வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தாய்க்கிழவி - பட விமரிசனம்

 



தாய்க்கிழவி - பட விமரிசனம் 

-------

படம் பார்க்கிற ரெண்டு மணி நேரத்திலே, ஸ்மூலில் தமிழ்ப் பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்யலாம் , டோஸ்ட்மாஸ்டர் ஆங்கிலப் பேச்சு பேசி பிராக்டிஸ் செய்யலாம் என்று நினைக்கும் என்னை அவ்வப்போது சில திரைப்படங்கள் பார்க்க வைத்து விடுவார் என் மனைவி உஷா மேடம். அப்படிப் பார்த்து அசந்து போன படம் முன்பு 'மெய்யழகன்' . இன்று 'தாய்க்கிழவி '


'ஏங்க இது நீடாமங்கலம் கோயில் வாசல் ங்க ' என்று ' மெய்யழகன் ' பூக்கடை சீனைப் பார்க்க வைத்து , படத்தைத் திரும்ப ஆரம்பத்தில் இருந்து பார்க்க வைத்து, ரசித்த சீன்களை பற்றி எழுதி நமது கலை புதிது , குவிகம் குழுக்களில் பகிர்ந்து கொள்ள வைத்தது போல் ,


இன்று தாய்க்கிழவி படத்தின் , 'கிராமக் காட்சிகளைப்' பார்த்து ,'நம்ம ஊர்ப்பக்கம் போன மாதிரி இருக்குங்க ' என்று சொல்லிப் பார்க்க வைத்து , முதலில் இருந்து படத்தை முழுவதும் ,இருந்த இடத்தில் இருந்து எழாமல் இரண்டு மணி நேரம் தாய்க்கிழவி படத்தைப் பார்த்து ரசித்த சில காட்சிகள் .


குடும்ப உறவுகள் , அதன் சிக்கல்கள், இதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் துணிச்சல் , தன்னம்பிக்கை இவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட கதையில் 'பிளாக் காமெடி ' வகையில் ஒரு இறப்பு சூழ்நிலையில் நகைச்சுவையும் , சோகமும் கலந்து கொண்டு செல்லும் இயக்குனர் சிவகுமார் முருகேசனின் திறமை பாராட்டப் பட வேண்டியது .தயாரித்த சிவகார்த்திகேயன் அவர்கள் பாராட்டுக்குரியவர் .


நடிகர்களைத் தனித்தனியாகப் பாராட்டுவதற்குப் பதில் அனைவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களைக் கண் முன் கொண்டு வந்தார்கள் என்று ஒரே வரியில் சொல்லி விடலாம். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் 'முனீஷ் காந்தின்' பாத்திரப்படைப்பு. அதை அவர் வெகு இயல்பாக தனது உடல் மொழியால் கையாண்ட விதம்.


ஆரம்பம் முதல் முடிவு வரை அந்தக் கிராமமும், அதன் தெருக்களும், கோயிலும், ஜனங்களும் , வீடுகளும் அப்படியே தெரிந்து , அங்கேயே சென்று வாழ்ந்து வந்த ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தியதில், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இயக்குனர் என்ற அந்தக் கலைக்குடும்பத்தின் பங்கு மகத்தானது . உறுத்தாத பின்புல இசை குறிப்பிட வேண்டியது .மதுரை நகைக்கடைக்காரர் இளவரசு, கதையின் முதல் திருப்பத்திற்கு முக்கியமானவர் . முடிவுத் திருப்பமும் அவராலே .


சிரித்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல, உணர்வு பூர்வமாகச் சிந்திக்கவும் வைக்க வேண்டும் , அந்த உணர்வை நமது நெஞ்சின் நெகிழ்வை கண்களின் கசிவின் மூலமும் வெளிப்படுத்தவும் வைக்க வேண்டும் என்ற கலைப்படத்தின் ஒரு விதமான நோக்கத்தை நிறைவேற்றி என்னை நெகிழ வைத்த காட்சிகள் பல. அவற்றில் சில .


நடுரோட்டில் ஆம்புலன்சில் ஒரு உயிர் பிரியும் காட்சியின் பின்புலத்தை அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர் விவரிக்கும் இடம்


'பாட்டி இருக்க வேண்டுமா இறக்க வேண்டுமா' என்ற கேள்விக்கு அவள் பேரன் அவனது மாமா பெண்ணிடம் சொல்லும் பதில்


மருமகள்களை வேலை பார்க்கச் சொல்லும் அந்தத் தாய்க்கிழவியின் நோக்கத்தை மகள் அவர்களிடம் சொல்லும் இடம்


நாற்பது வயதிலும் திருமணம் செய்யும் ஆசை இருப்பதன் ஆழமான நோக்கத்தை முனீஷ் காந்த் தாய்க்கிழவியின் பையன்களிடம் விவரிக்கும் இடம்


அந்தக் கோயிலில் தீபம் அணையாமல் எரிய எண்ணெய் ஊற்ற யாரும் வராத போது, தாய்க்கிழவியின் உயிர் காக்க வேண்டி, இன்னுமொரு கிராமக் கிழவி வந்து எண்ணெய் ஊற்றி எரிய வைக்கும் இடம்


முன்னூறு பவுன் நகைகளை மகள் , மருமகள்களிடம் காட்டி பகிர்ந்து கொள்ளச் சொல்லும் போது 'சந்தோசத்திற்கு வேண்டுமானால் பணம் தேவை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மரியாதைக்கு பணம் அவசியம் தேவை ' என்று பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டியதின் அவசியத்தை தாய்க்கிழவி சொல்லும் இடம்


'அம்மா மறுமணம் செய்து கொள்ளலாமா ' என்று கேட்கும் கேள்விக்கு மகன் ' மாப்பிள்ளை யார் ' என்று கேட்கும் இடம் .


என்று சொல்லிக்கொண்டே போகலாம். நீங்களே படம் பார்த்து அனுபவியுங்கள். இடை இடையே வரும் ' பிளாக் காமெடி ' கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், தொடரும் உணர்வு பூர்வக் காட்சிகள் அவற்றை மறக்கச் செய்வதோடு அந்த பிளாக் காமெடியின் முக்கியத்தையும் உணர வைக்கின்றன .


ஆங்கிலப் படம் போல் , கொரியன் படம் போல் , ஹிந்திப் படம் போல் என்றெல்லாம் பல உணர்வுகளை ஏற்படுத்தும் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் தமிழ்ப் படம் என்ற முத்திரையை அழுத்தமாகப் பதிக்கும் இது போன்ற படங்கள் , நம் வேர்களை நமக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள். அந்தப் படைப்பாளிகளுக்கு நன்றிகள் .


-----------------நாகேந்திர பாரதி

 

 My Poems/Stories/Articles in Tamil and English  


வேரை மறந்த மரம் - கவிதை

 வேரை மறந்த மரம் - கவிதை 

---------

நெளிஞ்சு இருந்தாலும்

நிறைகுடம் தளும்பாது 


நேராய் இருந்தாலும்

குறை குடம் கூத்தாடும் 


ஆங்கில இலக்கியம் 

படிச்சு இருக்கியா 


அமெரிக்கா எல்லாம் 

போயி இருக்கியா 


ஆயிரம் பக்கம் 

எழுதி இருக்கியா 


வீட்டை மறந்த 

ஆணவப் பேச்சில் 


வேரை மறந்த 

மரத்தின் வீழ்ச்சி 


விறகுக் கடையில் 

விற்றுக்  கரியாகும் 


-----------------நாகேந்திர பாரதி 


 My Poems/Stories/Articles in Tamil and English   


வரவும் செலவும் - கவிதை

 வரவும் செலவும் - கவிதை 

-------------


வருவேன் என்று சொல்லிவிட்டு 

வராமல் இருந்தால் பரவாயில்லை 


பேசுவேன் என்று சொல்லிவிட்டு 

பேசாமல் இருந்தால் பரவாயில்லை 


சிரிப்பு ஒன்றை மட்டும் 

செலவழித்து     விட்டுப் போகிறாய் 


எந்தக் கணக்கில் 

எழுதுவது என்று தெரியாமல் 


சேமித்து வைத்திருக்கிறேன் 

செலவு செய்ய வழியில்லை 


----------நாகேந்திர பாரதி 


 My Poems/Stories/Articles in Tamil and English 


தண்ணீர்த் தகராறு - கவிதை

 தண்ணீர்த்  தகராறு    - கவிதை 

---------------


ராத்திரி இழுத்துவிட்ட

வாய்க்கால் தண்ணி 

அடுத்தவன் வயலுக்கு 

மாத்திப் பாயுது  


பக்கத்து வயலும் 

பசியாறப் பார்த்து 

இந்த வயலுக்கு 

எரிச்சல்  இல்லை 


கண்மாய்த் தண்ணீ 

பிரிச்சு விட்ட 

கணக்கு நேரம் 

தவறிப் பாய்வதால்   


அறுவடை நெல்லோட 

கணக்குத் தவறுமுன்னு   

வாய்க்கால்  சண்டை 

வரப்பிலே  நடக்குது 


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 



காபி வேளை - சிறுகதை

 

காபி வேளை - சிறுகதை 

---------

'அப்படி என்னங்க அவசரம், நேரே ஆபிசில் இருந்து இங்கே வரச் சொல்லிட்டீங்க. நீங்களும் வீட்டுக்குப் போகாம. பையன் அத்தையை என்ன பாடு படுத்துறானோ. சீக்கிரம் சொல்லுங்க , கிளம்பலாம். ' என்று காபியை அவசரமாக உறிஞ்சியபடி கேட்டாள் கீதா .


'முதல்லே காபியை மெதுவா ரசிச்சுக் குடி , திருமணத்திற்கு முன்பு நாம் இதே காபி ஸ்டாலில் இந்த மங்கிய ஒளியில் பேசிக்கொண்டு இருப்போமே அப்படி ' என்றான் மோகன் .


'என்ன மோகன், பழைய நினைப்பு திடீர்னு ' என்ற கீதாவின் குரலில் நிதானம் வர அவனை உற்றுப் பார்த்தாள்.காபி கப்பை இதழ்களில் பொருத்தி மெதுவாக உறிஞ்சினாள் .


'ம் , அப்படிப் பாரு, அதே மாதிரி . கொஞ்ச நேரம் நானும் பார்க்கிறேன். பேச வேண்டாம். இந்தக் குழந்தை முகத்தின் அழகை இந்த மெல்லிய ஒளியில் கொஞ்ச நேரம் ரசிக்கிறேன் .' அவள் முகம் லேசாக மலர்ந்து ஒரு சிரிப்பு இதழோரம் கசிந்தது. ' அது ' என்று ரசித்தவன் தொடர்ந்தான்.


' கொஞ்ச நாளா பாத்துக்கிட்டு வரேன் உன்னை. ஒரே பரபரப்பு காலையிலே இருந்து .ஆபீசில் என்ன பிரச்சனைன்னு தெரியலை , ஏதோ சிந்தித்தபடி ,பையனைப் பார்த்துக்குறது , என்னிடம் பேசுறது , அப்பா அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கிறது எல்லாத்திலேயும் ஒரு இயந்திரத்தனம் . நம்ம பிரீயாய்ப் பேசியே ரெம்ப நாள் ஆயிட்டதுன்னு எனக்கு ஒரு பிரமை'


'ஆமாங்க. ஆபீசில் ஆடிட் நேரம். மேனேஜர் ஏதோ உடல்நலப் பிரச்னை . லீவு. நான்தான் எல்லாம் பார்க்கிறேன் . ஏகப்பட்ட ரிப்போர்ட். ஒண்ணொன்னா, அந்தந்த டெபார்ட்மெண்ட்லே கேட்டு ஆடிட்டர் கிட்டே கொடுத்தாலும், திரும்பி வரப்போ ஒண்ணு மறந்துட்டேன்னு ஞாபகம் வரது. உங்க ஆபீசில் நீங்க எத்தனைப் பேரை மேனேஜ் பண்ணுறீங்க , எவ்வளவு டென்ஷன் ' ன்னு எனக்குத் தெரியும். அதான் உங்க கிட்டே சொல்லலே. '


'என்னைப் பாரு டென்சனாவா தெரியறேன்' .


'இல்லே, எப்படிங்க '.


வீட்டுக்குள் நீ நுழைஞ்சதுமே நான் உன்னைப் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சுடுறேன் . பையனுக்கு சாதம் ஊட்டும்போது உன் உதட்டைக் குவிச்சுக்கிடுவியே , அதை ரசிப்பேன். அவன் முரண்டு பிடிக்கறப்போ பொய்க்கோபத்தோட அவனை ஒரு முறை முறைப்பியே, அதை ரசிப்பேன், அப்புறம் எப்பவாவது என்னைப் பார்க்கறப்போ ஒரு மந்தகாசப் புன்னகை அசால்ட்டா வீசிட்டுப் போவியே , அது , இப்படி ரசிக்கிறப்போ என் டென்ஷன் ஓடியே ஓடிப் போயிடும்.


அவன் பேசப் பேச வெட்கத்தில் லேசாகத் தலை குனிந்து மெல்ல தலை சாய்த்து ஒரு பார்வை. ' இது போதுமடி '


'நீயும் ரசிடி, பையன் சேட்டைகளை ரசி , எங்கம்மா அப்பா பேச்சை ரசி . தோட்டத்தை ரசி. ரசிக்கிறதுக்கு என்ன இல்லை நம்ம வீட்டிலே. ஒண்ணும் முடியலேன்னா,. அடலீஸ்ட் என்னை ரசி .


'ஐயோ, உங்களை நான் ரசிக்காமலா இருக்கேன். உங்களுக்குத் தெரியாது . '


'அப்புறம் எப்படி டென்ஷன். ஓ என்னைப் பார்த்து உனக்கு டென்ஷன் ஏறுதா .'

'சீ , போடா .'

'இது ... , எத்தனை நாளாச்சு , நீ போடா சொல்லி. போகலாமா வீட்டுக்கு '.


மேஜை மேல் இருந்த அவன் கை மேல் ஒரு அழுத்து அழுத்தி ' போலாம் ' என்றாள்.

'புரியுது ' என்றபடி எழுந்தான். கூடவே அவன் தோளில் ஒட்டியபடி அவளும்


------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 15 ஏப்ரல், 2026

மண்ணு தின்னி மரகதம் -உத்திரகோசமங்கை உறவுகள் - 4

 


மண்ணு தின்னி மரகதம் -உத்திரகோசமங்கை உறவுகள்  - 4

----------

(படம் வரைந்தவர்  : உஷா பாரதி : நன்றி ) 

---

('அவனும் அவர்களும் ' என்ற தொடரின் பெயரை  'உத்திரகோசமங்கை உறவுகள்' என்று மாற்றி விட்டேன். ஊரின் பெயரும் தொடரின்  தலைப்பில்  இருக்கட்டும் என்று ) 



அவன் மண்ணு தின்று  பார்த்ததில்லே இவன் . அவன் பேரும் மரகதம் இல்லே. இருந்தாலும் அவன் பேரையே மறந்து போற அளவுக்கு இந்தப் பட்டப்பேரு அவனுக்கு அமைஞ்சு போச்சு. அவன் சின்னைப்பிள்ளையிலே மண்ணு தின்னதாவும் அதனாலேதான் அவன் வயிறு வீங்கிப் போய் இருக்குன்னு சொல்லி நண்பர்கள் சில பேர் வச்ச பேரு. அவன் வயிறு வீங்கி இருந்தது என்னவோ உண்மை. அவன் சாப்பிடுறப்ப பார்த்தவர்களுக்கு அதன் இன்னொரு காரணமும் புரியும். 


முதல் வடக்குத் தெருவிலே இவன்  வீட்டிலே இருந்து அஞ்சாறு வீடு தள்ளி முக்கு வீடுதான் அவன்  வீடு . ஓட்டு வீடு. தட்டி வச்ச திண்ணை. காலையிலே அப்பா கூட வயல் வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் தான் திரும்பி வருவான். பள்ளிக்கூடம்  பாதியிலே நிறுத்தியாச்சு. 


சாயந்திரத்திலே இருந்து  நைட் படுக்கப்  போற வரைக்கும் அந்தத் தட்டி மறைச்ச  திண்ணையிலே இருந்துக்கிட்டு பாடுவான். நல்ல குரல். டி எம் எஸ் பாட்டுதான் பெரும்பாலும். எதுத்தாப்பலே இருக்கிற லைப்ரரியில் இருக்குற இவனுக்கு  நல்லாவே கேட்கும். படிச்சுட்டு அவன் வீட்டிலே போயி உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு இருப்பான். 


மண்ணு தின்னி மரகதம் வீட்டிலே அவன் வச்சுக்கிட்டுக் இருக்கிற சினிமாப் பாட்டுப் புத்தகம் எல்லாம் எடுத்துட்டு வந்து காமிப்பான். கட்டுக் கட்டா இருக்கும். எம் ஜி ஆர் , சிவாஜி யில் இருந்து ஜெய்ஷங்கர் , ரவிச்சந்திரன் படம் வரை ஏராளம். 


அப்ப அஞ்சு பைசா பாட்டு புத்தகம். அட்டையில் படத்தோட ஸீன் ஒண்ணு. உள்ளே முதல் பக்கத்திலே  .திரைப்படக் கதைச் சுருக்கம். முடிவைச் சொல்லாம ' மீதியை வெள்ளித்திரையில் காண்க ' என்று படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும். தியேட்டரில் வெண்திரை, அழுக்குத்திரை பார்த்திருக்கோம். 'இது என்னடா வெள்ளித்திரைன்னு' கேட்டா சொல்லுவான். 'வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதானே புதுப் படம் வருது . அதுதானப்பு ' என்பான். எல்லா வார்த்தையும் முடியுறது அப்புலேதான். 'வாப்பு, ஒக்காறப்பு , சொல்லுப்பு , சரிப்பு' எல்லாம் 'ப்பு'  தான் . அவன் ஸ்டைலு .


பக்கத்து பஞ்சாயத்து போர்ட் ரேடியோவில் இருந்து காலையிலே பக்திப்பாடல்,அப்புறம்  நியூஸ், ஒலிச்சித்திரம் , சினிமாப் பாட்டு ஒலித்துக்  கொண்டு இருக்கும். அதைக் கேட்டுக் கேட்டுத்தான் பாட்டு ஞானம். அது தவிர முளைக்கொட்டு , மற்ற திருவிழா காலங்களில் எல்லாம் , ஒவ்வொரு   தெரு முக்கிலும் கொட்டாய் போட்டு 'வேலன் வேடன் , விருத்தன்' என்று சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாட்டுகளோடு மதுரை திரைப்படப் புகழ் நடிகர்கள் பலர் வந்து நடிப்பார்கள். 


ஸ்பீக்கர் இல்லாமலே எல்லாத் தெருக்களிலும் வந்து ஒலிக்கும் அவர்கள் வெண்கலக் குரல். டி ஆர் மஹாலிங்கம், எம் எம் மாரியப்பா போன்ற பிரபலங்கள் வந்த ஞாபகம் . அவர்கள் பாட்டுக்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டு மனப்பாடம் செய்து விடுவான் மண்ணு தின்னி மரகதம் . மறுநாள் திண்ணையில் ' காயாத கானகத்தே ' ஒலிக்கும் அவன் குரலில் . 


முதல் நாள் இரவு பத்துமணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் , மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத்தான் முடியும். தொடர் பாட்டுகள், வசனங்கள். சினிமாப் பாட்டுகளும் நேயர்கள் விருப்பமாக கலந்து பாடுவார்கள் . முன்னால் போய் மண்ணைக் கூட்டி உட்கார்ந்து விடுவான்.சில சமயம் இவன்   சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து கேட்பது உண்டு. பாதியில் தூக்கம் சொக்கி வீட்டுக்கு வந்து திண்ணையில் படுத்து அந்தப் பாட்டுக்களைக் கேட்டுத் தூங்கி விடுவான் இவன்  . 


மறுநாள் சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் மரகதம்  வீட்டுக்கு சென்று முழுக் கதையும் கேட்டு , பாட்டுக்களை யும் கேட்டு வருவான். மண்ணு தின்னி சினிமா போனதில்லை. இவன் பல சினிமாக்கள் அப்பாவோடு சேர்ந்து ராம்நாட் சென்று ஷண்முகா தியேட்டர், ராஜாராம் தியேட்டரில்  ரெண்டு ஷோ பார்த்துவிட்டு மரகதத்திற்கு அஞ்சு பைசா பாட்டு புஸ்தகம் வாங்கி வந்து கொடுத்து 'வெள்ளித்திரையில் கண்ட' மீதிக்கதையையும் சொல்லுவான். மரகதத்திற்கு பரம சந்தோசம். ஒரு சில வாரங்களில் அந்தப் படங்களின் ஒலிச்சித்திரம் பஞ்சாயத்துப் போர்டு ரேடியோவில் கேட்டு  ' கரெக்ட்டா சொன்னப்பு கதையை ' என்று பாராட்டுவான். 


ஒருநாள்  'கண் வலி' என்று உள்ளூர் ஆஸ்பத்திரியில் காண்பித்து மருந்து போட்டு கட்டு போட்டுக் கொண்டு இருந்தான். இருந்தாலும் மனப்பாடமாக இருந்த பாட்டுக்களை, அந்தப் பாட்டுப் புத்தகக் கட்டுகள் மேல் தாளம் போட்டுப்   பாடிக் கொண்டு இருந்தான். டி எம் எஸ் சின் அவனுக்குப் பிடித்த பாட்டான 'ஆயிரத்தில் ஒருவன் ' பாட்டு ' ஓடும் மேகங்களே ' பாட்டை அடிக்கடி பாடுவான். ' நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் ' என்ற வரியின் போது கண்ணின் கட்டின் வழி மருந்தோடு சேர்ந்து அவன் கண்ணீர் கசியும். 'கண்ணு வலிக்குதப்பு ' என்பான் .கண் மூடியது மூடியது தான். சில நாட்களில் அவன் கண் பார்வை போய் விட்டது. திண்ணையில் இருந்தபடி பாடுவது நிற்கவில்லை. 


இவன் வெளியூர் போய் வந்த ஒருநாள் சொன்னார்கள். 'மண்ணு தின்னி மரகதம் போயிட்டாண்டா ' என்பதோடு சேர்த்துச் சொன்னார்கள். 'வயித்து வலியாம் .  அவன் மண்ணு தின்னறதை விடலையாம் ' .இவன்  நம்பவில்லை. மரகதம், மண்ணு தின்று இவன்  பார்த்ததில்லை. உத்திரகோசமங்கை உறவுகளில் ,என்றும் மண்ணு தின்னி மரகதம் ' ஆயிரத்தில் ஒருவனப்பு ' ..


-----------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English  


நூலக ஆசான் -உத்திரகோசமங்கை உறவுகள் - 3

 


நூலக ஆசான் 

(படம் வரைந்தவர்: உஷா பாரதி க்கு நன்றி) 

------------

உத்திரகோசமங்கை உறவுகள்  - 3 

-------


'தம்பி, நாளைக்கு காலையிலே எட்டு மணிக்கே வந்திரு,புது  புஸ்தகம் எல்லாம் வருது. எல்லாத்தையும் ரெஜிஸ்டரில் எழுதி , நம்பர் ஒட்டி , அலமாரியில் பிரிச்சு அடுக்கணும். சரியா'


லைப்ரரி சார் சொல்லச் சொல்ல அவனுக்கும் 'எப்படா நாளை விடியும் என்றிருந்தது. ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒரு முறை அந்த மாவட்ட கிளை நூலகத்தில் வந்து இறங்கும் வண்ண வண்ண அட்டைப்படங்களோடு , பலவித வாசங்களோடு புதிது புதியதாய் எத்தனை புத்தகங்கள்.


அவற்றின் வாசனைகளை முகர்ந்து அனுபவித்தபடி , அதன் வழுவழு பக்கங்களையும் சிலவற்றின் சுரசுர பக்கங்களையும் தடவிப்பார்த்து அனுபவித்துவிட்டு, கதை, கட்டுரை, கவிதை, ஆங்கிலம் , தமிழ் என்று பிரித்து எழுதி நம்பர் போட்டு ரெஜிஸ்டரில் எழுதி , அந்தந்த அலமாரிகளில் அடுக்கி வைத்து அதை  அழகு பார்ப்பது ஒரு மகிழ்ச்சி . 


இடை இடையே லைப்ரரியன் சார் வரவழைத்துக் கொடுக்கும் , காஃபி , டீ, பிஸ்கட் , பஜ்ஜி தனி ருசி 


அது தவிர , அந்த எழுத்தாளர்களின் முன்னுரையை ஒருமுறை  வேகமாகப் படித்து விட்டு  அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து அப்பத்தாவிடம் படித்துக்  காண்பிப்பதால் கிடைக்கும் சந்தோசம் இன்னொரு விதம். 


பள்ளி நேரம்  போக , நண்பர்களுடன் சண்டை , விளையாட்டு , படிப்பு நேரம் போக , வீட்டு வேலைகள் ( கிழக்கு தெரு உத்தண்டி வீட்டில் அப்போதே கறந்த பால் வாங்கி வருவது, வடக்குத் தெரு ராமு பிள்ளை கடையில்  காய்கறி கருவேப்பிலையோடு கடலை மிட்டாயும் சேர்த்து வாங்கி வருவது, அப்பாவோடு ரைஸ் மில் சென்று நெல் அரைத்து தவிடு, உமி , அரிசி என்று   தனித் தனியாகப் பிரிந்து வருவதை வேடிக்கை பார்த்து  கூடவே சேர்ந்து பைகளில் எடுத்து வருவது என்று எத்தனையோ வேலைகள் ) நேரம் போக , மீதி இருக்கும் நேரம்  எல்லாம் அந்த லைப்ரரிதானே கதி.


அன்றன்றே வரும் விகடன் , குமுதம்,  கல்கி , ராணி துக்ளக் ,     கண்ணன், கோகுலம், கலைக்கதிர் , அமுதசுரபி, கலைமகள் , பேசும்படம் , பொம்மை என்று சிலவற்றில் படம் பார்த்தும் ,சிலவற்றைப் படித்தும் , கதை, கவிதை, ஓவியம் , கட்டுரைகளில் ஆர்வம் ஏற்பட்டு , தானும் எழுதியும் வரைந்தும் பார்த்துத் திரிந்து கொண்டிருந்த காலம். 

ஈர்த்த எழுத்துக்கள் கல்கி , நா பார்த்தசாரதி, லட்சுமி, வாண்டுமாமா,நாடோடி , மேதாவி, ரங்கராஜு , அப்துல் ரஹீம், பாரதிதாசன், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர் என்று எத்தனை இமயங்கள். இவர்களை அடையாளம் காட்டி படிக்க வைத்த அந்த நூலகர்  என்றும் நினைவில் நிற்கிறார். 


பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் , இளைய பிராட்டி உரையாடல்கள்  


பொன்விலங்கில்   சத்யமூர்த்தி மோஹினி உரையாடல்கள் 


மிதிலா விலாஸில் தேவகி , ஈஸ்வரன்  உரையாடல்கள் 


அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த மணியம், கோபுலு,  விஜயா படங்கள்.

  இந்த லைப்பரரியில் இருந்த புத்தகங்கள் பெரும்பாலும் குறைந்த  படங்களோடு புதிதாக அச்சில் வந்த புத்தகங்கள் .  


அனைத்தும்  அதிகம் கவர்ந்தன. 


லைப்ரரி புத்தகங்களில் அப்துல் ரஹீம் அவர்களின் சுய முன்னேற்றக் கட்டுரைகளில் தெரிந்த பல பிரபலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 


பாரதிதாசனின் ' இருக்கின்றாள் என்பதனால் இருக்கின்றேன் ' என்ற குடும்ப விளக்கு மற்றும்  தமிழ்ப் பற்று தெறிக்கும் கவிதைகள் 


ரா பி சேதுப்பிள்ளையின் ' ஊரும் பேரும் ' கட்டுரைகளில் தெரிந்த இயல்பான எதுகை மோனை 


வாண்டு மாமா  வின் ' மரகதச் சிலை ' வண்ணக் கதை தொடங்கி எத்தனை  சித்திரக் கதைகள் 


துக்ளக் சோவின் கிண்டல் எழுத்து , ஆனந்த விகடன் தொடர்கதைகள், தினத்தந்தியின் ' கன்னித்தீவு  ' ' புதுப்பெண் பொன்னி, அடங்காத அங்கமுத்து '


ரங்கராஜு வின் ராஜாம்பாள், ராஜேந்திரன், மோஹன சுந்தரம் என்று    திருவல்லிக்கேணியில் துப்பறியும் கோவிந்தன் .


கல்கியின் , பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு 


லக்ஷ்மியின் மிதிலா விலாஸ்( சௌபாக்கியம் , தர்மாம்பாள்,  முதல் அத்தியாய கோபுலு படம் மறக்க முடியுமா, சிவகங்கை  தாத்தா வீட்டு  லைப்ரரியில் பின்னால் பார்த்தது  )  சூர்யகாந்தம், 


நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன் விலங்கு , மணிபல்லவம் 


எஸ் ஏ பியின் காதலெனும் தீவினிலே 


சோவின் கோவாடீஸ்


மேதாவி மர்மக்கதைகளின் அத்தியாயத் திகில் தலைப்புக்கள் 


நாடோடியின் கதைகளில் வரும் 'சரசுவின் ' நகைச்சுவை 


தமிழ்வாணனின் சங்கர்லால் , வஹாப், தேநீர் 


தேவனின் துப்பறியும் சாம்பு (பின்னால் சிவகங்கை வக்கீல் தாத்தா  வீட்டில் பத்திரிகையில்  இருந்து பைண்ட் எடுத்து வைத்த புத்தகத்தில்  இன்னும் கண் முன் . தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதையாக ) 


ஓவியர்கள் வினு ( கல்கியில் , கயல் விழி )  , மாயா ( இதய வீணை சுந்தரம் பீச்சில் அமர்ந்திருக்கும்   காட்சி ) இன்னும் பல ஓவியர்கள் .


இன்னும்  சொல்லிக்   கொண்டே   போகலாம் 



இதற்கு நடுவில் நண்பர்கள் சிலர் ரகசியமாகப் பகிர்ந்து கொண்ட ' வாலிபம்', ' சரோஜாதேவி ' புத்தகங்களையும் தாண்டி நல்ல வாசிப்பு ரசனையின்  பக்கம் திருப்பியவர்.


அந்த நல்ல ரசனைக்குத் தீனி போட்டு , தீனி போட்டு அதைப்  பார்த்து ரசித்தும் , பாராட்டியும் இருந்த  அந்த லைப்ரரியன் சார் நூலக ஆசான்தானே. 


-----------நாகேந்திர பாரதி .


My Poems/Stories/Articles in Tamil and English   


புதன், 8 ஏப்ரல், 2026

ஆயனச் சிற்பி-உத்திரகோசமங்கை உறவுகள் - 2

 



ஆயனச் சிற்பி

-----------------

உத்திரகோசமங்கை உறவுகள் - 2 

------------------------------

இந்தப் பதிவுக்குரிய படங்களும் புகைப்படங்களும் நானோ, எனது மனைவி  உஷா மேடமோ வரைந்தவை . 'கிளிக் ' கியவை . நேற்றைய உத்திரகோசமங்கை கோயில் உட்புறப் படம் நான் வரைந்தது . இன்றைய ' சிவகாமி ' படம் உஷா மேடம் வரைந்தது. அவர்களுக்கு நன்றி .


------------

திருஉத்திரகோசமங்கை கிழக்கு ஏழுநிலைக் கோபுர வாசல் வழி உள்ளே நுழைந்ததும் கோபுர வாசல் தாண்டியதும் வலது பக்கம் அக்கினி தெப்பக்குளம். அது அக்கினி தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் காரணத்தை யூடியூபில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


இடது பக்கம் நீண்ட நீண்ட கருங்கற்கள் அங்கும் இங்குமாக ஏராளம் இருக்கும். அங்கே பல சிற்பிகள் அந்த கற்களின் மேல் உளி நர்த்தனம் செய்து பல சிலைகளை உருவாக்கி கொண்டு இருப்பார்கள் . அந்த உளியின் சப்தம் அங்கே சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருக்கும்.


அவர்களின் தலைவராக , தலைமைச் சிற்பி, ஸ்தபதி என்று அழைக்கப்படுபவர் அவற்றை மேற்பார்வை இட்டுக் கொண்டு இருப்பார்.அவரும் செதுக்கிக் கொண்டு இருப்பார்.



கிழக்குக் கோபுர வாசலுக்கு மிக அருகில் தான் அவனது பள்ளிக்கூடம் பள்ளிக்கூட இடைவேளையில் கோயிலுக்குள் சென்று , அவர் அருகில் அவர் சிற்பம் செதுக்கும் அழகை ரசிப்பது வழக்கம். ' தள்ளி நில்லு தம்பி ,கல்லு தெறித்து கண்ணிலே விழுந்திடும் ' என்று அவர் எச்சரிப்பது உண்டு

அவர் கண்களை மறைத்து துணி அணிவதில்லை. உளியின் உரசலில் கற்கள் போகும் திசை அவருக்குத் தெரியும்.


நீண்ட கருங்கல்லாகக் கிடந்ததைப், பல நாட்களுக்குப் பிறகு ஒரு உருவமாக மாற்றி நடனம் ஆடும் அழகை அவர் கொண்டு வரும் அந்த கலை வண்ணம், அவர் கை வண்ணம் , உளி வண்ணம், மெய் சிலிர்க்க வைக்கும். . இன்றும் உத்தரகோசமங்கை பிரகாரங்களில் அவரும் அவரது குழுவினரும் செதுக்கிய சிற்பங்கள் உண்டு. ஒரு உருவத்தின் வாய்க்குள் அடங்கி வெளியே வராமல் உருளும் கல் ஒன்று , பின்னிக் கொண்டிருக்கும் பாம்புகள், அந்தக் கலையின் திறமைக்கு சில துளி சான்றுகள். இன்னும் சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை எத்தனையோ .


அப்போதுதான் , கல்கியின் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்திருந்த வயது. அவனது அப்பத்தாவிற்கு, அவன் ஒரு கையில் ஈர்வேலி (பேன் எடுக்கும் நீண்ட சீப்பு ) கொண்டு தலையில் இழுத்து, விழும் பேனைக் குத்திக் கொண்டு , மறு கையில் தடிமன் ஆன சிவகாமியின் சபதம் புத்தகப் பக்கங்களை புரட்டிக் கொண்டு படித்துக் காண்பித்துக் கொண்டு இருந்த காலம். மகேந்திர பல்லவர் நரசிம்ம பல்லவரிடம் சொல்லும் இந்த வசனம் . அதன் சாரத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். நிஜ வசனங்களை சிவகாமியின் சபதத்தில் படித்துக் கொள்ளலாம்

---

மகேந்திர பல்லவன் நரசிம்மனிடம் சொல்லும் கருத்து:


“இது சாதாரண கல் அல்ல, நரசிம்மா!

கல்லில் உயிர் ஊற்றுவது தான் கலை.

இந்தக் கற்கள் பேசும்…

நம்மைப் போல் மனிதர்கள் மறைந்தாலும்,

இவை நம்முடைய எண்ணங்களையும் புகழையும் நிலைநிறுத்தும்.”


அவர் மேலும் சொல்வது:


“நாம் இன்று இருக்கிறோம், நாளை இல்லாமலாகிவிடலாம்.

ஆனால் இந்தச் சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பேசும்.

அதனால்தான் நான் போரை விடக் கலையைக் காதலிக்கிறேன்.”


இதற்கு நரசிம்மன் உணர்ச்சியுடன்:


“அப்பா, கல்லில் உயிர் இருக்கிறதா?”


மகேந்திரன்:


“உயிர் இருக்கிறது…

அதை பார்க்கும் கண்ணும், உணரும் மனமும் இருந்தால்!”


----------

இதைப் படித்துவிட்டுச் சென்று அந்தச் சிற்பியைப் பார்க்கும் போதெல்லாம் கற்களுக்கு உயிர் கொடுத்த 'ஆயனச் சிற்பியாகவே ' அவர் தெரிந்தார் அவனுக்கு . அந்த ' ஆயனச் சிற்பி ' க்கு மகள் இல்லை, சிவகாமி இல்லை என்பதை கல்கியின் சிவகாமியின் சபதம் கதை படித்தவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


திருநீற்று ஓதுவார் -உத்திரகோசமங்கை உறவுகள் - 1

 



திருநீற்று ஓதுவார்

---------------

உத்திரகோசமங்கை உறவுகள் - 1 

------------------------------

திருஉத்திரகோசமங்கை கோயிலின்  வடக்கு வாசல் பக்கம் வெளி வரும்போது அங்கே திண்ணையில் படுத்திருந்தவர் மெதுவாக எழுந்து தடியை ஊன்றியபடி நடந்து செல்வதைப் பார்த்தான் . நெற்றி,  நெஞ்சு கைகள் முழுக்க பட்டை பட்டையாக பூசப்பட்ட திருநீறு அவரை அவனுக்கு அடையாளம் காட்டியது .


அருகில் நெருங்கிச் சென்று , 'ஐயா , ஓதுவார் ஐயா ' என்றவுடன் திடுக்கிட்டுத் திரும்பியவர் , 'யாரு ' என்று கண்களை இடுக்கிப் பார்த்தார். ' ஐயா , நான்  கோயில் பழைய பேஷ்கார் நடராஜ பிள்ளை பேரன் ' . என்றதும், 'ஓ அவரா, மறக்க முடியாதுப்பா உன் தாத்தாவை எல்லாம் , என்னை எப்படி கண்டுபிடிச்ச, அப்ப எப்படி இருந்தேன், இப்ப எலும்பும் தோலும் தான் ' . ஐயா உங்க திருநீறை வச்சுதான் கண்டுபிடிச்சேன் .'


'ஆமா அதுதானே அப்பவும் இப்பவும் என் அடையாளம் ' என்றவரிடம் சிறிது நேரம் பேசி அவரை அவரது வீடு வரை சென்று விட்டுவிட்டு பஸ்ஸில் திரும்பும்போது மனதிற்குள் ஒலித்தது அவரது கணீர் குரல் .


'மந்திரமாவது நீறு

வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு

துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு

சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

திருஆல வாயான் திருநீறே! '


நெஞ்சுவரை தூக்கிக் கட்டப்பட்ட நாலு முழ வேட்டியோடு ,அவரது கட்டுமஸ்தான  உடம்பெங்கும் பூசப்பட்ட திருநீறோடு, தனது கணீர்க்  குரல் எடுத்து ஓதுவார் ஸ்வாமிகள் இந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்பதற்கே கூடியிருக்கும் கூட்டம்.


எல்லாப் பூஜைகளுக்கு முன்னும், நடுவில்  அலங்காரத்திற்குத்  திரையிடப்படும்போதும் மக்களை இசையெனும் இன்ப வெள்ளத்தில் மயக்கி மகிழ்ச்சியோடு காத்திருக்க வைக்கும் மகத்தான இசை வாணர் அவர்.


'ஏன் தாத்தா , இம்புட்டுத் திருநீறு பூசியிருக்காரு இவரு  ' என்ற கேள்விக்கு தாத்தா சொல்லிய ஞானசம்பந்தர்  திருநீற்றுப் பதிகம் பாடிய வரலாறும், கூன் பாண்டியனின் வெப்ப நோய் தீர்ந்த வரலாறும் திருநீற்று மகிமையை எடுத்துச் சொல்ல அதன் மருத்துவ குணமும் தெரிய வந்தது. 


அப்போதெல்லாம், வீட்டில் எல்லாவற்றுக்கும் திருநீறே மருந்து. தேள் கடிக்குத்  திருநீறு குழைத்துப் பூசுவது.வயிற்று வலிக்கு திருநீற்று  பசை வயிற்றின் மேல். காலையில் குளித்து முடித்து விட்டு வந்தவுடன் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டு  , வாயில் கொஞ்சம் திருநீறை வைத்து விடுவது .  காரணங்கள் புரிய ஆரம்பித்த வயது .


தொடரும் நாதஸ்வர, தவில் இசை என்று இசையும் பக்தியும் கலந்த கோயில் நிகழ்வுகளில் எல்லாம் பிரதானமாகத் தெரிந்தவர் அந்த ஓதுவார் ஸ்வாமிகள். பிறகு திருவிழாக்  காலங்களில் சாமியும் அம்மனும்  தெரு உலா வரும்போது ஓதுவார் ஐயா பாடிக்கொண்டு போக அதற்குத்  தலை ஆட்டிக்கொண்டு எங்கள் தாத்தா நடந்து சென்ற காட்சியும் கண் முன்னே வந்து போனது .


அங்கே அம்மனுக்கும்  சாமிக்கும் , எத்தனை வித அபிஷேகங்கள், எத்தனை வித  தீப ஆராதனைகள். இந்த அபிஷேக ஆராதனைகளால், கோயிலின்  உள்ளே உள்ள காற்று மண்டலத்தில் ஏற்படும் அதிர்வலைகள் உருவாக்கும்  ஆரோக்கிய விஷயங்களை பற்றி பின்னால் தான் தெரிந்து கொண்டோம் .


அப்போதெல்லாம் கோயிலுக்குள் ஆவலுடன் அவன் எதிர்பார்த்த  தருணம் , ஓதுவாரின் இசையும் ,  பிரசாதம் கொடுக்கும் தருணமும் தான். . பரிசாரகர்கள் பக்தியுடன் சமைத்த பிரசாதங்களை  சாமிக்கும் அம்மனுக்கும் , அர்ச்சகர்கள் மூடியும் திறந்தும் ரகசியமாகக் காண்பித்து விட்டு  ,  சுற்றுப் பிரகாரம் சுற்றி விட்டு வருவார்கள் .


நாம் பொறுமையோடு காத்திருக்கும் நேரத்தில் ஓதுவார் அய்யாவின் தேவார  திருவாசகப் பாடல்கள்தான் நம் பசியை மறக்க வைக்கும் இசை அமுதம் . அதற்குப் பிறகு கிடைக்கும் அந்தப் பிரசாதங்கள் சில சமயம் ,சுண்டல்  ,  சில சமயம், சர்க்கரை சாதம், சில சமயம் தயிர் சாதம் என்று அவற்றின் ருசி இப்போதும் நாவில் எச்சில் ஊற வைக்கிறது . அதோடு சேர்த்து ஓதுவார் ஸ்வாமிகளின் நினைவும் தான். நாவில் தேவார இசையை ஊற வைக்கும் .


———நாகேந்திர பாரதி 


குறிப்பு : இன்னும் தொடரும் திருஉத்திரகோசமங்கை  நினைவுகள். அவர்களின் நினைவுகள்  . அந்த நினைவுகளை இப்படி நெடுந்தொடராய் எழுத நினைத்ததன் காரணம் முதலில் சில வருடங்களுக்கு முன்பு நமது இரா. முருகன் சார் அவர்கள் எழுதிய 'ரெட்டைத்தெரு ' சிவகங்கை பற்றிய இளம்பிராயக்  கட்டுரைகள். நானும் சிவகங்கையில் பி யு சி படித்த நினைவுகளைக் கிளப்பி விட அப்போது நான் கதை புதிது குழுவில் எழுதிய மதிப்புரையில் ' திருஉத்திரகோசமங்கை ' பற்றி எழுத வேண்டும் என்று எழுதியது. தொடர்ந்து சமீபத்தில்  , ரம்யா வாசுதேவன் அவர்கள்  கலை புதிது குழுவில்  எழுதிய ' அவளும் நானும் '  தொடர் அந்தப் பழைய ஆசையை மறுபடி உசுப்பி விட்டது .  . நான் பார்த்த,  பழகிய பலர்  இதில் வருவார்கள் .  இந்த ' உத்திரகோசமங்கை உறவுகள் ' தொடரில்  . . நன்றி.


------------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English 


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை மதிப்புரை - கலை புதிது குழுவில்

 துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------

குவிகம் சுந்தரராஜன் அவர்களின் இளவல் , நண்பர் யாரோ ராமமூர்த்தி அவர்களின் சரித்திரக் குறும்புதினம் 'துருவா தேவி ', மார்ச் மாத குறும்புதினம் இதழில். இந்தியச்   சரித்திரத்தின் சுவாரசியமான நிகழ்வுகளைக் கதைகளாக எழுதி  அவற்றை , 'சரித்திரம் பேசுகிறது ' என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக வெளியிட்டவர் நமது ராம மூர்த்தி அவர்கள் என்பது நம்மில் பலர் அறிந்ததே. 


அண்ணன் சுந்தரராஜன் அவர்கள் ஆங்கில இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில்  தொடராக எழுத , தம்பி ராமமூர்த்தி இந்திய இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில் தொடராக எழுத , படித்து மகிழ்ந்த நமக்கு இந்தத்  ' துருவா தேவி ' யும் இலக்கிய இன்பம் அளிக்கும் இரண்டாம் சந்திரகுப்தனின்   கதையாக வெளிவந்துள்ளது.


'குப்தர்கள் காலம்  பொற்காலம்  ' என்று பள்ளிப்பருவத்தில் தேர்வில் கட்டுரை எழுதி மதிப்பெண்கள் வாங்கிய ஞாபகம் வந்தது. அந்தப் பொற்காலத்தின் அகமும் புறமும் கலந்த  இந்தக் கதை அன்றே வந்திருந்தால் நாம் இதையும் சேர்த்து எழுதி , அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்போம் என்று தோன்றியது. 


என்ன செய்வது , அப்போது நமது ராமமூர்த்தி அவர்களும் பள்ளிப் பாடம் படித்துக் கொண்டு இருந்த சிறுவர் தானே. இன்று சரித்திர ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு அவர் கொடுத்துள்ள இந்தக் குப்தரின் கதையில் காதல், வீரம், பாசம் , துரோகம் , நாடகம் வேஷம் அனைத்தும் கலந்து ஒரு பல்சுவை இலக்கியமாக ' துருவாதேவி 'வந்துள்ளாள். 


காதல் காட்சிகள் , உரையாடல்கள் எல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கும்  திருப்தியைக் கொடுக்கின்றன. உதாரணத்திற்கு துருவா தேவியிடம் உஜ்ஜயினி செல்லும் வழியில் இரண்டாம் சந்திரகுப்தன் பேசும் வசனங்கள்  ' தேவி, ஆண் மயில் தான் அழகு என்று சொல்வார்கள். இல்லை . பொய். பெண் மயில் தான் அழகு ' என்று தொடரும் வசனங்களில் கொஞ்சம் நமது ' கல்கி ' அவர்களின் காதல் நடையைக் கடன் வாங்கி உள்ளார். திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்ற தைரியம் போலும் . 


அதைத் தொடரும் வீர நிகழ்வுகளில், சிங்கத்துடன் இரண்டாம் சந்திரகுப்தன் மோதும் இடங்களில்   சாண்டில்யனின் வேக நடை. இப்படி ஆரம்பமே அகமும் புறமும் கலந்து நம்மை கதைக்குள் இழுத்துச் செல்ல , தொடரும் நிகழ்வுகளில் மன்னர் மரணம் , அண்ணனின் அரசியல் சூழ்ச்சி , எதிரி மன்னனின் படை  எடுப்பு, காதலில் சோகம் , தொடரும் வீர நிகழ்வுகள் , என்று தொடர்ந்து இறுதியில் சுபமாக முடியும் போது ,நமக்கும் ஒரு நல்ல சரித்திரத் திரைப்படம் பார்த்த திருப்தி . 


திரைப்படம் என்று நான் சொல்வதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணமும் உண்டு. 

இடை இடையே அவர் காட்சிகளுக்குப் பொருத்தமான திரைப்பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தியுள்ள விதம் தான். 

'வழி நெடுகக் காட்டு மல்லி, காடே மணக்குது , என்ற சமீப காலப் பாட்டை நினைவுபடுத்தி , கதை போகும் போக்கில்  ' சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் ' ' என்றும் துன்பம் இல்லை , இனித் துயரமில்லை ' என்ற பழைய பாடல் வரை நினைவு படுத்தும் திரைப்பாடல் வரிகளும் அவரது பாணியில் பரவிக் கிடக்கின்றன. மொத்தத்தில் குப்தர்களின் பொற்காலத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் ஒரு ஜனரஞ்சகமான சரித்திரக் குறும்புதினம்.  படித்து மகிழ்வோம். 


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


சிறகு இதழ் மதிப்புரை - கலை புதிது குழுவில்

 சிறகு இதழ்  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------


சிறகு ரவி அவர்களின் 'சிறகு ' இதழோடு( 167 -168 ) இந்த முறை ' இறகு' இணைப்பு. மைக்ரோ கதைகளின் கூடு என்ற அழகான பெயரோடு . சிறகுக்குள் இருப்பதுதானே இறகு. பொருத்தமான பெயரும் கூட .


அவர் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் பாதிக்கு மேல் பெண் எழுத்தாளர்கள், இந்த இறகு இணைப்பில் 150 வார்த்தைகளுக்குள் எழுதிய, மைக்ரோ கதைகள். அவற்றில் பாதிக்கு மேல் நமது அழகியசிங்கரின் கலை புதிது குழும பெண் எழுத்தாளர்கள் . மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்த்துகள் எழுத்தாளர்களுக்கு. நன்றிகள் சிறகு ரவி சார் அவர்கட்கு .


முதலில் அவற்றில் சிலவற்றைப் படித்து விட்டேன். அவை .


நமது அட்மின் சுகன்யா மேடத்தின் கருணை மனம் வெளிப்படும் 'தாம்பூலம் ' சிறுகதை .

அனுராதா மேடத்தின் குறும்பு மனம் வெளிப்படும் 'அனன்யாவின் தம்பிப் பாப்பா '.

அப்பு சிவாவின் விளையாட்டு மனம் வெளிப்படும் ' உப்பு மூட்டை '.

சிறகு ரவி அவர்களின் நகைச்சுவை மனம் வெளிப்படும் ' பெல்ட் '. சசிகலா மேடத்தின் நெகிழ்வு மனம் வெளிப்படும் ' தொடுகையின் இன்பம் '.

கிரிஜா மேடத்தின் ஐடியா மனம் வெளிப்படும் ' ரகளை '.

ரேவதி ராமச்சந்திரன் மேடத்தின் சம்பிரதாய மனம் வெளிப்படும்' பொன்னூஞ்சல் '.

விஜயலக்ஷ்மி மேடத்தின் பயண மனம் வெளிப்படும் 'தேன் நிலவு '.

சாய் ரேணு மேடத்தின் துப்பறியும் மனம் வெளிப்படும் ' மணி'.

சுரேஷ் அவர்களின் புத்திசாலி மனம் வெளிப்படும் ' பொன்னூஞ்சல் கனவு '


இப்படி 150 வார்த்தைகளுக்குள் தேன் சொட்டும் தேன் கூடு இந்த மைக்ரோ கதைக் கூடு.


இத்துடன் வழக்கம் போல் தேர்ந்தெடுத்த கதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் சிறகு இதழ். படித்து மகிழுங்கள்


----------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


தாய்க்கிழவி - பட விமரிசனம்

  தாய்க்கிழவி - பட விமரிசனம்  ------- படம் பார்க்கிற ரெண்டு மணி நேரத்திலே, ஸ்மூலில் தமிழ்ப் பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்யலாம் , டோஸ்ட்மாஸ்டர்...