ஞாயிறு, 17 மே, 2026

'அணையாத தமிழய்யா தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8

 

'அணையாத தமிழய்யா   தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8 

---------------------------

படம் வரைந்து உதவியவர் : உஷா பாரதி மேடத்திற்கு நன்றி 

--------------

அவ்வப்பொழுது வரும் அனுபவத் தொடர்.

---

இளவயதில் நம்மை  செதுக்கி உருவாக்கக்   கூடிய பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ,ஆசிரியர்களுக்கும் உண்டு தானே .   .அவர்களுடைய  பழக்கங்கள் , வழக்கங்கள்  போன்றவற்றை எல்லாம் பார்க்கின்ற மாணவர்களுக்கு  வழிகாட்டிகளாக  இருக்கக்கூடிய அரிய  வாய்ப்பு அவர்களுக்குக்   கிடைக்கிறது . 


ஒரு பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் இருபது மாணவர்கள் என்று எடுத்துக்கொண்டால் , அந்தக்கால உயர்நிலைப்பள்ளியில் ஆறு வகுப்பிற்கு நூற்று இருபது  மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் பல நாட்கள்  ஏதாவது பாடம் நடத்தி , பழகி வரும் ஆசிரியர்கள் ஏற்படுத்தும்  தாக்கம் அந்த வயதில் மிகப் பெரிய தாக்கம். பசுமரத்து ஆணியாய்ப் பதியும் தாக்கம்.அது மாணவர்களிடம்  நல்ல குணங்களையும் வளர்க்கலாம். தீய குணங்களையும் வளர்க்கலாம். அப்படி நல்ல குணங்களை வளர்க்கக் கூடிய ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்தான் அவனது தமிழ் ஐயா. 


உத்திரகோசமங்கை  சின்ன ஊர் என்பதால் அவருடைய நடவடிக்கைகள் அனைத்துமே எல்லோராலும், குறிப்பாக எல்லா மாணவர்களாலும் கவனிக்கக் கூடிய அளவிலே இருந்தது .  பள்ளிக்கூட நேரம் போக மீதி  நேரத்தில் கோயில்தான் அவர் குடியிருப்பு.   பிரம்மச்சாரி . வீட்டில் அவரும் அவருடைய தம்பியும் அவருடைய அம்மாவும் .


அவர்  அந்த ஊருக்கு மாறுதலாகி  வந்த பொழுது அவருடைய சில பழக்கங்கள் அவனுக்கு மிகவும்  வித்தியாசமாகத் தெரிந்தன  .  அவனும் அவருடைய தம்பியும் ஒரே வகுப்பு என்பதால்  அவருடைய வீட்டுக்கு அடிக்கடி போகக் கூடிய வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது . 


அப்பொழுதெல்லாம்,  அவரும் அவர்  தம்பியும் காலை நேரத்திலும் , மாலை நேரத்திலும்,    அவருடைய அம்மாவின்  காலில் விழுந்து வணங்கி விட்டு பிறகு  கடவுள்களை வணங்குகிற வழக்கம்  இருப்பதையும் கவனித்தான்.


 அவனது வீட்டிலோ அவனுக்கு   அம்மாச்சியிடமும் அப்பத்தாவிடமும் மிகவும் செல்லம் ( வீட்டில் மூன்று சின்னம்மாக்கள், இவன் ஒருவனே சிறுவன் என்பதால்) , அவர்கள் அவனது பிடிவாதத்தை ரசித்து செல்லம் கொடுத்துக்   கொண்டு இருந்த காலம். 


இங்கே தமிழ் ஐயா அவரது  அம்மா சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வந்து நறுக்கிக்  கொடுப்பதும் , அவரது தம்பி, ஊரணிக்குத் தண்ணீர்க் குடங்களைத்  தூக்கிச் சென்று, இடுப்பிலும் தலையிலும் சுமந்து கொண்டு வருவதும் அவனுக்குப் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. 


  இப்படி வீடு தவிர கோயில்,  பள்ளிக்கூடம் போன்ற இடங்களிலும்  அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.  பள்ளி நேரம் போக இவர்கள் கோயிலுக்குள் விளையாடச் செல்லும் பொழுதெல்லாம் அவர் கோயிலின் ஒரு பிரகாரத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருப்பார்.  


 பள்ளிக்கூடத்தில் 'உள்ளேன் ஐயா' என்று அவருடைய வகுப்பில் எடுக்கும் வருகைப் பதிவுக்கு  யாராவது தவறி வேறு மொழியில் பேசி விட்டால் அவர்களை உடனே அந்த வகுப்பை விட்டு போகச் சொல்லி விடுவார். 


அதேபோன்றுதான் அங்கே ஆங்கில ஆசிரியராக இருந்த தலைமை ஆசிரியை  ரூபி தாமஸ் அவர்கள்  வகுப்பிலே ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் அவரும் வகுப்பை விட்டு வெளியே போகச் சொல்லி விடுவார் . இப்படி பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் எல்லாமே ஒரு கட்டுப்பாடோடு இருந்த காலம் அது . மாணவர்கள் அதற்கு ஓரளவு பழகிக் கொண்டு இருந்த காலம். 


 அதே நேரத்தில் வெளியே பார்க்கும் பொழுது  தமிழ் ஐயா மிகவும் இயல்பாக  நண்பனைப் போல  பழகக் கூடிய  நல்ல குணம் உள்ளவர் . அவரைப் பற்றி அவனது வீட்டிலும் தெரியும் என்பதால், அவருடைய தம்பியுடன் அவன் நட்புடன் பழகுவதை அவன் தாத்தா மிகவும் வரவேற்றார். அவனைப் பார்த்தாவது இவனுக்குப்  பிடிவாதம் இல்லாத குணம் வராதா  என்ற ஒரு அசட்டு நம்பிக்கை அவருக்கு. ஆனால் அவனும், தமிழய்யா தம்பியும் சேர்ந்து செய்த சேட்டைகள் அவருக்கு தெரிய நீண்ட நாட்கள் ஆகின. 


சென்ற பகுதியில் குறிப்பிட்ட,  டெய்லர் அண்ணனிடம் சேர்ந்து , தேன் எடுத்தது , புறாக்கறி சாப்பிட்டது, ஆட்டுப்பால் குடித்தது எல்லாம் இந்த நண்பனுடன் , தமிழ் ஐயா தம்பியுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் தான். ஒருமுறை , வீட்டுக்குச் சொல்லாமல், காலையில் இருவரும் சைக்கிளில் குறுக்கு மண் பாதையில் சேதுக்கரை சென்று கடலில் குளித்து விட்டு ஆட்டம் போட்டு விட்டு , மாலை வீடு திரும்ப ,சைக்கிள்  வருகின்ற கிழக்குத் தெரு கண்மாய்ப் பக்கம் நின்று பார்த்த தாத்தாவிடம் கிடைத்த திட்டுகள் அதிகம். நண்பனுக்கும் அவன் அண்ணன் தமிழ் ஐயாவிடம் கிடைத்தன  திட்டுகள். இருவரும் சில நாட்கள் பேசிக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் போட்ட தண்டனையும் சில காலம் கொடுமையாகக் கழிந்தது அவர்களுக்கு . அது அவர்களுக்கு  ஒரு பாடம். 


அதே சமயம், அவன் ,வகுப்பில் தமிழ் மனப்பாடப் பகுதி பாடலை ,  சொல்லுகின்ற  உச்சரிப்பு,  அவன் தமிழ்க்  கவிதைகளை  நூலகத்தில் படிக்கும் விபரம் அனைத்தும் கவனித்த அவர் அவனது  தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி , அவனைக் கவிதை எழுதச் சொல்லி ஊக்குவிக்க, அவன் எழுதிய முதல் கவிதை ' சூரிய உதயம் '  அப்படியே அவனது பழைய  கவிதை ஏட்டில்  இன்னும் இருக்கிறது  . 

அந்தக் கவிதையைத் திருத்தி பள்ளி ஆண்டு மலரில் வெளியிடச் செய்தார். அவனை, பள்ளியின் பேச்சுப்போட்டி,  கட்டுரைப் போட்டி, பாட்டு, நாடகம்  அனைத்திலும் பங்கு பெற வைத்து அவன் வகுப்பில் முதல் மாணவன் போல், அவற்றிலும்  பரிசு பெறுவதைப் பார்த்து மகிழ்ந்தார். 

அப்பொழுது ஆனந்த விகடனில் நடத்திய ' அம்புலிப் பயணம்' கவிதைப் போட்டியில்  அவனைக் கலந்து கொள்ளச் செய்ய வைத்து  அதில் அவனுக்கு ஆறுதல் பரிசு கிடைத்து அவன் வீட்டுக்கு இரண்டு மாதங்கள் வாராவாரம் ' ஆனந்தவிகடன் ' பத்திரிகை வந்ததைக் கண்டு வீட்டோரை விட அதிகம் மகிழ்ந்தவர் அவர்தான். 

கால ஓட்டத்தில் பல மாற்றங்கள். அவருக்குத் திருமணம் ஆனது. அவனும் மேல் படிப்புக்கு வேறு ஊர் சென்று விட்டு, விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம், அவர் வீட்டுக்குச் சென்று அந்தத் தம்பதிகளை வணங்கி வாழ்த்து பெற்றுக் கொண்டு இருந்தான். தமிழ் ஐயா தாயார் தவறி விட்டார். தம்பி வேறு ஊரில் காவல் துறையில் சேர , சிறிது நாட்களில் தொடர்புகள் அறுந்து போயின . 


ஆனால் , அவன் நினைவில் , அவனைப் பல கலைகளில் ஆர்வம் வரச் செய்த அவர், என்றும்  ஒரு ஆசிரியராய், தமிழ் ஐயாவாய்   நினைவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.   அவனது முதல் கவிதை  ' சூரிய உதயம் ' கவிதையைப் பார்க்கும் போதெல்லாம், அவர் நினைவு  சூரிய தீபமாக ஒளிர்ந்து கொண்டே  கொண்டே இருக்கிறது. பள்ளிப் பருவத்தின் நினைவுகளில்  பூவின் மணத்தோடும்  , இனிப்பின் சுவையோடும்,  ஒளிரும்   தீப ஒளியாக , மேலே உள்ள சித்திர விளக்காக .  அது 'அணையாத தமிழய்யா   தீபம்'. 


--------------நாகேந்திர   பாரதி   

My Poems/Stories/Articles in Tamil and English   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'அணையாத தமிழய்யா தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8

  'அணையாத தமிழய்யா   தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8  --------------------------- படம் வரைந்து உதவியவர் : உஷா பாரதி மேடத்திற்கு ...