ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

சாலைக்கொரு சோகம் - கவிதை

 சாலைக்கொரு சோகம் - கவிதை 

-----------------------------

கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே

கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே


மண்ரோடாய் நானிருந்த அந்தக் காலம்

மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்


சேற்று மண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்

சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும்


காற்று வர மண் பறந்து விளையாடும்

காலத்தில் செடிகளில் பூக்கள் ஆடும்


ஓரத்தில் வளர்ந்திருந்த புல் செடியும்

ஒத்தாசைப் பேச்சுக்கு உடன் படியும்


காலடியும் கால்நடையும் வண்டிகளும்

மிதிக்கையிலே வலி தாங்கி மண் இளகும்


காலத்தின் மாற்றத்தால் தார் ஆனேன்

கல்லாகி மண்ணாகி கருப் பானேன்


வானத்து நீரோடு வாழ்க்கை இல்லை

வாய்த்துணைக்கு வாய்த்திருந்த புல்லும் இல்லை


இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்

விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்


எப்போதும் எனக்குள்ளே ஏக்கச் சோகம்

எனக்குள்ளே துடிக்கின்ற மண்ணின் தாகம்


------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...