பேஞ்சு கெடுத்தாச்சு - கவிதை
--------------------------------------------
கம்மாய் ஒடப்பெடுத்து ஊருக்குள் வந்தாச்சு
கதிரு மணியெல்லாம் தண்ணிக்குத் தந்தாச்சு
மண்ணும் களியாகி வரப்பெல்லாம் கரைஞ்சாச்சு
மானம் கொட்டியதில் வயலெல்லாம் மறைஞ்சாச்சு
இடிக்கும் மின்னலுக்கும் இறுமாப்பு ஏறியாச்சு
இறங்கும் மழைவேரும் பூமிக்குள் ஊறியாச்சு
துடிக்கும் மரமெல்லாம் துவண்டு போயாச்சு
துள்ளும் செடியெல்லாம் தூள்தூளாய் ஆயாச்சு
பேயாமல் கெடுத்தப்போ வெயிலிலே காஞ்சாச்சு
பேஞ்சு கெடுக்கிறப்போ மழையிலே சாஞ்சாச்சு
ஓயாமல் ஊத்தியதில் ஊரே காடாச்சு
ஓஞ்சு நொம்பளத்தில் உசிரை விடலாச்சு
பக்கத்து ஊருக்கும் பாதை மறைஞ்சாச்சு
பாழும் தண்ணியிலே தீவாய் ஒறைஞ்சாச்சு
திக்கத்த எங்களுக்கு தெருவே கதியாச்சு
திங்கவும் பொங்கவும் தீனியில்லா விதியாச்சு
ஊரு ஒலகத்தில் ஊர்கோலம் போறவரே
காரு பணத்தோட கண்காட்சி ஆறவரே
நாறிப் பொழப்பெல்லாம் நாராகி உரியிறது
நாங்க கெடக்கிறது கண்ணுக்குத் தெரியறதா
----------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நெகிழ்வான வரிகள்..
பதிலளிநீக்கு