சனி, 25 ஏப்ரல், 2026

' ரமேஷ் கல்யாண்' சிறுகதை மதிப்புரை- ' கதை புதிது நிகழ்வு

 


' ரமேஷ் கல்யாண்' சிறுகதை  மதிப்புரை- ' கதை புதிது' நிகழ்வு 

-----------------------


நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே .


151 கதை புதிது நிகழ்வுகளில் , 194 எழுத்தாளர்களின் படைப்புகளை நமது நண்பர்களை மதிப்புரை செய்ய வைத்த நண்பர் அழகியசிங்கரின் மகத்தான சாதனைக்கு தலை வணக்கம். இந்த நிகழ்வுகளில் சில எழுத்தாளர்களின் படைப்புகளை நானும் படித்து மதிப்புரை செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி. அந்த வரிசையில் இன்று ரமேஷ் கல்யாண் அவர்களின் ' வுல்லன் பூக்கள் '


சோகமான காதல் கதை ஒன்று கவிதையாக இங்கே அரங்கேறி இருக்கிறது என்று தான் ஒரே வரியில் சொல்ல வேண்டும்.


கதையின் மையக் கருத்தும் கடைசியில் இப்படி வெளிப்படுகிறது அவர் எழுத்தில் .'நினைவின் அதிர்வுகளுக்கேற்ப நூலில் பூத்த உல்லன் பூக்கள் அவளுக்கு மிகவும் சந்தோசம் தந்தன. அவை நல்ல விலைக்குப் போனது. அவள் கணவனுக்குச் சந்தோசமாக இருந்தது. அவரவர்கள் சந்தோசம் அவரவர்க்கு '.


இப்படி வருணனைகளும், உவமைகளும் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதைக் கதையின் சுருக்கம் இது.


ஓவியத்தால் ஒன்றுபட்ட இளம் உள்ளங்கள் இரண்டு, வாழ்க்கைக் காவியத்தில் இணைய முடியாவிட்டாலும் ,அவன் ரசித்த செம்பருத்திப் பூக்களை உல்லன் நூலால் நெய்யும் ' க்ரோஷாக் கலையில்' அவள் உள்ளம் மகிழ்கிறது. அதை விற்று அவள் கணவன் மகிழ்கிறான். கான்பூர் போய்விட்ட காதலன் நிலையைச் சொல்லாமல் விட்டதில் ஒரு சுகம் போலும் ஆசிரியருக்கு . இருக்கட்டும். இதுதான் கதைச் சுருக்கம் .


இந்தக் கதையில் நான் ரசித்த வருணனைகளையும் , உவமைகளையும் சொன்னாலே இந்தக் கதையின் சுவை தெரியும் என்பதால், அவற்றை மட்டும் இடம், பொருளோடு எடுத்துக் காட்டுகிறேன்.


ஆரம்பத்தில் அந்தக் கலை உணர்வு அவர்களை இணைக்கும் காட்சிகள்.

பள்ளிப் பருவத்தில் , 'எனக்கு ஓவியம் வரைய வரும்னு உனக்கு யார் சொன்னா ' என்ற அவளின் கேள்விக்கு அவன் பதில் , 'உன் கை மருதாணியின் வட்டம் இருக்கும் நேர்த்தியைப் பார்த்தேன் .' அவள் அனிச்சையாய் உள்ளங்கை விரிக்க அதில் அந்திவானச் சூரியன் . அருமையான காதல் காட்சி .


அடுத்து ' காதலில் தோற்றவர் வென்றார்' என்ற கருத்துக்கு காட்சியாக சாட்சியாக ஒரு இடம். 'அவனுக்கும் ஓவிய பழக்கம் உண்டு என்றாலும் அவளைப் போன்ற , தேவகியைப் போன்ற லாவகம் அமைவதில்லை என்பதை அறிந்தவனாக தான் கலந்து கொள்ளும் போட்டிகளில் அவள் அனாயாசமாக முதல் பரிசு பெறுவதை சந்தோஷமாக ஏற்றுக் தோற்றான். ' தோற்றவன் வென்றான். பள்ளி நுண்கலை நிகழ்ச்சிகள் பலவற்றை அவர்கள் சேர்ந்து நடத்தினார்கள்.


பள்ளி வாழ்க்கை முடிந்து ஆர்ட்ஸ் காலேஜில் சேர விரும்பிய அவள் ஆசைக்கு அப்பா தடை போட , ஆண்டு மலரில் அவன், செந்தில் எழுதிய ' ஐம்பூதம்' கவிதைக்கு ஐந்து இதழ் செம்பருத்திப் பூக்களை வரையத் தொடங்கினாள். அந்த ஓவியங்களைத் தொகுத்து நோட்டாகத் தைத்தபோது அவன் இட்ட பெயர் ' தேனீ வராத பூந்தோட்டம்' .


அவள் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகப் போகிறது . இவர்கள் இருவரும் சந்தித்ததை தந்தை அறிந்து கொள்வதை ' காற்றுக்குக் கண் முளைத்தது ' என்ற அழகிய உவமை மூலம் எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். 'படித்துக் கிழித்தது போதும்' என்று வரன் தேடி அத்தை மகனுடன் மணம் முடிகிறது .


கதையின் நடுவில் , கணவனுக்கும் அவளுக்கும் இருக்கும் ரசனை வேறுபாடுகளை சில உதாரணங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார். இவள் நுண்கலை உணர்வோடும் அவன் பணத்தின் உணர்வோடும் இருப்பதை வெளிப்படுத்தும் அந்தக் காட்சிகளைக் கதையில் படித்து ரசியுங்கள். உதாரணத்திற்கு ஒன்று மட்டும்.


தஞ்சாவூர் கோயிலுக்குச் சென்றபோது அதன் முன்வாயில் பரப்பில் , அக்காலத்தில் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும் என்று யாரோ சொல்ல அந்த நாட்களில் அந்த இடம் எப்படிக் கோலாகலம் கொண்டிருக்கும் என்பதை அவள் மனத்திரையில் விரித்தபோது , இவன் அந்த இடம் எத்தனை சதுர கஜம் இருக்குமென்று கணக்குப் போட்டு சொன்னான். இப்படி பல இடங்கள்.


அவ்வப்போது இவளுக்கு செந்தில் நினைவு. பள்ளியின் பிரிவுபசாரக் கூட்டத்தில் , செந்தில் பேசிய வார்த்தைகள்

'செடியாக இருக்கும்போது அருகருகே இருந்த செடியின் சிறு கிளைப்புகள், மரமாகப் பெருகி கிளைகளாக நீண்டபின்பு , அதே மரத்தின் எதிர்ப்பக்கங்களிலேயே இருந்தும் கூட , பார்த்துக் கொள்ளக் கூட முடியாதபடி போய் விடுவதை போலத்தான் வாழ்க்கை '


,வீட்டு வாசலில் மரமொன்றைப் பார்த்தபடி க்ரோஷாவில் நூலால் செம்பருத்திப் பூக்களை நெய்து கொண்டு இருக்கும் போது அவள் நினைவு . அதே சமயம் கான்பூர் சென்று விட்ட செந்திலுக்கு மரங்களோ செம்பருத்தியோ என்னவிதமான மனவலைகளைத் தரக்கூடும் என்ற யோசனை அவளுக்கு .' என்று எழுதுகிறார் ஆசிரியர்.


வாசகர்களான எங்களுக்கும் அந்த யோசனை தான். ஆனால் இந்த மனுஷன் , ரமேஷ் கல்யாண் , அதை எழுதவில்லையே என்ற வருத்தம் தான் எங்களுக்கும். ஆனால் அதுவும் ஒரு கதை உத்திதான். எழுதாமல் விட்டதில் நம் எண்ணங்களைத் தூண்டி விடும் ஒரு வித்தை இருக்கிறதுதான் இந்த விபரமான எழுத்தாளருக்கு .

அவர்களின் உறவைக் காதல் என்று வாசகர்கள் நினைத்தாலும் காதல் என்பதை விட நட்பு என்ற ரீதியில் ஆசிரியர் கொண்டு செல்வதற்குரிய பல குறிப்புகள் கதையில் இருப்பதும் குறிப்பிடத் தகுந்தது ..


உதாரணம் ஆசிரியரின் இந்த வரி .. ‘சராசரி யூகங்களைத் தாண்டி எதிர்பாலினத்தவர்க்கு பரிச்சயத்திலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப் போக கிளர்ச்சியுற்ற காதல் மட்டுமே முதற்காரணமாக வேண்டிய அவசியமற்ற கலை ரசனை அவர்களை பிணைத்திருந்தது’ .


இப்போது அவள் கணவன் அதிக விலை வைத்து விற்க செம்பருத்திப் பூவை க்ரோஷாவில் போடச்சொல்ல , அவள் குழந்தைக்கான மேல் சட்டையில் செம்பருத்தி போட ,அது ரத்தச் சிவப்பாய் சிரித்தது. ஆசிரியரின் இந்த வரிகளை படித்தபோது ஆரம்பத்தில், செந்தில் அவள் உள்ளங்கையில் மருதாணியில் சிரித்த அந்திவானச் சூரியனைப் பார்த்தது எங்களுக்கும் ஞாபகம் வந்தது , நாயகிக்கும் ஞாபகம் வந்திருக்கும் , ஆனால் கதையின் நடுவில் ஆசிரியர் எழுதிய இந்த வரிகள் அவளின் தற்கால வாழ்வை எடுத்துக் காட்டி முடிகிறது .

'தண்ணீரால் அடி வாங்கிய நாயைப் போல சட்டென நினைவை உதறிக்கொண்டு எழுந்து போனாள். பெண்களால் மட்டுமே முடிந்த தீர்மானமான உதறல்.. '

மறுபடியும் சொல்கிறேன்.

'தண்ணீரால் அடி வாங்கிய நாயைப் போல சட்டென நினைவை உதறிக்கொண்டு எழுந்து போனாள். பெண்களால் மட்டுமே முடிந்த தீர்மானமான உதறல்.. '


இப்படி கதையோடு ஒன்றி எங்களை படிக்க வைத்த எழுத்தின் வெற்றி ரமேஷ் கல்யாண் அவர்களுடையது. வாழ்த்துகள். நன்றி அழகியசிங்கர்.


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

' ரமேஷ் கல்யாண்' சிறுகதை மதிப்புரை- ' கதை புதிது நிகழ்வு

  ' ரமேஷ் கல்யாண்' சிறுகதை  மதிப்புரை- ' கதை புதிது' நிகழ்வு  ----------------------- நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே ...