வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை - நகைச்சுவைக் கட்டுரை

 எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை - நகைச்சுவைக் கட்டுரை 

----------------------------------------


 அந்தக் கால மீட்டர் கேஜ் எலக்ட்ரிக் ட்ரெயின் அனுபவ அவஸ்தைகளை பற்றியது இந்தக் கட்டுரை .


முதல்ல குரோம்பேட்டை வாசம் . அப்புறம் கோடம்பாக்கம். அப்புறம் நங்கநல்லூர். இப்படிப் பல இடங்களில் இருந்து மீட்டர் கேஜ் ட்ரெயின்ல பீச் ஸ்டேஷன் போயி இந்தியன் பேங்க் தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்கள். தாம்பரம் ,சானிடோரியம் தாண்டி குரோம்பேட்டை. குரோம்பேட்டை ஸ்டேஷனில் வந்து ஏறும் பொழுதே நாம் லேடிஸ் கம்பார்ட்மெண்ட் இல்லாத இடமாக, ஃபர்ஸ்ட் கிளாஸ் இல்லாத இடமாக பார்த்து நின்றாலும் கூட , நாம் நிற்கின்ற இடத்தில் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்ட் வந்து நிற்கும் அது என்ன ராசியோ தெரியாது. பிறகு நாம் ஓடிப்போய் ஜென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறும் போது அங்கே ஏற்கனவே 10 , 15 பேர் ஏறி இடித்து பிடித்துக் கொண்டு ஓரத்தில் தொங்கி உள்ளே நுழைந்து கஷ்டப்பட்டு நிற்க வேண்டியதா இருக்கும்.


அடுத்த ஸ்டேஷன் பல்லாவரம். அதில் வந்து ஒரு பாகவதர் கோஷ்டி ஏறும். தங்கள் குரலைப் பற்றிய எந்தக் கவலையும் படாமல் ,அதைப் பற்றிய எந்த குற்ற உணர்வும் கூட இல்லாமல் அவர்கள் பாடுவதைக் கேட்கின்ற ஒரு அனுபவம் அல்லது அவஸ்தை . யார் வேண்டுமானாலும் பாடலாம், எப்படி வேண்டுமானாலும் பாடலாம், நாமும் பாட வேண்டும் என்கின்ற  ஆரம்ப விதை அப்போதுதான் மனதுக்குள் விழுந்ததோ என்னமோ தெரியவில்லை .


அடுத்து திரிசூலம் மீனம்பாக்கம் ,பழவந்தாங்கல் என்று தாண்டி ,மௌண்ட், கிண்டி வரும்பொழுது சில பேர் இறங்குவார்கள் அப்பொழுது நமக்கு அந்த இரண்டு சீட்டுகளில் அது மீட்டர் கேஜ் வண்டிதானே இரண்டு சீட்டுகளின் ஓரத்தில் அந்த ரெண்டரை சீட்டில் உட்காருவதற்கு இடம் கிடைக்கும். அதில் ஒரு மாதிரி இடித்துப் பிடித்துக் கொண்டு உட்காருவோம். அடுத்தது மாம்பலம் , கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்பட் என்று எக்மோர் வந்த பிறகுதான் முழுமையான ஒரு சீட்டு கிடைக்கும் உட்கார .


அதுவரை அந்த இடைஞ்சலுக்குள்ளும் சிலர் செயினைப் பிடித்து தொங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டும் வருவார்கள். சுற்றி நெருக்கி நிற்கும் மக்கள் கூட்டம் ஒரு சப்போர்ட். ஸ்டேஷனில் நிற்கும் வண்டியின் ஜெர்க் எல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது. . ஆனால் , அவர்களின் பலத்த குறட்டை தான், மற்றவர்களை ஏதாவது செய்யும்.


இன்னும் சிலர் தினத்தந்தியோ இந்து பேப்பரோ நான்காக மடித்து அதை ஒருகையில் பிடித்தபடி மறு கையில் செயினை பிடித்துத் தொங்கிக்கொண்டு , படித்துக் கொண்டு வருவார்கள். நம்மிடமும் தினத்தந்தி இருக்கும் .ஆனால் உட்கார்ந்து பிறகு படிக்கலாம் என்று வைத்திருப்போம் . இப்பொழுது எக்மோரில் உட்கார இடம் கிடைத்த பிறகு ஒரு மாதிரி உட்கார்ந்து பேப்பரை விரித்துப் படித்தால் இரண்டு பக்கமும் இரண்டு தலைகள் வந்து பேப்பருக்கு முத்தம் கொடுக்கும். பேப்பரைப் படிக்கிறார்களாம் . நாம் வேற வழியில்லாமல் ஆளுக்கு ஒரு சீட்டை பிரித்துக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவோம் .


சிலபேர் 'அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்கணும் சார் சீக்கிரம் படிச்சிட்டு தந்துர்றேன்' என்று வாங்குவார்கள் . நாம் அவர்களை நம்பி பேப்பரைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்கும். அவர்கள் பேப்பரோடு இறங்கி போயே போயிருப்பார்கள் அதற்குப் பிறகு பேப்பரை விட்டு விட்டு குமுதம் போன்ற வீக்லி கொண்டு வர ஆரம்பித்தோம். அதில் தலை ஈடுபாடு, இடிபாடு பிரச்சனை கிடையாது . சின்ன பக்கங்கள் தானே . இது படிக்கிற அவஸ்தை .


இதற்கு நடுவில் பத்து ரூபாய்க்கு மூன்று என்று கர்சீப் விற்பவர்கள் வருவார்கள் ஏதோ ஒரு ஆசையில் அவற்றை வாங்கி வந்து அந்த மொடமட கர்சீப்பை கு வீட்டில் வந்து துவைத்த பிறகு தான் அதை உபயோகப்படுத்த முடியும் . ஒருமுறை கூட்டம் குறைவாக இருந்து ஓரமாக வேர்வை முகத்தோடு உட்கார்ந்திருந்த அவர் , கூட்டம் ஏறும் பொழுது திடீரென்று மொத்த கர்சீப்புகளையும் வைத்து முகத்தின் வேர்வையை துடைத்து விட்டு அதை உதறிவிட்டு 'பத்து ரூபாய்க்கு மூன்று' என்று சொல்லிவிட்டு விற்க ஆரம்பித்தார் அத்தோடு கர்சீப் வாங்குவது நின்றது. சில ஹோட்டல்களிலோ இல்லை கையேந்தி பவன்களிலோ பார்த்திருப்போம் .பெரிய தோசைக் கல்லின் மேல் 'சோய்' என்று எண்ணெய் ஊற்றி விட்டு ஒரு பெரிய விளக்குமாறை வைத்து அடித்துத் தேய்ப்பார்கள் அந்த விளக்கமாறு ஒரு அழுக்கு விளக்கமாறாக இருக்கும். அதற்கு பிறகு அந்த மாதிரி இடங்களில் தோசை சாப்பிடுவதுஇல்லை. ஆனால் பெரிய ஹோட்டல்களிலும் உள்ளே கிச்சனில் என்ன மாதிரி விளக்குமாறு வைத்திருப்பார்கள் என்று தெரியாது .


அது போல் இங்கே கர்சீப் வாங்குவது நின்றது. இதற்கு நடுவிலே கூட்டத்திற்கு நடுவே அந்த இடைஞ்சல்களுக்கு நடுவிலும் கால்களை மடித்து ஊர்ந்த படி சிலர் கையை நீட்டி காசு கேட்க , கொடுப்பதற்கு என்றே நாம் ஒரு ரூபாய் காயின்ஸ் கொண்டு போய் இருப்போம். ஒரு ரூபாய் காயின்ஸ் கொடுத்தால் முறைத்துப் பார்த்து வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஐந்து ரூபாய் கொடுப்பவர்களுக்கு ஒரு கும்பிடு கிடைக்கும். .ஒருமுறை இதுபோன்று காலை மடக்கி ஊர்ந்து வந்த ஒருவர் வாசலுக்கு சென்று இறங்கும் நேரத்தில் ரயில் கிளம்பி விட்டதால் டக்கென்று எழுந்து நின்று இறங்கி ஓடுவதையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது . எப்படி அவருக்குக் கால்கள் முளைத்தன என்று யோசித்து அதற்கு பிறகு அந்த ஒரு ரூபாய் தர்மம் நிறுத்தப்பட்டது .


இப்படியாக பிரயாணத்தில் வந்து சேருகின்ற பலரைப் பார்ப்பதே ஒரு அனுபவமாக இருக்கும். பல நண்பர்கள் வந்து பேசுவார்கள் . மற்றும் அங்கு இருக்கும் ஜனங்கள் பேசும் அரசியல், சினிமா, இலக்கியம் எல்லாம் கேட்கும் பொழுது இவர்களில் யாராவது ஒருவர் ஒரு காலத்தில் தமிழக முதல்வராகவோ தமிழக சூப்பர் ஸ்டார் ஆகவோ , மிகப்பெரிய இலக்கிய ஆளுமையாகவோ மாறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு என்று யோசித்தது உண்டு . ஆனால் அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை ரிட்டயர் ஆன பிறகு நண்பர்கள்  whastspp குழுக்களில் சேர்ந்து பேசுவது பாடுவது எழுதுவது இல்லை எதையாவது ஃபார்வேர்ட் பண்ணுவது என்று இருக்கிறார்களோ என்னவோ .



இதுபோன்று நமது பிரயாணம் குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை செல்லும். திரும்பி வரும் பொழுது ஓரளவு சவுரியமாக இருக்கும். ஏனென்றால் அங்கிருந்து தானே ரயில் கிளம்புகிறது .எனவே நிற்கின்ற ரயில்களில் இடம் இருக்கின்ற ரயிலாக பார்த்து ஓரமாக உட்காருவோம் .அதுவும் டிரெயின் போகும் பாதையின் நேரான ஓரத்தில் உட்கார்ந்தால் முகத்தில் காபி இன்னும் பல அபிஷேகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மறுபக்கம் சென்று ஓரத்தில் உட்கார்ந்து கொள்வோம்.


அப்பொழுது நிலக்கடலை விற்பவர்கள் எல்லாம் வருவார்கள் . சூடாக, மண்ணாக இருக்கும் அந்த மண், மற்றும் தோலோடு சேர்த்து விட்டமின்களை விட வேண்டாம் என்று சாப்பிடுவோம். ஆனால் எதிர்த் தரப்பில் இருப்பவர் வேறு எண்ணத்தோடு இருப்பார். அந்த நிலக்கடலை தோல், மண் எல்லாம் ஊதி விடுவதற்காக தனது உள்ளங்கையில் எடுத்து வைத்து ஊதும் பொழுது அந்த மண்ணோடு சேர்ந்து அந்தத் தோல் துகள்களும் சேர்ந்து நம் கண்களை மறைக்கும். பார்த்துவிட்டு 'சாரி' என்று சொல்லுவார் மறுபடி அடுத்த முறை உள்ளங்கையில் போடும் பொழுது நம்மைப் பார்ப்பார் நாம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம். நாம் கண்களை மூடிக்கொண்டு வருவோம். ஆனால் காதுகள் திறந்திருக்கும் . அதை மூடுவதற்கு வழி இல்லையே . பார்ப்பது, பேசுவதைக் குறைக்க வேண்டும், என்று கண்ணையும் வாயையும் மூட வழி செய்து அதிகம் கேட்க வேண்டும் என்று காதுகளைத் திறந்து வைத்துள்ள இயற்கையின் படைப்பை வியந்து கொண்டு, கேட்டுக் கொண்டு வருவோம்.


அங்கே குடும்ப வாழ்க்கை அலுவலக வாழ்க்கை என்று அத்தனையும் அலசப்படும் அத்தனையும் தாண்டி அந்த பேச்சிலே அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த ரயில் வாழ்க்கையே அவர்களுக்கும் நமக்கும் ஒரு தனி வாழ்க்கையாக தான் இருக்கும் அந்த பீச் ஸ்டேஷனில் இருந்து திரும்பி குரோம்பேட்டை வருவது மறுநாள் காலை குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் செல்வது என்று அந்த ஒரு மணி நேர வாழ்க்கை, அது ஒரு வித்தியாசமான வாழ்க்கை , பல மனிதர்களுடன் சேர்ந்து பழகிய அவர்களுடைய வாழ்வை எல்லாம் அனுபவித்த வாழ்க்கை. சென்னையின் முக்கிய அங்கமான அந்தப் பழைய கால மீட்டர் கேஜ் எலெக்ட்ரிக் ட்ரெயின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

  1. இரயில் பயண அனுபவங்கள் நன்று. தினம் தினம் இப்படியான பயணம் செய்வது பலவித அனுபவங்களைத் தருபவை.

    பதிலளிநீக்கு

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...