யார் பொறுப்பு - கவிதை
-------------------------------------
பத்து வயதில்
எரிந்த குடிசைக்குள்
கரிக்கட்டைகளாய்
பெற்றோர் உடம்பு
இருபது வயதில்
திருடிப் பிடிபட்டு
போலீஸ் அடிபட்டு
புகுந்த ஜெயில் வீடு
முப்பது வயதில்
மூணு முடிச்சோடு
வந்த பெண்ணிடம்
முரட்டு உறவு
நாற்பது வயதில்
குடியின் வெறியில்
அடிச்சுத் துவைத்ததில்
ஓடிய மனைவி
அம்பது வயதில்
ரத்தம் செத்து
தரும ஆஸ்பத்திரியில்
தரையில் கிடந்தது
அறுபது வயதில்
அழுகை வற்றிப் போய்
அழுக்கு உடம்போடு
கோயில் வாசலில்
எழுபது வயதில்
எலும்பும் தோலுமாய்
எடுத்துப் போகிறார்கள்
குருட்டுப் பிச்சைக்காரனை
இருந்த வயதில்
நடந்த நடப்பிற்கு
இவன்தான் பொறுப்பா
எரித்தவர் பொறுப்பா
--------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக