வெள்ளி, 14 ஜூன், 2024

பசி- சிறுகதை

 பசி- சிறுகதை 

--------------------


விட்டு வைத்திருக்கிறார்கள் குட்டி விழட்டும் என்று. தாய்ப் பாசம் கொஞ்சம் குட்டிக்குக் கிடைத்த பிறகு , அரிவாள் விழும் அந்த ஆட்டின் கழுத்தில் . அதற்கும் தெரியும் மனிதர்களின் நினைப்பு. இருந்தாலும் , ஏதோ ஒரு நம்பிக்கையை அசை போட்டுக்கொண்டு படுத்துக் கிடந்தது.


போன முறை கூட்டத்தோடு சேர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய் நிலங்களுக்கு உரமாக ஆட்டுப்புழுக்கைகளை கொடுத்து அடைந்து கிடந்த காலத்தில் நிகழ்ந்து அது. இப்போது குட்டியாக வயிற்றுக்குள் உருண்டு கொண்டு கிடக்கிறது . விதை விதைத்த கிடாவோ வேறு ஊர் போயாச்சு. இங்கே திரும்பி வந்து ஆடு மேய்க்கும் சொந்தக்காரன் வீட்டில் அடைந்து கிடக்கிறது .


சுற்றும் முற்றும் பார்த்தது. அந்தக் கிராமத்தின் தெறிக்கும் வெயிலில் தீப்பற்றாமல் அமைதி காக்கும் கூரை வீடுகள் தான் சுற்றிலும். எங்கோ தூரத்தில் ஒலிக்கும் ரெயில் சப்தம் . லேசாக ' மே ' என்று கனைத்து பசியை உணர்த்தியது. உள்ளே படுத்திருந்த கிழவன் முனகியபடி எழுந்திருந்தான். மகன் கிடை போடும் வேலைகள் முடிந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பும் வரை , இது போன்ற புள்ளைத்தாய்ச்சி ஆடுகளையும் , வயதான ஆடுகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஓடி விட்டால் பிள்ளை வந்து விளாசி விடுவான் வார்த்தையால்தான். பையன் மேல் கொஞ்சம் பயம் தான் கிழவனுக்கு.


என்னதான் வளர்த்து ஆளாக்கி விட்டாலும் . இப்ப வயதானபின் அவனை நம்பித்தானே கஞ்சித் தண்ணி. கிழவி போனபிறகு இன்னும் பயம். கடைசி காலத்திலே , ஆடுகளை ஓட்டிட்டுப் போற மாதிரி தன்னையும் எங்காவது ஓட்டிப் போயி அம்போன்னு விட்டுட்டு வந்துடுவானோ என்று. போன தடவை முக்குத் தெரு முனியன், தன்னோட அப்பனை இப்படித்தான் கூட்டிட்டுப் போனான். திரும்புறப்ப அவன் மட்டும் தான் வந்தான். அந்தக் கிராமத்து வழக்கம் தான்.


சில நகரங்கள்லே , பெருசுகளை காசியிலே கொண்டு போயி கழட்டி விட்டுட்டு வர்ற மாதிரி , பட்டிக்காட்டிலே இப்படி ஒரு பழக்கமும் நடைமுறை. காரணம் யாருக்குத் தெரியும். நல்லாத்தான் வளர்த்தாங்க புள்ளைங்களை. அதுக பெரிசான பிறகு, அதுகளோட வயித்துப்பாட்டுக்குத் தான் பாத்துக்க வேண்டியதா இருக்கு . வேலை பார்க்காத வயசானவங்க எல்லாம் ஒரு சுமையா ஆயிடுறாங்க . அதுகளோட பசியைத் தீர்க்கறது ஒரு பெரிய பொறுப்பாத் தெரியறது .


அந்தக் காலத்திலே வேற மாதிரி இருந்ததை யோசிச்சுப் பார்த்தான் கிழவன். குழந்தைகளை வளர்த்து பீ மூத்திரம் எடுத்து பார்த்துக்கிட்டாலும், வயசான பிறகு அதுகளுக்கு இதெல்லாம் எடுக்கிறது ஒரு அருவெறுப்பாய்த்தான் ஆயிடுறது . இழுத்துகிட்டு கிடந்த அவன் அப்பனை எண்ணை தேச்சு விட்டு குளிப்பாட்டி அனுப்பி வைச்ச ஞாபகம் வந்துச்சு. கிழவனுக்கு. இப்போ எங்கேயோ கொண்டு போயி விட்டுட்டு வர மாதிரி , இப்படி ஒரு நடைமுறை எப்படியோ வந்துடுத்து இந்தக் கிராமத்திலே.


அதுவும் பெரும்பாலும் கிழவி இல்லாத கிழவனையோ , அல்லது கிழவன் இல்லாத கிழவியையோ தான் இப்படி. ரெண்டும் சேர்ந்தும் இருக்கிற வரைக்கும் ஒண்ணை ஒண்ணு பார்த்துக்கிட்டு ஒப்பேத்திடுங்க வாழ்க்கையை. ஒண்ணு போயிட்டாலும் மத்தவங்க பாடு அதோ கதி தான். லேசான சலிப்புடனும் ,முதுமையின் களைப்புடனும் எழுந்து வந்தான்.


தனக்கு வேப்பிலை கொண்டு வந்து போடுற கிழவனைப் பரிதாபமாகப் பார்த்தது அந்தச் சினை ஆடு . அதுக்கும் தெரியும் . வெளியூர் போன இடங்களில் இப்படி விட்டுட்டு வந்தவங்களை எல்லாம் பார்த்து வந்தது தானே. சொந்த பந்தங்களையே இப்படி நடத்துற இந்த மனுஷங்க, 'கறிக்காகவும் , குட்டிகளுக்காகவும் காசுக்காக வளர்க்கிற தன் மேலேயா பரிதாப்படுவாங்க' என்று ஒரு முறை யோசித்த படி தன் பசி போக்க, இலைகளை அசை போட்டு மெல்ல ஆரம்பித்தது. யோசித்துப் பார்த்தால் , தான் உட்பட எல்லோருக்கும் பசி. நமக்குத் தாவரத்தின் மேல் பசி. அவங்களுக்கு நம்ம மேலேயே பசி .


பசி போக ஆரம்பித்ததும் தப்பிப்பது பற்றியும் யோசனை செய்ய ஆரம்பித்தது ஆடு .


-----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பசி- சிறுகதை

 பசி- சிறுகதை  -------------------- விட்டு வைத்திருக்கிறார்கள் குட்டி விழட்டும் என்று. தாய்ப் பாசம் கொஞ்சம் குட்டிக்குக் கிடைத்த பிறகு , அரி...