திங்கள், 19 ஆகஸ்ட், 2024

குடையும் கோட்டும் - சிறுகதை

 குடையும் கோட்டும் - சிறுகதை 

---------------------------------


சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை சொல்லும் கதைகளில் அடங்கி இருக்கும் நினைவுகளுக்காகவே அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறார் அவர். அந்தக் கோட்டு மட்டும் என்னவாம். குளிரை மட்டுமா தாங்கிற்று . எத்தனையோ நினைவுகளைத் தாங்கியபடி இப்போது தளர்ந்து தொங்கியபடி தன்னைப் போல்.


லேசான சிரிப்பு வந்தது. மனைவியின் நினைப்பு . இந்தப் பர்வதம் மட்டும் என்னவாம். எப்படித் தள தள வென்று இருந்தாள் . இப்போது தொள தொள வென்று . அவளிடம் சொல்லிவிட வேண்டும் இந்த வார்த்தை விளையாட்டை. 'பாரு' என்று கூப்பிட்டார்.' என்னவாம் ' என்றபடி அடுப்படியில் இருந்து திரும்பிய பார்வதியின் மூக்குத்தியில் பட்டுத் தெறித்த சாயங்கால சூரிய ஒளி இவர் கண்களைக் கூசச் செய்தது. ' ஏன் கண்ணைச் சுருக்கிறீங்களாம் ' .


. இல்லேம்மா , இந்த வயசிலும் உன் அழகு என் கண்ணைக் கூச வைக்குதுடி ' என்று சிரித்தவர் . 'இல்லே , முந்தி நீ தள தள இப்போ தொள தொள ' என்றதும் கோபம் வந்தது போல் முகத்தை வைத்துக் கொண்ட பார்வதி ' 'முந்தி நீங்களும் பலம் , இப்ப பழம் வேறு என்னவாம் ' என்று ஒரு 'வாம் ' மைச் சேர்த்து முடித்தாள் ,


'இல்லேடி, அந்தக் கோட்டையும் , குடையையும் பார்த்தேன் , பழைய நினைப்பு வந்துச்சு '

'என்னவாம் '

உனக்கு என் பொக்கை வாயாலே கேக்கணும் . சொல்றேன் . கல்யாணம் ஆன புதுசு . அந்த எம்ஜிஆர் சரோஜாதேவி படம் , அது என்ன , நாடோடி மன்னனா பார்க்கப் போனோமே , மதுரையில் தங்கம் தியேட்டரிலே , அப்பா என்ன மழை , என்ன குளிர், இந்த குடைக்குள்ளே உன்னைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு கோட்டையும் விரிச்சு உன் மேலே போர்த்தி விட்டு , வடக்கு மாசி வீதியிலே இருந்து , டவுன் ஹால் வரை சேர்ந்து போனோமே , ஞாபகம் இருக்கா '


'இருக்கு , படம் பார்த்துட்டு வந்து நீங்க மூணு நாள் காய்ச்சல்லே படுத்துக் கிடந்ததும் ஞாபகம் இருக்கு '

' அது என்னமோ , அப்பல்லாம் காய்ச்சல் ஒரு சுகம். பேசாம வேலைக்கு லீவ் போட்டுட்டு வீட்டுலே படுத்துக்கிடக்கிற சுகம், சுக்குத் தண்ணியிலே சரியாயிடும் காய்ச்சல் . அப்புறம் ஓமத்தண்ணீர் குளியல், அப்புறம் சாப்பிடுற சாம்பார் என்ன ருசி. இப்ப, கொரானாக் காலத்திற்குப் பிறகு காய்ச்சல் வந்தாலே பயமா இருக்கு ,ரெண்டு பேரும் பொழைச்சது மறுபிழைப்பாச்சே '


'அப்பவே போய்ச் சேர்ந்திருக்கணும் , இப்படி புள்ளைக ரெண்டும் ஒண்ணு அமெரிக்காவிலும் , ஒண்ணு லண்டன்லியுமா , வாரத்திற்கு ஒரு தடவை , வாட்ஸப் வீடியோவில் பார்த்துக்கிட்டுக் கிடக்கிறது ஒரு பொழைப்பா . அந்தக் காலத்திலே, ஆளும் பேருமா , எத்தனை சனம் வீட்டிலே, சமைச்சு மாளாது. கிராமத்திலே இருந்து வர்ற சொந்த பந்தம் கொண்டு வர்ற அரிசியும் , மிளகாயும் வருஷத்திற்குப் போதும். நம்மளும் , பஸ் பிடிச்சு கிராமத்திற்குப் போயிட்டு வரது என்ன, எல்லாம் கனவாய்ப் போச்சுய்யா '


' பழைய நினைப்பு வந்துட்டாலே, 'அய்யா ' போட்டு பேச ஆரம்பிச்சுடுவீயே , புள்ளே ' என்று கிழவரும் 'புள்ளே' க்குத் தாவினார்.

'ஏன்யா , உன் மடியிலே கொஞ்ச நேரம் தல சாயவா ' என்று மடியில் படுத்த பாருவின் தலை தடவி , காதை லேசாகக் கிள்ளி விட்ட சாம்பசிவத்தை ' சாம்பு ' என்று செல்லமாக அழைத்தாள் பாரு '


'அடிச் சக்கை , பாருக்குட்டிக்கு மூடு வந்துருச்சா , அந்தக் காலம்னா இப்ப நடக்கிறதே வேற ' என்று குறும்பாகச் சிரித்த அவரின் கன்னத்தைத் தடவி விட்ட பாரு ' புள்ளை இல்லாத வீட்டிலே , இல்லே பேரன் இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளி விளையாடுவான் ' ன்னு சொல்றது சரியாத் தான் இருக்கு ' என்று சிரித்தாள்.


' ஆமாம்டி, பேரன் ,பேத்தி எல்லாம் வந்தாச்சுல்லே, வருஷம் எப்படி ஓடிருச்சு . இப்பத் தான், கல்யாணம் ஆயி முதல் பையன் பிறந்த பச்சை உடம்போடு படுத்திருந்ததை பார்த்த மாதிரி இருக்கு , அடுத்த மகன் அடுத்த வருஷமே '

'ஆமாம்யா , உனக்குத்தான் பொறுக்காதே , பச்சை உடம்பாச்சே ன்னு கொஞ்சமாவது யோசிச்சியா ' நெருக்கத்தில் பேச்சு' வா போ 'என்று போவதை இருவருமே ரசித்தனர் .


அப்புறம் புள்ளைங்க படிப்பு, ஆபீஸ் ப்ரோமோஷன் , வீடு வாங்குறது , புள்ளைங்க அயல் நாடு , கிராமத்து நிலம் , வீடு வித்து புள்ளைங்க கல்யாணம், மெட்ராஸிலே வந்து வீடு வாங்கி , கிராமப் போக்குவரத்து நின்னு போயி, பெருசுக ஒண்ணொண்ணா போய்ச் சேர, இப்ப நம்மளே பெருசுகளாகி, என்னடி வாழ்க்கை இது '


'இது தான்யா வாழ்க்கை , எல்லாத்தையும் அனுபவிச்சுத் தானே ஓய்ஞ்சு போயிருக்கோம் , விடு எந்திரிச்சுப் போயி காபி போட்டுட்டு வர்றேன், இது ஒண்ணுதான், அன்னிக்கு போல இன்னிக்கும் . '

'அது மட்டும் இல்லேடி, அந்தக் குடையும் , கோட்டும் தான் '.


'போன் அடிக்குது, அமெரிக்கப் புள்ளையா , லண்டன் புள்ளையா , ஏதோ பெத்து வளர்த்த பாசத்திற்கு , வாரத்திற்கு முறை முகம் காட்டுதுங்க, பேரன் பேத்தியோட '

'யோவ் கண் கலங்காதீய்யா , உனக்கு நான் இருக்கேன், எனக்கு நீ இருக்கே , கூடவே '

'எத்தனை நாளைக்கோ , போறப்ப சேர்ந்தே போயிடணும் தாயி '


============== நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 

1 கருத்து:

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...