சனி, 19 செப்டம்பர், 2026

சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

 சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு 

-----------------

அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் இரண்டு சிறுகதைகளுக்கு எனது மதிப்புரை

------

நன்றி அழகியசிங்கர் , ராய செல்லப்பா சார், வணக்கம் நண்பர்களே

----

 முதலில்

விக்னேஷ் பரமசிவம் அவர்களின் ' நரம்பின் குரல் ' சிறுகதை .

வித்தியாசமான கதைக்களம்.

 

கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் , மூளையின் முக்கிய பகுதி   செயல் இழந்து, ஒரு வருடமாகக் கோமாவில் இருக்கும் இளைஞனின் கடைசி விருப்பத்தை அறிந்து நிறைவேற்றும், செயற்கை நுண்ணறிவின், AI  யின் மொழியற்ற உரையாடல் அவனின் மூளையைத் தூண்டி. சரியான தலைப்பு ' நரம்பின் குரல் ' .. அதைத் தன் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்   மென்பொருள் பொறியாளர், இப்போது திரைப்பட இயக்குனர் விக்னேஷ் அவர்கள்  .

 

ஒரு நிகழ்ச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு பிளாஷ் பேக் கொடுத்து திரும்பி வந்து , முடிவில் ஒரு உருக்கம் கொடுத்து முடிக்கும் இந்த யுக்தி இதை ஒரு நவீன குறும்படமாக நம் முன் காட்டுகிறது .

 

அவன் அசைவற்றுப் படுத்திருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரியில் ஆரம்பிக்கிறது முதல் சீன். ஒரு வருடத்திற்கு மேலாக கோமாவில் படுத்திருக்கும் அவனைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும் விபரங்கள் , உச்ச நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் இவற்றின் பரிந்துரைகள் வேகமாக ஓடுகின்றன வெண்திரையில் .

 

அதன்படி , AI  கருவி மூலம் அவனுக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப் பட வேண்டிய கடமை நிறைவேற்றப்படுகிறது. இப்போது அந்தக் கருவிகள் அவன் மூளையுடன் இணைக்கப்படும் காட்சிகள். மூளையின் நரம்புகளின் மின்சார ஓட்டம் தூண்டப்படும் காட்சி. இப்போது அவனுக்கும்  அந்த செயற்கை அறிவுக்கும் நரம்புகள் மூலம் நடைபெறும் மொழி யில்லா  உரையாடல் , நமக்கு மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு

 

'என்னைக் கொல்லப் போகிறார்களா ' என்ற அவனின் முதல் கேள்வியிலேயே அவனின் உணர்வுகள் உள்ளே உயிரோடு ஓடிக் கொண்டு இருப்பது AI   க்கும் புரிகிறது. ' ஆம், இனி உன்னைப் பிழைக்க வைக்க முடியாது என்பது தெரிந்து விட்டதால், செயலில் உள்ள உன் உறுப்புகளை பிறர்க்குத் தானம் அளித்து உன்னைக் கருணைக் கொலை செய்ய எனக்கு உத்தரவு' என்று சொல்ல ' அதுவும் சரிதான் , தன் சொத்தையே விற்றுஎன்னைப் பிழைக்க வைக்க முயன்று தோற்று இப்போது அரசாங்க ஆஸ்பத்திரியில் என்னை சேர்த்து இதற்கு அனுமதித்த என் அப்பாவின் முடிவு சரியானதுதான். என் உறுப்புகள் மற்றவர்க்குப் பயன்படட்டும். அதற்கு முன்  உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் ' என்று ஆரம்பிக்கும் அவனை ' சீக்கிரம், எனக்கு கொடுக்கப் பட்ட நேரம் முடிவதற்குள் ' என்கிறது  AI .

 

இப்போது ஆரம்பிக்கிறது  அவனின் போராட்ட வாழ்க்கையின் பிளாஷ் பேக் . பன்னிரண்டாவது வகுப்பில் மாவட்ட முதல் மாணவனாகத் தேர்வு. எஸ் ஆர்வத்தில், கலைக்கல்லூரி   முடித்து யு பி எஸ் சி பரீட்சைக்குப் படித்துக்கொண்டு , செலவுக்கு, உணவு டெலிவரி செய்யும் வேலையோடு இருக்கும்  காட்சிகள்.

ஒருநாள் மதுபோதையில் ஒரு பணக்காரப் பையனின் கார் மோதி , செயல் இழந்து விழ, அந்தப் பணக்காரர், வழக்கறிஞரின் வாதத்தால், தன் பையனைத் தப்பிக்க வைக்க இப்போது அந்தப் பணக்கார அப்பா மீதும் அந்த வழக்கறிஞரின் மீதும் நமக்கு கோபம் வருகிறது.

 

தொடர்வது இவன் ஆஸ்பத்திரியில் போராடும் காட்சிகள். தன் சொத்தை விற்று இவனைப் பிழைக்க வைக்க இவன் தந்தை தனியார் ஆஸ்பத்திரிகளில் தவம் இருக்கும் காட்சிகள். பையன் கலெக்டர் ஆவான் என்ற ஆசையுடன் தந்தை காத்துக் கிடக்கும் காட்சிகள், முடிவில்  வேறு வழியின்றி இங்கே சேர்த்து அழுகையுடன் , இவன் கை பற்றி சொல்லும் வார்த்தைகள் . ' வேற வயித்திலே பிறந்து வந்து , கலெக்டரா ஆவே நீ ' என்று கண்ணீருடன் சொல்லி  விடை பெறும் காட்சி.

இந்த இடம் நம்மை உலுக்கி எடுக்கிறது. அந்தத் தந்தையின் பாசமும் பரிதவிப்பும்   நம்மைக் கலங்க வைக்கின்றன.  அவனுக்கும் உள்ளுக்குள் அதை  உணர்ந்து , நினைத்து ஊறுகிறது     கண்ணீர் , அவன் செயலிழந்த கண்களில் இருந்து . பிளாஷ் பேக் முடிகிறது

 

'கடைசி ஆசை ஒன்று' என்று கேட்கிறான் நரம்புகளின் குரலால் . செயற்கை அறிவுக் கருவி ' சீக்கிரம் ' என்கிறது .

 

'இந்த வருஷ UPSC  தேர்வு எனக்கு வைக்கிறாயா ',. தயக்கத்துடன் சம்மதித்து கேள்விகளை சேகரித்து கேட்கிறது. அவன் பதில்கள் முடிந்ததும் . ‘ரிசல்ட்’ என்கிறான். முதல் ரவுண்டில் அதிக மதிப்பெண். அடுத்த ரவுண்டில் நீ ஆல் இந்தியா ரேங்க் வர வாய்ப்பு உண்டு '

 

'எனக்கு வாழணும்னு  ஆசையா இருக்கு ' என்கிறான். இந்த இடமும் நம்மை உலுக்கி எடுக்கிறது. எந்தத் தவறும் செய்யாத ஒரு இளைஞன் , அப்பா மேல் பாசமும், தன் உழைப்பின் மேல் நம்பிக்கையும் கொண்ட ஒரு இளைஞன் கருணைக்கொலை  செய்ய ஒத்துக்கொள்ளும் நேரம், அந்த தேர்வு  ரிசல்ட் தெரிந்து வாழ ஆசைப்படுகிறான், 

 

அது தன்னால்  முடியாது என்று தெரிந்த AI     சிறிது நேரம்  அமைதி காக்கிறது    அது முடியாது என்று புரிந்து சொல்கிறான் அவன்  ' எக்ஸாம் எழுதி இருந்தா , நான் கலெக்டர்  ஆயிருப்பேன் , அப்பா கிட்டே சொல்லிடு ' . அவன் இதய ஓட்டம் 78 , 60  , 36  

 என்று குறைந்து  தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. திரை விழுகிறது. நம் கண்களிலும் கண்ணீர்த் திரை .

 

நன்றி வணக்கம்

-------

---

முதல் கதையின் உணர்வுகளைக்  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் அடுத்த கதை சொல்ல வேண்டும்.

இது விஜி சம்பத் அவர்களின் 'பெரிதினும் பெரிது கேள்' சிறுகதை

உயர்ந்த லட்சியங்களோடு வாழவேண்டும் என்று உணர்த்தும் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி வரிகள் . அதறகு உதாரணமாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வாழ்க்கை நிகழ்வுகள் இந்தக் கதையில் .

 

இந்தியாவில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் கனடா வாழ்க்கை விட்டு தாய் மண்ணுக்குத் திரும்பி இருக்கும் தம்பதியர், கடற்கரையில் மாங்காய் சுண்டல் வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி, அந்த மனைவி தமயந்தியின் மனதை மாற்றுகிறது . பெரிதினும் பெரிது கேட்க வைக்கிறது   .

 

அந்த சுண்டல் விற்கும் இளைஞன் கால் தடுமாறி  ஒரு நாகரிக வாலிபன் மேல் விழ, அவனின் விலை  உயர்ந்த உடை இந்த எண்ணைச் சுண்டலால் அழுக்காகக்  கோபித்து ' இந்த டிரஸ் எவ்வளவு காஸ்ட்லின்னு தெரியுமா , படிக்காத  உனக்கு என்ன தெரியும்  ' என்று கண்டபடி திட்டியபடி ,அவனை அடிக்க வெறிபிடித்தபடி பாயும் நாகரிக வாலிபனின் கைகளைத் தடுத்து ,  ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளுகிறான்  அந்த சுண்டல்கார இளைஞன்.

 

' யாரு படிக்காதவன், நானா , நான் பி எல் ரெண்டாவது வருடம் படிக்கிறேன் . என் படிப்பு செலவுக்கு சுண்டல் விக்கிறேன், உன்னை மாதிரி பெத்தவங்க காசுலே சொகுசா வாழுற தண்டச்சோறு நானில்லை. நீ பணக்காரனா இருக்கலாம். ஆனா ஏழைகளை ஏளனம் செய்யற உரிமை உனக்கில்லை. இங்கே இருக்கிறவங்க எங்க ஆளுங்க , வம்பு பண்ணினே , கடலிலே தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஒழுங்கா வீடு போய்ச் சேரு ' என்றதும் அந்தப் பணக்கார இளைஞனும் அவனுடன் வந்தவர்களும் ஓடிப் போகிறார்கள்.

 

‘நூறு ரூபா சுண்டல் வீணாய்ப் போச்சு ' என்று வருத்தப்படும் அவனிடம் ஐநூறு ரூபாய் நோட்டை அலட்சியமாய்   நீட்டி ' வச்சுக்கோ ' என்கிறாள் தமயந்தி.

'வேணங்கா , உழைக்காம கிடைக்கிற காசு ஒட்டாது .நான்  அவன் கிட்டே மன்னிப்பு கேட்கலாம்னுதான் நினைச்சேன். அதற்குள்ள என்னென்னமோ பேசிட்டான் . மனுஷனா மனுஷ நேயம் இருக்கணும் , ஏழ்மையை ஏளனம் செய்யக் கூடாது ' என்று அவன் சொல்லிச் செல்ல, இவள் நினைக்கிறாள், ' சொற்களா அவை, கற்கள் ,   அவளுக்குள் நிறைந்திருந்த செல்வச் சீமாட்டி என்ற செருக்கைத் தகர்த்த கற்கள் ' என்று  நினைக்கிறாள்.

 

அது அவள் ' பெரிதினும் பெரிது கேட்ட ' தருணம் என்று நமக்கும் தோன்றுகிறது .

 

அவளது எண்ணம் பின்னோக்கிச் சென்று அவள் பள்ளிப் பருவ  வாழ்க்கையில் உடன் படித்த ஏழைப் பெண் ரம்யாவை அவள் படுத்திய பாடு ஞாபகம் வருகிறது . உடன் படித்த ரம்யாவும் வேதாவும் நெருங்கிய தோழிகள். வேதா பணக்காரி , ரம்யா ஏழை. ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. அவர்கள் இருவரும் தான் வகுப்பில் முதல் இரண்டு ரேங்குகளில் வருவார்கள். ரம்யாவுக்கான மதிய உணவைக் கூட வேதா தான் கொண்டு வருவாள் .

 

‘ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவளுக்கு எதற்கு தனியார் பள்ளி’ என்றெல்லாம் எரிச்சல் படுவாள் தமயந்தி அப்போது .

'இவளை மாதிரி இருக்கிறவங்களுக்குத்தான் அரசுப் பள்ளி இருக்கே , அங்கே மதிய உணவு கூட கிடைக்கும் ' என்றெல்லாம் அவள் காதுபடப் பேசி கிண்டல் செய்தாலும் , ரம்யா வின் புன்னகை முகம் மாறாது. அவளை அழ வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இவளுக்குள் .

 

ஒரு முறை பள்ளிக்காகத் திரட்டிய நிதியை வகுப்பில் ஆசிரியையின் மேஜை டிராயரில் வைத்து விட்டுச் சென்றிருந்தாள் தமயந்தி , திரும்பி வந்தபோது அங்கே பணம் இல்லை. அங்கே அமர்ந்திருந்தவள் ரம்யா மட்டும்தான் . அவளிடம் ' ஏன் திருடினே ' என்று பழி சுமத்தி கத்தியபோது வந்த ஆசிரியை ' நான் தான் எடுத்து ஆபீஸ்லே கொடுத்துட்டேன்' ஏன் ரம்யா மேலே பழி சுமத்துறே' என்று திட்டியது  அவள் மேல் காழ்ப்புணர்ச்சியை அதிகம் ஆக்கியது.

 

காலம் ஓடியது. அவர்கள் பிரிந்தார்கள். இப்போது கனடாவில் இருந்து வந்திருக்கும் தமயந்தி , வியாபார லோனுக்காக ஒரு வங்கிக்கு  சென்ற போது அங்கே உயர் அதிகாரியாய் இருந்தவள் வேதா, அவர்களின் பள்ளித்தோழி.

 

அவளிடம் ரம்யா பற்றி விசாரிக்கிறாள் தமயந்தி.’ இப்போது ரம்யாவைப் பார்க்க விருப்பம் ‘என்று சொல்ல அவள் ஒரு போட்டாவை எடுத்து காண்பிக்கிறாள் . அதில் ‘ரம்யா ஐ ஏ எஸ்’ என்ற பெயர்ப்பலகை மேஜையில் .பின்னால்  சிரித்த முகத்துடன் சுழல் நாற்காலியில்  ரம்யா.

 

' நீங்கள்லாம் அன்னக்காவடி என்று பள்ளியில் கிண்டல் செய்வீர்களே , அதே ரம்யா '  என்றதும் , கடற்கரைச் சம்பவத்தை சொல்லி தான் மாறிவிட்டதைச் சொல்கிறாள் தமயந்தி.

 

ரம்யாவின் வாழ்க்கையை விவரிக்கிறாள் வேதா . வேதா வீட்டில் கார் ட்ரைவராய் இருந்தவர் ரம்யாவின் அப்பா. பாரதியார் கவிதைகள் சொல்லி இவர்களை வளர்ந்தவர் அவர். அவர் இறந்ததும் வேதாவின் அப்பாதான் ரம்யாவுக்குரிய செலவுகள் செய்து படிக்க வைத்தார். கல்லூரிப்  படிப்பு முடிந்ததும் ஆசிரியர் வேலையில் சேர்ந்து , ஐ ஏ எஸ் தேர்வுக்குப்  படித்து இன்று நீலகிரி மாவட்ட கலெக்டர். ரம்யா. வேதா அப்பா தனக்குச் செய்த அத்தனை செலவுகளையும் திருப்பியும் கொடுத்து விட்டாள். வாழ்க்கையில் முன்னேறும் வைராக்கியமும் துடிப்பும் அவளுக்கு உண்டு, இன்று அந்த மாவட்ட ஏழை மக்களை உயர வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாள் ' சிங்கப் பெண் விருது கூட வாங்கி உள்ளாள் . என்று சொல்லச்   சொல்ல   அவளிடம் பேச வேண்டும் என்றவளிடம் போன் போட்டுக் கொடுத்தாள் வேதா . 

 

 தமயந்தி  நா தழுதழுக்க அவளிடம் மன்னிப்பு கேட்க ரம்யாவின் பதில் . ' நீங்க என்னை அவமானப்படுத்தியதுதான் எனக்கு உத்வேகத்தை தூண்டியது . என் லட்சிய வேகத்தை அதிகப்படுத்தி ' பெரிதினும் பெரிது கேள் ' என்று என் அப்பா அடிக்கடி சொல்லும் ' பாரதியார்  வாக்கை  நினைவுபடுத்தியது , ’லெட்ஸ் மீட் சூன்’ '  என்று சொல்லி  முடிக்க , ‘சிறுகதை நிறைவுறுகிறது .

 

நம் மனதிலும் ' பெரிதினும் பெரிது கேள் ' என்ற பாரதியார் வாக்கு உயர்ந்த லட்சியங்களை நம் மனதில் தூண்டி விட்டு ஒலிக்கிறது.. தூண்டி விட்டது பாரதியார் மட்டும் அல்ல. அந்த வாக்கியத்தின் விளக்கத்தை ஒரு கதையாக்கி நம் மனதில் பதிய வைத்த ஆசிரியை விஜி சம்பத் அவர்களும் தான்  .

----------

நான்  மதிப்புரைத்த இந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை யும் உண்டு. வேற்றுமையும் உண்டு .  

இரண்டிலும் இருவர் ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். ஒருகதையில்  ஒருவர் வெற்றி பெற்று, வாழும்  நிறைவோடு  வாழ்கிறார். இன்னொரு கதையில் மற்றவர் வெற்றி பெற்று , வாழும் ஆசையோடு  இறக்கிறார் .

 

வாய்ப்புக்கு நன்றி வணக்கம்

 

-------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழகு உணர்ச்சி - சிறுகதை

 அழகு உணர்ச்சி - சிறுகதை  --------------------- அந்தப் பழைய பைலைப் புரட்டிக் கொண்டிருந்தபோது சுமதியின் கண்ணில் பட்டு நீங்காமல் அதே இடத்தில் ...