வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை - நகைச்சுவைக் கட்டுரை

 எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை - நகைச்சுவைக் கட்டுரை 

----------------------------------------


 அந்தக் கால மீட்டர் கேஜ் எலக்ட்ரிக் ட்ரெயின் அனுபவ அவஸ்தைகளை பற்றியது இந்தக் கட்டுரை .


முதல்ல குரோம்பேட்டை வாசம் . அப்புறம் கோடம்பாக்கம். அப்புறம் நங்கநல்லூர். இப்படிப் பல இடங்களில் இருந்து மீட்டர் கேஜ் ட்ரெயின்ல பீச் ஸ்டேஷன் போயி இந்தியன் பேங்க் தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்கள். தாம்பரம் ,சானிடோரியம் தாண்டி குரோம்பேட்டை. குரோம்பேட்டை ஸ்டேஷனில் வந்து ஏறும் பொழுதே நாம் லேடிஸ் கம்பார்ட்மெண்ட் இல்லாத இடமாக, ஃபர்ஸ்ட் கிளாஸ் இல்லாத இடமாக பார்த்து நின்றாலும் கூட , நாம் நிற்கின்ற இடத்தில் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்ட் வந்து நிற்கும் அது என்ன ராசியோ தெரியாது. பிறகு நாம் ஓடிப்போய் ஜென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறும் போது அங்கே ஏற்கனவே 10 , 15 பேர் ஏறி இடித்து பிடித்துக் கொண்டு ஓரத்தில் தொங்கி உள்ளே நுழைந்து கஷ்டப்பட்டு நிற்க வேண்டியதா இருக்கும்.


அடுத்த ஸ்டேஷன் பல்லாவரம். அதில் வந்து ஒரு பாகவதர் கோஷ்டி ஏறும். தங்கள் குரலைப் பற்றிய எந்தக் கவலையும் படாமல் ,அதைப் பற்றிய எந்த குற்ற உணர்வும் கூட இல்லாமல் அவர்கள் பாடுவதைக் கேட்கின்ற ஒரு அனுபவம் அல்லது அவஸ்தை . யார் வேண்டுமானாலும் பாடலாம், எப்படி வேண்டுமானாலும் பாடலாம், நாமும் பாட வேண்டும் என்கின்ற  ஆரம்ப விதை அப்போதுதான் மனதுக்குள் விழுந்ததோ என்னமோ தெரியவில்லை .


அடுத்து திரிசூலம் மீனம்பாக்கம் ,பழவந்தாங்கல் என்று தாண்டி ,மௌண்ட், கிண்டி வரும்பொழுது சில பேர் இறங்குவார்கள் அப்பொழுது நமக்கு அந்த இரண்டு சீட்டுகளில் அது மீட்டர் கேஜ் வண்டிதானே இரண்டு சீட்டுகளின் ஓரத்தில் அந்த ரெண்டரை சீட்டில் உட்காருவதற்கு இடம் கிடைக்கும். அதில் ஒரு மாதிரி இடித்துப் பிடித்துக் கொண்டு உட்காருவோம். அடுத்தது மாம்பலம் , கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்பட் என்று எக்மோர் வந்த பிறகுதான் முழுமையான ஒரு சீட்டு கிடைக்கும் உட்கார .


அதுவரை அந்த இடைஞ்சலுக்குள்ளும் சிலர் செயினைப் பிடித்து தொங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டும் வருவார்கள். சுற்றி நெருக்கி நிற்கும் மக்கள் கூட்டம் ஒரு சப்போர்ட். ஸ்டேஷனில் நிற்கும் வண்டியின் ஜெர்க் எல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது. . ஆனால் , அவர்களின் பலத்த குறட்டை தான், மற்றவர்களை ஏதாவது செய்யும்.


இன்னும் சிலர் தினத்தந்தியோ இந்து பேப்பரோ நான்காக மடித்து அதை ஒருகையில் பிடித்தபடி மறு கையில் செயினை பிடித்துத் தொங்கிக்கொண்டு , படித்துக் கொண்டு வருவார்கள். நம்மிடமும் தினத்தந்தி இருக்கும் .ஆனால் உட்கார்ந்து பிறகு படிக்கலாம் என்று வைத்திருப்போம் . இப்பொழுது எக்மோரில் உட்கார இடம் கிடைத்த பிறகு ஒரு மாதிரி உட்கார்ந்து பேப்பரை விரித்துப் படித்தால் இரண்டு பக்கமும் இரண்டு தலைகள் வந்து பேப்பருக்கு முத்தம் கொடுக்கும். பேப்பரைப் படிக்கிறார்களாம் . நாம் வேற வழியில்லாமல் ஆளுக்கு ஒரு சீட்டை பிரித்துக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவோம் .


சிலபேர் 'அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்கணும் சார் சீக்கிரம் படிச்சிட்டு தந்துர்றேன்' என்று வாங்குவார்கள் . நாம் அவர்களை நம்பி பேப்பரைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்கும். அவர்கள் பேப்பரோடு இறங்கி போயே போயிருப்பார்கள் அதற்குப் பிறகு பேப்பரை விட்டு விட்டு குமுதம் போன்ற வீக்லி கொண்டு வர ஆரம்பித்தோம். அதில் தலை ஈடுபாடு, இடிபாடு பிரச்சனை கிடையாது . சின்ன பக்கங்கள் தானே . இது படிக்கிற அவஸ்தை .


இதற்கு நடுவில் பத்து ரூபாய்க்கு மூன்று என்று கர்சீப் விற்பவர்கள் வருவார்கள் ஏதோ ஒரு ஆசையில் அவற்றை வாங்கி வந்து அந்த மொடமட கர்சீப்பை கு வீட்டில் வந்து துவைத்த பிறகு தான் அதை உபயோகப்படுத்த முடியும் . ஒருமுறை கூட்டம் குறைவாக இருந்து ஓரமாக வேர்வை முகத்தோடு உட்கார்ந்திருந்த அவர் , கூட்டம் ஏறும் பொழுது திடீரென்று மொத்த கர்சீப்புகளையும் வைத்து முகத்தின் வேர்வையை துடைத்து விட்டு அதை உதறிவிட்டு 'பத்து ரூபாய்க்கு மூன்று' என்று சொல்லிவிட்டு விற்க ஆரம்பித்தார் அத்தோடு கர்சீப் வாங்குவது நின்றது. சில ஹோட்டல்களிலோ இல்லை கையேந்தி பவன்களிலோ பார்த்திருப்போம் .பெரிய தோசைக் கல்லின் மேல் 'சோய்' என்று எண்ணெய் ஊற்றி விட்டு ஒரு பெரிய விளக்குமாறை வைத்து அடித்துத் தேய்ப்பார்கள் அந்த விளக்கமாறு ஒரு அழுக்கு விளக்கமாறாக இருக்கும். அதற்கு பிறகு அந்த மாதிரி இடங்களில் தோசை சாப்பிடுவதுஇல்லை. ஆனால் பெரிய ஹோட்டல்களிலும் உள்ளே கிச்சனில் என்ன மாதிரி விளக்குமாறு வைத்திருப்பார்கள் என்று தெரியாது .


அது போல் இங்கே கர்சீப் வாங்குவது நின்றது. இதற்கு நடுவிலே கூட்டத்திற்கு நடுவே அந்த இடைஞ்சல்களுக்கு நடுவிலும் கால்களை மடித்து ஊர்ந்த படி சிலர் கையை நீட்டி காசு கேட்க , கொடுப்பதற்கு என்றே நாம் ஒரு ரூபாய் காயின்ஸ் கொண்டு போய் இருப்போம். ஒரு ரூபாய் காயின்ஸ் கொடுத்தால் முறைத்துப் பார்த்து வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஐந்து ரூபாய் கொடுப்பவர்களுக்கு ஒரு கும்பிடு கிடைக்கும். .ஒருமுறை இதுபோன்று காலை மடக்கி ஊர்ந்து வந்த ஒருவர் வாசலுக்கு சென்று இறங்கும் நேரத்தில் ரயில் கிளம்பி விட்டதால் டக்கென்று எழுந்து நின்று இறங்கி ஓடுவதையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது . எப்படி அவருக்குக் கால்கள் முளைத்தன என்று யோசித்து அதற்கு பிறகு அந்த ஒரு ரூபாய் தர்மம் நிறுத்தப்பட்டது .


இப்படியாக பிரயாணத்தில் வந்து சேருகின்ற பலரைப் பார்ப்பதே ஒரு அனுபவமாக இருக்கும். பல நண்பர்கள் வந்து பேசுவார்கள் . மற்றும் அங்கு இருக்கும் ஜனங்கள் பேசும் அரசியல், சினிமா, இலக்கியம் எல்லாம் கேட்கும் பொழுது இவர்களில் யாராவது ஒருவர் ஒரு காலத்தில் தமிழக முதல்வராகவோ தமிழக சூப்பர் ஸ்டார் ஆகவோ , மிகப்பெரிய இலக்கிய ஆளுமையாகவோ மாறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு என்று யோசித்தது உண்டு . ஆனால் அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை ரிட்டயர் ஆன பிறகு நண்பர்கள்  whastspp குழுக்களில் சேர்ந்து பேசுவது பாடுவது எழுதுவது இல்லை எதையாவது ஃபார்வேர்ட் பண்ணுவது என்று இருக்கிறார்களோ என்னவோ .



இதுபோன்று நமது பிரயாணம் குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை செல்லும். திரும்பி வரும் பொழுது ஓரளவு சவுரியமாக இருக்கும். ஏனென்றால் அங்கிருந்து தானே ரயில் கிளம்புகிறது .எனவே நிற்கின்ற ரயில்களில் இடம் இருக்கின்ற ரயிலாக பார்த்து ஓரமாக உட்காருவோம் .அதுவும் டிரெயின் போகும் பாதையின் நேரான ஓரத்தில் உட்கார்ந்தால் முகத்தில் காபி இன்னும் பல அபிஷேகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மறுபக்கம் சென்று ஓரத்தில் உட்கார்ந்து கொள்வோம்.


அப்பொழுது நிலக்கடலை விற்பவர்கள் எல்லாம் வருவார்கள் . சூடாக, மண்ணாக இருக்கும் அந்த மண், மற்றும் தோலோடு சேர்த்து விட்டமின்களை விட வேண்டாம் என்று சாப்பிடுவோம். ஆனால் எதிர்த் தரப்பில் இருப்பவர் வேறு எண்ணத்தோடு இருப்பார். அந்த நிலக்கடலை தோல், மண் எல்லாம் ஊதி விடுவதற்காக தனது உள்ளங்கையில் எடுத்து வைத்து ஊதும் பொழுது அந்த மண்ணோடு சேர்ந்து அந்தத் தோல் துகள்களும் சேர்ந்து நம் கண்களை மறைக்கும். பார்த்துவிட்டு 'சாரி' என்று சொல்லுவார் மறுபடி அடுத்த முறை உள்ளங்கையில் போடும் பொழுது நம்மைப் பார்ப்பார் நாம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம். நாம் கண்களை மூடிக்கொண்டு வருவோம். ஆனால் காதுகள் திறந்திருக்கும் . அதை மூடுவதற்கு வழி இல்லையே . பார்ப்பது, பேசுவதைக் குறைக்க வேண்டும், என்று கண்ணையும் வாயையும் மூட வழி செய்து அதிகம் கேட்க வேண்டும் என்று காதுகளைத் திறந்து வைத்துள்ள இயற்கையின் படைப்பை வியந்து கொண்டு, கேட்டுக் கொண்டு வருவோம்.


அங்கே குடும்ப வாழ்க்கை அலுவலக வாழ்க்கை என்று அத்தனையும் அலசப்படும் அத்தனையும் தாண்டி அந்த பேச்சிலே அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த ரயில் வாழ்க்கையே அவர்களுக்கும் நமக்கும் ஒரு தனி வாழ்க்கையாக தான் இருக்கும் அந்த பீச் ஸ்டேஷனில் இருந்து திரும்பி குரோம்பேட்டை வருவது மறுநாள் காலை குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் செல்வது என்று அந்த ஒரு மணி நேர வாழ்க்கை, அது ஒரு வித்தியாசமான வாழ்க்கை , பல மனிதர்களுடன் சேர்ந்து பழகிய அவர்களுடைய வாழ்வை எல்லாம் அனுபவித்த வாழ்க்கை. சென்னையின் முக்கிய அங்கமான அந்தப் பழைய கால மீட்டர் கேஜ் எலெக்ட்ரிக் ட்ரெயின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


புதன், 28 ஆகஸ்ட், 2024

ஒத்தையடிப் பாதை - கவிதை

 ஒத்தையடிப் பாதை - கவிதை 

----------------------

ஆரம்பத்தில் கிளைகள் பல பிரிந்தாலும்

அடுத்தடுத்த அடி விழுந்து அமைந்த பாதை


வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதை

கண்மாய் மேட்டினிலே ஒரு பாதை


காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலே

குறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை


புல்லும் பயிரும் அமுங்கிப் போய்

புதிதாக உருவெடுக்கும் அழகுப் பாதை


நடந்து போன மனிதர்களின் வாழ்க்கையிலே

கடந்து போன காட்சிகளும் எத்தனையோ


பாலகனாய் நடந்தவனின் பாதம் பட்டு

பழக்கத்தில் குழைந்திட்ட பாசப் பாதை


சேர்ந்து போன தம்பதியர் சிரிப்புப் பேச்சில்

சில்லென்று சிலிர்த்திட்ட சின்னப் பாதை


விவசாயி தலைச் சுமையைக் கால்கள் வாங்கி

இறக்கிட்ட இறுக்கத்தில் இழந்த பாதை


வயோதிகம் தாளாமல் தள்ளாடி

வருகின்ற முதியோரைத் தாங்கும் பாதை


பருவங்கள் பலவாக மாறி மாறி

வந்தாலும் அங்கேயே அந்தப் பாதை


-----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

கண்மாய்க் காலம் - கவிதை

 கண்மாய்க் காலம் - கவிதை 

----------------------------------

காலையிலும் மாலையிலும்

கண்மாய்க்குப் போனதுண்டா

மழைக்காலம் ஆனாலும்

மறக்காமல் குடையுண்டா


வழுக்கி விட்ட களிமண்ணால்

வேட்டியிலே கறையுண்டா

கரையோரக் கல் மேலே

காலோரம் தேய்த்ததுண்டா


கண்மாயைக் கலக்கி விட்ட

தொபுக்கடீர்க் குதியல் உண்டா

இடுப்புத்துணி பிழிந்தெடுத்து

தலை துவட்டி எழுந்ததுண்டா


பரீட்சைக்குப் படிப்பதற்குக்

கரையோரம் கோயில் உண்டா

பால் பருவக் காதலுக்குப்

படிக்கட்டும் அங்கு உண்டா


தண்ணியிலே ஓட்டுச் சில்லை

தத்திப் போக வைத்ததுண்டா

உண்டென்ற பதிலிருந்தால்

இல்லை என்ற ஏக்கம் உண்டா


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 



திங்கள், 19 ஆகஸ்ட், 2024

குடையும் கோட்டும் - சிறுகதை

 குடையும் கோட்டும் - சிறுகதை 

---------------------------------


சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை சொல்லும் கதைகளில் அடங்கி இருக்கும் நினைவுகளுக்காகவே அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறார் அவர். அந்தக் கோட்டு மட்டும் என்னவாம். குளிரை மட்டுமா தாங்கிற்று . எத்தனையோ நினைவுகளைத் தாங்கியபடி இப்போது தளர்ந்து தொங்கியபடி தன்னைப் போல்.


லேசான சிரிப்பு வந்தது. மனைவியின் நினைப்பு . இந்தப் பர்வதம் மட்டும் என்னவாம். எப்படித் தள தள வென்று இருந்தாள் . இப்போது தொள தொள வென்று . அவளிடம் சொல்லிவிட வேண்டும் இந்த வார்த்தை விளையாட்டை. 'பாரு' என்று கூப்பிட்டார்.' என்னவாம் ' என்றபடி அடுப்படியில் இருந்து திரும்பிய பார்வதியின் மூக்குத்தியில் பட்டுத் தெறித்த சாயங்கால சூரிய ஒளி இவர் கண்களைக் கூசச் செய்தது. ' ஏன் கண்ணைச் சுருக்கிறீங்களாம் ' .


. இல்லேம்மா , இந்த வயசிலும் உன் அழகு என் கண்ணைக் கூச வைக்குதுடி ' என்று சிரித்தவர் . 'இல்லே , முந்தி நீ தள தள இப்போ தொள தொள ' என்றதும் கோபம் வந்தது போல் முகத்தை வைத்துக் கொண்ட பார்வதி ' 'முந்தி நீங்களும் பலம் , இப்ப பழம் வேறு என்னவாம் ' என்று ஒரு 'வாம் ' மைச் சேர்த்து முடித்தாள் ,


'இல்லேடி, அந்தக் கோட்டையும் , குடையையும் பார்த்தேன் , பழைய நினைப்பு வந்துச்சு '

'என்னவாம் '

உனக்கு என் பொக்கை வாயாலே கேக்கணும் . சொல்றேன் . கல்யாணம் ஆன புதுசு . அந்த எம்ஜிஆர் சரோஜாதேவி படம் , அது என்ன , நாடோடி மன்னனா பார்க்கப் போனோமே , மதுரையில் தங்கம் தியேட்டரிலே , அப்பா என்ன மழை , என்ன குளிர், இந்த குடைக்குள்ளே உன்னைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு கோட்டையும் விரிச்சு உன் மேலே போர்த்தி விட்டு , வடக்கு மாசி வீதியிலே இருந்து , டவுன் ஹால் வரை சேர்ந்து போனோமே , ஞாபகம் இருக்கா '


'இருக்கு , படம் பார்த்துட்டு வந்து நீங்க மூணு நாள் காய்ச்சல்லே படுத்துக் கிடந்ததும் ஞாபகம் இருக்கு '

' அது என்னமோ , அப்பல்லாம் காய்ச்சல் ஒரு சுகம். பேசாம வேலைக்கு லீவ் போட்டுட்டு வீட்டுலே படுத்துக்கிடக்கிற சுகம், சுக்குத் தண்ணியிலே சரியாயிடும் காய்ச்சல் . அப்புறம் ஓமத்தண்ணீர் குளியல், அப்புறம் சாப்பிடுற சாம்பார் என்ன ருசி. இப்ப, கொரானாக் காலத்திற்குப் பிறகு காய்ச்சல் வந்தாலே பயமா இருக்கு ,ரெண்டு பேரும் பொழைச்சது மறுபிழைப்பாச்சே '


'அப்பவே போய்ச் சேர்ந்திருக்கணும் , இப்படி புள்ளைக ரெண்டும் ஒண்ணு அமெரிக்காவிலும் , ஒண்ணு லண்டன்லியுமா , வாரத்திற்கு ஒரு தடவை , வாட்ஸப் வீடியோவில் பார்த்துக்கிட்டுக் கிடக்கிறது ஒரு பொழைப்பா . அந்தக் காலத்திலே, ஆளும் பேருமா , எத்தனை சனம் வீட்டிலே, சமைச்சு மாளாது. கிராமத்திலே இருந்து வர்ற சொந்த பந்தம் கொண்டு வர்ற அரிசியும் , மிளகாயும் வருஷத்திற்குப் போதும். நம்மளும் , பஸ் பிடிச்சு கிராமத்திற்குப் போயிட்டு வரது என்ன, எல்லாம் கனவாய்ப் போச்சுய்யா '


' பழைய நினைப்பு வந்துட்டாலே, 'அய்யா ' போட்டு பேச ஆரம்பிச்சுடுவீயே , புள்ளே ' என்று கிழவரும் 'புள்ளே' க்குத் தாவினார்.

'ஏன்யா , உன் மடியிலே கொஞ்ச நேரம் தல சாயவா ' என்று மடியில் படுத்த பாருவின் தலை தடவி , காதை லேசாகக் கிள்ளி விட்ட சாம்பசிவத்தை ' சாம்பு ' என்று செல்லமாக அழைத்தாள் பாரு '


'அடிச் சக்கை , பாருக்குட்டிக்கு மூடு வந்துருச்சா , அந்தக் காலம்னா இப்ப நடக்கிறதே வேற ' என்று குறும்பாகச் சிரித்த அவரின் கன்னத்தைத் தடவி விட்ட பாரு ' புள்ளை இல்லாத வீட்டிலே , இல்லே பேரன் இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளி விளையாடுவான் ' ன்னு சொல்றது சரியாத் தான் இருக்கு ' என்று சிரித்தாள்.


' ஆமாம்டி, பேரன் ,பேத்தி எல்லாம் வந்தாச்சுல்லே, வருஷம் எப்படி ஓடிருச்சு . இப்பத் தான், கல்யாணம் ஆயி முதல் பையன் பிறந்த பச்சை உடம்போடு படுத்திருந்ததை பார்த்த மாதிரி இருக்கு , அடுத்த மகன் அடுத்த வருஷமே '

'ஆமாம்யா , உனக்குத்தான் பொறுக்காதே , பச்சை உடம்பாச்சே ன்னு கொஞ்சமாவது யோசிச்சியா ' நெருக்கத்தில் பேச்சு' வா போ 'என்று போவதை இருவருமே ரசித்தனர் .


அப்புறம் புள்ளைங்க படிப்பு, ஆபீஸ் ப்ரோமோஷன் , வீடு வாங்குறது , புள்ளைங்க அயல் நாடு , கிராமத்து நிலம் , வீடு வித்து புள்ளைங்க கல்யாணம், மெட்ராஸிலே வந்து வீடு வாங்கி , கிராமப் போக்குவரத்து நின்னு போயி, பெருசுக ஒண்ணொண்ணா போய்ச் சேர, இப்ப நம்மளே பெருசுகளாகி, என்னடி வாழ்க்கை இது '


'இது தான்யா வாழ்க்கை , எல்லாத்தையும் அனுபவிச்சுத் தானே ஓய்ஞ்சு போயிருக்கோம் , விடு எந்திரிச்சுப் போயி காபி போட்டுட்டு வர்றேன், இது ஒண்ணுதான், அன்னிக்கு போல இன்னிக்கும் . '

'அது மட்டும் இல்லேடி, அந்தக் குடையும் , கோட்டும் தான் '.


'போன் அடிக்குது, அமெரிக்கப் புள்ளையா , லண்டன் புள்ளையா , ஏதோ பெத்து வளர்த்த பாசத்திற்கு , வாரத்திற்கு முறை முகம் காட்டுதுங்க, பேரன் பேத்தியோட '

'யோவ் கண் கலங்காதீய்யா , உனக்கு நான் இருக்கேன், எனக்கு நீ இருக்கே , கூடவே '

'எத்தனை நாளைக்கோ , போறப்ப சேர்ந்தே போயிடணும் தாயி '


============== நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

சாவித்ரி - சிறுகதை

 சாவித்ரி - சிறுகதை 

---------------

வைத்த பூ வாடவில்லை. கட்டிய சேலை கசங்கவில்லை. . அன்று மாலை சேகருடன் சேர்ந்து நின்று கொண்டு, வந்த நண்பர்களை வரவேற்றுக் கொண்டு ,அவன் காதோடு சொல்லும் ஜோக்குகளுக்கு சிரித்துக் கொண்டு, திருமண வரவேற்பு மேடையில் நின்ற நினைவு அழியவில்லை. இதோ மருத்துவமனையின்அவசர வார்டின் வாசலில் அமர்ந்து முழங்காலில் கவிழ்ந்த முகத்தில் வழியும் கண்ணீர் ஓயவில்லை .


ஒரு மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டன.சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று நெஞ்சை பிடித்து விழுந்தவன் நினைவு இழக்க, என்னவென்று புரியாமல் அனைவரும் தடுமாறிய நேரத்தில் அவள் தான் அவனை எடுத்து மடியில் கிடத்தி , ஆம்புலன்ஸ் என்று அலற, இதோ அந்த ஆஸ்பத்திரியில் உள்ளே உயிருக்குப் போராடிய நிலையில் அவன் மருத்துவர்களின் கவனிப்பில் , ஓரத்தில் ஓடும் மானிட்டரில் லேசாக வளைந்து நெளிந்த அந்தக் கோடு இப்போது அமைதி அடைந்து நேர் கோடாய். மார்பில் கருவிகளும் மருத்துவர்களும் கொடுக்கும் அழுத்தம் அந்தக் கோட்டை உயிர் பெறச் செய்யவில்லை .


இவள் எதிரே அருவமாய் நிற்கிறான் சேகர். ' மன்னித்து விடு சாவித்ரி , நாம் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை, சென்று வருகிறேன் . ' இந்தக் குரல் அவளுக்குக் கேட்குமா . அவள் நினைவெல்லாம் அவனோடு பழகிய அந்த நாட்களில் . அவன் நடத்தி வந்த அந்தக் காபி ரெஸ்டாரண்டில் அவர்களின் சந்திப்பு. அவள் தோழிகள் இந்த இடத்தின் காபியின் மகிமையைப் பற்றிச் சொன்ன வருணனைகள் , காபி ப்ரியையான இவள் ஆவலைத் தூண்டி விட சென்றிருந்தாள் அன்று மாலை. .


உள்ளே நுழைந்தவுடன் வந்த அந்த வாசனை, உயர்தரக் காபிக்கொட்டை வறுபடும் வாசனை, அத்துடன், மெல்லிய வெளிச்சத்தில் சேர்ந்தே ஒலித்த சுசீலாவின் மென்குரலில் பழைய சினிமாப் பாடல் ' தண்ணிலவு தேன் இறைக்க ' என்று ஒரு இன்ப அனுபவத்தை இழைக்க ஆரம்பித்தது. இனி இங்கு தான் , 'மாலை நேரக் காபி ' என்று அவள் முடிவெடுத்த நேரம் அவன் குரல் . ' நல் வரவு அனைவர்க்கும் ' . சிரித்த முகத்துடன் சேகர் .


இவன் தங்களுடன் கல்லூரியில் படித்த அதே சேகரா . 'சேகர்' என்றதும் அவள் தோழிகள் ஒரே குரலில் ' ஆமாம் , அதே சேகர் தான், நம்முடன் படித்த அதே சேகர் தான். நாம் எல்லாம் படித்து முடித்து வேலைக்கு அலைந்து கொண்டு இருந்த போது , இவன் சுய தொழில் ஆர்வத்தில் , இந்த காபி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து , இன்று சென்னையின் முக்கிய தொழில் அதிபர். காபி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் அத்தனையும் முடித்து, உலகின் சிறந்த காபிக் கொட்டைகளை இறக்குமதி செய்து , அவனுக்கு மட்டுமே தெரிந்த முறையில் அதைப் பக்குவப்படுத்தி சுவையான காபித் தூள் தயார் செய்து ஏற்றுமதி செய்வது மட்டும் அல்லாமல், அந்த காபித்தூளின் ரகசியம் தெரிந்தவன் என்ற முறையில் சேர்க்க வேண்டியதைச் சேர்க்கின்ற முறையில் சேர்த்து இங்கு கிடைக்கும் காபியின் ருசி சென்னையில் எங்குமே கிடைக்காது என்று எங்களுக்கு நமது வாயாடி வரலக்ஷ்மி மூலம் நேற்று தான் தெரிய வந்தது. உனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று விபரம் சொல்லாமல் அழைத்து வந்தோம். '


'பெரிய தொழில் அதிபர் ஆனாலும் மாலையில் இங்கு வந்து தானே கஸ்டமர்களுக்கு காபி கலந்து கொடுப்பதில் அவனுக்கு ஒரு இன்பம்.'


'என்னடி அப்படியே சேகரைப் பார்த்துக்கிட்டே நிக்கிறே , அங்கே போய் உட்காரலாம் ' என்றவுடன் திடுக்கிட்டுச் சுதாரித்தவள், சற்று வெட்கத்துடன் அவர்களுடன் சேர்ந்து சென்று வீதியைக் கண்ணாடி வழி பார்க்கும் அந்த இடத்தின் மென்மையான சோபாவில் சென்று அமர்ந்தாள்.


கல்லூரியில் அவனுடன் சேர்ந்து பாடிய இசை நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. 'இவன் எஸ் பி பி , இவள் பி சுசீலா ' என்று தோழிகள் உசுப்பி விட்ட ஞாபகம் வந்தது. அது கடந்த காலம். இளமை உணர்வுகள் துள்ளி எழுந்தாலும், அவன் நெருங்கி நெருங்கி வந்தாலும் , குடும்பச் சூழ்நிலையில் படிப்பு, வேலை என்ற எதிர்கால நினைவுகளோடு அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கித்தள்ளி அவள் நாட்களை ஓட்டிய காலம்.


எல்லாம் மறந்து , ஒரு அயல் நாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இப்போது . பெற்றோர் பார்க்கும் வரன்களை எல்லாம் மறுத்து விட்டு, நிறுவனத்தின் முன்னேற்றமே குறிக்கோளாய் , உழைப்பு உழைப்பு. என்று வாழ்க்கை இதோ அந்தப் பழைய உணர்வுகளை உசுப்பி விட அவன் மறுபடியும் அவள் எதிரே.


' நமது பழைய நண்பர்களுக்காக நானே தயார் செய்த ஸ்பெஷல் காபி ' என்றபடி தட்டில் ஏந்தி வந்த ஐந்து வண்ணமயக் கோப்பைகளை அவர்கள் முன் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தான். அத்தனையிலும் மேலே 'இதய சின்னம் ' ததும்பியது. 'எங்களை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி சேகர் ' என்ற சுமித்ராவிடம் ' எப்படி மறக்க முடியும், அதுவும் இந்த 'பி சுசீலா' மேடத்தை ' என்றவன் இவளைப் பார்த்த பார்வையில் தெரிந்தது என்ன .


கல்லூரி விழாக்களின் ஜோடிப் பாடல்களின் நினைப்பா. அல்லது வேறு எதுவுமா .குழப்பம் இவளுக்குள் . ஒரு சிரிப்பை உதிர்த்து ' தேங்க்ஸ் சேகர் ' என்றாள் . 'உங்கள் அலுவலகம் எல்லாம், இங்கே நுங்கம்பாக்கத்தில் பக்கத்தில் தான்' என்று சுமித்ரா ஏற்கனவே சொல்லி விட்டார்கள், இனி மாலை நேரம், இங்கு தான் உங்கள் காபி நேரம், அரட்டை நேரம் ' என்று மென்மையாகச் சிரித்தான். 'ஸ்யூர் ' என்ற சுமித்ராவை முறைத்தாள் சாவித்ரி. '


'எனக்கு வேலை ..' என்று இழுத்தவளை , ' காபியைச் சாப்பிடுங்கள் ' என்று சொல்லி விட்டு மற்ற கஸ்டமர்களைக் கவனிக்கச் சென்று விட்டான் சேகர். அங்கும் இங்கும் அவன் சுறுசுறுப்பாய்ச் செயல்படும் விதமும், வேகமும் , அவனின் சிரிப்பும் , இவள் மனதை அலைக்கழித்தன .காபியை அருந்த ஆரம்பித்தவுடன் தெரிந்தது. இவளுக்கு இனிப்பு கொஞ்சம் அதிகம் வேண்டும். அது அளவோடு இருந்தது .


அந்தக் கப்போடு எழுந்தவளை , 'இங்கேயே இருக்குடி , இன்னும் கொஞ்சம் போட்டுக்க ' என்றவர்களிடம் ' இல்லே, இனிமே , தினசரி வரணும் இல்லையா, அவன் கிட்டேயே சொல்லிட்டு வந்துடறேன் ' என்று சென்றவளை நமட்டுச் சிரிப்போடு அனுப்பி வைத்தனர் தோழிகள்.


அவன் இருக்கும் அந்த காபி கவுண்டர் பக்கம் சென்றவள், 'எனக்கு எப்பவும் கொஞ்சம் இனிப்பு அதிகம் இருக்கணும் ' என்று கப்பை நீட்டினாள் . ஒரு சிறிய கப்பை எடுத்து , இவளின் பெரிய கப்பில் இருந்து ஒரு பக்கம் சிறிது ஊற்றி சுவைத்துப் பார்த்தவன் ' சாரி ' என்று சொல்லி விட்டு , அவளது கப்பின் அடுத்த முனையில் இருந்து கொஞ்சம் ஊற்றி சுவைத்துப் பார்த்தவன் மிகவும் மெதுவாகச் சொன்னான்.


' இது இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடுதலா இருக்கே எப்படி' என்றவன் ,' ஓ , இந்தப் பக்கம் நீங்க இதழ் வைத்து சுவைத்த பக்கமா ' என்று அப்பாவி போல் சொல்லிவிட்டுத் திரும்பி , புதியதாக மற்றும் ஒரு பெரிய கப்பில் ஆவி பறக்க அவளுக்குத் தேவையான இனிப்பின் அளவோடு காபி கலந்து , மேலே அந்த இதயம் சின்னத்தை வரைந்து கொடுத்தான் .


அவன் சொல்லி விட்டு உடனே திரும்பி விட்டானே , இவளின் சிவந்த முகத்தைப் பார்க்காமல் , அந்தக் கூடுதல் சிவப்பு கோபத்தாலா , நாணத்தாலா , குழப்பத்தாலா , அந்த வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் . 'இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடுதலா இருக்கே எப்படி, , ஓ , இந்தப் பக்கம் நீங்க இதழ் வைத்து சுவைத்த பக்கமா '. ஒன்றுமே பேசாமல், காபிக் கோப்பையோடு வந்து அமர்ந்தவள் மனதில் ' எவ்வளவு தைரியம் இவனுக்கு ' என்ற எண்ணத்தோடு கூடவே ' எவ்வளவு உரிமை இவனுக்கு ' என்ற எண்ணமும் சேர்ந்து வந்து ஆக்கிரமித்தது .


இருவரின் கல்லூரிக் கனவுகளின் இடைவெளி குறைந்து இப்போது நெருங்குகின்றனவா. விடை பெறும்போது ' அடிக்கடி வாருங்கள் ' என்று அனைவரிடமும் சொல்லி விட்டு ' இவளிடம் திரும்பி ' ப்ளீஸ் ' என்று அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்த அந்த வேண்டுதல் அவளுக்குப் பிடித்து இருந்தது .


இப்படித் தொடர்ந்தது தான் ,இன்று மாலை இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ரிசப்ஷனில் முடிந்தது . அவன் வாழ்வும் முடிந்தது திடீரென்று . இப்போது அருவமாய் நிற்கும் அவன் வார்த்தைகள் அவள் காதுகளில் விழாதுதான் . இருந்தும் மறுபடி சொன்னான். 'மன்னித்து விடு சாவித்ரி , நாம் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை, சென்று வருகிறேன்'.


நிமிர்ந்தாள் . அலறினாள். ' முடியாது , என்னை விட்டு நீ போக முடியாது , ஒரு முறை கல்லூரியில் விட்டுச் சென்றாய், அது போதும். இப்போது வந்து விட்டாய். இனி மேல் உன்னை விட மாட்டேன், விட மாட்டேன் ' என்று எழுந்து நின்று அவள் கத்திய அலறலில் , அங்கிருந்த அனைவரும் இவள் பக்கம் ஓடி வர, அவளின் கண்களில் கனன்ற அந்த பார்வையின் உக்கிரம் அந்த அருவத்தை அழுத்திச் சென்று உள்ளே கிடக்கும் சேகரின் உருவத்தில் சேர்க்க, அந்த உருவம் துள்ளியது. மானிடரின் நேர்கோடுகள், நெளிந்து வளைந்து செல்ல ஆரம்பித்தன. அவள் சாவித்ரி .


----------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கத்தாழை முள் - கவிதை

 கத்தாழை முள் - கவிதை 

———-


காட்டுக் கத்தாழையைச்

சாட்சியாய் வைத்துக்


கீறிய பெயர் காட்டிக்

காதல் என்றேன் நான்


வடிந்த பால் காட்டிக்

கண்ணீர் என்றாய் நீ


செடிக்கும் வலிக்கும்

சேதியும் புரிந்தது


உனக்குள் இருக்கும்

மென்மையும் புரிந்தது


மனதிற்குள் கத்தாழை

முள்ளாய்க் குத்தியது


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


சாலைக்கொரு சோகம் - கவிதை

 சாலைக்கொரு சோகம் - கவிதை 

-----------------------------

கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே

கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே


மண்ரோடாய் நானிருந்த அந்தக் காலம்

மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்


சேற்று மண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்

சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும்


காற்று வர மண் பறந்து விளையாடும்

காலத்தில் செடிகளில் பூக்கள் ஆடும்


ஓரத்தில் வளர்ந்திருந்த புல் செடியும்

ஒத்தாசைப் பேச்சுக்கு உடன் படியும்


காலடியும் கால்நடையும் வண்டிகளும்

மிதிக்கையிலே வலி தாங்கி மண் இளகும்


காலத்தின் மாற்றத்தால் தார் ஆனேன்

கல்லாகி மண்ணாகி கருப் பானேன்


வானத்து நீரோடு வாழ்க்கை இல்லை

வாய்த்துணைக்கு வாய்த்திருந்த புல்லும் இல்லை


இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்

விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்


எப்போதும் எனக்குள்ளே ஏக்கச் சோகம்

எனக்குள்ளே துடிக்கின்ற மண்ணின் தாகம்


------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தொலைந்து போனவை - கவிதை

 தொலைந்து போனவை - கவிதை 

----------------------

அடுப்புச் சுவற்றில்

சமையல் புகையின்

கறுப்புக் கோலம்


மரக் கதவில்

கீறிச் செதுக்கிய

மனித உருவம்


மாடப் பிறையில்

சிந்திக் கிடந்த

சித்த நாதன் விபூதி


திண்ணைச் சிமெண்டைத்

தேய்த்துக் கிடந்த

கோரைப் பாய்கள்


கோடி ரூபாய்க்கு

விற்ற வீட்டோடு

தொலைந்து போயின


---------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English


ஆசை - கவிதை

 ஆசை - கவிதை 

------------

காலைத் தூக்கத்தைக்

கட்டிப் பிடித்துக் கொண்டு


போர்வைச் சுமையை

இழுத்துப் போர்த்திக் கொண்டு


விட்ட கனவை

விடாமல் பிடித்தபடி


சோம்பேறி சுகத்தில்

சொக்கிக் கிடந்தபடி


உடற் பயிற்சி செய்ய

ஆசையாக இருக்கிறது


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

எது சுதந்திரம் - கவிதை

 எது சுதந்திரம் - கவிதை 

———

மற்றவர்க்காய் எழுதினாய்

படித்தவர் பல பேர்


மற்றவர்க்காய்ப் பேசினாய்

கேட்டவர் பல பேர்


உனக்காக எழுது

படிப்பவர் படிக்கட்டும்


உனக்காகப் பேசு

கேட்பவர் கேட்கட்டும்


இதுவே உன் இயற்கை

இதுவே உன் சுதந்திரம்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

குறியீட்டு ஓவியம் - நகைச்சுவைக் கட்டுரை

 குறியீட்டு ஓவியம் - நகைச்சுவைக்  கட்டுரை

--------------------------

சினிமாவிலே மட்டும் தான் குறியீடுகள் இருக்கணுமா , உங்க ஓவியத்தைப் பார்த்ததும் அதிலே உள்ள குறியீடுகளைப் பற்றிக் கண்டிப்பாக் குறிப்பிட்டுச் சொல்லணும்னு தோணுச்சுங்க


அந்த  முகத்திலே தொக்கி நிற்கும் சோகத்தில், இந்தத் தோல் வாத்தியத்தைத் தட்டி எழுப்பி அந்த இசையைக் கேட்டு மற்றவங்க போடுற காசிலே தான் இன்னைக்கு வீட்டிலே கஞ்சி காச்சணுங்கிற உணர்ச்சியை என்னமா கொண்டு வந்து இருக்கீங்க. அந்த முகம் முழுக்க கறுப்பை அப்பி நாங்க ஒண்ணும் புரியாம இப்படி யூகிக்க வச்சது உங்க திறமை சார்.


அதுவும் ஒரிஜினலில் இருக்கிற தலையிலே முழு வழுக்கை அல்லது மொட்டை ஒரு அழகுங்கறதாலே , கொஞ்சம் முடியைத் தலையிலே வச்சு அவன் அழகைக் குறைச்சதும் உங்க திறமை சார் .


அதே நேரத்திலே அவரே தனது இசையில் சொக்கி இருக்கிறதை, அவரோட மூடிய கண்கள் வெளிப்படுத்துறது அட்டகாசங்க . வாத்தியத்தைத் தட்டி தட்டி அந்தக் கறுத்த கையின் உள்பக்கம் சிவந்து போயிட்டதை , சின்னச் சின்ன சிவப்புக் கோடுகளை அந்த இடது உள்ளங்கையில் வரைஞ்சு அந்த எபக்ட்டை கொண்டு வந்துட்டீங்க. கருப்பு பென்சில் தீர்ந்து போயிடுச்சுன்னு எங்களுக்கு தெரியாதபடி அழகா எங்களை யோசிக்க வச்சீங்க .


அதே போல் அந்த வாத்தியத்தின் மேல் அமுக்கி இருக்கிற அழுத்தத்தையும் அழகாக கொண்டு வந்துட்டீங்க. அந்த இசை எழும்பித் தெறிக்கிற ஒரு காட்சியும் அங்கே கிடைக்குது . அது மட்டுமா .


அந்தத் தெறிக்கும் இசையின் பல்வேறு ஒலிச் சப்தங்களைப் பிரதிபலிக்கின்ற மாதிரி , சுற்றி பல வண்ணங்களில் கிறுக்கி இருக்கீங்க பாருங்க, சாரி தீற்றி இருக்கீங்க பாருங்க , அது உங்க கற்பனைக்கே உரிய திறமைங்க. ஒரிஜினல் படத்திலே கூட மொத்தமா டார்க்கா கலரைப் போட்டுக் கெடுத்துட்டாங்க. இது கிளாசிக்கா இருக்குங்க.


ஒரிஜினல் படத்திலே ஒரு சின்ன ஸ்டூலில் வாத்தியத்தை வச்சு அடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அந்தக் கால்கள் எல்லாம் அதிலே ரெம்ப சரியா போட்டிருப்பாங்க . ஆனால் உங்கள் படத்திலே, அந்த ஸ்டூலையும் சின்னச் சின்னக் கோடுகள் மூலம் காண்பிச்சு அது உடைஞ்ச ஸ்டூலா இருக்கலாம் என்ற பிரமையை எங்களுக்கு உருவாக்கி அவனது ஏழ்மையின் உச்சக் கட்டத்தைக் காண்பிக்கிறீங்க.


அந்தப் பாதங்கள் இரண்டையும் அவன் அழுத்தி ஊன்றி இருக்கிற விதத்தில் , அந்த ஸ்டூல் கால் உடைஞ்சதாலே அவன் ஒரு மாதிரி பாலன்ஸ் பண்ணி உட்கார்ந்திருக்கிறான் என்பதை ரெம்ப அழகா குறியீடா உணர்த்திடுறீங்க ,


மொத்தத்தில் ஒரிஜினலை மிஞ்சிய உங்கள் கற்பனையை இணைத்துப் படைத்த இந்த ஓவியம் ' ஏழை இசைக் கலைஞனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீட்டுப் படமாக' அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது .


பி.கு ; (இது நமக்குள்ளே ) ஆமாம், எப்ப சார் ஒழுங்கா படம் வரையப் போறீங்க



----------------------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English


வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...