சாலைக்கொரு சோகம் - கவிதை
--------------------------------------------------------
கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே
கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே
மண் ரோடாய் நானிருந்த அந்தக் காலம்
மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்
சேற்றுமண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்
சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும்
காற்று வர மண் பறந்து வீசி ஓடும்
காலத்தில் செடிகளிலே பூக்கள் ஆடும்
ஓரத்தில் வளர்ந்திருந்த புற் செடியும்
ஒத்திகைப் பேச்சுக்கு உடன் படியும்
காலடியும் கால்நடையும் வண்டிகளும்
மிதிக்கையிலே வலி தாங்கி மண் இளகும்
காலத்தின் மாற்றத்தால் தாராய் ஆனேன்
கல்லாகி மண்ணாகிக் கருப்பாய்ப் போனேன்
வானத்து நீரோடு வாழ்க்கை இல்லை
வாய்த் துணைக்கு வாய்த்திருந்த புல்லும் இல்லை
இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்
விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்
எப்போதும் எனக்குள்ளே ஏக்கச் சோகம்
என்னுள்ளே துடிக்கின்ற மண்ணின் தாகம்
-----------------------------------------நாகேந்திர பாரதி
ம்... சிரமம் தான்...
பதிலளிநீக்குநல்ல கவிதை. சிறப்பான சிந்தனை.
பதிலளிநீக்குகவிதை சிறப்பு.
பதிலளிநீக்கு