ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

 


 சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு 

----------------------------------


அழகியசிங்கரின் இன்றைய கதை புதிது நிகழ்வில் நான் பேசிய இரண்டு சிறுகதைகளின் மதிப்புரைகள்

======

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே.

 

தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆண்டு தோறும் இலக்கியப் போட்டி வைத்து சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி வரும் அண்ணன் ராய செல்லப்பா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.  முதல் மரியாதை. வணக்கம்.

 

அவ்வாறு பரிசு பெற்றுள்ள இரண்டு சிறுகதைகளை மதிப்புரை வழங்கச் சொல்லி வாய்ப்பளித்த அழகியசிங்கர் அவர்கட்கு நன்றி

 

எண்பது வயது எம் எஸ் பெருமாள்  அவர்கள், ஐம்பது வயது அருள் அவர்கள் .இருவரின் கதைகள். 

 

பெருமாள் அவர்களின் கதையில் பண்பாட்டைக் காக்கும்  மனிதர்கள். அருள் அவர்களின் கதையில் பண்பாட்டைச் சிதைக்கும் மனிதர்கள். பளிச்சென்று தெரிந்த இந்த முரண்பாட்டில் மனிதர்களில் எத்தனை  நிறங்கள்  என்று காண்பிக்கும் இந்த எழுத்தாளர்களின்  சமூக சிந்தனை வெளிப்படுவதை ரசித்து வணங்கவும் வாழ்த்தவும் தோன்றுகிறது. இப்போது ஒவ்வொரு  கதையாக எடுத்துக்கொள்ளலாம் .

-------------

முதலில் நாம் அனைவரும் அறிந்த பொதிகை  தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் , பன்முகப் படைப்பாளர் எம் எஸ் பெருமாள் அவர்களின்  ' தாலி தானம் ' சிறுகதை '.

 

‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற திரைப்ப படத் தலைப்பு உடனே ஞாபகம் வந்தது. இந்தக் கதையில்  ஒரு பாட்டியின்  தாலி , அவளின் பேத்திக்குத் தாலியாக அமைகிறது. அந்த முடிவை நோக்கி நகரும் கதையில் நம் கண்முன் மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பாசமும் தெரிகிறது. வேஷமும் தெரிகிறது.

 

முதலில் கதையின் மூச்சைச்  சொல்லிவிட்டு பிறகு நான் ரசித்த   எழுத்தின் வீச்சை விவரிக்கிறேன். மூன்று மகள்களும் இரண்டு மகன்களுமாக வாழும் சுப்பையா பார்வதி தம்பதிகளின் 'காந்திமதி பவனம்' வீட்டில் ஆரம்பத்தில் பேரன் பேத்திகளின்  கலகலப்பு. அந்தப் பேரன் பேத்திகள் பெரியவர்கள் ஆனபின் வருவது  சலசலப்பு .

 

உறவு முறைக்குள் மணமுடிக்க வேண்டி முட்டி போதும் சகோதர சகோதரிகளுக்கு இடமளிக்காது, பேத்தி விருப்பப் படி வேற்று மதத் துணைவனோடு அவளைச்  சேர்த்து வைக்கிறார் தாத்தா. அந்த  மண நாள் அன்று உதவி செய்வது போல் நடித்து , திருமணத்தை உருக்குலைக்கப் பார்க்கும் முறைப்  பையன் பேரனின் சதிச்செயல்களை முறியடித்து , அதற்கு தாலி தானம் செய்து  உதவிய   மனைவியோடு சேர்ந்து  காந்திமதி அம்மனுக்கு  நன்றி சொல்ல முடிகிறது கதை.

 

அது கதையின் மூச்சு. இனி  எழுத்தின் வீச்சு .

------------

கதாபாத்திரங்களின் குணநலன்களை அவர்களின் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆசிரியரின் பாணி மனம் கவர்ந்தது.

 

அந்தக் குடும்பத்தைக் கட்டிக்காக்கும் ஆணி வேர் தாத்தாவின் குணநலன்கள் வெளிப்படும் விதம் இப்படி  .

 

அண்ணன்  பெண்ணை தங்கள் மகன்களுக்கு  மணமுடிக்க, அவரின் மகள்கள், அந்த  ரெண்டு சகோதரிகளும் மோதிக்கொள்ளும் போது

ஏட்டீ..ஒங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமா இது வாழப்போறவதானே அதைத் தீர்மானிக்கணும்' என்று அதட்டி அடக்குவதில் ஆகட்டும்

 

சாதி மதப்  பற்று கொண்டு,  கோபித்து மண வீட்டில் இருந்து கிளம்பப்  பார்க்கும்  உறவினர் ஒருவரிடம் 'பேத்தி ஆசைப்பட்ட மாதிரி அவ சிநேகிதன் ஜான் மனோகரனயே நிச்சயம் பண்ணீட்டோம் அந்த மாப்பிள்ளை ஆசைப்பட்ட மாதிரி நம்ம பக்கத்து வழமைப்படி தமிழ்முறைத் திருமணம் நடத்துதோம்.. நீங்க இருந்து புள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணீட்டு முதல்பந்தியிலெ உக்காந்து சாப்பிட்டுட்டுப் போனாத்தானே எங்களுக்கும் கௌரவமா இருக்கும் என்று அழுத்தமாகவும் உரிமையுடனும் பேசி அந்த உறவினர்  நகரமுடியாமல் நங்கூரம் போடுவதில் ஆகட்டும்

 

அவளை மணமுடிக்க முடியாத ஆத்திரத்தில் மண மண்டபம் வந்திருக்கும் தன் பேரன் ஒருவனின் குணம் அறிந்து 'நெல்லையப்பன் வந்த நோக்கம் சரியில்லையோனு தோணுது பெண்ணுவீட்டு ஆளா ஓடியாடி உபசாரம் பண்ணுதாப்பிலெ பாவலா காட்டுதான் அமுதாவெ கெட்டிக் கொடுக்கலேங்கிற ஆத்திரத்திலெ கலியாணத்தெ நிறுத்த என்னமே சதி பண்ணுதானோன்னு சம்சயமா இருக்கு' என்று சொந்தம் ஒருவரை அவனை கண்காணிக்க அமர்த்துவதில் ஆகட்டும் 

 

அனைவரிடம் ஆசி வாங்க அனுப்பப்பட்ட தாம்பாளத்தில் உள்ள தாலியைத் திருடிவிட்ட பேரனின் சதியை முறியடிக்க,  தன் மனைவிக்கு , பூஜை அறையில் மஞ்சள் தாலி கட்டி , அவளின் தங்கத் தாலியை வாங்கி தாம்பாளத்தில் வைத்து தாலி கட்டும் வைபவத்தை நிறைவேற்றிக் காட்டுவதில் ஆகட்டும்,

 

அந்தத் திருட்டுப் பேரனை தனியே அழைத்துப் போய்

அவன் கையை இறுக்கிப் பிடித்து முறுக்கி “வெள்ளாளன் வீட்டுக் கல்யாணத்திலெ எனக்காக மனுஷக்கறி பிரியாணி பண்ணச் சொல்லீருக்கேன். இப்பந்தானே எளங்கறி சிக்கீருக்கு என்று சீறியபடியே அவன் கன்னத்தில் ஓங்கி அறைவதில் ஆகட்டும்

 

கடைசியாக மனைவியிடம் ' பின்னாடி பேத்திக்கு தாலிபிரிச்சுக் கோக்கையிலெ இந்தப் புதுத் திருமாங்கல்யத்தை சங்கிலியிலெ கொருத்துக்குடுத்து மாப்பிள்ளை கையாலெ போட்டுவிட்றச் சொல்லு.. நடந்த கூத்து நம்ம மூணுபேரோட போகட்டும்என்ன இருந்தாலும் நெல்லையப்பன் நம்ம ரத்தம்லா ஊர்க்காரவுக தூத்த நாமளே எடங்கொடுக்காண்டாம்!“  என்று அந்தத் துஷ்டப் பேரனையும் காப்பாற்றுவதில் ஆகட்டும் ,

அந்தக் குடும்பத்தின் அச்சாணி வேராக நிற்கும் அந்தத் தாத்தா   இந்தக் கதையின் நாயகன் .

 

அவர் குணச்சித்திரத்தை உருவாக்கி  மேற்கூறிய அந்த வசனங்களுக்குள் அவரைப் புகுத்தி நம் கண்முன் அந்தத் தாத்தாவைக் கொண்டு வருகிறார்.

ஆசிரியர் எத்தனையோ திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் அல்லவா. அந்த வாசம் இந்தச் சிறுகதையிலும்  வீசுகிறது .

 

அடுத்து மனதில் பதிவது அவர் மனைவி , பாட்டி பார்வதி .

 

'என்னமோ எங் கழுத்துக்கு கண்டம்'னு காந்திமதி கோடிகாட்டி நெல்லையப்பன் மூலமா கழத்த வச்சிட்டால்லா இதை அவ உண்டியல்லெயே போட்ருவோம் நான் கண்ணெமூடுத காலம்வரைக்கும் மஞ்சக்கயிறே நெலைக்கட்டும்னு குங்குமம் வச்சுவிடுங்க ஐயா என்று நெகிழ்ச்சியுடன் கூறி கணவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள், பழுத்த சுமங்கலி பார்வதி ஆச்சி! ' என்று முடிக்கும் போது நம் பழைய தலைமுறைப்பாட்டி , நம் கண் முன்னே தோன்றுகிறார்.

 

இது  தவிர, மகன்கள், மகள்கள் இவர்களின் உரையாடல்கள் , உரசல்கள் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் இந்தக் காலத்திற்கு ஏற்றபடி வெளிப்படுத்தும் எண்ணங்களும் வார்த்தைகளும் அவர்களையும் நம் கண் முன் கொண்டு வருகின்றன. இன்றைய காலத்தில் நடக்கின்ற பல நிகழ்வுகளையும், பேச்சுக்களையும் கதைக்குள் இணைத்து , அந்தக் குடுமபத்தோடு நம்மையும் உலாவி விட்டு, இறுதியில் கல்யாணம் நல்ல படியாக முடிந்த திருப்தியை நம் மனதில் விதைக்கும் ஐயா எம் எஸ் பெருமாள் அவர்கள் திரைக்கதை எழுதி  இயக்கிய ஓர் திரைப்படத்தை நாம் பார்த்த திருப்தியை உண்டாக்குகிறார்.  அவருக்கு நன்றியும் வணக்கமும்.

 

-----------------------------------

அடுத்து  சேது அவர்கள் எழுதிய 'சுழியம் ' சிறுகதை .

 

நண்பர் சேது அவர்களும் நானும் வெங்கடேசன் அவர்கள் எழுதிய 'வேள்பாரி ' நாவல் ரசிகர்கள் ஆரம்பித்த ' பாரியின் பாணர்கள்’ குழு உறுப்பினர்கள். நண்பர்கள். அவரது கதைக்குப் பரிசு கொடுத்ததற்கு செல்லப்பா  சார் அவர்கட்கு நன்றியும் வணக்கமும்.

 

சுழியம் என்றால் ஒன்றுமில்லாத தன்மையைக் குறிக்கும் பூஜ்யம். கதையின் நாயகி கணித ஆசிரியையின் வாழ்வும் அதுபோல் பூஜ்யமாக இருக்கும் நிலைமையை உருக்கமாகச் சொல்லி அதற்கு காரணமான இந்த சாதி வெறி பிடித்த சமூகத்தைச் சாடுகிறார் தனது கதையில் ஆசிரியர்.

இள வயதில் அவள் காதலித்த வாலிபன் வேறு சாதி என்பதால், இவள் கண் முன்னே அவனைக் கொடூரமாகக் கொன்ற தந்தை , சகோதரர்களைத் தொடர்ந்து, இப்போது நாற்பது வயதிற்கு மேல் அவள் மேல் காதல் கொள்ளும் இன்னொரு ஆசிரியரிடம் இருந்து பிரிப்பதற்காக , மற்றுமொரு தற்கொலை நாடகத்தை அவர்கள் மண வாழ்வு ஆரம்பிக்க இருக்கும் நாள் அன்று , அதே பள்ளியில் அரங்கேற்றும் சாதிவெறி பிடித்த சமுதாயத்தை மறுபடியும் காட்டி ,  வருடங்கள் ஓடினாலும். அந்த வன்மங்கள்  மாறவில்லை என்பதை உணர்ச்சிகரமாகக் காண்பித்து, அந்தப் பூஜ்யத்தோடு ஒன்று சேருமா, அந்த பூஜ்யம் மதிப்பு பெறுமா ' என்ற கேள்வியை ஓரத்தில் நிற்கும் அந்த நாயகனிடமும் நம்மிடமும் விட்டு விடுகிறார் ஆசிரியர்.

 

நண்பர் ஒரு கவிஞரும் கூட என்பதால் , கதை முழுக்க கவிதை நயம் நிரம்பிய வரிகள். அவற்றில் ஒரு சில இங்கே .

 

மழை பெய்யும் அந்த இரவின் வருணனைகள் பல அவள் வாழ்வோடு தொடர்புபடுத்தும்   விதத்தில் இப்படி .

 

தூரத்தில் கேட்கும் இடியோசை, நிலத்தின் ஆழத்திலிருந்து எழும் ஒரு முதிர்ந்த மனிதனின் முனகலைப் போல மெலிதாகக் கேட்டது. புதிய வாழ்க்கை தொடங்கத் துடிக்கும் நாயகியின் மனதின் முனகலோடு தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது .

 

வரப்போகும் மழையின் வாசனை காற்றில் ஈரமாகவும், கனமாகவும் படிந்திருந்தது. அது ஒரு சாதாரண மழையல்ல, நிலத்தின் தழும்புகளைக் கழுவத் துடிக்கும் ஒரு பெருமழை  .

அவள் மனதின் சோகத் தழும்புகளைத்  துடைத்து எறியுமா இனி வரும் நிகழ்வுகள் என்ற ஆர்வம் நம் மனதில் எழுகிறது .

 

'காலையில் எழுந்தபோது வானம் ஒரு அழுக்குத் துணியைப் போலத் தெளிவில்லாமல் இருந்தது.'

ஏதோ சரியில்லை என்ற எண்ணம் நம் மனதில் எழும்புகிறது .

------

இப்படி மழையை மட்டுமா அவள் வாழ்க்கை யோடு இணைக்கிறார். அவள் கணித ஆசிரியை என்பதால், கணிதமும் , இந்தக் கதையில் ஒரு உருவக விளையாட்டு ஆடுகிறது . அந்த ஆட்டம் இப்படி ஆசிரியர் எழுத்தில்  .

பாடம் முடிந்து அவள் கரும்பலகையில் கணித எண்களை அழித்துக் கொண்டு இருக்கிறாள், காட்சிகள் விரிகின்றன நமக்கு அவர் வார்த்தைகளால்  .

 

'கரும்பலகையில் எண்களை அழிப்பது எளிது. ஆனால், மனதின் அடுக்கில் படிந்துவிட்ட கணிதங்கள் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை. அவை தீராத வலியைப்போல எப்போதும் அடிமனதில் கணக்கிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன'.

 

'கரும்பலகையில் எஞ்சியிருந்த அடுத்த எண்ணை அழிக்க இளவரசி கையை உயர்த்தியபோது, அவளது விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. விழிகள் சிவந்து கண்ணீர் திரையிட, அவளது உதடுகள் காற்றோடு காற்றாக ஒரு பெயரை உச்சரித்தன.

"முனியா..."

 

'அடித்து, குத்திக் கிழித்து, அவன் உயிர் பிரியும் தருணத்தில் தீயிட்டுக் கொளுத்தியபோது, அவனது மரண ஓலம் அந்த ஊரின் காற்றில் இன்றும் உறைந்து கிடப்பதாகவே அவள் உணர்கிறாள்.'

 

அவளது வாழ்வின் கணக்குகள் அனைத்தும் நிலைகுலைந்து போயின.

'எண்களின் வளைவுகளுக்கு ஏற்பத் தன் உடலை வளைத்து, கைகளை அசைத்து அவற்றை அழித்தாள். அது எண்களை அழிப்பது போலத் தெரியவில்லை; தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை ஒவ்வொன்றாகத் துடைத்தெறிவது போலிருந்தது'

 

'கடந்து வந்த கசப்பையும், கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் இனிப்பையும் கொண்டுதான் அவள் சூத்திரங்களை அணுகுகிறாள்.'

 

'கரும்பலகையில் எஞ்சியிருந்த அடுத்த எண்ணை அவளது கைகள் அழித்தபோது, உடல் லேசாக அதிர்ந்தது. கன்னங்களில் ஒரு மெல்லிய சிவப்பேறியது. பூபதி வாத்தியாரின் நினைவு அவளைத் தீண்டியது'

 

'இருபத்தி மூன்று வயதில் கலைந்து போன கனவு, சாம்பலில் இருந்து எழும் பறவையைப் போல மீண்டும் ஏன் இப்போது உயிர்த்தெழுகிறது? விடை தெரியாத கணிதச் சிக்கலைப் போல .

 

 மறுநாள் , அந்த வகுப்பறையின் மின்விசிறியில் பிணைக்கப்பட்ட கயிறுகளில் தொங்கிக்கொண்டு இருந்தது அதே ஊரைச் சேர்ந்த யாரோ ஒரு காதல் ஜோடி. அதே கௌரவத்தின் எச்சங்கள், இன்றும் அந்தச் சின்னஞ்சிறு உடல்களில் ரத்தமாக வழிந்து கொண்டிருந்தன. பூபதி அமைதியாய் ஓர் ஓரத்தில் நின்றிருந்தார்.

 

'அந்தப் பள்ளிக்கூட கரும்பலகையில், நேற்றைய சில கணக்குகள் இன்னும் அழிக்கப்படாமலேயே மிச்சமிருந்தன'

 

இந்தக் கணக்குகளின் முடிவில் அவள் பூஜ்யமாக  , சுழியமாக நின்றுகொண்டு இருக்கிறாள். ஓரத்தில் நிற்கும் பூபதி வருவாரா. பூஜ்ஜியத்துடன் சேர்ந்து ஒன்றாகி நிற்பாரா அவர்கள் ஒன்றாவார்களா, அதோ சாதிவெறி  ரத்த எச்சிலுடன் காத்துக் கொண்டு நிற்கும் அந்தச் சமுதாய வெறிநாய்கள் அவர்களை வாழ விடுவார்களா. கேள்வியுடன் முடிகிறது கதை.

 

இப்படிக்  கதை முழுக்கத் தெறித்துக் கிடக்கும் கணக்கு உருவகங்களைத் தொகுத்துப் படித்தாலே போதும் . முழுக்கதையும் ஒரு உருவக நாடகமாக நம் மனக்கண் முன் ஓடுவதை நாம் உணர முடியும்.நண்பர் சேதுவின் எழுத்துத் திறமையினை வியந்து வாழ்த்துகிறேன்.

------

நன்றி வணக்கம்.

-------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

    சிறுகதைகள் மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு  ---------------------------------- அழகியசிங்கரின் இன்றைய கதை புதிது நிகழ்வில் ...