப்பில் , சாண்ட்விச் , இன்னும் பல பெயர்களில், பல உருவங்களில். சாண்ட் விச்சில் முட்டைகோசு போன்ற இலை தழைகள் அதிகம். நடுவில் தேடிப் பார்த்தால் கிடைக்கும் சில உருண்டை உருவங்கள்,பீன்ஸ் போன்றவை. இத்துடன், எல்லோரும் ஒரு கப் காபியோடு அலைவது ஒரு பேஷன். குடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கையில் இருப்பது அவசியம்.


அத்துடன், நமக்குப் பிடித்த நியூயார்க் நகர ஆகாயம், பூமியில் விர்ச்சுவல் டூர். மற்றும உலக அதிசயங்கள் , தாஜ் மகால் சேர்ந்த இடங்களில் ஆகாயம் , பூமி என்று ஒரு விர்ச்சுவல் டூர்.இரண்டும் நாங்கள் நன்றாகவே அனுபவித்தோம். எல்லா போட்டோக்களும் ஏற்கனவே நமது கலை புதிது குழுவில் போட்டு சுருக்க விபரம் கொடுத்து விட்டதால் அதை விளக்கப் போவதில்லை இங்கே.


மொத்தத்தில் ரைடுகளைப் பற்றிச் சொல்வது என்றால், மேலே போவது, கீழே இறங்குவது, இடது வலது பக்கம் திடீர் என்று திரும்புவது, குலுக்குவது, திடீர் என்று தண்ணீர் பீய்ச்சுவது , அந்தப் படங்களின் கதாபாத்திரங்களின் உருவங்கள் வந்து பயமுறுத்துவது இல்லை கொஞ்சுவது, நம்மையும் அந்தக் கதாபாத்திரங்களில் ஒன்றாக ஏற்று விர்ச்சுவல் ரியாலிட்டிக்குள் அழைத்துச் செல்வது இப்படிப் பல. எல்லாமே மேக்ஸிமம், பத்து பதினைந்து நிமிடங்கள் தான். அதற்குள் கிடைக்கும் திகில் அனுபவம் தான். இப்படியாக அந்த பார்க் அனுபவத்தோடு சேர்ந்து ஒவ்வொரு இரவும் வாண , வான வேடிக்கைகள், திரைப்படங்களின் சுருக்கம் பெரிய செட்டுகளின் மேல் வண்ண மயமாக ஓடுவது எல்லா இடங்களிலும் இரவு ஸ்பெசல். காலையில் பத்து மணிக்கு நுழைந்தால், இரவு பத்து மணி வரை நேரம் ஓடுவதே தெரியாது.


இப்படி பார்க், ரைடுகள் முடியும் போது . எல்லா இடங்களிலும் ஷாப்பிங் வாக் என்று ஒரு நீண்ட தெருவில், எல்லா விதமான பிராண்டட் கடைகளின் கிளைகள். வாங்குவதற்கு நாம் இந்தியாவில் ஒரு வீட்டை விற்று விட்டு வந்து இருக்க வேண்டும். அது செய்யாததால், சும்மா , கண் பார்வைக்கு சுகம். பர்ஸ் பத்திரம் . ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக , ஏதோ சில சின்னஞ் சிறிய பொருட்கள் , ஞாபகத்திற்கு.


இந்த முக்கிய இடங்கள் பார்த்த நேரம் போக, ஒரு நாள் மாலை, பக்கத்தில் ஒரு பீச் , அட்லாண்டிக் கடல் ஓரம் டேடோனா என்ற பீச். கடற்பறவைகள், கால் நனைப்பு , கடல் மணலில் ஓவியம், கடல் நடுவே ரெஸ்டாரண்டில் மீன் உணவு, (கொச்சின் ஞாபகம் வரலாம்). ஹோட்டலில், ஜிம், நீச்சல், மைதா தவிர்த்து பழ உணவு, ரூம் கிச்சனில் கொண்டு சென்ற தோசை மாவில் தோசை , அரிசியில் சாதம், தயிர் சேர்த்து உள்ளூர் உணவு, நினைவோடு ஓர்லண்டோவில் . முடிந்தது ஒரு வாரம் . பையன் சளைக்காமல் பன்னிரண்டு மணி நேரம் கார் திரும்ப ஓட்டி அபெக்ஸ் வந்து சேர நள்ளிரவு பன்னிரண்டு மணி. நயாகரா சென்று திரும்பிய அதே நேரம்.


இப்போது அந்த திருஷ்டி பரிகார நிகழ்வு. நேற்று , பேரனும், பேத்தியும் காலால் தள்ளி ஓட்டும் அந்த மெக்கானிக்கல் நீளத் தட்டை ஸ்கூட்டரில் வேகமாக ஓட்டி விளையாடும் போது ஒரு திருப்பத்தில் , சரிவில், பேத்தி சஞ்சனா , வேகத்தில் கீழே விழ , முகம், கை கால்கள் சிராய்ப்போடு ரத்தத்தோடு வீடு திரும்ப, அர்ஜென்ஸி அப்பாயிண்ட்மென்ட் புக் செய்து பக்கத்து ஆஸ்பத்திரி விரைந்து , எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, மருந்து , மாத்திரை, பேண்டேஜ்களோடு ஆஸ்பத்திரி சுத்தம், வேக கவனிப்பு போன்றவற்றை வியந்தபடி , திருஷ்டி கழிந்தது என்று சொல்லியபடி திரும்பினோம்.


எனக்கு லேசாக காய்ச்சல் என்றாலே , மனைவியால் அனுமாருக்கு பிரார்த்தனை உண்டு. இது போன்ற விபத்துக்கு செய்யாமலா. வழக்கம்போல் அவர் அவரது இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயருக்கு ஸ்வர்ண புஷ்பம் அர்ச்சனை பிரார்த்தனை செய்து , நல்ல வேளை , தலையில் அடிபடவில்லை என்று அனுமானுக்கு நன்றி சொல்லி திரும்பினோம். எதிர் வீட்டுப் பெரியவர் எங்களைப் பார்த்தபடி வீட்டுக்குள் போய் விட்டார். அநுமானைப் பற்றி அந்த வெள்ளைக்காரப் பெரியவருக்குத் தெரியாது .


-----------------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


நயாகரா அனுபவம் - கட்டுரை

 நயாகரா அனுபவம் - கட்டுரை 

--------------------------------

ஒவ்வொரு நாளும் காலையில் வெளியே போய் ஊஞ்சலில் அமர்ந்து காபி குடிக்கும் பொழுது எதிர் வீட்டில் ஒரு முதியவர் வாசலில் வந்து சேரில் அமர்ந்திருப்பது வழக்கம் சிறிது நேரம் கழித்து உள்ளே மெதுவாக நடந்து செல்வார். உள்ளே ஒருவேளை டிவி பார்க்கலாம் பிறகு மறுபடி நான் சாயந்திரம் வாக்கிங் போகும்போது அவர் வெளியே உட்கார்ந்து இருப்பதைப் பார்ப்பேன் வாக்கிங் முடிந்து வரும் பொழுது அங்கே இருக்க மாட்டார் உள்ளே போயிருப்பார். . ஒரு வயதுக்கு மேல் வாழ்க்கை, உலகம் முழுக்க வாழ்க்கை, இப்படித்தானோ என்று நினைப்பை உருவாக்குகின்ற நிகழ்வுகள். உடல் நலம் ஒழுங்காக இருக்கும் வரை சுற்றித் திரியலாம். அதற்குப்பின் அவரைப் போலத்தான். இதோ நாங்கள் அன்று மதியம் நயாகரா கிளம்பி விட்டோம் .


நாங்கள் எட்டு பேர் என்பதால் உபர் வண்டி வைத்துக் கொண்டு ராலே ஏர்போர்ட் சென்று விமானம் ஏறி இரண்டு மணி நேர பயணத்தில், பிலைட் தாமதம் இரண்டு மணி நேரம் சேர்த்து , நான்கு மணி நேரத்தில் பஃப்பலோ சிட்டி வந்தாகி விட்டது. அங்கே ஏர்போர்ட்டில் வாடகைக்கு எடுத்துச் செல்லும் படியான ஒரு பெரிய கார் எடுத்துக் கொண்டான் பையன் . எல்லா இடங்களிலும் இதுபோன்ற வசதி இருப்பது உடனே புக் செய்து உடனே எடுத்துக் கொண்டு கிளம்புவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது .நம்மூரிலும் இது வந்துவிட்டது என்று தான் நினைக்கிறேன் . ஒரு முக்கியமான கண்டிஷன் . கார் ஓட்டத் தெரிய வேண்டும். சென்னை திரும்பியவுடன் காம்பவுண்டுக்குள் ஓட்டிப் பழகுவதை முடித்து , கோடம்பாக்கம் வீட்டு காம்பவுண்டில் இருந்து காரை எடுத்து வெளியே ஓட்டிப் பழக வேண்டும் . ஆச்சு , இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நயாகரா சிட்டி வந்தாகிவிட்டது. அருவிக்கு மிக அருகிலேயே, தண்ணீர் தெறிக்கிற அளவுக்கு இல்லே, கொஞ்சம் தள்ளி அந்தப் பூங்காவுக்கு எதிரே ஒரு ஹோட்டலில் ஏற்கனவே புக் செய்து வைத்திருந்ததால் அந்த இடத்தில் இருந்து நயாகராவுக்கு தினசரி காலையில் வாக்கிங் போய் வருவது போல் போய் வருகின்ற பழக்கம் அந்த மூன்று நாட்களும் இருந்தது.


கம்பர்ட் இன் என்பது அந்த ஹோட்டலின் பெயர் . இரவு சென்றதால் தூங்கிவிட்டு தூங்குவதற்கு முன்பாக அங்கிருந்த ஜிம் போன்றவற்றை போய் பார்த்துவிட்டு வந்து படுத்தாகிவிட்டது. காலை எழுந்தவுடன் ஹோட்டல் பிரேக் பாஸ்ட், வழக்கம் போல் மைதா மாவின் பலவித முகங்களான, பர்கர், வேப்பில் போன்றவற்றோடு , பழங்கள் . எதிரில் இருக்கும் அந்த நயாகரா அருவியின் பார்க்கில் நுழைந்தவுடன் வரவேற்ற வித வித பறவைகளின் கீச்சொலியும், வண்ண வண்ண மலர்களும் உற்சாகம் கொடுத்தன. ஆனால் பெரும்பாலான பூக்கள் வாசமும் இல்லை வண்ண வண்ணமாக பல மலர்கள் இருந்தன


வாசம் உள்ள மலர்கள் நமது தமிழ்நாட்டில் தான் என்று தோன்றியது. அங்கே மூன்று அருவிகள் இருக்கின்றன அமெரிக்கன் பால்ஸ் , ஹார்ஸ் சூஸ் , பிரைடல் வெயில் . மூன்றும் பிரமாண்டமான அருவிகள் பிரைடல் வெயில் கொஞ்சம் சிறியது. அந்த இரண்டுக்கும் இடையில் ஒரு மணப்பெண்ணின் நாணத்தோடு இருக்கிறது.


இந்த பக்கம் இருக்கிற அமெரிக்கன் பால்ஸுக்கும் அந்தப் பக்கம் கனடாவின் பக்கம் இருக்கும் அந்த ஹார்ஸ் சூஸ் பால்ஸுக்கும்இடையே பிரைடல் வெயில் பார்த்தபோது இந்த அமெரிக்கன் பால்ஸுக்கு , அந்த கனடா பால்ஸ் மணமுடித்துக் கொடுப்பது போல் தோன்றியது. நமது மீனாட்சி அம்மன் கோவிலிலே அங்கே சுந்தரேஸ்வரருக்கு மீனாட்சியை மணம் முடித்துக் கொடுக்கும் பெருமாளின் உருவம் ,மூன்று சிலைகளும் சேர்ந்து கோயிலில் பார்த்த ஞாபகம் வந்தது .


முதலில் அந்த ஹார்ஸ் ஷூஸ் பெருமாளாகவும் அந்த பிரைடல் அருவி மீனாட்சியாகவும் அமெரிக்கன் பால்ஸ் சுந்தரேஸ்வரராகவும் தோற்றமளித்தன. அவற்றின் அருகே போட்டில் நெருங்கும் போது அந்த தண்ணீர் தெளித்தது கோயில் திருமணத் தீர்த்தமாகத் தோன்றியது.


முன்பாகவே நாங்கள் தண்ணீர் நுழையாத ஆடைகள் எல்லாம் அனைவரும் அணிந்து கொண்டு தான் அந்த போட்டில் ஏறினோம். இருந்தாலும் மிகவும் அருகில் நெருங்கியபோது ஹார்ஸ் ஷு அருவியின் வேகத்தண்ணீர் அது ஒரு பலத்த மலைச் சாரல் அனுபவம். இனிமையாக இருந்தது பிறகு அங்கிருந்து திரும்பி பிரைடல் அருவியைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கன் அருவியைப் பார்த்துக் கொண்டு திரும்பினோம். அந்தப் பக்கம் கனடா பார்டர். பாலத்தில் ஏறி இறங்கினால் கனடா. ஆனால் விசா வேண்டும். இங்கிருந்து கை அசைக்க விசா தேவையில்லை .அங்கே படகுகள் சிவப்பு நிறம். இங்கே நீல நிறம். அருகருகே .


மறுபடி பூங்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு திரும்பி தோசை கிடைக்குமா என்று ஊரைச் சுற்றிப் பார்த்தபொழுது ஒரு பஞ்சாபி தோசை ஹோட்டல் கிடைத்தது அங்கே பல இந்தியர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதைப் பார்த்தோம். தோசை வட்டமாக இருந்தது என்பதை தவிர அதனுடைய ருசியை தோசை என்று நாம் சொல்ல முடியாது. இருந்தாலும் தோசை என்ற பெயரில் கொடுத்ததால் அதைச் சாப்பிட்டு தோசை சாப்பிட்ட திருப்தியோடு ஹோட்டல் திரும்பினோம் .


மறுநாள் மற்றும் ஒரு அருவி . அமெரிக்கன் ஃபால்ஸ் இதை பார்ப்பதற்கு அடியிலே செல்ல வேண்டும் மிகவும் படிகளில் ஏறி இறங்கி செல்லக்கூடிய சூழ்நிலை இருந்ததால் நானும் மனைவியும் செல்லவில்லை அங்கு இருந்த ஒரு ரெஸ்டாரன்ட், டாப் அப் த ஃபால்ஸ் ரெஸ்டாரண்டில் ,எங்கள் இரண்டாவது பேரனை வைத்துக் கொண்டிருக்க அவர்கள் அனைவரும் உள்ளே சென்று அந்த அனுபவத்தை வந்து சொன்னார்கள் .அது இன்னமும் அதிகமான வேகத்தோடு மேலே வந்து விழுந்தது பற்றி மிகவும் விவரித்தார்கள்.


. நாம் குற்றாலம் போய் ரெம்ப காலம் ஆகிவிட்டது. அப்பொழுது ஏதோ தலையில் இறங்குவது போல் எல்லாம் அனுபவித்த ஞாபகம் உண்டு. இதுவும் அது போல் ஒரு வித்தியாசமான அனுபவம் அவர்களுக்கு. அமெரிக்கன் பால்ஸ் அனுபவம் . அவர்கள் வரும் வரை நாங்கள் அந்த ரெஸ்டாரண்டில் ஒரு வித்தியாசமான ஐஸ்கிரீமை சாப்பிட்டோம் . ஸ்ட்ரா பெரி , ராஸ் பெரி கலந்த ஒரு ஐஸ் கிரீம். மிகவும் ருசியாக இருந்தது .


பிறகு அந்தப் பார்க்கைச் சுற்றிப் பார்க்கும் வண்டியில் ஏறி அந்தப் பூங்காவின் அழகையும் அருவிகளின் அழகையும் , கண்களாலும் காமிராவாலும் ரசித்து விட்டுத் திரும்பினோம். புகைப் படங்கள் எல்லாம் நமது கலை புதிது குழுவில் முன்பே பகிர்ந்தாய் விட்டது. இப்போது முகநூலிலும் போட்டாயிற்று. 'ஆத்தா நான் பாஸாயிட்டேன் ' மாதிரி ' நாங்க நயாகரா அருவி பார்த்திட்டோம்'. முன்பு அமெரிக்கா வந்தபோது பையனும் மருமகளும், கிழக்கே நியூயார்க், மேற்கே சான் பிரான்சிஸ்கோ , லாஸ் ஏஞ்செல்ஸ் எல்லாம் கூட்டிக் கொண்டு சென்று விட்டதால், இப்போது நாங்கள் முன்பு போகாத இடங்களாக பிளான் பண்ணி இருந்தார்கள். வடிவேலு சொல்ற மாதிரி ' பிளான் பண்ணியிருந்தாங்க.



மறுநாள் ஹோட்டல் ஜிம்மில் போய் கொஞ்சம் வொர்க் அவுட் . அன்று மதியம் கிளம்ப வேண்டும் காலையில் சென்று வழக்கம் போல் நயாகரா அருவி பக்கத்தில் இருப்பதால் மறுபடி அங்கே சென்று அருவி பக்கத்தில் த அந்த மூன்று அருவிகளும் சேர்ந்து வரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டு அந்த பார்க் முழுக்க சுற்றி பார்த்து விட்டு ,அருமையான இயற்கைக் காட்சிகள் , மரங்கள், பூக்கள், பறவைகள் , திரும்பியாய் விட்டது . . மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்தில் வீடு இருந்ததால் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த ஞாபகம் வந்தது .


அதுபோன்று இந்த மூன்று நாட்கள் அடிக்கடி சென்று அருவி பார்த்து வந்த அனுபவம் மறக்க முடியாத அனுபவம் . திரும்ப அதே காரில் பயணம் .ஏர்போர்ட் வந்து வாடகைக்கு எடுத்த வண்டியை விட்டுவிட்டு ரிட்டர்ன் பிளைட்டில் ஏறி ராலே வந்து சேர்ந்து இங்கு காரை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது சரியான மழை . அந்த கார் கண்ணாடிகளை மறைக்கக் கூடிய அளவுக்கு வைப்பர்கள் எல்லாம் தாண்டிய பலத்த மழை. மிக மெதுவாக கார் ஊர்ந்து வந்து இரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தது .ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற ஆசையுடன் வீட்டை திறந்து உள்ளே நுழைந்து வீட்டு காபியை ஒருமுறை அருந்தி விட்டு வீட்டு தோசை இரண்டு அந்த 12 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு தான் படுத்தோம்.


எதிர் வீட்டுப் பெரியவர் இந்நேரம் தூங்கியிருப்பாரா, அல்லது முன்பு அவர் சென்று சுற்றிய அனுபவங்களை அசை போட்டுக்கொண்டு படுத்திருப்பாரா .



----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


நார்த் கரோலினா அனுபவம் - கட்டுரை

 நார்த் கரோலினா அனுபவம் - கட்டுரை 

----------------------------------------------

அமெரிக்காவின் நார்த் கரோலினா, ராலே விமான நிலையத்தில் 'தாத்தா 'என்று மூத்த பேரன் காவ்யன் வந்து கட்டிக்கொண்டவுடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இல்ல தாத்தா 'என்று சொல்லி மகிழ்ந்து வெளியே வந்து பையனோட கார்ல ஏறி கிளம்பி வர்ற வழியில் எல்லாம் இரண்டு பக்கமும் பைன் மரத் தோட்டங்கள் அழகு. 'ஊட்டி , கொடைக்கானல் எல்லாம் போனதில்லையா ' என்று கேட்கக் கூடாது . இது அமெரிக்கா , இங்கே இப்படி இருக்குன்னு சொல்றதிலே ஒரு பெருமை . நல்ல ஒரு இயற்கையான சூழ்நிலையை அனுபவித்தபடி அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


வீட்டுக்குள் வந்தவுடன் , மருமகள் வரவேற்க , கூடவே ரெண்டு மாசப் பேரனும் நம்மைப் பார்த்துச் சிரிச்சான். எப்படி நம்மள ஐடென்டிஃபை பண்ணினான்னு தெரியாது .அது நாங்க முந்தி ஜூம் லே ஒரு தடவ பார்த்திருக்கோம். அப்ப பார்த்தது மனசுல வச்சுக்கிட்டான் அப்படிங்கற மாதிரி நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம்.


பையன் கிழக்கே நியூ யார்க் , மேற்கே சான் பிரான்சிஸ்கோ எல்லாம் பல வருடங்கள் இருந்துட்டு இப்ப வீடு வாங்கணும்னு நல்ல ஒரு அமைதியான ஒரு சூழ்நிலையிலே வீடுகள் தனித்தனியாக இயற்கைச் சூழ்நிலையோடு இணைந்து இருக்கிற இடமாக பார்த்து நார்த் கரோலினாவிலே , அபெக்ஸ் என்ற ஊரில் தனி வீடு ரெண்டு வருஷம் முன்னாலே வாங்கிட்டாங்க. ஒரு மாடியோட பெரிய வீடு . பின்னாலே பேக்யார்ட் ,என்ன , எல்லா வேலையும் நம்மளே தான் எல்லாத்தையும் பாக்கணும். அது ஒண்ணு தான் கஷ்டம்.


என்னதான் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் இருந்தாலும் அதையெல்லாம் நம்ம தானே உபயோகப்படுத்தணும் அந்த டெக்னிக்கெல்லாம் நமக்கு தெரியாது . அவங்க பல வருஷம் இங்கே இருந்து எல்லாம் பழகி அவங்களே ஸெல்ப் டிபெண்டெண்ட்டா எல்லாம் பண்றங்க. வேலைக்காரங்க கிடையாது . கலை வாணர் ஒரு படத்திலே பாடுன மாதிரி , தோட்ட வேலை, சமையல் வேலை , வீடு க்ளீனிங் , பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது எல்லாம் மெஷின் தான்.அவங்களே பண்ணிக்கிறாங்க. உடற் பயிற்சி மாதிரியும் ஆச்சு. .



நாங்க பேரனைப் பார்த்துக்கிறது ,அவனுக்கு டைப்பர் மாத்துறது அவனை தூக்கி வைத்து கொஞ்சறது இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகள், மூத்தவனை பக்கத்துத் தெரு ஸ்கூல் பஸ் ஸ்டாப் புக்கு கூட்டிப் போயி ஏத்தி விடறது . இது மாதிரி சின்ன சின்ன வேலைகள் செஞ்சுக்கிட்டேன். ஒய்ப்பும் , அதே மாதிரி சமையல்ல கொஞ்சம் கொஞ்சம் ஒத்தாசை பண்ணிக்கிட்டாங்க. மத்தபடி அங்கே இருக்கிற வாஷிங் மெஷின் , ட்ரையர் அப்புறம் அந்த டிஷ்வாஷ் அப்புறம் ப்ளோர் கிளீனிங் இந்த மாதிரி ஐட்டங்கள் எல்லாம் வந்து நம்ம யூஸ் பண்ணனும்னா அந்த ஆப்பரேஷன் எல்லாமே வேறமாதிரி இருக்கு. எலெக்ட்ரிக் சுவிட்ச் கூட நம்ம பக்கம் கீழே இழுத்தா ஆன் . மேலே எடுத்தா ஆஃப் . இங்கே கீழே தள்ளினா ஆன். மேலே தள்ளினா ஆப். நமக்கு முந்தியே சில வருடங்கள் அமெரிக்காவில் இருந்து பழக்கம் தான். இருந்தாலும் எதுக்கு வம்பு.


ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணி எதுக்கு வம்பு. அந்த வேலைகள் எல்லாம் அவங்களே பண்ணட்டும். எல்லோருமே ஸெல்ப் டிபெண்டெண்ட்டா இருக்காங்க எவ்வளவு வருஷங்களா இங்கே இருக்காங்கள்ல மூணாவது படிக்கிற பேரன் அவனே வந்து ரொம்ப ஸெல்ப் டிபெண்டெண்டா இருக்கான். அந்த விதத்தில் இதெல்லாம் ஒரு நல்ல விஷயம்னு தோணுச்சு .


அப்புறம் அவனுடைய ரெகுலர் ஸ்கூலுக்குப் போய் பார்த்தோம் . அப்புறம் ஸ்பெஷல் தமிழ் கிளாஸ் நார்த் கரோலினாவிலே இருக்கிற தமிழ் சங்கத்தின் மூலம் வீக்லி ஒன்ஸ் சண்டே போயிட்டு வரான் . அதுக்கும் கூட போயிருந்தோம் .அந்த டீச்சர் நல்லா தமிழ் பேசுறாங்க டீச்சர் இல்லையா. பேசத்தானே வேணும். பசங்க மழலைத் தமிழ் . பேரனும்தான். எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் நல்லா பேசுவான் .


அப்புறம் அவனுக்கு மியூசிக்கெல்லாம் இன்ட்ரஸ்ட் . பியானோ கத்துக்கிறான் . அந்த க்ளாஸ் போயி அந்த சார் கிட்டே பேசுனோம். நம்ம இசை புதிது குழுவில் இருக்கிறதுனால இசை பத்தி பேச ஆரம்பிச்ச உடனே அவர் பியானோ பத்தி ரொம்ப விளக்கம் சொன்னாரு. அவரோடது ஒரு நல்ல ஒரு மாடர்ன் பியானோ. அது ரொம்ப ஃபேமஸான கம்பெனி .அதைப்பற்றி எல்லாம் விளக்கமா சொன்னாரு. நமக்கு ஒண்ணும் புரியல. என்ன பண்றது. எல்லாத்துக்கும் தலையை ஆட்டிகிட்டு புரிஞ்ச மாதிரி கேட்டுக்கிட்டோம் . இசை புதிது அட்மின் இல்லையா .அனுபவித்து கேட்ட மாதிரி ஆக்ட் பண்ணிட்டோம் .


அப்புறம் இங்கே ஊர் சுத்துறது. கம்யூனிட்டி க்ளப்பில் , ஜிம் , நீச்சல் குளம் எல்லாமே இருக்கு . அப்புறம் கேம்ஸ் லே இங்க பிக்கில்ஸ்பால்னு ஒண்ணு . டென்னிஸ் டேபிள் டென்னிஸ் கலந்தது. டென்னிஸ் மாதிரி கஷ்டம் இல்லை .இரண்டும் மிக்ஸ் ஆகி ஒரு மாதிரி நல்லாவே விளையாடுவதற்கு ஈசியா இருந்துச்சு . அது நானும் பையனும் விளையாண்டோம். பேத்தியும் நானும் பேட்மிண்டன் விளையாண்டோம்.


அமெரிக்காவிலே இருக்கிற யூஸ்வலா போற இடங்கள் . ரீடைல் ஸ்டோர்ஸ். காஸ்ட்கோ , வால் மார்ட், டார்கெட், மேஸிஸ் . எல்லாம் ஒரு ரவுண்ட். இங்கே காலி நிலங்கள் ரெம்ப ஜாஸ்தி. எனவே எல்லாம் பெரிய பெரிய மால் மாதிரி இருக்கு. எல்லாம் மேலே நல்ல உயரம். கீழே நல்லா அகலமா இடம் விட்டு டிஸ்ப்ளே எல்லாம் அழகா வச்சிருக்காங்க அதான் பாக்குறதுக்கே அழகா இருக்கு. அங்கேயே ஒரு எலக்ட்ரிக் வெஹிகிள் இருக்கு. அதனால அதிலேயே உட்கார்ந்து ஷாப்பிங் பண்ணியாச்சு. என்ன, கொஞ்சம் அந்த பழக் குவியல்கள் இருக்கிற இடம் எல்லாம் போறப்ப கொஞ்சம் கவனமா கூட வந்த பேத்தி கொஞ்சம் அப்படி இப்படி கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக்கிட்டு தள்ளி விட்டுடுச்சு . நம்மதான் இன்னமும் அங்கே சென்னையில் காம்பவுண்டுக்குள் தானே கார் ஓட்டிப் பழகிக்கிட்டு இருக்கோம் . இங்கேயும் ஒரு பிராக்டிஸ் ரவுண்டு.


அப்புறம் செர்ரிப் பழத் தோட்டங்கள் நிறைய இருக்கு .அதுல போயிட்டு பேரன் பேத்தி கூட அந்த பழங்களை எல்லாம் நாமே பிக் பண்ணி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு வாங்கிட்டு வந்தோம் . அந்த அனுபவம் நல்லா இருந்துச்சு ,அந்தப் பழங்களும் நல்ல டேஸ்ட் . எல்லாமே நமக்கு அங்கே தமிழ்நாட்டிலே இருக்கலாம். இருந்தாலும் இங்கே இருக்குது , நாங்கள் இப்படி எல்லாம் பண்ணனும்னு சொல்லிக்கிறது ஒரு பெருமை இல்லையா. அதுக்குத் தான்.


நார்த் கொரோனாவின் அகன்ற சாலைகளில் டிரைவிங் ஒரு ரவுண்டு . இங்கே எல்லாம் ரைட் ஹேண்ட் டிரைவிங் . பையன்தான் ஓட்டினான். இல்லேன்னாலும் நம்ம ஓட்டிடுவோமாக்கும். கொஞ்சம் பச்சை மிளகாய் வேணும்னாலும்கூட ,பக்கத்துலே அண்ணாச்சி கடை கிடையாது. கார் எடுத்துட்டுதான் போகணும். .


வீட்ல பின்னால பேக்யார்ட் . பேக்யார்ட் முன்னாலேயா இருக்கும்னு கேட்கக் கூடாது. அங்கே புல் வெளி, விளையாட்டு மைதானம். எல்லாம் இருக்கு . பேரன் பேத்தியோட விளையாண்டோம். அதுக்குப் பின்னால் பென்ஸ். அதுக்குப் பின்னால் ஒரே காடுதான் இங்கே எல்லாம் பாம்புகள் இருக்கும் , போக வேண்டாம்னுட்டான் பையன் அதனாலே ரொம்ப ரிஸ்க் எடுக்கல . கொஞ்ச தூரம் போய்ப் பார்த்தா அங்கே கொஞ்சம் ஆமைகள் தெரிந்தன. அதே நமக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு திரும்பி வந்தாச்சு. வீட்டு பேக்யார்டிலே அப்பப்போ சில பறவைகள் எல்லாம் வந்து உட்காருது.பார்க்க நல்லா இருக்கு. அணில் எல்லாமே கொஞ்சம் டிஃபரண்டா பெருசா இருக்கு அந்த பறவைகளோட பெயர்கள் தெரியல .ஆனா சவுண்டு எல்லாம் நல்ல மியூசிக்.


பையனோட பியானோ டீச்சர் வந்து ஒரு சர்ச்சில் ஒரு பர்பாமென்ஸ் அரேஞ்ச் பண்ணி இருந்தாரு அவரோட ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் , பேரனும் தான் பிரமாதமா வாசிச்சான். என்ன பாட்டுன்னு எல்லாம் கேட்கக்கூடாது கேட்க நல்லா இருந்துச்சு. அம்புட்டுதான். எல்லாமே இங்கிலீஷ் பாட்டு.


அப்புறம் இந்தியன் ஸ்டோர் போயி சாமான்கள் வாங்கி வந்தோம். கருவேப்பிலை எல்லாம் ரெண்டு டாலர் கொடுத்து வாங்கினோம். ஒரு ரெண்டு மூணு கொத்துதான் . அதுக்கு ரெண்டு டாலர். நம்ம ரூபாய் எல்லாம் சுஜாதா சொன்ன மாதிரி கணக்கு பார்க்க கூடாது. அது ரெண்டு டாலர்னா ரெண்டு ரூபா அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா ஒண்ணும் பிரச்சனை இல்ல அப்புறம் ஏதாவது பச்சை மிளகாய் வாங்கிட்டு வந்தா கூட நம்ம வந்து பக்கத்துல அண்ணாச்சி கடைக்கு போகலாம் போக முடியாது கார் எடுத்து தான் போகணும் எனக்கு கார் எடுக்கணும்னு ஆசைதான் . ஆனா பையன் கிட்டே கேட்கல . பையனும் , மருமகளும் ஒழுங்கா கார் ஓட்டிக்கிட்டு காரை நல்லா மைண்டைன் பண்ணி வச்சுக்கிட்டு இருக்காங்க .இதுல போய் நம்ம தொந்தரவு பண்ண கூடாது.


நம்மளாலே பேரனைக் கொஞ்சுறது அப்புறம் சாப்பிடுறது .கூட்டிட்டு போற இடத்துக்கு போறது . லைப்ரரியில் இருந்து எடுத்துட்டு வந்த செய்ன் பெல்ட் (seinfeld ) நகைச்சுவைப் புத்தகம் படிக்கிறது . அவ்வளவுதான். எதுத்த வீட்டிலே , ஒரு வயசானவரு இருக்காரு. மெதுவா நடந்து உள்ளே போறது , வாசல்லே வந்து சோபாவிலே உக்கார்றது அவ்வளவுதான். இங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லாம் பிரச்சனைகள் இருக்கு. எமர்ஜென்சின்னு போனால் கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருங்கன்னு சொல்லிட்டு தான் பண்ணுவாங்க போல. அந்த மாதிரி நிலைமையில் வயசானவங்களுக்கு இந்த ஊரு ஒத்து வருமான்னு தெரியலே.


வேலை பார்த்துகிட்டு இருக்கிற இளையவர்கட்கு இங்கே சரியா இருக்கும்னு தோணுது நம்ம ஊரு பக்கம் அண்ணாச்சி கடைல போயி கருவேப்பிலை வாங்கலாம் பக்கத்து மெடிக்கல் ஸ்டோர்ல மருந்து ப்ரீஸ்க்ரிப்ஷன் இல்லாம வாங்கலாம். ரொம்ப முடியலயா , பக்கத்துல ஆஸ்பத்திரில டக்குனு போய் படுத்துக்கலாம். எந்த ஊர் ஆனாலும் நம்மூரைப் போல வருமா.


----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


அமெரிக்கப் பயண அனுபவம் - கட்டுரை

 அமெரிக்கப் பயண அனுபவம் - கட்டுரை 

--------------------

வீட்டில் அரைத்த கருவேப்பிலைப் பொடி , பருப்புப் பொடியோடு சேர்த்து, மகனும் மருமகளும் கேட்ட ,கேட்காத பொருட்கள் எல்லாம் வாங்கி ஒருமாதம் முன்பே பேக்கிங் வேலைகள் ஆரம்பித்து ஒரு நாள் இரவு ஊபரில் கிளம்பியாயிற்று ஏர் போர்டுக்கு.

வழக்கமான பரிசோதனைகள், கேள்விகள் ஆரம்பம் அங்கே .


அமெரிக்காவுக்கு எதுக்கு போறீங்க

ஊர் சுத்திப் பார்க்க ( ஏதோ இந்தியாவிலே எல்லா ஊரும் சுத்திப் பார்த்துட்ட மாதிரி )


அங்கே யாரு இருக்கா ( அங்கே போயி கஷ்டப் படக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்தில் கேட்கப் பட்ட கேள்வி )

பையன் இருக்காரு


என்ன பண்றாரு

( கடையா வச்சிருப்பாரு - மனசுக்குள்ளே ) வேலை பார்க்கிறாரு ( இது என்ன பதில். அடுத்த கேள்வி வரப்போகுது , தெரியும். இன்னும் எத்தனை கேள்விகளோ . போக விடுவீங்களா , மாட்டீங்களா - மனசுக்குள்ளே )


என்ன வேலை

நியூயார்க் பரமவுண்ட் ஸ்டூடியோ மென்பொருள் துறையிலே டைரக்டர்

அதுக்கு மேலே நோ கேள்வி. ஈன்ற பொழுதில் பெரிதுவந்த தருணம் அது


உள்ளே போயாச்சு. பாட்டில் தண்ணீர் எல்லாம் கொட்டிட்டு, ஷூவைக் கழட்டிக் காண்பிச்சுட்டு செக்யூரிட்டி செக் முடிந்து உள்ளே நுழைஞ்சாச்சு. முடி வளர்த்தது தப்போ, வேற மாதிரி ரவுடி லுக் நமக்கு இருக்கோ தெரியலை. கண்ணாடியில் பார்த்தா நல்ல பையன் மாதிரி தான் தெரியறோம் . கலை புதிது குழுவுக்குத் தெரியும் , ஏர் போர்ட் குழுவுக்குத் தெரியலே. பரவாயில்லே . இப்போ கொஞ்ச நேரம் லாப்பியிலே காத்திருந்து பிளேனின் இடைஞ்சலுக்குள் நுழைஞ்சாச்சு .


இன்னும் இருபது மணி நேரம் , நடுவிலே பிரான்க்ப்பர்ட்டிலே இறங்கி ,ஓடிப் போயி அடுத்த பிளேன் பிடிக்கிற இடைவெளி நேரம் சேர்ந்து , இப்படித்தான். இப்பவே முழங்கால் லேசா வலிக்கிற உணர்வு. சமாளிக்கலாம். குடும்பம் சேர்ந்து வரலேன்னா ரெண்டு மூணு பீர் அடிச்சுச் சாஞ்சு கிடந்து நேரத்தைக் கழிச்சுடலாம். . இப்ப அப்படி முடியாதே. ஓ , கலை புதிது குழுவில் அவங்களும் இருக்காங்க , இல்லே, இதைப் படிச்சா, சும்மா நகைச்சுவைக்குன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்.


ஆச்சு ஒரு படம் பார்த்தாச்சு. நம்மளை மாதிரி இருக்கார்னு யாரோ ஒரு மேடம் முந்தி சொன்னதால் டென்சில் வாஷிங்டன் மேலே ஒரு பாசம். அவர் நடிச்ச படம் வில்லன் வயலன்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் . ஆனா வழக்கம் போல ஹீரோவோட ஜாஸ்தி வயலன்ஸ் ரசிக்க அது தேவைதான் .


அப்புறம் நடுவிலே அது என்னவோ , என்ன மாயமோ தெரியலே , நாம அந்த இத்தினியூண்டு ரெஸ்ட் ரூம் போயி உடம்பை வளைச்சு நெளிச்சு இருந்துட்டு வர நினைக்கிறப்போ தான் , அங்கே சிவப்பு விளக்கு எரியுது , இல்லேன்னா வழியை அடைச்சுக்கிட்டு வேலைக்கார அம்மா சாரி வெள்ளைக்கார அம்மா சாரி வெள்ளைக்காரப் பெண் தண்ணி இதர தண்ணி பாட்டில்களோட வராங்க . இப்போதைக்கு தண்ணீ குடிக்கிறது டேஞ்சர் . அதனாலே கம்முன்னு இருக்கோம் . அப்புறம் போயிட்டு வர்றோம் .


வர்றதிலே வயிற்றுக்கு ஒத்துக்குறதை பார்த்துச் சாப்பிட்டு முன்னாலே இருக்கிற டிவியில் எல்லாப் படங்களையும் கொஞ்சம் பிரௌஸ் பண்ணிட்டு இருக்கிறப்போ பிராங்க் பர்ட் வந்தாச்சு . ஹிட்லர் ஞாபகம் வந்துச்சு . நேதாஜி ஞாபகத்தோடு சேர்ந்து . ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட்டு இசை புதுதிலே பாடணும்னும் தோணுச்சு . .


பிராங்க் பர்ட்டில் இருந்து வாஷிங்டன் வேற பிளாட்பார்ம் , சாரி வேற டெர்மினல் . அது ரெம்ப தூரம் ..ஓடணும் . வேணாம் . ரெண்டு மூணு வண்டி மாறி மாறி ஏறி , நடுவுகிற நடக்கிற இடங்களிலே வீல் சேர் மாறி , நடுவிலே செருப்பைக் கழட்டிக் காண்பிச்சு ( யாரும் கோச்சுக்கலே செக்யூரிட்டி செக் - ) அடுத்த வண்டி சாரி விமானம் ஏறியாச்சு .


இப்போ இன்னொரு படம் . விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரின் வாழ்க்கை . முதுமையின் தாக்கம் தாண்டி வாழும் அந்தத் தம்பதியரின் வாழ்க்கையோடு விமானப் படை உலகப் போர் அனுபவங்களும் கலந்த உணர்ச்சிப் படம் . வழக்கம் போல் பாத்ரூம் , சாப்பாடு , சங்கடமான தூக்கம் கடந்து வாஷிங்டன் வந்தாச்சு .


அமெரிக்கத் தலை நகரம் . அதிகமான பரிசோதனைகள் . இமிகிரேஷன் செக்கில் வழக்கமான கேள்விகள் . கை ரேகை , போட்டோக்கள் . வயசாகி வரவங்கள் கிட்டே அதிக கேள்விகள் இல்லே . கொஞ்ச வயசுக்காரங்க கிட்டேதான் அதிகக் கேள்விகள் . பல வருடங்கள் முன்பு வேலை பார்க்க வந்தப்போ இருந்த மனப் பரபரப்பு இப்போ இல்லே .


அடுத்து லோக்கல் பிளேன் நார்த் கரோலினா ரெலே போக. இங்கே கிடைச்ச நேரத்திலே கொண்டு வந்த இட்லி தயிர் சாதம் காலி பண்ணிட்டு ஏர் போர்ட் சுத்திப் பார்த்து , பேங்க் கார்டுகள் வேலை பண்ணுதான்னு ஏடிம் மெஷின் லே செக் பண்ணிட்டு அடுத்த பிளேன் ஏறி ஒரு மணி நேரத்திலே ரெலே வந்து லக்கேஜ் எடுத்து வெளியே வர வாசலில் காத்திருந்த மகனோடு வந்திருந்த மூத்த பேரன் காவ்யன் வந்து கட்டிக் கொண்டான் ’ தாத்தா ‘ என்றபடி . இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , இல்லை தாத்தா


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நோய் போகும் பாதை - கவிதை

 நோய் போகும் பாதை - கவிதை 

———


இனிப்புருண்டைப் பொடியோடு

ஹோமியோபதி வைத்தியம்


கசப்புருண்டை லேகியத்தில்

சித்த வைத்தியம்


மாத்திரையும் ஊசியுமாய்

ஆங்கிலேய வைத்தியம்


மருந்தும் வைத்தியமும்

மாறி மாறி வந்தாலும்


அன்போடு அதைக் கொடுத்து

ஆதரவாய்ப் பேசுகின்ற


செவிலியரின் புன்சிரிப்பே

நோய் போகும் பாதையெங்கும்


——நாகேந்திர பாரதி ‎


My Poems/Stories in Tamil and English


தித்திக்கும் திருமணங்கள் - கவிதை

 தித்திக்கும் திருமணங்கள் - கவிதை

 ———-


ஒத்திருக்கும் மனங்களென்றால்

தித்திக்கும் திருமணங்கள்


எங்கேயோ பிறந்தாலும்

எங்கேயோ வளர்ந்தாலும்


இனிமேலே எப்போதும்

இங்கேதான் இருவரும்தான்


என்றாகும் மணத்திற்கு

மனம்தானே அச்சாணி


அச்சாணி மாட்டாமல்

வண்டியிலே ஏற்றுகின்ற


அழகுக்கும் பணத்திற்கும்

வாழ்க்கை வண்டி ஓடாது


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


அலைகளை மறந்த கடல் - கவிதை

 அலைகளை மறந்த கடல் - கவிதை 

----------------------------------

ஆடிக் கொண்டு அலைந்த

அந்தக் காலம்


எதிர் காலம் பற்றியே

எண்ணாக் காலம்


கடலின் அலையாய்

நுரைத்த காலம்


படித்து முடித்து

வேலைக்கு அலைகையில்


அலையும் ஓய்ந்தது

கடலும் காய்ந்தது


அலைகள் மறந்த கடலாய்

ஆகிப் போனது



-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


எங்கே போனார் - கவிதை

 எங்கே போனார் - கவிதை 

———-

சதுர்த்திக் களிமண் பிள்ளையாரில்

சாமியைக் காட்டிய தாத்தா


சனிதோறும் எள்ளு விளக்கில்

கோயிலைக் காட்டிய அம்மாச்சி


கதைகள் படிக்கச் சொல்லிக்

கவிஞன் ஆக்கிய அப்பத்தா


சினிமா கூட்டிச் சென்று

சிந்தனை சேர்த்த அப்பா


பக்கம் இல்லா விட்டாலும்

பாசம் காட்டிய அம்மா


பெண்ணும் பொருளும் தந்து

பிழைக்க வைத்த மாமா


கறியும் மீனும் சமைத்து

கனக்க வைத்த அத்தை


ஒவ்வொரு நாளும் உள்ளே

உணர்வில் கலந்த போதும்


எவ்வளவு சீக்கிரம் எல்லாம்

இறந்த காலம் ஆச்சு


இருப்பார் என்றும் என்றிருந்து

இருந்தார் என்றான பின்னே


எங்கே போனார் என்று

ஏங்கித் தேடும் கண்ணீர்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


அழகிய கண்ணே - கவிதை

அழகிய கண்ணே - கவிதை 

——-

கருத்தில் இருக்கிறது

கண்ணின் அழகு


உள்ளத்து அழகு

ஒளிரும் கண்ணில்


ஒளிக்க முடியாது

அழுக்கு இருந்தால்


எண்ணத்தில் நேர்மையும்

செயலில் தூய்மையும்


வாய்க்கும் எல்லோர்க்கும்

அழகிய கண்களே


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சாதனையின் வேர்கள் இவை - கவிதை

 சாதனையின் வேர்கள் இவை - கவிதை 

---------------------------------------------------


ஆடு கடித்தாலும்

அடுத்துத் துளிர்கிறது இலை


நனைத்துப் போனாலும்

அணைக்க வருகிறது அலை


மாலை மறைந்தாலும்

காலை வருகிறது கதிர்


முன்னால் முடிந்ததெல்லாம்

பின்னால் நினைப்பதில்லை இவை


சாதனை வேர்களின்

சங்கதியின் சாட்சிகளே இவை


---------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சமரசம் உலாவும் இடம் - கவிதை

 சமரசம் உலாவும் இடம் - கவிதை 

-----------------------------------

கல்லறை மட்டும் அல்ல

கண்டு வந்த

கருவறையும் கூட

சமரச இடம்தான்


தாயின் உணவும்

தாயின் கனிவும்

கலந்து கிடைத்த

சமரச இடம் தான்


பிறந்த பின்பும்

வளர்ந்த பின்பும்

உள்ளுக்கும் இருக்கும்

மனத்தின் உள்ளே


மணக்கும் இறைவனும்

சமரசம் தான்

உணர்ந்து கொண்டோர்க்கு

உயர் குணம் தான்


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 19 ஜூன், 2024

உடைந்த கடிகாரம் - குறுங்கதை

 உடைந்த கடிகாரம் - குறுங்கதை

-----------------------------------


வானத்தில் பறக்க நினைக்கும் மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் கண்களை மறைக்கும் கண்ணாடியில் கூட கடிகாரங்கள் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் மகள் . நேர மேலாண்மையில் நெருப்பு அவர். அது போல் அவரின் பாதி உதடுகள் உச்சரிப்பதைப் புரிந்து பார்த்து நடந்து கொண்டால் தப்பித்தாள் அவள். இல்லையென்றால் தண்டனை தான்.


அவள் பின்னல் முடிச்சில் ஒன்று பிரிந்து இருந்ததைப் பார்த்து ஒரு நாள் முழுவதும் பேசவில்லை அவர். ஒழுங்கும் நேரமும் கொஞ்சம் தவறினாலும் அவர் காட்டும் கடுமையும் கொடுமை தான். தாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் அவள் . அவரின் அன்பின் அளவும் தெரியும் அவளுக்கு என்பதால். தாயை இழந்த அவள் எங்கும் தவறி விடக் கூடாது என்ற கண்டிப்பில் ஒரு கருணையும் கலந்து இருப்பதும் புரியும் அவளுக்கு. ஆனால் பலூன் போல் சுதந்திரமாகப் பறக்க விரும்பும் அவள் ஆசைகளை , ஒரு சின்னக் குண்டூசியால் குத்தி உடைத்து விடும் கண்டிப்பு அது என்பதை எப்படி அவருக்குப் புரிய வைப்பது.


ஒரு நாள் இருவரும் கோயிலுக்குச் சென்ற தருணம் அது. அங்கே பல குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தனர் . தாறுமாறாகத் திரியும் அவை வாகனங்களின் வேகத்தைப் புரிந்து கொள்ளாமல் வீதியின் குறுக்கே ஓடி விளையாடியதை ஒழுங்கு படுத்த முடியாமல் தவிக்கும் தாய்மார்களைக் கவனித்தனர் இருவரும். ஒரு தாய் ஒரு குழந்தையை அடித்து இழுத்துச் சென்றாள். அழுதபடி சென்றது அது. இன்னுமொரு தாய் ஒரு குழந்தையை அணைத்து முத்தமிட்டு அமைதிப்படுத்தி இழுத்துச் சென்றாள். அது சிரித்தபடி சென்றது தாயோடு .


திரும்பிப் பார்த்த மகள் தந்தையின் கண்ணாடியில் ஒட்டியிருந்த உருவகக் கடிகாரம் உடைவதைக் கவனித்தாள் . அவள் மனம் லேசாகிப் பலூனாகிப் பறக்க ஆரம்பித்தது. தனது பின்னலின் ஒரு முனையைப் பிரித்து விட்டுச் சிரித்தாள். அவரும் சிரித்தார் .


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தலைமுறை - குறுங்கவிதை

 தலைமுறை - குறுங்கவிதை 

---------------------

புன்னை மரம் ஒன்று

பூக்களை உதிர்த்து விட்டுப்

புன்னகை புரிகிறது


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 14 ஜூன், 2024

பசி- சிறுகதை

 பசி- சிறுகதை 

--------------------


விட்டு வைத்திருக்கிறார்கள் குட்டி விழட்டும் என்று. தாய்ப் பாசம் கொஞ்சம் குட்டிக்குக் கிடைத்த பிறகு , அரிவாள் விழும் அந்த ஆட்டின் கழுத்தில் . அதற்கும் தெரியும் மனிதர்களின் நினைப்பு. இருந்தாலும் , ஏதோ ஒரு நம்பிக்கையை அசை போட்டுக்கொண்டு படுத்துக் கிடந்தது.


போன முறை கூட்டத்தோடு சேர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய் நிலங்களுக்கு உரமாக ஆட்டுப்புழுக்கைகளை கொடுத்து அடைந்து கிடந்த காலத்தில் நிகழ்ந்து அது. இப்போது குட்டியாக வயிற்றுக்குள் உருண்டு கொண்டு கிடக்கிறது . விதை விதைத்த கிடாவோ வேறு ஊர் போயாச்சு. இங்கே திரும்பி வந்து ஆடு மேய்க்கும் சொந்தக்காரன் வீட்டில் அடைந்து கிடக்கிறது .


சுற்றும் முற்றும் பார்த்தது. அந்தக் கிராமத்தின் தெறிக்கும் வெயிலில் தீப்பற்றாமல் அமைதி காக்கும் கூரை வீடுகள் தான் சுற்றிலும். எங்கோ தூரத்தில் ஒலிக்கும் ரெயில் சப்தம் . லேசாக ' மே ' என்று கனைத்து பசியை உணர்த்தியது. உள்ளே படுத்திருந்த கிழவன் முனகியபடி எழுந்திருந்தான். மகன் கிடை போடும் வேலைகள் முடிந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பும் வரை , இது போன்ற புள்ளைத்தாய்ச்சி ஆடுகளையும் , வயதான ஆடுகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஓடி விட்டால் பிள்ளை வந்து விளாசி விடுவான் வார்த்தையால்தான். பையன் மேல் கொஞ்சம் பயம் தான் கிழவனுக்கு.


என்னதான் வளர்த்து ஆளாக்கி விட்டாலும் . இப்ப வயதானபின் அவனை நம்பித்தானே கஞ்சித் தண்ணி. கிழவி போனபிறகு இன்னும் பயம். கடைசி காலத்திலே , ஆடுகளை ஓட்டிட்டுப் போற மாதிரி தன்னையும் எங்காவது ஓட்டிப் போயி அம்போன்னு விட்டுட்டு வந்துடுவானோ என்று. போன தடவை முக்குத் தெரு முனியன், தன்னோட அப்பனை இப்படித்தான் கூட்டிட்டுப் போனான். திரும்புறப்ப அவன் மட்டும் தான் வந்தான். அந்தக் கிராமத்து வழக்கம் தான்.


சில நகரங்கள்லே , பெருசுகளை காசியிலே கொண்டு போயி கழட்டி விட்டுட்டு வர்ற மாதிரி , பட்டிக்காட்டிலே இப்படி ஒரு பழக்கமும் நடைமுறை. காரணம் யாருக்குத் தெரியும். நல்லாத்தான் வளர்த்தாங்க புள்ளைங்களை. அதுக பெரிசான பிறகு, அதுகளோட வயித்துப்பாட்டுக்குத் தான் பாத்துக்க வேண்டியதா இருக்கு . வேலை பார்க்காத வயசானவங்க எல்லாம் ஒரு சுமையா ஆயிடுறாங்க . அதுகளோட பசியைத் தீர்க்கறது ஒரு பெரிய பொறுப்பாத் தெரியறது .


அந்தக் காலத்திலே வேற மாதிரி இருந்ததை யோசிச்சுப் பார்த்தான் கிழவன். குழந்தைகளை வளர்த்து பீ மூத்திரம் எடுத்து பார்த்துக்கிட்டாலும், வயசான பிறகு அதுகளுக்கு இதெல்லாம் எடுக்கிறது ஒரு அருவெறுப்பாய்த்தான் ஆயிடுறது . இழுத்துகிட்டு கிடந்த அவன் அப்பனை எண்ணை தேச்சு விட்டு குளிப்பாட்டி அனுப்பி வைச்ச ஞாபகம் வந்துச்சு. கிழவனுக்கு. இப்போ எங்கேயோ கொண்டு போயி விட்டுட்டு வர மாதிரி , இப்படி ஒரு நடைமுறை எப்படியோ வந்துடுத்து இந்தக் கிராமத்திலே.


அதுவும் பெரும்பாலும் கிழவி இல்லாத கிழவனையோ , அல்லது கிழவன் இல்லாத கிழவியையோ தான் இப்படி. ரெண்டும் சேர்ந்தும் இருக்கிற வரைக்கும் ஒண்ணை ஒண்ணு பார்த்துக்கிட்டு ஒப்பேத்திடுங்க வாழ்க்கையை. ஒண்ணு போயிட்டாலும் மத்தவங்க பாடு அதோ கதி தான். லேசான சலிப்புடனும் ,முதுமையின் களைப்புடனும் எழுந்து வந்தான்.


தனக்கு வேப்பிலை கொண்டு வந்து போடுற கிழவனைப் பரிதாபமாகப் பார்த்தது அந்தச் சினை ஆடு . அதுக்கும் தெரியும் . வெளியூர் போன இடங்களில் இப்படி விட்டுட்டு வந்தவங்களை எல்லாம் பார்த்து வந்தது தானே. சொந்த பந்தங்களையே இப்படி நடத்துற இந்த மனுஷங்க, 'கறிக்காகவும் , குட்டிகளுக்காகவும் காசுக்காக வளர்க்கிற தன் மேலேயா பரிதாப்படுவாங்க' என்று ஒரு முறை யோசித்த படி தன் பசி போக்க, இலைகளை அசை போட்டு மெல்ல ஆரம்பித்தது. யோசித்துப் பார்த்தால் , தான் உட்பட எல்லோருக்கும் பசி. நமக்குத் தாவரத்தின் மேல் பசி. அவங்களுக்கு நம்ம மேலேயே பசி .


பசி போக ஆரம்பித்ததும் தப்பிப்பது பற்றியும் யோசனை செய்ய ஆரம்பித்தது ஆடு .


-----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தீப்பொறி ஆசைகள்-கவிதை

 தீப்பொறி ஆசைகள்-கவிதை 

-----------------------------------

விழுந்து எழுந்தபின் தெரிகிறது

மண்ணின் மணம்

அடித்து ஓய்ந்தபின் தெரிகிறது

வலியின் ருசி

அழுது முடித்தபின் தெரிகிறது

சோகத்தின் சுவை

ஒவ்வொரு தோல்வியும் ஊதுகிறது

நெருப்பின் பொறியை

தீப்பொறி ஆசைகள் தெறிக்கும் போது

எங்கும் வெற்றியே

------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


இயற்கையே இறைவன் - கவிதை

 இயற்கையே இறைவன் - கவிதை 

------------------------------------------

இயற்கையின் நிறங்கள் எத்தனையோ

வானமும் பூமியும்

வகைப் படுத்தி அளிக்கும்

இயற்கையின் நிறங்கள் எத்தனையோ


இயற்கையின் மணங்கள் எத்தனையோ

பூவும் காற்றும்

புரிய வைத்து அளிக்கும்

இயற்கையின் மணங்கள் எத்தனையோ


இயற்கையின் கொடைகள் எத்தனையோ

மேகமும் விதையும்

மேம்படுத்தி அளிக்கும்

இயற்கையின் கொடைகள் எத்தனையோ


இயற்கையே இறைவன்

இன்பமும் துன்பமும்

எல்லாம் கடந்தவன்

இயற்கையே இறைவன்


------------------நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English 


ஓடோடி உழைத்து - கவிதை

 ஓடோடி உழைத்து - கவிதை 

-----------------------------------

ஓடோடி உழைத்து 

ஓடாகிப் போவதெல்லாம் 


வீட்டுக்கும் நாட்டுக்கும் 

வெளிச்சம் தருவதற்கே 


தந்த வெளிச்சத்தின் 

தயவில் குளிர் காய்ந்து 


சும்மா இருக்கின்ற 

சோம்பேறிக் கூட்டத்தின்  


சொகுசைக் குலைத்து 

சுறுசுறுப்பாய் ஆக்குதற்கு 


விரட்டி வேலை வாங்கும் 

வித்தையும் கற்றால் தான் 


ஓடோடி உழைத்ததின் 

உண்மைப் பலன் கிட்டும் 


------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English

  

புதன், 29 மே, 2024

எல்லைச் சாமி - சிறுகதை

 எல்லைச் சாமி - சிறுகதை 

---------------------------


தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.


வானம் பார்த்த பூமியில் விதைத்த விதை முளைக்க மழை வேண்டும் வேதனை அந்தக் கண்களில் தெறிக்க முனியன் திண்ணையில் அமர்ந்திருந்தான்.' பெய்யும்யா மழை , அதுக்குத்தான் முளைக்கொட்டு உத்சவம் போட்டாச்சே . முளைப்பாரியிலே நவதானியம் முளைச்சாச்சே. கொண்டுபோய்க் கொட்ட தண்ணியாலே கண்மாய் நிரப்ப வேண்டியது சடச்சி அம்மன் பொறுப்புய்யா. நீ மனசைப் போட்டு ஒளப்பிக்காதே. நீ ஊரு நாட்டாமை. எல்லோருக்கும் தகிரியம் சொல்ல வேண்டியது நீ தாய்யா ' என்ற காத்தாயியின் குரலில் தெறித்த நம்பிக்கை இவனுக்கும் கொஞ்சம் தைரியத்தைக் கொடுக்கத்தான் செய்தது. போன வருடம் பெய்யாத மழையால் , விதைத்த நெல்லெல்லாம் சாவியாகிப் போய் கொஞ்ச நஞ்சம் வைக்கோல் தான் மிஞ்சியது. வச்சிருந்த விதை நெல்லும் பொங்கிக் காலியாச்சு .


வயசுக்கு வந்து நிக்கும் பொண்ணு வடிவைப் பார்க்கும்போதேல்லாம் இவளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்ற தந்தையின் தவிப்பு. விளைஞ்சால்தானே எல்லாம் நல்லபடியாய் நடக்கும். பூமித்தாய் கொடுக்குறதை வச்சுதான் கஞ்சியும் கல்யாணமும் அந்தக் கிராமத்தில் .


இதுக்கு நடுவிலே 'இந்த முளைக்கொட்டு உத்சவம் எல்லாம் தேவை இல்லை , அதுக்குப் பண்ற செலவுக்கு , நிலத்தையெல்லாம் கோழிப் பண்ணையா மாத்தி தொழில் ஆரம்பிச்சு பக்கத்து டவுனுக்கு முட்டை, இறைச்சி வித்தாலாவது, ஏதோ கொஞ்சம் காசு கிடைக்கும் னு ஒரு இளவட்டக் கூட்டம் ஒண்ணு நாட்டாமை பண்ணி இழுத்தடிக்க, ஒரு வழியா முனியன் ஊரு பெருசுங்களை எல்லாம் சேர்த்துப் பேச வச்சு முளைக்கொட்டு ஆரம்பிச்சாச்சு. தினசரி ராத்திரி ராமாயணக் கூத்து. நடிக்கிறது எல்லாம் ஊரு ஆளுங்கதான். முனியன் தான் ராவணன் வேஷம். அந்த இளவட்டக் கூட்டத்து சுப்பு தான் ராமன்.


ஆச்சு , உத்சவம் இன்னியோடு முடியுது. வானம் கருக்கக் காணோம். துடைச்சுப் போட்ட மாதிரி கிடக்குது. அப்பப்ப வந்து போற வெள்ளை மேகங்களைக் கூடக் காணோம். திரும்ப அந்த இளவட்டங்கள் எல்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா கூத்திலே ஆட்டத்தில் அவங்க பங்கும் உண்டு. இன்னிக்கு கூத்திலே , ராவணன் வதம் .ஒயிலாட்டம் கலந்த கூத்து அது . முனியன் வெறி வந்த மாதிரி கர்சீப்பை உதறி கால் துள்ள ஆடின ஒயிலாட்டத்திலே தூசி பறந்தது . பறந்த தூசி மேலே பறக்க பறக்க வானம் இருண்டது . சனங்களின் ஆனந்தக் கூச்சல் .. ஆட்டம் முடிச்சு முனியன் நிக்க , ஆக்ரோஷப் பாட்டுப் பாடி அம்பு விட்டான் ராமனா நடிச்ச சுப்பு. பாய்ந்த அம்பு பட்டு துடித்து விழுந்தான் முனியன் . நாக்கில் நுரை தள்ள.


ஏற்கனவே ஏற்பாடு செய்த படி , சுப்பு விட்ட விஷ அம்பு அது. 'எல்லாத்துக்கும் காரணம் இந்த முனியன்தான். ஒழுங்கா பண்ணை வைக்க விட மாட்டேங்கிறான். பக்கத்தூரு அரசியல் முக்கியஸ்தரு , ஊர் சனங்க கிட்டே நிலத்தையெல்லாம் வாங்கி , எல்லாம் பண்ணையா மாத்திர ரோசனை நடக்காத கோபத்தில் செஞ்ச முடிவுக்கு , பணத்துக்கு ஆசைப்பட்ட இந்த ஊரு இளவட்டக் கூட்டம் துணை போன விளைவு. '


இடிச்சது ஒரு இடி. விழுந்தது மின்னல் தீ ஒன்று சுப்பு மேலே. துடிச்சு விழுந்து சுப்பு நெருப்பில் கருகும் நேரத்தில் மேலே வந்து பொழிந்தது காட்டு மழை . எங்கிருந்து மேகம் திரண்டது. எப்படி மழை வந்தது. 'ஆத்தா , சடச்சி, மழையையும் கொண்டு வந்து இப்படி முனியன் உயிரை வாங்கிட்டியே , இனி காத்தாயியும் வடிவும் எங்க பொறுப்பு. எங்க குலசாமி குடும்பம் இனி எங்க குடும்பம் 'என்று அழுத சனத்தோடு சேர்ந்து கண்ணீரோடு கதறும் காத்தாயிக்கும் வடிவுக்கும் ஆறுதல் சொல்வது போல் வானமும் சேர்ந்து அழுதது .


முனியன் அன்று முதல் சாமியாகி நிற்கிறான் ஊர் எல்லையில், காத்தாயியும் வடிவும் அவன் கண்ணில் கண்ணீராய் வடிய , தானியப் பச்சையும் தீமையை நசுக்கும் சிவப்பும் கலந்த முகத்தோடு உக்கிரமாக , எல்லைச் சாமியாக .


----------------நாகேந்திர பாரதி


   My Poems/Stories in Tamil and English   


இன்ப வாழ்க்கை - கவிதை

 இன்ப வாழ்க்கை - கவிதை 

————

இரை தேடக் கிளம்பி விட்ட

பறவைகளின் இசை


வழி அனுப்பி வைக்கின்ற

இலைகளின் ஓசை


வரவேற்கும் ஆகாயம்

பசியாற்றும் பூமித்தாய்


சுற்றிக் காண்பித்த

சூரியனும் இளைப்பாற


நிலவின் வெளிச்சத்தில்

வீட்டின் வழி தெரியும்


இயற்கை காட்டுகின்ற

இன்ப வாழ்க்கை நிலை


———நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 3 மே, 2024

நம்பிக்கைச் செடி- குறுங்கதை

 நம்பிக்கைச் செடி- குறுங்கதை 

———

மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .


உப்புமாவான ரவாவை உதிர்த்து முடித்து ஓய்ந்து போன கிழிசல் பை .


மொண்டு வந்து ஊற்றிய தண்ணீர் நினைப்பில் ஓட்டையாய்க் கிடக்கும் உடைந்த வாளி .


மேலும் கீழுமாய் மானம் காத்து மினுக்கித் திரிந்து காலம் போன கழிசல் ஆடைகள் .


தம்ளராய்ப் பையாய் வண்டியாய் திரிந்து ஓய்ந்து போய்க் கிடக்கும் எத்தனை சாமான்கள் .


முடிந்ததது வாழ்க்கை என்று முனகிக் கிடக்கும் அவற்றோடு சேர்ந்து இலையுதிர்ந்த செடி ஒன்றும் ஓரத் தொட்டியில் .


‘ஒரு துளி விழுந்தால் போதும் , நான் துளிர்த்து எழுந்து விடுவேன் ‘ என்ற நம்பிக்கையோடு .


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


அன்புத் துளி - கவிதை

 அன்புத் துளி - கவிதை 

———


வளர்த்து எடுக்க

உழைத்துக் களைத்து


வயதும் ஏற

அடங்கும் நேரம்


ஆசை நெஞ்சின்

துடிப்பின் வெளிச்சம்


கண்ணில் தெரியும்

கவலை நேரம்


அன்புத் துளியை

அள்ளித் தெளித்தால்


வாடிய செடியின்

வருத்தம் போகும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 1 மே, 2024

ஆற்றுச் சுழல் - கவிதை

 ஆற்றுச் சுழல் - கவிதை 

————

கண்மாய்த் தண்ணீரில்

கண்ட மகிழ்ச்சியை

ஆற்றுச் சுழலில்

அறிய ஆசை


கொள்ளிடக் குளிர்ச்சியில்

குளிக்கும் வேகம்

தள்ளிடும் ஆற்றின்

தாக மோகம்


இன்னும் உள்ளே

இன்னும் உள்ளே

கண்கள் சிவந்து

கலங்கும் நேரம்


சுழலின் மத்தியில்

சுழலும் போது

கழலும் நினைவின்

கணப் பொழுது


மனைவி நினைவு

மக்கள் நினைவு

நினைவு பிறழும்

நேரம் நிம்மதி


———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை  -------------------------------- பூக்களைப் பறிக்காதீர்கள் என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டிய பூக்கள் பறித...