'வசந்தாகோவிந்தராஜன்' சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு
-----------------
நன்றி அழகிய சிங்கர், வணக்கம் நண்பர்களே
நாட்டு நடப்பை அப்படியே துல்லியமாகச் சொல்லக்கூடிய அருமையான ஒரு சிறுகதை வசந்தாகோவிந்தராஜன் அவர்கள் எழுதியுள்ள ' நாடக மேடை'
' உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கியத்தின் ஒரு காட்சி கதையாக இங்கே அரங்கேறியிருக்கிறது வசந்தா கோவிந்தராஜன் அவர்களின் எழுத்தில்.
முதலில் கதைச் சுருக்கம் .
கஷ்டப்பட்டு தனது மகனைப் படிக்க வைத்த பெற்றோர் ,அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணம் முடித்து வைக்க அவன் மாமனார் வீட்டோடு சென்றுவிட்டு, அங்கிருக்கும் அவுட்ஹவுஸில் வந்து பெற்றோர்களை இருக்கச் சொல்ல, இவர்கள் மறுத்துவிட்டு தங்கள் வீட்டிலேயே இருக்க , அப்பா சாதாரண வேலையில் இருப்பதால் அவரை அப்பா என்று சொல்லவே அவன் கூச்சப் பட்டு, அதற்குப் பிறகு அவர்களை அவன் வந்து பார்க்கவே வராமல் இருக்க , அந்த முதியவரின் மனைவியும் இறந்து போக, அவர் அவனுக்குச் சொல்லாமல் , அவராலும் வேலை பார்க்க முடியாத முதுமை நிலையில் அவர் ஒரு முதியோர் அனாதை இல்லத்தில் வந்து சேர அங்கு இருக்கும் ஒரு அநாதை முதிவரிடம் பேசுகின்ற உரையாடலில், ஆரம்பிக்கிறது கதை.
அவர் நண்பர் இவரை அழைக்கிறார். 'இன்று ஒரு பெரிய மனுஷர் குடும்பத்தோடு வந்து நமக்கெல்லாம் புத்தாடை , புது உணவு வழங்க வருகிறார். வழக்கம்போல் நீங்கள் நல்ல ஆடை உடுத்திக் கொண்டு தயாராகுங்கள்' என்று சொல்ல, அதற்கு அவர் பதில். 'இது ஒரு நாடகம் நம்மை குழந்தைகள் கவனிக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய் வருகின்ற நமக்கு இதுபோன்று சிலர் வந்து அந்த நேரத்தில் நமக்கு பிச்சை போடுவது போல் போடுகிறார்கள் ' என்று வெறுப்பாகப் பேச , நண்பர் , ' இது ஒரு நாடகம் தான் . அதுவரை நம்மை சுமாராகவே கவனித்துக் கொண்ட இல்ல நிர்வாகிகள் அன்று மட்டும் நம்மை மிகவும் அருமையாக கவனித்துக் கொள்வதாக நாடகம் ஆடி அவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள். நாமும் அதன் மூலம் நமக்கு ஏதாவது கொஞ்சம் நல்லது செய்ய மாட்டார்களா என்று இந்த நாடகத்தில் பங்கேற்கிறோம். இந்த நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வாங்க 'என்று சொல்ல இவரும் ஒரு நல்ல வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு தயாராகிறார்.
அப்பொழுது அங்கே வருகிற காரில் வந்து இறங்குகின்ற அந்த பெரிய மனிதர் குடும்பத்தைப் பார்த்தவுடன் இவருக்குச் சங்கடமாகி விடுகிறது . வந்திருந்தவர்கள் இவருடைய மகன் அவனுடைய மனைவி மாமனார் மாமியார் பேரன் . மனம் தளர்ந்து போய் இவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பாமல் தோட்டத்துப் பக்கம் சென்று விடுகிறார்.
இவர் நண்பர் மட்டும் சென்று கலந்து கொள்கிறார். அங்கே நல்ல உணவு நல்ல ஆடைகள் எல்லாம் அந்தக் குழந்தை மூலமாகக் கொடுக்க வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த இல்ல நிர்வாகிகளும் வாயெல்லாம் பல்லாக அவர்கள் கொடுக்கும் செக்கை வாங்கிக் கொள்ள புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இவருக்கு இவருடைய நண்பர் வராததால் அந்த இல்ல நிர்வாகியிடம் பயந்து கொண்டே சொல்கிறார். . 'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அவருக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாமா ' என்று கேட்கிறார்.
அந்த நிர்வாகியும் நல்ல மூடில் இருந்ததால் 'சரி' என்று சொல்ல மற்றுமொரு சாப்பாடு பாக்கெட் மற்றொரு உடை பாக்கெட்டையும் வாங்கிக் கொண்டு சென்று அவருடைய நண்பரிடம் போய்க் கொடுக்கிறார்.
நண்பர் கண்களில் கண்ணீர். 'ஏன்' என்று கேட்கும் பொழுதுதான் அவர் தனது பழைய கதையை நண்பரிடம் சொல்கிறார். 'வந்திருந்தது அவர் மகனும் அவனது மனைவியும் தான்' என்று சொல்லிவிட்டு அவனிடமே வந்து பிச்சை எடுப்பது போல் வாங்குவதற்கு பிடிக்க வில்லை ' என்று சொல்லி விட்டு , 'பேரன் எப்படி இருக்கிறான்' என்று பாசத்தோடு கேட்கிறார். இந்த இடத்தில அந்த முதியவரின் பேரன் பாசம் உருக வைக்கிறது .
அதைக் கேட்ட நண்பரின் மனம் வருத்தப்பட்டு , 'தூக்கி எறியலாம்' என்று நினைத்த அந்த உணவு உடை பாக்கெட்டுகளை, மறுபடி யோசித்து 'யாருக்காவது உபயோகப்படும் என்று வாட்ச்மேனுக்கு கொடுக்கலாம் 'என்று நினைத்து அன்று அவரோடு இவரும் சேர்ந்து உபவாசம் இருக்கிறார் . இதுபோன்று இந்த வாழ்க்கை நாடக மேடையின் ஒரு காட்சி இந்தக் கதையில் அரங்கேறி முடிகிறது .
'வாழ்க்கை ஒரு நாடக மேடை' என்பதை மிக மிக அழகாக இந்த கதையிலே ஆரம்பத்திலிருந்து அந்த உரையாடல்களின் மூலம் நம்மை அழைத்துச் செல்வது போலவும் அந்த முதியவரின் மன உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளும்படியும், இந்தக் கதை, அமைந்திருக்கிறது
முதலில் அந்த முதியவர் அந்த இல்லத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லுவதை ஆசிரியரின் வார்த்தைகளிலேயே பார்க்கலாம்.
நண்பரை ஏற இறங்க ஒரு முறை பார்வை பார்த்த சங்கரன் “எனக்கு இந்த நாடகம் சுத்தமாப் பிடிக்கலை. அவங்கவங்க பிறந்த நாளோ, திருமண நாளோ கொண்டாடறதுக்கு இங்க வரதும், இவங்க அன்னிக்கு மட்டும் நம்மை நல்லா கவனிச்சுக்கற மாதிரி ஷோ பண்றதும் அவங்க நமக்குப் பிச்சை போடற மாதிரி ஏதாவது கொடுத்து ஃபோட்டோ எடுக்கறதும் என் மனசுக்கு ஒப்பவேயில்லை. நம்மில் நிறையப் பேர் நம்ம புள்ளைங்க அவமானப் படுத்தறது தாங்காமத் தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கோம். இங்கயும் போறவங்க வரவங்க எல்லாம் நம்மை அவமானப் படுத்தறாங்க. வாழ்க்கையே கசப்பாய் இருக்கு கோவிந்தன் சார் “என்றார்.
“உலகமே ஒரு நாடக மேடை”ன்னு கேள்விப் பட்டிருக்கீங்க தானே! இப்போது நமக்குக் கொடுத்திருக்கும் பாத்திரம் ‘அனாதைக் கிழவன்’. இவங்க நல்லா வைச்சுக்கற மாதிரி நாம நடிச்சா இவங்களுக்கு ஒரு நல்ல தொகை டொனேஷன் வரும். எப்படியும் அதில் கொஞ்சமாவது நமக்குச் செலவழிக்க மாட்டாங்களா என்ற நப்பாசை தான். என்ன செய்ய, நேரம் ஆகுது சீக்கிரம் ரெடி ஆகுங்க” என்று சொல்லி விட்டுப் போனார்.
வேறு வழியில்லாமல் சங்கரனும் தன்னிடம் இருப்பதில் பளிச்சென்று இருக்கும் வேட்டி, சட்டையுடன் தயாரானார்.
இதே போன்று கடைசியில் அந்த முதியவர் பேசும் வார்த்தைகள் ஆசிரியரின் எழுத்தில் , இப்படி.
'உழைக்க உடம்பில் தெம்பில்லாமல் போனதால் இங்கே வந்து சேர்ந்து விட்டேன். தெரியாதவங்க எத்தனையோ பேர் கொடுத்த போது வாங்கியிருக்கேன். இப்ப என் மகனே அவன் புகுந்த வீட்டாருடன் வந்து கொடுக்கும் போது நான் தவித்துப் போயிட்டேன். நான் இங்க இருக்கறது தெரிஞ்சா அவன் அவமானப் படுவான். அப்புறம் இங்க என்னை இருக்க விடுவாங்களோ என்னவோ. தெரியாதவர்களிடம் பிச்சை வாங்கலாம். சொந்த மகனிடமே வாங்கலாமா?” என்று கண் கலங்கினார். உடனே சமாளித்துக் கொண்டு “ஆமாம், என் பேரன் எப்படி இருக்கான்?” என்று ஆர்வமாய்க் கேட்டார்.
கோவிந்தனுக்கு ‘இப்படியும் மனிதர்களா? பெற்றவர்கள் எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்கன்னு அக்கறையில்லை. ஆனால் தங்கள் சுய விளம்பரத்துக்காக முதியோர் இல்லத்துக்கு வந்து ஆதாயம் தேடறாங்க. எனக்காவது வாரிசு இல்லை, குடும்பம் இல்லை. இவருக்கு இப்படி ஒரு குடும்பம், இதை விட என் நிலையே பரவாயில்லை. அந்தப் பைகளை அப்படியே குப்பையில் வீச வேண்டும் போல் ஆத்திரம் எழுந்தது. வாட்ச்மேனுக்காவது கொடுக்கலாம் என்று பத்திரப்படுத்திக் கொண்டார். “இன்று நானும் உங்களுடன் சேர்ந்து உபவாசம் இருக்கேன்” என்று நண்பரின் முதுகை ஆதரவாகத் தடவினார்.
இப்படி தனது எழுத்தின் மூலம் மனித மன உணர்வுகளை அப்படியே கொண்டு வரும் திறமை இருக்கிறது ஆசிரியரிடம்.
ஒரு சமுதாய பிரச்னையை எடுத்துக் கொண்டு அதை ஆடம்பரமற்ற சொற்களால் அப்படி அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நம் உணர்வுகளைக் கிளறி விடுகின்ற மிக அருமையான எழுத்து.
நாமும் எத்தனையோ முதியோர் இல்லங்கள் சென்றிருக்கிறோம் அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் பார்த்திருக்கின்றோம் .சில இல்லங்களில் முதியவர்கள் பரிதாபமாகத் திரிவதும், அந்த இல்ல நிர்வாகிகள் சிரித்துக் கொண்டும் மிகவும் சந்தோஷமாக வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டும் இருப்பதும் அந்த முதியவர்கள் அந்த இல்ல நிர்வாகிகளிடம் பழகும் விதத்தில் , அவர்கள் முகத்தில் சுரத்தே இல்லாமல் இருப்பதையும் நாம் பார்த்த போதெல்லாம் நமக்குள் ஒரு சந்தேகம் வந்து கொண்டுதான் இருந்தது.
இந்த முதியோர் இல்லங்கள் எல்லாம் உண்மையிலேயே ஒரு சமுதாய சேவை மனப்பான்மையுடன் ஏற்படுத்தப்பட்டனவா அல்லது ஏதோ சில அமைப்புகளுக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் , வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டனவா என்று ஐயம் எழுந்தாலும் அங்கு இருக்கும் அனாதை முதியவர்களை பார்க்க 'எப்படியோ இவர்களுக்கு அன்றாட சாப்பாடு கிடைக்கிறது ,அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் இவர்களுக்கு சாப்பாடு என்ற ஒன்றும் மருத்துவமும் கிடைக்கிறது அல்லவா, அந்த விஷயத்துக்காக குற்றம் சொல்லாமல் விட்டு விடலாம்' என்ற எண்ணம் தான் ஏற்பட்டது .
இவற்றிற்கு நடுவிலே முதியவர்கள் மகிழ்ச்சியோடு வலம் வருகின்ற சில இல்லங்களையும் பார்த்திருக்கிறோம்.
அதே போன்று பெற்றோர்களை ஒதுக்கி வைத்த பிள்ளைகளையும் பார்த்திருக்கிறோம்.
மற்றொரு பக்கம் , தங்கள் உடல்நிலை காரணமாக தங்களால் கூடவே இருந்து பராமரிக்க முடியாமல் பெற்றோருக்கு கடைசி காலத்தில், உரிய பராமரிப்பு கிடைக்கும் இல்லங்களைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்து, மருத்துவ உதவியோடு அவர்கள் கடைசி காலத்தில் இருக்க வழி செய்து , தொடர்ந்து தொடர்பில் இருக்கும் பிள்ளைகளையும் பார்த்திருக்கிறோம்.
எனவே இது போன்ற முதியோர் இல்லங்கள் ,பராமரிப்பு இல்லங்கள் செய்யக்கூடிய சேவை சமுதாயத்திற்கு முக்கியமான சேவைதான் .
ஆனால் அதே நேரத்தில் இன்று பெற்றோர்களை ஒதுக்கிவிட்டு ஆடம்பரமாக செலவு செய்து கொண்டு திரியும் சிலரைப் பார்க்கும்போது நமக்குக் கோபம் வரத்தான் செய்கிறது..
அதே நேரத்தில் சரியான அமைப்புகளை நாடி பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் சேர்க்கின்ற பிள்ளைகளின் நோக்கங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது .
எப்படி நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றனவோ
அது போல் பிள்ளைகளின் நோக்கங்களிலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன .கொண்டு சென்று விடப்படுகின்ற பெற்றோர்களிடமும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன . அந்த இரண்டையுமே நாம் புரிந்து கொண்டால் இரண்டு பக்கங்களின் நியாயங்களும், அநியாயங்களும் புரியும்.
இந்த வாழ்க்கை நாடக மேடையில் நடக்கும் இந்தக் காட்சிகளை பற்றி இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை எழுப்பக் கூடிய ஒரு அருமையான கதையை எழுதியுள்ள ஆசிரியர் வசந்தா கோவிந்தராஜன் அவர்கட்கு வாழ்த்துகள். இதைப் படித்து மதிப்புரை செய்ய வாய்ப்பளித்த அழகிய சிங்கருக்கும், கேட்ட அனைவர்க்கும் நன்றிகள்
-------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக