செவ்வாய், 2 செப்டம்பர், 2025

அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு 

-------------------- 


நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே . 


ஒரு   நாள் ஒரே மூச்சா 24 சிறுகதைகளையும் (191 பக்கம் )  படிச்சாச்சு . அவ்வளவு விறுவிறுப்பு. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு எழுத்தாளரின் மாறுபட்ட பார்வைகளில் விரியும் கதைகளுக்குள் தொடர்ச்சியாய்ப்  போய் வரும்போது   வாழ்க்கை பற்றிய நம் பார்வைகளும் விரியும் என்பதை உணர முடிந்தது .   போட்டிக்கு வந்த 153 கதைகளையும் அழகியசிங்கரே படிச்சு தேர்ந்தெடுத்த கதைகள் ஆச்சே . அனைத்தும் சிறப்பு .


தன் கதைகளை பற்றி அசோகமித்திரன் இப்படி எழுதுகிறார். 

'என்னுடைய கதைகள் வாழக்கையில் இருக்கிறதுதான். அதுல வர பாத்திரங்களை , ஏதோ ஒரு சமயத்திலே சந்திச்சிருக்கேன். நான் எழுதும் எழுத்து எல்லாமே அந்தப் பாத்திரங்களுக்கு நான் செலுத்துகிற ஒரு அஞ்சலிதான். என் படைப்பு எதை எடுத்துக் பார்த்தாலும் அது, அதில் வரும் மூலமாதிரிக்கு என்னுடைய அஞ்சலி,  மரியாதை இல்லாவிட்டால்  வாழ்த்து..'


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் உள்ள பாத்திரங்களும் அந்த எழுத்தாளர்கள்  ஏதோ ஒரு சமயத்தில் சந்தித்திருக்கும் 

பாத்திரங்கள்தான் . ஏன், நாமும் கூடத்தான் சந்தித்திருப்போம்.  


இந்த பதினைந்து நிமிடத்தில் ,  எனக்குத் தெரிந்த வரை , ஒவ்வொரு கதையின் ஜீவனை  மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறேன். கதையின் பாதி புரியலாம். மீதியும்  புரிய,  முழுக் கதையையும் நீங்களே படித்து அனுபவியுங்கள் .


முதல் பரிசு பெற்ற முதல்  கதை. மாலா மாதவன் அவர்களின் 'இனி மௌனமில்லை ' .படித்து முடித்தவுடன் நமக்கு மௌனம்  தான். கண்களில் கண்ணீர்தான். உடல் இயங்க மறுத்து உயிர் பிரியத் துடிக்கும், ஒரு அம்மாவின் கடைசி நேரத்தில்,மகனின் ஒரு பிரிய பேச்சைக் கேட்டுப் பிரிகிறது உயிர். இனி மௌனமில்லை.


இரண்டாவது பரிசு பெற்ற கதை.   என் நாகராஜன் அவர்களின் 'ஐநூற்றைம்பது ரூபாய் '. பசியை அனுபவித்தவர்களுக்கு , இந்த நாயகனின் பசியும் புரியும். அவன் அனுப்பும் ஐநூற்றைம்பது ரூபாயும் புரியும் . புரிந்தது . 


மூன்றாவது பரிசு பெற்ற கதை. ரமேஷ் கல்யாண் அவர்களின் 'என்னவோவாக என்பது ' . அடித்தட்டு மக்களின் அவஸ்தைகளையும் அபிலாஷைகளையும் அனுதாபத்தோடு அணுக முடித்தவர்களுக்கு என்னவோவாகத்தான் இருக்கும். 


அடுத்து சிறப்புக் கதைகளாக அழகியசிங்கர் பிரசுரத்திற்காகக்  தேர்ந்தெடுத்தவை . 

முதலாவது சிறப்புக் கதை .எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 'கிணற்றுப் பூனை ' . 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் கண்ட போதெல்லாம் வாடினேன் ' என்ற வள்ளலார் வாக்குப் போல் ' வாடிய உயிர் கண்டு ' வாடிய நாயகனின் மனநிலையை இயல்பு நிலை கலந்து எடுத்துக் காட்டி உள்ளார் ஆசிரியர். 


இரண்டாவது சிறப்புக் கதை .ஆர். வெங்கடேஷ் அவர்களின் 'மரணமடைந்தவனின் நண்பன் ' . நமக்குத் தெரிந்தவர் என்று மற்றவர் நினைத்திருக்கும் ஒருவரைப்  பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்பது நமக்குத்தான் தெரியும் . உண்மைதானே .


மூன்றாவது சிறப்புக் கதை. ரகுராமன் அவர்களின் ' மறு ஜென்மம் ' . மரணம் எப்படி இருக்கும் என்பதை உயிரோடு இருக்கும்போதே நம்மை அனுபவிக்க வைக்கிறார் ஆசிரியர் இந்தக் கதையில் .


நான்காவது  சிறப்புக் கதை . எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்களின் 'விரயங்கள் ' 

வேலைக்குச் செல்லும் பெற்றோர்  தம் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வைக்கக் கூடிய  பணிப்பெண்களை பற்றி எச்சரிக்கை செய்யும் இயல்பான கதை .


ஐந்தாவது சிறப்புக் கதை . எஸ்ஸார்சி அவர்களின் 'பிரம்ம முடிச்சு' . 'கடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை ' என்ற கண்ணதாசன் வரிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் கதை . 


ஆறாவது சிறப்புக் கதை . நித்யா அவர்களின் ' விளிம்பு ' . விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில்  ஒவ்வொரு நாளுமே ஏதாவது திருப்பம்தான். அதில் பெரும்பாலும் துன்பம் தான்.  


ஏழாவது சிறப்புக் கதை . துரை. அறிவழகன் அவர்களின் 'தோதகத்தி  . காரைக்குடி நகரத்துச் செட்டியார்கள் வாழ்க்கையில் அன்று முதல் இன்று வரை பயணம் செய்யும் அனுபவம் கொடுக்கும் கதை . 


எட்டாவது சிறப்புக் கதை . சுபாகர் அவர்களின் ' சிலுவைகள்  ' . நாயகன் சுமக்கும் சிலுவைகளின் தியாகம் தெரியாதவரால் அவன் ரத்தம் சிந்தும் நிலை . 


ஒன்பதாவது சிறப்புக் கதை . ஜெ. பாஸ்கரன்  அவர்களின் ' வடக்கத்தியான் ' . இளமையும் சூழ்நிலையும் சுற்றும் வலைகளில்  மாட்டிக் கொண்டு தவிப்போரில் வடக்கு யார். தெற்கு யார். எல்லாம் மனிதர்கள். 


பத்தாவது சிறப்புக் கதை. இந்திர  நீலன் சுரேஷ் அவர்களின் ' நிழற் கூத்து ' . தெருக்கூத்துக் கலைஞன் ஒருவனின் வாழ்க்கையில்    , நகரத் தெருவே அவன் கூத்துக் களமாகி அவனின் கண்ணீர் மழையில் முடிகிறது . 


பதினொன்றாவது சிறப்புக் கதை. ஆர் வத்சலா அவர்களின் ' ஒரு அம்மாவின் உண்மை ' . கதையில் வரும் அந்த அம்மாவிற்கு ' பொய்மையும் வாய்மை இடத்தே , புரை தீர்ந்த நன்மை பயக்கும் பொழுது  ' என்ற திருக்குறள் பிடித்திருக்கும் உண்மை , கதையின் நாயகிக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆகின்றன.


பன்னிரெண்டாவது சிறப்புக்   கதை . சாரதி அவர்களின் 'சுவாசம் ' . காபி  வாசமே சுவாசமாக இருந்த ஒரு அத்தையின் வாழ்க்கையின் இறந்த காலம் ஒரு இருண்ட காலம் . அதையும் தாண்டி அவள் குடும்பத்திற்கே வெளிச்சம் கொடுப்பது நிகழ் காலம். 


பதின்மூன்றாவது சிறப்புக் கதை. குட்டீஸ் பாபு அவர்களின் 'தவணை வியாபாரத்தில் அவள் ' . தவணை வியாபாரி ஒருவன் சிவப்பு விளக்குப் பகுதியில்  தடுமாறும் நேரம் எல்லாம் , அவனைக் காப்பாற்றுவது அவன் மனைவியின் நினைவு மட்டும் அல்ல, இன்னும் ஒரு ஏக்கம்தான் என்பதை எடுத்துச் சொல்லும் கதை . 


பதினான்காம் சிறப்புக்  கதை . அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ' ஒரு கதவு மூடப்பட்டால் ' . ஆம் இன்னொரு கதவு திறக்கிறது , அந்த உடற்பயிற்சி மோக  ராணுவ வீரரின் இதயக் கோளாறின் பின் , அவருக்குப் பிடித்த கதவுதான்,   அதுவும். 


பதினைந்தாம்  சிறப்புக் கதை. பஷீர் அவர்களின் '  மகனுடன் ஒரு நாள் ' . ஒரு தந்தையின் பிள்ளைப் பாசம் உருகி ஓடுகிறது கதையில் , ஆற்று நீரின் மீனாக . 


பதினாறாம் சிறப்புக் கதை  .லதா ரகுநாதன்  அவர்களின் ' செல்லமே .. ' ஐந்தறிவு உயிரிலும் , அன்பு ஆறாவது அறிவாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் கதை. 


பதினேழாம்  சிறப்புக் கதை. ச. ஆனந்தகுமார் அவர்களின் ' நிறம் மாறும் முகங்கள் ' .சில ரகசியங்கள் வெளிப்படும்போது முகமும்  மாறலாம். உயிரும் போகலாம். ' 


பதினெட்டாம் சிறப்புக் கதை. புலியூர் அனந்து என்ற புனைபெயரில் எழுதும் கிருபானந்தன்  அவர்களின் 'அவனைப் போய்க் கேட்டேன் பாரு ' . 'மாத்தி யோசிக்கும்' இந்த மாசிலாமணி கதையில் அறிவுச் சுவையோடு , நகைச்சுவையும் கலந்து வருகிறது .


பதினொன்பதாம் சிறப்புக்  கதை .ரேவதி பாலு  அவர்களின் ' அசட்டு மனிதர்கள் ' . கணவன் மனைவி உறவில்  எப்போதும்  மனைவியே விட்டுக் கொடுத்து  குடும்ப நன்மைக்காக விரிசலைப் பெரிதாக்க விரும்பாத அந்தப் பெண் 'அசடு ' என்று கணவனைச் சொல்லி விட்டு தன்னைச்  சமாதானப் படுத்திக் கொள்ளும் வார்த்தையில் ஒளிந்திருப்பது,   சிரிப்பா, அழுகையா . 


இருபதாவது சிறப்புக் கதை . ராஜாமணி ஹரிஹரன் அவர்களின் ' பொய்மையும் வாய்மை இடத்த .. ' . திரைகடல் ஓடித் திரவியம் தேடப் போனவர்களின் கண்ணீர்க் கதை. தெரிந்தபின் கதை ஆசிரியருக்கும் துபாயில் வேறு எங்கும் சுற்றத் தோன்றாதுதான் . 


இருபத்து ஒன்றாவது  கதை. அழகியசிங்கர் அவர்களின் 'சீதாலட்சுமி அடுக்ககம் ' . அடுக்ககத்தைப் பராமரிக்கும், அஸோஸியேஷன் நண்பருக்குச் சொல்லாமல் குடிவைத்தது ஒரு அகத்தின் உரிமையாளரின் குற்றம்தான். அதற்காக அங்கலாய்க்கும் நாயகனின் நிலைக்கு காரணம் வயதாகவும் இருக்கலாம் தான்.  


இருபத்து நான்கு கதைகளும் இருபத்து நான்கு விதமான நிகழ்ச்சிகள். நெகிழ்ச்சிகள்  . தொடர்ந்து படித்ததால் அந்த உணர்வுகள் மாறி மாறி வந்து  மனதை  அலைக்கழித்தன.கடைசியில் அழகியசிங்கரின் கதையைப் படித்ததும் ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது. எல்லாம் வயசுக் கோளாறு. எழுபது வயதான வயசுக் கோளாறு. அப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்ட முடிந்தது . 

ஆனாலும் கதைகள் காட்டிய காட்சிகள். அதில் தெரிந்த இன்பங்கள், துன்பங்கள், இளமைகள். முதுமைகள் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு இட்டுச் சென்று , இப்படியெல்லாம் இருக்கிறது வாழ்க்கை என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டு நம்மை இந்த உலகத்திற்கு இழுத்து வரும் போது,  நாம் வாழும் வாழ்க்கையின் உண்மைகள் புரிந்து நம்மை அமைதிப்  படுத்தத்தான் செய்கின்றன. 


அதற்கு இது போன்ற சிறுகதைகள் உதவுகின்றன. அந்த வகையில் இவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கும், பெரு  முயற்சியோடு  நூறு கதைகளுக்கும் மேல் படித்து இவற்றைத் தேர்ந்தெடுத்துத்  தொகுத்த அழகியசிங்கருக்கும் நன்றியும் வாழ்த்தும். வணக்கம் 


--------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு 

-----------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே.

ஒவ்வொரு முறையும் அழகியசிங்கர் வித்தியாசமான இலக்கியப் படைப்புகளை நாம் படித்து விமர்சனம் செய்ய வாய்ப்பளித்து நமது இலக்கிய வாசக அறிவை விரிவுபடுத்த முயற்சிக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி .


அந்த வகையில் அவர் இன்று எனக்கு அளித்துள்ள ஐசக் பேசில் எமரால்ட் அவர்களின் 'கப்பல் ‘1073 ' ஒரு 'அற்புத யதார்த்தக்' கதையாகத் தோன்றுகிறது .

யதார்த்தமும் அற்புதமும் இணைந்து அதன் எல்லைக் கோடுகள்

மறைந்து நம்மை ஒரு மாய உலகிற்கு இட்டுச் செல்லும் கதை. ஒரு பாதிரியாரின் வாழ்க்கைப் பயணத்தின் பக்கங்கள் சில இந்தக் கதையில் என்று எனக்குத் தோன்றுகிறது


ஒரு தனி மனித உணர்வின் பரிமாணங்களை விரித்து நமக்கு ஒரு ஆழமான அனுபவத்தைக் கொடுக்கும் கதை.


'கனவில் வரும் கப்பல் ஒன்று கரைக்கு வரும் என்று கடலுக்குச் சென்று கனவிலேயே காத்திருக்கும் ஒருவனின் கதை' .இந்த வரியைப் படிக்கும்போதே உங்களுக்கு இது கனவா, நினைவா என்ற எண்ணம் எழுகிறது அல்லவா. அந்த எண்ணம் கதை முடியும் வரை நமக்கு இருக்கும்.. ஏன், கதை முடிந்த பின்னும் நமக்கு இருக்கும். அந்த அனுபவத்தைக் கொடுத்ததில்தான் இந்த எழுத்தின் வெற்றி அமைந்திருக்கிறது .


இடையில் நடக்கும் அற்புத நிகழ்வுகள் எல்லாம் நம்மைக் குழப்புவதற்கு அல்ல, சில சிந்தனைகளை நமக்குள் தூண்டவே என்ற நம்பிக்கையுடன் நாம் படித்தால், நமக்கு சில கருத்துக்கள் தோன்றும். அவை எழுத்தாளரின் கருத்தோடு ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.


ஒரு ஹாரி பாட்டர் படம் பார்க்கும் போது, அந்த மாய உலகை ரசிக்கும்போது நமக்கு ஒரு இன்பம் கிடைப்பது போல் , இந்தக் கதையின் மாய யதார்த்த உலகிற்குள் புகுந்து வரும் போது , ஒரு மனிதனின் வாழ்வின் நிகழ்வுகளில் புகுந்து அவன் இன்ப துன்பங்களில் கலந்து வந்த ஒரு உணர்வு கிடைக்கலாம். அது சிலருக்கு இன்ப உணர்வாய் இருக்கலாம். சிலருக்குத் துன்ப உணர்வாய் இருக்கலாம்..


அதை ஏற்படுத்திய ஆசிரியரின் வார்த்தை ஜாலங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அதன் முழு உணர்வையையும் அனுபவிக்க, நீங்கள் கதை முழுவதும் படித்து நாயகனோடு சேர்ந்து அந்தக் கடலுக்குள் மீனின் வயிற்றுக்குள் சென்று அந்தக் கப்பல் 1073 ஐ கண்டடைய வேண்டும்.


முதலில் அந்த எண் ஏன்ஜெல் எண் 1073 . அதன் பொருள். ' உங்கள் எண்ணங்களை நம்புங்கள். அது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்' . இந்தப் பொருளை மனதில் போட்டுக்கொண்டு இந்தக் கதையைப் படித்தால் அந்த நாயகனின் கப்பல் எண்ணம் , நிறைவேறிய இந்தக் கதை புரியலாம். இடையில் நடக்கும் போராட்டங்களும் புரியலாம்.


அவரை ஏமாற்றிய ஒரு பூச்சியின் பழைய கதை ஆரம்பத்தில் .

'ஒருநாள் நான் பிரார்த்தனையில் இருந்தபோது அந்தப் பூச்சி அறைக்குள் செல்போனில் ஓர் இளஞ் சூரியனுடன் மெய்நிகர் சல்லாபத்தில் முனகுவது கேட்டது. கதவைத் திறந்தபோது நான் கண்ட காட்சி. ஐயோ, எப்படி சொல்வேன்? முழங்காலில் நின்று அந்நியப் பாஷைகளில் கைகளைத் தூக்கி சத்தமாக மீண்டும் சபித்தேன். கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே லீலைகளை தொடர்ந்தார்கள். உறைந்து நின்றேன். தூக்கம் இல்லை, கனவுகள் மட்டும் தோன்றின.'

அவரை ஏமாற்றிய அந்தப் பூச்சியை நம் போக்கில் நாம் புரிந்து கொள்ளலாம்.


இப்போது அவரது தனிமை வீட்டுக்குள் உள்ளே நுழைந்த ஆமணக்குச் செடியின் வார்த்தைகளில் அவருக்கு அமைதி கிடைக்கிறது


' நீங்கள் சபித்த ஜீவனுடன் வாழ்க்கை என்றாகி விட்டது. பூச்சிக்கு முக்கியத்துவம் தராமல் பிரார்த்தனையே கதி என்று கிடந்தால் முனகல் சத்தம் கேட்கத்தானே செய்யும். சரி, காலம் கடந்துவிட்டது. இப்படி தனிமைச் சிறையில் அகப்பட்டு சுயதண்டனை அளிப்பது சரியா? இனி யார் உங்களை மீட்பது'

'இதற்கெல்லாம் யார் காரணம் ? உங்கள் பக்கமும் தவறு உண்டு. உங்கள் மனநிலை எனக்கு புரியாமல் இல்லை. கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகும். நீங்கள் செய்த புண்ணியங்கள் மீட்சி தரும். உங்கள் கால்கள் சரியில்லை. சிறுத்துப் போயுள்ளது. உங்கள் எடையை சுமப்பதற்கான வலுவில்லை. ”


இந்த ஆமணக்குச் செடியின் சமாதான வார்த்தைகளில் அவர் மனம் அமைதி அடைகிறது. அந்த 1073 ஏக்கம் தொடர்கிறது .


'இப்போது அவர் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து நிரம்ப ஒரு பெரிய மீன் ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. நீரைத் தொட்டு நக்கிப் பார்த்தார். உப்புக் கரித்தது. மீன் பேசுகிறது “இதென்ன கொடுமை! என்னை மறந்து விட்டீர்களா? ம்ம்.. எனக்கும்தான் உங்களைப் போன்று வயதாகி விட்டது.”


அவரது பதில் . “இல்லை.. உன்னை எப்படி மறக்க முடியும்? சமீபத்தில் கூட நினைத்துப் பார்த்தேன். என் வாழ்வில் சொர்க்கமாய் உணர்ந்த மூன்று தினங்கள் உன் வயிற்றில் இருந்த நாட்கள்தான். அன்று வயிற்றில் அகப்படுவதற்கு சில காரணங்கள் இருந்தன. சரியாக நினைவில்லை, எனது பயணம் தடைப்பட்டதாக கூட உணர்ந்திருப்பேன். கடவுள் மீது கூட கோபப்பட்டேன். அது போகட்டும், இந்த சந்திப்பை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை” என்றார். '


தனி மனிதனாக அவர் பட்ட கஷ்டங்கள், தொடர்ந்து மகிழ்ச்சியாய் இருந்த சில நாட்களின் நினைவை அந்த மீன் கிளப்பி விடுகிறது . பஞ்ச தந்திரக் கதைகளின் பரீட்சயம் இருந்தால், இந்த மீனின் வரவும் நமக்கு மகிழ்ச்சியே அளிக்கும் .


அந்த மீனின் முதல் அறிமுகம் எப்போது. இதோ பதில் .

'முன்பு ஒருநாள் ஒரு கப்பலில் ஒரு தேசத்திற்காக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர் அவர். அதற்கான பயணக்கூலியை அந்தக் கப்பல் மாலுமிகள் பெற்றுக்கொண்டாலும் . இரண்டாம் நாள் பெரும் புயல் தாக்கியது. கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட கப்பல் உடைந்து எல்லாரும் கடலுக்குள் சென்றிருப்பார். . அது மிகவும் ஆபத்தான உயிர்க்கொல்லி மீன்கள் நிறைந்த இடம். கடல் சீற்றத்திற்கு காரணம் இவர்தான் என்று நம்பி இவரைக் கடலில் தூக்கிப்போட்ட அடுத்த நிமிடம் சீற்றம் தணிந்தது. '. அப்போது அவரை விழுங்கி கரையில் வந்து துப்பிய அதே கடல் மீன் தான் இது .


இப்போது அவரின் நோக்கம் நிறைவேற மறுபடியும் வந்திருக்கிறது .

'வீட்டுக்குள் நிரம்பிய கடல் நீருக்குள். நீந்திச்சென்று அவரை விழுங்கத் தொடங்கியது. உண்மையில் பெரிய மீன் தான். இன்னும் இரண்டு பெரிய மனிதர்களைக் கூட துணைக்கு விழுங்கலாம். பல வருடங்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளுடன் இரு ஆமணக்கு இலைகளும் நீரில் வெளியேறின.

கப்பலைத் தேடிச் செல்லும் பயணம் தொடங்கியது. கடந்த முறை இருந்தது போல் அல்ல. வயிற்றினுள் பெரும் நிசப்தம்.'


தொடர்கிறது கடலுக்குள் மீனின் வயிற்றுக்குள் அவரது பயணம். நமக்கும் பழைய பஞ்ச தந்திரக் கதை படிக்கும் திருப்தி .


'பெரிய விடுதலை. அசைவு மட்டும் இருந்தது. எப்போதாவது எதிரில் வரும் மீன்களால் நீரின் சலசலப்பு. இருட்டில் உணரும் அசைவு நிகழ்காலத்தை மட்டும் உணர செய்தது. சில நேரங்களில் நீரோட்டத்தையும். கடந்தமுறை அலைகளின் அழுத்தம் தெரிந்தது. இம்முறை இல்லை. கண்களை மூடுகையில் வெளிச்சம். திறந்தால் இருட்டு. மீண்டும் மூடினால் ஆழியின் கடற்பாசி. பச்சை அடர்ந்து வெளிச்சமாகி வெள்ளியாகி இருட்டானது.

மூன்று நாட்களுக்கு பின் கப்பல் வருவது தெரிந்தது. கப்பல் வரும் திசையில் மீனின் பயணம். '


அந்த அற்புதக் காட்சியில் அந்த நாயகனின் யதார்த்த ஆசை பூர்த்தி அடையப் போகிறது. 1073 அதோ. நம்பிக்கை நிறைவேறும் தருணம். இங்கே கப்பல் வடிவத்தில் .இது மாயமும் யதார்த்தமும் தனி மனித நோக்கில் சங்கமிக்கும் சந்தர்ப்பம்.


மீனின் உதவியால், இப்போது அந்தக் கப்பலுக்குள் அவர்.

' ஒருநாள் எங்கள் கப்பலில் ஒரு தேசத்திற்காக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டீர்கள் அல்லவா ' அந்தப் பழைய மாலுமியின் குரல் ஒலிக்கிறது .


'எங்களைக் காப்பாற்ற உங்கள் உயிரை பணையம் வைத்தீர்கள் அன்று . குற்றவுணர்வில் இருந்தோம்' மாலுமியின் குரலில் மன்னிப்பு வேண்டும் பாவம்.


அந்தக் கப்பலில் ஒலிக்கும் குரலில் இவரின் நோக்கம் புரிகிறது . ஏற்கனவே ஆரம்பத்தில் வந்த ஆமணக்குச் செடியின் வார்த்தைகளும், நமக்கு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது .


இது போன்ற கதைகளை முன்னிருந்து ஒரு முறையும் பின்னிருந்து ஒரு முறையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பால பாடம் நமக்கு ஞாபகம் இருக்கிறது . முன் வந்த அந்த வசனம் .

'உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பாலை நிலத்தில் குடிசைப் போட்டு மக்களை ஆன்மீக நெறிப்படுத்த கிளம்பிய நீங்களா இப்படி?' என்ற ஆமணக்குச் செடியின் பேச்சு .


ஆம் . அந்த நோக்கம்தான் ,அவரின் ஆன்மீக நோக்கம்தான். மக்களை ஆன்மிக நெறிப்படுத்தும் அந்த நோக்கம்தான். அதுதான் இந்தக் கப்பல் 1073 .


வாழ்வின் ஏமாற்றம் பூச்சி வடிவில் தாக்கி , துரோகம் மாலுமி வடிவில் தாக்கி, உதவி ஆமணக்கு வடிவிலும் , மீன் வடிவிலும் வந்து இதோ அவர் கனவில் கண்ட கப்பலை கனவிலேயே கண்டு அடைந்து விட்டார்.


கதையின் கடைசி வரிகள் .


'நித்திரை அறையின் நடுவே ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் உருகிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த நாற்காலியில்முன் அமர்ந்தார். மெழுகுவர்த்தியில் இருந்து அவர் பக்கமாக ஒரு பரிசுத்த வேதாகமம் திறந்திருந்தது. எதிர்பக்கம் தலை வெட்டப்பட்ட நிலையில் ஆமணக்குச் செடியை அரித்த பூச்சி. தலையில் கண்கள் திறந்திருந்தது. ஒரு சொட்டு கண்ணீர் பரிசுத்த வேதாகமப் பக்க எண்ணின் மீது விழுந்தது. ஆசிரியர் சொல்லவில்லை. அந்த எண் என்னவென்று


எனக்கும் தெரியாது . அதுவும் 1073 தானோ. அந்த எண்ணை ஒரு கணம் பார்த்தபின், மூடி வைத்தார். தலையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தார். மேகம் எங்கே போனது என சூரியன் தவித்துக்கொண்டிருந்தது.'


அங்கே அவர் அனைவரையும் மன்னித்துவிட்டார். இங்கே மழை ஓய்ந்து விட்டது. அவரது அறையில் அவரது கனவில் , நிம்மதியாய் அவரது 1073 ஐ அடைந்து விட்ட நிறைவில் அவர் தூங்குகிறார்.


ஒவ்வொரு கதைக்கும் படைத்தவர் பார்வை, படித்தவர் பார்வை என்று இரண்டு பார்வைகள் உண்டு என்று சொல்வார்கள். இது படித்த எனது பார்வை. மாயமும், யதார்த்தமும், ஒரு தனி மனித வாழ்வில் இரண்டறக் கலந்து துடிக்கும் காட்சிகளாய் ஆமணக்குச் செடியாக, பூச்சியாக, மீனாக, கடலாக, கரையாக, கப்பலாக , நாயகனாக கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டேன், அந்த நாயகனின் ஆன்மீக நோக்கம் நிறைவேறிய திருப்தியை உணர்ந்து . . வாய்ப்புக்கு நன்றி


-------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


சுதந்திரச் சுற்று - கவிதை

 சுதந்திரச் சுற்று  - கவிதை   

--------------


விட்டுப் போவதால் 

வருவது   சுதந்திரம்  


விடுவதும் வ்ருவதும்  

சுதந்திரச் சுற்று  


கவிதை எழுதிவிட்டால் 

கற்பனை  விடுதலை  


கண்ணீர் விட்டு விட்டால் 

சோகம்   விடுதலை 


பூக்கள் பூத்துவிட்டால் 

மொட்டுக்கள் விடுதலை 


பொழுது விடிந்துவிட்டால் 

சூரியன் விடுதலை 


விடுதலை கிடைத்ததால் 

சுதந்திரம் கிடைத்ததா 


சுதந்திரம் வந்தபின் 

விடுதலை கிடைத்ததா 


எழுதிய கவிதையையும் 

விட்ட கண்ணீரையும் 


பூத்த பூக்களையும் 

விடிந்த பொழுதையும் 


கேட்டுப் பார்த்தால் 

புரியலாம் கொஞ்சம் 


விட்டுப் போனதால் 

வந்ததா சுதந்திரம்


----------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


அம்மாச்சி- சிறுகதை

 அம்மாச்சி- சிறுகதை 

---------------

'இன்னிக்கு சனிக்கிழமை . வீட்டிலே எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும் . கண்மாயில் பல்லு மட்டும் விளக்கிட்டு வந்திரு . சரியா . சாயந்திரம் சனீஸ்வரனுக்கு எள்ளு விளக்குப் போடணும் ..உனக்கு ஏழரை நாட்டுச் சனி இருக்கு .அதுக்கு வேண்டிக்கிட்டு இருக்கேன்.ஞாபகம் இருக்குல்லே '


' அது என்ன ஏழரை நாடு ' ன்னு கேட்க ஆசைதான். ஆனா அம்மாச்சி விளக்கம் சொல்ல ஆரம்பிச்சா வாசல்லே கண்மாய்க்கு சேர்ந்து போக காத்திருக்கிற சேது ராஜ் கோபிச்சுக்கிருவாப்பிலே .அப்புறம் கேட்டுக்கலாம். ' என்று கிளம்பி விட்டேன் .


எண்ணெய் தேய்ச்சு குளிக்கிற அன்னிக்கு எனக்கு தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ச்சு சீவ மாட்டாங்க . மத்த நாள் எல்லாம் கால் பாட்டில் கொழும்பு தேங்காய் எண்ணெய் தலையிலே கொட்டி தேய்ச்சு எண்ணெய் வழிகிற மூஞ்சியோட தான் பள்ளிக்கூடம் போகணும்.


'பசங்க கேலி பண்ணுறாங்க அம்மாச்சி ' ன்னு சொன்னா 'அவங்க கெடக்கிறாங்க விடு , அப்பத்தான், முடி கொட்டாம , ரெம்ப நாள் கருப்பா இருக்கும் ' பாங்க.


' ராத்திரி தாத்தாவுக்கு கட்டில்லே மெத்தை விரிச்சுப் போட்டு , தலைக்கு, காலுக்கு தலையணை எல்லாம் சரியா வச்சுட்டியா. வா, கதை சொல்றேன் '


ராத்திரி சொல்லுற கதை எல்லாம் ராமாயணம் , மஹாபாரதம் தான்.

'இம்புட்டு கதை இருக்கா அம்மாச்சி ' என்றால் 'இன்னும் இருக்குடா . எங்க அப்பா சொன்னதில் பாதி தான் உனக்கு சொல்லி இருக்கேன் ' .


அம்மாச்சியோட அப்பா தேவகோட்டையில் இருந்து வந்துட்டா, 'சுந்தர காண்டம் ' புத்தகம் எடுத்துக் கொடுத்து ' இதை படிச்சுக் காட்டு அப்பாவுக்கு பிடிக்கும் ' என்று சொல்வார். அதன்படி செய்தால் , மறுநாள், சிறப்பு ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் உண்டு .


மத்தபடி பூஜை அறையில் பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை , தீபாவளி போன்ற விஷேங்களுக்குச் செய்கின்ற சிறப்புப் பலகாரங்கள் முதல் தட்டு எனக்குத்தான்.


புதன் கிழமை தவிர மத்த நாள் எல்லாம் ஏதாவது விரதம். சாயந்திரம் சேர்ந்து கோயில் . ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு , திங்கட்கிழமை சிவன் , செவ்வாய்க்கிழமை முருகன், வியாழக் கிழமை குரு பகவான் , வெள்ளிக்கிழமை அம்மன் , சனிக்கிழமை சனி பகவான்.


புதன்கிழமையா பார்த்துதான் என்னோட அப்பா, கிராமத்திலிலிருந்து உத்தரகோசமங்கை வருவார். அன்னிக்குத்தான், மாமியார் வீட்டிலே , மட்டன் சாப்பாடு கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும்.


அம்மாச்சி சேலையில் எப்போதும் ஏதாவது முடிச்சு இருக்கும். அதற்குள் ஒரு ரூபாய் காசு இருக்கும்


'எதுக்கு அம்மாச்சி இது ' என்று கேட்டால்

' சாமிக்கு வேண்டிக்கிட்டது ' என்ற பதிலோடு ஒவ்வொரு முறையும் சேர்ந்து வரும் காரணங்கள் வேறு வேறு.

'உனக்கு அம்மை போட்டதுக்கு இது- நாக நாதருக்கு '

'உனக்கு சிரங்கு வந்ததுக்கு இது - சடச்சி அம்மனுக்கு '

உனக்கு காய்ச்சல் வந்ததுக்கு இது - மங்கலநாதருக்கு '


'ஒரு ரூபாய் போதுமா அம்மாச்சி, சாமிக்கு ' என்று புரியாமல் கேட்டால் சிரித்துக் கொண்டே சொல்வார்.

'சாமி கிட்டே இல்லாததா , நம்ம நம்பிக்கைடா ' என்பார்.


'எனக்கு முடியலேன்னா, நான் தானே சாமிக்கிட்டே வேண்டிக்கணும் . நீங்க ஏன் அம்மாச்சி ' என்றால்


' நீ என் ரத்தம்டா' என்று அணைத்துக் கொள்வார் .


ஆரம்பப் பள்ளி முடித்து , உயர் நிலைப் பள்ளி வரும்போது , அம்மாச்சியை விட்டு நண்பர்களிடம் நெருக்கம் அதிகம் ஆனபோது , அம்மாச்சி , வீட்டு பூஜை அறையில் தான் பெரும்பாலான நேரம் .


ஒரு முறை சேதுராஜோடு சேர்ந்து வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் குறுக்குப்பாதையில் சைக்கிளில் சேதுக்கரை சென்று கடலில் ஆட்டம் போட்டுக் குளித்துவிட்டு திரும்பி வந்தபோது கிடைத்தது, முதல் அறை கன்னத்தில், தாத்தாவிடம் இருந்து .


அடுத்த அறை விழாமல் தடுத்து அணைத்த அம்மாச்சியின் சேலை வாசம் நீண்ட நாட்களுக்குப் பிறகு . கன்னத்தைத் தடவி விட்டு , 'கடலிலே பாறை எல்லாம் கிடக்குமே. , ஒழுங்கா தள்ளிக் குளிச்சியாடா ,சொல்லாம போனதில் நாங்க எப்படி தவிச்சுப் போயிட்டோம் தெரியுமா. அதான் தாத்தா அடிச்சுட்டாரு ' .அந்த அடியின் வலி பறந்து போனது.


உயர்நிலைப் பள்ளி முடித்து , தொடர்ந்து சிவகங்கை கல்லூரி ஹாஸ்டலில் படித்துக் கொண்டு இருக்கும்போது வந்தது தந்தி .


வீட்டில் நுழைந்து தூங்குவது போல் இருந்த அம்மாச்சியைக் கட்டிப் பிடித்து அழுதபோது நெருடியது , அம்மாச்சி இடுப்பில் ஒரு முடிச்சு. ஒரு ரூபாய் முடிச்சு. இதுவும் எனக்காகத்தானே அம்மாச்சி . எதற்காக. கல்லூரிப் படிப்புக்கா . எந்தக் கோயிலுக்கு, எந்தச் சாமிக்கு, எந்த அம்மனுக்கு அம்மாச்சி .


------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English

அதே கண்கள் - சிறுகதை

 

அதே கண்கள் - சிறுகதை

-----------------------

அவளின் செதுக்கிய மூக்கும் , செப்பு இதழ்களும் அவனைக் கவரவில்லை. , அந்தச் சிந்தனைக் கண்கள். அன்பும், அழகும் , அறிவும் ததும்பும் அந்தக் கண்களைப் பார்த்தபின் வேறு சிந்தனை இல்லாமல் மயங்கிக் கிடந்தான் மாலன். சுந்தர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.


'உன் நோக்கம் வேறு மாலன் , காதல் வாழ்க்கையையோ, மண வாழ்க்கையையோ நினைத்துப் பார்ப்பதே தவறு அல்லவா ' என்று நினைவு படுத்தினான்.


'உண்மைதான் சுந்தர் . உலகப் போர்க்களங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் உதவி செய்யப் போகும் ஐ நா சபை நிறுவனத்தின் உறுப்பினராய் இருக்கும் நமக்கு , உயிர் எப்போது போகும் என்று தெரியாதுதான். இன்னொரு பெண்ணின் வாழ்வை நிச்சயம் அலங்கோலமாக்க மாட்டேன். ஆனால் அவள் நினைவை விலக்க முடியவில்லையே ' என்று உருகினான்.


'எத்தனை பெண்களை நாம் அனுபவித்து இருக்கிறோம் . எத்தனை நாடுகளில் . அவர்களிடம் இல்லாத ஒன்றை இவளிடம் என்ன கண்டாய் . '


'தெரியலைடா . அந்தக் கண்கள், கொஞ்சம் செருகிய நிலையில் ,ஏதோ சொல்வது போல் , என்னிடம் மட்டும் ஏதோ சொல்வது போல் ஒரு உணர்வு '.


'உன்னை அந்த இடத்திற்குக் கூட்டிச் சென்று இருக்கக் கூடாது நான் '


'ஆம், ஏன் கூட்டிச் சென்றாய் அங்கே. எப்போது உயிர் போகும் என்று தெரியாத நிலையில் , நம் களியாட்டங்களை வழக்கம் போல் தொடர்ந்து இருக்கலாமே . நாம் விடுமுறையில் உள்ளூரில் இருக்கும் போதும் , நாம் செல்வது பப்புகளும் , பொது மகளிர் இடங்களும் தானே. கோயிலுக்கு ஏன் கூட்டிச் சென்றாய் '


'அது என்னமோ தெரியலே மாலன். நாம் இருவரும் அநாதை விடுதியில் படித்து இந்த அமைப்பில் சேரும் வரை , நம் எண்ணம் எல்லாம் 'இருக்கின்ற வரை வாழ்வை அனுபவிப்பதாய் தானே இருந்தது'. இப்போது நாற்பது வயதிற்கு மேல், கொஞ்சம், அந்தப் பக்கத்தையும் ' அமைதி, புனிதம் ' என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்களே ' அந்தப் பக்கத்தையும் பார்க்கலாம் என்று தோன்றியது. சும்மா ஒரு மாறுதலுக்கு. நீ இப்படி மாட்டிக் கொள்வாய் என்று தெரிந்திருந்தால் , நிச்சயம் அங்கே கூட்டிப் போய் இருக்க மாட்டேன் '


' அது என்னமோ தெரியலேடா. அனாதையாய் வளர்ந்த எனக்கு, அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த அமைதி , அம்மா என்று ஒருத்தி, கூட இருந்து வளர்த்திருந்தால் , இப்படித்தான் இருந்திருப்பாளோ என்று தோன்றியது சுந்தர். நாம் பார்த்த எத்தனையோ பெண்களைப் போன்ற நிறமும் உடல் வாகும் தான் அவளுக்கு. இருந்தாலும், அந்த முகம். கொஞ்சம் குறும்பும் , அன்பும் கலந்த அந்த முகத்தில் தெரிந்த ஒரு தெய்வீக அமைதி. என்னமோ செய்யுதுடா '


'ஒண்ணும் வேணாம், அவள் கூடவே இருக்கணும் . அது போதும் னு தோணுதேடா . இது என்னடா '


லேசாகச் சிரித்த சுந்தர் சொன்னான். 'அது வேற ஒண்ணும் இல்லைடா , நாம் அடிக்கடி கிண்டல் பண்ணி பேசிக்கிட்டு இருப்போமே , அந்தக் காதல் ங்கிற வியாதி . இதை எப்படி யாவது குணப்படுத்திடணும். இல்லேன்னா ரெம்ப கஷ்டம். ஒரு வேலை கூட உருப்படியாய்ப் பார்க்க முடியாது . நாளைக்கு நாம் போகப் போகிற இடம் தெரியும் இல்ல. '


'பாலஸ்தீனம். அந்தப் போர் முனையில் நாம் போய்ச் செய்யப் போகும் சேவையில் கவனம் வை. நம்மால் உயிர் பெறப் போகும் குழந்தைகள் , முதியவர் இவர்களை நினைத்துப் பார். , இங்கு மட்டும் அல்ல, இஸ்ரேல் சென்றும் நாம் காப்பாற்றிய உயிர்கள் எத்தனை . நாடுகளின் பகைமைக்குள் மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் அந்த மக்களின் சேவை தானே நம் குறிக்கோள். '


சுந்தரின் ஆவேசப் பேச்சில் ஐக்கியமான மாலனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதை உணர முடிந்தது. அடுத்த சில நாட்களில் பாலஸ்தீனத்தில், ஒரு ஆஸ்பத்திரியில் மாட்டிக் கொண்டு தவித்த , பலரைக் காப்பாற்றி , எல்லை வரை எடுத்துச் சென்றபோதுதான் அது நிகழ்ந்தது ,


ஐ நா சபையின் வாகனத்தில் ஏற்றி விடும் போது அங்கே வந்து விழுந்த குண்டு தெறித்த சிதறல்களில் பலத்த காயத்தோடு அரை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த அவனை, ஸ்ட்ரெச்சரில் ஏற்றி எடுத்துச் செல்லும் , மற்றுமொரு பிரிவு ,செஞ்சிலுவைச் சங்கப் 'பெண்ணின் கண்கள் ' அதே கண்கள் ' . 'அம்மா' என்றபடி மயங்கினான் மாலன்.


----------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

-----------------------------------------------------

நன்றி அழகியசிங்கர் .வணக்கம் நண்பர்களே  பிரபல கேரள எழுத்தாளர் பால் ஜக்கரியா அவர்களின் ' செய்தித்தாள் ' சிறுகதை சொல்லும் உளவியல்  செய்திகள் வித்தியாசமானவை .

பிச்சைக்காரர்கள் வாழ்க்கை பற்றிய வித்தியாசமான கோணம். மற்றொரு ஆணுடன் மனைவிக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டு கொண்ட கணவன் ஒருவன் வீட்டை விட்டு வேறு ஒரு ஊர் வந்து அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு செய்தித்தாள் வாசித்து மரணம், திருமணம் பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டு பொழுதைக் கழித்து வருகிறான். 


சிறுகதையின் ஆரம்பமே அட்டகாசம். எத்தனை விதமான பிச்சைக்காரர்கள் என்று எழுத்தாளர் வருணிக்கும் விதத்தில் அத்தனை பிச்சைக்காரர்களும் நம் கண் முன் வந்து கதைக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். 


வயதானவர்களும், மத்திய வயதினரும், இளைஞர்களும் இருந்தனர். குண்டானவர்களும், ஒல்லியானவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் உள்ளவர்களும், நிறமுள்ளவர்களும் இருந்தனர். குள்ளமானவர்களும் நடுத்தர உயர மானவர்களும் இருந்தனர்.. சிலர் வேட்டியும் துண்டும், சிலர் சட்டையும் அணிந்திருந்தனர். செருப்பு போட்டவர்கள் சிலர் இருந்தனர். நாலைந்து பேர் பீடி புகைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பெண்கள் யாரும் இருக்கவில்லை. எல்லோருடைய முகங்களும் மகிழ்ச்சி இழந்திருந்தன. வாழ்க்கை மீதிருந்த வெறுப்பு எல்லோருடைய முகங்களிலும் பிரதிபலித்தது.


இப்பொழுது நாயகன் அவர்களுடன் அறிமுகம் ஆன விதம் பற்றிய விபரம் .

'சந்திரன் என்ற பெயருடைய அவன் கடைத் திண்ணையில் உறங்குவதும், பத்திரப்படுத்தி வைத்திருந்த பணத்திலிருந்து சிறிது சிறிதாக செலவு செய்து சாப்பிட்டுக் கொள்வதும் மீனச்சல் ஆற்றில் குளித்து, துவைப்பதுமாக காலத்தைக் கழித்தான். அப்படித்தான் பிச்சைக் காரர்களின் குழுவோடு பழக்கமானதும், அவர்களுக்குப் பத்திரிகை வாசிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டதும்..


கடைத் திண்ணையில் அமர்ந்து ஒரு பழைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த சந்திரனை அவர்கள் அணுகி தங்களின் விருப்பத்தைச் சொன்னவுடன்தான் அவன் அவர்களின் செய்தி வாசிப்பவன் ஆனான். அவனை ஒரு பிச்சைக்காரனாகத் தான் நினைத் திருந்தனர். ஆனால் அவனுக்கும் தங்களுக்குமிடையே ஒரு அடிப்படை வித்தியாசம் இருந்ததை அவர்கள் அறியவில்லை பர்சும் அதில் கொஞ்சம் பணமும்.'


படிப்படியாக நம்மை கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார். இதன் பின் வரும் விபரங்களில் அந்தப் பிச்சைக்காரர்களின் உளவியலும் அந்த நாயகனின்  உளவியலும் உரசிக் கிடக்கின்றன. 


அந்தச் செய்தித்தாள் வாங்கும் செலவை அந்தப் பிச்சைக்காரர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவனும் அதில் வரும் மணம் , மரணம் இடங்களில் எங்கு பிச்சை அதிகம் கிடைக்கும் என்ற விபரங்களை அவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு உதவி செய்கிறான். தன்னிடம் இருக்கும் பணத்தைச் சிக்கனமாக ஒரு வேளை உணவுக்கு மட்டும் செலவு செய்து வரும் அவனுக்கு அவ்வப்போது , தானும் சில நாட்களில் அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவனாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற எண்ணமும் அடிக்கடி வருகிறது . 


'அவன் வீட்டை விட்டு வெளியேறிய நாலாவது வாரத்தில் பிச்சைக்காரக் கும்பலுக்காக பத்திரிகை படிக்கும்போது, ஒரு விளம்பரத் தில் அவனுடைய கண்கள் நிலைத்தன. அது அவனுடைய மனைவி யின் விளம்பரம், ‘சந்திரண்ணா மன்னிடுச்சிடுங்க. திரும்பி வாங்க.நானும் ரமேஷும் மல்லிகாவும் காத்திருக்கோம்’ உயரமான ஓரிடத்தி லிருந்து கீழே வீழ்வது போன்ற ஒரு பயத்தை அவன் உணர்ந்தான்; மூச்சு முட்டியது. ஒரு மாய உலகத்தைப் பார்ப்பது போல அந்த விளம்பரத்தை உற்றுப் பார்த்தான். அவன் கண்களில் நீர் நிரம்பியது. பட்டெனக் கண்ணீரைத் துடைத்தபடி வாசிப்பைத் தொடர்ந்தான்.'


இருந்தாலும் வீட்டுக்குப் போக விருப்பம் இல்லை அவனுக்கு . அந்த இடத்திற்கு வந்தவுடன் பார்த்த குழந்தை ஏசுவின் சிலை ஏற்படுத்திய பாச உணர்வையும் கட்டுப்படுத்திக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இருக்கிறான் அவன். அவனுக்குள்  நிகழும்  மனப் போராட்டத்தை இங்கே விவரிக்கிறார் ஆசிரியர். மனைவியின் துரோகத்திற்கும்,  மகன் மகளின்  பாசத்திற்கும் இடையே கிடந்து தவிக்கும் அவனுக்கு அந்தப் பிச்சைக்காரர்கள் தான் ஒரு வடிகால். 


அந்தப் பிச்சைக்காரர்களின் மனநிலை பற்றி ஆசிரியர் விவரிக்கும் விபரங்களில் வாழ்க்கை மேல் அவர்களுக்கு இருக்கும் வினோதமான ஆர்வங்கள் தெரிய வருகின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு . 


ஒரு குழந்தையின் மாணத்தைப் பற்றி அவர்கள் அதிக செய்திகளை அறிய விரும்புவர். குடும்பத்தின் ஒட்டுமொத்தத் தற்கொலை, சாலை விபத்தில் ஒரே குடும்பத்தினரின் மரணம் என்று இப்படிப்பட்ட துயரங்களைப் பற்றி அறிவதற்கு அவர்கள் மிக விருப்பத்தோடு இருந்தனர். சில நேரம் ஒருவன், ‘காசும், பணமும், காரும் எல்லாம் இருந்தென்ன பயன்? ஒரு நிமிசத்தில் எல்லாம் போயிடுச்சே?’ என்பான். 


ஒருநாள் ஒரு  திருமண  விளம்பரத்தைப் பார்த்த ஒருவன் சிறிது நேரத்திற்குப் பின் தாழ்ந்த குரலில் ‘அது என் மகள்’ என்றான். மற்ற பிச்சைக்காரர்கள் பரிகாசத் தோடு அவனைப் பார்த்து சிரித்தார்கள். யாராலும் நம்ப முடியாத பொய்யைச் சொன்னதற்கு அவனை அனுதாபத்தோடு பார்த்தனர். ஆனால் அவன் பொய் சொன்னதாகச் சந்திரனுக்குத் தோன்றவில்லை.


தன் குழந்தைகள் பள்ளிக்குப் போகும் போது ஒளிந்து நின்று பார்த்ததைப் பற்றிய ஞாபகம் வந்தது சந்திரனுக்கு. அவன் துயரத்தோடு அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட பிச்சைக் காரனைப் பார்த்தான். அவன் தன் சிந்தனையில் முழுகி தொலைவில் பார்வை பதித்து மௌனமாக இருந்தான்.


இப்படி அவர்களின் உணர்வுகளுக்குள் தன்னையும் பொருத்திக் கொண்டு தவிக்கும் அவனுக்கு ஒருநாள் ஒரு மகிழ்ச்சிச் செய்தி. மனைவியின் காதலன் இறந்து போனது பற்றிய செய்தி , செய்தித்தாளில் . 

உடனே வீட்டுக்குத் திரும்ப முடிவு எடுக்கிறான். பிச்சைக்காரர்கள் தடுக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் 


 ‘அப்ப நாங்க என்னாகறது?’ என்றான் ஒருவன். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் தூரத்திலும் அவர்கள் அவனையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. ‘என்னால் போகாமல் இருக்க முடியாது. என் மனைவி மன்னிப்பு கேட்ட ஒரு விளம்பரம் முன்பே வந்திருந்தது’ என்றான் சந்திரன். ‘எங்களோட பிரச்சினை யெல்லாம் தீர்ந்து கொண்டே இருந்தது’ ஒரு பிச்சைக்காரன் ஆதங்கத்தோடு சொன்னான்.


‘என்னால் போகாமல் இருக்க முடியாது’ திரும்பவும் சொன்னான். ‘எங்களோட பத்திரிகையைப் படிக்காமலிருந்தா இவன் என்ன செஞ்சிருப்பான்?’ ஒரு பிச்சைக்காரன் முணுமுணுத்தான். சந்திரன் செய்தித்தாளைக் கையிலெடுத்து மீண்டும் தன் மனைவியின் காதலனின் மரண அறிவிப்பைப் பார்த்தான். 

பின்னர் முகத்தைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றான். சந்திரன் கீழே வைத்த செய்தித்தாளை ஒரு பிச்சைக்காரன் எடுத்துப் பரிசோதித்தான். ஒன்றும் புரியாமல் அவன் அதைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான். ‘அப்படீன்னா நாளைக்கி பேப்பர் வாங்க வேண்டாமா?’ என்றான் ஒருவன். ‘வாங்கு நான் படிக்கிறேன்’ என்றான் இன்னொருவன். மற்றவர்கள் அவனைத் துச்சமாகப் பார்த்தார்கள். அவன் ஒரு மடையன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ‘ஏங்க, நாங்க சொல்றதக் கேளுங்க. எங்களின் வருமானத்தின் நான்கில் ஒரு பகுதியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்களால் நாங்கள் நிறைய பலனடைந்தோம். இருவர் ஒரே குரலில் சொன்னார்கள்.


ஒருவன் அவனை தன் விரலால் தொட்டபடி, ‘எல்லோருக்கும் தானே மனைவியும் குழந்தையும் இருக்காங்க. உங்களுக்கு மட்டு மென்ன ரொம்ப ஸ்பெஷல்? நீங்க ஓடிப் போய் என்ன செய்யப் போறீங்க?’ சந்திரன் முன்னால் நடந்தான். பின்னால் திரும்பி கை அசைத்தபடியே, ‘பிறகு பார்க்கலாம்’ என்றான். முதலில் கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் அவனைப் பார்த்து முணுமுணுத்தனர். ‘என்ன பார்க்கலாம்? வெட்கமில்லாதவன், திருடன், எப்பவும் பாக்க வேண்டாம்.’ மற்றொருவன் ‘காதலன் இறந்து போனதால் மனைவி இவனை ஏற்றுக் கொள்வாள் என்பதற்கு என்ன உத்திரவாதமிருக்கு ? எல்லாம் வெறும் ஆசை’ என்றான்.


சந்திரனின் பயணத்தை அவர்கள் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். ‘இவன் போறதுக்குள்ள அந்தப் பொம்பள தற்கொலை செஞ்சுக்கிட்டிருப்பா. இவன் சும்மா போறான்’ ஒரு பிச்சைக்காரன் சொன்னான். ஓரிருவர் தலையாட்டினர். ‘ஒரு வேளை அவன் அவளைக் கொல்லத் தான் போவான். அந்தக் காதலன்தான் செத்தாச்சில்ல’ என்றான் ஒருவன். வேறொருவன் ‘எதுவும் சரிப்பட்டு வரலன்னா அவன் இங்கேயே திரும்பி வருவான்’ என்றான்.


அவன் திரும்பவில்லை. பஸ்ஸில் ஏறி செல்கிறான்.  அவர்கள் எரிச்சலோடு நிற்கிறார்கள்.  அங்கே   குழந்தை யேசுவின் சிலையைச் சுற்றி மின்சார ஒளி பரவியது. அவர்களில் ஒருவன் சங்கடத்தோடு தலை யாட்டியபடியே, ‘எல்லாம் வெறும் ஆசை’ என்றான். முடிகிறது கதை. 


கதையைப் படிக்கும் நமக்கு அவனின் பாசமும் ,மனைவியின் காதலன் மேல் உள்ள கோபமும் புரிகிறது. மனைவியின் காதலன் இறக்கக்  காத்திருந்த அந்தக் கணவனின்  இயலாமையும் புரிகிறது.  அந்தப் பிச்சைக்காரர்களின் மன உணர்வுகளும் புரிகிறது  . அவர்களும் ஏதோ ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டு பிச்சைக்காரர்களாய் ஆனவர்கள் தான் என்று தோன்றுகிறது. இனி தெருவில் பார்க்கும் பிச்சைக்காரர்களை நாம் அலட்சியப்படுத்த  மாட்டோம். கொஞ்சம் ஆராயத் தோணலாம். 


வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த ஒரு குழப்பமான அனுபவம் தான். செய்தித்தாளில் வரும் செய்திகள் போல .அதில் தவிப்பவர்களும்  உண்டு. தாண்டியவர்களும் உண்டு என்ற எண்ணத்தை  வாசகர்களுக்கு உண்டாக்கும்  சிறந்த உளவியல் கதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள். அழகியசிங்கருக்கு நன்றிகள் .வணக்கம். 


- நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 







 


அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு  --------------------  நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .  ஒரு   நாள் ...