புதன், 10 டிசம்பர், 2025

சக்தி - சிறுகதை

 சக்தி - சிறுகதை 

---------------

( கதை புதிது குழுவில் ) 


அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும்   சுறுசுறுப்பு .  அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின்  பள்ளி ,  கணவனுடன்  அனுசரணை  , அலுவலக ஆட்டோ, வேலை செய்வதிலும், வாங்குவதிலும் இருக்கும்  வேகம், விவேகம், திரும்பியதும் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் கிடைக்கும் அமைதியும் அறிவும். பூஜை அறையில் வெளிப்படும் அவளின் சங்கீதம், குடும்பத்துடன்  இயைந்த பரிவு, உணவு, இரவில் கணவனுடன் கொஞ்சம் போக்கு காட்டி பின்பு பூக்கும்  சரசம். இதுதான் சக்தி. 


வழக்கமான வாழ்வின் இடையில் வந்த குறுக்கீடு அந்த போன் கால். இதோ அவள் கையில் போனோடு , சிந்தனையோடு .  ஆம். அவனிடம் இருந்து தான் . கல்லூரிக் காலத்தில் பருவத்தின் கிளர்ச்சியில் கிடைத்த  ஒரு அனுபவத்தின் அடையாள ஆண்மகன். எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது இந்த போன் .


 'உன்னை மறக்க முடியவில்லை. நீ மணமுடித்துப் போனது தெரியும். கல்லூரியில் நீ திடீரென்ற நின்ற காரணமும் புரியும். என்னிடம் உன்னை  இழந்து விடுவாயோ என்ற பயத்தில் நீ  உடனே ஒத்துக்கொண்ட அந்த உடனடித்  திருமணத்தில் நீ மகிழ்ந்திருக்கலாம். ஊர் விட்டு ஓடி ஒளிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இத்தனை வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது.. உன்னைத் தேடிக்   கொண்டு இந்த டெல்லி வந்து சேர . உன் அலுவலகம். உன் கணவனின் அலுவலகம், உன் குழந்தையின் பள்ளி  எல்லாம் கண்டு கொண்டு, இன்டர்நெட் உதவில்  உன் போன் நம்பர் கண்டுபிடித்து இந்த போன். ஒருமுறை பார்க்க வேண்டும். பேச வேண்டும். போய் விடுகிறேன் உடனே . ஒத்துக்கொள். எப்போது வர.வேண்டும், உன் கணவன் இல்லாத நேரம் ' என்று சொல்லி விட்டு உடனே போனை வைத்து விட்டான்.


 ஒரு நிமிடம் யோசித்தவள், திரும்ப அதே நம்பருக்கு போன் செய்தாள்.

' இன்று மாலை ஆறு மணிக்கு வா, என் கணவர் இருக்கும் நேரத்தில் வா,.  நான் அவரிடம் நம் பழக்கம் பற்றி இது வரை ஒன்றும் சொல்லவில்லை. நீ வந்து முதலில் சொல்.  '

' பழக்கமா,  அது காதல் அல்லவா ' 

'இல்லை, அந்தப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் உன்னிடம். அதற்கு காதல் என்ற பெயர் இல்லை. இதோ, என் கணவனிடம்  எனக்கு உள்ளதே , இதற்குப் பெயர் தான் காதல். உனக்குப் புரியாது. வந்து எங்களைப் பார்த்தவுடன் உனக்குப் புரியும். எனக்கு அப்போதே இந்தப் பழக்கத்தின் போக்கைப்  பற்றிய புரிதல் வந்ததால்தான்  உடனே  விலகினேன். உனக்கு அது இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது. வந்து பார் எங்களிடம் பேசு , உனக்குப் புரியும். வா நண்பா'  என்று வைத்தாள் போனை. 


வழக்கம் போல் அந்த நாள் தொடர்ந்தது , அவளிடம் எந்த அதிர்ச்சியும், பரபரப்பும் இல்லாமல் . ஆட்டோ.  ஆபீஸ். அதே வேகம், விவேகம். மாலை வீடு . ஆறு மணி, குழந்தையுடன் விளையாட்டு. கணவனுடன் காபி. அவன் வரவில்லை. அவள் சொல்லவில்லை. அவள் சக்தி. 


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


மழைத்துளியின் பயணம்- கவிதை

 மழைத்துளியின் பயணம்- கவிதை 

-------------

( கவிதை வனம் குழுவில் ) 


விண்ணில் இருந்து

விழுந்தது மண்ணில்

வெளியும் உள்ளும்

வாங்கியது பூமி


வெளியின் துளிகள்

குளமாய்க் குழியாய்

ஆறாய் அருவியாய்

வெள்ளமாய்க் கடலாய்


கடலில் சேர்ந்தது

மறுபடி மேகமாய்

விண்ணுக்கும் மண்ணுக்கும்

பரிசாய்ப் பாலமாய்ப்


பொங்கிப் பெருகி

முதலும் முடிவும்

ஒன்றென்று வாழ்வுக்கு

உணர்த்தி ஓயும்

------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


வேர்களின் வியர்வை - கவிதை

 வேர்களின் வியர்வை - கவிதை 

-------------

(கவிதை வனம் குழுவில் ) 


நட்பின் வளர்ச்சி

நம்பிக்கை நடத்தை


உறவின் வளர்ச்சி

உண்மை அன்பு


வாழ்வின் வளர்ச்சி

வற்றாத உழைப்பு


நாட்டின் வளர்ச்சி

நன்னெறி ஒழுக்கம்


தமிழின வளர்ச்சி

தாய்மொழிப் பற்று


விருட்சத்தின் வளர்ச்சி

வேர்களின் வியர்வை


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


தீபம் - ஹைக்கூக்கள்

 தீபம் - ஹைக்கூக்கள்

———

(கவிதை வனம் குழுவில் ) 


தூண்டிடும் திரியால்

துளிர்விடும் தீபம்

அன்பே குச்சி

——


அணையா தீபமொன்றை

நமக்குள் உருவாக்கும்

நம்பிக்கை நெருப்பு

——


இல்லையென்றால் இருட்டு

இருந்தால் வெளிச்சம்

அவளும் தீபமும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கரை சேரும் ஓடங்கள் - கவிதை

 கரை சேரும் ஓடங்கள் - கவிதை 

—————

(கவிதை  வனம் குழுவில் ) 


இன்பமும் துன்பமும்

இரண்டு பக்கங்கள்


மாறி வருபவை

மாற்றி வைப்பவை


வலியை அறிந்தால்தான்

வாழ்க்கை புரியும்


புரிந்த வாழ்க்கைக்கு

இரண்டும் ஒன்றுதான்


புயலைத் தாண்டி

கரை சேரும் ஓடம் தான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


திங்கள், 8 டிசம்பர், 2025

மௌனத்தின் மொழி - கவிதை

 மௌனத்தின் மொழி - கவிதை 

———-

( கவிதை வனம் குழுவில் ) 

ஓரப் பார்வையும்

உதட்டுச் சுழிப்பும்


மூக்குச் சிவப்பும்

முந்தானை உதறலும்


நாக்கு மடிப்பும்

நளின நடையும்


நீட்டும் விரலும்

நிமிர்ந்த கழுத்தும்


சொல்லாத குறிப்பையா

சொற்கள் சொல்லிவிடும்


மௌனத்தின் மொழி போதும்

மங்கையே வா பக்கம்


இதழில் எழுதிடவே

ஏராள மொழி உண்டு


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


தமிழெனும் அமுது - கவிதை

 தமிழெனும் அமுது - கவிதை 

——-

(கவிதை வனம் குழுவில் ) 

அறத்தையும் மறத்தையும்

அறிந்திடச் செய்ததால்


உறவையும் நட்பையும்

உணர்ந்திடச் செய்ததால்


நன்னெறி நடத்தையை

நமக்குள் கொடுத்ததால்


ஊட்டி வளர்த்ததால்

உருவாக்கி விட்டதால்


தாய்ப்பாலும் அமுது தான்

தாய் மொழியும் அமுதுதான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


காத்திருப்பின் சுகம் - கவிதை

 காத்திருப்பின் சுகம் - கவிதை 

——-

( கவிதை வனம் குழுவில் ) 


பூத்திருக்கும் பூவும்

காத்திருந்தது மொட்டாக


பழுத்திருக்கும் பழமும்

காத்திருந்தது காயாக


இயற்கைக்கு மட்டுமா

வாழ்க்கைக்கும் காத்திருப்பே


காத்திருந்த கரு தான்

சிசுவாகி சிரம் காட்டும்


உழைப்பைக் கொடுத்துவிட்டு

சுகமாகக் காத்திருந்தால்


ஊதியம் மட்டும் அல்ல

உயர்வும் பதவியிலே


காரியத்தில் மட்டுமா

காதலுக்கும் காத்திருப்பே


காத்திருந்த சுகக்கனவு

காதலிலே சுபமாகும்


பார்த்திருந்த பாவையுமே

பரிவோடு கைப்பிடிப்பாள்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


புதன், 3 டிசம்பர், 2025

விடியலின் நம்பிக்கை - கவிதை

 விடியலின் நம்பிக்கை - கவிதை 

——

(கவிதை வனம் குழுவில் ) 


போகின்ற சூரியனும்

காலையில் திரும்புவான்


தேய்கின்ற சந்திரனும்

திரும்பவும் வளர்வான்


உதிர்கின்ற பூவுக்குள்

உருவாக்கும் விதை உண்டு


விழுகின்ற மழையால்தான்

விளைகின்ற பயிரெல்லாம்


போவதும் தேய்வதும்

உதிர்வதும் விழுவதும்


இயற்கையின் வழியிலே

எழும்பிட மலர்ந்திட


துன்பத்தின் தொடர்ச்சியாய்

வருவது இன்பமே


விடியலை நம்பிடு

விழுந்ததும் எழுந்திடு


——- நாகேந்திர பாரதி



My Poems in Tamil and English 


சனி, 29 நவம்பர், 2025

வைரத்தோடு - நண்பர்களின் சங்கிலித் தொடர் கதைகளின் முடிவு

 வைரத்தோடு  - நண்பர்களின் சங்கிலித் தொடர் கதைகளின்  முடிவு 

------------------------

(கதை  புதிது குழுவில் நண்பர்கள் சங்கிலித் தொடராய் எழுதிய சிறுகதைப் பகுதிகளின் முடிவுப் பகுதி    

முன்  சுருக்கம் : தங்கையின் அடகு நகை திருப்ப அண்ணன் அம்மாவின் வைரத் தோடை அடகு வைக்க முடிவு செய்ய அது இருந்த இடத்தில் அதற்குப் பதில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருக்க அவன் குழம்ப , போலீஸ் அழைத்து குப்பைத் தொட்டியில் கிடந்ததாக  வைரத் தோடு திரும்பக் கிடைக்க அவனின் குழப்பங்களுக்கு முடிவு இந்தப் பகுதியில் - - நாகேந்திரபாரதி ) 

----------

அப்போது வாசலில் இருந்து மகன் பாபு குரல். 'அப்பா, அந்தக் குரங்கு மறுபடி வந்திருக்கு ' என்றான். 'எந்தக் குரங்குடா ' என்றபடி வெளியே வந்தவனைப் பார்த்து குரங்கு 'உர்' என்றது, அவன் கையில் இருந்த பையை உற்றுப் பார்த்தபடி. ஸ்டேஷனில் இருந்து வந்து, வீட்டுக்குள் நுழைந்தவன் உடனே கமலாவிடம் பேசி விட்டு குழப்பத்தில் இருந்ததால் , போலீஸ் கொடுத்த வைரத் தோடு இருந்த பையைப் பீரோவில் வைக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கிறான்.


'அப்பா, அந்தப் பையை உள்ளே கொண்டு போய் வைங்க . அம்மா வெளியே அவசரமா போனப்ப கூட, அம்மா கையிலே இருந்த பையைக் 'கப்பால்' ன்னு இழுத்துட்டு போன அதே குரங்கு தாம்பா . அம்மா பின்னாலேயே துரத்திப் போயிட்டு, ஆட்டோ பிடிச்சு எங்கேயோ போயிட்டாங்க. '


அப்போதுதான் காய்கறி பழப் பையோடு உள்ளே வந்த சரவணனின் அம்மா, ' உஸ் ' என்றபடி 'இந்தாடா , பாபு , இந்த வாழைப்பழத்தை அந்தக் குரங்குக்குக் கொடு ' என்றதும் குரங்கின் கவனம் வாழைப்பழம் பக்கம் திரும்ப , பாபுவின் கையில் இருந்த பழத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓடியது . குப்பைத் தொட்டி அருகே காத்துக் கொண்டு இருக்கும் அதன் குட்டிகளைத் தேடி .


' என்னடா சரவணா, இது என்ன பை, இதை இங்கே வச்சுக்கிட்டு என்ன பண்றே .உள்ளே வா' என்றவனுக்கு அம்மாவிடம் அவளது வைரத் தோட்டை எடுத்துக் காண்பிக்கும் ஆசை அவனுக்கு உந்தியது .உள்ளே வந்து அந்தத் தோடு இருந்த நகைப் பெட்டியை எடுத்துக் கொடுத்ததும் அம்மாவின் முகத்தில் நூறு வாட் பல்பு வெளிச்சம். 'சும்மா வச்சுப் பார்க்கிறேன் . காதுதான் தூர்ந்து போச்சே ' என்று வருத்தத்துடன் சொன்னாள்.


' உங்க அப்பா ,ஆசையோட ,அந்தக் காலத்திலே நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தது. அவரு மாசச் சம்பளமே அப்போ அம்பது ரூபாய் தான். ஒரு வருஷம் எப்படியோ மிச்சம் பிடிச்சு வாங்கிக் கொடுத்தது. இப்ப லட்ச ரூபாய்க்கு மேலே இருக்கும்ல மதிப்பு' என்றாள் .


'ஆமாம்டா, லட்சம்னதும் இன்னொண்ணு ஞாபகம் வருது , சொல்ல மறந்து போயிடுச்சு . உன் அண்ணன் நேற்று நீ வெளியே போனப்போ வந்ததைச் சொன்னேன். இதைச் சொல்லலே. வயசானா இப்படித்தான் போலிருக்கு 'என்று சலித்துக் கொண்டவள் 'வந்தவன் சொன்னான். நீ, கோகிலாவோட ரெட்டை வடம் திருப்பறதுக்கு ரூபாய் கேட்டாயாமே . உடனே புரட்ட முடியலியாம். இப்ப கிடைச்சிருச்சாம். கொடுத்துட்டுப் போனான். இந்த மாதிரி பாசக் கார அண்ணணுங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் அவ.'


' நூறு ரூபாய்க் கட்டு பத்து. ஒரு லட்சமாம். பையை வாங்கி நேத்தே உள்ளே பீரோ லாக்கரில் பத்திரமா வச்சுட்டேன்.சொல்ல மறந்துட்டேன் . போய்ப் பார்த்துக்கோ ' என்றபடி, சரவணன் கொடுத்த நகைப் பெட்டியைத் திறந்தாள் .


' உனக்குத் தான் வயசாயிடுச்சு . கமலாவுக்குமா. அவ கூட சொல்லையேம்மா ' என்றவனிடம். ' அவ பாவம்டா, நேத்திலே இருந்தே , ஏதோ டென்ஷனா இருந்தா, இன்னிக்கும் காலையிலேயே நீ தூங்கிக்கிட்டு இருந்ததாலே உன்கிட்டேயும் சொல்லாம கிளம்பிட்டா ' என்றாள்


சரவணன் மனதிற்குள் ' ஓஹோ, பழைய வீட்டை விக்கிற வருத்தமாக்கும் , இருந்தாலும் வைரத் தோடை மட்டும் எடுத்துட்டுப் போக தெரிஞ்சிருக்காம். பத்திரப் பதிவு அலுவலகத்தில், அவ அண்ணன் கூட அண்ணி வந்திருப்பா, அவளுக்கு முன்னாடி இந்த வைரத் தோடுகளைப் போட்டு பெருமை அடிச்சுக்க நினைச்சிருப்பா , இந்தக் குரங்கு வந்து கெடுத்துடுச்சு ' என்று நினைத்துக் கொண்டான் .


பளபளக்கும் வைரத் தோடுகளை எடுத்து தன் தூர்ந்து போன காது ஓட்டைகளில் வைத்தபடி ' எப்படிடா இருக்கு ' என்று பொக்கை வாய் திறந்து சிரிக்க, உள்ளே வந்த பேரன் பாபு ' உன் முகமும் வைரத் தோடும் சேர்ந்து ஜொலிக்குது பாட்டி ' என்றதும் , வெட்கத்துடன் குனிந்தவள் கண்கள் உடனே கலங்கின அவள் கணவனை நினைத்து .


---------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English


சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு (கட்டுரை)

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு (கட்டுரை)

---------------

நன்றி  அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே 

போப்பு அவர்களின் சிறுகதை ' கூடாரம்  ' 

வானக் கூடாரம் வறண்டு போனதால் வாழ்க்கை அற்றுப் போன ஒரு கிராமத்தின் மக்கள்  சர்க்கஸ் கூடாரம் போட்டு வாழ வந்திருக்கும் நாடோடி மக்களுக்கு கஞ்சி ஊற்ற வழி இன்றிக்  கவலைப்படும் கதை. 

வர்ணனைகளும் உரையாடல்களும் அந்தக் கிராமத்திற்கே நம்மை இழுத்துச் செல்கின்றன. 

மேலத்தெரு சந்தைக்கு சின்னமனூர் சர்க்கஸ் வந்திருக்கிறது  என்று முதல் வரியிலேயே சட்டென்று நம்மைக் கதைக்குள் கூட்டிச் சென்று விடுகிறார் ஆசிரியர் . அடுத்து வருவதெல்லாம், அந்த  கிராமத்தின்  கடந்த காலத்தில் அந்தக் கிராம மக்கள்  இது போன்ற நாடோடிக் கூட்டத்திற்குச் செய்த உதவிகளின் விபரங்கள். அந்தக் கிராமக் காட்சிகள். அந்த நாடோடிகள் வாழ்க்கை முறை. வானம் பார்த்த வாழ்க்கையின் சோகங்கள் . எனது பள்ளிப்பருவ வாழ்க்கைக்கு இழுத்துச் சென்ற  விபரங்கள் எல்லாமே  .


விவசாயம் நன்றாக விளைந்த அந்தக் காலத்தில் இது போன்று கிராமத்திற்கு வரும் வில்லுப்பாட்டு பாடுகிறவர்கள், பாவைக்கூத்து நடத்த வந்தவர்கள், சைக்கிள் சுத்துகிறவர்கள் என யாருக்கும் ,துண்டு விரித்து நாலு காசு பார்க்கும் வரையிலும் வயிறு காய விடாமல் குளிரச் செய்வது சாதி பாகுபாடு இல்லாமல் ஊரின் பொறுப்பாக இருந்தது.

கதை ஆரம்பத்தில் சர்க்கஸ் வருவதை அறிந்து அந்தக் கிராமத்துப் பிள்ளைகள்  காட்டுகிற குதூகலம் ஆசிரியரின் வார்த்தைகளில்  இப்படி.

எல்லாத் தெருப் பிள்ளைகளும் கூச்சலைக் கிளப்பிக்கொண்டு மந்தையை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

ஒன்றுக்கும் இடுப்பில் இருந்தால் மேலே இல்லை, மேலே இருந்தால் இடுப்பில் இல்லை. இடுப்பில் இல்லாததுகள் கிடுகிடுவென ஆட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவர்களுக்கான செய்தி எப்படியும் சீக்கிரமாக எட்டி விடுகிறது.

அந்த சர்க்கஸ்  கூடாரத்திற்கு செய்யக்கூடிய முன்னேற்பாடுகள் வர்ணனைகள் கனகச்சிதம்.

மந்தையில் மரங்கள் நிற்கும் பகுதி, மழை நின்ற வேகத்தில் சர்க்கஸ்காரர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. என்றென்றைக்கும் இருந்து கொண்டிருப்பது போல் கிளைகளில் தூளிகள் ஆடின. ஆட்டத்தில் ஒன்று இரண்டாக நீர்த்துளிகள் சொட்டின. காற்றுக்கு அணைப்பாக மண் மேடையை ஒட்டி அடுப்பு கூட்டியிருந்தார்கள். பெரியபெரிய முட்டுகளைக் கட்டி உலை கொதித்துக் கொண்டிருந்தது. நம்ப முடியாத இடங்களில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

டிக்கட் நன்றாகப் போவதற்கான அறிகுறிகள் இருந்தால் அடர்த்தியான மூத்திர மற்றும் மாமிச கவிச்சி வாடையுடன் சிங்கம், புலி கூட_வாடகைக்கு எடுத்து வரப்படும். –

நெருப்பு வளையங்களில் ஐந்து நிமிடம் தாவிக்குதிக்க வரும் போது அவை இஷ்டத்திற்கு நீட்டி நெளிந்து கொள்ளும். மற்றபடி காடுகளைச் சுற்றிய கால்கள் கூண்டுக்குள் அடை பட்ட தவிப்பில் ராப்பகலாய் உறுமுவது இரண்டு மூன்று ஊர்களுக்கு கேட்கும். ஜாமத்தில் மூத்திரம் பெய்ய எழும் தாய்மார்கள் உறுமல் சத்தம் கேட்டு. “அய்யோ பாவம்” என்று சொல்லிக் கொண்டு படுப்பார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு ஊர் வீதமாக, மிருகங்களைப் போல ஒலி எழுப்பிக் கொண்டு மாணவர்கள், சிறப்புக் காட்சிக்கு வாத்தியார்களின் பாதுகாப்புடன் வருவார்கள். ஆசிரியர்களுக்கு இலவசம்.

அடுத்து அந்தக் கிராமத்தின் வறுமைக் காட்சி. நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் வர்ணனைகள்

“நல்லா இருட்டிக்கிட்டு வந்தது. போக்கு காட்டீட்டு போயிருச்சு அங்கிட்டாச்சும் பெஞ்சதா இல்ல அங்கயும் இதே பூனமூத்திரம்தானான்னு பாத்திட்டு வரலாம்” என்று மேகங்களைத்

துரத்திப் பிடிக்கிற ஆத்திரத்தில் போனார்கள்.

இப்பிடி கழுதப்பொட்டு பண்ணுனா எப்பிடி, இங்க இருக்குற உகர்ல்லாம் மண்ணத்தின்னா ஜீவிக்கிறது?”

பதில் கிடைக்காத கேள்வியை ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கேட்டுக் கொண்டார்கள். ஊரை அனல் காற்று சுத்திச்சுத்தி வருகிறது. வேலிக்கருவேலம் கிளைகள் படர்ந்து வந்து அடைகாப்பது போல ராத்திரி நேரங்களிலும் அனலை ஊருக்குள் காத்து வைக்கிறது. எப்போதும் உனக்கா எனக்கா என்று விறைத்து நிற்கிற பனைமரம் கூட தோற்று முண்டமாகி விட்டது. மாடு கன்னுகள் ஓடைக் கரைகளில் புல்லின் வேர்களை கொம்பால் முட்டி முட்டி எடுத்து அசை போடுகின்றன. எல்லாம் புட்டம் வற்றி நெரு நெருவென மணல் சாணியாய் கருப்பாக கழிந்து கொண்டு திரிகின்றன. நிலைமையை புரிந்து கொண்டு நாய்கள் கூட தெருக்களைச் சுற்றி வருவதில்லை. விடிந்து வெயில் ஏறுமுன் கம்மாய்களுக்குள் ஓடிவிடுகின்றன.

மனங்குளிர நீள்கிற அம்மாக்களின் கைகள் திகைத்துப் போயின. மூலையில் நிற்கிற அடுக்குப் பானைகளில் கடைசி ஐந்தாறு தானியமணிகளை விட்டு நீங்கள்தான் விழித்திருந்து தரித்திரப்பேய்கள் புகுந்து ஆட்டங்கட்டாமல் காத்துக் கொடுக்கவேண்டும் என்று

கேட்டுக்கொண்டார்கள்.

தொடருவது சில வருடங்களுக்கு முன்பு மழை பெய்து செழிப்பாக இருந்த காலத்தில் அவர்கள் இந்த நாடோடிகளை கவனித்துக்  கொண்ட விதம் .

ஏழெட்டு வருசம் முன்னர்… எண்பது வயசு கிழவன் முதல் ஒரு பச்சை குழந்தை வரையான ஒரு பெரிய குடும்பம் வந்து பிள்ளையார் கோயில் மரத்தடியில் பேச்சு மூச்சு இல்லாமல் குன்னிப் போய்க்கிடந்தது. எல்லாரும் பதறிப் போய் முகத்தில் தண்ணியடித்து பானகம் கரைத்துக் கொடுத்தார்கள். அந்தக் குழந்தை மூடின கண் மூடினபடியே இருக்க எத்தனையோ முலைகள் மாற்றிப் பால் குடித்தது.

அவர்களின் தார்பாய்ச்சிக் கட்டும், பொம்பளங்களின் கத்தாழைப்பழ நிறப் பாவாடையும் முக அம்சமும் ரெம்ப தூர தேச ஆட்கள் என்றும், வெறும் வயித்துப் பாட்டுக்கு வந்தவர்கள் அல்ல என்றும் சொல்லியது. அவர்களுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தெலுங்கு வார்த்தைகளைக் கொண்டும், ஊரிலேயே சில மாதங்களாகத் தங்கிவிட்ட, இமயமலை எல்லாம் சுற்றிவந்த சாமியாருக்குத் தெரிந்த பாஷைகளைக் கொண்டும் கொஞ்சங் கொஞ்சமாக தெளிவு

கிடைத்தது.

ராமேஸ்வரம் தீர்த்தமாட ஒரிசாவிலிருந்து வந்திருக்கிறார்கள். பணப்பை எங்கேயோ கை தவறிவிட்டது “யாரும் கன்னம் வச்சி எடுத்திருப்பாங்களோ?” என்று கேட்டதற்கு,

“எம் மனசறியாம நான் அப்படி சொல்ல மாட்டேன்” என்றார் அந்தப் பெரியவர்.

ஊரிலேயே நாலு நாள் தங்க வைத்து உடம்பிலே தெம்பேற்றினார்கள். கோதுமை ரொட்டி திங்கிறவம்சம் அது என்று மேரி டீச்சர்கூட கோணமாணையாக சுட்டுக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வீடு காசுசேர்த்து வழிச் செலவுக்கும் கொடுத்து விட்டார்கள்.

பிரியும் போது பெரியவர் கம்மாக்கரையில் நின்று கையை உயர்த்தி தாரைதாரையாகக் கண்ணீர்விட்டார். அந்தக் கண்ணீர்தான் மூன்று வருசமாக மடைதிறக்க விடாமல் வயல்களில் மீன்கள் துள்ளும் மழையாக ஊத்திக்கொட்டியது.

அப்படி நம்பிக்கை பாய்ந்த ஊர்.

அடுத்து இப்போது அந்த நிலை  மாறி இந்த சர்க்கஸ் கூடாரத்தைக் கலைத்து விட்டுப் போகச்சொல்லும் கண்ணீர்க் காட்சி .

தங்கள் மனப்பாரத்தைத் தூணில் சாய்த்து உட்கார்ந்திருந்தார்கள். எல்லாம் பேசிமுடித்த பின்னும் அசங்க முடியவில்லை. நம்ப நிலைமை இப்பிடி ஆச்சே. மூஸ்மூஸென்று வெறும் பெருமூச்சுதான் விட முடிந்தது.

மலைமலையா தானியங்களை அடித்துக் குவித்த ஊர்தானா இது. பிதுங்கப் பிதுங்க பருத்தித் தாட்டுகளைக் கட்டி பெருமைப்பட்ட ஜனங்களா நாம்.

சாலையெல்லாம் மிளகாய்நெடி கமற சாரைசாரையாக விருதுநகருக்கு வண்டி ஓட்டிப்போன காலமெல்லாம் முடிஞ்சு போனதுதான. நம்ம சீவன் நிம்மதியாப் பிரியாதா.

அடுத்தநாள் வெயில் தாழ சர்க்கஸ் ஆட்களில் பொறுப்பானவர்கள் மூன்று பேரைக்கூட்டிக்கொண்டு திரி குத்துகிற சூதாடிகள் போல் கம்மாய் மரங்களுக்குள் போனார்கள். ரெண்டும் அஞ்சுமாக சேர்ந்த இருநூத்தி சில்லரை ரூபாய்களை வெற்றிலைக்குள் அடக்க முடியாமல் வைத்துச் சொன்னார்கள், ‘அய்யா புண்ணியவான்களே ஒங்களக் கையெடுத்து கும்பிடுறோம்’. இதோட மாட்டுக்கு நாலு நாள் தீவனமும் அரை மூடைக்கு கொறையாம தானியமும் தர்ரோம். வெள்ளி மொளைக்கு முன்ன ரெண்டாம் பேருக்குத்தெரியாம கிளம்பிப் போயிருங்கைய்யா. எங்க ஆயுசுக்கும் இப்பிடிக் கண்டதில்ல.

கூடாரத்தப் போட்டு வெத்து டப்பாவ தட்டிக்கிடு இருந்திங்கின்னா அந்தக் கொடுமையத் தாங்காம இருக்குற கொஞ்ச நஞ்ச பச்சையும் பொசுங்கிப் போய்ரும். கண் காணாத தேசத்துக்கெல்லாம் கூட வெளைய வச்சத கட்டுப்படியாச்சோ இல்லியோ நல்ல மனசாத்தான்

அனுப்பி இருக்கோம்.

யார்யாரோ நல்லா இருக்காங்க. மண்ணக்கட்டிப் பொரள்ற நாங்க இப்பிடியாகிப் போனோம்.எங்கள நம்பி வந்த உங்கள இப்பிடி அனுப்புறது ஞாயமில்லதான். என்ன பண்ண…? மண்ணு குப்புறப் படுத்துக்கிச்சே…!”

“எப்பிடியாச்சும்…’

“அய்யா… நீங்க ஒண்ணும் பேசப்படாது. நடங்க… போகும்போது நல்ல வார்த்தை சொல்லாட்டாப் போகுது எதுவும் சபிச்சீடாதீங்க..”

பரமனுக்கு கண்காட்ட, அவன் காக்கி ட்ரவுருக்குள் இருந்து பாட்டிலை எடுத்தான்.

“இந்தாங்க மனத் தைரியத்துக்கு இத ஊத்திக்கிடுங்க”.


ஆரம்பத்தில் குழந்தைகளின் குதூகலத்தில் ஆரம்பித்த கதை , குழந்தைகளின்  கனவுகளில் இப்படி  முடிவது உருக்கம்

இன்றிரவும் பிள்ளைகளின் உறக்கத்தில் கனவு வரும், கனவில் சோம்பல் நெளித்துப் பிளக்கும் புலியின் வாயில் பட்டாணியை எறிவார்கள். சர்க்கஸ் டிக்கட்டுக்காகவும், யானைக்கும் குரங்குக்கும் தர வாழைப்பழம் வாங்கவும் காசு சேர்க்க ஓடிஓடி வேப்பமுத்தும் புளியமுத்தும் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.


அந்தக் கிராமத்திற்கே சென்று வாழ்ந்து வந்து அனுபவத்தை இந்தக் ' கூடாரம் ' கதையின் மூலம் கொடுத்த எழுத்தாளர் ‘’போப்பு ' அவர்கட்கு நன்றி. வாய்ப்பு அளித்த அழகியசிங்கருக்கு நன்றி. வணக்கம். 


-------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


சக்தி - சிறுகதை

 சக்தி - சிறுகதை  --------------- ( கதை புதிது குழுவில் )  அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும்   சுறுசுறுப்பு .  அலுவலகத்திலும் சரி வீட்டிலும...