விழித்துக் கொள்வோம் - கவிதை
——————————------------------------—
விழுகின்ற மழை நீரை
விருட்டென்று உள்வாங்கி
ஊற்றாகப் பயிராக
மாற்றுகின்ற மந்திரத் தாய்
பிறக்கின்ற செடிக்கெல்லாம்
தரைதானே ஆதாரம்
இறக்கின்ற போதுமே
இழுக்கின்ற இடம்தானே
கல்லார்க்கும் கற்றார்க்கும்
கறுப்பார்க்கும் சிவப்பார்க்கும்
எல்லார்க்கும் தாய்ப்பாசம்
தருகின்ற பூமித்தாய்
பேசாமல் இருப்பதனால்
பிழையெல்லாம் பொறுப்பதனால்
கூசாமல் தரைத்தாயைக்
கூறாக்கித் தகர்க்கின்றோம்
பொறுமையினை இழந்தாலோ
பூகம்பம் சுனாமியாய்
விளையாட்டைக் காண்பிப்பாள்
விழித்துக் கொள்வோம் நாம்
கொடுக்குகின்ற வளமெல்லாம்
கும்பிட்டு வாங்கிடுவோம்
வெடுக்கென்று பறிக்காமல்
விண்ணப்பம் வைத்திடுவோம்
—————————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமையான வரிகள்....
பதிலளிநீக்கு