சனி, 19 ஜூலை, 2025

வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை 

------------------


பசுஞ்சாணி பூசிவிட்டு 

மண்ணை  மெழுகி விட்டு 


வீட்டோரத் திண்ணைக்கு 

கோலமும் போட்டு வச்சா 


ஊருக்கு விருந்தாளி 

வந்தாக்க  உட்கார்ந்து 


ஆசுவாசம் செய்றதுக்கு 

அரட்டை நடிக்கிறதுக்கு 


சாராய வாசனையோடு 

சீட்டுக் கட்டோடு 


சாயந்திரம் வந்தார்கள் 

அயலூர்ப் பெருசுகள்


மறுநாள் திண்ணை 

வெறும் மண் திண்ணை 


------------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English  


பசி அறிந்தவன் - கவிதை

 பசி அறிந்தவன் - கவிதை 

-------------------------


பத்து மணி ஆனாலே 

ரோட்டோரம்  வந்து நிக்கும் 


அவனைப் பார்த்ததுமே 

வாலை ஆட்டிக்கிட்டு  


பாஞ்சு வருவதெல்லாம் 

பசியோட விளையாட்டு 


மிச்சக் காசிலே 

வாங்கின ரொட்டியினைப் 


பிச்சுப் போடுறதில் 

பிச்சைக்காரன் சந்தோசம் 


-----------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


கருக்காத மேகம் - கவிதை

 கருக்காத மேகம்  - கவிதை 

-------------------------


இந்த வருஷமும் 

தவறாமல் வருகை தந்த  


கூழைக்கடா, கொக்கெல்லாம் 

தேடிப் பார்த்தாலும் 


பச்சைப் பயிராக 

ஒண்ணுத்தையும் காணோம் 


உள்ளூரில் கஷ்டப்படும் 

உழவன் வயிற்றையே 


மதிக்காத மேகமெல்லாம் 

கருப்பாக மாறாது 


ஊரு விட்டு ஊரு வந்த 

பறவையின் பசிக்காக 


----------------------நாகேந்திர பாரதி 



My Poems in Tamil and English  


முடியாத வேண்டுதல் - கவிதை

 முடியாத  வேண்டுதல்  - கவிதை 

---------------------------------


கண்மாய்க் கரை மேட்டிலே 

கருத்த முனுசாமிக்குத்  

தேங்காய் உடைக்கணும் 


ஊர்க்கோயில் சனீஸ்வரனுக்கு 

மாசம் பூரா சனிக்கிழமை   

எண்ணை விளக்குப் போடணும் 


குலதெய்வம் கோயிலுக்கு 

அந்த வருஷம்  வயித்திலே

 மாவிளக்கு வைக்கணும் 


சிறுசுகளின் நோய் நொடிக்கு 

ஒவ்வொரு கோயிலிலும் 

வேண்டுதலை முடிச்சுட்டா  


பாடையிலே ஏத்து முன்னே அவுத்த  

பச்சைச் சேலையிலே 

முடிஞ்சு வச்ச ஒரு ரூபாய் 


எந்தச் சாமிக்கு, எந்தப் புள்ளைக்காக,   

சொல்லாமப் போய்ச் சேர்ந்தா 

சுடுகாட்டுக்குப் பெரியாயி 


-------------------நாகேந்திர  பாரதி 


My Poems in Tamil and English 


வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை  ------------------ பசுஞ்சாணி பூசிவிட்டு  மண்ணை  மெழுகி விட்டு  வீட்டோரத் திண்ணைக்கு  கோலமும் போட்டு வச்சா  ஊருக்கு ...