ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை மதிப்புரை - கலை புதிது குழுவில்

 துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------

குவிகம் சுந்தரராஜன் அவர்களின் இளவல் , நண்பர் யாரோ ராமமூர்த்தி அவர்களின் சரித்திரக் குறும்புதினம் 'துருவா தேவி ', மார்ச் மாத குறும்புதினம் இதழில். இந்தியச்   சரித்திரத்தின் சுவாரசியமான நிகழ்வுகளைக் கதைகளாக எழுதி  அவற்றை , 'சரித்திரம் பேசுகிறது ' என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக வெளியிட்டவர் நமது ராம மூர்த்தி அவர்கள் என்பது நம்மில் பலர் அறிந்ததே. 


அண்ணன் சுந்தரராஜன் அவர்கள் ஆங்கில இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில்  தொடராக எழுத , தம்பி ராமமூர்த்தி இந்திய இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில் தொடராக எழுத , படித்து மகிழ்ந்த நமக்கு இந்தத்  ' துருவா தேவி ' யும் இலக்கிய இன்பம் அளிக்கும் இரண்டாம் சந்திரகுப்தனின்   கதையாக வெளிவந்துள்ளது.


'குப்தர்கள் காலம்  பொற்காலம்  ' என்று பள்ளிப்பருவத்தில் தேர்வில் கட்டுரை எழுதி மதிப்பெண்கள் வாங்கிய ஞாபகம் வந்தது. அந்தப் பொற்காலத்தின் அகமும் புறமும் கலந்த  இந்தக் கதை அன்றே வந்திருந்தால் நாம் இதையும் சேர்த்து எழுதி , அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்போம் என்று தோன்றியது. 


என்ன செய்வது , அப்போது நமது ராமமூர்த்தி அவர்களும் பள்ளிப் பாடம் படித்துக் கொண்டு இருந்த சிறுவர் தானே. இன்று சரித்திர ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு அவர் கொடுத்துள்ள இந்தக் குப்தரின் கதையில் காதல், வீரம், பாசம் , துரோகம் , நாடகம் வேஷம் அனைத்தும் கலந்து ஒரு பல்சுவை இலக்கியமாக ' துருவாதேவி 'வந்துள்ளாள். 


காதல் காட்சிகள் , உரையாடல்கள் எல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கும்  திருப்தியைக் கொடுக்கின்றன. உதாரணத்திற்கு துருவா தேவியிடம் உஜ்ஜயினி செல்லும் வழியில் இரண்டாம் சந்திரகுப்தன் பேசும் வசனங்கள்  ' தேவி, ஆண் மயில் தான் அழகு என்று சொல்வார்கள். இல்லை . பொய். பெண் மயில் தான் அழகு ' என்று தொடரும் வசனங்களில் கொஞ்சம் நமது ' கல்கி ' அவர்களின் காதல் நடையைக் கடன் வாங்கி உள்ளார். திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்ற தைரியம் போலும் . 


அதைத் தொடரும் வீர நிகழ்வுகளில், சிங்கத்துடன் இரண்டாம் சந்திரகுப்தன் மோதும் இடங்களில்   சாண்டில்யனின் வேக நடை. இப்படி ஆரம்பமே அகமும் புறமும் கலந்து நம்மை கதைக்குள் இழுத்துச் செல்ல , தொடரும் நிகழ்வுகளில் மன்னர் மரணம் , அண்ணனின் அரசியல் சூழ்ச்சி , எதிரி மன்னனின் படை  எடுப்பு, காதலில் சோகம் , தொடரும் வீர நிகழ்வுகள் , என்று தொடர்ந்து இறுதியில் சுபமாக முடியும் போது ,நமக்கும் ஒரு நல்ல சரித்திரத் திரைப்படம் பார்த்த திருப்தி . 


திரைப்படம் என்று நான் சொல்வதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணமும் உண்டு. 

இடை இடையே அவர் காட்சிகளுக்குப் பொருத்தமான திரைப்பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தியுள்ள விதம் தான். 

'வழி நெடுகக் காட்டு மல்லி, காடே மணக்குது , என்ற சமீப காலப் பாட்டை நினைவுபடுத்தி , கதை போகும் போக்கில்  ' சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் ' ' என்றும் துன்பம் இல்லை , இனித் துயரமில்லை ' என்ற பழைய பாடல் வரை நினைவு படுத்தும் திரைப்பாடல் வரிகளும் அவரது பாணியில் பரவிக் கிடக்கின்றன. மொத்தத்தில் குப்தர்களின் பொற்காலத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் ஒரு ஜனரஞ்சகமான சரித்திரக் குறும்புதினம்.  படித்து மகிழ்வோம். 


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'அணையாத தமிழய்யா தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8

  'அணையாத தமிழய்யா   தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8  --------------------------- படம் வரைந்து உதவியவர் : உஷா பாரதி மேடத்திற்கு ...