திங்கள், 22 டிசம்பர், 2025

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை 

-----------

(கவிதை  வனம் குழுவில் ) 


துளிர்த்த விதையும்

செடியாய் மாறி


மரமும் ஆகிக்

கனியைக் கொடுக்கும்


கனியைப் கொடுத்துக்

களைத்த பின்னே


மரமும் விறகாய்

மாறிப் போகும்


துளிர்த்த பயிரும்

சாய்ந்த பின்னே


அறுத்துப் போட்டு

உதிர்த்த நெல்லைப்


பிரிந்த வைக்கோல்

மாட்டின் உணவு


சக்கை ஆனபின்

சாவே இயற்கை


வாழ்க்கைத் துளிரும்

வளர்ந்து சாயும்


இயற்கை நியதியை

ஏற்று வாழ்வோம்


------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English


தோள் கொடுக்கும் தோழமை - கவிதை

 தோள் கொடுக்கும் தோழமை - கவிதை 

-----------------

(கவிதை  வனம் குழுவில் ) 


பள்ளியில் இருந்தே

பழகி வந்ததால்


நல்லதும் கெட்டதும்

நடத்திப் பார்த்ததால்


சிரிப்பும் அழுகையும்

சேர்ந்து செய்ததால்


பரிசும் உதையும்

பங்கு போட்டதால்


அவனை நானும்

என்னை நானும்


ஒன்றாய் நினைத்து

உறவு கொண்டதால்


வருடம் ஆனாலும்

வயது போனாலும்


தோள் கொடுப்பான்

தோழன் என்றும்


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


காலக் கண்ணாடி - கவிதை

 காலக் கண்ணாடி - கவிதை 

-------------------

(கவிதை  வனம் குழுவில் ) 


காலக் கண்ணாடியின்

கோலங்கள் பலவிதம்


இலக்கியக் கண்ணாடியில்

எழுத்தின் மாற்றம்


தலைமுறைக் கண்ணாடியில்

கலாச்சார மாற்றம்


அரசியல் கண்ணாடியில்

ஆட்சியின் மாற்றம்


மக்களும் சமூகமும்

மாறும் தோற்றத்தை


காலக் கண்ணாடி

காட்டும் விதத்திலே


வலியும் புரிகிறது

வழியும் தெரிகிறது


--------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


மண் வாசனை - கவிதை

 மண் வாசனை - கவிதை 

——-

(கவிதை  வனம் குழுவில் ) 


விழுந்து புரண்ட

பிறந்த மண்


எழுந்து ஓடிய

பிறந்த மண்


உள்நாடும் வெளிநாடும்

உழைத்துக் களைத்து


திரும்பி வந்து

சேர்ந்த மண்


எரிப்பதோ புதைப்பதோ

இங்கேதான் என்று


வந்து சேர்ந்த

சொந்த ஊரின்


மண் வாசத்தில்

தாயின் பாசம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


மை சிந்தும் பேனா - கவிதை

 மை சிந்தும் பேனா - கவிதை 

--------------

(கவிதை  வனம் குழுவில் ) 


மை சிந்தும் பேனாவால்

கையில் தான் கறையாகும்


பொய் சிந்தும் பேனாவால்

மனம் எல்லாம் கறையாகும்


சமுதாயப் பொறுப்போடு

சிந்தித்து எழுதினால்


சிந்துகின்ற மையெல்லாம்

ஜீவனுள்ள எழுத்தாகும்


செந்தமிழின் துணையாலே

ஜெகமெல்லாம் சீராகும்


---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


செல்லச் சண்டை - கவிதை

 செல்லச் சண்டை - கவிதை 

——-

(கவிதை  வனம் குழுவில் ) 


அஞ்சு நிமிடம் தாமதமாம்

அதுக்கொரு சண்டை


பிறந்த நாளை மறந்தாச்சாம்

அதுக்கொரு சண்டை


ஒரே ஒரு நாள் பேசலையாம்

அதுக்கொரு சண்டை


செல்லச் சண்டையோடு

சீராக வளர்ந்த காதல்


கல்யாணம் ஆனபின்பு

கணவனைப் புரிந்த பின்பு


பொல்லாச் சண்டையாகிப்

பொழுதெல்லாம் சண்டை


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


ஜன்னலோரப் பயணம் - கவிதை

 ஜன்னலோரப் பயணம் - கவிதை 

----------------

(கவிதை வனம் குழுவில் )


ஜன்னலோரப் பயணத்தில்

இயற்கையும் கிடைப்பதுண்டு

எச்சிலும் கிடைப்பதுண்டு


இருக்கும் இடத்தைப் பொறுத்து

இரண்டும் கிடைப்பதால்

கவனித்து இடம் பிடிப்போம்


ஓடும் மரங்களின்

உல்லாசம் ரசிப்போம்


ஆகாய வீதியின்

அந்தரங்கம் அறிவோம்


எங்கிருந்தோ கேட்கும்

இசையில் மயங்குவோம்


வேகக் காற்றால்

விழிகள் திறப்போம்


மாறும் தென்றலில்

கண்கள் அயர்வோம்


பழைய காதலைப்

பார்க்கும் நேரம்


உதிர்ந்த பூக்களை

ஒட்டும் நேரம்


கனவுப் பாதையில்

கஷ்டம் இல்லை


காண்பதும் கேட்பதும்

இன்பம் இன்பம்


பயணம் முடியும்

பழையன திரும்பும்


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English   


கரை காணா நதி - கவிதை

 கரை காணா நதி - கவிதை 

---------------------

(கவிதை வனம் குழுவில்) 


கரை என்றால் சன்னதி

சேர்ந்து விட்டால் நிம்மதி


போகும் வழியெல்லாம்

கரைகள் இருந்தாலும்


தொடர வைக்கும் துன்பம் அவை

தூங்க வைக்கும் இன்பம் அல்ல


ஓடும் வாழ்க்கையிலும்

ஓரத்தில் கரைகள் உண்டு


பாதை மாறாமல்

பயணம் போவதற்கு


உறவும் நட்பும் உண்டு

ஊக்கும் சொற்கள் உண்டு


தனக்குள் இறையென்ற

தத்துவம் உணர்கையில்தான்


வாழ்க்கை கரை சேரும்

வந்ததன் பொருள் புரியும்


சேரும் கடலில் தான்

நதியும் கரை காணும்


----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கட்டறுத்தல் - சிறுகதை

 கட்டறுத்தல் - சிறுகதை

-------------

(கதை புதிது குழுவில் ) 


இன்று நேற்று நடப்பதா இது. எத்தனை யுகங்களாய்த் தொடர்ந்து வருவது இது. மற்றவர் போட்ட கட்டுக்கள் சில, தானே போட்டுக்கொண்ட கட்டுக்களும் சில. இதிகாச நாயகிகளில் இருந்து இன்றைய நாயகிகள் வரை கட்டறுக்கும் வேலையே காலை முதல் மாலை வரை பெண்ணினத்திற்கு .


சந்திராவின் நிலையும் அப்படித்தான். ஆனால் இது அவள் போட்ட முடிச்சு. தன் கூந்தலை எடுத்து தானே சுற்றிக் கொண்டதுதான் முடிச்சாக இறுகிக் கிடக்கிறது. காதலன்தான் கணவன்.


அன்று அவள் கண்டவன் வேறு. இன்று அவள் காண்பவன் வேறு. அவளின் ஆடை அலங்காரத்தை ரசித்துப் பாராட்டி கவிதைகள் எழுதியவன் அன்று. இன்று 'இத்தனை அலங்காரம் தேவையா , அழகிப் போட்டிக்கா போகிறாய் ' என்று அலுவலகம் கிளம்பும் போது சொற்களால் குத்திக் கிழித்து நெஞ்செல்லாம் ரணம் இன்று .


இரவில் வர நேரம் ஆனால் ' எவனுடன் எங்கே போய் விட்டு இவ்வளவு தாமதமாய் வருகிறாய் ' . கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுகள் இறுகுகின்றன அவளுக்கு. கட்டவிழ்க்க ஆசையும் அவ்வப்போது வருகிறது.


இரவில் மட்டும் அவளை அணைத்து தன் ஆசையைத் தணித்து விட்டு, திரும்பப் படுத்து குறட்டை விடும் அவனிடம் ஒரு நாள் சொல்லி விட்டாள். ' எனக்கு விருப்பம் இல்லை, என்னைத் தொட வேண்டாம். ' அதற்கு அவனின் பதில் ' ஏன் வேறு ருசி கண்டு விட்டாயா ' . வெறுப்பில் விவாதம் முற்றி, அன்று இரவே வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோர் வீட்டில் தஞ்சம் . யாரை ஒதுக்கி விட்டு வெளியேறி அவனிடம் தஞ்சம் புகுந்தாளோ, அவனை ஒதுக்கி விட்டு தந்தை தாயிடம் தஞ்சம்.


வேலை தொடர்கிறது. அங்கே வேதனையும் தொடர்கிறது. அவன் அலுவலகம் வந்து பேசும் வார்த்தைகளில் விஷம். கேட்கும் பலருக்கு விஷமச் சிரிப்பு. ஆறுதலாய் ஒருத்தி மட்டும் அந்த அலுவலகத்தில் அவள் தோழி குமாரி. அவள் ஆலோசனைப் படி அட்வொகேட் அலுவலகம். விவாக ரத்து வழக்கு. ஒரு நாள் கிடைத்தது அதுவும். கட்டுகள் விடுபட்ட அந்த மாலைப் பொழுது. அவளும் குமாரியும் சேர்த்து அருந்திய காப்பி அன்று இனித்தது கூடுதலாய்.


தனித்த வாழ்க்கை போதும் அவளுக்கு . இன்று அதே அலுவலகத்தின் உயர் அதிகாரி அவள்.


அலுவலகத்திற்கு ஒருநாள் வந்தான் அவன் தாடியோடு .

' என்னை மன்னித்து விடு சந்திரா '

'போடா வெளியே '

முன்னிருந்த கூந்தலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முறைப்புடன் சொன்னாள்.கூந்தல் காற்றில் விளையாடியது .


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


ஞாயிறு, 14 டிசம்பர், 2025

சமூகத்தின் சிற்பி - கவிதை

 சமூகத்தின் சிற்பி - கவிதை 

———

(கவிதை வனம் குழுவில் ) 


எண்ணத்தில் தூய்மையும்

வாக்கில் உண்மையும்


செயலில் நேர்மையும்

சேர்ந்த எல்லோரும்


செதுக்கிச் சமைத்த

சமூகத்தின் சிற்பிகள்தான்


நேற்றிருந்த அவர்களும்தான்

இன்றிருக்கும் நாமும்தான்


நாளை வரும் மக்களுக்கும்

வழிகாட்டும் வாழ்க்கைதான்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


தொலை தூர நிலவு - கவிதை

 தொலை தூர நிலவு - கவிதை 

—-

( கவிதை வனம் குழுவில் )

தூரத்தில் இருந்தாலும்

நிலவின் ஒளி இறங்கி

பக்கத்தில் வந்துவிடும்


தூய அன்பைத் தரும்

நேயம் மிக்கோரும்

நிச்சயமாய் அப்படித்தான்


தூரத்தில் இருந்தாலும்

பக்கத்தில் இருந்தாலும்

நேரத்தில் உதவிடுவார்


நெருக்கத்தை உணர்வதற்கும்

நெஞ்சத்தை அறிவதற்கும்

தூரம் தடை அல்ல


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நிறம் மாறும் மேகம் - கவிதை

 நிறம் மாறும் மேகம் - கவிதை 

-------------

( கவிதை வனம்  குழுவில் )

நிறம் மாறும் மேகங்கள்

-------------

காஞ்சு கெடுத்த

காலமொன்று உண்டு


வெளுப்பு கருப்பாகக்

காத்திருந்த காலம்


பேஞ்சு கெடுத்த

காலமொன்றும் உண்டு


கருப்பு வெளுப்பாகக்

காத்திருந்த காலம்


விவசாயி விருப்பத்தில்

விளையாட்டு காண்பிக்கும்


மேகத்திற்குத் தெரியுமா

விளைச்சலின் அருமை


நிறம் மாற்றி விளையாடும்

நண்பர்களின் நெஞ்சமும்


கருப்பா வெளுப்பா

கவனித்துப் பார்ப்போம்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 10 டிசம்பர், 2025

சக்தி - சிறுகதை

 சக்தி - சிறுகதை 

---------------

( கதை புதிது குழுவில் ) 


அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும்   சுறுசுறுப்பு .  அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின்  பள்ளி ,  கணவனுடன்  அனுசரணை  , அலுவலக ஆட்டோ, வேலை செய்வதிலும், வாங்குவதிலும் இருக்கும்  வேகம், விவேகம், திரும்பியதும் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் கிடைக்கும் அமைதியும் அறிவும். பூஜை அறையில் வெளிப்படும் அவளின் சங்கீதம், குடும்பத்துடன்  இயைந்த பரிவு, உணவு, இரவில் கணவனுடன் கொஞ்சம் போக்கு காட்டி பின்பு பூக்கும்  சரசம். இதுதான் சக்தி. 


வழக்கமான வாழ்வின் இடையில் வந்த குறுக்கீடு அந்த போன் கால். இதோ அவள் கையில் போனோடு , சிந்தனையோடு .  ஆம். அவனிடம் இருந்து தான் . கல்லூரிக் காலத்தில் பருவத்தின் கிளர்ச்சியில் கிடைத்த  ஒரு அனுபவத்தின் அடையாள ஆண்மகன். எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது இந்த போன் .


 'உன்னை மறக்க முடியவில்லை. நீ மணமுடித்துப் போனது தெரியும். கல்லூரியில் நீ திடீரென்ற நின்ற காரணமும் புரியும். என்னிடம் உன்னை  இழந்து விடுவாயோ என்ற பயத்தில் நீ  உடனே ஒத்துக்கொண்ட அந்த உடனடித்  திருமணத்தில் நீ மகிழ்ந்திருக்கலாம். ஊர் விட்டு ஓடி ஒளிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இத்தனை வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது.. உன்னைத் தேடிக்   கொண்டு இந்த டெல்லி வந்து சேர . உன் அலுவலகம். உன் கணவனின் அலுவலகம், உன் குழந்தையின் பள்ளி  எல்லாம் கண்டு கொண்டு, இன்டர்நெட் உதவில்  உன் போன் நம்பர் கண்டுபிடித்து இந்த போன். ஒருமுறை பார்க்க வேண்டும். பேச வேண்டும். போய் விடுகிறேன் உடனே . ஒத்துக்கொள். எப்போது வர.வேண்டும், உன் கணவன் இல்லாத நேரம் ' என்று சொல்லி விட்டு உடனே போனை வைத்து விட்டான்.


 ஒரு நிமிடம் யோசித்தவள், திரும்ப அதே நம்பருக்கு போன் செய்தாள்.

' இன்று மாலை ஆறு மணிக்கு வா, என் கணவர் இருக்கும் நேரத்தில் வா,.  நான் அவரிடம் நம் பழக்கம் பற்றி இது வரை ஒன்றும் சொல்லவில்லை. நீ வந்து முதலில் சொல்.  '

' பழக்கமா,  அது காதல் அல்லவா ' 

'இல்லை, அந்தப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் உன்னிடம். அதற்கு காதல் என்ற பெயர் இல்லை. இதோ, என் கணவனிடம்  எனக்கு உள்ளதே , இதற்குப் பெயர் தான் காதல். உனக்குப் புரியாது. வந்து எங்களைப் பார்த்தவுடன் உனக்குப் புரியும். எனக்கு அப்போதே இந்தப் பழக்கத்தின் போக்கைப்  பற்றிய புரிதல் வந்ததால்தான்  உடனே  விலகினேன். உனக்கு அது இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது. வந்து பார் எங்களிடம் பேசு , உனக்குப் புரியும். வா நண்பா'  என்று வைத்தாள் போனை. 


வழக்கம் போல் அந்த நாள் தொடர்ந்தது , அவளிடம் எந்த அதிர்ச்சியும், பரபரப்பும் இல்லாமல் . ஆட்டோ.  ஆபீஸ். அதே வேகம், விவேகம். மாலை வீடு . ஆறு மணி, குழந்தையுடன் விளையாட்டு. கணவனுடன் காபி. அவன் வரவில்லை. அவள் சொல்லவில்லை. அவள் சக்தி. 


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


மழைத்துளியின் பயணம்- கவிதை

 மழைத்துளியின் பயணம்- கவிதை 

-------------

( கவிதை வனம் குழுவில் ) 


விண்ணில் இருந்து

விழுந்தது மண்ணில்

வெளியும் உள்ளும்

வாங்கியது பூமி


வெளியின் துளிகள்

குளமாய்க் குழியாய்

ஆறாய் அருவியாய்

வெள்ளமாய்க் கடலாய்


கடலில் சேர்ந்தது

மறுபடி மேகமாய்

விண்ணுக்கும் மண்ணுக்கும்

பரிசாய்ப் பாலமாய்ப்


பொங்கிப் பெருகி

முதலும் முடிவும்

ஒன்றென்று வாழ்வுக்கு

உணர்த்தி ஓயும்

------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


வேர்களின் வியர்வை - கவிதை

 வேர்களின் வியர்வை - கவிதை 

-------------

(கவிதை வனம் குழுவில் ) 


நட்பின் வளர்ச்சி

நம்பிக்கை நடத்தை


உறவின் வளர்ச்சி

உண்மை அன்பு


வாழ்வின் வளர்ச்சி

வற்றாத உழைப்பு


நாட்டின் வளர்ச்சி

நன்னெறி ஒழுக்கம்


தமிழின வளர்ச்சி

தாய்மொழிப் பற்று


விருட்சத்தின் வளர்ச்சி

வேர்களின் வியர்வை


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


தீபம் - ஹைக்கூக்கள்

 தீபம் - ஹைக்கூக்கள்

———

(கவிதை வனம் குழுவில் ) 


தூண்டிடும் திரியால்

துளிர்விடும் தீபம்

அன்பே குச்சி

——


அணையா தீபமொன்றை

நமக்குள் உருவாக்கும்

நம்பிக்கை நெருப்பு

——


இல்லையென்றால் இருட்டு

இருந்தால் வெளிச்சம்

அவளும் தீபமும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கரை சேரும் ஓடங்கள் - கவிதை

 கரை சேரும் ஓடங்கள் - கவிதை 

—————

(கவிதை  வனம் குழுவில் ) 


இன்பமும் துன்பமும்

இரண்டு பக்கங்கள்


மாறி வருபவை

மாற்றி வைப்பவை


வலியை அறிந்தால்தான்

வாழ்க்கை புரியும்


புரிந்த வாழ்க்கைக்கு

இரண்டும் ஒன்றுதான்


புயலைத் தாண்டி

கரை சேரும் ஓடம் தான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


திங்கள், 8 டிசம்பர், 2025

மௌனத்தின் மொழி - கவிதை

 மௌனத்தின் மொழி - கவிதை 

———-

( கவிதை வனம் குழுவில் ) 

ஓரப் பார்வையும்

உதட்டுச் சுழிப்பும்


மூக்குச் சிவப்பும்

முந்தானை உதறலும்


நாக்கு மடிப்பும்

நளின நடையும்


நீட்டும் விரலும்

நிமிர்ந்த கழுத்தும்


சொல்லாத குறிப்பையா

சொற்கள் சொல்லிவிடும்


மௌனத்தின் மொழி போதும்

மங்கையே வா பக்கம்


இதழில் எழுதிடவே

ஏராள மொழி உண்டு


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


தமிழெனும் அமுது - கவிதை

 தமிழெனும் அமுது - கவிதை 

——-

(கவிதை வனம் குழுவில் ) 

அறத்தையும் மறத்தையும்

அறிந்திடச் செய்ததால்


உறவையும் நட்பையும்

உணர்ந்திடச் செய்ததால்


நன்னெறி நடத்தையை

நமக்குள் கொடுத்ததால்


ஊட்டி வளர்த்ததால்

உருவாக்கி விட்டதால்


தாய்ப்பாலும் அமுது தான்

தாய் மொழியும் அமுதுதான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


காத்திருப்பின் சுகம் - கவிதை

 காத்திருப்பின் சுகம் - கவிதை 

——-

( கவிதை வனம் குழுவில் ) 


பூத்திருக்கும் பூவும்

காத்திருந்தது மொட்டாக


பழுத்திருக்கும் பழமும்

காத்திருந்தது காயாக


இயற்கைக்கு மட்டுமா

வாழ்க்கைக்கும் காத்திருப்பே


காத்திருந்த கரு தான்

சிசுவாகி சிரம் காட்டும்


உழைப்பைக் கொடுத்துவிட்டு

சுகமாகக் காத்திருந்தால்


ஊதியம் மட்டும் அல்ல

உயர்வும் பதவியிலே


காரியத்தில் மட்டுமா

காதலுக்கும் காத்திருப்பே


காத்திருந்த சுகக்கனவு

காதலிலே சுபமாகும்


பார்த்திருந்த பாவையுமே

பரிவோடு கைப்பிடிப்பாள்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


புதன், 3 டிசம்பர், 2025

விடியலின் நம்பிக்கை - கவிதை

 விடியலின் நம்பிக்கை - கவிதை 

——

(கவிதை வனம் குழுவில் ) 


போகின்ற சூரியனும்

காலையில் திரும்புவான்


தேய்கின்ற சந்திரனும்

திரும்பவும் வளர்வான்


உதிர்கின்ற பூவுக்குள்

உருவாக்கும் விதை உண்டு


விழுகின்ற மழையால்தான்

விளைகின்ற பயிரெல்லாம்


போவதும் தேய்வதும்

உதிர்வதும் விழுவதும்


இயற்கையின் வழியிலே

எழும்பிட மலர்ந்திட


துன்பத்தின் தொடர்ச்சியாய்

வருவது இன்பமே


விடியலை நம்பிடு

விழுந்ததும் எழுந்திடு


——- நாகேந்திர பாரதி



My Poems in Tamil and English 


வழியனுப்புதல் -2025 - கவிதை

  வழியனுப்புதல் -2025   - கவிதை  ——------- ( கவிதை வனம் குழுவில் )  வழக்கம் போல் நீயும் வந்தாய் போகிறாய் ஒவ்வொரு நாளிலும் பிறந்தாய் இறந்தாய்...