சுவர்களின் கதை - கவிதை ( நன்றி : குவிகம்)
-----------------
வரைந்துள்ள படங்களின்
நிறங்கள் அழிந்து போய்
கோடுகள் மட்டும்
சிதறிய நிலையில்
கோட்டின் பின்னிருக்கும்
வாழ்க்கை ஓவியம்
சுமந்து கொண்டிருக்கும்
சுவருக்குத் தெரியும்
நண்டுகள் பொந்துக்குள்
ஒளியாத காலம்
நாய்களும் வீதியில்
நடமாடிய காலம்
இதோ துணையாய் நிற்கும்
இந்தக் குட்டிச் சுவருக்கு
பள்ளிக் கூடம் என்ற
பெயர் இருந்த காலம்
வீதிகள் இருந்தன
விளையாட்டு இருந்தது
வீடுகள் இருந்தன
மனிதர்கள் இருந்தார்கள்
அவர்கள் இருந்ததால்
வாழ்க்கை இருந்தது
பகலும் இருந்தது
இரவும் இருந்தது
இரைச்சல் இருந்தது
அமைதி இருந்தது
இன்பம் இருந்தது
துன்பமும் இருந்தது
துடைத்தால் போகும்
துன்பம் அது
அணைத்தால் போகும்
கண்ணீர் அது
அப்போது தான்
அந்தச் சுவரும்
வீடாக இருந்தது
அவளும் இருந்தாள்
அவளின் பயிற்சிக்கு
கிடைத்த சுவரும்
அப்போது இருந்தது
வீட்டுக்கு உள்ளே
இயற்கைப் படங்களும்
வாழ்க்கைப் படங்களும்
அவளின் கையால்
உயிரோடு அங்கே
குலைந்த படத்திலும்
கோடுகள் இங்கே
வரைந்தவள் மூச்சு
போனது எங்கே
அவளும் போனாள்
அவர்களும் போனார்கள்
போனது போனது தான்
திரும்பாது காலம்
பொசுங்கிய இயற்கை
புதிய ஜென்மமாக
நசுங்கிய உயிர் எல்லாம்
பழைய நினைவாக
குட்டிச் சுவர்களில்
ஒளிந்து கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
உதிர்ந்து கொண்டு
இந்தச் சுவர்களின்
கதைக்குப் பின்னாலே
கொடூரம் உண்டு
குண்டும் உண்டு
-------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக