காதல் நேரம் - கவிதை
----------------------------------------
உன் வரவுக்குக் காத்திருக்கும் நேரம்
வாடைக் காற்றுக்குள் வாட்டுகின்ற குளிர்ச்சி
உன் பக்கத்தில் அமர்கின்ற நேரம்
பக்தன் கோவிலிலே அடைகின்ற அமைதி
உன் விரல்களிலே விரல் பின்னும் நேரம்
வெள்ளைப் பூக்கூட்டம் தடவுகின்ற தன்மை
உன் இதழ் விரிந்து சிரிக்கின்ற நேரம்
இளம் பூவொன்று பூக்கின்ற பொழுது
உன் குரல் இனிமை கேட்கின்ற நேரம்
குயில் கூவுகின்ற அதிகாலைக் காலம்
உன் முகம் பார்த்து மயங்குகின்ற நேரம்
முல்லைப் பூ மலர்ந்து வீசுகின்ற வாசம்
உன் மடிமீது படுத்திருக்கும் நேரம்
மழலை தொட்டிலிலே கண்ணுறங்கும் மகிழ்ச்சி
உன் தங்க உடல் தழுவுகின்ற நேரம்
தளிர்ச் செடி தாவும் மரமான கோலம்
உன் உள்ளத்தில் இடம் பிடித்த நேரம்
உயிருக்குள் உணர்ச்சி பாயும் வெள்ளம்
உன் பிரிவுக்குப் பேதலிக்கும் நேரம்
பித்துப் பிடிப்பதற்குத் தோதான சோகம்
------------------------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை... ரசித்தேன்...
பதிலளிநீக்கு