புதன், 8 ஏப்ரல், 2026

ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2

 



ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2 

------------------------------

இந்தப் பதிவுக்குரிய படங்களும் புகைப்படங்களும் நானோ, எனது மனைவி  உஷா மேடமோ வரைந்தவை . 'கிளிக் ' கியவை . நேற்றைய உத்திரகோசமங்கை கோயில் உட்புறப் படம் நான் வரைந்தது . இன்றைய ' சிவகாமி ' படம் உஷா மேடம் வரைந்தது. அவர்களுக்கு நன்றி .


------------

திருஉத்திரகோசமங்கை கிழக்கு ஏழுநிலைக் கோபுர வாசல் வழி உள்ளே நுழைந்ததும் கோபுர வாசல் தாண்டியதும் வலது பக்கம் அக்கினி தெப்பக்குளம். அது அக்கினி தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் காரணத்தை யூடியூபில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


இடது பக்கம் நீண்ட நீண்ட கருங்கற்கள் அங்கும் இங்குமாக ஏராளம் இருக்கும். அங்கே பல சிற்பிகள் அந்த கற்களின் மேல் உளி நர்த்தனம் செய்து பல சிலைகளை உருவாக்கி கொண்டு இருப்பார்கள் . அந்த உளியின் சப்தம் அங்கே சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருக்கும்.


அவர்களின் தலைவராக , தலைமைச் சிற்பி, ஸ்தபதி என்று அழைக்கப்படுபவர் அவற்றை மேற்பார்வை இட்டுக் கொண்டு இருப்பார்.அவரும் செதுக்கிக் கொண்டு இருப்பார்.



கிழக்குக் கோபுர வாசலுக்கு மிக அருகில் தான் அவனது பள்ளிக்கூடம் பள்ளிக்கூட இடைவேளையில் கோயிலுக்குள் சென்று , அவர் அருகில் அவர் சிற்பம் செதுக்கும் அழகை ரசிப்பது வழக்கம். ' தள்ளி நில்லு தம்பி ,கல்லு தெறித்து கண்ணிலே விழுந்திடும் ' என்று அவர் எச்சரிப்பது உண்டு

அவர் கண்களை மறைத்து துணி அணிவதில்லை. உளியின் உரசலில் கற்கள் போகும் திசை அவருக்குத் தெரியும்.


நீண்ட கருங்கல்லாகக் கிடந்ததைப், பல நாட்களுக்குப் பிறகு ஒரு உருவமாக மாற்றி நடனம் ஆடும் அழகை அவர் கொண்டு வரும் அந்த கலை வண்ணம், அவர் கை வண்ணம் , உளி வண்ணம், மெய் சிலிர்க்க வைக்கும். . இன்றும் உத்தரகோசமங்கை பிரகாரங்களில் அவரும் அவரது குழுவினரும் செதுக்கிய சிற்பங்கள் உண்டு. ஒரு உருவத்தின் வாய்க்குள் அடங்கி வெளியே வராமல் உருளும் கல் ஒன்று , பின்னிக் கொண்டிருக்கும் பாம்புகள், அந்தக் கலையின் திறமைக்கு சில துளி சான்றுகள். இன்னும் சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை எத்தனையோ .


அப்போதுதான் , கல்கியின் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்திருந்த வயது. அவனது அப்பத்தாவிற்கு, அவன் ஒரு கையில் ஈர்வேலி (பேன் எடுக்கும் நீண்ட சீப்பு ) கொண்டு தலையில் இழுத்து, விழும் பேனைக் குத்திக் கொண்டு , மறு கையில் தடிமன் ஆன சிவகாமியின் சபதம் புத்தகப் பக்கங்களை புரட்டிக் கொண்டு படித்துக் காண்பித்துக் கொண்டு இருந்த காலம். மகேந்திர பல்லவர் நரசிம்ம பல்லவரிடம் சொல்லும் இந்த வசனம் . அதன் சாரத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். நிஜ வசனங்களை சிவகாமியின் சபதத்தில் படித்துக் கொள்ளலாம்

---

மகேந்திர பல்லவன் நரசிம்மனிடம் சொல்லும் கருத்து:


“இது சாதாரண கல் அல்ல, நரசிம்மா!

கல்லில் உயிர் ஊற்றுவது தான் கலை.

இந்தக் கற்கள் பேசும்…

நம்மைப் போல் மனிதர்கள் மறைந்தாலும்,

இவை நம்முடைய எண்ணங்களையும் புகழையும் நிலைநிறுத்தும்.”


அவர் மேலும் சொல்வது:


“நாம் இன்று இருக்கிறோம், நாளை இல்லாமலாகிவிடலாம்.

ஆனால் இந்தச் சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பேசும்.

அதனால்தான் நான் போரை விடக் கலையைக் காதலிக்கிறேன்.”


இதற்கு நரசிம்மன் உணர்ச்சியுடன்:


“அப்பா, கல்லில் உயிர் இருக்கிறதா?”


மகேந்திரன்:


“உயிர் இருக்கிறது…

அதை பார்க்கும் கண்ணும், உணரும் மனமும் இருந்தால்!”


----------

இதைப் படித்துவிட்டுச் சென்று அந்தச் சிற்பியைப் பார்க்கும் போதெல்லாம் கற்களுக்கு உயிர் கொடுத்த 'ஆயனச் சிற்பியாகவே ' அவர் தெரிந்தார் அவனுக்கு . அந்த ' ஆயனச் சிற்பி ' க்கு மகள் இல்லை, சிவகாமி இல்லை என்பதை கல்கியின் சிவகாமியின் சபதம் கதை படித்தவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2

  ஆயனச் சிற்பி-அவனும் அவர்களும் - 2  ------------------------------ இந்தப் பதிவுக்குரிய படங்களும் புகைப்படங்களும் நானோ, எனது மனைவி  உஷா மேடம...