காத்திருப்பு -குறுங்கதை
-------------------
வாசலில் காத்துக் கிடப்பதே ஆச்சியின் வேலையாகி விட்டது. இட்லிக்கடை ஜோலி முடிஞ்சதும் , தனது வயிற்றுக்கும் பூனையின் வயிற்றுக்கும் ஏதோ போட்டு விட்டு இப்படி வெறித்த பார்வையோடு இருக்கும் அவளிடம் ஊர்க்காரர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
' அந்த ஓடுகாலி மகளை மறந்திடு ஆச்சி. புருஷன் போனப்புறம், இட்லிக் கடை வருமானத்தில் அவளைப் பார்த்து பார்த்து வளர்த்தே, படிக்க வச்சே, இப்படி வாத்தியாரோட ஓடிப்போவான்னு நினைக்கவே இல்லை. இனி வரமாட்டா., உன் காலடியில் கிடக்கே இந்தப் பூனை,. அதுவும் மியாவ் , மியாவ் ன்னிட்டு அவளை நினைச்சிட்டே உன் கால் மாட்டிலேயே கிடக்கு. எந்திரி ஆத்தா’
'ம்ஹூம்.. ' . தெருவை வெறித்த அவ பார்வை மாறவில்லை. 'அவ வருவா , , என் வளர்ப்பு, ஏதோ பருவக் கோளாறில் ஓடிட்டா. நான் ஊத்தின கஞ்சியும், பேசின பிரியமும், அவ ரத்தத்தில் இருக்கு. பருவக் கோளாறு தெளிஞ்சதும் வருவா, அவளுக்கு நான், எனக்கு அவள், அவளுக்குத் தெரியும். அவளை வளர்த்த என்னையும், அவள் வளர்த்த இந்தப் பூனையையும் அவ எப்படி மறக்க முடியும், வருவா. '
-----------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக