புதன், 3 டிசம்பர், 2025

விடியலின் நம்பிக்கை - கவிதை

 விடியலின் நம்பிக்கை - கவிதை 

——

(கவிதை வனம் குழுவில் ) 


போகின்ற சூரியனும்

காலையில் திரும்புவான்


தேய்கின்ற சந்திரனும்

திரும்பவும் வளர்வான்


உதிர்கின்ற பூவுக்குள்

உருவாக்கும் விதை உண்டு


விழுகின்ற மழையால்தான்

விளைகின்ற பயிரெல்லாம்


போவதும் தேய்வதும்

உதிர்வதும் விழுவதும்


இயற்கையின் வழியிலே

எழும்பிட மலர்ந்திட


துன்பத்தின் தொடர்ச்சியாய்

வருவது இன்பமே


விடியலை நம்பிடு

விழுந்ததும் எழுந்திடு


——- நாகேந்திர பாரதி



My Poems in Tamil and English 


சனி, 29 நவம்பர், 2025

வைரத்தோடு - நண்பர்களின் சங்கிலித் தொடர் கதைகளின் முடிவு

 வைரத்தோடு  - நண்பர்களின் சங்கிலித் தொடர் கதைகளின்  முடிவு 

------------------------

(கதை  புதிது குழுவில் நண்பர்கள் சங்கிலித் தொடராய் எழுதிய சிறுகதைப் பகுதிகளின் முடிவுப் பகுதி    

முன்  சுருக்கம் : தங்கையின் அடகு நகை திருப்ப அண்ணன் அம்மாவின் வைரத் தோடை அடகு வைக்க முடிவு செய்ய அது இருந்த இடத்தில் அதற்குப் பதில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருக்க அவன் குழம்ப , போலீஸ் அழைத்து குப்பைத் தொட்டியில் கிடந்ததாக  வைரத் தோடு திரும்பக் கிடைக்க அவனின் குழப்பங்களுக்கு முடிவு இந்தப் பகுதியில் - - நாகேந்திரபாரதி ) 

----------

அப்போது வாசலில் இருந்து மகன் பாபு குரல். 'அப்பா, அந்தக் குரங்கு மறுபடி வந்திருக்கு ' என்றான். 'எந்தக் குரங்குடா ' என்றபடி வெளியே வந்தவனைப் பார்த்து குரங்கு 'உர்' என்றது, அவன் கையில் இருந்த பையை உற்றுப் பார்த்தபடி. ஸ்டேஷனில் இருந்து வந்து, வீட்டுக்குள் நுழைந்தவன் உடனே கமலாவிடம் பேசி விட்டு குழப்பத்தில் இருந்ததால் , போலீஸ் கொடுத்த வைரத் தோடு இருந்த பையைப் பீரோவில் வைக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கிறான்.


'அப்பா, அந்தப் பையை உள்ளே கொண்டு போய் வைங்க . அம்மா வெளியே அவசரமா போனப்ப கூட, அம்மா கையிலே இருந்த பையைக் 'கப்பால்' ன்னு இழுத்துட்டு போன அதே குரங்கு தாம்பா . அம்மா பின்னாலேயே துரத்திப் போயிட்டு, ஆட்டோ பிடிச்சு எங்கேயோ போயிட்டாங்க. '


அப்போதுதான் காய்கறி பழப் பையோடு உள்ளே வந்த சரவணனின் அம்மா, ' உஸ் ' என்றபடி 'இந்தாடா , பாபு , இந்த வாழைப்பழத்தை அந்தக் குரங்குக்குக் கொடு ' என்றதும் குரங்கின் கவனம் வாழைப்பழம் பக்கம் திரும்ப , பாபுவின் கையில் இருந்த பழத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓடியது . குப்பைத் தொட்டி அருகே காத்துக் கொண்டு இருக்கும் அதன் குட்டிகளைத் தேடி .


' என்னடா சரவணா, இது என்ன பை, இதை இங்கே வச்சுக்கிட்டு என்ன பண்றே .உள்ளே வா' என்றவனுக்கு அம்மாவிடம் அவளது வைரத் தோட்டை எடுத்துக் காண்பிக்கும் ஆசை அவனுக்கு உந்தியது .உள்ளே வந்து அந்தத் தோடு இருந்த நகைப் பெட்டியை எடுத்துக் கொடுத்ததும் அம்மாவின் முகத்தில் நூறு வாட் பல்பு வெளிச்சம். 'சும்மா வச்சுப் பார்க்கிறேன் . காதுதான் தூர்ந்து போச்சே ' என்று வருத்தத்துடன் சொன்னாள்.


' உங்க அப்பா ,ஆசையோட ,அந்தக் காலத்திலே நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தது. அவரு மாசச் சம்பளமே அப்போ அம்பது ரூபாய் தான். ஒரு வருஷம் எப்படியோ மிச்சம் பிடிச்சு வாங்கிக் கொடுத்தது. இப்ப லட்ச ரூபாய்க்கு மேலே இருக்கும்ல மதிப்பு' என்றாள் .


'ஆமாம்டா, லட்சம்னதும் இன்னொண்ணு ஞாபகம் வருது , சொல்ல மறந்து போயிடுச்சு . உன் அண்ணன் நேற்று நீ வெளியே போனப்போ வந்ததைச் சொன்னேன். இதைச் சொல்லலே. வயசானா இப்படித்தான் போலிருக்கு 'என்று சலித்துக் கொண்டவள் 'வந்தவன் சொன்னான். நீ, கோகிலாவோட ரெட்டை வடம் திருப்பறதுக்கு ரூபாய் கேட்டாயாமே . உடனே புரட்ட முடியலியாம். இப்ப கிடைச்சிருச்சாம். கொடுத்துட்டுப் போனான். இந்த மாதிரி பாசக் கார அண்ணணுங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் அவ.'


' நூறு ரூபாய்க் கட்டு பத்து. ஒரு லட்சமாம். பையை வாங்கி நேத்தே உள்ளே பீரோ லாக்கரில் பத்திரமா வச்சுட்டேன்.சொல்ல மறந்துட்டேன் . போய்ப் பார்த்துக்கோ ' என்றபடி, சரவணன் கொடுத்த நகைப் பெட்டியைத் திறந்தாள் .


' உனக்குத் தான் வயசாயிடுச்சு . கமலாவுக்குமா. அவ கூட சொல்லையேம்மா ' என்றவனிடம். ' அவ பாவம்டா, நேத்திலே இருந்தே , ஏதோ டென்ஷனா இருந்தா, இன்னிக்கும் காலையிலேயே நீ தூங்கிக்கிட்டு இருந்ததாலே உன்கிட்டேயும் சொல்லாம கிளம்பிட்டா ' என்றாள்


சரவணன் மனதிற்குள் ' ஓஹோ, பழைய வீட்டை விக்கிற வருத்தமாக்கும் , இருந்தாலும் வைரத் தோடை மட்டும் எடுத்துட்டுப் போக தெரிஞ்சிருக்காம். பத்திரப் பதிவு அலுவலகத்தில், அவ அண்ணன் கூட அண்ணி வந்திருப்பா, அவளுக்கு முன்னாடி இந்த வைரத் தோடுகளைப் போட்டு பெருமை அடிச்சுக்க நினைச்சிருப்பா , இந்தக் குரங்கு வந்து கெடுத்துடுச்சு ' என்று நினைத்துக் கொண்டான் .


பளபளக்கும் வைரத் தோடுகளை எடுத்து தன் தூர்ந்து போன காது ஓட்டைகளில் வைத்தபடி ' எப்படிடா இருக்கு ' என்று பொக்கை வாய் திறந்து சிரிக்க, உள்ளே வந்த பேரன் பாபு ' உன் முகமும் வைரத் தோடும் சேர்ந்து ஜொலிக்குது பாட்டி ' என்றதும் , வெட்கத்துடன் குனிந்தவள் கண்கள் உடனே கலங்கின அவள் கணவனை நினைத்து .


---------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English


சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு (கட்டுரை)

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு (கட்டுரை)

---------------

நன்றி  அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே 

போப்பு அவர்களின் சிறுகதை ' கூடாரம்  ' 

வானக் கூடாரம் வறண்டு போனதால் வாழ்க்கை அற்றுப் போன ஒரு கிராமத்தின் மக்கள்  சர்க்கஸ் கூடாரம் போட்டு வாழ வந்திருக்கும் நாடோடி மக்களுக்கு கஞ்சி ஊற்ற வழி இன்றிக்  கவலைப்படும் கதை. 

வர்ணனைகளும் உரையாடல்களும் அந்தக் கிராமத்திற்கே நம்மை இழுத்துச் செல்கின்றன. 

மேலத்தெரு சந்தைக்கு சின்னமனூர் சர்க்கஸ் வந்திருக்கிறது  என்று முதல் வரியிலேயே சட்டென்று நம்மைக் கதைக்குள் கூட்டிச் சென்று விடுகிறார் ஆசிரியர் . அடுத்து வருவதெல்லாம், அந்த  கிராமத்தின்  கடந்த காலத்தில் அந்தக் கிராம மக்கள்  இது போன்ற நாடோடிக் கூட்டத்திற்குச் செய்த உதவிகளின் விபரங்கள். அந்தக் கிராமக் காட்சிகள். அந்த நாடோடிகள் வாழ்க்கை முறை. வானம் பார்த்த வாழ்க்கையின் சோகங்கள் . எனது பள்ளிப்பருவ வாழ்க்கைக்கு இழுத்துச் சென்ற  விபரங்கள் எல்லாமே  .


விவசாயம் நன்றாக விளைந்த அந்தக் காலத்தில் இது போன்று கிராமத்திற்கு வரும் வில்லுப்பாட்டு பாடுகிறவர்கள், பாவைக்கூத்து நடத்த வந்தவர்கள், சைக்கிள் சுத்துகிறவர்கள் என யாருக்கும் ,துண்டு விரித்து நாலு காசு பார்க்கும் வரையிலும் வயிறு காய விடாமல் குளிரச் செய்வது சாதி பாகுபாடு இல்லாமல் ஊரின் பொறுப்பாக இருந்தது.

கதை ஆரம்பத்தில் சர்க்கஸ் வருவதை அறிந்து அந்தக் கிராமத்துப் பிள்ளைகள்  காட்டுகிற குதூகலம் ஆசிரியரின் வார்த்தைகளில்  இப்படி.

எல்லாத் தெருப் பிள்ளைகளும் கூச்சலைக் கிளப்பிக்கொண்டு மந்தையை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

ஒன்றுக்கும் இடுப்பில் இருந்தால் மேலே இல்லை, மேலே இருந்தால் இடுப்பில் இல்லை. இடுப்பில் இல்லாததுகள் கிடுகிடுவென ஆட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவர்களுக்கான செய்தி எப்படியும் சீக்கிரமாக எட்டி விடுகிறது.

அந்த சர்க்கஸ்  கூடாரத்திற்கு செய்யக்கூடிய முன்னேற்பாடுகள் வர்ணனைகள் கனகச்சிதம்.

மந்தையில் மரங்கள் நிற்கும் பகுதி, மழை நின்ற வேகத்தில் சர்க்கஸ்காரர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. என்றென்றைக்கும் இருந்து கொண்டிருப்பது போல் கிளைகளில் தூளிகள் ஆடின. ஆட்டத்தில் ஒன்று இரண்டாக நீர்த்துளிகள் சொட்டின. காற்றுக்கு அணைப்பாக மண் மேடையை ஒட்டி அடுப்பு கூட்டியிருந்தார்கள். பெரியபெரிய முட்டுகளைக் கட்டி உலை கொதித்துக் கொண்டிருந்தது. நம்ப முடியாத இடங்களில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

டிக்கட் நன்றாகப் போவதற்கான அறிகுறிகள் இருந்தால் அடர்த்தியான மூத்திர மற்றும் மாமிச கவிச்சி வாடையுடன் சிங்கம், புலி கூட_வாடகைக்கு எடுத்து வரப்படும். –

நெருப்பு வளையங்களில் ஐந்து நிமிடம் தாவிக்குதிக்க வரும் போது அவை இஷ்டத்திற்கு நீட்டி நெளிந்து கொள்ளும். மற்றபடி காடுகளைச் சுற்றிய கால்கள் கூண்டுக்குள் அடை பட்ட தவிப்பில் ராப்பகலாய் உறுமுவது இரண்டு மூன்று ஊர்களுக்கு கேட்கும். ஜாமத்தில் மூத்திரம் பெய்ய எழும் தாய்மார்கள் உறுமல் சத்தம் கேட்டு. “அய்யோ பாவம்” என்று சொல்லிக் கொண்டு படுப்பார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு ஊர் வீதமாக, மிருகங்களைப் போல ஒலி எழுப்பிக் கொண்டு மாணவர்கள், சிறப்புக் காட்சிக்கு வாத்தியார்களின் பாதுகாப்புடன் வருவார்கள். ஆசிரியர்களுக்கு இலவசம்.

அடுத்து அந்தக் கிராமத்தின் வறுமைக் காட்சி. நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் வர்ணனைகள்

“நல்லா இருட்டிக்கிட்டு வந்தது. போக்கு காட்டீட்டு போயிருச்சு அங்கிட்டாச்சும் பெஞ்சதா இல்ல அங்கயும் இதே பூனமூத்திரம்தானான்னு பாத்திட்டு வரலாம்” என்று மேகங்களைத்

துரத்திப் பிடிக்கிற ஆத்திரத்தில் போனார்கள்.

இப்பிடி கழுதப்பொட்டு பண்ணுனா எப்பிடி, இங்க இருக்குற உகர்ல்லாம் மண்ணத்தின்னா ஜீவிக்கிறது?”

பதில் கிடைக்காத கேள்வியை ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கேட்டுக் கொண்டார்கள். ஊரை அனல் காற்று சுத்திச்சுத்தி வருகிறது. வேலிக்கருவேலம் கிளைகள் படர்ந்து வந்து அடைகாப்பது போல ராத்திரி நேரங்களிலும் அனலை ஊருக்குள் காத்து வைக்கிறது. எப்போதும் உனக்கா எனக்கா என்று விறைத்து நிற்கிற பனைமரம் கூட தோற்று முண்டமாகி விட்டது. மாடு கன்னுகள் ஓடைக் கரைகளில் புல்லின் வேர்களை கொம்பால் முட்டி முட்டி எடுத்து அசை போடுகின்றன. எல்லாம் புட்டம் வற்றி நெரு நெருவென மணல் சாணியாய் கருப்பாக கழிந்து கொண்டு திரிகின்றன. நிலைமையை புரிந்து கொண்டு நாய்கள் கூட தெருக்களைச் சுற்றி வருவதில்லை. விடிந்து வெயில் ஏறுமுன் கம்மாய்களுக்குள் ஓடிவிடுகின்றன.

மனங்குளிர நீள்கிற அம்மாக்களின் கைகள் திகைத்துப் போயின. மூலையில் நிற்கிற அடுக்குப் பானைகளில் கடைசி ஐந்தாறு தானியமணிகளை விட்டு நீங்கள்தான் விழித்திருந்து தரித்திரப்பேய்கள் புகுந்து ஆட்டங்கட்டாமல் காத்துக் கொடுக்கவேண்டும் என்று

கேட்டுக்கொண்டார்கள்.

தொடருவது சில வருடங்களுக்கு முன்பு மழை பெய்து செழிப்பாக இருந்த காலத்தில் அவர்கள் இந்த நாடோடிகளை கவனித்துக்  கொண்ட விதம் .

ஏழெட்டு வருசம் முன்னர்… எண்பது வயசு கிழவன் முதல் ஒரு பச்சை குழந்தை வரையான ஒரு பெரிய குடும்பம் வந்து பிள்ளையார் கோயில் மரத்தடியில் பேச்சு மூச்சு இல்லாமல் குன்னிப் போய்க்கிடந்தது. எல்லாரும் பதறிப் போய் முகத்தில் தண்ணியடித்து பானகம் கரைத்துக் கொடுத்தார்கள். அந்தக் குழந்தை மூடின கண் மூடினபடியே இருக்க எத்தனையோ முலைகள் மாற்றிப் பால் குடித்தது.

அவர்களின் தார்பாய்ச்சிக் கட்டும், பொம்பளங்களின் கத்தாழைப்பழ நிறப் பாவாடையும் முக அம்சமும் ரெம்ப தூர தேச ஆட்கள் என்றும், வெறும் வயித்துப் பாட்டுக்கு வந்தவர்கள் அல்ல என்றும் சொல்லியது. அவர்களுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தெலுங்கு வார்த்தைகளைக் கொண்டும், ஊரிலேயே சில மாதங்களாகத் தங்கிவிட்ட, இமயமலை எல்லாம் சுற்றிவந்த சாமியாருக்குத் தெரிந்த பாஷைகளைக் கொண்டும் கொஞ்சங் கொஞ்சமாக தெளிவு

கிடைத்தது.

ராமேஸ்வரம் தீர்த்தமாட ஒரிசாவிலிருந்து வந்திருக்கிறார்கள். பணப்பை எங்கேயோ கை தவறிவிட்டது “யாரும் கன்னம் வச்சி எடுத்திருப்பாங்களோ?” என்று கேட்டதற்கு,

“எம் மனசறியாம நான் அப்படி சொல்ல மாட்டேன்” என்றார் அந்தப் பெரியவர்.

ஊரிலேயே நாலு நாள் தங்க வைத்து உடம்பிலே தெம்பேற்றினார்கள். கோதுமை ரொட்டி திங்கிறவம்சம் அது என்று மேரி டீச்சர்கூட கோணமாணையாக சுட்டுக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வீடு காசுசேர்த்து வழிச் செலவுக்கும் கொடுத்து விட்டார்கள்.

பிரியும் போது பெரியவர் கம்மாக்கரையில் நின்று கையை உயர்த்தி தாரைதாரையாகக் கண்ணீர்விட்டார். அந்தக் கண்ணீர்தான் மூன்று வருசமாக மடைதிறக்க விடாமல் வயல்களில் மீன்கள் துள்ளும் மழையாக ஊத்திக்கொட்டியது.

அப்படி நம்பிக்கை பாய்ந்த ஊர்.

அடுத்து இப்போது அந்த நிலை  மாறி இந்த சர்க்கஸ் கூடாரத்தைக் கலைத்து விட்டுப் போகச்சொல்லும் கண்ணீர்க் காட்சி .

தங்கள் மனப்பாரத்தைத் தூணில் சாய்த்து உட்கார்ந்திருந்தார்கள். எல்லாம் பேசிமுடித்த பின்னும் அசங்க முடியவில்லை. நம்ப நிலைமை இப்பிடி ஆச்சே. மூஸ்மூஸென்று வெறும் பெருமூச்சுதான் விட முடிந்தது.

மலைமலையா தானியங்களை அடித்துக் குவித்த ஊர்தானா இது. பிதுங்கப் பிதுங்க பருத்தித் தாட்டுகளைக் கட்டி பெருமைப்பட்ட ஜனங்களா நாம்.

சாலையெல்லாம் மிளகாய்நெடி கமற சாரைசாரையாக விருதுநகருக்கு வண்டி ஓட்டிப்போன காலமெல்லாம் முடிஞ்சு போனதுதான. நம்ம சீவன் நிம்மதியாப் பிரியாதா.

அடுத்தநாள் வெயில் தாழ சர்க்கஸ் ஆட்களில் பொறுப்பானவர்கள் மூன்று பேரைக்கூட்டிக்கொண்டு திரி குத்துகிற சூதாடிகள் போல் கம்மாய் மரங்களுக்குள் போனார்கள். ரெண்டும் அஞ்சுமாக சேர்ந்த இருநூத்தி சில்லரை ரூபாய்களை வெற்றிலைக்குள் அடக்க முடியாமல் வைத்துச் சொன்னார்கள், ‘அய்யா புண்ணியவான்களே ஒங்களக் கையெடுத்து கும்பிடுறோம்’. இதோட மாட்டுக்கு நாலு நாள் தீவனமும் அரை மூடைக்கு கொறையாம தானியமும் தர்ரோம். வெள்ளி மொளைக்கு முன்ன ரெண்டாம் பேருக்குத்தெரியாம கிளம்பிப் போயிருங்கைய்யா. எங்க ஆயுசுக்கும் இப்பிடிக் கண்டதில்ல.

கூடாரத்தப் போட்டு வெத்து டப்பாவ தட்டிக்கிடு இருந்திங்கின்னா அந்தக் கொடுமையத் தாங்காம இருக்குற கொஞ்ச நஞ்ச பச்சையும் பொசுங்கிப் போய்ரும். கண் காணாத தேசத்துக்கெல்லாம் கூட வெளைய வச்சத கட்டுப்படியாச்சோ இல்லியோ நல்ல மனசாத்தான்

அனுப்பி இருக்கோம்.

யார்யாரோ நல்லா இருக்காங்க. மண்ணக்கட்டிப் பொரள்ற நாங்க இப்பிடியாகிப் போனோம்.எங்கள நம்பி வந்த உங்கள இப்பிடி அனுப்புறது ஞாயமில்லதான். என்ன பண்ண…? மண்ணு குப்புறப் படுத்துக்கிச்சே…!”

“எப்பிடியாச்சும்…’

“அய்யா… நீங்க ஒண்ணும் பேசப்படாது. நடங்க… போகும்போது நல்ல வார்த்தை சொல்லாட்டாப் போகுது எதுவும் சபிச்சீடாதீங்க..”

பரமனுக்கு கண்காட்ட, அவன் காக்கி ட்ரவுருக்குள் இருந்து பாட்டிலை எடுத்தான்.

“இந்தாங்க மனத் தைரியத்துக்கு இத ஊத்திக்கிடுங்க”.


ஆரம்பத்தில் குழந்தைகளின் குதூகலத்தில் ஆரம்பித்த கதை , குழந்தைகளின்  கனவுகளில் இப்படி  முடிவது உருக்கம்

இன்றிரவும் பிள்ளைகளின் உறக்கத்தில் கனவு வரும், கனவில் சோம்பல் நெளித்துப் பிளக்கும் புலியின் வாயில் பட்டாணியை எறிவார்கள். சர்க்கஸ் டிக்கட்டுக்காகவும், யானைக்கும் குரங்குக்கும் தர வாழைப்பழம் வாங்கவும் காசு சேர்க்க ஓடிஓடி வேப்பமுத்தும் புளியமுத்தும் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.


அந்தக் கிராமத்திற்கே சென்று வாழ்ந்து வந்து அனுபவத்தை இந்தக் ' கூடாரம் ' கதையின் மூலம் கொடுத்த எழுத்தாளர் ‘’போப்பு ' அவர்கட்கு நன்றி. வாய்ப்பு அளித்த அழகியசிங்கருக்கு நன்றி. வணக்கம். 


-------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


வியாழன், 27 நவம்பர், 2025

ஆடிய ஆட்டம் என்ன -சிறுகதை

 ஆடிய ஆட்டம் என்ன -சிறுகதை

---------------------

(அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை)


முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ' காயாத கானகத்தே ' என்று அவரின் கம்பீரக் குரல் எழும்பினால், பக்கத்துக் கிராமத்துக்கே கேட்கும். ஓடி வந்து விடுவார்கள். இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் காலை நாலு மணி வரை நடக்கும். அது அந்தக் காலம்.


விதைப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே மழையை வேண்டி நடக்கும் முளைக்கொட்டு உற்சவத்தில் வள்ளி திருமணம் நாடகத்தில் வேலன் , வேடன், விருத்தன் என்று மூன்று வேடத்தில் அவர் பாடிக் கலக்குவதை கேட்டு மயங்கிப் போய் அவரிடம் வந்து விழுந்த எந்தப் பெண்ணையும் அவர் விட்டதில்லை. ஊருக்கு ஒரு வப்பாட்டி என்று வைத்திருந்து வாழ்ந்த காலம் அது அவருக்கு.


வள்ளி வேடக்காரி ஒருத்தியையே மணந்து கொண்டு பேருக்கு குடும்பம் என்று ஒன்று இருந்தாலும் , பிள்ளை குட்டி கொடுக்காமல், அவளும் போன வருடம் தான் செத்துப் போனாள். இதோ அந்தக் கிராமக் கொட்டகையில் ஊர்ச் சனங்கள் கொண்டு வந்து ஊற்றும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு காலத்தைக் கழித்து வரும் அவருக்கு ஆடி மாதம் வந்து விட்டால் முருகன் வேடம் போட்டுக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே , பிசிறு தட்டிப் போன குரலில் அதே ' காயாத கானகத்தே ' . கேட்பார் தான் யாரும் இல்லை. .


சாயத்தைப் பூசுவதில் உள்ள வேகம், அதைக் கலைப்பதில் இருக்காது அவருக்கு. இன்றும் அதே போல் பாதி கலைந்து போன சாய முகத்தோடு, எண்ணங்களில் பின்னோக்கிப் போய். வள்ளி வேடத்தில் சேர்ந்து நடித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்து இருந்து, போன சுந்தரி நினைவு மட்டும் மனதில் அலைக்கழிக்க சோகம் ததும்பிய கண்களோடு உட்கார்ந்து இருந்தார்.


இப்போதெல்லாம், வயக்காட்டில் கம்பம் நட்டு, திரையை மாட்டி சினிமா தான் முளைக்கொட்டு உற்சவத்திற்கு . அங்கிருந்து பாட்டு சத்தம் கேட்டது ' ஆடிய ஆட்டமென்ன, கூடிய கூட்டம் என்ன , தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன '


-------------------நாகேந்திர பாரதி


 My Poems in Tamil and English 


புத்தக நோய் -சிறுகதை

 புத்தக நோய் -சிறுகதை 

----------------

(அழகியசிங்கர் கதை புதிது குழுவில் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை )


சுந்தரின் இந்தப் பழக்கம் ' நல்ல பழக்கம்  ' என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது  ' கெட்ட பழக்கம் ' என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற  பழக்கம்தாங்க. 


அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கிக் குவிப்பது சுந்தரின் பழக்கம். அதுவும் புத்தகக்  கண்காட்சி நடந்தால் அங்கு சென்று குறைந்தது ஐம்பது புத்தகங்களாவது வாங்கி வந்து விடுவான். சமீபத்தில் புதிதாக ஒரு பழக்கம். வெளியூர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் சென்று புத்தகங்கள் வாங்கி வருகிறான் . 


அவன் நண்பன் சேகரின் கவலை இதுதான். 'சரி, புத்தகம் வாங்கலாம். அதை எதற்கு வாங்குகிறோம். படிக்கத்தானே. அந்தப் பழக்கம் தான் சுந்தரிடம் இல்லை. பிறகு எதற்கு வாங்கிக் குவிக்க வேண்டும்.' அதுவும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கிம்பளம் வாங்காமல் சம்பளம் மட்டும் கிடைக்கும் வேலை. முக்கால் வாசி சம்பளம் புத்தகத்தில் போய் விடுகிறது. அப்பா வீடு வைத்துப் போய் விட்டதால் இருப்பிடக் கவலை இல்லை. இவனைப் பற்றி பலருக்கும் தெரிந்ததால்,இவனுக்குப் பெண் கொடுப்பாரும் யாரும் இல்லை. 


'சரி, இவன்தான் படிப்பது இல்லை, படிக்க ஆர்வமாகக் கேட்பவர்க்கும் கொடுக்க மாட்டான். இரவல் கொடுப்பது தவறு' என்று உறுதியாக மறுத்து விடுவான். நண்பர்களும் குறைவு. சேகர் மட்டும் சிறு பிள்ளையிலேயே சேர்ந்து படித்த பள்ளி நண்பன் என்பதால் இவனிடம் அவ்வப்போது வந்து போய் அறிவுரைகள் கூறிக் கொண்டு இருக்கிறான். 


சேகர் ஒருமுறை தனது ஐந்து வயது மகனுடன் வந்திருந்தவன் திடீர் என்ற அவனைக் காணோம் என்று பதறிப் போய்த் தேடிக் கடைசியில் கண்டுபிடித்தான். அந்த புத்தக அறையில்  ஒரு அலமாரியின் ஓரத்தில் ஒளிந்திருந்தவன். சிறிது நேரம் கழித்து வெளி வந்தவன், 'அப்பா, நீ தோத்துப் போயிட்டே, மாமா வீட்டுக்கு தினசரி வந்து இது மாதிரி ஒளிந்து பிடித்து விளையாடலாம், நல்ல இடம்  ' என்று சிரித்தவனை என்ன சொல்வது . ' டேய் சுந்தர், உன் புத்தக அறை இதுக்காவது உபயோகப்படும்    ' என்று சொல்லிச் சென்றான். 


சுந்தர் அவசரமாக உள்ளே சென்று சேகரின்  பையன் தள்ளி விட்டு இருந்த புத்தகங்களை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்து  விட்டு வந்தான் ' புத்தகத்தின் அருமை தெரியாதவன் ' என்று முணுமுணுத்தபடி. இவன் ஏதோ புத்தக அருமை தெரிந்து எல்லாவற்றையும் படித்த அறிஞன் மாதிரி. 


சேகர் கண்டுபிடித்து விட்டான். இது ஒரு விதமான நோய் ' புத்தக நோய் ' என்பதை. நண்பன் மேல் உள்ள அனுதாபத்தில், ஒரு மனோ  தத்துவ நிபுணரை இவன் வீட்டிற்கு அழைத்து வந்தான் . 'தனது நண்பன்  , புத்தகப் பிரியன் ' என்று பொய் சொல்லி. 


 வழக்கம் போல் சுந்தர் ஆர்வத்துடன் , அந்த மருத்துவரை உள்ளே அழைத்துச் சென்று தனது புத்தக அடுக்குகளை ஆர்வத்தோடு காண்பித்தான்.ஆயிரக் கணக்கில் புத்தகங்கள்  . ' இந்த அடுக்கு, கதைகள், அது கவிதைகள். இது கட்டுரைகள் , பகுதி வாரியாகப் பிரித்து உள்ளேன். செயற்கை அறிவுப் பிரிவு கூட உள்ளது. உங்களுக்கு எதில் ஆர்வம் ' என்றான். 


'எனக்குப்  பிடித்தது மருத்துவப் பகுதி' என்றார்  அவர். அவன் அழைத்துச் சென்ற அந்த இடத்தில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.  புத்தகங்களில் நம்பர் ஒட்டி , பக்கத்தில் , விபர அட்டவணை நோட்டு ஒன்றும் இருந்தது. அதைப்  புரட்டிய அவர் அசந்து போனார்.     


அவர் நீண்ட நாட்களாகத்  தேடிக் கொண்டு இருந்த ' மூளையின் நரம்பு நுணுக்கங்கள் ' பற்றிய ஆஸ்திரேலியா டாக்டர் ஒருவரின் ஆங்கிலப் புத்தகம் அது. அழகிய அட்டையோடு உயர்தரப்  பேப்பரில் அச்சடிக்கப் பட்டு இருந்த அதை ஆர்வத்துடன் தேடி எடுத்துக் 

கேட்டார். ' இதை நான் எடுத்துக் கொள்ளலாமா , விலைக்கோ, வாடகைக்கோ ' . 


வெடுக்கென்று அதை அவர் கையில் இருந்து பறித்த அவன் சொன்னான் ' 'சேகர் சொல்லவில்லையா உங்களிடம். இந்தப் புத்தகங்களை யாருக்கும் கொடுப்பது இல்லை ' என்றான் .  


அந்தப் புத்தகத்தில் தான் அவனின் இந்த வினோத புத்தக நோய் பற்றிய விளக்கங்களும் தீர்வுகளும் அடங்கி இருந்தன. 


------------------நாகேந்திர பாரதி 

My Poems in Tamil and English


திங்கள், 17 நவம்பர், 2025

நாய் அம்மா - சிறுகதை

  நாய் அம்மா - சிறுகதை 

-------------

(அழகியசிங்கர் கதை புதிது குழுவில் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை )

--------

ஒரு மணி நேரத்தில் எத்தனை மாற்றம்  தங்கள் வாழ்வில் என்று நெகிழ்ந்து போய் இருந்தன  அந்த நான்கு குட்டி நாய்களும் . கால் மடக்கி அமர்ந்திருக்கும் அவள் மடியில் , அவள் ஜீன்ஸில்  அமர்ந்து ஒன்றை ஒன்று கொஞ்சும் காட்சியை ரசித்து , அவள்   அவற்றைத் தடவி விட்டுக் கொண்டு  இருந்தாள். அவர்கள் இருந்த அந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்  ஓசை இன்றி வீதியில் நாசுக்காக வழுக்கிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தது . 


ஒரு மணி நேரம் முன்பு அவை இருந்த நிலை. தெருவோர நடைபாதையில் குளிரில் நடுங்கியபடி , பார்வையால் தங்கள் தாயைத் தேடியபடி, ஒன்றை ஒன்று பயத்தோடு அணைத்துக் கிடந்தன. பக்கத்துத் தெருவுக்குத் தானே போனாள் அம்மா . தங்கள் பசியாற ஏதேனும் எடுத்துவர. ஏதாவது வாகனத்தில் அடிபட்டு இறந்து  விட்டாளா என்று எண்ணவே பயம் அவைகளுக்குள். 'வருவாள் அவள்' என்று தெருவோர முனையையே பயமும் பசியும் கலந்த கண்களால் பார்த்தபடி கிடந்தன. 


அப்போது அங்கே நடந்து சென்ற இருவர் பேசிச்  சென்ற வார்த்தைகள் அவைகளுக்குப் புரிந்திருக்க நியாயம்  இல்லை. 


'பாவம்டா , தெருநாய்கள். கம்பி வச்சு இழுத்துப் போட்டு  லாரியில் ஏற்றிச் சென்றது பாக்கவே கஷ்டமா இருந்ததுடா . இந்தக் குட்டிகளோட அம்மாவும் அதிலே இருந்திருக்குமோ. '


'இன்னிக்கு ஹிந்து பேப்பரில் கூட தெரு நாய்கள் பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு , அவற்றின் முரட்டுத்தனத்திற்குக் காரணம், பயமும், பசியும் என்று . அதையெல்லாம் புரிந்து நடந்துக்கிறவங்க  இருக்காங்களா . '


'ஐயோ  மழை வேற வரும் போலிருக்கு.  குடை வேற இல்லை. நம்மளும் வீட்டுக்கு வெரசா போகணும் 'என்றபடி வேக நடை போட்டனர்  அவர்கள். மனிதர்கள்.இரக்கம் வாயில் மட்டும் காட்டி விட்டு விரையும் மனிதர்கள்.


 அவர்களின் பாஷை அந்த நாய்க்குட்டிகளுக்குப் புரியா விட்டாலும் . அவர்களின் சைகையில் மழை வருவதை புரிந்துகொண்டு பயந்து போய்  குளிரில் வெடவெடத்தபடி  தங்களின் மெல்லிய குரலில் கத்திக்கொண்டு கிடந்தன. 


அப்போதுதான் அந்த இடத்தில் வழுக்கிய படி வந்து நின்றது அந்த மெர்சிடிஸ் பென்ஸ் . அதில் இருந்து இறங்கிய ஜீன்ஸ் அணிந்த அந்த இளம் பெண் அந்த நான்கு குட்டிகளையும் ' ஹேய் ,ஸ்வீட்டிஸ்' . என்றபடி  அள்ளி அணைத்துக் கொண்டு  காருக்குள்  நுழைந்தாள்.


' தம்பி , மிருகங்கள் காப்பகம் போப்பா ' என்று சொல்லிவிட்டு , அந்தக் குட்டிகளைக்  கொஞ்ச ஆரம்பித்தாள். 


இப்போது அவை அங்கே பார்த்தது தங்கள் நாயம்மாவை. தாயம்மாவை. அவளின் மடியின் கதகதப்பில் மயங்கிப் போய், பழைய உற்சாகமும். சிரிப்பும்  திரும்ப வந்து  விளையாட ஆரம்பித்தன. 


----------------நாகேந்திர பாரதி 

My Poems in Tamil and English 

புதன், 12 நவம்பர், 2025

கை ஓட்டம் - சிறுகதை

 கை ஓட்டம் - சிறுகதை 

-----------------

அழகியசிங்கர் கதை புதிது குழுவில் போட்ட படத்திற்குக் கேட்ட சிறுகதை 

-----------------


'ஐயா ஓவியத் திலகமே , இந்தப் பெண்ணுக்குப் பத்துக்  கைகள் போட்டு ஒவ்வொரு கையிலும் பெண்களின் ஒவ்வொரு வேலைப் பளுவைப்   போட்டு , இதிலே முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே  ' என்று கொஞ்சியபடி கேட்ட சுந்தரியை இழுத்து அணைத்தபடி , 'என்னடி கண்ணு , சொல்லேன் ' என்றவனை. விலக்கி விட்டுச் சொன்னாள் .  'பிஸ்டல்  ' .


அதிர்ந்த போன சேகர் 'என்ன சொல்றே '  என்றதும் 

' நீங்க இந்தக் காலத்திலே தானே  இருக்கிறீங்க . பேப்பர் படிக்கிறதில்லையா . பெண்களுக்கு எதிரே எத்தனை வன்முறைகள். சமீபத்தில் கூட கோயம்பத்தூரிலே ' . 


'இதுக்கு  அவள் கையிலே ஒரு ஆயுதம் , இந்தக் காலத்திற்கு ஏற்றபடி துப்பாக்கி இருக்க வேண்டாமா. அந்தக் காலத்திலேயே நம்ம கிராமத்து 

 அம்மனுக்கு  எல்லாம் எதுக்கு வேலும் அரிவாளும் கொடுத்து வச்சாங்க .  பெண்கள் பாதுகாப்புக்குத்  தேவைன்னு தானே . நிலைமை இன்னமும் மாறலை தானே.'  


' பெரிய ஓவியர். இன்னமும் கரண்டியும் , கைக்குழந்தையுமா 

போட்டுக்கிட்டு  இருக்கீங்க. பொண்ணுங்களுக்கு  .  இப்ப நம்ம வீட்டிலே  எப்படி இருக்கு  . சமையலும் நீங்கதான். மத்த வேலைகளைப்  பார்த்துக்கிறதும் நீங்கதான் . நான் பாட்டுக்கு கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். '


' ஆண்கள் எல்லோரும் எல்லாரும் என்னை மாதிரி ஏமாளிகளா இருப்பாங்களா ' என்று நமுட்டுச்  சிரிப்போடு பார்த்தவனை  ஒரு முறை முறைத்தாள்  . 


'ஏய் நீ  கோபத்தில் கூட எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா, அதுவும், அந்த நுனி மூக்கு லேசா  சிவக்கிறது ஒரு அழகு ' என்றவன் வார்த்தை களைக் கேட்டுக்   கொஞ்சம் வெட்கம் வந்தது அவளுக்கு 


'என்னோட கோப மூடை மாத்தாதீங்க. அதாவது  நான் சொல்ல வந்தது என்னைத் தொந்தரவே செய்யறதே இல்லை நீங்க. நீங்க பாட்டுக்கு உங்க ஓவியமும் நீங்களுமா உட்கார்ந்திருக்கீங்க  ன்னு சொல்ல வந்தேன் . புரியுதா, மர மண்டைக்கு, ' என்று அவன் தலையில் செல்லமாகத் தட்டினாள் 


'ஏய் நைசா நான் வேலைக்குப் போகாம   இருக்கிறதை குத்திக் காமிக்கிறே இல்லே ' 


'ஐயோ ராசாவே , அப்படி சொல்வேனா , ஒரு கலைஞனா என்னையும் எப்படி ரசிக்கிறீங்க . அது வேணுமே எனக்கு ' 


'அது ' என்றபடி  அவன் அவளைப் பார்த்த பார்வை.  


'ஐயோ, வேணாம் சாமி , இந்தப் பார்வை எல்லாம் இப்ப, வேலை இருக்கு ' என்று விலகிப் போனவள் முதலில் சொன்ன அந்த  வார்த்தை 'பிஸ்டல் ' அவன் மனதில்  . 


இப்போது அந்தப் பெண்ணின் ஒரு கையின் சமையல் பாத்திரத்தை  எடுத்து விட்டு அந்த இடத்தில் இடம் பிடித்தது பிஸ்டல். 


 திடீரென்று யோசித்து 'பாவம் , பத்துக் கைகள்  எதற்கு அவர்களுக்கு. அதுவும் சுமைதானே. இருக்கின்ற இரண்டே கைகள் போதும். ஒன்றில் புத்தகம் ,  மற்றொன்றில் பிஸ்டல். மனதின்  பாதுகாப்புக்கு ஒன்று , உடலின் பாதுகாப்புக்கு ஒன்று , போதுமே' .


 'மற்றவை எல்லாம் , வீட்டு வேலையும், வெளி வேலையும்  ஆண் , பெண் இருவருக்கும்  பொதுவாக இருக்கட்டும் 'என்று ஓவியத்தை மாற்றும் வேலையில் ஈடுபட்டு இருந்தவன் கை ஓட்டத்தை ரசித்தபடி இருந்தாள், கம்பியூட்டரில் ஒரு கண்ணும், கணவன் மேல் ஒரு கண்ணுமாக சுந்தரி .  


------------நாகேந்திர பாரதி 

My Poems in Tamil and English 


சனி, 8 நவம்பர், 2025

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

-------------------------

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே


பொதுவாக அழகியசிங்கர் ஒரு சிறுகதையை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதைப் பற்றிய விமர்சனம் செய்யச்  சொல்வார். மிகவும் எளிதாக  இருந்தது.  இந்த  முறை  அவர் ஒரு எழுத்தாளர் பெயர் மட்டும் சொல்லி அவரின் எந்தக் கதையையேனும் எடுத்துப்  பேசச் சொல்லி விட்டார். 


பள்ளிப்பருவத்தோடு நாவல், கதை எல்லாம் படிக்கும் பழக்கம் எல்லாம் குறைந்து போய்  பத்திரிகை மட்டும் படித்து வரும்  எனக்கு இது கொஞ்சம் சிரமமான காரியம்தான். 

எனக்குக் கிடைத்த எழுத்தாளர் பெயர் சுஜாதா. சுஜாதாவின் கதைகள் சில படித்து இருந்தாலும், கதை புதிதுவில் சொல்வதற்கென்று அவரின் சிறந்த சிறுகதையை  ,  எப்படித் தேர்ந்தெடுப்பது . எங்கள் வீட்டிலே தொடர்ந்து நாவல்,  கதை படித்து வரும் பழக்கம் உள்ள எனது மனைவி உஷா பாரதி அவர்களிடம் கேட்டவுடன் அவர்கள் உடனே சொன்ன சிறுகதை பெயர். சுஜாதா அவர்களின் ' நகரம் '. இன்டர்நெட்டில் தேடிப் பார்த்ததும் சிறுகதைகள் டாட் காம்மில் கிடைத்தது இந்தச் சிறுகதை. எஸ்ரா அவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த சிறுகதைகள் 100  என்ற தொகுப்பில் இருந்து. 


வழக்கம் போல் சுஜாதா அவர்களின் விறுவிறுப்பான நடையில் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட சிறந்த சிறுகதை. கதை நடக்கும் இடம் எங்கள் மதுரை என்பதும் சிறப்பு அம்சம்.  காய்ச்சல் அதிகமான நிலையில் தன் மகளைக் கிராமத்தில் இருந்து மதுரை பெரியாஸ்பத்திரிக்கு  கூட்டி வந்திருக்கும் ஒரு தாயின்  கண்ணீர்க் கதை. அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவளைப்  படுத்தும் பாட்டில் அந்தத் தாய் வெறுத்துப் போய்  'வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம் ' என்று கிராமத்துக்கே திரும்பும் கதை. 


கதையின் முதல் இரண்டு பாராக்களில் என் போன்ற மதுரைக்காரர்களுக்கு மதுரையைக்  கண் முன் கொண்டு வரும் காட்சிகள் 


சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) – 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.


எழுபதுகளில் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த எனக்கு  கண் முன் மதுரை தெரிந்தது. தொடர்வதும் மதுரைக் காட்சி . 


எப்போதும் போல “பைப்” அருகே குடங்கள், மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் ‘டெடன்னஸ்” கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் .நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள். மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !


நீர் மூலக்கூறுகளின் ஓட்டத்தை ஆராய்ந்து ஐன்ஸ்ட்டின் தந்த ப்ரோவ்னியான் இயக்கத்தை ஒரு உவமையாக இங்கே நகரின் மனித இயக்கத்திற்கு  ஒப்பிடும் சுஜாதா அவர்களின் ப்ரோவ்னியான் இயக்கம் -அறிவியல் உவமை அருமை. அத்துடன், இங்கிட்டும் அங்கிட்டும் , டப்பாக்கட்டு ஜனங்கள் என்று மதுரையைக் காட்சிப்படுத்தும் வித்தை சுஜாதா அவர்களுக்கே உரித்தான ஒன்று. 


நகரத்தைக் காட்டி விட்டார். நகர மக்களைக் காட்டி விட்டார். அடுத்து வருகிறது ஆஸ்பத்திரி. மதுரை பெரியாஸ்பத்திரி. நம்மை அழ வைக்கப் போகிறது.


வள்ளியம்மாள்  தன்  மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். “உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ’ என்றார் அதிகாலை பஸ் ஏறி ….


பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தாள். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தாள். வாய் திறந்திருந்தது.


அந்தப் பெண்ணின் உருவமும் தெரிகிறது. அவளின் உடல் நிலையும் புரிகிறது . மருத்துவக் கல்லூரி மாணவர்களோடு அங்கே ஒரு சீனியர் மருத்துவருக்கு அவள் நோயின் கொடூரம் புரிகிறது. அது மூளையையும் , முதுகுத் தண்டையும் தாக்கும் ஒரு கொடூர நோயின் வெளிப்பாடான காய்ச்சல். 


“acute case of meningitis . notice  this . ' என்று மாணவர்களிடம் விவரித்து விட்டு , அங்கிருக்கும் மருத்துவமனை அலுவலர்களிடம் மாலை தானே வந்து அந்த  பெண்ணைக் கவனிப்பதாகவும் அதுவரை அவளை வார்டில் சேர்க்கவும் சொல்லிவிட்டு தனது கல்லூரி வேலைக்கு விரைகிறார். நோயின் தீவிரம் உணர்ந்தும் அப்படிச் சொல்லிவிட்டு விரையும் அந்த மருத்துவரின் மேல் நமக்கு வருத்தம் வருகிறது. இந்த முதல் காட்சியைத்  தொடர்ந்து, வரும் நிகழ்ச்சிகளில் வெளிப்படும் ,அந்த மருத்துவமனை ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்கள், வாசிப்பவருக்கு, அந்த வருத்தத்தைக் கோபமாக மாற்ற வைக்கிறது, சுஜாதா அவர்களின் இயல்பான  எழுத்தின் வேகமும் வீரியமும். நீங்கள் படிக்கும் போது அதை உணர்வீர்கள்.  


ஆங்கிலம் புரியாத அந்தக் கிராமத்துத் தாயிடம் , ஆங்கிலத்தில் ,குழப்பும் ஊழியர்கள். மகளை வார்டில் சேர்க்க அவள் படும் பாடு,  பேஷண்ட் யார் என்று கேட்பதும், அவள் கொடுக்கும் சீட்டைக் கால் கண்ணால் பார்ப்பதும், 38  ஆம் நம்பர் ரூமுக்குப் போ என்று சொல்வதும், ‘மகளைத் தனியா  விட்டுட்டு வந்திருக்கோம்’ என்ற தவிப்பில் அவள் அலைவதும் , மருந்து நெடியி லும் , பசி மயக்கத்திலும்  தலை சுற்றுவதும், இத்தியாதி நடைமுறைகள் முடிந்து அவள் சென்று வார்டு சேர்க்கும் இடத்தில், ‘இப்போ காலி இல்லே , நாளைக்கு காலையிலே வா’ என்று அலட்சியப்படுத்துவதும் ,  அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் இடம் மாறிப் போய் வெளியே வந்து திரும்ப உள்ளே நுழைய போராடுவது மாக அந்தத் தாயின் தவிப்பும் துக்கமும் சுஜாதா அவர்களின் எழுத்தால்   நம்மையும் தாக்குகிறது. இடையே ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்ஸுகள், போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், என்று அந்த ஆஸ்பத்திரியையையே வள்ளியம்மாளுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம். 


இந்த நடைமுறைகளுக்கு பயந்தும், வெறுத்தும் , ‘நாளைக்கு காலை வரை என்ன செய்வது’ என்ற பயத்தோடு பாப்பாத்தியைத் தூக்கிக் கொண்டு வள்ளியம்மாள் வெளியேறும் காட்சி . 


'தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.'


அங்கே ஆஸ்பத்திரியில் அந்த சீனியர் டாக்டர் திரும்பி வந்து தேடுகிறார். இடமில்லை என்பதால் மறுநாள் காலை அவர்களை வரச் சொல்லியிருப்பதாக சொல்லப்பட .  கோபம் கொண்டு அவர் கத்துகிறார். "வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! " என்று கத்த அந்த ஊழியர்கள் ஓபி வார்டில் அவளைத் தேடுகிறார்கள். 


இங்கே வள்ளியம்மாள் . 

“வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்.” சைக்கிள் ரிக் ஷா  பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், “பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்’ என்று வேண்டி கொண்டாள்.


நகரத்தில் ஒரு 'நரகத்தைக் ' காட்டி 

முடிகிறது கதை. வாசகர் முடிவே கதையின் முடிவு. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வள்ளியம்மாள் செல்வாள் என்ற   நம்பிக்கையே நமது முடிவு .


மனிதாபிமானம் இல்லாத  மனிதர்களின் நடவடிக்கைகளால், பறிபோகும் ஏழைகளின் உயிர்கள் எத்தனை என்ற எண்ணத்தை அழுத்தமாக  விதைக்கும் சிறுகதை. எழுபதுகளில் இருந்த இந்த நிலை இப்போது மாறியுள்ளதா என்பதும் கேள்விக்குறிதான். 


சுஜாதா அவர்கள் அன்று  பார்த்த ஆஸ்பத்திரி நிகழ்வுகளே இந்தச் சிறுகதையாக மாறியுள்ளது என்பதும் இது ஒரு மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது என்பதும்  பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட என்பதும் கூடுதல் தகவல்கள், கூகிள் ஆண்டவர் துணையால் . 


நன்றி, வணக்கம் . 


-------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


திங்கள், 3 நவம்பர், 2025

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை  மதிப்புரை - கதை  புதிது  நிகழ்வு 

-----------------

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே .


ஜெயந்தன் அவர்களின் 'நிராயுதபாணியின் ஆயுதங்கள் ' சிறுகதை . பல உண்மைச் சம்பவங்களை கதைக்குள் இணைத்து அதற்கு எதிர் வினை ஆற்றும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் கோபத்தின் நியாயத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் கதை. 


சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டவர்கள் , அந்த நிராயுத பாணிகள் ஆயுதங்கள் எடுத்தால் எப்படி இருக்கும் , அந்தக் கோபம் எப்படி வெளிப்படும் என்பதை உண்மைச் சம்பவங்களை இணைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதை ' நிராயுதபாணிகளின் ஆயுதங்கள் .


அநீதி கண்டு கொதித்து எழுந்து பழிவாங்கும் அந்தக் கோபக்காரப் பெண்  பாவ மன்னிப்பு பெறுவதற்கு ஒரு  தேவாலயத்தில் பாதிரியார் முன் மண்டி  இட்டு அமர்ந்து சொல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாம் பத்திரிகைகளில் படித்தவை. 


'கொலை செய்தவர்களை கர்த்தர் மன்னித்து விடுவாரா ' என்று அவள் கேட்கும் முதல் கேள்வியே பாதரை மட்டும் அல்ல, நம்மையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது . தொடர்ந்து நடக்கும்  உரையாடல்களில் பாவ மன்னிப்பு தொடர்பான கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட   பல விபரங்கள் பாதிரியார் மூலம் நமக்கும் தெரிய வருகின்றன.  அது இந்தக் கதைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது . 


பாவ மன்னிப்பின்  ரகசியத் தன்மை, அவர்களின் நாவு 'உடைபடா முத்திரை' என்ற விபரமும் அதை உடைக்க முயன்ற சர்வாதிகாரிகளும் , போலீஸ் அதிகாரிகளும் தோற்றுப் போன விபரங்களும் சொல்லப்பட்டு அவளுக்கு நம்பிக்கை அளிக்க   தொடர்ந்து சொல்கிறாள்  அவள் செய்த முதல் கொலையின் விபரங்களை . 


வரதக்ஷிணைக் கொடுமையால் இறந்து போன ஒரு தோழியின் கணவனையும் அவள் மாமியாரையும் இவள் தனது தோழிகளோடு சேர்ந்து கொன்ற விதம். சமுதாயக் கொடுமைக்கு எதிராக இவர்கள் எடுத்த முடிவு கதையின் தலைப்பான 'நிராயுதபாணியின்  ஆயுதங்கள் ' என்ற தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் விளக்கப்படுகிறது .


பாவ மன்னிப்பு தொடர்கிறது மற்றும் ஒரு நாளில் . இன்னும் ஒரு சமுதாய அநீதிக்குச் செய்த கொலைக்காக .அந்தக் காலச் செய்தியாக வெளிவந்த ஒரு பெண்ணின் சோகக் கதை .  போலீஸ் ஸ்டேஷனில் கற்பழிக்கப்பட்டு , சித்ரவதை செய்யப்பட்ட  சிதம்பரம் பதமினிக்காக     அந்த ஸ்டேஷன் ஏட்டை செருப்பால்  அடித்தே கொன்றனர் இவர்கள் . 


அநீதிகளைக் கண்டு சத்திய ஆவேசம் கொள்ளும் அவள் நிலை புரிகிறது பாதிரியாருக்கு. அவள் மேல் வேறு சில கடமைகளும் தனக்கு இருக்கின்றன என்று புரிந்து அவள் தகப்பனார் பெயர் கேட்கிறார். சொல்ல மறுத்து  அவள்  செல்கிறாள். பாவம் தொடர்கிறது. பாவ மன்னிப்பும் தொடர்கிறது . 


அடுத்து வருவது அவருக்கு ஒரு போன். அவள்தான். அவளை போலீசும் உளவுத் துறையும் தேடி வருவதால் , சர்ச்சுக்கு வர முடியவில்லை என்று சொல்லி விட்டு தொடர்கிறாள் . இதுவும் முன்பு வந்த ஒரு பத்திரிக்கைச் செய்திதான். 


ஒரிசாவில் மதபோதகர் ஒருவரையும் அவர் குழந்தைகளையும் வேனோடு சேர்த்துக் கொளுத்திய  தாராசிங்கின் கூட்டாளிகள் முப்பது பேரை இவர்கள் சுட்டுக் பொசுக்கி தீய்க்கு இரையாக்கிய செய்தியைச் சொல்லும் போது தொடரும் உரையாடலில் , மத மாற்றம். அதன் அடிப்படை , இதில் உள்ள தீவீர வாதம் போன்ற விஷயங்களும் விளக்கப் படுகின்றன. சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள். 


'அவர்களின் கலாச்சாரத்தைத்தானே நீங்களும் செய்தீர்கள்',  என்ற பாதரின்  கேள்விக்கும்  சுருக்கென்று வருகிறது அவளின் பதில் ' நமது ஆயுதங்களை எதிரிகள் தானே தீர்மானிக்கிறார்கள் பாதர் ' 


போனில் பாவ மன்னிப்பு தர மறுத்து , சர்ச்சுக்கு வரச் சொல்கிறார் பாதிரியார். போன் வைக்கப்படுகிறது . 


அடுத்த முறை சர்ச்சுக்கு எப்படியோ வந்து விடுகிறாள் .இவரும் 'தயாரிப்போடு'  இருக்கிறார்  என்ற ஒரு வரி சிறுகதையில் நமக்கு சில யூகங்களைக் கிளப்பி விடுகிறது . இம்முறை   தாங்கள் மூன்று கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்தி சாமபாலாக்கி விட்டதாகச் சொல்கிறாள் . பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் - இவற்றில் தலித்துகளுக்கு நடந்த கொடுமைகள் , விவரிக்கப்படுகின்றன. பாதிரியாரும் தனது இளவயது வாழ்வின் கஷ்டங்களை நினைத்துப் பார்த்து , தான் கிறிஸ்த மதத்திற்கு மாறிய  சூழ்நிலைகளையும் எண்ணிப்  பார்க்கிறார். 


'சட்டத்தை இதுபோல் கெட்டவர்களும் எடுத்துக்கொண்டால் என்ன செய்வது' என்று கேட்கிறார். அவளது பதில் ' அவர்கள் முதலில் எடுத்துக் கொண்டதால் தான் நாங்கள் இப்போது எடுக்கிறோம் ' என்கிறாள். 


'இவ்வளவு தெளிவாக இருக்கும் நீ ஏன் பாவ மன்னிப்பு கேட்கிறாய் ' என்ற கேள்விக்கு அவளது பதில். 'கிறிஸ்தவ தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த எனக்கு வன்முறை பாவமாகத் தெரிகிறது . வலது கை 'வன்முறை பாவம். பாவ மன்னிப்பு கேள்' என்கிறது . இடது கை வன்முறையைச் சகித்துக் கொள்வது மஹா பாவம். ' என்கிறது  என்கிறாள் .


'நியாயங்களை நிபந்தனையற்ற சத்திய பிரமாணமாக ஏற்றுக் கொண்ட அந்த இளம் மூளைக்குள் ஏற்பட்டு விட்ட விபத்தைச் சரி செய்ய வேண்டியது தனது கடமை' என்று உணர்ந்து அவளின் ' தந்தை பெயர் ; கேட்கிறார் ' . அவள் ' கர்த்தர் ' என்று சொல்லிவிட்டு பாவமன்னிப்பு பெற்றுச் செல்கிறாள். 


அவளை ப்  பற்றிய கவலையும் , அவளை வேட்டையாடும் காரணிகளும் இரட்டைச் சுமைகளாக அவரை அழுத்த 'ஏசுவே' என்று இருக்கையில் சாய்கிறார் பாதிரியார் என்று முடிகிறது கதை  . 


சமுதாயத்தின் அநீதியான  நிகழ்வுகள் பல ஒரு எழுத்தாளனைக் கோபப்படுத்தி , ஒரு பெண்ணின் மூலமாக பழி வாங்கி இருக்கிறது இந்தக் கதையில் . இன்றும்  சமுதாயத்தில் தொடரும் பல தீய நிகழ்வுகள் அன்றைய உண்மைச் சம்பவங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு அவற்றுக்கு தீர்வாக  அந்த நிராயுத பாணிகள் ஆயுதங்கள் எடுக்கும் நிலை வரக்  கூடும் , அந்த மன நிலைக்கு அவர்கள் ஆளாவார்கள் என்ற எச்சரிக்கையை இந்த நாயகியின் பழி  வாங்கும்  செயல்கள் மூலம் கற்பனையில் வெளிப்படுத்தி   அந்தக் கருத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். 


அதன் தாக்கம் படிக்கும் நமக்கும் ஏற்படும் விதத்தில் இந்த ' நிராயுதபாணியின் ஆயுதங்கள் ' அமைந்திருப்பது எழுத்தாளர் ஜெயந்தனுக்கு கிடைத்த எழுத்தின் வெற்றி . நன்றி. வணக்கம் .


------------------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


திங்கள், 20 அக்டோபர், 2025

வண்ணமே வாழ்க்கை -நன்றி தீபாவளி மலர் 2025 (விருட்சம், குவிகம்,பூபாளம் )

வண்ணமே வாழ்க்கை -நன்றி தீபாவளி மலர் 2025  (விருட்சம், குவிகம்,பூபாளம் )

--------------------------------

வாழ்க்கையின் ஆரம்பம்  

வண்ணத்தில் தானே 


குடித்த பாலின் 

வெண்மை நிறத்தோடும் 


குப்புறக் கிடந்த  

மண்ணின்  நிறத்தோடும்  


மல்லாக்கப் பார்த்த 

ஆகாய நீலத்தோடும்


பச்சையாய்ப் பார்த்த 

செடியோடும் கொடியோடும் 


சிவப்பாய் மஞ்சளாய்ச்   

சிரித்த பூக்களோடும் 


எத்தனை வண்ணங்கள் 

இயற்கையால் அறிமுகம் 


காலத்தின் வேகத்தில் 

செயற்கையில் சிக்கி 


செய்கையில் முங்கி 

மறந்த வண்ணங்கள் 


இன்னும் அங்கேதான் 

மண்ணிலும் விண்ணிலும் 


பார்க்கத் தொடங்கினால்

பிறக்கலாம் மீண்டும் 


இளமையாய் , இனிமையாய்  

இன்பமாய் எல்லாமாய் 


-------------------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


விடியலின் நம்பிக்கை - கவிதை

 விடியலின் நம்பிக்கை - கவிதை  —— (கவிதை வனம் குழுவில் )  போகின்ற சூரியனும் காலையில் திரும்புவான் தேய்கின்ற சந்திரனும் திரும்பவும் வளர்வான் உ...