செவ்வாய், 8 அக்டோபர், 2024

திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

-----------------------------

‘நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .

‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.’

என்ற பெண்கள் விடுதலைக் கும்மி ,  பாரதியின் பாட்டுக்குக் காரணத்தைக் காட்டுகின்ற கதை , பழம் பெரும் எழுத்தாளர் தி அவர்களின் சிறுகதை ' வாசலிலே சிங்கம் '

 

இந்தக் கதையை முழுவதும் அனுபவிக்க வேண்டுமானால் ஆசிரியரின்  வார்த்தைகளை அங்கங்கே அப்படியே சொன்னால் தான் நன்றாக இருக்கும் . அப்படியே சொல்ல முயற்சி செய்கிறேன்.

நாயகன் சுந்தரத்தின் அறிமுகமே அட்டகாசம்.  அவன் குண நலன்களை இப்படிச் சொல்கிறார்.

 

சுந்தரம் ஒரு மேதை. மேதைகளெல்லாம் விசித்திர மாகத்தான் நடப்பார்கள். சுந்தரமும் அப்படியே நடந்து கொண்டான்.

இவனுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் இப்படி ஒரு மேதை தங்கள் குலத்தில் தோன்றப் போகிறான் என்று எப்படித்தான் அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை; ஒவ்வொரு வரும் பெரும் பாடுபட்டு ஏராளமான சொத்தை இவன் அடையும்படி சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார்கள்..

இவனுக்குக் கவிதை பிடிக்கும்; சங்கீதம் பிடிக்காது. இலக்கியம் பிடிக்கும்; கதை பிடிக்காது. நாடகம் பிடிக்கும்; நடனம் பிடிக்காது. வேதாந்தம் பிடிக்கும்; தெய்வம் பிடிக்காது. சுதந்தரம் பிடிக்கும்; சுதேசியைப் பிடிக்காது. பாலைப் பிடிக்கும்; பசுவைப் பிடிக்காது.

 

சுந்தரம் படித்துப் பட்டம் பெற்றான்; அப்பா போய் விட்டார். கல்யாணம் செய்துகொண்டான்; அம்மா போய்விட்டாள்.
நகரத்தில் பெரியபங்களாவாக ஒன்றைச் சுந்தரம் வாங்கினான். அதில் மனைவியோடு சுகவாசம் செய்யத் தொடங்கினான்.
சுந்தரத்தின் மனைவி நல்ல அழகி. நாகரிகப் பெண்.அவள் வந்து புருஷனுடன் குடித்தனம் நடத்தத் தொடங்கிய சில காலம் வரைக்கும் இருவருக்கும் பலத்த போராட்டம் நடைபெற்றது.
.சுந்தரத்துக்குப் புராணமெல்லாம் வெறும் கட்டுக் கதை என்று நிச்சயமான தீர்மானம் உண்டு. என்றாலும் நளாயினியையும் சாவித்திரியையும் போன்றவளாகத் தன் மனைவி இருக்க வேண்டும் என்ற அளவற்ற ஆசையும் உண்டு. இவன் தனக்குத் தலைவலி வந்ததுபோலப் பாசாங்கு செய்வான். அவள் உடனே இவனுக்குச் சைத் தியோபசாரம் செய்யத் தொடங்க வேண்டும்.  நம்ம நண்பர்கள் முதலில் கதைகள் சொல்லும் போது சொன்னது போல, இந்தக் கதையிலும் சைத்தியோபசாரம்  என்ற பழங்கால வார்த்தைப் பிரயோகம் . இதற்கு என்ன அர்த்தம் என்று தமிழ் அகராதியில் தேடித் பார்த்த போது கிடைத்த மொழிபெயர்ப்பு - தாபந்தீர உபசரிக்கை . இதுக்கு சைத்தியோபசாரம் என்ற வார்த்தையே தேவலை என்று தோன்றியது .

உபச்சாரம் என்று புரிந்து கொள்ளலாம். இவன் தனக்குத் தலைவலி வந்ததுபோலப் பாசாங்கு செய்வான். அவள் உடனே இவனுக்கு உபச்சாரம் செய்யத் தொடங்க வேண்டும்.  இல்லாவிட் டால், ‘இவளுக்கு என்மீது காதல் இல்லை;’ என்று அநு மானம் செய்துகொள்வான். பிறகு ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. சிறிது காலம் வரைக்கும் மனைவிக்கு இதெல்லாம் என்ன வென்றே புரியவில்லை; தான் இன்னது செய்வதென்றும் புரியவில்லை. அப்புறம் அவளுக்கு இந்த மேதையின் வழிகள் தெள்ளத் தெளியப் புலப்பட்டுவிட்டன. இந்த வழிகளிலே நடக்க ஆரம்பித்தாள்.


தனக்குக் காய்ச்சல் வந்ததுபோல இவன் பாசாங்கு செய்தால், அவள் பெருங் கவலை பிடித்தது போலப் பாவனை செய்து, “ஐயோ! இனி நான் என்ன செய்வேன்என்று (ஒரு துளிக் கண்ணீரும் விடாமல்தான்) கதறி, தன் காதலை இவனுக்கு நிரூபணம் செய்வாள். இவன் இரண்டு நாள் அயலூருக்குப் போய்விட்டு வந்தால், அவள் (இவன் திரும்பிவருகிற சம யம் பார்த்து), தலையைப் பரட்டையாகப் பறக்கவிட்டுக் கொண்டு கை, கழுத்திலுள்ள விசேஷ நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிடுவாள். மொத்தத்தில் தான் இவனுக்காகவே உயிர் வாழ்வதுபோலவும், இவனுடன் உடன் கட்டையேறும் அரிய சந்தர்ப்பத்துக்காகச் சதாகாலமும் ஆவலோடு காத்திருப்பதுபோலவுமே அவள் நடந்து கொண்டாள். இப்போது சுந்தரத்துக்கு ஓரளவு திருப்தி உண்டாயிற்று. ஆயினும் ஆரம்பம் முதலே இவன் ஏற் படுத்தியிருந்த கட்டுக் காவல்கள் துளியும் தளரவில்லை.



வீட்டிலே தன்னைத் தவிர வேறு ஆண் வாசனையே இருக்கக் கூடாது என்பது இவனுடைய திடமான அபிப் பிராயம். சமையலுக்குப் பெண், குற்றேவலுக்குப் பெண், தோட்ட வேலைக்குப் பெண் – இப்படி அத்தனை வேலைக் கும் பெண்களையே அமர்த்தியிருந்தான்.

.சுந்தரம் வெளியே போகும்போதெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் இழுத் துப் பூட்டிக்கொண்டு போய்விடுவான். அப்போ உள்ளே இருந்த வேலைக்காரிகளெல்லாம் இவன் திரும்பி வரும்போதும் உள்ளேயே ஆஜர் கொடுக்க வேண்டும்..

இவ்வளவு களேபரமாகச் சுந்தரம் இல்லறம் நடத்தியும். மொத்தம் பத்துப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால், மூன்றே மூன்றுதான் தக்கின; முதலில் பிறந்த பெண்ணும் மூன்றாவது ஐந்தாவது பிறந்த பையன்களுந்தான்

பெண்ணுக்குக் கல்யாணங்கூட ஆகிவிட்டது. இன்னமும் சுந்தரத்தின் வீட்டில் பழைய கெடுபிடிகளுக்குக் குறைவில்லை

அவன் வெளியே போய்விட்டால், வீடு ஒரேயடியாய் அழுது வடியும் என்பது சுந்தரத்தின் கற்பனை. உண்மையில் அப்படி இல்லை. அப்போதுதான் வீட்டிலே பெருங் குதூகலம் நிறைந்திருக்கும். பெண் நாட்டியம் ஆடுவாள். பிள்ளைகள் பாட்டுப் பாடுவார்கள். அம்மா பட்சணம் பண்ணுவாள். வேலைக்காரிகளெல்லாங்கூட ஒரே உற்சாகமாயிருப்பார்கள்..

ஐயாவின் தலை தெருக்கோடியில் தெரிந்தால், உடனே வீடு ‘சத்தோ சத்து என்று அடங்கிவிடும். இங்கும் ‘சத்தோ சத்து  என்று ஒரு கலைச் சொல். ' கப் சிப் ' என்று புரிந்து கொள்ளலாம். பிள்ளைகள் முணுமுணுத்த குரலில் பாடம் படிப்பார்கள். பெண் பிடிலை வைத்துக் கொண்டு ‘கிர் புர் என்று இழுப்பாள். வேலைக்காரிகள் மும்முரமாக வேலை செய்வார்கள். சிவகாமி கூந்தலைக் கலைத்துப் பரட்டை செய்துகொண்டு, அடுப்பங்கரை மூலை ஒன்றில் படுத்துவிடுவாள். வாசற்கதவு, ஜன்னல் கதவுகள் எல்லாம். ‘பட படவென்று சாத்தியாகிவிடும். இந்த நிலையில் வீட்டை வந்து பார்த்தால் சுந்தரத்துக்குப் பரம திருப்தி.

அந்தக் கால ஆணாதிக்கத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். அதை அந்தக் காலப் பெண்கள் எதிர் கொண்ட விதத்தையும் நகைச்சுவையும் கிண்டலும் கலந்து வெளிப்படுத்துகிறார். இப்படி எதிர்மறையாகவே  போய்க் கொண்டிருக்கும் கதையை  நேர்மறை யாக  முடிக்க , நாயகனின் மனதை மாற்ற , ஒரு புதிய கதாபாத்திரத்தைக் கொண்டு     வருகிறார். அது ஒரு சிங்கம். கதையின் தலைப்பு ' வாசலிலே சிங்கம்    '

 

சுந்தரமும் அவன் மருமகனும் வெளியூர் போயிருக்கும் போது வீட்டு வாசலில் ஒரு சிங்கம் படுத்திருப்பதை இவன் மனைவி மற்றும்  வீட்டார் பார்த்து போலீஸுக்குப் போன் செய்ய , அவர்கள் வந்து பார்க்க , வீடு வழக்கம் போல் வெளியே பூட்டி இருக்க , அவர்கள் கேட்டை உடைத்து உள்ளே வருகிறார்கள்

இவர்களுடைய அரவம் கேட்ட சிங்கம் விழித்தது; எழுந்தது; ஒய்யாரமாக நின்றது; பார்த்தது; ‘ லொள் லொள்என்று குரைத்தது. கர் ஜிக்கவில்லை; குரைக்கத் தான் தொடங்கியது.


சிங்கம் குரைப்பை நிறுத்தாமல் அப்படியே ஓட்டம் பிடித்தது. அப்போது அதன் பிடரி மயிர், ஒரு ரோஜாப் புதரில் மாட்டிக்கொண்டு அங்கேயே விழுந்து விட்டது.. இது உண்மையிலே சிங்கம் அல்ல : சாயம் பூசிய நாய்! அந்தப் பிடரி மயிரை எடுத்துப் பார்த்தபோது, அது வெறும் சணல் குஞ்சமாக இருந்தது!
தாம் வேட்டையாட வந்த சிங்கம் கடைசியில் ஒரு சாதாரண நாயாகப் போனதில் ஸப் இன்ஸ்பெக்டருக்கு ஆத்திரமும் அவமானமும் ஒருங்கே மூண்டன.


வெகு கம்பீரமாகப் பங்களாவின் வாசற் கதவை வந்து தட்டினார். அம்மா குடுகுடு என்று சமையலறைக்கு ஓடிவிட்டாள். மாடியிலிருந்து குழந்தைகளும் வேலைக்காரிகளும் கீழே இறங்கி ஓடிவந்தார்கள். சமையல்காரி கதவைத் திறந்தாள்.


ஸப் இன்ஸ்பெக்டர் கேள்விமேல் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
சமையல்காரி கொஞ்சம் கெட்டிக்காரி. அவள் இன்ஸ் பெக்டரிடம் ஐயாவின் போக்கையும் அம்மாவின் நிலைமையையும் தளுக்காகவும் விவரமாகவும் அவரிடம் எடுத்துச் சொன் னாள். இந்த வீட்டில் உள்ள எவரும் நாய்க்கு இந்தச் சிங்க வேஷம் கட்டிவிடவில்லை என்பதையும் அவருக்குப் பிரமாண பூர்வமாகச் சொல்லி அவரை நம்பச் செய்தாள்.பிறகு ஸப் இன்ஸ்பெக்டர், “பாவம்! இப்படியும் ஒரு மனிதர் உண்டா?” என்று அங்கலாய்த்துவிட்டுத் தமது படையை அழைத்துக்கொண்டு அகன்றார்.


மறுநாள் காலையில் சுந்தரம் வந்து சேர்ந்தான்... விஷயம் அறிந்து கொண்ட மருமகன் விஷயத்தைப் பக்குவமாகச் சுந்தரத் திடம் சொன்னார்.


இதைக் கேட்டதும் அவன் என்ன அட்டகாசம் செய்வானோ என்று வீட்டிலுள்ள எல்லாரும் நடுங்கிக்கொண் டிருந்தார்கள். அதற்கு நேர்மாறாக, அவன் பரமசாந்தத்தோடுசிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். கோபம், எரிச்சல், வெட்கம், வேதனை முதலிய பல உணர்ச்சிகள், அவன் மனக்கடலிலே திரைத்தெழுந்து அதிலேயே அடங்கிவிட்டன. அன்று முதல் சில நாள் வரைக்கும் அவனுக்குத் தன்னைப் பார்த்து முழு உலகமுமே பரிகசிப்பது போல் ஓர் உணர்ச்சி உண் டாயிற்று.

அவனை அறியாமலே அவனுடைய கெடுபிடிகளெல்லாம் தளர்ந்தன. கடைசியாக இப்போது மனைவி எப்படி ஆட்டிவைப்பாளோ அப்படியே ஆடும் சூத்திரப்பொம்மையாக அவன் மாறிவிட்டான். அதற்கு இந்தச் சம்பவமே காரணம். இதை நம்மால் நம்பமுடி யாமல் இருக்கலாம். ஆனால், சில சமயம் மிக அற்பமான ஒரு நிகழ்ச்சிநாம் எதிர்பாராதஎதிர்பார்க்கவே முடி யாத-மகத்தான பலனைத் தந்துவிடுகிறது. அது இந்தப் பிரபஞ்ச விந்தைகளுள் ஒன்று.


இதெல்லாம் சரி. அன்று அந்த நாய் எப்படிச் சிங்க வேஷம் போட்டுக்கொண்டு வந்தது?” என்றுநண்பர்கள் கேட்கலாம். ஸர்க்கஸ் சிங்கம் தப்பியோடியதை கேள்விப்பட்ட எவனோ ஒரு விஷமக்காரன் (செய்த வேலையாக இருக்கலாம். இல்லாவிட்டால் நாய் தானாகவா வேஷம் கட்டிக்கொண்டு வந்திருக்கப்போகிறது?

 

என்று முடிக்கிறார்.

 

மொத்தத்தில் அந்தக் காலச் சமுதாய நிகழ்வுகளை , பெண்களின் நிலையை கதையாய் படைத்து முடிவையும் நாயகன் திருந்துவதாகக் காட்டி முடிக்கிறார்.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை. நன்றி. வணக்கம்

 

 ----------------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


இரக்கம் - கவிதை

 இரக்கம் - கவிதை 

------------------

ஓரக் குடை வழி

ஒழுகும் மழைநீரில்


பேண்டு நனைந்திட

பிழைத்த சட்டையோடு


காற்றில் பறக்காமல்

குடையை இறுக்கியபடி


ஓரத்தில் நிற்போர்க்கு

இரக்கப் பார்வையோடு


விரைந்து நடக்கையில்

விரல் ஒன்று நீளும்


குடைக்குள் இடம் கேட்கும்

குறியீட்டை ஒதுக்கி விட்டு


விரையும் வேகத்தில்

கரையும் இரக்கம்


--------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English  


கொலு பொம்மை - கவிதை

 கொலு பொம்மை - கவிதை 

———

நிற்கும் பொம்மைகளிடம்

கதைகள் இருக்கின்றன


படுக்க வைக்கப் படும்போது

பகிர்ந்து கொள்ளப்படும்


மண்ணாக இருந்த காலத்தின்

மகிழ்ச்சிக் கதைகள்


கேட்கும் அம்மாவுக்கும்

கண்கள் கசியும்


மணமான காலத்திற்கு

முன்பிருந்த நிலை நினைந்து


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நம்பிக்கை - கவிதை

 நம்பிக்கை - கவிதை 

------------------


வண்ணப் பூக்கள் எல்லாம்

வாசம் வீசுவ தில்லை


வாசம் வீசும் பூவிலும்

விஷத்தின் தன்மை உண்டு


புறத்தில் சிரிப்பவர் எல்லாம்

அகத்தில் மகிழ்பவர் அல்லர்


ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்

அடிகள் சறுக்குவ தில்லை


நம்பிக் கெட்டவரும் உண்டு

நம்பாமல் கெட்டவரும் உண்டு


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கால (ஏ)மாற்றம் - கவிதை

 கால (ஏ)மாற்றம்  - கவிதை 

--------------------------


அம்மா தலை வாரி விட்ட

காலம் அப்போது


அப்பா சினிமா கூட்டிப் போன

காலம் அப்போது


அண்ணனுடன் சைக்கிள் ஓட்டிய

காலம் அப்போது


தோழியுடன் அரட்டை அடித்த

காலம் அப்போது


ஆபீசும் அடுப்படியும்

ஆஸ்பத்திரியும் இப்போது

--------------- நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு ----------------------------- ‘நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே . ‘வீட்டுக்குள்ளே ப...