வெயில் வெளி - கவிதை
---------------------------------------
விறைத்த சகதி வெடித்து விலகி
முள்ளாய்ச் சுடும் கண்மாய்க் காடு
நுரைத்துத் திரண்டு சொட்டாய் ஊறி
நூலாய்க் கிடக்கும் கிணத்துத் தண்ணி
கால்கள் தேய்த்த ஒத்தைப் பாதையைக்
காத்துக் கிடக்கும் காய்ந்த வயல்கள்
வேர்கள் சிதைந்த கூத்துப் பனைகள்
குனிந்து வளைந்து படுத்துக் கிடக்கும்
குருவி குயிலின் கூட்டம் கூட
கூட்டைப் பிரிச்சுப் பறந்தே போச்சு
மருகிக் கிடக்கும் மக்கள் கூட்டம்
மாயும் மட்டும் மாற்றே இல்லை
சருவப் பானையைச் சந்தையில் விற்று
கூழைக் கிண்ட உடையும் மண்பானை
கருவக் காட்டைக் கரியாய் மாற்றி
மூட்டம் போட்டுத் திணறும் மூச்சு
வேர்வை உப்பை விலக்கிப் பிடித்து
வழித்துக் குடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால்
சாவைக் கொஞ்சம் சாச்சுத் தள்ளி
வாழ்க்கைச் சாவை வாழ்ந்து போகலாம் .
-------------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
இனிமையான கவிதை...
பதிலளிநீக்கு