செவ்வாய், 22 ஜூலை, 2025

சாதனைச் சிந்தனை - கட்டுரை

 சாதனைச் சிந்தனை - கட்டுரை 

---------------------------


'அப்படி என்னங்க அவ்வளவு சிந்தனை . '

'ஒண்ணேமில்லேம்மா , வாழ்க்கையிலே ஒண்ணுமே சாதிக்கலையேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன் '

'சாப்பாடு கிடைக்குதுல்ல தினசரி. அந்தச் சாதனை போதாதா. தினசரி , ரோட்டிலே எத்தனை பிச்சைக்காரர்கள் பார்க்கிறோம் . .


'இல்லைம்மா , அது விதி. ஏதோ கர்மா அப்படி இப்படின்னு சொல்றாங்களே , அதுவா இருக்கலாம்.'


'ஆசை அறுமின் , ஆசை அறுமின் ' னு எல்லோரும் இருக்க முடியுமா .'


'இப்ப நீங்க வந்து வெண்டைக்காயை அறுமின். கை வலிக்குது. '


அது சரி. நறுக்கிறேன். சாதனைகள் இல்லைன்னா இவ்வளவு வாழ்க்கை முறை மாற்றங்கள் வந்திருக்குமா '.


'வாழ்க்கை மாற்றங்கள் னு சொன்னேங்களே . அதுக்கெல்லாம் அடிப்படையான விஞ்ஞானிகள் பேரு ஏதாவது தெரியுமா, சொல்லுங்க.


' அது வந்தும்மா .... அவங்கள்லாம் இதை எதிர்பார்த்துச் செய்யலைம்மா . சுய திருப்தி. அவ்வளவுதான். '


'இப்ப உங்களுக்கு சுய திருப்தி கிடைக்கணும் அவ்வளவு தானே. வாங்க . வெண்டிக்காயை நறுக்கிட்டு , இந்தக் கீரையைக் கொஞ்சம் ஆய்ஞ்சு கொடுங்க. ஏக திருப்தி கிடைக்கும் '


'அது சரி. ஆய்ந்து கொடுக்கிறேன். அதுக்கும் மேலே ஏதாவது செய்யணும் பெருசா வாழ்க்கையிலே எல்லோருக்கும் பயன்படுற மாதிரி . '


'அதுக்கும் மேல பெருசா செய்யணும்னா , அந்த அலமாரியில் மேல இருக்கிற பெரிய பூசணிக்காயை நறுக்கிக் கொடுக்கலாம் . புள்ளைங்களுக்கு ரெம்பப் பிடிக்கும். எல்லோருக்கும் பயன்படுற மாதிரி யும் இருக்கும். '


'அப்புறம் பால்காரன் போட்ட பாக்கெட்டு ஒண்ணு ஒழுகுது. போன் பண்ணி அவனைக் காய்ச்சுங்க. அப்புறம் பாலக் காய்ச்சி எனக்கும் ஒரு கப் காபி. தலை வலிக்குது.


'காலையிலே இருந்து எவ்வளவு வேலை. வீட்டைப் பெருக்கி, வாஷிங் மெஷின்லெ ரெண்டு தடவை துணியைப் போட்டு காய வச்சு, இப்ப வந்து ' சாதனை ' அது இதுன்னு ' பேசி கடுப்பைக் கிளப்பாதீங்க,


'கேஸ் தீந்து போச்சு. நெட்டில் புக் பண்ணுங்க. அப்புறம் டாக்டர் கிட்டே பேசி மத்தியானம் டைம் வாங்குங்க. உடம்பு வலிக்கு மாத்திரை வாங்கணும். '


'சாயந்திரம் . நம்ம அந்தக் காலத்திலே சேர்ந்து டூரிங் டாக்கீஸ் லே பார்த்த ' எங்க வீட்டுப் பிள்ளை ' படம் டிவியிலே போடறான். சேர்ந்து பார்க்கலாம்.


'என்னடி, காலையிலே பொங்கி எழுந்த சாதனைக் கனவை பொசுக்குன்னு அமர்த்திட்டேயடி '


'சரி அப்படி என்னதான் சாதனை பண்ணனும்னு நினைக்கிறீங்க ;


இல்லேடி, இந்த இசை புதிது குழுவில் பாடுறேன்ன்ல. பாடிப் பாடி குரலைக் குளுமையாக்கி , நம்ம பாட்டு ஒருநாள் போடலேன்னாலும் , ஏன்னு கேட்க வைக்கணும். இன்னிக்கிப் பாரு 'ஒரு நண்பர்  பாட்டு இன்னிக்கு இல்லையே ' ன்னு அந்தக் குழு அட்மின்  மெசேஜ் போட்டிருக்காங்க. அது மாதிரி நம்ம பாட்டைப் பத்தியும் கேட்க வைக்கணும். '


'எங்கே கேட்கிறது. நீங்கதான் ஒரு நாள் விடாம , மாக்ஸிமம் போடுற அஞ்சு பாட்டையும் பாடிப் போட்டுறீங்களே . இதிலே, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தமிழிசை , டூயட் ன்னு கணக்கு வேற. அப்புறம் எப்படி அவங்க கேட்பாங்க. முதல்லே, ஒரு நாளைக்கு ஒரு பாட்டு உருப்படியாய் போட்டுட்டு , ஒரு நாள் விட்டு பாருங்க. அப்புறம் கேட்பாங்க. அது உங்களாலே முடியாது. ஜலதோஷம் பிடிச்சாலும், அந்தக் குரல்லே ஜேசுதாஸைப் பிடிக்கிறேன்னு முயற்சி பண்ற ஆளு நீங்க. இதிலே சாதனை வேற . வாங்க , வந்து கீரையை ஆய்ங்க.'


போன் அடிக்கிறது.

நண்பர் சாம்பசிவம்.

'என்ன சார் , ரிடையர் ஆனப்புறம் பாடுறதிலே ரெம்ப பிசி ஆயிட்டீங்க போல இருக்கே. முந்தி எல்லாம், ' கதை புதிது' குழுவில் என்னோட கதைகள் பத்தி ஒரு பக்கம் விமர்சனம் போடுவீங்க .இப்போ வெறும் எமோஜி தான் . அதுவும் கை தட்டுற எமோஜி க்குப் பதிலா, பக்கத்திலே இருக்கிற அழுகிற மூஞ்சி எமோஜியைக் விரல் தவறியோ தவறாமலோ அழுத்தி விடுறீங்க. சோகக் கதைக்கு பரவாயில்லை. எல்லாத்துக்கும் இப்படிப் பண்றீங்களே சார் , இது நல்லா இருக்கா . '


'இல்லே சார், அது வந்து நீங்க எப்பவுமே சோகக் கதைகள் தானே எழுதுவீங்கள்னு நினைச்சு படிக்காமலே , அய்யய்யோ , உண்மை வந்திருச்சே , சாரி சார்' என்று சொல்லும் போதே அவர் தொலைபேசி கட் ஆனது.


போச்சு நம்ம பாட்டுக்கும் , கேட்டோ கேட்காமலோ கிடைக்கிற ஒரே ஒரு கும்பிடு எமோஜியும் காலி.


'ஏங்க ஒரு மாதிரி ஆயிட்டீங்க. ஏதோ சாதனைன்னு சொல்ல வந்தீங்களே. பாடுங்க . நான் கேட்டு எமோஜி போடுறேன். ஒரு எமோஜி வந்தாலே, உங்க பாட்டுக்கு அது ஒரு சாதனைதானேங்க '


---------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


சனி, 19 ஜூலை, 2025

வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை 

------------------


பசுஞ்சாணி பூசிவிட்டு 

மண்ணை  மெழுகி விட்டு 


வீட்டோரத் திண்ணைக்கு 

கோலமும் போட்டு வச்சா 


ஊருக்கு விருந்தாளி 

வந்தாக்க  உட்கார்ந்து 


ஆசுவாசம் செய்றதுக்கு 

அரட்டை நடிக்கிறதுக்கு 


சாராய வாசனையோடு 

சீட்டுக் கட்டோடு 


சாயந்திரம் வந்தார்கள் 

அயலூர்ப் பெருசுகள்


மறுநாள் திண்ணை 

வெறும் மண் திண்ணை 


------------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English  


பசி அறிந்தவன் - கவிதை

 பசி அறிந்தவன் - கவிதை 

-------------------------


பத்து மணி ஆனாலே 

ரோட்டோரம்  வந்து நிக்கும் 


அவனைப் பார்த்ததுமே 

வாலை ஆட்டிக்கிட்டு  


பாஞ்சு வருவதெல்லாம் 

பசியோட விளையாட்டு 


மிச்சக் காசிலே 

வாங்கின ரொட்டியினைப் 


பிச்சுப் போடுறதில் 

பிச்சைக்காரன் சந்தோசம் 


-----------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


கருக்காத மேகம் - கவிதை

 கருக்காத மேகம்  - கவிதை 

-------------------------


இந்த வருஷமும் 

தவறாமல் வருகை தந்த  


கூழைக்கடா, கொக்கெல்லாம் 

தேடிப் பார்த்தாலும் 


பச்சைப் பயிராக 

ஒண்ணுத்தையும் காணோம் 


உள்ளூரில் கஷ்டப்படும் 

உழவன் வயிற்றையே 


மதிக்காத மேகமெல்லாம் 

கருப்பாக மாறாது 


ஊரு விட்டு ஊரு வந்த 

பறவையின் பசிக்காக 


----------------------நாகேந்திர பாரதி 



My Poems in Tamil and English  


முடியாத வேண்டுதல் - கவிதை

 முடியாத  வேண்டுதல்  - கவிதை 

---------------------------------


கண்மாய்க் கரை மேட்டிலே 

கருத்த முனுசாமிக்குத்  

தேங்காய் உடைக்கணும் 


ஊர்க்கோயில் சனீஸ்வரனுக்கு 

மாசம் பூரா சனிக்கிழமை   

எண்ணை விளக்குப் போடணும் 


குலதெய்வம் கோயிலுக்கு 

அந்த வருஷம்  வயித்திலே

 மாவிளக்கு வைக்கணும் 


சிறுசுகளின் நோய் நொடிக்கு 

ஒவ்வொரு கோயிலிலும் 

வேண்டுதலை முடிச்சுட்டா  


பாடையிலே ஏத்து முன்னே அவுத்த  

பச்சைச் சேலையிலே 

முடிஞ்சு வச்ச ஒரு ரூபாய் 


எந்தச் சாமிக்கு, எந்தப் புள்ளைக்காக,   

சொல்லாமப் போய்ச் சேர்ந்தா 

சுடுகாட்டுக்குப் பெரியாயி 


-------------------நாகேந்திர  பாரதி 


My Poems in Tamil and English 


அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 அசோகமித்திரன் பரிசுக் கதைகள் மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு  --------------------  நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .  ஒரு   நாள் ...