உடைந்த கடிகாரம் - குறுங்கதை
-----------------------------------
வானத்தில் பறக்க நினைக்கும் மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் கண்களை மறைக்கும் கண்ணாடியில் கூட கடிகாரங்கள் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் மகள் . நேர மேலாண்மையில் நெருப்பு அவர். அது போல் அவரின் பாதி உதடுகள் உச்சரிப்பதைப் புரிந்து பார்த்து நடந்து கொண்டால் தப்பித்தாள் அவள். இல்லையென்றால் தண்டனை தான்.
அவள் பின்னல் முடிச்சில் ஒன்று பிரிந்து இருந்ததைப் பார்த்து ஒரு நாள் முழுவதும் பேசவில்லை அவர். ஒழுங்கும் நேரமும் கொஞ்சம் தவறினாலும் அவர் காட்டும் கடுமையும் கொடுமை தான். தாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் அவள் . அவரின் அன்பின் அளவும் தெரியும் அவளுக்கு என்பதால். தாயை இழந்த அவள் எங்கும் தவறி விடக் கூடாது என்ற கண்டிப்பில் ஒரு கருணையும் கலந்து இருப்பதும் புரியும் அவளுக்கு. ஆனால் பலூன் போல் சுதந்திரமாகப் பறக்க விரும்பும் அவள் ஆசைகளை , ஒரு சின்னக் குண்டூசியால் குத்தி உடைத்து விடும் கண்டிப்பு அது என்பதை எப்படி அவருக்குப் புரிய வைப்பது.
ஒரு நாள் இருவரும் கோயிலுக்குச் சென்ற தருணம் அது. அங்கே பல குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தனர் . தாறுமாறாகத் திரியும் அவை வாகனங்களின் வேகத்தைப் புரிந்து கொள்ளாமல் வீதியின் குறுக்கே ஓடி விளையாடியதை ஒழுங்கு படுத்த முடியாமல் தவிக்கும் தாய்மார்களைக் கவனித்தனர் இருவரும். ஒரு தாய் ஒரு குழந்தையை அடித்து இழுத்துச் சென்றாள். அழுதபடி சென்றது அது. இன்னுமொரு தாய் ஒரு குழந்தையை அணைத்து முத்தமிட்டு அமைதிப்படுத்தி இழுத்துச் சென்றாள். அது சிரித்தபடி சென்றது தாயோடு .
திரும்பிப் பார்த்த மகள் தந்தையின் கண்ணாடியில் ஒட்டியிருந்த உருவகக் கடிகாரம் உடைவதைக் கவனித்தாள் . அவள் மனம் லேசாகிப் பலூனாகிப் பறக்க ஆரம்பித்தது. தனது பின்னலின் ஒரு முனையைப் பிரித்து விட்டுச் சிரித்தாள். அவரும் சிரித்தார் .
-------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English